அங்க(male) வஸ்திரம்


கொஞ்ச காலம் முன்பு வரைக்கும், தாலி செண்டிமெண்ட் படங்கள் சக்கை போடு போட்டன. (இப்பொ எல்லாம் பிரமாண்டமான படங்கள் தான் வெற்றி பெறுகின்றன). ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் தாலியின் மகிமை, இப்படி காலாவதி ஆகிவிட்டதைப் பாத்தால் வியப்பாத்தான் இருக்கு. சமீபத்தில் ஒரு ரவுடி பலாத்காரமாய் தாலிகட்ட, அதை தூக்கி எறிய நாயகி வரும் போது, தாலி பற்றிய டயலாக் பீரிடும் படம் பாத்தேன். சிரிப்பாத் தான் இருந்தது. சாதாரன சாம்பு, சோப்புக்கு பயந்து தாலியைக் கலட்டி வைக்கும் இந்தக் காலத்தில்..??? பியூட்டி பார்லரில் தாலியை மாட்டி வைக்க தனி ஏற்பாடே இருப்பதாய் கேள்வி.. எட்டிப் பாக்க ஆசை தான். விட மாட்டேன் என்கிறார்களே!!

ஸ்டேட்டஸ் சிம்மள் பற்றி சூப்பரான ஒரு பதிவை இதயம் பேத்துகிறது ஜவஹர் எழுதி இருந்தார். கார், மொபைல் இதெல்லாம் எப்படி Status Symbol ஆனது என்று அந்தப் பதிவு பேத்துகிறது… சாரி..பேசுகிறது. என்னைக் கேட்டா (யாரு கேக்கிறா?) தாலியையும் இதில் சேத்துக்கலாம். மஞ்சள் கயிறில் ஆரம்பித்த அந்தத் தாலி, இப்பொ மஞ்சள் கலரில் ஜொலிக்கும் தங்கத்துக்கு மாறி விட்டது. அந்தக் காலத்தில் தாலியை அடகு வைப்பது போதாத காலத்தில். ஆனா இப்பொ தாலி செய்யவே எல்லாத்தையும் வைத்தாலும் போதாது போல் இருக்கு. ஜுவல்லரி முதலாளிகள் புத்திசாலிகள். எங்காவது தாலி மாதிரி கொஞ்சம் சேட்டை செய்து வித்தை காட்டி விடுகிறார்கள்.

பெண்களுக்கு தாலி போல் ஆண்களுக்கு அப்படி ஒன்றும் இல்லையா என்று யோசிக்கும் போது (உன்னை யாரு இப்படி யோசிக்கச் சொன்னது?) தான் பூணூல் மனசிலெ சிக்கியது. ஆண்களில் சிலருக்கு பூணூல் ஓர் அடையாளமாய் வந்து நிக்குது. 1980 களில் பூணூலைக் கலட்டி எறியும் போது அப்படியே Slow motion ல் அலைகள் ஓய்வது போலக் காட்டிய அ. ஓ இல்லை என்று ஒரு படம் வந்தது. அதே போல் அதுக்கு அப்புறம் பாக்கியராஜ் பூணூல் போடும் போதும் மங்கல இசை முழங்க அதுவும் Slow motion ல் தான் வரும். மாற்றங்கள் மாறுதல்கள் இப்படி மெதுவாத்தான் வரும் என்று நாசூக்காச் சொல்றாகளோ? இருக்கலாம். காலப்போக்கில் இதுவும் காலாவாதியாகி விட்டது.

என்னோட பையன் முன்னாடி எல்லாம், ஆதித்யா சிரிப்பொலி மாதிரி காமெடி சேனல்களை விரும்பிப் பாப்பான். இப்பொ சமீப காலமா முரசு, சன் லைப்ல வர்ர படத்தை அப்பப்பொ விரும்பிப் பாக்குறான். வெவரம் கேட்டா, அப்பா, ”அந்தக் காமெடியை விட இந்தப் பழைய படங்களோட காமெடி சூப்பரா இருக்குப்பா.. இவங்க டிரஸ்ஸு, டான்ஸ், டயலாக், பாட்டு, முக expression, இப்படி எல்லாமே செமெ காமெடியா இருக்குப்பா” என்கிறான். சமீப காலமா காணாமப் போன சங்கதிகள் எல்லாம் படத்திலெ பாத்தாலும் சிரிப்பாத் தான் இருக்கு.

ஒரு சமயம் காஞ்சிபுரம் போயிருந்தேன். சரி வந்தது தான் வந்தாச்சி, அந்த ”தெய்வத்தின் குரல்” எழுதின தெய்வத்தை(??)யும்தான் தரிசித்து வரலாம்னு கிளம்பிட்டேன். உள்ளே போகும் முன், சட்டையைக் கழட்டனும் என்றார்கள். ஏற்கனவே இப்படி கேராளா கோவில் ஒன்றில் கலட்டியதாய் ஞாபகம். சரி.. கழட்டி பாத்தா… நான் ஒத்தெ ஆளு தான், பூணூல் இல்லாமெ நிக்கிறேன். ஒத்தெப் பிராமணன் என்பார்கள். நான் பிராமினாய் ஒத்தையாய் நின்றேன்.

நான் பிராமணனா? என்று கேள்வியினை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தமிழினை என்றும் நெஞ்சோடு வைத்திருக்கும் எனது பூர்வீகம் தேடினால், தற்போதைய குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கு போக வேண்டி வரும். வந்தோரை வாழ வைக்கும் தமிழகம், நம்மையும் வாழ வைத்தது… வைக்கிறது.. இனியும் வாழ வைக்கும். மதுரையில் மெய்யாலுமே ”மதுரை”( மதுரையா? சிதம்பரமா என்பதின் மதுரை) ஆண்ட காலம் அது. வந்து பல நூறாண்டுகள் கடந்த போதும், பூணூல் போடலாமா என்ற பிரச்சினை வந்தது. ராணி மங்கம்மாள் முன்னிலையில் மணிக்கணக்காய் வாதிட்டு (இப்பொது பிரச்சினை வந்திருந்தால் வருடக் கணக்கில் ஆயிருக்கும்) பூணூல் போடலாம் என்று ஒரு சாசனம் (தெலுங்கில் எழுதி) கொடுத்து பிரச்சினை முடித்தார்கள்.

மநு தர்மம் என்ன தான் சொல்கிறது என்று மேலோட்டமா ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அதில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூணூல் அணியலாம் என்றும் அரசல் புரசலா தெரிஞ்சது. அங்கேயும் ஒரு பஞ்ச் இருக்கு. எல்லாரும் எல்லா பூணூலும் போட்டுவிட முடியாது. பருத்தி, சணல், உல்லன் நூல்கள் வைத்து தனித் தனியே அணிய வேணுமாம். அப்படியே மேஞ்ச போது மாமிசம் சாப்பிட அனுமதியும் இருக்கு என்கின்ற தகவலும் சிக்கியது. அந்தமானில் கடல் உணவு ஜாலி தான்.. எல்லார்க்கும். குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாக்கும் நாம், இந்த மாதிரியான விஷயங்களிலும் ரொம்பவே மாறிட்டோம் என்று மட்டுமே தான் சொல்ல முடியும்.

படத்தில் காட்டப் படும் அளவுக்கு பூணூலின் மகத்துவம் இருக்கோ இல்லையோ, தேவையான நேரங்களில் போட்டுக் கலட்டுவதும் பாக்கத்தான் முடிகிறது. முக்கியமான நல்லது கெட்டதுகளில் கல்யாணம் கருமாதி போன்ற நேரங்களில் பூணூல் முக்கிய அம்சமாய் இருக்கிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார்… உற்சாக பாணம் அருந்தும் சமயங்களில் பூணூலை கழட்டி வைத்து விடுவார். தேவையான நேரங்களில் மட்டும் அணிபவர்களும் உண்டு. அந்தமானின் சிறு சிறு தீவுகளில் பூஜாரிகளின் நிலை இது போல் தான். பூஜை நேரத்தில் மட்டும் பவ்யமாய் பூணூலோடு தரிசனம் தருவர். மத்தது எல்லாம்…எல்லாமே… உண்டு தான்.

இந்த வம்பன் பார்வையில் இன்று மாட்டி வதை படுவது இந்தப் பூணூல். இந்தப் பூணூல், அந்தக் காலத்தில் கம்பரின் பார்வையில் படுது. எப்புடி எழுதுறாரு பாக்கலாமா?
அசோக வனத்தில் இராவணன் வருகிறார் .. பராக்..பராக்..பராக்.. நீலக்கலர்ல ஒரு மலை (பாத்தாலே கிரானைட் குவாரி போட்டு விக்கத் தோணும் அளவுக்கு ரிச் கலர்). அது மேலேயிருந்து ரொம்ப பள்ளத்துக்கு விழுகிற மாதிரி வெள்ளை வெள்ளேர்னு… பூணூலா… அது தான் இல்லை. அப்படி பளீர்னு பட்டு நூல்ல செஞ்ச மாலை மாதிரி இருக்கிற மேலாடை.. ம்.. அப்புறம், கழுத்தில் மாலை. அதில் மணிகள் ஒளி வீசுதாம்.. அது சும்மா சுகமான இள வெய்யில் (ஈவினிங் பஜ்ஜி சாப்பிட்டு டீ குடிக்கிற சுகம்) மாதிரி இருக்குமாம். இப்பொத் தான் கிளைமாக்ஸிலெ மிஸ்டர் பூணுல் தெரிகிறார். கருமேகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னலைப் போல. வாவ்… கலக்கிட்டீங்க கம்பரே… இராவணன் அசைந்து வரும் போது அவரோடு சேர்ந்து அந்தப் பூணூலும் அசைஞ்சி வந்ததாம்.

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நித்த வெள் அருவியின் நிமிர்த்தபால் நிறப் பட்டின் மாலை உத்திரியம் பண்பறப் பசும் பொன் ஆரத்தின்மால்நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இளவெயில் பொருவசூல் நிறக் கொண்மூக் கிழிந்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க.

இராவண மகராசா எப்போவும் பூணூல் போடுவாரா? அல்லது சீதை யை பார்க்கும் நல்ல(??) காரியம் செய்யும் போது மட்டும் போட்டாரா என்பதை ஆய்வாளர்கள் கையில் விட்டு, நான் கலண்டுகிறேன்.

அறை..சிறை…நிறை….


அந்தமான் என்றாலே எல்லாருக்கும் ஞாபகம் வருவது ஜெயில்தான். இந்த பிளாக் ஆரம்பிச்சி 145 போஸ்ட் தாண்டி ஓடும் போது தான் இந்த சிறை பத்தி எழுதாம விட்டது தெரியுது. (அது சரி இன்னெக்கி என்ன ஆச்சி?? அந்த திடீர் ஞானோதயம் என்று கேக்கீகளா??… இருக்கு… அதையும் தான் சொல்லாமெலெயா போயிடுவேன்??)

அந்தமானில் அந்த கூண்டுச்சிறை உருவாக வேண்டும் என்ற சூழல் உருவான இடத்துக்கு இன்னெக்கி போனேன். ஆனா நீங்க அப்படியே காலச்சக்கரத்தை பின்னாடி சுத்தி இதே மாதம் 8ம் தேதி.. ஆனா வருஷம் மட்டும் 1872க்கு வரணும்.

அந்தமானின் தீவுகளில் மவுண்ட் ஹரியட் எனப்படும் ஓர் உயரமான இடம் அது. (இப்போது கூட அந்த இடம் மத்த இடங்களை விட ரொம்ப கூலா இருக்கும். ஹனிமூன் ஜோடிகளுக்கு உகந்த இடம் என்பது ஒரு கூடுதல் தகவல்). லார்ட் மயோவுக்கும் அந்த இடம் ரொப்பவும் பிடிச்சிருந்தது.. இருக்காதா பின்னெ…?? ராணியும் தான் கூடவே வந்திருந்தாகலாம். (ராணி தானா என்பதற்கு வரலாற்று சான்று தேட வேண்டும்)

ஒரு தேனிலவுக் கூடம் கட்டலாமா என்று யோசிக்க வேண்டிய நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சான்டேரியம் கட்டலாமே என்று யோசித்தாராம் அந்த மனுஷன். ஒரு வேளை ராணியை தனியே உட்ரலாம் என்ற எண்ணமா இருந்திருக்குமா?? யாருக்கு தெரியும்??

அதே யோசனையில் 15 நிமிடம் பயணம் செய்து திரும்புகிறார் லார்ட் மயோ. ஹோப் டவுன் என்ற இடத்தில் நல்ல ஒரு வரவேற்பு காத்திருக்கிறது அவருக்கு. ராணியை சொகுசான உயரமான இடத்தில் உக்கார வைத்து தனக்கு கொடுக்கப்பட இருக்கும் வரவேற்பை ஏற்க தெம்பாக நடக்கிறார். அது அவரது கடைசி நடை என்பது அவருக்கே அப்போது தெரியாது.

வரவேற்பு ஏற்பாடு சரியாக ராணியால் பார்க்க முடிந்ததோ இல்லையோ ஒரு கொலையை அவரால் தெளிவாய் பார்க்க முடிந்தது. ஆம் கொலை செய்தவர் ஷேர் அலி. பரிதாபமாய் உயிர்விட்டவர் வேறு யாரும் அல்ல… லார்ட் மயோ தான் அது. கணவரின் கடைசி வார்த்தைகளை உயிர் பிரியும் போது கேட்க முடியவில்லை ராணியால். ஏனென்றால், அவரரோ கொலையைப் பாத்து மயங்கி கிடந்தார்.

அந்த ஒரு உயிர் பலி தான், அதுவரை இருந்த “அந்தமான் ஓபன் ஜெயில்” என்ற கான்செப்டை குழி தோண்டி புதைக்க வைத்து, கூண்டுச்சிறை என்னும் கொடுஞ்சிறை தோன்ற அஸ்திவாரம் போட்டது. எண்ணம் ஈடேற 24 ஆண்டுகள் ஆனது. 1896ல் செல்லுலார் ஜெயிலின் அஸ்திவாரம் தோண்டும் பணி ஆரம்பம் ஆனது.

அங்கு அப்போது கணபதி ஹோமம் செய்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆனால் அந்த லார்ட் மயோ கொல்லப்பட்ட பகுதியில் அந்த ஹோமம் நடந்தது இன்று. முத்து மாரியம்மன் கோவில் ஒன்று தமிழர்களின் முயற்சியால் கும்பாபிஷேகம் வரை இனிதாய் இன்று நிகழ்ந்தது.

எல்லா கும்பாபிஷேக நிகழ்விலும் தவறாது கருடன் வருவதாய் சொல்கிறார்கள். இன்றும் 20 நிமிட மந்திரங்களுக்குப் பின்னர் ரெண்டு கருடர்கள் வந்து வட்டமிட்டது இன்றைய ஹைலைட் சமாச்சாரங்கள். கருடன் வந்தது இருக்கட்டும்… கருடன் சொன்ன சேதி பத்தி எதும் தெரியுமா உங்களுக்கு??

அதெச் தெரிஞ்ச்சிக்க இன்னும் கம்ப காலம் வரைக்கும் போயே ஆக வேண்டும். அடிக்கடி கோபப் படுவோர்கள் கவனத்திற்கு… இனி மேல் ஏன் இப்படி லொள் என்று விழுகிறீர்கள்? என்று யாராவது கேட்டா, தைரியமா சொல்லுங்க.. அந்த ராமனுக்கே கோபம் வந்திருக்கே என்று.

ராமர் கோபப்பட்ட இடம் அந்த ஜடாயு என்ற கருடன் சொன்ன செய்தி (சீதையினை ராவணன் வஞ்சித்து எடுத்துப் போன தகவல்) கேட்ட போது தான்.

இந்த மூ உலகத்தையும் இந்த சினம் கொண்ட அம்பினால் அழிப்பேன் என்ற ராமனின் கூற்றுக்கு ஜடாயு பொறுப்பாய் சொன்ன பதில்: ஓர் அற்பன் தீமை செய்தால் அதுக்காக தீமை செய்யாத உலகத்தையா அழிப்பது?? கோபம் வேண்டாம்… இராமன் சீற்றம் குறைந்தது…

சீறி இவ்உலகம் மூன்றும் தீந்து உக சினவாயம்பால்
நூறுவென் என்று கையில் நோக்கிய காலை நோக்கி
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம்
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி

ஒரு லார்ட் மயோவின் மறைவுக்கு பின்னால் எழுந்த கோபம், எத்தனை எத்தனை கொடுமைகளை அந்த சிறையால் அனுபவிக்க வைத்தது… ஆனால் நம்ம கம்பர் சொல்லும் சேதியோ.. அமைதிப் பாதை…

என்ன நான் சொல்வது சரி தானே??