தெருத்தெருவா கூட்டுவது…


Modi in sydni

தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்லி விட்டு, அதோடு நிற்காமல், அப்படியே அடுத்தடுத்து அரசு இயந்திரத்தையும் பொது மக்களையும் சுழற்றி வருகிறார் நம் பிரதமர். ரொம்ம காலத்துக்கு அப்புறம் இப்பத்தான் நம்ம நாட்டுக்கு பிரதமர்னு ஒருத்தர் இருக்கார்ன்னு மக்கள் நம்பவே ஆரம்பிச்சிருக்காங்க. அமெரிக்கா என்ன? ஆஸ்திரேலியா என்ன? மைக்கை சரி செய்து உதவிய செயல் என்ன? இப்படி என்ன? என்ன? என்ற லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம். உலகம் முழுக்க அவருக்கு ஆதரவாளர்கள் ஒரு பக்கம் உருவானாலும் கூட அவரை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமீபத்தில் இப்படி மோடி எதிர்ப்பாளர் ஒருவர் மல்லுக் கட்டிக் கொண்டு நின்றார். நம்ம தான் அரசு அதிகாரியா இருக்கிறதுனாலெ, மோடி பக்கம் தானே நிப்போம். (இதுக்கு முன்னாடி அப்படி இருந்தீகளான்னு கேள்வி கேட்டு, நம்மளை இக்கட்டுலெ மாட்டி வைக்கக் கூடாது). ஆசிரியர்கள் தினத்தில் அவர் எப்படி குழந்தைகளோடு பேசப் போச்சி? ஆசிரியர்கள் தானே பேசனும் என்றார் அந்த ரிட்டையர்ட் ஆசிரியர். காலம் பூரா வாத்திகள் பேசுறதெக் கேக்கிறாய்ங்க பசங்க. இன்னெக்கி மோடியோட பேசினதுலெ என்ன தப்பு? என்றேன். ஒத்துக்கவே மாட்டேன்றார் மனுஷன். பாவம் National Informatics Centre தொழில்நுட்ப உதவிகள் செய்ததை புரிந்து கொள்ளாமல், அந்த NIC தான் கேள்விகள் தயார் செய்து கொடுத்தார்கள் என்று யாரோ சொன்னதை, உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார். பாவம் அவரிடம் படித்த மாணவர்கள் அதை விடப் பரிதாபம்.

mgr

எது நல்லதோ கெட்டதோ, இந்த தூய்மை இந்தியா பத்தி எல்லாரும் சொல்லிட்டு சொல்லிட்டு சொல்லிட்டு இருக்கும் போது, ”வாங்கைய்யா வாத்தியாரய்யா” ஸ்டைலில் தெருத்தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு, அதை ஊரார் தெரிந்து கொள்ள படம் எடுத்தாலும் பொது நலம் உண்டு என்பதை நிரூபித்து விட்டார். எந்த சர்க்குலர் நெட்டில் இருந்து இறக்கிக் காட்டினாலும், நமக்கு அதிகார பூரவமாக வரலையே என்று சொல்லும் நம் துறை தலைவர் கூட, மோடி அவர்கள் தொடப்பக்கட்டையெ தூக்கினதைப் பாத்து தானும் களத்தில் இறங்கி எல்லாரையும் களத்தில் இறக்கியது கலக்கலான கதை தான்.

c bay

நம்ம ஏரியாவை நாமளே கிளீன் செய்யும் காரியம் ஏதோ புதியதாகத் தெரிந்தாலும், நமக்கு அது அரதப் பழசுங்கோ… அது, அந்தமானுக்கு வந்த புதிது. 1986. அந்தமானின் தென் கோடித் தீவான கிரேட் நிகோபாரில் தான் முதல் வேலை. அந்தமானில் தலைநகராம் போர்ட் பிளேயர் வரவே மூணு நாளு கப்பல்ல ஆடி அசெஞ்சி வந்துட்டு, அப்புறம் நாலு நாள் சின்ன கப்பல்லெ பயணம் செஞ்சா வரும் அந்த கேம்ப்பல்பே என்கிற தீவு. (என்ன சிந்து பாத் கதை ஞாபகத்துக்கு வருதா? நல்ல லுக்குக்கு லைலாக்களும் இருந்தனர் என்பது தனிக்கதை.)

12 பேர் தங்கும் ஒரு டார்மெட்ரி தான் நமது மாளிகை அப்போது. இரண்டு கழிப்பறைகள். வந்த அன்றைக்கே முகம் சுழிக்க வைத்தன அவைகளின் சுத்தம். கழிவறை சுத்தம் செய்யும் ஊழியர் அந்த ஊருக்கே ஒரு ஆள் தான். அதனால் அவருக்கு செமெ டிமாண்ட். மனுஷன் அந்தக் காலத்திலேயே சபாரி கோட் சூட் போட்டார்னா பாத்துகிடுங்க. சுத்தம் சோறு அவருக்கு விருந்தே போட்டிருக்கு. அந்த டார்மெட்ரியில் குளிக்கப் போகும் போது சர்க்கஸ் தெரிந்தவர்கள் தான் நல்லா போக முடியும் கிணற்றடிக்கு. சின்ன சின்ன கல் வைத்து அதில் ஒவ்வொரு காலாய் கவனமாய் வைத்து, சகதியில் விழுந்து விடாமல் கவனமாக கிணறுக்குப் போக வேண்டும். குளிக்கும் போது அந்தத் தண்ணியும் அதே சகதியில் போய் சேரும்.

வழக்கமான ஒரு ஞாயிற்றுக் கிழமை அப்படியே பேசிட்டு இருக்கும் போதே ஒரு நண்பர் சட்டுன்னு,’ நாமளே ஏன் டாய்லெட் கிளீன் செய்யக் கூடாது?’ என்று சொல்ல, நான் முதலாவதாக சப்போர்ட் செய்து கை தூக்கினேன். (சில சமயங்களில் தண்ணி அடிக்காத பார்ட்டிகளில் கூட நல்ல ஐடியாக்கள் உதயமாகும் நம்புங்க தோழர்களே..). சிலர் தயங்கினர். ’என்னையெப் பாத்தா என்ன டாய்லட் கழுவும் ஆளாகவா தெரியுது?’ என்று கேள்வி வேறு வந்தது. அதெல்லாம் கெடையாது. ரெண்டு பேர் ஒரு டீம். மொத்தம் 6 டீம். வாரத்துக்கு ஒரு தடவை கிளீன் செய்யணும். பரிட்சாத்த முறையில் கிளீன் செய்பவர்கள், நாமே கிளீன் செய்த டாய்லெட்டிலும் மற்றவர்கள் நாற்றம் பிடித்த டாய்லெட்டிலும் போக ஒப்பந்தம் ஆனது.

ஜாலியா டாய்லெட் கழுவ ஆரம்பிச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் பாத்தா, “மாமி, முகம் தெரியும் மாமி” என்று இப்போதைக்கு ஒரு டைல்ஸ் கம்பெனி விளம்பரம் மாதிரி, அந்தக் காலத்திலேயே மொகம் பாக்குற மாதிரி பளிச்சின்னு ஆயிடுச்சி. அதெப் பாத்துட்டு அடுத்த வாரமே, எதிர்ப்புக் குரல் கொடுத்தவங்களும் சப்போர்ட் செய்ய ரெண்டு டாய்லெட்டும் பள பள, பளிச் பளிச்..

அடுத்த ஞாயிறு கிணற்றடிக்கு கவனத்தைத் திருப்பினோம். கையில் கிடைத்த கத்தி கம்பு அரிவாள் என்று (ஏதோ கலவரத்துக்கு போற மாதிரி தெரியுதா? – ஆமா, பரமக்குடிக்காரங்க இப்படி ஏதும் சொன்னா, வில்லங்கமா தான் நெனைப்பீங்க…) கிளம்பினோம். ரெண்டு மணி நேரத்துக்குள் முழுதாய் சுத்தம் ஆனது. சும்மா பான் (அடெ அந்தமான்லெ வெத்திலெங்க) வாங்க வந்த உதவிப் பொறியாளர், நாம் செய்யும் வேலை பாத்து பதறிட்டார். ஐயோ… இதெல்லாம் உடுங்க. நாளைக்கே இந்த ஏரியா சுத்தம் செய்து உடற்பயிற்சி செய்ய பார் (அடெ… உண்மையான பார் தாங்க) எல்லாம் அமைத்து தந்தார்கள். (ஆனால், கிளீன் செய்த செலவும் சேத்து அவர் ஏப்பம் விட்ட கதை அப்போது நமக்கு மண்டையில் ஏறலை… இப்பவும் சில வில்லங்கமான சேதிகள் நம் மண்டையில் ஏறுவதில்லை. எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க என்று தான் யோசிக்க முடியுது.)

நீ 86 ல் நடந்த கதை சொல்றே… நானு, 8ம் நூற்றாண்டு கதை சொல்லவா? இது கம்பரின் குரல் அசரீரியாய் வந்தது.

சொல்லுங்க சாமி….அது, தூய்மை இந்தியா பத்தித்தானே?? – இது நான்.

“ம்…. தூய்மை சரி தான். ஆனால் இலங்கை பத்தி…” பதில் சொன்னார் கம்பர்.

சூர்ப்பனகை வரும் முன்னர் எவ்வளவு சூப்பரா இருக்கு அரன்மனை என்பதாய் வரும் நம்ம பாட்டு. எங்கே பாத்தாலும் பூக்கள். அதிலிருந்து மகரந்தங்கள் கொட்டுவதால் மணம் வீசும். அரசர்கள் எல்லாம் (அம்மா காலில் போட்டி போட்டு விழுபவர்கள் மாதிரி) விழும் போது கிரீடங்கள் மோதுமாம். அப்புறம் அதில் இருந்த ரத்தினங்கள், முத்து எல்லாம் கொட்டுமாம். அது விழுறதுக்கு முன்னாடியே வாயு பகவான் துடைச்சு எடுத்து குப்பை இல்லா இலங்கையா மாத்திடுமாம். அப்படி இருந்த சபையில் இராவணன் இருந்தானாம். எப்புடி நம்ம சரக்கு?

கம்பன் தொடர்ந்தார்.. இதோ உனக்காக பாட்டும்…பிடி.. சொல்லி மறைந்தார். நான் படித்த எனக்குப் பிடித்த பாடல் இதோ…

நறை மலர்த் தாதும் தேனும், நளிர் நெடு மகுட கோடி
முறை முறை அறையச் சிந்தி முரிந்து உகும் மணியும் முத்தும்,
தறையிடை உகாதமுன்னம் தாங்கினன் தழுவி வாங்கி,
துறைதொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப மன்னோ.

மீண்டும் வருவேன்…. எதையாவது கிளீன் செய்வோம்லெ…

அரசு இயந்திரம்


govt 2

”காலணா காசு என்றாலும், கவர்ன்மெண்ட் காசு” என்று சொன்னார்கள் ஒரு காலத்தில். அதே காலணா சம்பளம் அரையணா என்று ஒசந்தவுடன், “அரையணா சம்பளம் என்றாலும் அரசாங்கச் சம்பளம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். கவர்ன்மெண்ட் ஸ்கூலா?, நோ எண்ட்ரி, அரசு பஸ்ஸா…? வேண்டாமெ,,, தர்மாஸ்பத்திரி…? லேது.. பில்குல் லேது என்று மக்கள் சொன்னாலும் இந்த அரசு வர்க்கத்திற்க்கு கல்யாண மார்க்கெட்டில் மட்டும் நல்ல பேரு.. (அவ்வப்போது ஃபாரின், ஐடி மாப்பிள்ளைகள் முந்திக் கொண்டு போனாலும் கூட) முதல் சாய்ஸ் நமக்குத்தான். (நான் ஒரு அரசு ஊழியன் என்று சொல்லவும் வேண்டுமோ) ஆகஸ்ட் 15 ல் மோடி அவர்கள் தன்னை, ப்ரதான் மந்திரி என்பதை விட ப்ரதான் சேவக் என்று சொல்லவே விரும்புவதாய்ச் சொன்னார். அப்படிப் பாத்தா, டெபுடி சீஃப் இஞ்ஜினியரான அடியேன், உப முக்ய சேவக் என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.

நாமெல்லாம் சேர்ந்து தான் அரசாங்கம். நமக்காகத்தானே அரசு என்பதெல்லாம், ஏன் இன்னும் நம் மனதில் ஏறவில்லை? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. 100 ஆண்டுகளுக்கு மேலாய் அடிமைப்பட்ட காரணம் என்று சொன்னாலும் கூட, மனமாற்றம், விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட தென்படலையே!! கல்லூரியில் படிக்கும் போது, ஹஸ்டலில் ஏதோ பிரச்சினை என்று கும்பலாய் வார்டன் ஆஃபீஸை உடைத்தோம். உடைத்த பணத்தை கணக்கு செய்து, அடுத்த மாசம் டிவைடிங் சிஸ்டத்தில் நம் மெஸ் பில்லோடு வந்து விட்டது.

நாம் உடைக்கும், எரிக்கும் பஸ்களும், உடைக்கும் கடைகளும், சாலை மறியல்களும், ஏதோ ஒரு வகையில் அரசுக்கு நஷ்டம் தானே தரும்!. அது பின்னர் வேறு வகையில், நம் தலையில் தானே விடியும்?. கவர்ன்மெண்ட் தானே என்று எவ்வளவு தடவை சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்போதும் அரசு வேறு, நாம் வேறு என்று தானே நினைக்கிறோம். நாமே அரசை ஏமாத்தி, கோல்மால்கள் செய்து, (நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு) அப்புறம் இலவசங்கள் பஞ்சப்படிகள் வாங்கிட்டு, விலைவாசியும் ஏத்திகிட்டு கடைசியில் என்ன இலாபம் நமக்கு?

என்னோட 28 வருட அரசு உத்யோகத்தில் கண்டறிந்த உண்மை இது தான். தவறான முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டு, அதனை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரு எந்திரன் தான், அரசு இயந்திரம். (பொதுவாய்ச் சொல்கிறேன்…யாரையும் குறிப்பிட்டு இல்லை…) சரி எது? தவறு எது? என்று தெரியாத, புதிதாய் பணிக்கு வரும் ஒரு நபர், தவறுகள் ஒன்றினை மட்டுமே கற்றுக் கொண்டு, அதனையே காலம் காலமாய் சரி என்று நம்பி வேலை செய்வோர் பலர். அதிலும் அரசு வேலையில் இரு பிரிவுகள் இருக்கும். தனக்கு ஆதாயம் தரும் வேலை. (அது பணமோ, மரியாதையோ, செல்வாக்கோ இப்படி எதுவானாலும் சரி). இன்னொன்று (தனக்கு) ஆதாயமற்ற வேலை. இதில் இந்த முதல் தர வேலை செய்ய, பலர் தயாராய் இருக்க, இரண்டாம் தர வேலை எப்போதும் ரெண்டாம் பட்சம் தான்.

அரசு, ஓர் அரசு ஊழியரிடம் எப்படி நடந்து கொள்கிறது? என்று பார்த்தாலே, அது பாமர மக்களிடமும் எப்படி நடந்து கொள்ளும்? என்பதை எளிதாய் விளங்கிக் கொண்டு விடலாம். இப்படித்தான் ஓர் அரசு ஊழியர், தன்னுடைய சர்வீஸ் புத்தகத்தைப் பார்வையிட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரினார். (இவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை தான்) தனது துறை இயக்குனரிடம் கேட்டு பதில் சொல்வதாய் பதில் வந்ததாம் அவருக்கு. தன் கீழ் பணி புரியும் ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் இரண்டு காப்பிகள் தயார் செய்தல் வேண்டும். ஒன்றை அரசும், மற்றதை அரசு ஊழியரும் வைத்திருக்க வேண்டும். வருடம் ஒரு முறை அவரிடம் அரசு காட்டி கையொப்பமும் பெற வேண்டும். ஊழியரின் பிரதியினையும் அப்டேட் செய்திட வேண்டும். இது தான் அரசு நியதி. அந்த விதியையும் பின்பற்றாமல் சக ஊழியரை அடிமைகள் போன்று நடத்தும் தவறான பாவம் தொடர்வது தான் உண்மை. இத்தனைக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் சொல்ல தெரியாமல் இருப்பதும் கண்கூடு. நிலை இப்படி இருக்க பாமரன் பாடு பெரும்பாடு தான்.

அப்படி இல்லாம மாத்தி யோசிச்சி, வித்யாசமாய் சகாயம் மாதிரி இருக்கப் பாத்தா, வித்தியாசமாய்ப் பாக்கிறாய்ங்க. அரசு ஊழியர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று, அவுட் ஸோர்ஸிங் முறையைக் கொண்டு வந்தார்கள். அதன் அவுட்புட் எப்படி இருக்கு?ன்னு பாக்கலாமே. எங்க ஆஃபீஸ் செக்கிருட்டி வேலையினை அவுட் ஸோர்ஸ் செய்திருந்தோம். ஏகமாய் புகார்கள். சரி ஒரு நாள் நாம செக்கீருட்டி வேலையெப் பாப்போம்னு நைட்டு 12.30 க்கு கிளம்பினேன் வீட்டைவிட்டு. பத்து இடங்களில் போனதில் 9 இடங்களில் ஜம்மென்று தூங்கிக் கொண்டிருந்தனர். இது கூட பரவாயில்லை. நைட்டுன்னா தூங்கப் படாதா? என்று கேள்வி வேறு. நடவடிக்கை எடுத்தால், தமிழனுக்கு தமிழன் நண்டு வேலை செய்கிறான் என்று பழி வேறு. என்ன செய்ய?

govt 3

எல்லாம் மேலதிகாரி ரொம்ப மோசம். அவரு மட்டும் சரியா இருந்தா, டோட்டல் சிஸ்டம் சரியாயிடும். இப்படி ஒவ்வொருவரும் அதிகாரி புரோமோஷன் வரும் வரை தர்க்கம் பேசிட்டு, அப்புறம் எப்பொ ரிடையர்மெண்ட் வரும் என்று பென்சன் கணக்கு பாத்துட்டு இருப்பாய்ங்க.
அப்பொ அதிகாரி உண்மையில் எப்படித்தான் இருக்கணும்?

govt vadivel

இதோ உங்களுக்காய் ஒரு பட்டியல்:

1. தன் கீழே வேலை செய்யறவங்க ரொம்பவே புத்திசாலிகளா இருப்பாய்ங்க என்கிறதை நம்பணும் மொதல்லெ.
2. புகையெப் பாத்தே, எங்கே நெருப்புங்கிறதெ சூப்பரா கண்டுபிடிக்கிற அறிவாளிகள் அவங்க ஊழியர்கள் என்கிறதெச் புரிஞ்சிக்கனும்.
3. சிலசமயம் அவங்கள விடவும் அறிவாளியாவும் இருக்கலாம்.
4. ரூல்ஸ் & ரெகுலேசன்ஸ் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கனும்.
5. வெணும்ங்கிறவாளுக்கு ஒரு மாதிரிருயும், வேண்டாமெங்கிறவாளுக்கு வேற மாதிரியும் செய்யத் தெரிஞ்சிருக்கனும் (வக்கனையா வஞ்சனையா அதே ரூல்ஸ் வச்சி).
6. எதிர்க்கின்ற ஆட்களுக்கும் அவரவர் தகுதி அறிந்து பயன் தர்ர மாதிரி இருக்கனும்.
7. எப்பவும் சிரிச்ச முகத்தோடவே இருக்கலாம் தப்பில்லை.
8. பேச்சு எப்பவுமே நல்ல பேச்சாவே இருக்கனும்.

கம்பரிடமிருந்து ஏதோ நோட்டிஃபிகேஷன் வந்ததாய் நல்ல சத்தம் ஒன்று சொன்னது. உடனே போய் திறந்து பாத்தேன்..

என்னப்பா… என்னோட சங்கதியெ சுட்டு எழுதிட்டு, ரொம்ப பீத்திக்கிற மாதிரி கீதே??

இல்லை…. கம்பர் அன்னாத்தெ…. உங்க பேரு சொல்றதுக்கொசறம் இருந்தேன்…அதுக்குள்ளெ… நீங்க வந்துட்டீக… இப்பொ சொல்லிடறேன்…

ஆமாம்ப்பா…ஆமாம்…. இந்த பாய்ண்ட் எல்லாம் கம்பர் கிட்டே தான் சுட்டது. கம்பர் காலத்திலெ எங்கே கவர்ன்மெண்ட் இருந்தது? ன்னு பாக்கீகளா?

அப்பொ வேகமா போய், கிட்கிந்தா காண்டத்தின் அரசியற் படலம் பாருங்க. சுக்ரீவனுக்கு இராமன் சொன்ன அட்வைஸ்… லேசா மாத்தி யோசிச்சா… அப்படியே அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்…

அப்பொ பாட்டும் படிக்கலாமே…

புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு என்றுன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால்.

வேறு ஏதாவது சரக்கு கெடெச்சா வாரேன்… வரட்டுமா…

பருப்பும் பொறுப்பும்…


paruppu 2

மற்ற எந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு சிக்கல் நம் இந்தியாவுக்கு மட்டும் இருக்கு. ஒரே நாடு என்று சொல்லி மாநிலத்துக்கு மாநிலம் மாபெரும் மாற்றம் இருக்கும். மாநிலத்துக்குள்ளே இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார வழக்குகளும் மாறி மாறி இருப்பது என்பதெல்லாம் கூட தனிக்கதை தான். தமிழ்நாட்டில் வெறும் சீனி வைத்து இடியாப்பம் சாப்பிட்டால், அதுக்கு கேரளாவில் கடலை, அவியல் என்று தனி சைட் டிஸ் தருவார்கள். காரம் உப்பு இனிப்பு கசப்பு இப்படி எல்லாத்திலேயும் மாறி மாறி டேஸ்ட் இருந்தாலும், மோடி ஒரு தடவை ”பாரத் மாதாகீ” என்றால் போதும் நாமெல்லாம் ”ஜே” போட்டுவிடுவோம் என்பதில் மட்டும் மஹா ஒற்றுமை இப்போதைக்கு.

Dal vadaa

சரி ஒரு வடை எடுத்துக்குவோம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பெயர். பரமக்குடியில் இருந்த வரைக்கும் உளுந்து வடை & ஆம வடை இது ரெண்டு மட்டும் தான் என் மூளைக்கு எட்டிய அகராதி வார்த்தைகள். சில பல ஊர்களுக்குச் சென்று அந்தமானுக்கு கடைசியாக (இப்போதைக்கு) வந்து சேர்ந்த பிறகு பாத்தா தான் தெரியுது… வடைக்கு எத்தனை விதமான பேருன்னு… உளுந்து வடையை மெது வடை என்கிறார்கள். (ஓட்டெயெப் போட்டது யாரு? ன்னு விஜய் கேட்ட பிறகு, ஓட்டெ வடை என்றும் சொல்றாய்ங்க) பருப்பில் தான் எல்லா வடை செய்தாலும், மசால் வடை என்று எல்லா இடத்திலும் பெயர் வாங்கிய ஆம வடையினை மட்டும் தான், பருப்பு வடை என்கிறார்கள். ஒரு வேளை அதில் தான் பருப்பு முழுசாய் இருப்பதாலோ??

இதுக்கும் ”நீ என்ன பருப்பா?” என்று திட்டுவதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாமோ!!… என்ன தான் பருப்பை மாவாக்கி வடை சுட்டாலும் (உண்மையில் எண்ணையில் இட்டு பொறிக்கிறார்கள். ஆனால், வடை சுடுவது என்ற இலக்கணப் பிழை காலங்காலமாய் தொடருது) ஒரு சில பருப்புகள் மட்டும், தூக்கலாய் மேலாப்போல இருப்பது போல், இருக்கும் ஆள் மாதிரியான ஆளா நீ? என்று கேட்பது போல் தான் படுது. ஹிந்தியிலும் ”என்னை என்ன தாள் பா4த் என்று நினைத்தாயா?” என்று (நான் என்ன சாம்பார் சாதமா?) சொல் வழக்கு உள்ளதாம். (சும்மா கேட்டு தெரிந்து கொண்டது தான்)

masal vadai

கஷ்டமான கஷ்டமர்களையும் எப்படி கையாளுவது என்று வணிகத்தில் சிறந்த தமிழர்களுக்கு அன்றே வழிகாட்டியுள்ளனர். ”உப்பு இருக்கா வணிகரே?” என்று கேட்கும் கஷ்டமரை ”இல்லை” என்று கை விரித்து அனுப்பாமல், ”பருப்பு உளது” என்று சொல்லுவார்களாம். (சொல்ல வேண்டும் என்று நியதி தமிழ் செய்யுள் மூலம் தெரியுது). ஏதோ ஒன்று தேட நினைத்து களம் இறங்கும் நமக்கு எங்கெங்கோ கொண்டு போய் விடும் இன்றைய தேடு இயந்திரங்கள் இல்லாத போதும் வியாபார காந்தமாக்க (அதாங்க பிசினஸ் மேக்னெட்) முயன்றது தெரிகின்றது.

என்னோட ஆஃபீசில் ஒரு பஞ்சாயத்து வந்தது. தன் கணவர் தன்னை சத்தம் போட்டு திட்டுகிறார் என்பது தான் வழக்க்கு. இந்த நீதிபதி 18 வருஷ வழக்கை விசாரிச்ச ரேஞ்ஜுசுக்கு மொகத்தெ வச்சிட்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தேன். ”ஆக…. திட்டுவது பிராப்ளம் இல்லை. திட்டை பக்கத்து வீட்டுக்காரியின் காது கேக்கப்படாது. அது தானே உங்கள் சிக்கல்..” என்றேன். ”ஆம்” என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அந்த கணவக் கனவான் ரொம்ப அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் (நம்மளை மாதிரி). ”ஏங்க, இவர் கத்துற்துக்கு ஒரு எடமாவது இருக்கட்டுமே. அது வீடாகவே இருந்திட்டுப் போவுது” என்றேன் தீர்ப்பாய். அதிமுக தொண்டர் மாதிரி பாத்தாய்ங்க.

வீட்டில் எலி வெளியில் புலி என்பார்கள். வீட்டிலும் புலி வெளியிலும் புலி என்ற சில அபூர்வ பிராணிகளும் உண்டு. ஆமா.. நீங்க எப்படி?? இதெ…இதெத்தான் எதிர் பாத்தேன்… நானு.. ”நானு வீட்டிலும் எலி, வெளியிலும் எலி”. எப்படி நம்ம பாலிசி….ஐயோ, தப்பா நெனெச்சிராதீங்க நானு, நம்ம மோடி ஜீ சொன்ன மவுஸ் பத்தி தாங்க சொல்றேன். ஆனாலும் இந்த பருப்பு மேட்டர் வச்சி நம்ம தாய்க்குலங்கள் திட்ற ஒரு திட்டும் இருக்குங்க… அதெ திட்டுன்னு சொல்லுவானேன்.. உண்மைதானே… ”ஊருக்கே பெரிய்ய பருப்பா இருந்தாலும், வீட்டுக்குத் தொடப்பக்கட்டை தானே!”. இது எப்படி இருக்கு?

பருப்பை இப்பொ ஒரு பக்கமா வச்சிட்டு கொஞ்சம் பொறுப்பா பொறுப்பெப் பத்தி பேசலாமே!! வீட்லெ பையன் சமர்த்தா எதாவது செஞ்சிட்டா, உடனே.. ”என் பையன் பாத்தியளா?” என்று எக்காளமிடும் மனசு…அதே பையனின் மார்க் குறையும் போது??? ”பாத்தியா உன்னோட பையனோட லட்சனதெ..” என்று இல்லத்தரசியிடம் கத்துகின்றோமே… இது எந்த வகையில் சேர்ந்த பொறுப்பு?

ஆஃபீசிலும் இப்படித்தானே நடக்குது! கீழே உள்ள ஆளு ஏதாச்சிலும் செஞ்சி நல்ல பேரு வாங்கிட்டாப் போதும்… ”அட…அவன் நம்ம அண்டர்லெ இருக்காம்ப்பா..” என்பது… (என்னவோ அவர் கீழே இருக்கிறதுனாலெயே இப்படி எல்லாம் செய்ற மாதிரி பீத்திக்க வேண்டியது)… ஏதும் தப்புதண்டா நடந்தா, ”ஃபிக்ஸ் த ரெஸ்பாசிபிலிடி” என்று கத்த வேண்டியது. (அது சரி… இந்த தப்பு .. புரியுது; அது என்ன தண்டா? அந்த தப்போடவே தப்பாமெ சேந்தே வருதே!!) நல்லதுக்கு மட்டும் நாம். கெட்டதுக்கு யாரோ ஒரு தலையைத் தேடுகின்றோம். தவறுக்கு பொறுப்பேற்க.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இப்படித்தான் தகவல் தரப்படாத போது சிக்கல் வருகின்றது. பொதுவாய் யார் ஒருவர் தகவல் வைத்திருந்து தராமல் இருக்கின்றாரோ அவருக்க்த்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் தர வேண்டிய அதிகாரிகளையும், அந்தமான் தீவில் சகட்டு மேனிக்கு அபாரமாய் அபராதம் தீட்டி வருகின்றது மைய தகவல் அணையம். ஒரு பொறுப்பான அதிகாரி புலம்பினார். இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் தான் பதவி ஓய்வு பெற உள்ளாராம். இதுவரை சர்வீசில் ஒரு மெமொ கூட வாங்கலையாம். அப்படிப்பட்ட நபருக்கு 25000 அபராதம் விதித்து பொறுப்பை சரிவர செய்யாததை பொறுப்பாய் உணர்த்தியுள்ளது.

”யார் குற்றவாளி?” மாதிரி ”யார் பொறுபாளி?” என்று ஏதாவது ஓர் எக்ஸ்பெர்ட் கிட்டெ கேட்டு விடை வாங்கலாமா? ம்…ம்… எனக்குத் தெரிந்த ஒரே எக்ஸ்பெர்ட் கம்பன் தான். கம்பரை WhatsApp பிடித்தேன். பிகு செய்யாமல் லயனில் வந்து விட்டார்.

என்ன ஏதோ பொறுப்பா பேசுற மாதிரி தெரியுது???

பொறுப்பா பேசறேனான்னு தெரியலை…ஆனா ஐயனே…. பொறுப்பெப் பத்தி விளக்கம் சொல்ல ஆளைத் தேடினேன்.

ஒன்னோட குழப்பத்துக்கு ஒரு கொரங்கு பதில் சொன்னா ஒத்துக்குவியா?

என்ன கம்பரே…கொரங்கா?

ஆமாம் அதுவும் ஒரு பெண் குரங்கு… பெயர் தாரை…

ஐயனே… இது போதும் எனக்கு.. நானே பாட்டெப் பிடிச்சிட்டேன்.. தேங்க்ஸ்..

ஐயன் கம்பன், குழப்பம் தெளிவித்த இடம் கிட்கிந்தா காண்டம்… பாடலும் கிட்கிந்தை படலத்தில் வருது. கோபம் கொப்பளிக்க வரும் இலக்குவனை தாரை (தம்பட்டை இல்லாமல்) வரவேற்கிறார். தடுத்தும் நிறுத்துகிறார். கோபம் குறைக்க தாரை சொன்ன வார்த்தைகளில் நம் குழப்பத்துக்கு பதில் வருது.

சும்மா கிடந்த ஆளுக்கு (சுக்ரீவனுக்கு) காசு பணம் மது மாது (பொண்டாட்டி தானுங்க) எல்லாம் கொடுத்தீங்க. அதுக்கு பொறுப்பாளி நீங்க தான். அதே நபர் உங்க பேச்சு கேக்காமெ போனாலும் அதுக்கும் நீங்க தானே ஐயா பொறுப்பு… இது வாலி வதத்துக்குப் பின்னர் வரும் தாரையின் வாதம்.

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் யோசிக்க தாரை மூலம் கம்பர் சொன்ன செய்தி… பாட்டின் முதல் ரெண்டு வரியிலேயே இந்த பதில் வருது.. படிங்களேன்…

அடைந்தவர்க் கபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து நும்பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தைதன் பொருட்டால் வந்த வான் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலரென்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா…

வேறு ஏதும் சந்தேகம் வந்தா கம்பராண்டெ கேட்டு எழுதுறேன்.

So…. Sooooooory.


Modi Advaani old

இப்பொ எல்லாம் எங்கெ பாத்தாலும் எலெக்சன் பத்தின நியூஸ் தான். அதனாலெ நாமலும் அதெப்பத்தி நாலு சங்கதி நாசூக்கா (ஆமா..இதுக்கு என்ன மீனிங்கு?) எழுதிட்டு அப்புறம் அப்படியே தூங்கப் போயிடலாம். அப்பொ இந்த எலெக்சன் பதிவில் கம்பர் வரமாட்டாரா? அப்பாடா ரொம்ப சந்தோஷம். ஹலோ..ஹலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க. நம்ம போஸ்டிங்க்லெ வரும் கம்பர், ரஜினி மாதிரி. எப்பொ வருவார் எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்திலெ நச்சுன்னு வருவார்.

மத்த எலெக்ஷனுக்கும் இந்த எலெக்ஷனுக்கும் ரொம்பவே பெரிய வித்தியாசம் என்னன்னு கேட்டா (எவென் கேக்கிறான்?), இந்த சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லப்படும் சமூக வலைத்தளங்களின் பதிவுகள் தான். அதுவும் ஒரு கட்சி விடாமல், நொந்து நோகடிக்க வைக்கும் பதிவுகள். கிண்டலில் உச்சக் கட்டத்தை அடைந்தன. தேர்தல் நிலவரங்கள் பற்றி டீவியில் பார்ப்பதை விடவும் சுவாரஸ்யமாய், ஜனரஞ்சகமாய் தந்தன அப் பதிவுகள். லேப்டாப்பில் பார்த்து சிரித்த மாதிரியே இருப்பதைப் பார்த்து வீட்டுக்காரியின், சந்தேகப் பார்வை பார்த்து தான், கொஞ்சம் அடங்க வேண்டி இருந்தது.

சட்டென்று ஒரு நொடியில் சிரிப்பை வரவழைத்தாலும், சில படங்கள் அதன் கேலியினையும் மீறி வருத்தப்பட வைத்தன. சம்பந்தமில்லாத நமக்கே இப்படி இருக்கே, சம்பந்தப்பட்டவன்களுக்கு எப்படி இருக்கும்? இப்படி வக்காலத்து வாங்க, காத்து வாக்கில் யோசித்து யோசித்து எழுதியது தான் இப்பதிவு. (இன்னுமா பதிவின் முன்னுரை முடியலை?)

நெளிவின் உச்சத்தை அடைய வைத்த படம், நம்ம (முன்னாள்) பிரதமரை ஒரு பூரி சுட வைத்து காட்டும் கிராபிக்ஸ் படம் தான். அவருக்கு இனி மேல் இந்த வேலை தான் என்று கமெண்ட் வேறு. அடப்பாவிகளா? ஒரு பொருளாதார மேதை. ஒரு காலத்தில் அவரோட கையெழுத்து ரூவா நோட்டில் கூட இருந்திருக்கு (இன்னும் பழைய நோட்டில் இருக்கும்). அவரோட நெலமை பாத்தா நமக்கே பரிதாபமா இருக்கு.

பள்ளிக்கூடத்திலெ படிக்கிறச்செ, அப்போதெல்லாம் இவ்வளவு பாப்புலர் ஆகாத பெயர் இந்த ”மன் மோகன் சிங்” என்பது. எனவே நம்ம நட்புப்படைகள் ஒரு ஐடியா செஞ்ஜோம். நல்ல கலரான, கவர்ச்சியான, நல்லாப் படிக்கும் ஒரு பொண்ணுக்கு இந்தப் பேரு வச்சிடுவோம். (அடிக்கடி நாம அந்தப் பொண்ணெப் பத்தித்தான் பேசுவோம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?) அப்பொ இம்புட்டு பெரிய்ய ”மன் மோகன் சிங்” பேரை அப்படியே சுருக்கி ”எம் எம் எஸ்” என்று வைத்தோம். எப்பவுமெ மறக்காது. [இப்படி ஒரு பொண்ணுக்கு அல்டாமிஸ் என்று பெயர் வைத்தோம். அதனால் இன்றும் கூட, குதுப்பினாரைக் கட்டி முடித்தவர் யார்? என்று கேட்டால், எங்கள் நட்பு வட்டம் சட்டென்று சொல்லும் அல்டாமிஸ் என்று). ஆனா இப்படி எல்லாம் பெயர் வைத்திருந்ததை ஒரு எட்டப்பன் போட்டுக் கொடுக்க நாம் மாடிக்கொண்டு முழித்த கதை எல்லாம் நான் சொல்லப் போவதில்லை. இப்படி எல்லாம் யோசித்து ஞாபகம் வச்சி படிச்சும் நம்மளை விட அந்தப் பொண்ணுங்க மார்க் அதிகம் வாங்கினதெல்லாம் தனிக்கதை.

மன்மோகன் கதையை விட்டுவிட்டு, மோடி கதைக்கு வருவோம். ஆஜ்தக் டீவியில் ஸோ ஸா…..ரி என்று சொல்லி கிராபிக்ஸ் மூலம் செமெ கலக்கல் செய்து வந்தார்கள்… இன்னும் செய்து வருகிறார்கள். கவனமாய் அதிலும் அதிகம் வந்தவர் மோடியாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் டீ மாஸ்டர் என்றும், மறுபக்கம் குப்பை கூட்டும் வகையில் இருக்கும் போட்டோவும் அடிக்கடி இணையத்தை வலம் வந்தன. எனக்கென்னவோ இதனை கிண்டல் செய்வது, அவ்வளவு சரியாகப் படலை. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் அதிபரான அமெரிக்கக் கதையை, இந்தியக் குழந்தைகள் படிக்க, பாடமாய் இருக்கும் போது, இந்த டீ எம், பி எம் ஆன கதை ஏன் மக்களுக்குக் கசக்கிறது?

அதை விட இன்னொரு படம் அத்வானி & மோடியுடன் இருக்கும் பழைய படம். அமைதிப்படை அமாவாசை ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பு கிடையாது என்று பொறுப்பான கமெண்ட் வேறு. இதனை ஒட்டி பல கார்ட்டூன்கள் கிராபிக்ஸ்கள் வந்து கொண்டே இருக்கு. (ரிசல்ட் வந்ததுக்கு அப்புறமும் கூட). இந்த கம்பேரிஷன் கூட எனக்கு அவ்வளவா நல்லதாப் படலை. அவர்களின் வாதம் என்ன வென்றால், அத்வானியைத் தள்ளிவிட்டு விட்டு மோடி அதைப் பறித்துக் கொண்டார் என்று சொல்லாமல் சொல்ல வந்தது தான். இதே அர்த்தம் காட்டும் ஸோ ஸாரி கார்ட்டூன் படமும் பல மாதங்கள் முன்பே ஆஜ்தக் போட்டுக் காட்டி நம் மக்களுக்கு வழிகாட்டி உள்ளது.

தலைமை என்பதும் தலைமைப் பண்பு என்பதும் வேறு வேறு. தலைவரிடம் தலைமைப் பண்பு இல்லாமல் இருக்கலாம். தலைமைப் பண்பு இருக்கும் நபர், தலைவர் ஆவதை யாராலும் தடுக்க இயலாது. அதுவும் அவரிடம் அடக்கம் பணிவு அதாங்க சிம்பிளிசிட்டி… இதெல்லாம் இருந்திட்டா மெகா வெற்றிதான். இது தான் மோடியின் வெற்றிக்குக் காரணமாய் இருக்குமோ? யார்கிட்டெ கேக்கலாம். நமக்கு இந்தமாதிரி ஏதாவது டவுட் வந்தா நேரா கம்பர் கிட்டெ தான் போவேன். கம்பர் இப்பொ வாட்ஸ் அப்பிலும் இருக்கார்.
கேட்டேன். உடன் பதில் வந்தது. ”அனுமன் சுகிரீவன் மாதிரி ஓரளவு கம்பேர் செய்யலாம்” என்று. நெட் வழக்கம் போல் சொதப்பிவிட்ட்து. அந்தமானில் ஃபோனும் நெட்டும் சூப்பர் ஸ்டார் மாதிரி… எப்பொ வரும் எப்பொ போகும்னு யாருக்கும் தெரியாது.

சுக்ரீவன் சீனியர் தான். அரசன் தான். அவரின் படை மட்டும் இல்லாவிட்டால், இராமனுக்கு வெற்றியே இல்லை தான். ஆனாலும் இன்னும் இராமன் மனதிலும், மக்கள் மனதிலும் அதிகம் இருப்பவர் அனுமன் தான். அதுக்காக சுக்ரீவனை அம்போவென்று விட்டு விடவில்லையே. இது ஒரு இலக்கு நோக்கிய கூட்டு முயற்சி. அனுமனின் பலம் என்ன?

1. பாத்தவுடன் ஆட்களை எடை போடும் குணம். (முதல் சந்திப்பில் இராமனை கண்டு கொண்டது.)
2. தன் எஜமானனுக்கு விஸ்வாசமான ஊழியர். (சுக்ரீவன் சொன்னசொல் கேட்டல்)
3. எதை எப்படி எப்போது செய்ய வேண்டும் என்பதில் தெளிவு (நான் அனுமனைத்தாங்க சொல்றேன்)
4. எதுவும் பேசாத போதே “சொல்லின் செல்வர்” என்று சபாஷ் வாங்கியவர்.
5. குறித்த காலத்தில் குறிப்பிட்ட வேலையினை முடித்தல்.
6. ABC of Comminication skills தெரிந்திருத்தல்.
7. ஒரு செயலைச் செய்யும் முன்னர் SWOT (Strength Weakness Opportunities Threat) ஆகியவற்றை ஆய்ந்து செய்தல்.
8. UN Resolution சொன்னதை போரில் அப்போதே, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்து காட்டியவர்.
9. 1990 களில் சட்டமாய் வந்த Sustainable Development ஒட்டி பாலம் அமைத்தவர்.
10. 2005ல் சட்டமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கூறுகளை அன்றே அமல் செய்தவர்

மீண்டும் WhattsApp ல் கம்பர் ஒரு மெஸேஜ் அனுப்பி இருந்தார். ”முக்கியமான ஒண்ணு சொல்ல விட்டியே… அதான் பணிவு…” நன்றி கம்பரே, உங்க பாட்டே, அதெ வச்சித்தான் போடலாம்னு இருந்தேன்.

அனுமனின் எல்லா குவாலிட்டியையும் விட அந்த சூப்பரான குவாலிட்டி ஐஸ்கிரீம் போன்ற ஒரு குணம் அந்த பணிவு. நாமெல்லாம், தெரியாத ஒரு நபர்கிட்டெ அறிமுகம் செய்து கொள்ளும் போது எப்படி பீலா விடுவோம். மதவங்களை விடுங்க. நானு… ரெண்டு நிமிஷம் தமிழ்ல்ல யாராவது பேசிட்டா போதும் என் ஜாதகம் அவங்க கைக்கு மாறி இருக்கும். என் புத்தகம் அவர்கள் கையில் இருக்கும். ஐய்ய்ய்யோ…எனக்கு டமிழ் படிக்க வராதே என்று அவர் சொல்லும் போது என் முகத்தில் அசடு வழியும்…

கம்பராமாயன காப்பியத்தில் வணக்கம் போடுவதற்க்கு கொஞ்சம் முன்னாடி வரும் ஒரு காட்சி. 14 வருடம் வனவாசம் முடிந்து, இராமன் வரப் போவதை அனுமன் மூலம் பரதனிடம் சொல்வது தான் கம்பன் ஸ்கிரீன் பிளே. பரதன் கிட்டெ அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் சீன் இப்படி வருது.

மன்னவனே (அழலாமா….? இது அனுமன் சொல்லாமல் விட்டது), நானு ஒரு கொரங்கு. இந்தக் காத்துக்கே ராசாவான வாயு கீறாரே, அவரு மூலமா ஒரு நல்ல புள்ளெ வேணும்னு அஞ்சனை அம்மா கேட்டுக்க, அப்பாலெ அப்புடியே பொறந்து, உங்க அண்ணாருக்கு கீழே அடிமையா ஜோலி செய்யற வேலைக்காரன் நானுப்பா…

எப்படி கீது??

எப்பேற்பட்ட குணங்கள் உள்ள அனுமன், எதையும் சொல்லாமல் தன்னையே தாழ்த்திக் கொள்ளும் பணிவு.. அடக்கம். இது தான் அனுமனுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி. அது தான் மக்கள் மனதில் இன்னும் இருப்பதற்க்கான காரணம். அப்படியே அந்தப் பாட்டையும் பாத்திடலாமே…

காற்றினுக்கு அரசன்பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்திதித்து நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாள்ணேன்
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான்.

இன்னும் வேறு கோணத்தில் கம்பரை வம்புக்கு இழுப்போம்.