கொண்டாடி வரும் வளையல்


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -18]

சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரம் பெரீய்ய சர்ச்சையினை உண்டாக்கிவிட்டது. ஆனா அந்தமான் அதன் மறு பக்கம். மதநல்லிணக்கத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே இத்தீவினைச் சொல்லலாம். நான் கல்யாணம் செஞ்சிகிட்டு (அடெ…முதல் முறையாகத்தாங்க) ஒரு வீட்டுக்குப் போனா, அங்கே ஆரத்தி எடுத்து வரவேற்றது ஓர் இஸ்லாமிய சகோதரி.

அதே சகோதரி பரமக்குடிக்கு வந்தபோது, கருவுற்ற சேதி அறிந்து பரமக்குடியின் முறையில் வளைகாப்பு போல் எல்லாம் செய்து, சிகை அலங்காரம் செய்து ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு எல்லாம் போய் ஃபோட்டோ எடுத்து (அட…அது மொபைல் எல்லாம் வராத காலமுங்கோ); சரி எல்லாத்தையும் விடுங்க..ஆனா வளையல மட்டும் விடாமெ வாங்க. வள்ளுவர் கிட்டே போய் மைக் நீட்டுவோம்; ஏதோ கருத்துச் சொல்ல ரெடியா இருக்கார் அவர். அவர் எப்பவும் 7 வார்த்தைகள் தான் பேசுவார். சில புரியும் சிலபுரியாது. (ரஜினி மாதிரி என வச்சிக்கலாமே)

இப்பொல்லாம் நம்ம தமிழில் வந்த சமாச்சாரங்களை ஆங்கிலத்தில் சொன்னால் தான் ஓஹோ என்று ஒத்துக்கிறாகளாம். நாமளும் வள்ளுவன் பாட்டுக்கு ஆங்கிலக் கோணார் வச்சிப் பாக்கலாமே… (மொதல்லெ பாட்டப் போடப்பா…இதோ இதோ போட்டேன்)

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும்
ஒண்டொடிகண்ணே உள.

Pleasure of all five senses – sight, hearing, taste, smell and touch-
reside together in this girl with shiny bangles. She pleases me completely. (இது ஐயன் சொன்ன மாதிரி தெரியலையே..? வெள்ளைக்காரப் பாஷையில் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்..) நம்ம கையில் போடும் ஐட்டம் இந்த ஒண்டொடி = ஒண் + தொடி – shiny bangle ஒளிரும் வளையல் (என்ன…. எல்லாரும் வளையல் வாங்கக் கிளம்பிட்டீங்களா?)

குன்றியனார் அழைத்தார். அவர் ஹீரோ, கொஞ்சம் போக்கும் வரவுமாய் இருக்கும் பார்ட்டியாம். ஒரு காலகட்டத்தில் வீட்டு அம்மணிகிட்டே வந்து தானே ஆகணும்? (எத்தனை படத்திலெ பாத்திருக்கோம்?) ஆனா வழியில் தோழி மறிச்சி…இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன் எனச் சபதம் (சூள்) வாங்கி, ஹீரோயின் கிட்டே சொல்லப் போனாளாம் .
ஒண்டொடியும் கூடவே வரும், படிச்சிட்டு கூடவே வாங்க…

பாசவலடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்டலயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே!

கொஞ்சம் ஆன்மீகப் பக்கமும் போயிட்டு வந்திடுவோம். (அப்பத்தானே, இந்த உலகம் நம்மை நல்லவன்னு நம்பும்) அப்பொ கவனமா வளையல் வரும் அந்த பக்திப்பாடல் தேடி எடுத்தாச்சி. (எல் ஆர் ஈஸ்வரி பாட்டு மாதிரி வச்சிக்கலாமே)

ஓதி னாய்மறை ஒண்டொடி வண்டமர் ஓதியாள்
பாதி யாய்படர் செஞ்சடை மேற்பணி சூடினாய்
நாதி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்
ஆதி யேஎன வல்லவர்க் கல்லலொன் றில்லையே.

அடேய் சிவனே… ஒளி வீசும் வளையல் அணிந்தவளும் வண்டுகள் விரும்பும் கூந்தலை உடையவளுமான உமையை ஒரு பாதியாக வச்சிருப்பவனே, படரும் செஞ்சடையின்மேல் பாம்பை அணிந்தவனே; கூத்தாடியே; ”வயல் சூழ்ந்த திருநனிப்பள்ளியுள் எழுந்தருளிய ஆதிமூர்த்தியே” என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை;

இந்தமாதிரிப் பதிகம் என்றால், நாம் எப்பவும் ஏதோ தேவாரமோ, திருவாசமோ எனத் தேட வேண்டி இருக்கும். ஆனா இது அதிலெல்லாம் இல்லை. இந்தக்காலத்திலும் இப்படியானப் பாடல்களை ”மதிசூடி துதி” எனப் பாடி வீ சுப்பிரமணியன் அவர்கள்(மரபுக் கவிதைகளாக) தந்துள்ளார் .

அப்படியே கார்நாற்பதில் நம்ம ஒண்டொடி பத்தி என்ன சொல்ல வாராக எனவும் பாத்துடலாமே… இந்ந ஒண்டொடி எதற்காக தலைவனை நினைத்து நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கிறாள். திரண்டு காட்டும் முத்துக்களைப் போல முல்லை நிலமெங்கும் மழைக்கட்டிகள் உருள்கின்றன. புயல் வீசுகிறது. வானம் மழை-அழகுடன் திகழ்கிறது. அவர் வந்துவிடுவார் அன்றோ? தோழி சொல்கிறாள்.

கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று;
எவன் கொலோ, ஒண்டொடி! ஊடும் நிலை?

கம்பன் கிட்டெ நாம கருத்தைக் கேக்காட்டி அவர் கம்பெடுத்து அடிக்க வந்திடுவார். அவரும் ரெடியா ஒரு பாட்டு தந்தார். விளக்கம் எதுவும் சொல்லாம புரியுதே என நினைத்தேன். இது காட்சிப் படல, மிகைப் பாடலாம் (இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ?)

தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள்.

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (16-10-2020)

நாங்களும் கவிதையும் எழுதுவோம்லெ…


Image

சில தினங்களுக்கு முன்னர் அந்தமானில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியின் ஹிந்தி துறைத் தலைவரும், அதன் பேராசிரியரும் என் (அரசு) அலுவலகம் வந்தனர். தமிழ் கவிதை பாடும் வல்லமை பெற்ற இருவரின் முகவரி தேடி வந்தவர்கள் அவர்கள். ”நாங்களும் கவிதை எழுதுவோம்லெ” என்று சொல்ல, ”யாரோ வந்து கவிதை பாடுவதற்க்கு, நீங்களே வந்து கவிதை பாடுங்கள்” என்று நினைத்தோ என்னவோ, ”அதனாலென்ன பேஷா கவிதை பாடுங்க” என்பதாய் வந்தது கவியரங்க அழைப்பு.

அந்தமான் தீவின் தேசீய ஹிந்தி அகடமி தான் நிகழ்வினை நடத்தினாலும், பல மொழி  பேசும் மக்களை, கவிஞர்களை ஒன்றினைக்கும் பணி சத்தமின்றி (கைதட்டல் சத்த்த்துடன்) அரங்கேறியது. அழைப்பு வந்த பிறகு தான் தெரிந்தது, என்னை முன்னிலை வகிக்கவும் அழைத்திருப்பது. [நிகழ்சிக்குத் தலைமை வகிப்பவர், ஒரு அரை மணி நேரத்தில் போய் விடுவார். முழு நிகழ்ச்சியையும் நடத்த ஒரு பொறுமைசாலி தேவை என்ற கட்டாயத்தில் அவர்கள் என்னை ஏற்பாடு செய்திருந்தது பின்னர் தான் புரிந்தது].

ஹிந்தி, தமிழ், மலையளம், பஞ்சாபி, போஜ்பூரி, ராஜஸ்தானி, சோட்டா நாக்பூரி, பெங்காளி கவிதையில் பின்னிப் பெடலெடுத்தனர். ஏனோ தெரியவில்லை மராட்டியமும் ஆந்தரமும் கைவிரித்து விட்டிருந்தது.

காலை 10.30க்கு தொடங்கிய விழா என் கைக்கு முடித்து வைக்க வரும் போது 2.15. செவிக்கு உணவில்லாத போது தான் சிறிது வயிற்றுக்கு யோசிக்கப்படும் என்பது போல் எல்லோரும் (மாணவர்கள் உட்பட) இருந்தனர். (வாத்தியார் யாரும் வெளியே ஓடிவிடாதபடி கதவு பக்கத்திலேயே இருந்ததுதான் நிகழ்வின் வெற்றிக்கு காரணம் என்று ஒருவர் பின்னர் மேடையிலேயே போட்டு உடைத்தார்).

லேட்டா வந்தா சோறு கிடையாது என்று திருமதியிடமிருந்து எஸ் எம் எஸ் வர, நான் மைக் பிடித்தேன். இரண்டு நிமிடம் பேசி முடிக்க அறிவிப்பு வந்தது. ”அதெப்படி எல்லாரோட கவிதையையும் நான் கேட்டேன். என்னோட கவிதை கேட்க ஒரு அஞ்சு நிமிஷம் இருக்க மாட்டீகளா என்ன?” இப்படி நான் கேட்க, சரி என்பது கைதட்டல் வாக்கு மூலம் கிடைத்தது. [தலைக்கு மேலே போயிடுச்சி. ஜான் போனா என்ன? முளம் போனா என்ன? என்று எல்லாரும் நினைத்திருப்பார்களோ!!]

அப்படி பீடிகை போட்டு, ஹிந்தி மொழி பெயர்ப்பும் அப்பப்பொ செய்து வாசித்த கவிதை இதோ உங்கள் பார்வைக்கும்….

என் பார்வையில் கம்பர்

கவியால் உலகை வென்றவன் கம்பன்
கனவாய் இங்கே வந்தவன் இவ்வம்பன்
கம்பன் கவியால் அனைவருமே தஞ்சம்
வம்பன் பெயரோ இங்குதமிழ் நெஞ்சன்

வால்மீகி படைத்திட்ட இராமகாதையை
டப் செய்தவனல்ல கம்பன்
இராமரை அனுமனை வேட்டிகட்டி
ரீமேக் செய்தவன் கம்பன்

என்ன இல்லை இந்தக் கம்பனிடம்?

கம்பன் சொல்ல வந்தது ராமகதை
கனிவாய் சொன்னது தனிக்கதை
கண்டெடுத்துத் தந்தது இனியபாதை
கட்டுத்தறிக் காரனின் புதியகீதை

காரியம் ஆகணுமா? பிடியுங்க காக்கா..
காக்கா பிடிக்கத் தெரியலையா?
படியுங்க நம்ம கம்பரை.

முனுக்கென்றால் கோபம் வரும் முனி
அவர்  பேசிய வார்த்தைகள் விட
விட்ட சாபங்கள் தான் அதிகம்.
சாமானியர்கள் அவர் இருக்கும் திசையே
சாதாரணமாய் பாரார்.
இப்படி வந்தவர் விசுவாமித்ர முனி
சொன்னவர் வான்புகழ் கவி.

மனதினிலே பட்டதை பட்டென்று சொல்லாமல்
சற்றே அரசனை ஏற்றிச் சொல்லி
தனக்கென உதவிட சொன்னான் மெல்ல.
வரம் கெட வந்திடும் அரக்கியின்
சாவுமணி அடித்திட அங்கே- இங்கு
வாசல் மணி அடித்தவன் அம்முனி.

உன்னை விட்டா யாரிருக்கா
எங்களை இப்படிப் பாதுகாக்க?
கேட்டதெல்லாம் குடுப்பியாமே!
எங்கே ராமனை குடு பாக்கலாம்!

காக்கா பிடித்துக் கேட்ட முனி
பாலகனை கவர்ந்து சென்றது இனி
சீதைவசம் சேர்த்த கதை தனி
சேர்ந்து சொன்ன கவியெலாம் கனி.

                                                      *********

சாபம் வரமான கதையும் இனி சற்றே பார்க்கலாம்.
சங்கடங்கள் வரும்போது எதிர்கொள்வதெப்படி?

சாபமான சங்கடங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை
கோபமான தருணங்கள் தள்ளிடவும் முடிவதில்லை
இனமான உணர்வுகள் கேட்டு வாங்கிக் கொண்டதில்லை
உதயமான எல்லாமும் விரட்டிடவும் வழியில்லை.

வந்த பின்னர் என் செயலாம்?
இதுவன்றோ இன்னலான கேள்வி!
சாபம்தனை வரமாக்கிடு
விடையாய் தந்திட்டார் எம் கவி
வரமாய் தந்திட்ட வார்த்தை அது.

சாபம் சாபம் என்றே கலங்கிட்டால்
விலகிடுமோ அச்சாபம்?
வரமாய் அச்சாபம் நினைந்திட்டால்
அகன்றிடுமே துயர் அச்சமயம்.
வாழும் கலை தனையே
கம்பன் கதை வழியே
தந்தவன் அக்கவி.

தசரதன் அம்பு சிரவணன் மேல்படவே
புத்திரன் பிறந்து சிரமம் மிஞ்சிட
சிரவணன் தோப்பனார் சொல்லிய சாபம்
மைந்தன் இன்றியே மயங்கிய மன்னனுக்கு
வரமாய் பெற்றதாய் மகிழ்ந்தான் அரசன்.
ராமன் பெறா தாயிடம் சொன்ன சேதி அது.

*************

அரசின் உள்ளறைக்குள் நடப்பதை அறிந்திடவே
வந்த திட்டம்; அரசின் ஒரு சட்டம்; அதுவே
தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

பாமரன் கேட்ட தகவலதனை
பாங்குடனே பார்த்திட்டு,
வேண்டுவன எல்லாமே
முயன்றே முடிச்சிடனும்
முப்பது நாட்களில்.

தன்கைக்கு வந்திடவே ஒரு மாதாம் ஆகிடுமே
எப்படித்தான் தருவதிது?
யோசிக்கவே நேரமின்றி பலர்
யோசிக்காமல் கேட்ட கேள்வி இது.

அந்தமானில் அடியேன் தான்
அச்சட்டம் பயிற்றுவிக்கும் வளநபர் நான்.
கம்பன் கவிதனையே அங்கும் எடுத்தேன் யான்
முப்பது நாட்களில் முடிந்திட்ட கதை தனையே
முன்னுதாரணம் காட்டி சொல்லிட்டேன்.

ராமன் கூட்டிய பொதுக் குழுவில்
அனைவரும் கூடிச்செய்த முடிவு அது.
முழுதும் படித்தால் முடிவாய் தெரியும்
நிர்வாக ஆசான் கம்பன் என்று.

நாட்டை ஆளணுமா? பிரித்து ஆளு
நாம் கண்ட காட்சி.
நிர்வாகம் சீராக்க
பகிர்ந்தளி ஆளுக்கொரு பணி
கம்பன் கவியில் சொன்னதிப்படி.

அலக்கேஷன் கொடுத்திட்டா போதுமா?
செய்துமுடிக்க ஆள்படை வேண்டாமா?
தந்திட்டார் கேட்டதெல்லாம்.
தென்திசை போகச் சொல்லியே
தன்மனையாளைத் தேடிடவே
அனுமனை அனுப்பி வைத்தார்.

முப்பது நாள் கெடு வைத்தார்
தகவல்தனைத் தந்திடவே..
சேட்டலைட் மொபைல் கூகிள்
டைரக்‌ஷன் இத்யாதி இல்லாத காலமது
முயன்று முப்பது நாளில்
முடிந்திட்ட கதைதான்
கம்பன் சொல்லிய கதை.

தத்தம் அறையிலே உறங்கிடும் தகவலை
உறங்காது தந்திடவே நாம் உழைத்தால்
பாமரனும் ஆகிடலாம் அரசின் அங்கமாய்
உரக்கச் சொன்னவன் கம்பன்.

**************

அரசின் முடிவில் சங்கடம் எப்பொ வரும்?
மக்கள் மனம் கோணும் சமயம் அப்பொ வரும்.
முடியாட்சியில் தேவையில்லை அது
கம்பன் கவி கண்டால்
அங்கும் காணலாம் அதனை
முடியாட்சியில் குடியாட்சி தத்துவம்
முன்னரே தந்த மூத்தவர் கம்பன்.

மாற்றான் படை தாண்டி
வந்தவீரன் வீடணன்;
சேத்துக்கலாமா வேண்டாமா?
சிக்கலான கேள்வி அது.
மன்னருக்கு முடிவெடுக்க
முழுதுமாய் அதிகாரம்.
சொன்ன சொல்லுக்கெதிராய்
சொல்லாத அவர் கூட்டம்.

என்ன முடிவு செய்தார் ராமர்?
பாதிப்புக்கு உள்ளாகும் பொடியனை விளித்தார்.
நன்மை தீமை பாத்துரைக்கப் பனிந்தார்.

தெரியலையே என்றுரைத்தான்
காலாட்படை மயிந்தன் – அவன்
குரங்குப் படையின் முதல் வரிசை அங்கம்.

வீடணன் துரோகம் நமக்கெல்லாம் பாடம்
ஒருபோதும் வேண்டாம்
நமக்கும் வரலாம் அச்சோகம்.
சொன்னவன் வானர அரசன்.
ராமன் துணையுடனே
கெட்ட பெயரும் இலவச இணைப்பாய்
வாங்கி மரத்தின் பின் மறைந்து நின்று
வாலியை வென்ற சுக்ரீவன்.

அனுமன் தான் உன்மையினை
உரக்கச் சொன்னான்.
வானிலிருந்து கண்ட நல்சாட்சி.
ஆதாரமதனை அடுக்கடுக்காய் அடுக்கி
சொல்லால் வரவேற்பு வளையம்
அமைத்தவன் வால் வைத்த வானரம்
அகிலமே வணங்கும் அனுமன் கடவுள்.

கலந்து பேசி ஒரு முடிவு
கடைசியில் எடுத்தவன் ராமன்.
அரசு யந்திரம் எப்படி இருந்திட
அரசு யந்திரம் இப்படி இருந்திட
அன்றே சொன்னவன் எம்கவி கம்பன்.

கம்பரைப் போற்றுவோம்
வந்தனம் சொல்வோம்
இன்றைய நிகழ்வுக்கும்
ஏற்போம் அவரை.

முகத்தில் முகம் பார்க்கலாம்…


இப்படி சொன்னவுடன் காதலியின் பளிங்கு மாதிரியோ, கண்ணாடி மாதிரியோ இருக்கிற கண்ணத்தில் போய் மெய்யாலுமே முகம் பாக்க போயிடாதீங்க.. இந்த காலத்து பொண்ணுங்க அவ்வளவு மேக்கப் போட்டிருப்பாளுக…. நாம எங்கிட்டு போயி முகம் பாக்க??

முகத்தில் முகம் பாக்க இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். பேசாமெ உங்க வெப் கேமிராவை கொஞ்சம் உத்துப் பாத்தாலே போதுமே!! சரி அதுவும் இல்லையா?? இருக்கவே இருக்கு, மொபைல் கேமிரா. Self Shot அடிக்கிற வித்தை தான் இப்பொ எல்லா டப்பா ஃபோனும் தான் செய்யுதே?? உங்க மொகத்தெ நீங்களே பாத்துகிடுங்க..

25000 போட்டு வாங்கின Samsang Galaxy Tab என்னென்ன வித்தைகள் செய்யும் என்ற கேள்விக்கு என் பையன் சொன்ன பதில்: இதெ வச்சி மொகம் பாத்து ஷேவிங் செஞ்சிக்கலாம் என்கிறான். 5 ரூபா கண்ணாடியோட technically advanced costly replacement (சார்ஜ் செய்ய மறந்தால் அதுவும் அம்பேல் தான்!!)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய் என்கிறது ஒரு தத்துவம். அப்படிப் பாத்தா, சூர்யா கல்யாணத்துக்கு முன்னாடி அம்புட்டு ஆம்பிளைப் பசங்களும் ஜோதிகா ஆயிருக்கனுமே!!! அல்லது இப்பொ பசங்க எல்லாம் தமண்ணாவாவா மாறிட்டாக?? ஆக… ஆகி விடுவது என்றால்… உணர்வில் அப்படி..

பாரதியும் அப்படித்தான். கண்ணனின் காதலியாய் மாறி கண்ணம்மாவாய் அவதாரம் எடுத்தார். ஆண்டாளும் இதே வகை தான். மதுரையில் கிருஷ்ண பகவானின் நாயகியாய் தன்னை பாவித்தபடி வாழ்ந்து நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று பெயரே பெற்றார். இப்போதைய சாமியார்கள் பார்வைமட்டும் (கதா) நாயகிகளின் முகம் நோக்கி ஓடுதே? இதுவும் நாயகி பாவமாக்கும் முயற்சியோ?? யாருக்குத் தெரியும்? (மதுரைக்கு சோதனை வருவது புதுசா என்ன??)

ஒருவரின் முகத்தைப் பாத்து ஆளு எப்படி என்று எடை போடும் கலை, வர்த்தக நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு அத்துப்படியாய் இருக்கும். ஆனால் பெரும் ஜமீன் பரம்பரையாய் இருந்தாலும் ரொம்பவும் சிம்பிளான உடை உடுத்தும் மக்கள் கோவை பகுதியில் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று படுகிறது. அவர்கள் முகம் பார்த்து ஆள் எப்படி என்று எல்லாம் எடை போட்டுவிட முடியாது.

ஒரு சின்ன கார் வைத்திருப்பவன் செய்யும் பந்தாவே எக்குதப்பா இருக்கும் இந்தக் காலத்தில், பத்து பதினைந்து லாரி, ஓரிரு கல்வி நிறுவனங்கள் நடத்தும் அதிபரின் எளிமை பாத்து அரண்டு போய்விட்டேன். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

லைலா மஜ்னு காதல் பற்றி பேசாத ஆட்களே இருக்க மாட்டார்கள். காதலில் இதயத்தை இடம்பெயர்த்த மூத்த முதல் காதலர்கள் அவர்கள். ஒரு விசாரனை வருகிறது. கேள்வி லைலாவை நோக்கி, “உன் பெயர்?”
லைலாவின் பதில்: மஜ்னு.
மஜ்னுவிடம் மறுபடியும் அதே கேள்வி.
பதில்: லைலா.
ஒருவருக்குள் ஒருவர் மாறி மாறி வாழும் காதல் சரித்திரம் அது.

முகத்தில் மலர்ச்சி காதலில் தான் வருமா? கடவுளிடம் அப்படி இருக்காதா? கடவுள் சன்னதியில் சமீபத்தில் நடந்த நிகழ்வு. திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாய் அரச்சனை யார் பேருக்கு என்ற கேள்விக்கு நாம பெரிய்ய லிஸ்ட் தருவோம் (நட்சத்திரம் ராசி சகிதமாய்… உங்களுக்கு கண்டது எல்லாம் ஞாபகத்துலெ இருக்கு.. இந்த நட்சத்திரம் மட்டும் ஏன் மனசிலெ நிக்க மாட்டேங்குது என்ற என் மனையாளின் திட்டும் மறுபக்கம்)

ஒரு பக்தர் சொன்னது மட்டும் என்னை உற்றுப் பார்க்க வைத்தது. ஓர் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக அர்ச்சனை செய்யுங்கள் என்றார். (ஊரில் நல்லவர்கள் அங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்… நம்ம கண்ணுக்கு அப்பப்பொ தான் தென்படுகிறார்கள்). ஊர் மக்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் நானும் மகிழ்வாய் இருக்க முடியும் என்ற உயரிய எண்ணம்.

நாமளும் தான் தினமும் எத்தனையோ முகத்தெப் பாக்கிறோம். நமக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியாது. ஆனா கம்பர் பார்வை மட்டும் வித்தியாசமா இருக்கும். எந்த எடம் தெரியுமா? ராவணனின் அரண்மனை. இழுத்து வரப்பட்ட நிலையில் அனுமன். பத்து தலையையும் பதறாமல் பார்க்கிறான் அனுமான். ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் தெரிகிறதாம்.
ஒரு முகம் தன்னோடு வேலை செய்யும் தேவர்களுடன் அரசியல் பேசியதாம். சில முகங்கள் மந்திராலோசனை நடத்தியதாம். ஒரு முகம் தீய சிந்தனையில் இருந்ததாம். அட… ஒரு முகம் சீதை முகம் மாதிரி இல்லெ இருக்கு!!!.. இது எப்படி இருக்கு??

இராவணன் நினைப்பில் சதா சர்வகாலமும் சீதை இருப்பதால் அவனின் ஒரு முகம் சீதை முகம் போல் ஆகிவிட்டது என்கிறார் கம்பன். ஒரு வேளை அனுமன் கூட, எப்பவுமே சீதையை மீட்பதில் குறியாய் இருந்ததால் அனுமன் கண்ணுக்கு இப்படி படுகிறதோ.. இருக்கலாம்.

நம் மனசிலும் இப்படியான பத்து முக சிந்தனைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முறையாவது நல் சிந்தனைகளை ஒருமுகப் படுத்த முயற்சிக்கலாமே!!!

இதோ கம்பன் பாடல் வரிகள்:

தேவரொடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒருமுகம் முயல
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில
பூவை சானகி உரவொளி ஒரு முகம் பொருந்த

என்ன… ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி பாட்டு ஞாபகம் வருதா?

கூட்டத்தோடு கோயிந்தா..


இந்த நாடு உருப்படவே படாது. ஒருத்தனும் யோக்கியன் கிடையாது… நாடு எங்கே போகுதுன்னே தெரியலை. ஏன் இவங்க இப்படி இருக்காங்களோ?? இப்படி புலம்பும் பலரை பல இடங்களில், பல நேரங்களில் பாத்திருப்பீங்க. ஆனா அப்படி புலம்புபவர்கள் ஆக்கபூர்வமா ஏதாவது செஞ்சிருக்காங்களா?? இது மட்டும் பதில் தெரியாத கேள்வி.

அப்படி கூட்டத்தில் கூப்பாடு போடுபவர்களை ஏதாவது கருத்து சொல்லும் கூட்டங்களுக்கு அழைத்தால் வரமாட்டார்கள். நமக்கேன் ஊர் பொல்லாப்பு என்று சொல்லி விலகிவிடுவர். ஆனா சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்வது மட்டும் தமது பிறப்புரிமை என்று முழங்கிடுவர்.

சிலர் எந்த கூட்டத்திற்கு வந்தாலும் கேள்வி மழை கேட்டு துளைத்து விடுவார்கள். அவர்களை Mobile Question Paper என்று சூப்பரா பேர் குடுக்கலாம். கேள்வி தான் பிரதானம். என்ன பதில் வருது என்பதைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலையே கிடையாது. அவங்களுக்கு வேண்டியதெல்லாம், நாலு பேரு, அடெ.. எந்த சப்ஜெக்ட்லெயும் கேள்வி கேக்கிறாரே என்று சொல்லிடனும். எல்லா பக்கமும் மூளையை வளர்த்துள்ளார் என்று காது குளிர கேட்டால் தான் அங்கே தூக்கமே வரும்.

நான் அழைப்பு விடுக்கும் கூட்டங்களில், இந்த மதிரி ஆட்களை மறக்காமல் கண்டிப்பாய் அழைத்து விடுவேன். கேள்வி கேக்காட்டியும் கூட, கூட டீ பிரேக்கிலாவது அந்த ஸ்பீக்கரை ஒரு பிடி பிடித்து விடுவர். நாம வேறு ஏதாவது போன் பேச கலண்டுக்கலாம்.

சாய்ந்தால் சாய்ற பக்கம் சாயும் செம்மெறி ஆட்டுக் கூட்டம் என்பார்கள் நம் மக்கள் கூட்டத்தை சில மக்கள். நான் தனியாக இல்லை. பாதுகாப்பாய் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்வது நிறைவான ஒரு சந்தோஷம். லாபமோ நஷ்டமோ, நமக்கு தனியா வராது. பத்து பேத்துக்கு பொதுவா எதுவோ, அது தான் நமக்கு என்பது ஒரு நிம்மதியான வாழ்க்கை.

தேசீயத் தலைவர்களை நம்ம ஊர் ஜாதி சங்கங்கள் Daily Sheet காலண்டரில் போடுவது என்பது தொல்காப்பியர் சொல்ல மறந்த தமிழ் இலக்கண விதி. சன் டீவியின் இந்த நாள் இனிய நாளிலும் சுகிசிவம் ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னார் இதை.

மொபைல் போன் பிரபலமாகாத நாள் ஒன்றினல், சென்னையில் ஒரு STD booth ல் போன் செய்ய நுழைந்த போது அப்படிப்பட்ட ஒரு தலைவரின் போட்டோ போட்ட அந்த காலண்டரை பாத்தேன். நான் கேட்டேன், அப்பொ நாங்க வீட்டிலெ இந்த தலைவர் போட்டோவை மாட்ட முடியாத படி செஞ்சிட்டீங்களே என்றேன். அவரிடம் பதில் ஏதும் இல்லை. இவர்கள் அந்த தலைவர்களுக்கு மரியாதை தரலாம். ஒட்டு மொத்த தமிழக மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து அந்த சாதிக்கு மட்டும் என்று வைப்பது நல்லதாப் படலை.

இப்போது அதையே சுகிசிவம் சொன்னதும் மனசுக்கு நிம்மதியாச்சி.. அட இப்படித்தான் பலரும் நினைக்கிறாய்ங்க. அல்லது அப்படி நினைக்கும் கூட்டத்தில் நானும் இருக்கேன் என்பதில் எனக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வு தான்.

ஒரு வேலைக்கான Recruitment Process நடந்து கொண்டிருந்தது. ஒருவர் வந்தார். தன் மகனோட அப்ளிகேஷன் என்ன ஆச்சி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் தெரிந்தது அவர் முகத்தில். கணிணியை தட்டி கேட்டதில் ஒரு சான்றிதழ் தராததால் நிராகரிக்கப்பட்டதாய் சொல்லியது. சோகமாய் மாறியது அவரின் முகம். அடுத்து உடனே வந்த கேள்வி,… “இப்படி எத்தை பேர் Reject ஆயிருக்காங்க?”. மீண்டும் கணிணி இதற்கும் பதில் சொல்லியது 1832 பேர்களை என்று. ஓஹோ… கிட்டத்தட்ட ரெண்டாயிரத்திலெ ஒண்ணுதானே.. பரவாயில்லை.. சோகத்தின் முகம் இப்பொ நிம்மதியாய்ப் போனது.

சமீபத்தில் ஒரு SMS வந்தது. அமெரிக்காவில் கரண்ட் போனால் உடனே Call Center க்கு போன் செய்வார்களாம். ஜப்பானில், ஃபியூஸ் போயிருக்கா? என்று பாப்பாங்களாம். இந்தியாவில் மட்டும் பக்கத்து வீட்டிலெயும் கரண்ட் போயிடுச்சா? என்று பாப்பாங்களாம். இது எப்படி இருக்கு? எப்படியும் கூட்டத்தோட கோவிந்தா போடும் முயற்சி தானே??

ஆனா அந்தமானில் மட்டும் கரெண்ட் கட் ஆனால், ஓடிப்போய் அன்றைய நியூஸ் பேப்பரைத்தான் தேடுவோம். ஏன்னா.. எங்கே, எப்போ கரண்ட் இருக்காது என்ற நிலவரம் பேப்பரில் போட்டிருப்பாங்க… நல்ல விஷயம் தானே.. மொபைல் சார்ஜ் செய்யும் வேலை, வாஷிங்க் மிஷின் வேலை எல்லாம் நேரத்தோட பிளான் செய்துக்கலாம்லெ…

ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்து, இப்பொ சில வீடுகளில் அக்கா அண்ணன் தம்பி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை. முன்பெல்லாம் யாராவது வீட்டுக்கு வந்தால் தாத்தா பாட்டி என்றெல்லாம் அறிமுகம் செய்தது போய், இப்பொ வீட்டிற்கு வந்தவரிடம் புதுசா வாங்க்கின மொபைல் ஃபோன் தான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

நிகோபார் தீவுகளில் இதுவரை கூட்டுக் குடும்பமாய் இருந்து வந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு சொத்துக்களுக்கும் காம்பவுன்ட் சுவர்கள் எல்லாமும் கூட இல்லாமல் தான் இருந்தனர். படித்து நாகரீகம் ஆனவர்கள் எல்லாம் இப்போது அவரவர் வீடுகளில் காம்பவுண்ட் சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள்.. என்னத்தெச் சொல்ல??

கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்கள், பெரும்பாலும் பின்பற்றி நடப்பவர்கள். சாதாரணமா சிகரெட் குடிக்கும் ஆட்கள். அதையே தூக்கிப் போட்டு ஸ்டைலா புடிச்சா என் வழி தனி வழி என்று தலைமைக்கே போயிடலாம். அதாவது எதிர் நீச்சல் போடுபவர்களிடம் தான் தலைமைக் குணம் இருக்கும். Leadership Quality என்று அதைத்தான் சொல்கிறோம்.

சுனாமியால் அந்தமான் பாதிப்பு அடைந்த பின்னரும், நான் இங்கே இருப்பதை பாத்து, ஏன் ஏதாவது வேலை மாத்திகிட்டு பரமக்குடி பக்கம் வரலாமில்லெ?என்று கேட்டார்கள். நானும் யோசித்தேன். ஏன் எனக்கு அந்த ரோசனை வரலை? சுனாமி பாதிப்பு எனக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஏன்னா?? அது எனக்கு மட்டுமா வந்தது? தீவை உலுக்கிய பூகம்பம் வந்த போது, வீடுகளுக்கு போகப் பயந்து ஒட்டு மொத்தமா எல்லாருமே ரோட்டில் தான் படுத்தோம். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் விபத்து தனி நபர்களை பாதிக்கும். ஊரையே கலக்கும் பேரிடர் ஒன்னும் செய்யாது என்பது அப்போது லேசா தெரிந்தது. ஆனா இந்த பேரிடர் மேலாண்மை (Disaster Management) மேட்டர் நம்ம கண்ணுக்கு இப்பத்தான் தெரிஞ்ச்சாலும் கம்பருக்கு இதைப் பத்தி முன்பே ஐடியா இருந்திருக்கு. என்ன… சாட்சி வேணுமா?? வாங்க மீண்டும் இலங்கை பக்கம் போலாம்.

சம்புமாலி என்ற தளபதி இறந்த சேதியை இராவணனுக்கு சொல்லணும். கம்பர் சொல்லும் விதத்தில் தான் அந்த பேரிடர் மேலாண்மை தெரியும். அந்த சேதி சொல்ல தேவர்கள் தான் முதலில் ஓடி வந்தார்கள். (பால்கனியில் இருந்து படம் பாத்த VIP க்கள் அவர்கள் தானே??).
ஓடி வந்தவர்கள் சொல்ல முடியாமல் (மனதிற்குள் சிரித்தாலும்) மன்னருக்குப் பயந்து விக்கி விக்கி அழுதமாதிரி ஆக்ட் கொடுத்தாகளாம். ராஜாவுக்கு இது தெரியாதா என்ன!! சிரிச்சிட்டே என்ன சேதி என்றாராம்.

ஒரு கொரங்கு செஞ்ச சேட்டையில் சண்டைக்குப் போன நம்மாளுங்க கூட்டத்தொடு கோயிந்தாயிட்டாய்ங்க… அதுலெ நம்ம சம்புமாலியும் ஒருத்தர். எப்படி சேதி சொல்லும் ரகசியம்??

புக்கார் அமரர் பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பார் ஆற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான்ஐய நமர் எல்லாம்
உக்கார் சம்புமாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார்.

அது சரி.. நீங்க எப்படி தனி ரகமா?? அல்லது அங்கேயும் கூட்டத்தோடு கோயிந்தாவா??
நீங்களும் தனியா என்னோட ப்ளாக் படிக்கிறதா நெனைச்சிராதீங்க… 2550க்கு மேல் பார்வையாளர்களில் நீங்களும் ஒருவர்.

தனியே… தன்னந் தனியே..


தனிமையிலே இனிமை காண முடியுமா??
இது ஓர் அரதப் பழசான கேள்வி. ஆனா அதுக்கு சொல்லும் பதில் என்ன தெரியுமா?நள்ளிரவிலே சூரியனும் தெரியுமா?? கேள்வியையே பதிலாகச் சொல்லும் யுத்தி இது. இதே மாதிரி இன்னொரு கேள்வி இருக்கு.

பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? (இந்த மாதிரி கேள்விகள்  ஃப்ரீ sms உலகில் பிரபலம்) ஆனா, இதுக்கு பதில் கூட ஒரு கேள்வியாய் தான் சொல்ல முடியும்.

பதில் :  பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்.

இதையே  ஆச்சரியத்துடனும் பதிலாய் கேக்கலாம்
பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் !!!!!!

பெண்களால் கடுமையாய் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்ப ஜாலியாவே சொல்லலாம் “பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்” என்று.

தனியா உக்காந்து யோசிச்சா இப்படி நெறையவே யோசிக்கலாம் போல இருக்கு. தனி ஒரு மனுஷனுக்கு சோறு இல்லாட்டி இந்த லோகத்தையே சுட்டு பொசுக்கலாம்னாரு நம்ம பாரதி.

தனி ஆளா நின்னு சமைக்கிறதும் கூட ஒரு யோகம் மாதிரி தான் இருக்கு. பொண்டாட்டி கூட இல்லாத நேரத்தில் வம்படியாய் காலை நேரத்தில் சமைக்கும் ஐட்டமாய் நூடூல்ஸ் தான் பிரதான உணவாக அமையும். (அது சரி அதை 2 நிமிடத்தில் சமைக்க முடிகிறவருக்கு கின்னஸ்ஸில் கூட பேர் போடலாம்)

தனி ஆளா நொந்து நூலாகி நூடூல்ஸே கதி என்று இருப்பவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன். (ரகசியமா வச்சிக்குங்க.. உங்க மனைவிக்கு கூட சொல்லாதீங்க. அந்த நூடூல்ஸ் செய்யும் போது மொதல்ல மசாலாவை போட்டு நல்ல சுட வைங்க. அதோட லேசா சிக்கன்/மட்டன்/மீன் மசாலாவையும் கொஞ்சம் சேத்துப் பாருங்க.. தனி டேஸ்டு கெடைக்கும் பாருங்க. சைவப் பிரியர்கள் வேறு ஏதாவது கரம் மசாலாவை சேத்துப் பாருங்க)  .

பாரதி சொன்ன மாதிரி சோத்துப் பிரச்சினை பெரும் பிரச்சினை தான். ஆனா அதே பாரதி செத்தும் ஈக்களுக்குத்தான், உணவாய் அதிகம் இருந்தான் என்பது தான் சுவாரஸ்யமான சேதி.

வைரமுத்துவின் வரிகள் இப்படி வருது

அவன் சவத்தின் பின்னால்
வந்த ஆட்களின்
எண்ணிக்கையை விட
அவன் கண்களின்
மொய்த்த ஈக்களின்
எண்ணிக்கை அதிகம்.

ஒரு தனி மனிதனின் வெற்றியோ அல்லது தோல்வியோ, அவன் தனியாய் இருக்கும் போது எப்படி யோசிக்கிறானோ, அதைப் பொறுத்துத் தான் அமையும்.

மனசாலெ கூட தப்பாவே நெனைக்கப் படாது. இது தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்பதன் எளியா சாலமன் பாப்பையார்த்தம். ஆனா என்ன நடக்குது நாட்லெ??.

நம்மாளு தனியா இருக்கும் போது பெரும்பாலும் சின்னத்திரையில் படங்கள் பாத்துகிட்டே இருந்தா கனவிலெ கூட தமன்னா தான் வரும். என்ன செய்ய? நம்ம நெனைப்பு அப்படி.

ஒரு தனி மனித அவமானங்கள் தான், பிற்காலத்தில் அவர்களை சரித்திர புருஷனாய் அவதாரம் எடுக்கவும் செய்கிறது. ஒரு ரயில் பயண அவமானம் தான் மோஹன்சந்த் கரம்சந்தை மஹாத்மா காந்தி ஆக்கியது. சமூக அவமானங்கள் தான் ஒரு பீமை, அண்ணல் அம்பேத்காராய் ஆக்கியது. ராணுவ வேலையின் நிராகரிப்பு தான் அப்துல் கலாமை இந்திய தலைமைக்கே இட்டுச் சென்றது.

அதெல்லாம்… பெரிய்ய ஆட்களுக்கு.. நம்மளை மாதிரி சாமானியர்கள் என்ன செய்ய?? அதுக்கும் வள்ளுவன் தான் வழி சொல்றார். வச்சா குடுமி, செரைச்சா மொட்டை இப்படி எல்லாம் வாணாம். இந்த லோகம் எது வாணாம்னு சொல்லுதோ, அதெ நீயும் வேணாம்னு சொல்லு. என்ன ஒரு சிம்பிள் லாஜிக்.

தமிழ்மொழி வளரவும் இதே மாதிரி தனியா யோசிச்சா உடனே பதிலும் கெடைக்கும். தனியே இருக்கும் போது சிந்திக்கும் மொழி தமிழாய் இருக்கட்டும். மத்ததெல்லாம் தானே நடக்கும். என்ன தமிழில் யோசிக்கிறீங்களா??

அந்தமான் போன்ற தீவுகளில் தற்கொலைகள் அதிகம் என்ற ஒரு பேச்சு இருந்தது. தனிமை ஆக்கியதன் பின் விளைவு பிணமாய் ஆனதோ? ஆனால் இப்பொ கொஞ்சம் மாறி இருக்கிறதா படுது. மொபைல் என்னும் மந்திரக்காரி எப்போதும் கூட இருப்பதால், தனிமை என்பதே இல்லையே..

சமீபத்திய ஒரு வார இதழில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிளவு வருவதற்கு காரணமே அதிகம் பேசாததே எங்கின்ற மாதிரி தான் போட்டிருந்தார்கள். ஆனா பேசினாத்தான் பிரச்சினை என்று எத்தனை ஆண் மக்கள் மௌனவிரதம் இருக்கிறார்கள் என்பது எப்படி அந்த டாக்டருக்கே தெரியாமப் போச்சோ.. இப்படி தனியா புலம்ப வேண்டியது தான்.

தனியா ஒரு ஆளு சொன்ன கூட்டமா சொன்னதுக்குச் சமம் என்பது நம்ம சினிமா சித்தாந்தம். ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்னமாதிரி சொல்றது அதுக்குத்தான்.

தெரு நாய் வேண்ணா கூட்டமா வரும். வெறி நாய் தனியாத் தான் வரும். சிங்கம் சிங்கிளா வரும். பன்னிங்க தான் கூட்டமா வரும்.

பக்கத்து வீட்டு பையனைக் கூப்பிட்டு பாடுப்பா என்றால், பயந்து ஓடியே போயிட்டன். ஆனா பாத்ரூமில் செமெய்யா பாட்றான். தனிமை தான் அங்கே பயத்தை விரட்டுதா?

ஆக தனிமை பலமா பலவீனமா?

ஒரு பட்டிமன்றம் வச்சி, நடுவரா யாரா கூப்பிடலாம்?? நம்ம கம்பரை கூப்பிட்டா அவர் என்ன முடிவு சொல்வார்.

அவர் தனிமைக்கு தனிமையே பலம் என்கிறார். மீண்டும் ஒரு டிரிப் அசோகவனம் போயே ஆகனும். அங்கே அனுமன் ராவணனின் தளபதியோட மல்லுக்கு நிக்கிறார்.

ஏக ஆர்ப்பாட்டத்துடன் எழுந்தது அரக்க சேனை. அனுமனை அப்படியே சுத்தி வளைச்சிட்டாய்ங்க. அந்தி மழை பொழிகிறது மாதிரி அங்கே ஆயுத மழை பொழியுது. Security Guard  க்கே பயத்திலே வேர்த்துக் கொட்டினா எப்படி இருக்கும்? அப்படி தேவர்களுக்கும் வேர்த்துப் போச்சாம். நாரதர் மாதிரி ஆட்கள் சும்மா அதிருதில்லெ என்று சொல்லும் போதே விண்ணுலகமும் மண்ணுலகமும் லேசா அதிருச்சாம். அந்த சேனையோட அனுமன் தானும் தன் தனிமையும் சேர்ந்து வர சண்டைக்கு புறப்பட்டானாம். இது கம்பன் தீர்ப்பு.

ஆர்த்து எழ்ய்ந்து அரக்கர் சேனை அஞ்ச்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது பொழிந்தது அம்மா! பொரு படைப் பருவ மாரி
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும்
தார்த் தனி வீரன் தானும் தனிமையும் அவர் மேல் சார்த்தான்.

என்ன… தனியா யோசிக்கிறீங்களா?? வெற்றி உங்களுக்குத்தான். ஆல் த பெஸ்ட்.

மொபைல் மொபைலா முந்திரிக்கா…


மொபைல் போன் வந்த காலத்தில் அது, நாம் போன் பேசவும், நமக்கு போன் வந்தால் பதில் சொல்லவும் மட்டும் தான் இருந்தது.. ஆனால் காலப்போக்கில் அதில் கேமெரா, மெமியோரி கார்ட். பாட்டு இன்டர்நெட் என்று சேத்துக் கொண்டே போக..அதன் பரினாமமும் மாறிட்டே வர ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஆறு வருஷமாய் ஒரே Basic Model போன் வைத்திருந்தேன்..ஏதாவது சிரமங்கள் வரும் போது மட்டும் (கமல் சலங்கை ஒலியில் ஒரு டப்பா கேமிராவைக் காட்டி வழிந்து சொல்வது போல்) இதுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லி வந்தேன்.

ஒருநாள் கூட்டமாய் இருக்கும் போது ஒரு பொம்பளை அதிகாரி, என்ன இன்னுமா இந்த போனை விடாம வச்சிருக்கீங்க என்று சொன்ன போது தான், நான் சமூகத்தில் அப்டேட் ஆகாமல் இருக்கும் விஷயம் தெரிந்தது. அத்துடன் மொபைல் போன் தான் ஒரு தற்போதைய ஸ்டேட்டஸ் சிம்பள் என்பதும் தெரிந்தது.

உடனே வீட்டுக்காரியிடம் கெஞ்சிக்கூத்தாடி நோக்கியா N95 வாங்கி வைத்தேன். என் கையில் அதைப் பாத்து அசந்து போன, என் கீழ் வேலை பார்க்கும் Executive Engineer ம் அதே வாங்க, நான் மனசு நொந்து போனேன்.. விரைவில் அந்த N95 அதீத சிக்கல் தர.. நான் Samsung Carby Pro க்கு மாறினேன். அதற்கு சில வாரங்களில் புது பொறியாளர் என் கீழ் வந்தார். போனை உற்றுப்பாத்தா..ஆகாயம் பாருங்க…நட்சத்திரம் பாருங்க என்று கையில் Samsung Galaxy.

எனக்கும் போன் மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்க, என் போன் கடலில் விழ. அடுத்த தேர்வு Galaxy Tab.. இதில் போன் மட்டும் பேசுவது கஷ்டம். மத்த எல்லாம் செய்யலாம்.. (இது தேவையா..என்று என் மனைவி பாடாய் படுத்துகிறாள்).. ஆனா அடுத்தவர்களுக்கு படம் காட்ட இர்து தான் நல்ல ஐடியா..

சமீபத்தில் மதுரையில் மனைவி பக்க விசேசத்துக்கு அந்தமானிலிருந்து போனோம்.. அது கிரஹப்பிரவேஷம்.. கீழே பார்க்கிங்க்..வீடெல்லாம் மேலே.. வயதான விருந்தாளிக்கு மாடி ஏற முடியாத நிலை.. எனக்கு அழைப்பு வந்தது. (உத்தரவு வந்தது என்பதின் நாகரீக வடிவம்) சும்மா படம் காட்றீங்களே..வீட்டை வீடியோ எடுத்து காமிங்க..என்று… படியில் ஏடுவது தொடங்கி, டாய்லட் வரை ஒன்று விடாமல் நேர்முக வரணனையோடு (கம்பராமாயண கலாட்டா இல்லாமல்) செய்து முடித்து அனைவரிடமும் சபாஷ் வாங்கி (அந்த Tab வாங்கும் போது வாங்கிய திட்டுக்கு ஒரு வழியாய்) சரி ஆனது.

மொபைல் மாத்துவது பெரிய்ய காரியமில்லை..அதை எடுத்துப் போவது தான் சிரமம். பேண்ட் பாக்கெட்டில் போட்டா ஆண்மைக்குறைவு வரும்கிறாங்க.. பாக்கெட்ல வச்சா இதயக் கோளாறுக்கு நாள் குறின்னாங்க..கையில வச்சா பக்காவா வாதம் வருமாம். காதுலெ வச்சா ரேடியேஷன்.. முட்டையை நடுவுலெ வச்சா குஞ்சு  பொரிக்கலாமாம்.. நல்ல வேளை ஆம்லெட் போட மட்டும் ஐடியா தரலை..அட.. அதுக்குத்தான் தொப்புள் தயாரா இருக்கே..இது எதுக்கு??

சரி இடுப்புலெ மாட்ட உறை வாங்கிட்டா..அப்புறம் பெல்ட் மாத்த முடியாது.. மொபைலோ, பெல்ட்டோ எது இல்லாமலும் உயிர் வாழ்வது கஷ்டம்..

பெரிய Tab ஐ சுருட்டி வைக்க பெரும்பாடு பட வேண்டி இருக்கு.. சரியான உறை தேடும் வாய்ப்பு கிடைத்தது… ஒரு நாள் தெரியாத்தனமா Lacal flight ஐ International airport வழியா உட்டாங்க.. நானும் பந்தாவா டாலர் விலைகளை மேஞ்ச்சிட்டே வந்தேனா… Tab க்கு உறை கிடைத்தது. அருமையான பேக்கிங்க்.. நல்ல கம்பெனி…  நல்லா தெறந்து பாத்தா அந்தக் கால பாட்டிமார்கள் வைத்திருக்கும் சுருக்குப் பை.. (விலை மட்டும் பல நூறு டாலர்கள்..விடு ஜுட்…ஒரே ஓட்டம் விமானத்தில் போய் உக்காந்துட்டேன்)

உறைன்னு சொன்ன உடனே விவேக் சொன்ன விவேகமான ஜோக் தான் நெனைவுக்கு வருது… கட்டில் மெத்தெக்கு உறை போட்றோம், தலையணைக்கு உறை, பாட்டிலுக்கு உறை..இப்படி எல்லா உறையும் போட்ட நீ போட வேண்டிய ஒரு உறையைப் போடலியே என்று கு க வுக்கு ஆதரவா பேசுவார்.. (இப்பவெல்லாம் அதைப் பத்தின பிரச்சாரம் தேவையே இல்லை.. விக்கிற விலைவாசியில் நாமே குழந்தை நமக்கதுக்கு குழந்தை தான் சரி)

அது சரி..உறையைப் பத்தி இவ்வளவு உரை எழுதிட்டு கம்பரை இழுக்காமெ உட்டா எப்படி?? அதானெ.. நாம அப்படியே உடுவோமா என்ன?? கம்பரையும் தான் வம்புக்கு இழுப்போமே…

நாம மொபைலுக்கு உறை போட்டா, அவரு இந்த உலகத்துக்கே உறை போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கிறார்.. அப்படியே ரிவர்ஸ் கியரு… (கொலைவெறி டியூன்லெ சொன்னா தான் பின்னாடியே போகும் போலெ…) போனோன்னா..அங்கே அனுமன் இலங்கை போய்க் கொண்டிருக்கிறார்.. பறந்தபடி. டிராபிக்கே இருக்காதுன்னு நெனைச்சா.. அங்கேயும் பெண் டிராபிக் போலீஸ் மாதிரி வழி மறிக்கும் அங்காரதாரை.. அவள் எப்படி இருக்கா என்பதை சொல்லியாகனும். ஆமா.. பெண்களை வர்ணிக்கனும்னா கம்பருக்கு ஏக குஷி..அது ஹீரோயின், வில்லி யாராகவும் இருக்கலாம்.

பல்லு இருக்கே பல்லு அது பிறை சந்திரன் மாதிரி.. இடுப்பிலெ கருப்பா பெர்முடாஸ் போல யானைத்தோல் டிரஸ் போட்டிருந்தா.. அந்தக் கலரு பாத்தா சிவன் கழுத்து மாதிரி (விஷம் சாப்ட மாதிரி) இருக்காம்.. வாயைப் பாத்தா… பிரம்மன் படைத்த உலகுக்கு ஓர் உறை மாதிரி இருக்காம்…இது எப்படி இருக்கு??

துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள்
கண்டத் திடைக் கரையுடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்.

உறை பற்றிய இந்த உரை இத்துடன் முடிகிறது..

வேறு சேதி ஏதும் மாட்டாமலா போகும்??