மன்மதலீலையை வென்றார் உண்டோ….


manmadaleelai

சாதனை படைத்த இந்த பாடல் வரிகளின் பேக்கிரவுண்ட் தெரியுமா உங்களுக்கு? வீட்டில் யாரும் பெருசுகள் (தப்பி பிழைத்து) இருந்தால் கேட்டுப் பாக்கவும். அது காஃபி ஷாப் எல்லாம் இல்லாத ஒரு கற்காலம். தெருவில் நின்னு டீ சாப்பிடும் போது, இந்தப் பாட்டு போட்டால் அந்தத் தெருவே அந்தக் கடைக்கு வந்து டீ குடிச்சிட்டு போகுமாம். எலெந்தெப்பழம், ஓரம் பொ தொடங்கி தற்கால கொலவெறி பாடலுக்கெல்லாம் இல்லாத ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் அந்தப் பாட்டுக்கு இருந்திருக்கிறது. எளிய வார்த்தைகள், இனிய ராகம், எல்லாத்தையும் தாண்டி, தியாகராஜ பாகவதர் குரலும் ஓர் இனிய காரணம். அக்காலத்திலேயே பலரும் அந்தப் பாகவதரின் கிராப்பை வைத்துக் கொண்டனர். இன்றளவும் ”பாகவதர் கிராப்” என்று அந்த பாகவதருக்கு மரியாதை தந்தபடி உள்ளது.

manmadaleelai old

அதே பாடலை சில வருஷம் கழித்து ரீமிக்ஸ் (அப்போதே) செய்து பரமக்குடிக்காரனை குதிரை மீது ஏற வைத்து பின்னோக்கிப் பயணம் செய்ய வைத்தார் பாலசந்தர். இதைப் பத்திப் பேசும் முன்னர் சினிமாவும் சினிமா சேர்ந்த நிலமுமான பரமக்குடிக்கும் அதன் சினிமா தொடர்பும் ஒரு டச் செய்திட்டுப் போகலாம். கமலஹாசன் மூலம் சினிமாவுக்கும் பரமக்குடிக்கும் தொடர்பு வந்ததா? அல்லது சினிமாவில் ஊறிப்போன பரமக்குடியால் கமல் புகழ் பரவினதா? என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

பரமக்குடியின் கிழக்குப் பகுதி முழுக்க நெசவாளர்கள் வசிக்கும் பகுதி. செவிக்குணவில்லாத பொது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. வயித்துக்கு உணவே இல்லாத போதும், சினிமா பார்க்கும் உழைப்பாளர் உலகம் அது. அம்மாவின் மடியில் சவாரி செய்தும், முந்தானையைப் பிடித்து சண்டை போட்டு அரை டிக்கெட் எல்லாம் வாங்கி (நல்ல வேளை அந்த Date of Birth Proof எல்லாம் கேட்டு நச்சரிக்கவில்லை அப்போது) அப்புறம் மீசை முளைத்ததும் தனியே பார்க்கவும் வந்தது தான் எனது சினிமா பார்க்கும் வளர்ச்சிப் படிகள்.

வீட்டில் சினிமா பற்றிய விவாதங்கள் சொந்தக்காரர்கள் பற்றிப் பேசுவது மாதிரி எல்லாம் நடக்கும். (இப்பொல்லாம் குடும்பத்தோடு படத்தையே சேந்து பாக்க முடியறதில்லெ…அப்புறம் எங்கிட்டு அதெப் பத்திப் பேச….? ). பேச்சு வாக்கில், மன்மதலீலை படம் வந்திருக்காமே? என்று கேள்வி வர, நானும் வெளையாட்டாக, அதே பாகவதர் படம் தான்… புத்தம் புதிய காப்பியாக புதுப் பெயரில் ரிலீஸ் செஞ்சிருக்காக என்று சொல்லி வைத்தேன். வீட்டில் இருந்த அத்தனை டிக்கெட்டுகளும் அன்று சினிமா டிக்கெட் எடுத்தன.

பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வில்லங்கமான மன்மதலீலை படம் பத்தித்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? கமலின் கேரக்டர் ஒரு ஸ்திரிலோலர் (நம்மூர்காரருக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன?), சின்ன சபலபுத்தி அல்லது லேடீஸ் வீக்னஸ் என்பது போன்ற சாயலில் வெளுத்து வாங்கிய படம். அழகான மூஞ்சியெ அலங்கோலமாக்கியே பின்னிப் பெடலெடுக்கும் நபர்… இந்தக் கேரக்டரை சும்மா விடுவாரா என்ன?

படம் பார்த்து திரும்பி வந்த, வீட்டில் உள்ள மகளிர் படை எல்லோருமா சேந்து என்னையெ உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க… இனிமே நீ சொல்ற படமே நாங்க போகமாட்டோம் என்று சத்தியப்பிரமானம் வேறு நடந்தது தான் டாப். சின்னப் பையன் நீ எல்லாம் போயிடாதே, என்று அட்வைஸ் அம்புஜமாய் மாறினர் சிலர். எதையுமே செய்ய வேணாம்னு சொல்றச்சே, அதெச் செஞ்சே பாக்கும் குணம் தான் நம்ம ஜீன்லெயெ இருக்கே?? குருப் ஸ்ட்டி என்று (வழக்கமா எல்லோரும் சொல்ற பொய் தான்) சொல்லிட்டு மன்மதலீலைக்குள் நுழைந்தேன்.

ஓரளவு புரிந்த மாதிரி இருந்த்து. அதிகமாய் புரியாத மாதிரியும் இருந்தது. அந்தக் கேரக்டெரின் நீள அகல ஆழ உயரம் புரியாத வயதில் இன்னும் குழப்பங்கள் அதிகரித்தன. காமம் பற்றி புரிஞ்சும் புரியாமலும் இருந்த அந்த நேரத்தில் (இன்னும் அதன் நெளிவு சுழிவுகள் முழுசாய் தெரியும் என்று தைரியமாய் வெளியில் சொல்ல முடியவில்லை) மேலும் குழப்பங்கள் அதிகரித்தன படம் பார்த்த பின்னர். அதில் உச்சகட்ட குழப்பத்தில் ஆழ்த்திய காட்சி ஒன்று. கமல், தன் மனைவி உடை மாற்றுவதையும் கூட சாவி துவாரம் வழியாக எட்டிப் பார்ப்பது போன்ற காட்சி தான் அது. வீக்னஸின் உச்சகட்டமாய் சொன்னது, அந்த வயதில் புரியவில்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள்?

kamal eddipaar

தண்ணி அடித்தவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டுவதும், போதையில் கூட்டு பலாத்காரம் செய்வதும் ஏன் நடக்கிறது? அது தான் அவர்களின் இயல்பு நிலை என்று படுகிறது. சமூக நிர்பந்தங்கள், தானே தனக்குள் செய்து கொண்ட வேலிகள், சரி தவறு என்பதை நிர்ணயம் செய்யும் எல்லைக் கோடுகள், இமேஜ் இப்படி எல்லாமும் சேர்ந்து நல்லவனாக்கும் முயல்வில் வாழ்கிறான் ஒவ்வொரு மனிதனும். குடி, உள்ளே போன போது அதெல்லாம் மறந்து அப்படியே, இயல்பான சமூக விலங்காய் வாழ்பவன், சமூகம் மறந்த விலங்காய் மாறிவிடுகிறான்.

சுருக்கமாய், சுகி சிவம் ஐயா சொன்னது ஞாபகத்துக்கு வருது. மனுஷன் எப்பவுமே அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கிற சண்டையில் தான் வாழ்றான். பெரும்பாலும் அறிவு தோத்துப் போயிடும். நீங்களும் உங்களையே சின்னதா ஒரு டெஸ்ட் செஞ்சி பாத்துகிடுங்க. அதுக்குள்ளெ கம்பர் கிட்டே இருந்த்து ஓர் எஸ் எம் எஸ் வந்திருக்கு. பாத்திட்டு வந்திட்றென்.

தற்சமயம் கவரத்தி தீவில் (இலட்சத்தீவுகளின் தலைநகரே தான்) இருப்பதால் நெட் எல்லாம் சொதப்பி விட்ட்து. அப்படி இருந்தும் கம்பர் SMS மூலம் தொடர்பில் வந்துவிட்டார்.

”என்னப்பூ….இப்படி கதவு இடுக்கிலெ பாக்குறது நாமலும் எழுதி இருக்கோன்லெ….”

”ஐயோ…ஐயனே…. நானு ஏதோ சின்னப்புள்ளெத் தனமா கிறுக்குறேன்…நீங்க ஏதோ சீரியஸா சொல்ல வாரீக…”

கம்பர்: இப்பத்தானே… சுகி சிவம் மெஸேஜ் சொன்னே… அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டம்னு… நீ உணர்ச்சியில் மயங்கி ரசிச்ச ஸீன் அது… நான் அறிவு பூர்வமா எழுதின, எட்டிப் பாக்குற ஸீன் இருக்கு படிச்சிப் பாரு…

எங்கே டூர் போனாலும் கூடவே கொண்டு செல்லும் (மனைவி திட்டுவதையும் பொருட்படுத்தாமல்) கம்பராமாயணத்தை தேடினேன். அடெ..அடடெ.. அதே எட்டிப் பாக்கும் ஸீன். எங்கே? யாரு? எப்பொ?

ஊர் தேடு படலத்தில், கம்பர் படைப்பில் எட்டிப் பார்க்கும் ஹீரோ அனுமன். கமல் கேரக்டர் தான் (மன்மதலீலை படத்தில் தான்) எல்லாருக்கும் தெரியுமே? கம்பரின் அனுமனோ, பொருள்களை விரும்பும் ஆசை என்னும் கொடிய வினையையே வேரோடு பொசுக்கியவனாம் (எவ்வளவு வித்தியாசம் பாத்தீயளா?)

கமல் அப்படியே எட்டிப்பாத்தா, நம்ம அனுமனோ, நூல் மாதிரி… அடெ..அதுக்கும் மெல்லிஸா காத்தெவிட கம்மியா உரு மாறி சாவி துவாரத்திலெ பூந்து பாத்தாராம்.

இன்னிசை மழை மாதிரி, ரொம்ப ஒளி மழை பெய்யும் மாணிக்கத்தில் செஞ்ச சாவித் துவாரமாம் அது…. ம்… இலங்கை எப்படி எல்லாம் இருந்திருக்கு?

தேடியது சீதா தேவியாரை.. என்று சொல்லவும் வேண்டுமோ…
எஸ் எம் எஸ் குடுத்த்துக்கு தேங்க்ஸ் கம்பரே… இதோ உங்க பாட்டு உங்களுக்கே…

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூழினும் இன் இளங்காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ்வினை வேர் அற வீசினான்

இன்னும் வேறு எங்காவது எட்டிப் பாத்துட்டு வாரேன்…

மதுவும் மகளிரும்…


எத்தனைக் கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை என்
சிந்தையிலே தான் பேதமடா –

இப்படி ஒரு பாட்டு கமலஹாசன் இளமைத் துள்ளலோடு வலம் வந்த மன்மதலீலை படத்தில் வந்தது. இது ஏதோ மதுவைப் பற்றி சொல்வதாய்த் தான் மேலோட்டமாய்ப் பார்த்தால் தெரியும். ஆனால் மன்மதலீலை படம் பார்த்தவர்களுக்கு அந்த வில்லங்கமான ”அந்த” அரத்தமும் தெரிய வரும். நாம் அதில் அதீத நாட்டத்தைச் செலுத்தாமல், சற்றே பின் வாங்கி, சில பிற விவரங்களை உள்வாங்கச் செல்வோம்.

மது பற்றி தொடங்கியதால் அது பற்றி மேலும் யோசிப்போம். இன்றைய சூழலில், ”சம்பவம்” என்றால் ”கொலை” என்று எப்படி ”அருஞ்சொல் பொருள் விளக்கம்” ஆக மாறிப் போனதோ, அப்படித்தான் மதுவின் அர்த்தமும் மாறிப் போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன். மது என்ற தேன், எப்போது மயக்கம் தரும் மதுவாய் மயங்கியது என்பது பெரிய்ய கேள்விக்குறி தான்.

மதுரம், மதுகுமார், மதுமிதா, மதுகலா இப்படி எல்லாம் பெயர் வைத்துள்ளனர். அதில் இருக்கும் மதுவிற்கும், டாஸ்மாக்கில் விற்கும் மதுவிற்கும் எந்தத் தொடர்வும் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றே கருதுகிறேன்.

தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் நேரலை, கோப்புக் காட்சிகள், சித்தரிக்கப் பட்டவை இப்படியான அறிவிப்புகள் தான் அறியத் தருவர். பின்னர் விளம்பரங்களின் “நிபந்தனைக்கு உட்பட்டவை” என்று வர ஆரம்பித்தன. பின்னர் “இவை திறனாளர்களை வைத்து உருவாக்கியவை. நீங்கள் செய்ய முயல வேண்டாம்” என்ற எச்சரிக்கை எக்கச்சக்கமாய் வரத் தொடங்கின. உங்கள் முதலீடுகள் சரியான வரவைத் தராவிட்டால் எங்களைத் திட்ட வேண்டாம் என்பதை மிகவும் ”நல்ல” முறையில் சொல்லவும் வந்தன பின்னர்.

புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று போடத் தொடங்கியது தான் சிக்கலை துவக்கி விட்ட்து. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது இல்லை என்று போட ஆரம்பித்தனர். (ஆமா மது நட்டுக்கு நல்லது தானே என்று அரசு தரப்பில் வாதம் வைக்க மாட்டார்களா?) இப்போது வரும் படங்களில் விளம்பர இடைவெளியில் மட்டும் தான் இந்த புகையும் மதுவும் வராமல் இருக்கிறது. என்ன செய்ய? இப்போதைக்கு புகையும் மதுவும் தான் தெரிந்துள்ளது. இப்படியே போனால், பலான இடம் போவதை காட்டும் போது “எய்ட்ஸ் வரும் வாய்ப்பு உள்ளது” என்றும் போடலாமே. அப்புறம், கோபம் அதிகம் வருவதை காட்டும் போது, ”இரத்த அழுத்தம் வரலாம்” என்றும் போட்டு வைக்கலாம். இதேபோல் இரத்தக் களரியாய் வரும் காட்சிகளில், “கலவரங்கள் அமைதியினை நீக்கும்” என்றும் நீதி போதனைகள் காட்சிகளில் தொடரலாம்.

இதே டீவியில் நல்ல செய்திகளும் வரத் தவறுவதில்லை. ஒன்றே சொல் நன்றே சொல் அருமையான தகவல்களை அள்ளித் தருகின்றது. இதில் ஒரு நாள் கள் குடித்தல் என்பது தமிழரின் பாராம்பரிய வாழ்வு முறையில் ஒன்றுதான் என்பதாய் நன்றாய் சொன்னார். (ஒன்றே சொல். நன்றில்லாததும் சொல் என்றா பெயர் மாற்றச் சொல்ல முடியும்?). ஏகப்பட்ட சங்க காலப் பாடல் எல்லாம் சொன்னர் அவர். ஆனால் மக்களை குடித்துக் குட்டிச் சுவராய் ஆவதற்கு வழி சொல்வதாய் எனக்குப் படவில்லை. (அந்த எண்ணத்தில் கண்டிப்பாய் அவர் சொல்லி இருக்க மாட்டார் என்ற நம்ம்பிக்கை உள்ளது)

தமிழருக்கும் மதுவுக்கும் ஆதி காலத்தில் இருக்கும் பழக்கம் பற்றி யாராவது சொன்னாலோ, அல்லது குடிப் பழக்கம் தவறு என்று சொன்னாலும் கூட உடனே எல்லாருக்கும் சோம சுரா போன்ற திராவகங்களை தேவர்கள் கூட அருந்தினர் (தேவர்களை நம்பாதவர்கள் கூட) என்றும் சொல்ல ஆரம்பிப்பர். போதாக் குறைக்கு ஆதி மகளிரையும் வம்புக்கு இழுக்கின்றனர். பொதுவாக அதியமான், ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதை தான் சொல்லுவர். (நெல்லிக்காய் தானே இருக்கும். நெல்லிக்கனி இருக்குமா என்று “அப்பா எனக்கு ஒரு சந்தேகம்” நிகழ்சியில் அந்த அப்பா வயிற்றில் குத்து வாங்கியது பெட்டிச் செய்தி).

சமீப காலமாய் அதியமான் ஔவை பற்றி இன்னொரு செய்தியும் பிரபலமாகி வருகிறது. மது தொடர்பானது தான் அதுவும். அரசனுக்கு ஒரு மடக்கு மது கிடைத்தால், அதை ஔவைக்கே வழங்கிடுவாராம். ஒரு கோப்பை கிடைத்தால் அரசன் பாதி ஔவை பாதி என்று பகிர்ந்து கொள்வாரம். சொல்ல வரும் நீதி: மகளிரும் மது அருந்தினர் என்பதாய். என்னால் இதை ஏற்க முடியவில்லை. பிச்சை புகினும் கற்கை நன்று எனச் சொன்ன ஔவையாக அந்த ஔவை இருக்காது.

எனக்கு என்னமோ அரசன் கொடுப்பதில் வல்லவன், என்று சொல்வதாய் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தான் தெரிகின்றது. கொடுப்பது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கும். என்ன தருகிறோம்? எப்படி தருகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத யோசனை. குளிரால் நடுங்கும் மயிலுக்கு போர்வை கொடுத்தவரை வள்ளல் பட்டியலில் வைத்துள்ளோம். மயிலுக்கு போர்வை தேவையா என்ன? அதே போல் முல்லைக்கு தேர் குடுத்தவரும் கொஞ்சம் அதிகப் பிரசங்கத்தனமாய் தான் படுகிறது. இதிலும் தரும் பொருளை விட தரும் எண்ணம் தான் முக்கியம். அதே போல், மதுவே கிடைத்தாலும் ஔவைக்கு தந்து மகிழ்வார் என்று நாம் ஏன் பொருள் கொள்ளக் கூடாது?

சினிமாவில் மட்டுமே புகை பிடிக்கும், மது அருந்தும் மகளிரை பார்த்த எனக்கு நேரில் அப்படி பார்த்த போது பகீர் என்று தான் இருந்தது. கொல்கொத்தாவில் தான் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு நண்பரின் அழைப்பினை ஏற்று நட்சத்திர உணவகம் சென்றோம் குடும்பத்தோடு. மகளிருக்கு என்ன மது தேவை என்று கேட்ட போது தான், இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்ற சேதி தெரிந்தது..

வள்ளுவரும் கள்ளுக் குடியை விட்டொழியுங்கள் என்கிறார். நம்மாளுங்க புரிந்து கொள்ளும் நீதி, வள்ளுவர் காலத்திலும் சரக்கு அடிக்கும் பழக்கம் இருந்திருக்கு என்பதைத்தான். தமிழருவி மணியன் இந்தச் சூழலினை அழகாய் கையாள்கிறார். கள் குடிப்பது எல்லாம் நடப்பது தான் என்று இருந்த காலத்தில், கள் குடிக்காதே என்று சொன்ன வள்ளுவரை கலக்க்காரன் என்று புகழ்கிறார்.

கமபன் மட்டும் கலகக்காரன் இல்லையா? பல்லாயிரக் கணக்கான தாரங்களை மணந்து வாழும் அரச குடும்பத்தில் பிறந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைசி வரை நிலைநாட்ட கம்பன் காப்பியம் முழுதுமே கலக்கலாய் செய்வதைப் பார்க்கலாம். மூலக் கதையில் கால் பட்டு அகலிகை சாபம் நீங்கியதாய் இருந்தாலும், இந்த கலகக்காரக் கம்பன், ராமனின் கால் தூசு பட்டே அகலிகை மலர்ந்ததாய்க் கூறியதைப் பார்க்கலாம்..

அதுசரி.. மகளிரும் மதுவும் பற்றி அதே கம்பர் ஏதும் சொல்லவில்லையா? என்ற கேள்வி உங்களில் அநேகம் நபர்களுக்கு வந்திருக்குமே??

உங்களுக்கு என்ன? சாதாரணமாய்ச் சொல்லிட்டீங்க. கம்பரிடம் போராடி ஒரு பாட்டு தேடிக் கொண்டு வந்திருக்கிறேன்.

வனவாசம் முடிந்த பிறகு அயோத்தி திரும்புகிறார் இராமன். இராமன் வருகையினை எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எதிர் கொண்டனர் என்பதை விளக்கும் பாடல் தான், நம் நண்பர் கம்பர் தந்த பாடல்.

இராமனைப் பார்க்க வந்தவர்களில் பலர் பலரகம். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதை கம்பர் ரகவாரியாய்ப் பிரித்துப் பார்க்கின்றார். அவர்களுக்கு ராமன் எப்படித் தெரிந்தான் என்பதைச் சொல்லத்தான். இதுவரை ராமனைப் பார்க்காது இருந்து முதல் முதலாய் பார்ப்பவர்க்கு (14 ஆண்டுக்கு உள்ளான விடலைப் பருவத்தின்ருக்கு) தாயைப் பார்த்த உணர்வை ராமன் முகம் தந்ததாம். தன்னை அன்புப் பெருக்கோடு பார்த்த அனைவருக்கும் அமிழ்தம் கிடைத்தது போல் இருந்ததாம். முனிவர்களுக்கு இறைவனே காட்சி அளித்தது போல் இருந்த்தாம்.

நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் செய்தி இப்போது தான் வருகிறது. இராமனைத் தரிசிக்க அழகிய விழிகளை உடைய பெண்டிரும் தான் வந்திருந்தனர். அவர்கள் கண்களுக்கு ராமன் எப்படி இருந்தார் தெரியுமா?? தெளிவே இல்லாத மகிழ்ச்சியினைத் தரும் இனிய மதுவின் தெளிவு போல் இருந்ததாம்.

வழக்கம் போல் மகளிர் கம்ப காலத்திலும் மது அருந்தினர். எனவே தான் இப்படி கம்பர் சொல்லி இருக்கிறார் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிடக் கூடாது. மதுவை இங்கு சுட்டிக் காட்டுவதின் உள் நோக்கம் என்ன? மது என்ன செய்யும்? உற்சாகமாய் ஆடவைக்கும். ஆனால் மது ஆடாது. இராமனும் அப்படித்தான். ஆட்டுவிப்பான். ஆனால் ஆட மாட்டான். (இப்படி கம்பர் நினைத்திருப்பாரோ).

வேதியியல் படிக்கும் போது கிரியாஊக்கி என்று ஒன்று வரும். ஒரு இராசாயண மாற்றத்தைச் செய்யும். ஆனால் அது ஒன்றும் ஆகாது. விசில்ப்ளோவர் என்பதினை ஊதுகுழல் ஊதுவோர் என்று மொழி பெயர்ப்பு செய்தது சரியா என்று என் கல்லூரி நண்பர் அசோகன் கேட்டிருந்தார். என் மனதிற்கு கிரியை ஊக்கி என்று சொல்வது தான் சரியாய்ப் படுகிறது. அவரும் செயல் படுவார் சமூகத்தையும் செயல் படச் செய்வார்.

இதோ அந்தப் பாட்டும் உங்கள் பார்வைக்கு:

எளிவரும் உயிர்கட்க்கெல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்.
ஒளி வரப் பிறந்த்த ஒத்தான் உலகினுக்கு ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். .

சரி.. ராமனை இனி கிரியாஊக்கி என்று அழைக்கலாமா? அல்லது கிரியைஊக்கி என்று விளிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.