உரோமபத மன்னன் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 6

கம்பன் காப்பியத்தில் இன்றும் நாம் காண இருப்பது வசிட்ட முனிவர் சொன்ன காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய முனிவர்களின் சந்திப்பில் சில ஆலோசகள் சொல்லப்படுகிறது. அதனை அமலாக்கும் விதமாய் அடுத்த இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

நாட்டிற்கு மழையினை வரவழைக்க ஒரு சிறப்பான தவமுனியினை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் அவையில் இருந்த பெண்கள் எழுந்து நின்று, நாங்கள் சென்று அந்தத் தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர். நம் முன் இம்மகளிர் சந்திப்பில் சில கேள்விகளை எழுப்புகிறது.

மகளிர் அரசவையில் இருந்திருக்கிறார்களா?
மகளிருக்கு அரசுப் பணிகளில் பங்கேற்கும் உரிமையும் தரப்பட்டிருக்கிறதா?
அப்படி மகளிர் சொல்லும் ஆலோசனையும் ஏற்கப்பட்டுள்ளதா?

இவைகளின் பதில், மகளிரை அடிமைகளாக நடத்தவில்லை என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும்.

கம்பன் சந்திப்பில் மகளிர் என்றே சொல்வதாய் எனக்குப் பட்டது. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் வர்ணனைகளை வைத்து உரையாசிரியர்களோ, அவர்கள் விலைமகளிர் என்று சொல்கின்றனர். அப்படி என்ன சொல்லி விட்டார் நம் கம்பன்? அவையில் வந்த மகளிர் இப்படி இருந்தார்களாம். ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடையவர்களாகவும் இருந்தார்களாம். அது போக, யாம் சென்று முனிவனை அழைத்து வருவோம் என்று கூறிய துணிவு இருந்த்தினாலும் அம்மாதர் விலை மகளிர் தான் எனச் சொல்கின்றனர் சான்றோர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும், விலைமகளிரை அரசவையில் வைத்துக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறதா? அதுவும் அரச காரியங்களைல் மூக்கை நுழைக்கும் அளவு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறதா? யோசிக்க வைக்கிறது.
அதனை தெளிவுபடுத்திக் கொள்ள சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும் என்ற நூலைக் கையில் எடுத்தேன். சங்க காலம் என்பது மனித வளத்தினை வடித்தெடுப்பதற்கான பொற்காலம் என்கிறார்கள். இதனை திருநெல்வேலியிலிருந்து முனைவர் இரா சிவசங்கரி அவர்கள் சிறப்பான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். (செம்மூதாய் வெளியீடு)

தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் இன்று வரை பல பெயர்களால் விலைமகளிரைக் குறிப்பிட்டுள்ளனர். பரத்தையர் என்பது சங்க இலக்கிய இலக்கணத்தில் காணமுடிகிறது. பின்னர் அற இலக்கியங்களில் வரைவின் மகளிர் என்று சொல்கிறார்கள். காப்பியங்களில் கணிகையர் என்றும் காலத்திற்கு ஏற்றார்போல் அவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. சங்ககாலத்தில் கூறப்பட்ட காமக்கிழத்தி என்பவள் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொண்டபின் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப் பட்ட பெண்களாவர். இவர்களையும் மூன்று வகைப்படுத்திச் சொல்லி இருக்கிறார் இளம்பூரணார். இதில் ஒத்தகிழத்தி என்பவள், தலைவியை ஒத்த குலத்தை உடைய இரண்டாவது உரிமைப் பெண் என்கிறார். [அதாவது குருடான கோழி எல்லாம் கிடையாது.] இழிந்த கிழத்தி என்பவர் அரசர்களால், அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட பெண்களாம். வரையப்பட்டோர் என்பவர்கள் ஆடல், பாடல், அழகு, அறிவில் சிறந்து பலருக்கு காலம் கணித்து தந்து, கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்தில் இருந்து, தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமை பெண் என்கிறார்.

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே பொருள் வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் பொதுமகளிர். தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே சான்று சொல்கின்றன. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி போன்றவை சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள். [நன்றி: ம.செந்தமிழன் வலைப்பூ] அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோர் தேவரடியார்.

கம்பன் எழுதிய இராம அவதார நூலை அரங்கேற்றம் செய்ய ஒரு அரங்கேற்றப்(!) பாவையின் சிபாரிசு தேவைப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்று ஒரு தாசி இருந்தாளாம். கம்பன் காவியத்திற்கு சான்றிதழ் இவரிடமிருந்து பெற்று வந்தால் தான் அரங்கேற்றம் செய்ய இயலும் என்றனராம் அறிஞர்கள். தாசி உருவில் நடமாடும் சரஸ்வதியாம் அவர். அவரும் ஒரு பாடலைப் பாடி அதை ஏட்டில் எழுதி கம்பரிடம் கொடுத்தாராம் படிக்காமலே. ”என்னுடைய காவியத்தை ஆய்வு செய்யப் போவதில்லையா?” என்று கம்பர் கேட்க, ”இல்லை இராமகாதை அரங்கேற்றத்தின் போது எப்படியும் எனக்கும் அழைப்பு வரும். அப்பொழுது தங்கள் திரு வாயாலேயே அதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதில் சொன்னாராம். அஞ்சனாட்சி எழுதிக் கொடுத்த பாடல்

அம்பரா வணி சடை யரண யன் முதல்
உம்பரான் முனிவரால் யோக ராலுயர்
இம்பரார் பிணிக்கரு மிராம வேழஞ்சேர்
கம்பராம் புலவரைக் கருஹ்திலிருத்து வாம்.

இத்தனை சிரமங்களுக்கு பின்னர்தான் அந்த இராமகாதை அரங்கேற்றம் ஆகியிருக்கிறது [நன்றி: கம்பர் இராமாயணம் அரங்கேறிய கதை – கவிமாமணி பூவாளூர் ஜெயராமன்] அந்த ராமகாதை தான் இப்பொழுது கம்பராமாயணம் என்று நாம் எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சரி… மீண்டும் அந்த சந்திப்பு நிகழ்ந்த பாடலை பார்த்துவிட்டு அடுத்த சந்திப்பிற்கு தயாராவோம்

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
யாவது?” எனக் குணிக்கும் வேலை.
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை
மாதர் எழுந்து. “யாம் ஏகி அருந் தவனைக்
கொணர்தும்” என வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாக உடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களை எல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்றகுற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது? என்று சிந்திக்கும் போது, ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய மாதர் சிலர் எழுந்து நாங்கள் சென்று அந்த அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

கம்பனில் புரோட்டோகால் அதாங்க… protocol


Image

[ காரைக்குடி கம்பன் கழகத்தில் தேர்வு செய்யப்பட்ட எனது ஆய்வுக் கட்டுரை… இவர்கள் முன்னர் படைக்கத் தவறியதால் இங்கு இவர்கள் முன் பதிகிறேன்]

கம்பனில் அரசு கடைபிடிக்கத்தக்க மரியாதை முறையியல்
(PROTOCOL)

முன்னுரை:

கம்பர் காலத்து அரசாட்சியும் இன்றைய காலத்து அரசாட்சியைனையும் ஒரே கண் கொண்டு பார்ப்பது என்பது ஓரளவு சிக்கல் நிறைந்த செயல் தான். எனினும் மக்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்வதில் தான் மாற்றம் இருக்கின்றதே ஒழிய ஆட்சி செய்யும் முறை, நெறி ஆகியவற்றில் கம்பகாலமும் இக்காலமும் ஒன்றும் வெவ்வேறதானதல்ல என்கின்ற மன அலசலின் முடிவாய்த்தான் இக்கட்டுரை எழுகிறது. பாலகண்டப் பகுதியில் வரும் அரசு கடைபிடிக்கத்தக்க மரியாதை முறையியல் குறித்து மட்டும் இனி காண்போம்.

அறம் சார்ந்த அரசு:

மக்களைக் காக்கின்ற அரசிடம் எப்போதும் அறம் சேர்ந்த்தே இருத்தல் வேண்டும். அறமற்ற வழிகளால் வருகின்ற பொருள் மீது எந்த அரசும் ஆசை வைக்காதிருத்தல் வேண்டும். சினம் கொள்ள வேண்டிய இடத்தில் சினமும் கொள்ளல் வேண்டும். அரசு பெற வேண்டிய வரிப்பணம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும். மக்கள் மீது சுமத்தப்படும் வரிகள் அவர்களுக்கு சிரம்ம் தராது விரும்பியே அதனைச் செலுத்தும் வகையில் இருத்தல் வேண்டும். தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களிட்த்து மட்டுமல்லாது, அனைத்து உயிர்களிட்த்தும் அன்பு காட்டி இரக்க்குணம் கூட்டி வாழ்ந்திடும் அரசு இருத்தல் அவசியம் என்பதை கம்பர் தனது வரிகளில் காட்டுகின்றார்.

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப்….
                                          (நாட்டுப் படலம்)

பெண் கல்வியும் செல்வமும்:

      ஒரு நாடு சிறப்புற்ற நிலையில் இருந்து, தொடர்ந்து அப்படியே இருந்திட வேண்டுமா? கம்பர் காட்டும் உன்னதமான வழி ஒன்று உளது. அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் நீங்காத செல்வமும், நீங்கிடாத கல்வியும் இருந்திட வழிவகை செய்திட வலியுருத்துகின்றார். மகளிரிடம் ஒரு முறை மட்டும் சேர்ந்திட்ட செல்வத்தினால் பயன் இல. அச்செல்வம் அவர்களிடமே நீங்காது இருந்திடவும் அரசு வழிவகை செய்திட வேண்டும். மேலும் மகளிர்க்கென கல்வியும் அதுவும் நீங்கிடாத கல்வியாய் அமைந்திட அறிவுரை தருகின்றார்  கம்பர்.

பெருந் தடங் கண் பிறை நுதலார்க்கு எலாம்
பொருந்து கல்வியும் செல்வமும் பூத்தலால்..
                        (நாட்டுப் படலம்)

 பேரிடர் மேலாண்மை:

      இந்தியக் கடலோரப் பகுதிகள் சந்தித்த 2004ஆம் ஆண்டின் சுனாமிப் பேரலை இந்திய அரசின் திட்டமிடும் இயக்கத்தையும் சற்றே மாற்றி அமைத்திருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இத்தகைய பேரிடர் மேலாண்மையின் இருப்பை உணர்ந்து இதன் மீது கவனமும் செலுத்த ஆயத்தமாய் உள்ளது இப்போதைய அரசு. ஆனால் கம்பர் காலத்து கோசல அரசு இதற்கெல்லால் ஏற்கனவே தயாரான நிலையில் இருந்த்தை கம்பர் கூறும் போது ஆச்சரியப்படாமல் இருக்க வாய்பில்லை. நிலத்தை அழித்துக் கொண்டிருத்தல் தான் கடல் நீரின் தன்மை என்கிறார் கம்பர். அத்தன்மை உடைய கடல் நீர் ஊழிக் காற்றால் மேலும் உந்தப்பட்டால் என்ன ஆகும்? கடல் நீர் தன் எல்லையினைக் கடந்து நிலத்தினூடே பாய்ந்து வரும். அப்படி வந்தாலும் எந்த அழிவும் இல்லாத சிறப்பைப் பெற்றதாக கோசல நாட்டின் பெருமை தனைக் கம்பர் கூறுகிறார். பேரிடர் மேலாண்மையின் ஆசான் என்று நாம் கம்பரை அழைக்க யார் தடை சொல்ல இயலும்?

.வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
ஊடு பேரினும் உலைவு இலா நலம்
கூடு கோசலம்
                  (நாட்டுப் படலம்)

குற்றமிலா குடிமக்கள்:

      அரசு இயந்திரம் என்று, இதயமிலாத தன்மை பற்றிச் சொல்லிட்டாலும், அரசு என்பது, இதயமுள்ள மக்களின் கூட்டுத் தொகுப்பு தான் என்பதனை யாரும் மறுதலித்திட இயலாது. அத்தகைய அரசின் அங்கமாய் அமைந்திட்ட குடி மக்களும், தத்தம் பொறுப்பினை உணர்ந்து வாழ்தல் மட்டுமே, ஒட்டு மொத்த அரசின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்பதாய் அமையும். அயோத்தி நகரின் மாண்பினைப் பேச வந்த கம்பர், இத்தகைய குடிமக்களைப் பெற்ற அரசு என்பதாய் கவி வரைகின்றார். குற்றமே இல்லாத தரம சிந்தனையுடன் வாழும் அரசன் போலவே அளவற்ற குடிமக்கள் இருந்த்தாய் அறிவிக்கின்றார் கவிஞர். மக்கள் எவ்வழி..மன்னர் அவ்வழி. இது பெரும்பாலோர் கூற்று. பெருங்கவியோ மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்கின்றார். ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக் கோன் நிகர் குடிகள் என்ற நகரப் படலத்தின் கம்ப வரிகளே இதற்கு சான்று பகர்கின்றன.

அரசின் கடமைகள்:

அரசு என்பது எப்படி அமைந்திட வேண்டும்? என்பதில், திடமான சிந்தனையினைக் கம்பர் தந்திருக்கின்றார். அரசோடு அறிவு கைகோர்த்திருத்தல் வேண்டும். அந்த அறிவு உண்மையான அறிவாய் அமைந்திருத்தல் வேண்டும். மேலும் முதன்மையுடையனவாகவும் இருந்திடல் வேண்டும். கருணை, தருமம், சாந்தம் இவைகளும் அரசோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருத்தல் வேண்டும். வீரம் அரசோடு கை கோர்த்திருத்தல் மிக அவசியம். அந்த வீரமோ, வலிமையோடு கூடியதாயும் இருந்திட விருப்பம் தெரிவிக்கின்றார் கவிச்சக்கரவ்ர்த்தி. இத்துடன் கொடை நீதி நெறியில் தவறாது நிற்கும் திறன் அவை அணைத்தும் அரசின் அத்தியாவசியத் தேவைகள் என்கிறார் கவிஞர். அவரது வார்த்தைகள் இன்றளவும் இம்மியும் மாற்றமில்லாமல் பயன் படுத்த ஏதுவாய் இருப்பது தான் காலம் கடந்து வாழும் கவியின் சிறப்பு. இதோ அரசு நியதியினை கம்பர் அன்றே சொன்ன தீர்க்க தரிசன வார்த்தைகள்:

ஆதிம் மதியும் அருளும் அறனும் அமையும்
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண் இல் யாவும்
நீதிந் நிலையும்
                              (அரசியல் படலம்)

மன்னராட்சியில் மக்களாட்சியின் மாண்பு:

      இன்றைய அரசின் மிகப்பெரிய குற்றச்சாட்டே, அவை மக்களை விட்டு விலகி இருப்பதான காரணம் தான். மக்களால் மக்களுக்காக ஆள உருவான அரசே இப்படி மக்களை விட்டு விலகி நிற்பது வேதனையான உண்மை. ஆனால் மன்னராட்சி நடந்த கம்ப காலத்தில் அரசு எவ்விதம் மக்களோடு இருந்த்து என்பதை ஒரு சிறு சம்பவம் கொண்டு விளக்குகின்றார் கம்பர். காப்பிய நாயகனான இராமபிரான் நகர்வலம் வந்த போது எதிர்ப்பட்ட மக்களை எவ்விதம் எதிர் கொண்டார் என்பது எல்லோரும் கவனிக்கத்தக்கதான ஒன்று. கருணையான முகம் துணை கொண்டு, செந்தாமரை மலர் போன்ற ஒளி வீசும் முகத்தின் தன்மை சற்றேனும் குறையாமல் குடிமக்களை வினவுகின்றாராம். அரசின் பார்வைக்கு தரத்தக்க செய்திகள் ஏதும் உண்டா? அரசின் முடிவுகள் உங்களுக்கு ஏதும் சிரமத்தை தரவில்லையே? இல்லறம் இனிதாய் இல்லாளும், வாரிசுகளுடனும் இனிதாய் சுகமாயும் நோயற்று வலிமை பெற்றவர்களாக இருக்கிறார்களா? என்ற நலன் விசாரிப்பை நல்கிச் செல்கிறார் கம்பர் கதை நாயகன் வாய் வாயிலாக.

எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடல் இலை இனிதும் நும் மனைவியும்
மதிதரு குமர்ரும் வலியர்கொல் எனவே
                              (திரு அவதாரப் படலம்)    

பொதுவான நடைமுறை விதி:

      இன்றைய நவீன காலத்து மேலாண்மை சார்ந்த அறிவியல் துறை வெளிப்படையான நிர்வாகம் நடந்திட அரசின் எல்லா நடவடிக்கைகளையுமே எவ்வித செய்திடல் வேண்டும் என்பதைனை விதிகளாக்கி அதனை பொதுவான நடைமுறை விதி (Standard Operating Procedure) என்று பெயரிட்டு அழைப்பர். கம்பன் காவியத்தில் இப்போற்பட்ட அரசின் சிறு நடைமுறையிலும் எவ்வப்டி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்ட்தாய் குறிப்பு வருகின்றது. எனவே அப்பேற்பட்ட நடைமுறை விதிகள் இருந்திருக்கின்றது என்பதையும் அதனைத்தான் அக்கால அரசு கடைபிடித்திருக்கின்றது என்பதினையும் ஊகிக்க முடிகின்றது. ”முகந்தனர் திருவருள் முறையின் எய்தினார்…” என்ற எழுச்சிப் படலப் பாடல் மூலம் தூதுவர்கள் அரன்மனையில் நடந்து கொள்ள வேண்டிய முறை இருந்ததை  கம்பர் கவி உறுதி செய்வதை உற்று நோக்கி காண்க.

விசாரிப்பு மரியாதை:

      பொதுமக்களின் பார்வையில் அரசு கடைபிடிக்கத் தக்க மரியாதை முறையியல் (PROTOCOL) என்ற வார்த்தைப் பிரயோகம் அரசு சார்ந்தவர்களை கௌரவப்படுத்தும் போதும், அவர்களை அமர வைத்தலின் போதும் தான் பொதுவான தேவையாக்க் கருதுகின்றனர். அவ்வரிசையில் மாற்றம் ஏற்படும் போது அதனை அரசின் அங்கம் வகிப்போர் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாய்க் கருதுகின்றனர் இன்றும் ஆளும் அரசின் அதிகாரிகள். இந்தச் சிக்கல் கம்ப காலத்திலும் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் சனகனின் சபையில் தசரதர் விசாரிக்கும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் குற்றமற்ற முறையில் வரிசை முறையோடு விசாரித்த குறிப்பை கம்பர் ஏன் குறிப்பிட்டிருக்க வேண்டும்?  ”வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய்” என்ற எதிர்கொள் படல வரிகள் இதற்கு சான்று பகர்கின்றன.

அனைவர் மேலும் அன்பு:

      இன்றைய காலகட்டத்தில் குடும்ப அரசியல் என்பதினை மத்திய மாநில  அரசியல் காட்சிகளில் சரவ சாதாரணமாய் இந்திய நாடு முழுவதும்  காணக் கிடைக்கின்றது. அனைவருக்கும் வாய்ப்பு தரும் அரிய முயல்வு, தெரிந்தோ தெரியாமலோ முறியடிக்கப் பட்டுவிடுகின்றது இந்தக் குடும்ப அரசியல் காரணமாய். கம்பர் இதனை ஆதரிக்கின்றாரா? என்ற கேள்வியினை எழுப்பி அதற்கான விடையினைக் கம்பரிடமிருந்தே பெறவும் முடிந்தது. சனகர் அரண்மனையில் திருமண விருந்து நடக்கின்றது. அப்போது தாழ்ந்த நிலையில் உள்ளோர்க்கும் அழைப்பு தந்து அவர்களும் வந்துள்ளனர். அவர்களை உபசரிக்கும் விதம்தனைப் பார்த்தால், மாப்பிள்ளையினை எப்படி உபசரிப்பரோ அதே மாதிரியாய் இருந்ததாய் கம்பர் காவியம் அறியத் தருகின்றது. ”கொண்டாடலின் அன்புதான் இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்த்தே” என்ற உலாவியல் படலப் பாடல் அதனை உறுதி செய்கின்றது.

முடிவுரை:

கம்பன் காலத்து அரசியல் சூழல் மன்னராட்சி உள்ளடக்கியதான ஒன்று. ஆனால் அதிலும் மக்களாட்சியின் மாண்பினை பல இடங்களில் கம்பர் கண்டு நமக்கு பாடலாய்த் த்ந்திருக்கின்றார். அவைகள் இப்போதைய அரசின் நடந்து கொள்ள வேண்டிய மரியாதை முறைகளில் சற்றும் மாற்றமில்லாது இருப்பது தான் வியப்பான செய்தியாகும். அரசு கடைபிடித்த மரியாதை முறையியல் கம்பகாலத்தில் ஓங்கி செழிப்பாய் இருந்திருக்கின்றது. பாலகாண்ட்த்தினுள் மட்டுமே ஆதாரமாய் கிடைத்தவைகளை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றேன். இன்னும் முழு காப்பியத்திலும்  இதன் தொடர்புகள் இருக்கின்றது என்பதையும் அறிஞர் பெருமக்கள் ஒப்புக் கொள்வர். இந்த மரியாதை முறையியல் இக்காலத்து மக்களாட்சிக்கும் ஒத்துப் போவதாய் ஒப்பு நோக்கும் போது தான் கம்பரின் பார்வையில் இருக்கும் விசாலம் புலனாகின்றது. 

2014-03-22 13.18.14-1

Brand Vs Punch Dialogue பிராண்ட் Vs பன்ச் டயலாக்


நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

எல்லாம் வெலெ ஏறிப்போச்சி… பாக்கெட்டிலெ காசு கொண்டு போய் பையிலெ காய்கறி வாங்கிணு வந்த காலம் போயி, பையிலெ காசு கொண்டு போய் பாக்கெட்டிலெ காய்கறி வாங்கிணு வர வேண்டியிருக்கே என்கிற புலம்பல் ஒரு பக்கம். ஆனாலும் கார் வாங்கும் மக்களும், பல மாடல்களில் மொபைல் மாற்றி வரும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். [Tab 1 மாடல் தெரியாத்தனமா வாங்கிட்டேன். அடுத்து Tab 2 வந்த பிறகு, இன்னுமா இதெ வச்சிட்டிருக்கே?? என்று துக்கம் விசாரிக்கிற மாதிரி என் தூக்கத்தெக் கெடுக்கிறாய்ங்கப்பா…அடிக்கடி.]

காலேஜ் டயத்திலெ சூப்பரான ஒரு பாட்டு, சுராங்கனி… சுராங்கனி. [இன்னும் கூட இந்த பாட்டுக்கு ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்யுது] அதுலெ மாலு மாலு மாலு என்று வரும். அதன் அர்த்தம் அப்பொ தெரியலை. ஆனா இப்போ இந்த மால் கலாச்சாரம் வந்த பிறகு தான் தெரியுது. ஓஹோ இந்த மால் பத்தித்தான் சொல்றாங்களோ என்று. மால் என்றால் பணம் என்கின்ற அர்த்தம் இருந்தாலும், மாலுக்குள் போயிட்டு வந்தா பணம் அம்பேல் தான். [ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. லிப்ஸ்டிக்கை விட, அத விக்கிற குமரிகள் உதட்டு லிப்ஸ்டிக் நல்லாவே இருக்குங்க..]

மதுரெயிலும் கூட இப்பொ மால் தலையெக் காட்டியிருச்சி.. எங்கே திரும்பினாலும் பிராண்டட் ஐடம் தான். ஒரு சாதாரண செருப்பு, அதாங்க.. சிலிப்பர் அது 2500 போட்டிருக்கு. அதெ வேறு எங்கேயும் போட முடியாது. பாத்ரூமில் மட்டுமே தான் போட முடியும். வேறு எந்த வேலைக்கும் ஆவாது. (லேடீஸ் சப்பலுக்காவது அப்பப்பொ வேலை வரும்) அதுக்கு போயி அம்புட்டு ரேட்டா?? அப்புறம் அதே மாதிரி ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விக்கும் பேனாக்கள். பெரும்பாலும் நம்ம ஏர்போர்ட்களில் நோட்டம் விட்டா தெரியும். அந்தமான் ஏர்போர்ட்டில் இப்பொத்தான் சிப்பி முத்து வச்சி நகை கடை வச்சிருக்காய்ங்க.. ஒரே மகளிர் அணி கூட்டம் தான். நம்மாலெ எட்டிக்கூட பாக்க முடியலை (தூரத்திலிருந்து பாகிறதோட சரி.)

எனக்கும் இந்த பிராண்டட் பொருளுக்கும் என்னமோ தெரியலை ஏழாம் பொருத்தம் தான். ரெண்டாயிரம் ரூபாக்கும் அதிகமா சொன்ன ஒரு பிராண்டட் சட்டை வாங்கி போட்டால், அதன் பட்டன் அடுத்த நாளே பல் இளிக்கும். செமெ பிராண்ட் பெல்ட் வாங்கி போட்ட அடுத்த வாரம் அது ரெண்டு பீஸா ஆயிருக்கும். சரி பேட்மிண்டன் வெளையாட நல்லா பிராண்டட் ஷூ வாங்கி, போட்ட ரெண்டாவது நாள் அன்பே சிவம் கமல் மாதிரி நடக்க வேண்டி வந்திடுச்சி.. நமக்கு என்னமோ அந்த குமார் ஷர்ட் (இன்னும் இருக்குங்களா 90 ரூபாய்க்கு சட்டை தந்த புண்ணியவான்கள்), சரவனா ஸ்டோர்ஸ் அன்னாச்சி கடை சரக்கு தான் ராசி போல் இருக்கு. (ஆமா… அந்த சரக்குகளோட பிரண்ட் பேரு எனக்கு புரியவே புரியாத புதிர். ஒருவர் சூப்பர் சரக்கு என்பார். இன்னொருவர் அதையே புளிச்ச தண்ணி என்பார். அது ஒரு தனிக் கதை)

பிராண்டட் வார்த்தைகளை பன்ச் டயலாக் என்று சொல்லலாமா? (இதென்ன கேள்வி? சொல்லிட்டாப் போச்சி.. யாரு எதிர் கேள்வி கேக்கப் போறாக… கேட்டாலுமே, சும்மா ஜாலிக்காக எழுதினதுன்னு சொல்லிட மாட்டோமா என்ன?) ஏதோ பன்ச் டயலாக் இப்பொ வந்த மாதிரி நெனைக்கிறீங்களா?? (இப்பொ கம்பராமாயணம் வருமே… இப்படி நீங்க நெனைச்சா அது ரொம்ப தப்புங்க.. அதுக்கு கொஞ்சம் இன்னும் டயம் இருக்குங்க)

ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…. அம்பாள் எப்போது பேசினாள்?. இதெல்லாம் அந்தக் காலத்தில் வந்த, பன்ச் டயலாக் என்று பெயரிடப்படாத.. பன்ச் டயலாக்கள். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் திருவிளையாடல் படம் பாத்திருப்பீங்க. இதுவும் ஒரு வகையில் பன்ச் டயலாக் தானே.. இதே படத்தில் திருவிளையாடல் முடிந்த பிறகு நக்கீரனின் கடைசி டயலாக் “மன்னியுங்கள் தவறிருந்தால்”. (இது உண்மையில் நக்கீரனின் சொல்தானா? அல்லது ஏபி நாகராஜனின் டயலாக்கா என்ற கேள்வியை கொஞ்சம் தள்ளி வைப்போம்). சிவனிடம் மன்னிப்பே கேட்டாலும், மதுரெக்காரெங்க இப்புடித்தான் கேப்போமில்லெ என்று சொல்ற மாதிரி குசும்பா இல்லே..??

சொல்வதை எல்லாம் சொல்லிட்டு, மன்னிக்கனும் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா என்று சொல்வதற்கு உண்மையில் பெரிய மனசு வேணும். (அப்படிப் பாத்தா, சிவ பெருமானையே வம்புக்கு இழுத்து, உண்டு இல்லைன்னு ஆக்கிய நக்கீரனும் பெரிய மனசுக்காரர் தானா??).. சரி..இப்பொ அப்படியே கம்பர் பக்கம் போவோம். அங்கேயும் இப்படி வக்கனையா தன்னோட பாஸ் கிட்டெ சொல்றதெல்லாம் சொல்லிட்டு… தப்பா இருந்தா உட்ருங்க. என்பதாய் வருகிறது.

கம்பர் கவிச்சக்கரவர்த்தி அல்லவா.. அவர் கொஞ்சம் ஒரு படி மேலேயே போவார். பாஸ் கிட்டே, ”நீ தான் பெரிய்ய சூப்பர் ஸ்டார். நான் சாதாரண டம்மி பீசு..ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. ஏதாவது ஏடா கூடமா இருந்தா, திட்டனுமா திட்டு” என்பதாய் வருகிறது. இங்கே (பழைய) பாஸ் இராவணன். ஊழியர் – விபீஷணன். இராமன் படையைப் பற்றி போருக்கு முன்னர் எச்சரிக்கும் இடம். ஆனா எரிச்சல் இராவணனுக்கு… ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு?? பாட்டு பாருங்க.

கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்.
(யுத்த காண்டம்; இராவணன் மந்திரப் படலம்)

ஒரு அதிகாரி (அரசன்) கிட்டெ ஊழியம் எப்படி பேசனும்கிறது சொல்லாமெ சொல்ற மாதிரி இல்லே..????

மனசு.. மனசு.. மாறும் மனசு….


மடிக்கணினி என்று லேப்டாப்புக்கு செய்த தமிழாக்கம் சரி தான் என்று இன்று (01-01-2013) தான் புரிந்தது. காலை முதல் மாலை வரை கொல்கொத்தா விமான நிலையத்தில் (இரண்டரை மணி நேர தாமதம் உட்பட) இருந்த போது உன்னிப்பாய் (இல்லெ..இல்லெ.. சாதாரணமாய்) பாத்தபோதும் தெரிந்தது. மடியில் பெரும்பாலான மக்கள் லேப்டாப்பையும், என்னை மாதிரி சிலர் டேப்லெட், ஐபோன் என்றும் வைத்திருந்தனர். ஒரு ஆர்வக் கோளாறில் எட்டிப் பாத்தேன். மகளிர் பெரும்பாலும் படம் பாத்தும் அல்லது பாட்டு கேட்டும் இருந்தனர். வயதானவர்கள் Free Cell ஆடியபடி இருந்தனர். (அடப்பாவிகளா இன்னுமா ஆடி முடியலெ??) மிகச்சிலரே அலுவலக மெயில்களை மேய்ந்து கொண்டிருந்தனர். (நானு..ஹி..ஹி.. எட்டிப்பாத்த நேரம் போக மத்த நேரமெல்லாம் கம்பராமாயணத்தில் மூழ்கி இருந்தேன்..ஹி..ஹி..)

”மனிதரில் இத்தனை நிறங்களா?” மாதிரி, மனிதரில் இத்தனை முகங்களா என்று கேக்கத் தோணும் அளவுக்கு இந்த விமான நிலையத்தில் மனித முகங்கள். சிலர் ”விமான கம்பெனிக்கே தான் தான் ஓனர்” என்பது போல் மிடுக்கான நடையில். நாம தான் Frequent Traveller என்பதைச் சொல்லாமல் சொல்லும் சிலர் ஒரு ரகம். புதிதாய் வந்தவர்களின் மிரட்சியே அதனைச் சொல்லிக் தரும். சில பயணிகளும், பெண் ஊழியர்களும் இருக்கின்ற உடையினைப் பாத்தா, நம்ம மதுரை ஆதீனம் சொன்னதில் ஒண்ணும் தப்பில்லையே என்று சொல்லத் தோனுது. (நமக்கு எதுக்கு இந்தப் பொல்லாப்பு). ஆனா விமானத்தில் ஏறும் மக்கள் அதிகமாயிட்டது என்பதை மட்டும், இந்தக் கூட்டம் பாத்து ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மூட்டை முடிச்சுகளை விமானத்திலும் அதிகமாகவே மக்கள் எடுத்துவருகிறார்கள் என்பது என் கருத்து.

மனித மனங்களின் மாற்றங்கள் விசித்திரமானது. முன்பெல்லாம் இளம் பெண்களை பாக்கும் போது, அடடா என்று வியக்கத் தோன்றும். (சைட் அடிக்கத் தோனும் என்று ஒடெச்சிச் சொல்லவா முடியும்?) ஆனா இப்பொ கொஞ்ச காலமா இந்த மாதிரி பயணிகள், இண்டர்வியூக்கு வரும் இளம் பெண்கள், அலுவல் காரணமாய் வரும் மகளிர் யாரைப் பாத்தாலும் என் மகளோட சாயல் தெரியுது. (ஒரு வேளை வயசு ஆயிடுச்சோ…)

சினிமாவில் வந்த சாதாரன் காமெடி டயலாக்குகளைக் கூட, அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளாத மனசு, அதையே ஃபேஸ்புக்கில் போட்டுத் தாளிச்ச பிறகு அதே டயலாக்குகள் இனிக்கத்தான் செய்கிறது. உதாரணமா கவுண்டமனியின், “பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?” என்பதாகட்டும், ஒல்லியான வடிவேலுவின் “என்ன கையைப் புடிச்சி இழுத்தியா?” ஆகட்டும், தற்போதைய புஸ்டியான விடிவேலுவின், “தம்பீ, டீ இன்னும் வரலை” என்பதும் சரி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அடி மேல் அடி அடித்து அம்மியை நகர்த்துவது போல், போஸ்டிங் மேல் போஸ்டிங் போட்டு மனசெயே மாத்திட்டாங்களோ..

ஆனாலும் சும்ம சொல்லக் கூடாது, நம்ம மனசு இருக்கே மனசு, அதுவும் ஆதரவா யாராவது சொல்ல மாட்டாகளா என்று ஏங்கத்தான் செய்யுது. புதுப் புடவையோ, நகையோ போட்டு வெளியே வரும் மகளிருக்கு யாரும் எந்தக் கமெண்ட்டும் சொல்லாது இருந்தா, அன்னிக்கி அந்த அம்மாவுக்கு இருண்ட நாள் தான்.. அதுக்காக, காலில் போட்டிருக்கும் புது மாடல் கொலுசசைப் (அதிலெ சத்தம் என்பது கூட வரவே வராது) பாத்து யாரும் ஏதும் சொல்லலையே என்று சொல்லுவது தான் கொஞ்சம் கேக்க சிரமமா இருக்கு. (ஆமா.. பாக்க எப்படி இருக்கும்?) உங்களுக்கு எல்லாம் இனி ஒரு வேண்டுகோள். இனிமேல் காலையும் கொஞ்சம் பாத்து வைங்க.. ஒரு பாதுகாப்புக்கு செருப்பையும் பாத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்.

என்னெக்காவது ஏதாவது வேலையெச் செய்யாமப் போயிட்டா, அல்லது நல்ல ஒரு சான்ஸை மிஸ் பன்னிட்டா, நம்ம மனசு என்ன செய்யும்? வருத்தப்படும். அப்புறம்… ஆதரவு தேடும். கெணத்துத் தண்ணியெ ஆத்து வெள்ளமா அடிச்சிட்டுப் போவப் போவுது? இப்புடி சொல்லி ஆதரவு தேடும். (இப்பொல்லாம், கிணத்திலெயும் தண்ணியில்லெ.. ஆத்திலும் தண்ணியில்லெ.. பேசாம பழமொழியெ மாத்தியிரலாமா?? ஏதாவது புதுசா கண்டு பிடிச்சிச் சொலுங்களேன்.

இப்படியே ஓர் எட்டு நம்ம கம்பரோட மனசையும் பாத்துட்டு வரலாமே? அவர் அனுமனோட மனசைப் பத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறார். விபீஷணனை ஆட்டத்திலே சேத்துக்கலாமா வேண்டாமா என்ற சர்ச்சை. புஸ்கா பஸ்கா ஜாம் புஸ்கா என்றோ, பிங்கி பிங்கி பாங்கி என்றும் சொல்லி நிர்னயிக்க முடியாத கட்டம். அனுமன் செமெ பாயிண்டுகளை எடுத்து விட்றாரு. இவரை சேத்துக்காமெ நாம மத்தவங்க மாதிரி சந்தகப் பட்றது அவ்வளவு நல்லால்லே.. அப்படி பட்டா அது எப்புடி இருக்கும் தெரியுமா?? கிணத்திலே இருக்கிற கொஞ்சூன்டு தண்ணியெ நம்மளை அடிச்சிட்டுப் போயிடுமோ என்று கடல்..லே கலங்கின மாதிரி இருக்காம்.. (இந்த இடத்தில் கடல்லேயே இல்லையாம் என்று வடிவேலுவுக்காய் ஜா”மீன்” வங்கப் போன வசனம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை)

தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதெவர்
மூவர்க்கும் முடிப்ப வரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வோதோ கொற்ற வேந்தே.

இனி புலம்பும் போது இப்படி ஏதாவது வித்தியாசமா புலம்புங்களேன்… பிளீஸ்.

கல்லைக் கட்டிக் கடலில்


எதுவுமே சரியாக வெளங்காமல் தவிக்கும் போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கு என்பார்கள். (வெளங்கலையே என்பது பாப்பையாவின் தமிழ் வழக்கு). பொதுவா காட்டுலெ போனாலே, வழி தவறித்தான் போவோம். அதுலெ கண்ணை வேறு கட்டிகிட்டு போனா.. அதோ கதி தான். (ஆமா… நம்ம சந்தன மர வீரப்பன் அதுலெ கில்லாடி என்கிறார்களே, அவர்கிட்டெ GPS மாதிரி சமாச்சாரமெல்லாம் இருந்ததுங்களா?). அந்தமான் தீவுகளுக்கிடையே ஹெலிகாப்டர் (உழங்குவானூர்தி) & Sea Plane (கடல் விமானம்) ஆகியவற்றில் பயணம் செய்யும் போது, மேகங்களுக்கு நடுவே போகும் போதும் அனாவசியமாய் இந்த ”கண்கட்டு வித்தை” என்று சொல்வார்களே, அது தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் ”இந்த ஜி பி எஸ்ஸை முழசா நம்பிடாதீங்க”ன்னு வேறெ அங்கங்கே எழுதியிருக்குது படிச்சாலும் கூட கதி கலங்கும். (ஆமா.. அழகான கண்ணைக் காட்டி மயக்கி அலைக்கழிக்கும் மகளிரை எந்த லிஸ்டில் சேக்க??)

அதே மாதிரி ஒரு கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லாட்டி, கிணத்திலெ போட்ட கல்லு மாதிரி என்பார்கள். ஆமா, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்கிறார்களே! அந்த கிணத்துக் கல்லு மட்டும் ஒண்னும் ஆகாதா என்ன? வெளங்கலையே!!! சமீபத்தில் டெல்லி போன போது, குதுப்மினாரை கொஞ்சம் எட்டிப் பாத்தேன்.. இல்லை இல்லை அன்னாந்து பாத்தேன். அதே வளாகத்தில் கிணறு ஒன்றும் இருந்தது. கெணத்தெக் காணோம் என்று வடிவேல் செய்யும் கலாட்டாவை மனசிலெ நெனைச்சி சிரிச்சிகிட்டே எட்டிப் பாத்தேன். கெணறு முழுக்க நம்மாளுக பிளாஸ்டிக் பாட்டில்களை எறிந்து வைத்திருந்தனர். இப்பொ அதெயும் பூட்டி வச்சிருக்காக. நல்லது தான்.. அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துட்டு பூட்டி வச்சா அச்சா ஹோகா.. தில்லி அரசு அல்லது அரசி யோசிக்கட்டும். இல்லாங்காட்டி கிணத்திலெ போட்ட பிளாஸ்டிக் மாதிரி என்று எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

கள்ளக்கடத்தல் செய்வதை திறமையோடு செய்வதை மணிரத்னம் நாயகனில் சொல்லிக் கொடுத்தார். (அந்தமானில் இப்பொ கடல் படம் எடுத்து வருகிறார். என்ன சொல்லித் தருவாரோ?) உப்பு மூட்டைகளை கடத்தல் பொருளோடு கட்டி கடலில் போட்டது.. இப்படி எல்லாம் சொன்னா, உங்களுக்கு ஞாபகம் வராது. ”நிலா அது வானத்து மேலே..” என்று பலானதைப் பாத்து ஜனகராஜ் பாட்டு பாடுவாரே… ம்… இப்பொ ஞாபகம் வந்திருக்குமே!!! ஆமா கடத்தல் என்றாலே கள்ளத்தனமா கடத்துறது தானே? அதுலெ கள்ளக் கடத்தல் எதுக்கு? காதல் என்றால் ஒருவனின் அன்பை அடுத்தவரிடம் கடத்துவது. கள்ளக்காதல், என்பது அடுத்தவரின் காதலியையே கடத்துவது. இப்பொ ஓகே தானே.

ஒரு காலத்தில் சோழர்கள் வந்து வென்று சென்ற அந்தமான் தீவுகளான நன்கவ்ரி தீவின் அருகில் இருக்கும் டிரிங்கட், தெலிங்ச்சான் போன்ற தீவுகளுக்கு அலுவல் காரணமாய் போயிருக்கேன். சின்னஞ் சிறு ஓடம் வைத்துத்தான் போக வேண்டும். நிகோபாரி மொழியில் ஹோடி என்கிறார்கள். கடல் மட்டம் ஏறி இருக்கும் போது மட்டும் தான் பயணம் செய்ய முடியும். எந்த வழியாக, எப்படி போக வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஓடத்தில் கயிற்றுடன் கட்டிய கல்லும் தவறாமல் இருக்கும். ஓடத்தை நிறுத்தி வைக்க உதவும் நங்கூரமே அது தான்.

500 பயணிகள் பயணிக்கும் வகையில் MV Chowra & MV Sentinel என்று தீவுகளுக்கு இடையே சென்று வரும் கப்பல்கள் இருந்தன. அக்கப்பல்கள் சவுரா, தெரெசா போனற தீவுகளில் அவ்வளவு ஆழம் இல்லாத காரணத்தினால் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும். சில மாலுமிகள் தங்கள் ரிஸ்க் எடுக்க மாட்டோம் என்று ரெண்டு கிலோமீட்டர் தள்ளி நங்கூரம் பாய்ச்சுவர். தீவுவாசிகள் (அனைவருமே நிகோபாரி ஆதிவாசிகள் தான்) அந்த ரெண்டு கிலோமீட்டர் ஹோடியில் வந்து ஏறி இறங்கிச் செல்ல வேண்டும். ரிஸ்க் எடுப்பதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று நினைக்கும் கப்பல் கேப்டன் மஜும்தார் என்று ஒருவர் இருந்தார். கப்பலை எவ்வளவு பக்கத்தில் கொண்டு வரமுடியுமோ அம்புட்டு பக்கம் கொண்டு வருவார். அவரை நிகோபாரி மக்களும் மரியாதை செய்து தெய்வமாய் பாவித்தார்கள். எப்படி அவருக்கு மட்டும் இப்படி சாத்தியம் என்ற போது கிடைத்த தகவல். இவர் நங்கூரம் இடாமல் காற்று வாக்கில் தவழ விட்டு அவசர காலத்தில் போக தயாராய் இருந்தது தான் என்று பதில் சொன்னார்.

கல்லில் கட்டி கடலில் எறிவது அந்தக் காலத்து தண்டனை. தசாவதாரம் படத்தில் சைவர்களை கொடுமைக்காரர்களாய் காட்டும் காட்சி வருகிறது. வைணவரான கமலை இப்படி சைவர்கள் கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்.(ஆமா கமல் வைணவரா என்று கேக்காதீங்க… இதெப்பத்தி ஆத்திகம் நாத்திகம் கமல்த்திகம் என்று ஒரு போஸ்ட் ஏற்கனவே போட்டிருக்கேன்). சமணம் ஓங்கி இருந்த காலத்தில் சைவர்களை இப்படி செய்திருக்கிறார்கள். நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லி பாயன்ஸியினை மாத்தி மிதந்து வந்ததாய் தேவாரம் சொல்கிறது.

இம்புட்டு பாத்துட்டு, கம்பர் கிட்டெ கேக்காமெப் போனா, அவர் கோவிச்சிக்க மாட்டாரு?? கல்லைக் கட்டி கடலில் எறிந்த கதை ராமாயணத்திலும் வருது. கம்பர் காதையில் வரும் கிளைக் கதை: இரணியன் வதைப் படலம். இது ஏதோ நம்ம சீரியலில் யாரோ ஒருத்தருக்காய் சில கேரக்டர் கொடுக்க கதை நீளுமே, அப்படித் தான் தெரியுது. ராமாயணத்தின் தொடர்பே இல்லாத (இப்படி 100% சொல்லிட முடியாது) பக்த பிரகலாதன் படம் கொஞ்சம் ஒரு ரீல் ஓட்டிக் காட்டுறார் நம்ம கம்பர். (அது அந்தக் காலத்து இலவச இணைப்பா இருக்குமோ?)

எல்லரும் கல்லைக் கட்டிக் கடலில் எறிய, கம்பர் வரியில் மலையோடு கட்டி கடலில் எறிந்தார்களாம். (சாரி.கொஞ்சம் ஓவர் என்று மதன் பாணியில் சொல்லாமல் சொல்லியிருப்பாரோ?) திருமாலின் பெயரை பிரகலாதன் சொல்ல, அந்த மலை மரக்கலம் ஆகாமல் சுரைக்குடுவையா ஆயிச்சாம். பாட்டெப் பாக்கலாமா??

நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின் வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.

என்ன தான் நீங்க கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கம்பன் போஸ்டிங்கள் தொடரத்தான் செய்யும்.

மகளிர்க்கு மரியாதை


காதலுக்கு மரியாதை என்பது தான் அடிக்கடி காதில் விழும் வாசகம். காதல் என்றால், என்ன ஒரு மரியாதை பெறும் ஓர் இடமா? பொருளா? அல்லது ஊர் சிரித்தது என்றால் ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று பொருள் படும் ஆகு பெயரா? (எட்டாம் வகுப்பில் படித்த தமிழ் இலக்கணம் இன்னும் கொஞ்சம் ஞாபகம் இருப்பதை எப்படியெல்லாம் சொல்லி நிரூபிக்க வேண்டி இருக்கு!!) அப்பொ இது காதலர்களுக்குத் தரும் மரியாதையாக இருக்கலாம்.

மரியாதை தரும் நேரத்தில், சில மரியாதை இழக்கும் சம்பவங்களும் நடக்கும். எனக்குத் தெரிந்த ஒரு கல்யாண வீட்டில் நெருங்கிய உறவினர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மரியாதை என்றால் ஒன்றும் பெரிசா பூரண கும்ப மரியாதை எல்லாம் ஒண்ணும் கிடையாது. சும்மா ஒரு தேங்கா தரும் சம்பிரதாயம் தான். எல்லாருக்கும் தந்து முடித்தா? என்ற கேள்வியை ஒரு பெரியவர் கேட்டார். கூட்டத்தில் ஒருவர் கை தூக்கி, “எனக்கு வரவில்லை” என்றார். “ஓஹோ உனக்கும் தரணும் இல்லெ” என்று சொன்னது தான் தாமதம். அங்கே மோதல் ஏறபடும் அளவுக்கு நிலமை மரியாதை இழந்து நின்றது தான் வேடிக்கை.

ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் என்று சொல்லி வருகிறார்கள் இந்தக் காலத்தில். என்னோட பையன் விழுந்து விழுந்து ஒலிம்பிக் பாத்துக் கொண்டிருந்த போது, “இன்னும் இந்த gender discrimination இருக்கிறதே?” என்கிறான். என்ன ஏடா கூடாமா அவன் கண்ணில் பட்டதோ என்று பாத்தா, வாலிபால் நெட் உயரத்தில் வேறுபாடு இருக்கிறதாம். நானும் ஏதோ, ஆண்களின் சராசரி உயரம் பெண்களின் சராசரி உயரத்தில் வேறுபாடு இருக்கலாம் என்று கூறி சமாளித்தேன். [எனக்கும் உண்மையில் பதில் தெரியலை. இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே!]

மகளிர் மட்டும் என்றும் லேடீஸ் ஸ்பெஷல் என்றும் இப்போல்லாம் வந்துவிட்டன. அந்தமானில் மகளிருக்கென்று தனி ஜெயில் வைப்பர் தீவில் அமைத்து அன்றே மகளிருக்கு என்று தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அன்றைய ஆங்கில அரசு. அதை ஒட்டி தற்போது தான், மகளிர் ஸ்பெஷல் பஸ் இயங்க ஆரபித்துள்ளது. அதில் மகளிர் நடத்துனரையும் அந்தமான் நிர்வாகம் நியமித்துள்ளது. [குடும்பத்தை நடத்துவது கைவந்த கலையாய் வைத்திருக்கும் மகளிருக்கு பஸ்ஸை நடத்துவது சிரமமா என்ன?]

ஆனால் இந்த மகளிருக்கு மரியாதை என்பது என்னவோ இப்பொ வந்த சமாச்சாரமாய் தான் பார்க்கிறார்கள். சில ராணிக்கள் அந்தக் காலத்தில் ஆட்சி செய்திருந்தாலும், அந்த சந்தேகம் வரத்தான் செய்கிறது. தமிழர்களின் வாழ்வில் மகளிருக்கு மரியாதை தந்திருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியும். ஆதாரம்….?? (கம்பராமாயணம் வர இன்னும் கொஞ்சம் காத்திருங்க பிளீஸ்..) சமீபத்தில் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். 12ம் நூற்றாண்டு சிற்பம் ஒன்றை அங்கு உள்ள மியூசியத்தில் ஒரு சிலையாக வைத்திருந்தனர். சிலையின் பெயர் துவாரபாலகி. அதாவது பெண் போலீஸ் அல்லது Security Guard. அப்பொ…. நடுவில் தான் சிக்கல் வந்திருக்குமோ…

இப்பொவும் கூட பார்ட்டிகளில் (வார இறுதி கொண்டாட்ங்கள் நீங்கலாய்) கொஞ்சமாய் கூத்தடித்துவிட்டு பின்னர் சாப்பாடு தட்டு ஏந்தும் போது (பஃப்பே என்று நாகரீகமாய் அழைப்பர்). பெரும்பாலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்பர்கள். [ஒரு வேலை அவங்களை சாப்பிட விட்டு நாம இன்னும் கொஞ்சம் சுதி ஏத்திக்கலாம் என்ற நல்ல எண்ணமாகவும் இருக்கலாமோ!!] இந்த மகளிருக்கு மரியாதை தரும் வித்தை எப்பொ வந்திருக்கும்? [இந்த மாதிரி கேள்வி வரும் முன்னே…. கம்பராமாயணம் வரும் பின்னே… இது தான் தெரிஞ்ச விஷயம் தானே!!]

அனுமன் சீதையைக் கண்டு திரும்பின் பிறகு நடந்த சின்ன சம்பவம் பாக்கலாமே! ராமனிடத்தில் நடந்த சம்பவங்களை சொல்ல வேண்டும். என்னவோ ஏதோ என்று டென்ஷமாய் ராமனும்… அதை விட பதட்டமாய் லெட்சுமணன். வந்தார் அனுமன். ராமனை வணங்கவில்லை. அதற்குப் பதில் சீதை இருந்த தென்திசை பாத்து நிலத்தில் விழுந்து வணக்கம் வைத்தாராம். எப்புடீ நம்மாளோட மகளிருக்கு முதல் மரியாதை??

எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலைவன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.

அப்புறம்… எங்க வீட்லெ மீனாட்சி ஆட்சி தான். (அவங்க வீட்டைப் பாத்துக்க நான் ஜாலியா கம்பராமாயணம் படிச்சிட்டே இருக்கேன். ) ஆமா உங்க வீட்லெ எப்படி??

மகிழ் விற்கும் மகளிர்


இந்தக் கிரிக்கெட் ஆட்டத்தில் சமீபத்திய முக்கியமான பிளேயர்கள் யார் தெரியுமா? சச்சின்? டோனி ??.. இல்லை.. இவங்க யாருமே இல்லை.

கைகளில் கலர்கலராயும், நிறைஞ்ச நெஞ்சோடும், குறைந்த ஆடைகளோடும், அனைவரையும் உற்சாகப் படுத்தும் Cheer Girls தான் அவர்கள்.

நான் அவர்களை மகிழ் விற்கும் மகளிர் என்கிறேன். (உற்சாக பாணக் கொண்டாட்டங்களில் Cheers க்கு தமிழில் “மகிழ்வோம்” என்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

அந்த மகளிர் ஆடும் ஆட்டத்திற்கு ஏதும் வரையறை இருக்கா..என்ன? ஒண்ணும் இருக்கிற மாதிரி தெரியல்லை.. கிடையாது.. சும்மா தத்தக்கா புத்தக்கா என்று ஆடுகிறார்கள். (அதுக்கும் டிரைனிங்க் தருவங்களோ?!!)

சந்தோஷம் வந்தா தலை கீழ் தெரியாம ஆட்றதுங்கிறது அது தானோ?  ஆனா தண்ணி அடிச்ச ஆட்களும் நல்ல சங்கதிகளை உளறும் சிச்சுவேஷனும் இருக்கு.

ஓஹோஒஹோ கிக்கு ஏறுதே… என்று ரஜினி படத்தில் ஒரு பாட்டு வரும். அருமையான தத்துவப் பாடல் இது.. என்னமோ கிக்கு ஏத்துற பாட்டா இருக்கு… இது எப்படி தத்துவப் பாடலாகும்?

நடுவில் வரும் வார்த்தைகள் –

கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே- அட
தங்கபஷ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே – இந்த
வாழ்க்கை வாழத்தான் –பிறக்கையில் கையில்
என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல..??

பாத்தா ஏதொ சித்தர்கள் பாட்டு மாதிரி இருக்கு பாருங்க.. ஆன மகிழ்விற்குப் பிறகு பாடும் பாடல் அது..

சரி..எதுக்கு இவ்வளவு பீடிகை…??…அது ஒண்ணுமில்லை

அந்தக் காலத்திலும் இப்படி மகிழ்விற்கும் படியான ஒரு நிகழ்வு கெடைச்சது.. அதான்.. கொஞ்சம்….

என்னடா இழுவை… மிச்சத்தைச் சொல்றா…

வந்தேனே…… சொல்ல வந்தேனே…

ஒரு அரன்மனையில் நடந்த கூத்து இது.

அங்கே எல்லாரும் சந்தோஷக் கடலில் மூழ்கிட்டாங்களாம். இன்பம் அப்படியே இதயத்துக்கு போச்சாம்..அப்புறம் ஓவர்ஃப்ளோ ஆகி மயிர்க்கால்கள் வரை வந்திடுச்சாம்.

உடம்போடு அப்புடியே சொர்க்கத்துக்கு போயிட்டாகளாம்.

ராஜா முன்னாடி எப்படி இருக்கனுமோ அப்படி இல்லாமெ இருந்தங்களாம்.

அந்த சரக்கு எப்படி இருந்தது தெரியுமா? (பெப்ஸியோடு விஸ்கி கலந்த மாதிரி) இனிப்பா இருந்ததாம்.

அது சரி அது எந்த அரன்மனை தெரியுமா?

தசரதன் அரசாட்சி செய்யும் அரன்மனையில்.

அடப்பாவமே… இவ்வளவு மோசமாவா மிதந்து கிடந்தாய்ங்க??

ஹலோ… ஹலோ…கொஞ்சம் இருங்க….அவங்க எதுக்கு இப்படி மிதப்பில் இருந்தாக தெரியுமா??

அதான் சரக்கு அடிச்சதுன்னு தெரியுதே… அதான் கிடையாது…

வரும்…வராராது மாதிரி, இங்கே சரக்கு அடிக்கலை….ஆனா…அடிச்ச மாதிரி.

கம்பர் வார்த்தையில் சொன்னா…கள் சாப்பிட்ட மா….திரி..

ஆனா “கள்” என்ன தெரியுமா? தசரதன் வாயிலிருந்து வந்த சொல்.. அது என்ன அப்படி கிக் ஏத்துற சொல்…?

ராமன் அரசனாக முடி சூட இருக்கிறான் என்ற சொல் தான் இந்த மொத்த கூத்துக்கும் காரணமாம். (கம்பர் கூட வாக்கியம் என்று சொல்லாமெ சொல் என்று சொன்னதும் – உச்சம்)

என்னமோ தெரியலை இப்பொல்லாம் கம்பரை கையில ப(பு)டிச்சாலே கிக்காத்தான் இருக்கு.அதே கிக்கோட பாட்டையும் படிச்சிருங்க:

இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும்
முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார்.

மீண்டும் நாளை மகிழ்வோமா??