மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா?


இதென்ன கேள்வி?? பொண்டாட்டி தொந்திரவு வேணாம்னு தானே, மாஞ்சி மாஞ்சி பேஸ்புக்கு முன்னாடி மணிக்கணக்கா கெடக்கிறாய்ங்க… இதுலெ.. கூப்புட்றது எப்படின்னு…. நல்லா கேக்குறானுங்கப்பா கொஸ்சினு…இப்படி உங்க மனசுலெ ஓடும் படம் எனக்கும்.. கொஞ்சம் கேக்கத்தான் செய்யுது.. ஏன்ன்னா… நானும் உங்க கட்சி தானே!! மனைவியை எப்படி அழைப்பது? என்ற கேள்வி வந்த்துமே…. செத்த இருங்க… என் வீட்டுக்காரி அழைப்பு வந்திருக்கு.. என்ன ஏதுன்னு கேட்டுட்டு, அப்புறம் வாரேன்…(ஐ பி எல்லுக்கு கமான், புலாவா ஆயா ஹைன்னு சொல்லிட்டு ஓட்ற மாதிரி ஓட வேண்டி இருக்கு பாருங்களேன்!)

மனைவியை எப்படி அழைப்பது என்பதற்குப் பதிலா… மனைவியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்ற வித்தையை கொஞ்சம் பாத்துட்டுப் போலாமே… அவங்க உங்க கிட்டெ கேக்கும் போதே, அவர்களிடம் அந்த கேள்விக்கான பதில் இருக்கும். ரொம்பக் கவனமா கேக்கிற மாதிரி மொகத்தெ வச்சிக்கிடுங்க.. புரிஞ்சாலும் புரியாத மாதிரி மொக பாவனையா வச்சிக்கனும். எதிர் கேள்விகள், உங்கள் மேதாவித்தனைத்தைக் காட்டாமல், அவர்களின் மேதாவித்தனம் வெளிப்படும்படி கேக்கலாம். [என்ன சொதப்பலா சொன்னாலும், மேதாவித்தனம் மாதிரி, உச்சுக் கொட்டியிரனும்]. எல்லாம் முடிச்சு அவங்க என்ன நெனெச்சாங்களோ, அதை அவய்ங்க வாயிலிருந்து வரும் வரை பொறுமையா வெயிட் செய்யனும். அது வந்து விழுந்தவுடன், அட,,.. இதெத்தானெ நானும் நெனெச்சேன்ன்ன்ன்ன் என்று புளுகனும்… நல்ல தாம்பத்யத்தின் ரகசியம் வெளியே சொல்லிட்டேனோ??

சரீ… கூப்பிடு தொலைவில் இருக்கும் மனையாளை எப்படி கூப்புடுவது என்று கேட்டேனே… என்னங்க… ஏனுங்க.. ஏண்ணா, மச்சான், மாமா, மாமோய், என்று கணவர்களை கூப்பிடுவது தெரிகின்றது. மனதிற்குள் கடன்காரன் சனியன் என்று அழைப்பது இங்கு நாகரீகம் கருதி குறிப்பிடப் படவில்லை. ஆனால் அப்படியே, மனைவியை கூப்பிட அகராதிகள் தான் தேட வேண்டியுள்ளது. பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் இப்போதைக்கு வந்துவிட்டது. என் அன்பே, காதலியே, உயிரே, கண்ணே, அமுதே.. என்று கல்யாணத்துக்கு முன்னர் கொஞ்சிவிட்டு, அப்புறம் கல்யாணம் ஆன மயக்கத்தில், செல்லம்…செல்லக்குட்டி, செல்லக் கழுதெ..என்றெல்லாம் அழைப்பதும், அப்படியே கொஞ்ச வருடங்கள் கழித்து நாயே, பேயே என்று மனதிற்குள் அழைப்பதும் கணக்கில் வராது.

வட இந்தியர்களுக்கு ஒரு சௌகரியம் இருக்கிறது. டாக்டரின் டக்கர் மனைவியினை டாக்டராயின் என்றும், ஆசிரியனின் ஆசைமனைவியை உபாத்யாயின் என்றும் அழைப்பார்களாம். அப்பொ இஞ்ஜினியரான என் இனிய மனைவியை எப்படி அழைப்பார்கள் என்று கேட்டேன். இஞ்ஜினியராயின் என்று பதில் வந்தது.

அவங்க ஊர் பழக்கம் விட்டுத்தள்ளுங்க. அந்தமான் நிலவரம் பாக்கலாமே. பேர் சொல்ல குழந்தைகள் வேண்டும் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்பெல்லாம் கொழந்தைகளோட பேரெ வச்சித்தான் அவங்க அப்பா அம்மாவைக் கூப்பிடராங்க… ரக்சிகா அப்பாவோ, விஜயம்மா என்றும் தான் வழக்கமாய் ஆகி விட்டது.

மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா? (அப்பாடா அங்கே சுத்தி, அந்தமான் சுத்தி இப்பொ தலைப்புக்கு வந்தாச்சி…) மனைவியை தாய் என்ற உயர்நத இடத்தில் வைத்துப் பார்ப்பது ரொம்ப நல்ல விஷயம் தானே…இந்த இடத்தில் கமபரைக் கொண்டு வந்தால் நல்லா இருக்குமோ என்று படுது… கொண்டாந்துட்டாப் போச்சி…

காரியம் ஆகணுமா காலிலே விழுந்தாவது காரித்தை முடி..அப்புறம்… ”தேர்தல் வாக்குறுதியா..?? அதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம் தானே” என்று, இப்பொ சொல்லும் அதே ரேஞ்சுக்கு கம்பன் காட்டும் ஓர் இடம் இருக்கு. வாலிவதம் செய்த காட்சி.. ”ராமனே ஆனாலும் மறைந்திருந்து வாலியை கொன்னது சரியா?” என்று இன்னும் சர்ச்சை நடந்திட்டுத்தான் இருக்கு. அப்படி கெட்ட பேரு வாங்கிக் கொடுக்கக் காரணமாய் இருந்த சுக்ரீவன் அப்புறமா, ஓவரா ‘ஹேங்க் ஓவர்’ ஆகும் அளவுக்கு ஓவரா குடிச்சிட்டு இருந்தானாம். பார்த்தார் இளவல் இலக்குவன்… கோபம்னா கோவம்.. உங்கவூட்டு எங்கவூட்டு இல்லெ… அம்புட்டு கோவமா வேக நடை போட்டு கிஷ்கிந்தையில் நுழைந்தார். தடுத்தார் தாரை… விதவைக் கோலத்தில் வாலியின் மனைவி… பார்த்தவுடன் தன் தாயார்கள் நினைவு வந்ததாம். (தாயார்கள் என்பதில் கைகேயியும் அடக்கம்). கோபம் அடங்கியதாம்…
மனைவியின் கோபம் நம்மீது பாய்வதை தடுக்க, அல்லது ஒடுங்க, மனைவியை தாய் மாதிரி நினைக்கலாமோ!!??

அது வரைக்கும் சரீரீரீ…இதென்னெ மம்மீ என்று அழைப்பது? இதுக்கு விளக்கம் சொல்ல நீங்கள் என்னோடு இன்று பாஸ்போர்ட் விசா இல்லாமல் குவைத் வரவேண்டும்.

mammii

அங்கே தான் என் நண்பர் பழனிகுமார் தன் மனைவியை மம்மீ என்று அழைத்து வருவதைப் பார்த்தேன். சற்றே வித்தியாசமாகப் பட்டது. ”ஏன் இப்படி?” என்றேன். ”பெயர் சொல்லித்தான் கூப்பிட்டு வந்தேன். என் குழந்தைகளும் நாம் செய்வதையே அப்படியே செய்வது போல், அவர்களும் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன வம்பாப் போச்சே என்று, மம்மீ என்று குழந்தைகள் வாயிலிருந்து வரவழைக்க செய்த வேடிக்கையான ஏற்பாடு இன்றும் தொடர்கிறது” என்கிறார்.

எப்படி இருக்கு கதை..? இளைய தலைமுறை நல்லா இருக்க என்ன என்ன தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கு? உறவுமுறைகள் உட்பட..!!!

மீண்டும் ஒரு முறை கம்பர் கிட்டே போலாமே… அங்கே கணவரைக் குறித்துச் சொல்ல வேண்டும், அப்போது, மனைவியின் கணவர் என்று பிட்டுப் போடுகிறார் கம்பர். விரிவாப் பாக்கலாமா? இராமன் மேல் பாசம் கொண்டுள்ள கைகேயி இராமனை காடு அனுப்பும் போது தான் இப்படி வருகின்றது. ரெண்டு வரம் தர்ரதாச் சொன்னியே, ஒன்னிலெ எம் புள்ளெ நாடாளவும், இன்னொன்னுலெ சீதை புருஷன் காடாள்வதுமாக வரங்கள் ரெண்டும் கேட்பதாக வருகிறது கம்பனில்.

இராமன் என்று சொன்னால் எங்கே, ஒளிந்திருக்கும் பாசம் மேலே வந்துவிடுமோ என்று பயந்து, கம்பர் அதனை மறைத்துச் சொல்லாமல், ”சீதையின் கணவன்” என்று சொல்வது, இப்பொ நாம அந்தமான்லெ குழந்தைகள் பேர் சொல்லி அவங்க அப்பா என்று சொல்ற மாதிரி தானே இருக்கு?
வால்மீகி தான், கம்பரின் ”மூலம்”. ஆனால் வரிக்கு வரி காப்பி என்று மட்டும் சொல்லிட முடியாது. வால்மீகியின் வரிகளில், இராமனுக்கு பதவி ஏற்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் அப்படியே பரதனுக்கு செஞ்சிட்டு (இராமனுக்குப் பதிலா பரதன் மட்டும்), இராமனை காட்டுக்கும் அனுப்பிடுங்க என்பதாய் வருகிறது.

பாவம் மாமியார் மருமகள் மீது என்ன பிரச்சினையோ, சீதை பெயரை கைகேயி இழுப்பதாய் கம்பர் சொன்னது இந்த வம்பனுக்குப் படுகின்றது. இதோ பாட்டும்… வருது:

ஏய் வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய்வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்..

அந்த கடைசி வரியில் வரும் சிறந்த என்பது இப்பொ வரும், காமெடியில் கலக்கும், “ரொம்ப நல்லவ” மாதிரி தெரியுது எனக்கு. உங்களுக்கு?

காதலில் ஜெயிப்பது எப்படி?


காதலில் சொதப்புவது எப்படி? என்று அருமையான படம் வந்தது. இன்றைய காதலின் உண்மை நிலவரத்தை தோலிருச்சி (எதை எதையோ உரிச்சியும்) காட்டியது. காதலில் சொதப்புகிறார்களோ இல்லையொ, காதலிப்பவர்களின் சொதப்பல் தான் மிகப் பெரிய சொதப்பல்.

காதல் எவ்வளவு சிரமமோ, அதை விட அதனைச் சொல்வது அல்லது வெளிப்படுத்துவது. ஏன் இப்படி இவ்வளவு சிக்கல்கள்? காதல் மலர்வதற்கு எந்தவித காரண காரியங்களும் தேவை இல்லை. இப்படி ஏதும் காரண காரியங்களுக்காய் காதலித்தால் அதனை புராஜக்ட் என்று அழைக்கலாம் என்று ஓகே ஓகே (ஒரு காதல் ஒரு கண்ணாடி) படம் சொல்லித் தருகிறது. கவுக்கிறது என்ற கொச்சையான சமாச்சாரத்தை மங்களகரமாய் மொழி பெயர்த்து Project என்கிறார்கள்.

காதலை காதலியிடம் தெரிவிப்பது எவ்வளவு சிரமமோ, அதே சிரமம் பெற்றோர்களிடம் அவர்கள் தம் காதலையும் தெரிவிப்பது. எனக்கு அந்த மீடியேட்டர் வேலை வந்து சேர்ந்தது. (புரோக்கர் என்பதை எப்படியெல்லாம் மாத்திச் சொன்னாலும்… அதை சொல்லாமல் இருக்க முடிவதில்லை). பையனின் அப்பாவிடம் நைஸாக ஆரம்பித்தேன்.

உங்க பையனுக்கு ஏதோ லவ் மேட்டர் இருக்கிறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்ககளே??
கிடைத்த பதில்: “ஆமா…. அவர்களை நம்பி நாம் இருக்கும் போது அவர்கள் நம் அனுமதி கேப்பாங்க என்று எதிர் பாப்பதே தப்பு”. என்ன நிதர்ஷனமான யதார்த்தமான அப்பா…!!!.
சில ஆண்டுகள் கழிந்தன. அதே அப்பாவிடம் கேட்டேன்: மருமகள் எப்படி?

“இந்த மாதிரி மக கெடைக்க ஆண்டவன் அருள் இருந்திருக்கனும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஊரிலிருந்து ஒரே ஜாதி ஒரே மதம் பாத்து பெண் எடுத்திருந்தாலும் கூட இப்படி அமைந்திருக்குமா தெரியவில்லை..” இப்படிப் போனது அவர் பதில். இது ஜெயித்த காதல் கதை.

இன்னொரு வீட்டில் நடந்த கதை. தங்கையின் கல்யாணத்திற்கு, அண்ணன் தன் கல்லூரித் தோழர் தோழிபடை பட்டாளத்துடன் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தோழி மட்டும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்த்து வருகிறாள். கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதை கவனிக்கத் தவறவே இல்லை. விடைபெறும் நேரம் வந்தது. தோழி சாதாரனமாய் ஆசி வாங்க அம்மா காலில் விழுந்தாள். நம்மாளு சொன்ன கடைசி வார்த்தை, “அம்மா இது தாம்மா நம்ம மாட்டுப் பொண்ணு..”. ஏதாவது மறுப்பு சொல்ல முடியுமா? அம்மாவாலும்… யாராலுமே!!!

அதற்கு நேர் மாறாக நாள் நட்சத்திரம் பற்பல பொருத்தம் என்று தடபுடலாக நடந்த ஒரு கல்யாணம். இரண்டு வருடத்திற்குள், தன் IT துறை கணவன் அடிப்பதாய் மனைவி புகார் சொன்ன போது நொந்து போனார்கள் பெற்றோர். “பேசாமல் நீயும் யாரையாவது லவ் பண்ணித் தொலெச்சிருக்கலாமே” என்ற அளவுக்கு வந்து விட்டது நெலமை.

ஜெயித்த காதல் ஒரு பக்கம். தோற்ற காதல் பல. தன் காதலி ஒரு கிளியோபாட்ரா என்று சொக்கி விழுந்தவன் அவன். ஓரிரு வருடங்களில் அந்த காதலி 90 கிலோவை நெருங்க, காதலன் முகம் தொங்கிப் போனது.

ஆட்டத்தோடு பாட்டுப் பாடும் ஜாலியான ஆசாமி இன்னொருவன். காதல் அதில் தான் தொடக்கம். கல்யாணத்தின் பின் ஆட்டமும் இல்லை. பாட்டும் காணோம். மனுஷன் நொந்து போய் குடியில் திளைக்க, வருடங்கள் உருண்டன. தன் கணவர் உயிரோடு இருந்து தொல்லை தருவதை விட இறப்பதே மேல் என்றது அந்தக் காதலி. விதவை ஆவதை விரும்பி ஏற்ற அந்த மாஜி காதலி..ஆமா.. காதல் ஏன் இப்படி ஆச்சி??

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நண்பர்கள் பெரும்பாலும் தங்களுக்குள் மச்சி (மச்சான்) என்றோ, மாப்பிள்ளை என்றோ அழைத்துக் கொள்வர். உண்மையில், நண்பர்களுக்குள் அப்படி உறவு அமைவதும் உண்டு. என் கல்யாணத்திற்கு வந்த ரெண்டு நண்பர்கள் ஒன்றாய் பஸ்ஸில் போகும் போதே இப்படி தங்கை பற்றிச் சொல்ல விரைவில் எனக்கு கல்யாணப் பத்திரிக்கை வந்தது.

சரீ..இதெல்லாம் சரி… தலைப்பு என்ன? காதலில் ஜெயிப்பது எப்படி? சொல்லிட்டு காதல் கத்தரிக்காய் மட்டும் சொல்லிட்டு வந்தா எப்படி? அது ஒண்ணுமில்லை சார். கிரேஸி மோகனின் ஒரு நாடகம் DVD ல் பாத்தேன். “கிரேஸி கிஷ்கிந்தா” அதிலும் ராமாயணம் வந்தது.. கிரேஸியின் டிராமாவில் மட்டும் தான் இராமாயணம் வருமா? நம்ம போஸ்டிங்லெயும் வருமே!!!

காதலித்துப் பார் வருஷங்கள் நிமிஷமாகும். நிமிடங்கள் வருஷங்களாகும். இது வைரமுத்துவின் பார்முலா. காதலில் ஜெயிக்க கம்பர் ஒரு பார்முலா சொல்கிறார். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க..

காதலில் விழுந்தவர்களின் கண்களுக்கு காதலி மட்டும் தான் காதலியாய்த் தெரிவாராம். மற்றவரெல்லாம் ஆண்கள் மாதிரி தெரிய வேண்டுமாம். என்ன நம்ப மாட்டீங்களா..?? இதோ சற்றே விரிவாய்..

இராவணனுக்கு சீதை மேல் காதல். (அடுத்தவன் பொண்டாட்டி மேலே வருவது மோகம் தானே?? காதலா என்ற கேள்விக்கு பதிலை வேறு என்றைக்காவது வைத்துக் கொள்வோம்.) நாகர்கள் வழும் பாதாள லோகம் தொடங்கி பிரம்மன் வாழும் சத்தியலோகம் வரைக்கும் அதன் இடைப்பட்ட எந்த இடத்திலும் மயில் மாதிரி பிகருங்க இருந்தாலும் அவர்கள் எல்லாம் காதல் கொண்டவர்களின் கண்களுக்கு ஆடவராகத் தெரிந்தார்களாம்.

சரி இப்பொ Test வைக்கலாமா?? உங்க காதலியை மனசுலெ நெனைச்சுக்குங்க.. தமண்ணா முதல் திவ்யாபாலன் ஹன்சிகா அமலாபால் இப்படி யாரைப் பாத்தாலும் ஆண்களாக காட்சி தர வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் காதலில் ஜெயிக்கிறீங்க…

அப்படியே அந்த குஷி மூடில் பாட்டையும் படிச்சிருங்க…:

ஏகநாயகம் தேவியை எதிர்த்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.

அப்புறம் வரட்டா..???

[இந்தப் பதிவிற்கு புதிய நடிகைகளின் பெயர் தேவை என்று சொன்னவுடன், இது போதுமா? என்று பெயர் தந்து உதவிய மதுரை மைந்தன் ருப்பா கேசவ ராஜாவுக்கு என் சிறப்பு நன்றிகள்].