ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு வெயிட்டு


ஆர்டர்.. ஆர்டர்.. என்று சொல்லும் கோர்ட் சீன்கள் அடிக்கடி படத்தில் பாத்திருப்பீர்கள். அந்த சுத்தியல் வைத்து, கனம் நீதிபதியவர்கள் தட்டுவார். நான் பாத்த CAT, மாவட்ட நீதிமன்றம், ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று எதிலும் இந்த தட்டும் வழக்கத்தை பாக்க முடியலை. [ஒரு வழியா அலுவல் சம்பந்தமாய் படியேறி இறங்கிய நீதிமன்றங்களின் பட்டியல் முழுக்க காட்டி விட்டேன்]. ”ரெண்டு தட்டு தட்டினா, சரி ஆயிடுவான்” என்று சொல்கிறார்களே, அதைத் தான் இப்படி சிம்பாளிக்கா காட்டுறாங்களோ படங்களில்.. இன்னும் மூளையை கொஞ்சம் தட்டிப் பாக்க வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது இரண்டும் இரு பெரும் பிரச்சினைகள். ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்கின்றனர். பெற்றோர்கள்தான் முதல் ஆசிரியர் என்பதும் தெரியும் தானே!! ஆக, இருவருக்கும் இதில் பங்கும் உண்டு. பொறுப்பும் உண்டு. எப்படி அதனைச் செய்வது? அடிச்சி சொல்லித் தரவேண்டுமா? அல்லது ”அன்பாலெ தேடிய என் அறிவு செல்வம்..” என்று பாட்டுப் பாடிச் சொல்லித் தருவதா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்கிறார்கள்.. (நம்ம ஆட்கள் தான் எல்லாத்துக்குமே பழமொழி வச்சிருக்காங்களே!!.. கட்டிங்கை நம்பினோர் கைவிடப்படார் என்று கூட புதுமொழி இருக்கு. நான் அதெல்லாம் சொல்ல மாட்டேன்)

அடியாத மாடு படியாது என்று மாட்டிற்கு இலக்கணம் வைத்திருக்கிறார்கள். BSc (Agri), BVSc ல் கூட இதனைச் சொல்லித் தருகிறார்களா என்று கேட்டுப் பாக்கனும். அடிச்சுத் தான் சொல்லித் தரணும் என்பதில் பிடிவாதக் காரர்கள் இவர்கள். இந்த ”ஐந்தில் வளையாததை” கொஞ்சம் வளைந்து பாத்தா, வேற அர்த்தம் வருது. ஆரம்பம் சரியில்லை என்றால் முழுக் கிணறை எப்படித் தாண்டுவது? ”ஐ” யே சரியா வளைத்து எழுதத் தெரியலை. ஐம்பது எப்படி எழுத முடியும்? இப்படியும் யோசிக்கலாமே. பெரியார் பக்தர்(??)களுக்கு இந்தப் பிரச்சினை இல்லவே இல்லை. ”அய்” என்ற எழுத்து போட்டு சமாளித்து விடுவர்.

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்கிறார்கள். வெறும் கல்லிலிருந்து கூட, வேண்டாததை எல்லாம் அடிச்சி எடுத்துட்டு… அப்புறம் பாத்தா, நல்ல அழகான சிலை வந்துருமாமில்லெ… [அதுக்காக, மனைவியைப் பாத்து, ”அப்பொ ஏன் இப்படி வேண்டாததை மட்டும் வச்சி சிலை மாதிரி அனுப்பிட்டே” என்று பிரம்மன் கிட்டெ கேக்கக் கூடாது. ரம்பை ஊர்வசி எல்லாம் அவர்கிட்டெ இருக்கும்.. ”நமக்கு வாய்த்த அடிமை(கள்) புத்திசாலிகள்.. என்ன.. வாய் தான் கொஞ்சம் நீளம்” என்று இருந்துட்டுப் போக வேண்டியது தான்.

பெரும்பாலும் எனக்கு வாய்த்த PET மாஸ்டர்கள் அனைவருமே கையில் விசில் வச்சிருந்தாங்களோ இல்லையோ,கையில் பளபளப்பா மின்னும் கம்பு வச்சிருந்து மிரட்டுவார்கள். இதுக்குப் பயந்து நானு, அந்தப் பக்கமே போகாமெ இருந்துட்டேன். வேறு சில ஆசிரியர்களோ, அடியாத மாடு படியாது என்றார்கள். அவர்களை நம்ம பாலகுமாரன் என்ன சொல்கிறார் தெரியுமா?? (அடிச்சா…? அடிக்காமெயா?) இந்த மாதிரி கேக்கும் ஆசிரியர்கள், வாத்தியார் வேலையை விட்டுட்டு, பேசாமெ மாடு மேய்க்கப் போலாமாம். (என்ன பசங்களை மேக்கிறதெ விட அது ஓக்கேவா??)

இப்படி அடிச்சுப் பாத்தும் தேறாத கேசுகள் என்று முடிவு கட்டிய பல சின்னஞ் சிறுசுகள், பின்னாளில் பல சாதனையாளர்களா ஆயிருக்காகலாம். இந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? ”இது பூட்ட கேசும்மா… இந்தப் பையனை நாம இந்த ஸ்கூல்லெ வச்சிருந்தா நம்ம ஸ்கூல் இமேஜே கானாமப் போயிடும்” என்று சொல்லி விரட்டியது ஒரு பையனை. பிற்காலத்தில், அந்தச் சிறுவன் இல்லாங்காட்டி உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல, ஒரு நிமிடம், ஒரு நாடு முழுதும் இருட்டாக்கி அவனை நினைவு கூறுதாம். அந்தப் பையன் வேறு யாடும் இல்லை.. தாமஸ் ஆல்வா எடிசன். [தமிழ் நாடும் இப்பொ அடிக்கடி அந்தச் சிறுவனை நினைவு கூறுது மணிக்கணக்கா]

கற்றுக் கொடுப்பதில் பள்ளியாகட்டும், வீடாகட்டும், இந்தச் சிக்கல் இருந்தபடியே தான் இருக்கும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான் என்பார்கள். அப்படிப் பாத்தா, வீடும் பள்ளியும், ஏன் உலகமுமே தண்டனை தரும் அந்தமான் செல்லுலார் ஜெயில் மாதிரி தான் இருந்தாகனுமா என்ன? தேவையே இல்லையே… தண்டனை தேவைப்படும் போது மட்டும் கையில் எடுக்கலாம். எப்போவும் அப்படி இருந்தால் என்னத்துக்கு ஆகும்? என் தந்தை எனக்கு தந்த மோசமான அடியில் நான் அவரிடமிருந்து விலகி, கிட்டத்தட்ட 15 வருஷமாச்சி அவர்கிட்டெ நான் அன்பாய் திரும்ப ஒட்ட… தேவையா இதெல்லாம்???

வாத்தியார்களை விடுங்க… அடிவாங்கியபடி ஒரு பாட்டு வருமே?? உங்களுக்கு ஞாபகம் இருக்கா?? ”பட்டத்து ராணி… பார்க்கும் பார்வை” என்று சாட்டையடி வாங்கியபடி வரும் பாட்டு அது. எல் ஆர் ஈஸ்வரியின் குரல் அது. இவ்வளவு காலம் ஆனாலும் இன்னும் சலிக்காமல் கேக்க வைக்கும் பாட்டு அது.

அது சரி… தலைப்பெ உட்டு ரொம்ப தூரம் வந்துட்டோமோ?? சாதாரன அடியே இப்படி இருக்கறச்சே, ஓங்கி அடிச்சா எப்புடி இருக்கும்? ஒரு கிலோ படிக்கல்லை வச்சி அடிச்சாலே, மூஞ்சி மொகறெ பேந்து போகும். (அப்படியான்னு யாரும் செஞ்சி பாக்காதீங்க) அதுலெ 10கிலோன்னா எப்படி எப்பெக்ட் தரும். அதெ விடுங்க.. ஒன்றெ டன் (அதாவது 1500 கிலோ) எப்படி இருக்கும்? HP Horse Power மாதிரி இது TP டன்ஸ் பவரா இருக்குமோ??

ஆமா இவ்வளவுக்கு அப்புறமும் கம்பர் வரலைங்கிறது வருத்தமா இருக்கத்தான் செய்யும். (இதுக்கு ”இல்லை” என்பது உங்கள் பதிலாய் இருந்தாலும் என்னோட பதில் தொடரத்தான் செய்யும்). நம்ம ஆளுங்க சினிமா படத்திலெ பன்ச் டயலாக் சொல்ல ஒன்னறை டன்னுன்னு சொல்லிட்டாய்ங்க. ஆனா இதே மாதிரி ஒரு சீன் கம்பராமாயணத்திலெ வருது. எவ்வளவு வெயிட்டு இருக்கு என்ற கேள்வியும் வருது. எங்கே? எப்பொ? தெரியுமா? இரணியன் வதைப் படலத்தில் வருது. இரணியனைப் பிடிச்சி நரசிம்ம அவதாரத் திருமால் கையால புடிக்கிறார். அது எம்புட்டு ஃபோர்ஸ் தெரியுமா? பெரிய்ய பெரிய்ய கணக்கு வாத்தியாருங்க, புரபஸருங்கு எல்லாராலெயும் கூட, சொல்ல முடியாதாம் அதை. இது எப்படி இருக்கு?

நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்புகைசெயா நெடுந்தீப் பொங்க உருத்து எதிர் பொருந்தப் புக்கான்தொகை செயற்கரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்மிகைசெய்வார் வினைகட்கு எல்லாம் மேற் செயும் வினையம் வல்லான்.

உங்களுக்கும் கோபம் வந்து வெயிட்டா ஏதாவது தூக்கிட்டு அடிக்க வந்துடாதீங்க… அன்பே சிவம். அன்பு தான் எல்லாம்..ம்..எல்லாம் தான்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை


இந்த மந்திரத்தை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்தவர் அறிஞர் அண்ணா. அவரது கருத்துக்களை திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே முழுதாய் கேட்பவர்களாய் இருபந்தாலும் கூட, இந்த “மாற்றான் மல்லி” டயலாக்கை எல்லாரும் கண்டிப்பா யூஸ் செஞ்சிருப்பாய்ங்க.

ஆனா இதை பேரறிஞர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ அதை மட்டும் சரிய்யா, எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாய்ங்க. பக்கத்து வீட்டு பொண்ணை ஒரு வாலிபன் சைட் அடிக்கனுமா?, அடுத்த வீட்டு அக்கா பாக்க நல்ல பளிச்சுன்னு இருக்காகளா? கீழ் போர்ஷன்லே செவத்த குட்டியை டாவடிக்கனுமா?, சில ஆண்டிகளை பலருக்குத் தெரியாமல் சில நேரங்களில் ரசிக்கனுமா? – இது எல்லாத்துக்கும் ஒரே பதில் இது தான்:- அண்ணா சொன்ன மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம். இதை அவுத்து விட்டு விட்டு நிம்மதியா கடலை போட ஆரம்பிச்சிருவாங்க.. (நான் அப்படி எல்லாம் கிடையாதுங்க.. எந்த வீட்டிலும் குழந்தைகள் தான் எனது நண்பர்கள்)

அண்ணா சொன்னதின் அத்தம் என்ன? எதிர் கட்சியினர் என்பவர் எதிரிக் கட்சியினர் இல்லை. நமக்கு எதிர் அணியில் இருப்பவர். அவர்களில் நல்லவர்கள் வல்லவர்கள் இருப்பார்கள். அப்படி எதிராய் இருப்பதாலேயே அந்தத் திறமைகளை குறைத்துச் சொல்லிவிட முடியுமா என்ன? அவர்களின் திறமைக்கு மரியாதை தரும் கண்ணியமான வாசக வசனம் அது.

ஆனா என்ன நடக்கிறது. எதிரணியினரை விரோதிகளாய் பாக்கும் வழக்கம் வந்து விட்டதே.. ஆய் ஊய் என்றால் வீச்சறுவா தூக்கும் வித்தையை சினிமாக்களும் தொடர்ந்து காட்டி வந்து கெடுக்கின்றன். கேட்டா காதலும் வீரமும் நமக்கு இரு கண்கள் என்று டயலாக் வேறு.. ஆமா எங்கே போய்க்கொண்டிருக்கோம் நாம்?

பக்கத்து வீட்டு வடநாட்டவர் ஒரு கேள்வி கேட்டார். தில்லியில் ஆளும் கட்சி தலைவரும் எதிர் கட்சி தலைவரும் பொது நிகழ்சிகளில் ஒன்றாய் தோன்றுவது போல் தமிழகத்தில் நடக்காதா? என்றார். ரொம்ப விவகாரமான கேள்வி அது. இதுக்கு நான் ஏதாவது சொன்னால் அது அரசியல் ஆகிவிடும். நானும் மழுப்பலாக அப்படி எல்லாம் இல்லையே ராஜாஜி பெரியார், கமல் ரஜனி, எம்ஜிஆர் சிவாஜி இப்படி எல்லாரும் ஒன்றாய் காட்சி தந்திருக்கிறார்களே என்று சொல்ல, கேட்டவர் அடங்கி விட்டார்.

ராஜாஜி, சக்கரவர்த்தி திருமகன் பெயரில் ராம காவியத்தை படைத்தவர். பெரியாரோ, அதே ராமருக்கு செருப்பு மாலை போட்டவர். பாம்பையும் பார்ப்பனரையும் ஒன்றாய் பார்த்தால் பார்ப்பனரை முதலில் விரட்டு என்று சொன்னவர்களின் தலைவரின் நண்பர் தான் ராஜாஜி என்ற பார்ப்பனர். ஆன்மீகவாதி ஒருவர் பெரியாரின் வீட்டில் தங்குவாராம். குளித்தவுடன் அவருக்கு திருநீரை ஏற்பாடு செய்து தந்தாராம் பெரியார். எவ்வளவு பெரிய மனிதர்கள்!!!

காமராஜர் கக்கன் போல் எளிமையின் மறு உருவமாய் வாழ்ந்தவர் தோழர் ஜீவா அவர்கள். அவரின் பெயரில் பரமக்குடியில் ஜீவா படிப்பகம் என்று உள்ளது. அங்கு ஆண் பெண் பலருக்கும் ஜீவா என்று பெயரும் வைப்பர். அவரைப் பற்றி வேறு ஒன்றும் அவ்வளவாய் வெளி உலகிற்குத் தெரியாது. ஆனால் வந்தார் ஒரு கதர் சட்டைத் தமிழர். பட்டி தொட்டி எங்கும், உலகெங்கும் உள்ள மேடைகளில் எல்லாம் ஜீவா பற்றி பேசினார். அந்தமானிலும் கூடப் பேசினார். ஆன்மீகச் சொற்பொழிவில் கூட ஜீவா இடம் பெறத் தவறவில்லை. அந்தப் பேச்சாளர் ஒன்றும் கம்யூனிச கட்சி ஆதரவாளர் அல்ல. மாற்றான் தோட்டத்து மல்லியின் மணத்தை மறுபடி மறுபடி மலரச் செய்த அந்த அபூர்வ மனிதர் தமிழருவி மணியன் அவர்கள்.
எதிரில் இருந்தாலும் எதிரணியில் இருந்தாலும் அவரும் மனிதர் தானே! எதிரியை அழிக்க வேண்டுமா? சுலம்பான வழி ஒன்று உள்ளது. அவரை நண்பனாக்கிக் கொள். இது ஒரு அறிஞர் சொன்னது.

அரசு வேலைக்கு ஆள் எடுத்தோம். எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதாய் அரசல் புரசலாய் சேதி காதில் விழுந்தது. போட்டோவுடன் வந்து தேர்வு எழுத அழைத்தோம். 10% மக்கள் போட்டோ இல்லாமல் வந்தனர். இதை முன்பே எதிர்பார்த்து கேமிராவும் கையுமாய் ஒரு அரசு ஊழியரை அமர்த்தி, சுடச்சுட போட்டோ எடுத்து (இலவசமாய்) பிரிண்ட் போட்டு கையிலெ குடுத்து, போ பரீட்சை எழுதுப்பா என்றோம். அரசின் கரிசனம் பாத்து மிரண்டே போனார்கள்.

முதியவர் ஒருவர் வந்தார். தன் மகளுக்கு காலையில் வேறு பரீட்சை இருக்கிறது. என்ன செய்ய? என்று. மாலையில் வந்து எழுதலாமே. இதோ பிடிங்க புது ஹால் டிக்கட். நேரம் மாத்தி தர்ரேன் என்று தந்தேன். காலை பரீட்சை இருக்கு என்று சொன்னதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? என்று கூட அரசு கேட்காதா? என்றார் ஆச்சரியத்துடன். வயதில் பெரியவர். மகளை அழைத்து வராத போதே தெரிகிறது. மகள் அங்கே பரீட்சை எழுதுவது. அவங்க கையில் தான் அந்த ஹால் டிக்கட் இருக்கும். எதுக்கு இதெல்லாம் என்றேன் நான். இஸ்லாமிய பெரியவர் மனம் இளகி முதுகில் தட்டி “அல்லா உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்” என்றார். அவர் சண்டை போட தயாராய் வந்தவர் என்பது இங்கே நான் சொல்லாமல் விட்ட உண்மை.
இப்படித்தான் இராமயணத்திலெ…. அதான் தெரியுமெ.. சீதையை ராவணன் தூக்கினது மாற்றன் தோட்டத்து கதை தானே… ஹலோ.. ஹலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க… இந்த மாற்றான் கருத்தையும் கொஞ்சம் கேளுங்க…

நான் சொல்ல வந்தது, இந்திரசித்தன் கதை. அனுமன் களேபரம் செய்து விளம்பர இடைவேளையில் இருக்கும் போது, இந்திரசித்தன் கிளம்புகிறார். எல்லா திசைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவன். ஆனா செத்த நேரம் அங்கே இங்கே என்று கிடக்கும் செத்த உடல்களைப் பார்க்கிறார். அட.. அனுமனது பேராற்றல் மிகவும் சிறந்தது என்கிறாராம். கேட்ட பார்ட்டிங்க எல்லாம் ஆடியே போயிட்டாங்களாம். கம்பர் எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிக்கு பாட்டு எழுதி இருக்கார் பாத்தீகளா??

சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன்
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார்.

மீண்டும் தேடி வருவேன்.

இந்தக் குதி குதிக்கிறான்


பெயரை வைத்து சிலரும்… பெயரை மாற்றி வைத்து சிலரும் நல்ல காசு சம்பாதித்து வருகிறார்கள்.. ஆனால் பேருக்கு ஏற்ற மாதிரி இருக்காகளா என்பது தான் 3G கோடி கேள்வி..

என் முகத்தைப் பாத்தா கிருஷ்ணன் மாதிரி இருந்து எனக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்திருப்பாகள் என்று நான் சந்தோஷமா நினைத்துக் கொண்டிருக்க… சமீபத்தில் என்னைப் பார்த்த ஒரு நபர் பூதம் மாதிரி இருக்கீக என்றார்… என்னது என்று நான் கேட்க, மாத்ரு பூதம் என்று வேறு சொல்லி வைத்தார்…

இதை நானும் முகநூலில் போட்டு வைக்க நடுராத்தியில் “எனக்கு ஸ்டார்டிங்க் டிரபிள்..என்ன செய்யலாம்..” இப்படி கேள்வி எல்லாம் வருது. 

தந்தை பெரியார் அவர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் நிதி வாங்கித்தான் பெயர் வைப்பாராம். இங்கு அந்தமானில் உடற்கல்வி ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்… கொஞ்ச நேரம் அவரிடம் பேசி அவரின் பின்புலம் பிறந்து வளர்ந்த சூழல் இதெல்லாம் கேட்டபிறகு பணம் வாங்காது பெயர் வைத்தாராம்..

பெயருக்கு பொருத்தமாய் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னை அன்னா பொறியியல் கல்லூரியில் Soil Mechanics பாடம் எடுப்பவர் பூமிநாதன். Water Resources எடுப்பவர் கார்மேகம்…. Auto CAD ல் வல்லவர் சாந்தக்குமார்.. சாந்தமே வடிவாய்…

குள்ளமாய் இருக்கும் ஒரு டைரக்ட்ருக்கு கஜேந்திரன் என்று பெயர்.. அகத்தியர் பெருரும் குள்ள முனிக்குத் தானே இருக்கு.. பார்த்திபன் ஒரு படத்தில் இவரை (இவரையுமா??) படாத பாடு படுத்துவார். அப்பொ அவர் குதி குதி என்று குதிப்பார்.. அதுவும் காமெடியாகத்தான் இருக்கும்.

அது சரி…சாதாரண மனிதர்கள் கொஞ்சம் சரக்கு அடிச்சா அவங்களை மிதக்கிறான் என்கிறார்கள்.. அதுவே இன்னும் கூடுதல் ரவுண்டு கட்டி விட்டால் பறக்கிறான் என்பார்கள்..

மரம் ஏறும் மீனை சமீபத்தில் ஒரு படத்தின் பாட்டில் அழகாய் காட்டி இருந்தார்கள்… அந்தமானில் வேகமாய் போகும் கப்பல் பயணத்தின் போது பறக்கும் மீங்களையும் பாக்கலாம். சிறிது தூரம் பறந்து கப்பல் கூடவே வந்து மறுபடியும் கடலில் விழும்… எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது.. (ஆமா…இதையே 26 வருஷமா பாத்து வந்தாலும் கூட..)

அப்புறம்… இஞ்சி திங்கு கொரங்கு பாத்திருப்பீங்க…. (அதுக்காக Facebool ல போய் என்னோட Profile photo எல்லாம் பாக்காதீங்க..) ஆனா…நண்டு தின்னும் குரங்கு பத்தி தெரியுமா?? கிரேட் நிகோபார் தீவில் இருக்கிறது… உலகில் அரிய வகை இனம் என்று அறியப் பட்டிருக்கிறதாம் அது.

இன்னொரு பறக்கும் செய்தி. பெரும்பாலும் வௌவால்கள் பாழடைந்த கோவில்களில் பாக்கலாம்.. பெரிய கழுகு போன்ற அளவில் லிட்டில் அந்தமான் தீவின் டுகாங்க்கிரீக் பகுதியில் பாக்கலாம்..கூட்டம் கூட்டமா…

எல்லாம் சரி..எதுக்கு இந்த குதி குதிக்கிறே?? … திரும்பினால், கம்பர் ஏதோ சொல்ல வருகிறார்… இவ்வளவு கேட்டவங்க இதையும் தான் கேளுங்களேன். அனுமான் ஒரு மலையின் மேல் கால் வைக்கிறார். அந்த மலை அப்படியே சாய்கிறது. அந்த மலையின் மறு பக்கத்தில் இருந்த அரசர்களும் வீரர்களும் அப்படியே வானதிற்கு குதிக்கிறார்கள். அதைப் பாத்தா எதிரிகள் காலை வெட்ட வரும் போது வீரர்கள் குதி குதி என்று குதிக்கிறது மாதிரி இருக்கு என்கிறார் கம்பர்.

தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய்நெரிந்து சிந்த தூக்குறு தொலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் தாக்குறு செருவில் நேரார் தாள் அற வீசத் தாவி மேக்குற விசைத்தார் என்னப் பொலிந்தனர் விஞ்சை வேந்தர். அது

சரி..இதெப் படிச்சிட்டு நீங்க என்ன குதி குதிக்கப் போறீங்களோ… யார் கண்டா???

எங்கே போறீங்க..???


ஏதாவது முக்கியமான வேலையா நீங்க வீட்டைவிட்டு கெளம்பும் போது இப்படி யாராவது உங்களை “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு வம்பு செய்தால்… உங்களுக்கு
ஏகமாய் கோபம் வந்திருக்கும்.

நீங்கள் தீவிர பெரியார் பக்தராக இருந்தால் உங்களுக்கு
ஒன்றும் பிரச்சினை இல்லை தான்.

சரி இந்த சகுனம் பாக்குறது சரிதானா?? இதில் என்ன சங்கதி இருக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். [எதுக்குன்னு கேக்கிறீகளா?? சும்மா உங்களுக்கு ஒரு posting
எழுதத்தான்].

முதலில் இப்படி “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு சங்கடம்
செய்பவர்கள் யார்? என்று அலசலாம்.

1. உங்கள் வீட்டில் இருப்பவர்கள்;
2. பக்கத்து வீடு எதிர் வீடு இப்படி எங்காவது இருப்பவர்கள்; 3. திடீரென்று வரும் உங்கள் விசுவாசிகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னன்னா, இவர்கள் மூவருமே உங்கள் நல்லதுக்கு பாடுபடுபவர்கள். உங்கள் நல
விரும்பிகள். ஒரு போதும் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத
ஒருவரோ அல்லது உங்கள் எதிரியோ உங்களை வழிமறிச்சி எங்கே போறீங்கன்னு உங்கள் உயிரை
கண்டிப்பா எடுக்க மாட்டாக..

அடுத்து ஏன் இந்த கேள்வி வருது?? சில காரணங்கள்; அதையும் தான் பட்டியல் போடலாமே…

1.      நீங்க ஏதோ ரகசியமான வேலை செய்யப் போறீங்க.. (அது சின்ன வீடு சம்பந்தமாகவும் இருக்கலாம்.. அலலது ஐ ஏ எஸ் பரீட்சை எழுதுவதாகவும் இருக்கலாம்.)

2.    நீங்க போகப் போற இடம் செய்யப் போற வேலை பத்தி கேக்கிறவங்களுக்கு தெரியல்லை.

3.     உங்கள் அவசரம்… பரபரப்பு… டிப்டாப் டிரஸ் சொல்லுது ஏதோ எங்கோ போகப்போறீங்கன்னு..

ஆக மொத்தத்தில் உங்கள் நல விரும்பிகளுக்குக் கூட
தெரியாமல் நீங்கள் ஏதோ செய்ய நினைக்க அந்த குட்டு “எங்கே போறீங்க?” என்ற கேள்விக்கு கோபம் தான் பதிலாய் வெடிக்கிறது.

என் முடிவு : நம் முன்னோர்கள் எதையும் எல்லாரிடமும் கலந்து பேசி செய்வதை வலியிறுத்தத்தான் இந்த
சாத்திரம் வந்திருக்கும் என்பது.

நீதி:
1.எதையும் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கலந்து பேசி
செய்ங்க.
2.அப்படி முடியாட்டி இனிமேல் யாராவது “எங்கே போறீங்க?”ன்னு கேட்டா… போற காரியம் விளங்கின
மாதிரி தான்னு கோபப் படாதீங்க…

அதுசரி… ஹலோ…இப்போ எங்கே போறீங்க???

எங்கே போறீங்க..???


ஏதாவது முக்கியமான வேலையா நீங்க வீட்டைவிட்டு கெளம்பும் போது இப்படி யாராவது உங்களை “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு வம்பு செய்தால்… உங்களுக்கு
ஏகமாய் கோபம் வந்திருக்கும்.

நீங்கள் தீவிர பெரியார் பக்தராக இருந்தால் உங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை தான்.

சரி இந்த சகுனம் பாக்குறது சரிதானா?? இதில் என்ன சங்கதி இருக்கு? கொஞ்சம் யோசிச்சுப் பாத்தேன். [எதுக்குன்னு கேக்கிறீகளா?? சும்மா உங்களுக்கு ஒரு போஸ்டிங்க்
எழுதத்தான்].

முதலில் இப்படி “எங்கே போறீங்க?- ன்னு கேட்டு சங்கடம் செய்பவர்கள் யார்? என்று அலசலாம்.

1. உங்கள் வீட்டில் இருப்பவர்கள்;
2. பக்கத்து வீடு எதிர் வீடு இப்படி எங்காவது இருப்பவர்கள்;
3. திடீரென்று வரும் உங்கள் விசுவாசிகள்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னன்னா, இவர்கள் மூவருமே உங்கள் நல்லதுக்கு பாடுபடுபவர்கள். உங்கள் நல விரும்பிகள். ஒரு போதும் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரோ அல்லது உங்கள் எதிரியோ உங்களை வழிமறிச்சி எங்கே போறீங்கன்னு உங்கள் உயிரை கண்டிப்பா எடுக்க மாட்டாக..

அடுத்து ஏன் இந்த கேள்வி வருது?? சில காரணங்கள்; அதையும் தான் பட்டியல் போடலாமே…

1.நீங்க ஏதோ ரகசியமான வேலை செய்யப் போறீங்க.. (அது சின்ன வீடு சம்பந்தமாகவும் இருக்கலாம்.. அலலது ஐ ஏ எஸ் பரீட்சை எழுதுவதாகவும் இருக்கலாம்.)
2.நீங்க போகப் போற இடம் செய்யப் போற வேலை பத்தி கேக்கிறவங்களுக்கு தெரியல்லை.
3.உங்கள் அவசரம்… பரபரப்பு… டிப்டாப் டிரஸ் சொல்லுது.. ஏதோ எங்கோ போகப் போறீங்கன்னு..

ஆக மொத்தத்தில் உங்கள் நல விரும்பிகளுக்குக் கூட தெரியாமல் நீங்கள் ஏதோ செய்ய நினைக்க, அந்த குட்டு “எங்கே போறீங்க?” என்ற கேள்விக்கு கோபம் தான் பதிலாய் வெடிக்கிறது.

என் முடிவு : நம் முன்னோர்கள் எதையும் எல்லாரிடமும் கலந்து பேசி செய்வதை வலியிறுத்தத்தான் இந்த சாத்திரம் வந்திருக்கும் என்பது.

நீதி:
1.எதையும் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் கலந்து பேசி செய்ங்க.
2.அப்படி முடியாட்டி இனிமேல் யாராவது “எங்கே போறீங்க?”ன்னு கேட்டா… போற காரியம் விளங்கின மாதிரி தான்னு கோபப் படாதீங்க…

அதுசரி… ஹலோ…இப்போ எங்கே போறீங்க???