துளித் துளித் துளித் துளி மழைத்துளி



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17]

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)

கனவுகள் இல்லை…


கனவுகள் என்பது நமக்கு இயற்கை தந்திருக்கும் Free Channel திரைப்படம். அதில் எப்பேற்பட்ட படம் போடுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத புதிர். சில சமயம் ஆன்மீகம், சில நேரங்களில் அந்தரங்கம், இன்னும் சில நாட்களில் அசிங்கங்கள். காமெடிகளும் திகில்களும் கூட பல நேரங்களில் கலக்கும். 

கனவு – ஏன்? எதற்கு? எப்படி? என்று சுஜாதா எழுதவில்லையே தவிர…அதன் ஆய்வுகள் இன்னும் நடந்தமேனியாய்த்தான் இருக்கின்றன.

 எந்த நேரத்தில் கனவு வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில், எப்பொ கனவு வந்தா, என்ன நடக்கும் என்று சாத்திரம் கணித்து வைத்துள்ளதாம்.. பின்னெ இருக்காதா… வெறும் ஏடும் எழுத்தாணி மட்டும் வச்சிகிட்டு என்ன நேரத்தில் சந்திர சூரிய கிரகணம் வரும் என்று சொன்ன ஆட்கள் அல்லவா???

 ராத்திரி ஒரு மணிக்கு மேலே கனவு வருதா, அது பலிக்க நீங்கள் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

 வேறு நல்ல சொப்பனம் என்ன என்ன என்ற கேள்விக்கு பல்லி விழும் பலன் மாதிரி காலண்டர் பின்னாடி இருந்தா நல்லா இருக்குமே… இப்படித்தான் பல்லி தலையில் விழுந்தால் மரணம் என்று போட்டிருந்தார்கள்.. உண்மை தான் என் தலையில் விழுந்து தரையில் விழுந்த அந்த பல்லி பரிதாபமாய் செத்துப் போனது..

 பெரும்பாலும் கனவுகளுக்கு நல்ல நம்பிக்கையூட்டும் பலன் தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. அதன் தொகுப்பு பார்க்கணுமா.. இதை கிளிக் செய்யுங்கள் : http://ularuvaayan.blogspot.com/2009/08/blog-post_8674.html

பொல்லாத சொப்பனங்கள் எவை எவை என்று கட்டபொம்மன் படத்தில் ஜக்கம்மா பாடும் பாட்டு வச்சி தெரிஞ்சிக்கலாம்.

 பலான கனவுகள் விடாம வருதா?? பக்கத்து வீட்டில் அழகான பொண்ணு இருக்கனும்..அதன் மேல் உங்களுக்கு ஒரு கண்ணும் இருக்கணும்.. நேரில் நீங்க கம்முன்னு இருக்க, உங்க நிறைவேறாத ஆசை கனவில்..ரைட்டா?? ஹலோ..போங்க… கல்யாணம் வேணும்னு கேளுங்க.

 ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா???…ஆன்மீகம் பக்கம் திரும்புங்க…

 கனவுக் காட்சிகளில் சினிமாப் பாடல்கள் பிரபலம். பொன்மகள் வந்தாள் என்ற பழைய பாடல் பத்து பைசாவை வைத்து பணம் காய்க்கும் மரம் வைத்தே காணும் கனவு…. கிராமத்து நாயகி ஸ்விட்சர்லாந்து போகணுமா..எடு ஒரு கனவு சீன்..இது தான் இன்றைய டெக்னிக்.

 வைரமுத்துவின் வைர வரிகள்:

காதலன்: நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை….
காதலி: நான் தூங்கவில்லை..கனவுகள் இல்லை..

 வாவ்..என்ன ஒரு கற்பனை..தூங்காமல் எப்படி இருக்க முடியும்?? இடிக்கிறதே… ஆமா…இதே டயலாக் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே??

 அப்படியே தூங்கிப்போனேன்.. கனவில் கம்பர் வந்தார்… (கனவில் கம்பர் வந்தால், விரைவில் ஒரு போஸ்டிங் போடுவார் என்று இருக்குமோ..) வைரமுத்து என் ராமாயணத்தில் சுட்ட சேதி தான் அது என்றார்.. விடியற்காலை கனவு.. கண்டிப்பா உண்மை இருக்குமோ… இருந்தது.

 மீண்டும் அதே அசோகவனம்.. அதே அழகான சீதையும் அழகான ராட்ஷசி திரிசடையும்.

திரிசடை சொல்கிறாள் சீதையிடம்… எனக்கு வந்த கனவு பத்தி சொல்கிறேன் கேள்…ம்… நீ தான் தூங்குறதே இல்லெ…உனக்கு எப்படி கனவு வரும்??

 ஏன் தூங்கலை என்று யோசித்தால்…அது வேல் போன்ற விழியாம்…என் விழியும் என் வாளும் சந்தித்தால் என்ற கற்பனையும் காப்பி தானா?? அப்பொ வேலும் வேலும் சண்டை போட்டு மேலும் விபரீதம் வரக்கூடாது என்பதற்காய் சீதை தூங்கலியாம்…யப்பா…கம்பரே…சும்மா..கலக்கிறீங்க தலைவரே..

 துயில்இலை ஆதலின் கனவு தோன்றல
அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யான விளம்பக் கேட்டியால்.

 திரிசடை சொல்லும் கூடுதல் சேதிகள்: குற்றமுள்ள நாடு இது.. ஆனா கனவு குற்றம் இல்லாதது. சூரியன் எப்படி பளிச்சுன்னு இருக்குமோ.. அப்படி கனவு பலிக்கும்.

 அதுசரி சமீபத்தில் உங்களுக்கு வந்தது நல்ல கனவா?? பொல்லாத சொப்பனமா??