அரசு இயந்திரம்


govt 2

”காலணா காசு என்றாலும், கவர்ன்மெண்ட் காசு” என்று சொன்னார்கள் ஒரு காலத்தில். அதே காலணா சம்பளம் அரையணா என்று ஒசந்தவுடன், “அரையணா சம்பளம் என்றாலும் அரசாங்கச் சம்பளம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். கவர்ன்மெண்ட் ஸ்கூலா?, நோ எண்ட்ரி, அரசு பஸ்ஸா…? வேண்டாமெ,,, தர்மாஸ்பத்திரி…? லேது.. பில்குல் லேது என்று மக்கள் சொன்னாலும் இந்த அரசு வர்க்கத்திற்க்கு கல்யாண மார்க்கெட்டில் மட்டும் நல்ல பேரு.. (அவ்வப்போது ஃபாரின், ஐடி மாப்பிள்ளைகள் முந்திக் கொண்டு போனாலும் கூட) முதல் சாய்ஸ் நமக்குத்தான். (நான் ஒரு அரசு ஊழியன் என்று சொல்லவும் வேண்டுமோ) ஆகஸ்ட் 15 ல் மோடி அவர்கள் தன்னை, ப்ரதான் மந்திரி என்பதை விட ப்ரதான் சேவக் என்று சொல்லவே விரும்புவதாய்ச் சொன்னார். அப்படிப் பாத்தா, டெபுடி சீஃப் இஞ்ஜினியரான அடியேன், உப முக்ய சேவக் என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டும்.

நாமெல்லாம் சேர்ந்து தான் அரசாங்கம். நமக்காகத்தானே அரசு என்பதெல்லாம், ஏன் இன்னும் நம் மனதில் ஏறவில்லை? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. 100 ஆண்டுகளுக்கு மேலாய் அடிமைப்பட்ட காரணம் என்று சொன்னாலும் கூட, மனமாற்றம், விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கூட தென்படலையே!! கல்லூரியில் படிக்கும் போது, ஹஸ்டலில் ஏதோ பிரச்சினை என்று கும்பலாய் வார்டன் ஆஃபீஸை உடைத்தோம். உடைத்த பணத்தை கணக்கு செய்து, அடுத்த மாசம் டிவைடிங் சிஸ்டத்தில் நம் மெஸ் பில்லோடு வந்து விட்டது.

நாம் உடைக்கும், எரிக்கும் பஸ்களும், உடைக்கும் கடைகளும், சாலை மறியல்களும், ஏதோ ஒரு வகையில் அரசுக்கு நஷ்டம் தானே தரும்!. அது பின்னர் வேறு வகையில், நம் தலையில் தானே விடியும்?. கவர்ன்மெண்ட் தானே என்று எவ்வளவு தடவை சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்போதும் அரசு வேறு, நாம் வேறு என்று தானே நினைக்கிறோம். நாமே அரசை ஏமாத்தி, கோல்மால்கள் செய்து, (நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு) அப்புறம் இலவசங்கள் பஞ்சப்படிகள் வாங்கிட்டு, விலைவாசியும் ஏத்திகிட்டு கடைசியில் என்ன இலாபம் நமக்கு?

என்னோட 28 வருட அரசு உத்யோகத்தில் கண்டறிந்த உண்மை இது தான். தவறான முன்னுதாரணங்களை வைத்துக்கொண்டு, அதனை மிகச் சரியாக கடைபிடிக்கும் ஒரு எந்திரன் தான், அரசு இயந்திரம். (பொதுவாய்ச் சொல்கிறேன்…யாரையும் குறிப்பிட்டு இல்லை…) சரி எது? தவறு எது? என்று தெரியாத, புதிதாய் பணிக்கு வரும் ஒரு நபர், தவறுகள் ஒன்றினை மட்டுமே கற்றுக் கொண்டு, அதனையே காலம் காலமாய் சரி என்று நம்பி வேலை செய்வோர் பலர். அதிலும் அரசு வேலையில் இரு பிரிவுகள் இருக்கும். தனக்கு ஆதாயம் தரும் வேலை. (அது பணமோ, மரியாதையோ, செல்வாக்கோ இப்படி எதுவானாலும் சரி). இன்னொன்று (தனக்கு) ஆதாயமற்ற வேலை. இதில் இந்த முதல் தர வேலை செய்ய, பலர் தயாராய் இருக்க, இரண்டாம் தர வேலை எப்போதும் ரெண்டாம் பட்சம் தான்.

அரசு, ஓர் அரசு ஊழியரிடம் எப்படி நடந்து கொள்கிறது? என்று பார்த்தாலே, அது பாமர மக்களிடமும் எப்படி நடந்து கொள்ளும்? என்பதை எளிதாய் விளங்கிக் கொண்டு விடலாம். இப்படித்தான் ஓர் அரசு ஊழியர், தன்னுடைய சர்வீஸ் புத்தகத்தைப் பார்வையிட தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கோரினார். (இவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை தான்) தனது துறை இயக்குனரிடம் கேட்டு பதில் சொல்வதாய் பதில் வந்ததாம் அவருக்கு. தன் கீழ் பணி புரியும் ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் இரண்டு காப்பிகள் தயார் செய்தல் வேண்டும். ஒன்றை அரசும், மற்றதை அரசு ஊழியரும் வைத்திருக்க வேண்டும். வருடம் ஒரு முறை அவரிடம் அரசு காட்டி கையொப்பமும் பெற வேண்டும். ஊழியரின் பிரதியினையும் அப்டேட் செய்திட வேண்டும். இது தான் அரசு நியதி. அந்த விதியையும் பின்பற்றாமல் சக ஊழியரை அடிமைகள் போன்று நடத்தும் தவறான பாவம் தொடர்வது தான் உண்மை. இத்தனைக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் சொல்ல தெரியாமல் இருப்பதும் கண்கூடு. நிலை இப்படி இருக்க பாமரன் பாடு பெரும்பாடு தான்.

அப்படி இல்லாம மாத்தி யோசிச்சி, வித்யாசமாய் சகாயம் மாதிரி இருக்கப் பாத்தா, வித்தியாசமாய்ப் பாக்கிறாய்ங்க. அரசு ஊழியர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று, அவுட் ஸோர்ஸிங் முறையைக் கொண்டு வந்தார்கள். அதன் அவுட்புட் எப்படி இருக்கு?ன்னு பாக்கலாமே. எங்க ஆஃபீஸ் செக்கிருட்டி வேலையினை அவுட் ஸோர்ஸ் செய்திருந்தோம். ஏகமாய் புகார்கள். சரி ஒரு நாள் நாம செக்கீருட்டி வேலையெப் பாப்போம்னு நைட்டு 12.30 க்கு கிளம்பினேன் வீட்டைவிட்டு. பத்து இடங்களில் போனதில் 9 இடங்களில் ஜம்மென்று தூங்கிக் கொண்டிருந்தனர். இது கூட பரவாயில்லை. நைட்டுன்னா தூங்கப் படாதா? என்று கேள்வி வேறு. நடவடிக்கை எடுத்தால், தமிழனுக்கு தமிழன் நண்டு வேலை செய்கிறான் என்று பழி வேறு. என்ன செய்ய?

govt 3

எல்லாம் மேலதிகாரி ரொம்ப மோசம். அவரு மட்டும் சரியா இருந்தா, டோட்டல் சிஸ்டம் சரியாயிடும். இப்படி ஒவ்வொருவரும் அதிகாரி புரோமோஷன் வரும் வரை தர்க்கம் பேசிட்டு, அப்புறம் எப்பொ ரிடையர்மெண்ட் வரும் என்று பென்சன் கணக்கு பாத்துட்டு இருப்பாய்ங்க.
அப்பொ அதிகாரி உண்மையில் எப்படித்தான் இருக்கணும்?

govt vadivel

இதோ உங்களுக்காய் ஒரு பட்டியல்:

1. தன் கீழே வேலை செய்யறவங்க ரொம்பவே புத்திசாலிகளா இருப்பாய்ங்க என்கிறதை நம்பணும் மொதல்லெ.
2. புகையெப் பாத்தே, எங்கே நெருப்புங்கிறதெ சூப்பரா கண்டுபிடிக்கிற அறிவாளிகள் அவங்க ஊழியர்கள் என்கிறதெச் புரிஞ்சிக்கனும்.
3. சிலசமயம் அவங்கள விடவும் அறிவாளியாவும் இருக்கலாம்.
4. ரூல்ஸ் & ரெகுலேசன்ஸ் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கனும்.
5. வெணும்ங்கிறவாளுக்கு ஒரு மாதிரிருயும், வேண்டாமெங்கிறவாளுக்கு வேற மாதிரியும் செய்யத் தெரிஞ்சிருக்கனும் (வக்கனையா வஞ்சனையா அதே ரூல்ஸ் வச்சி).
6. எதிர்க்கின்ற ஆட்களுக்கும் அவரவர் தகுதி அறிந்து பயன் தர்ர மாதிரி இருக்கனும்.
7. எப்பவும் சிரிச்ச முகத்தோடவே இருக்கலாம் தப்பில்லை.
8. பேச்சு எப்பவுமே நல்ல பேச்சாவே இருக்கனும்.

கம்பரிடமிருந்து ஏதோ நோட்டிஃபிகேஷன் வந்ததாய் நல்ல சத்தம் ஒன்று சொன்னது. உடனே போய் திறந்து பாத்தேன்..

என்னப்பா… என்னோட சங்கதியெ சுட்டு எழுதிட்டு, ரொம்ப பீத்திக்கிற மாதிரி கீதே??

இல்லை…. கம்பர் அன்னாத்தெ…. உங்க பேரு சொல்றதுக்கொசறம் இருந்தேன்…அதுக்குள்ளெ… நீங்க வந்துட்டீக… இப்பொ சொல்லிடறேன்…

ஆமாம்ப்பா…ஆமாம்…. இந்த பாய்ண்ட் எல்லாம் கம்பர் கிட்டே தான் சுட்டது. கம்பர் காலத்திலெ எங்கே கவர்ன்மெண்ட் இருந்தது? ன்னு பாக்கீகளா?

அப்பொ வேகமா போய், கிட்கிந்தா காண்டத்தின் அரசியற் படலம் பாருங்க. சுக்ரீவனுக்கு இராமன் சொன்ன அட்வைஸ்… லேசா மாத்தி யோசிச்சா… அப்படியே அரசு அதிகாரிகளுக்கும் பொருந்தும்…

அப்பொ பாட்டும் படிக்கலாமே…

புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனலங்கு என்றுன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பகையுடைச் சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன்னுரை நல்கு நாவால்.

வேறு ஏதாவது சரக்கு கெடெச்சா வாரேன்… வரட்டுமா…

மதுவும் மகளிரும்…


எத்தனைக் கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை என்
சிந்தையிலே தான் பேதமடா –

இப்படி ஒரு பாட்டு கமலஹாசன் இளமைத் துள்ளலோடு வலம் வந்த மன்மதலீலை படத்தில் வந்தது. இது ஏதோ மதுவைப் பற்றி சொல்வதாய்த் தான் மேலோட்டமாய்ப் பார்த்தால் தெரியும். ஆனால் மன்மதலீலை படம் பார்த்தவர்களுக்கு அந்த வில்லங்கமான ”அந்த” அரத்தமும் தெரிய வரும். நாம் அதில் அதீத நாட்டத்தைச் செலுத்தாமல், சற்றே பின் வாங்கி, சில பிற விவரங்களை உள்வாங்கச் செல்வோம்.

மது பற்றி தொடங்கியதால் அது பற்றி மேலும் யோசிப்போம். இன்றைய சூழலில், ”சம்பவம்” என்றால் ”கொலை” என்று எப்படி ”அருஞ்சொல் பொருள் விளக்கம்” ஆக மாறிப் போனதோ, அப்படித்தான் மதுவின் அர்த்தமும் மாறிப் போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன். மது என்ற தேன், எப்போது மயக்கம் தரும் மதுவாய் மயங்கியது என்பது பெரிய்ய கேள்விக்குறி தான்.

மதுரம், மதுகுமார், மதுமிதா, மதுகலா இப்படி எல்லாம் பெயர் வைத்துள்ளனர். அதில் இருக்கும் மதுவிற்கும், டாஸ்மாக்கில் விற்கும் மதுவிற்கும் எந்தத் தொடர்வும் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றே கருதுகிறேன்.

தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் நேரலை, கோப்புக் காட்சிகள், சித்தரிக்கப் பட்டவை இப்படியான அறிவிப்புகள் தான் அறியத் தருவர். பின்னர் விளம்பரங்களின் “நிபந்தனைக்கு உட்பட்டவை” என்று வர ஆரம்பித்தன. பின்னர் “இவை திறனாளர்களை வைத்து உருவாக்கியவை. நீங்கள் செய்ய முயல வேண்டாம்” என்ற எச்சரிக்கை எக்கச்சக்கமாய் வரத் தொடங்கின. உங்கள் முதலீடுகள் சரியான வரவைத் தராவிட்டால் எங்களைத் திட்ட வேண்டாம் என்பதை மிகவும் ”நல்ல” முறையில் சொல்லவும் வந்தன பின்னர்.

புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று போடத் தொடங்கியது தான் சிக்கலை துவக்கி விட்ட்து. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது இல்லை என்று போட ஆரம்பித்தனர். (ஆமா மது நட்டுக்கு நல்லது தானே என்று அரசு தரப்பில் வாதம் வைக்க மாட்டார்களா?) இப்போது வரும் படங்களில் விளம்பர இடைவெளியில் மட்டும் தான் இந்த புகையும் மதுவும் வராமல் இருக்கிறது. என்ன செய்ய? இப்போதைக்கு புகையும் மதுவும் தான் தெரிந்துள்ளது. இப்படியே போனால், பலான இடம் போவதை காட்டும் போது “எய்ட்ஸ் வரும் வாய்ப்பு உள்ளது” என்றும் போடலாமே. அப்புறம், கோபம் அதிகம் வருவதை காட்டும் போது, ”இரத்த அழுத்தம் வரலாம்” என்றும் போட்டு வைக்கலாம். இதேபோல் இரத்தக் களரியாய் வரும் காட்சிகளில், “கலவரங்கள் அமைதியினை நீக்கும்” என்றும் நீதி போதனைகள் காட்சிகளில் தொடரலாம்.

இதே டீவியில் நல்ல செய்திகளும் வரத் தவறுவதில்லை. ஒன்றே சொல் நன்றே சொல் அருமையான தகவல்களை அள்ளித் தருகின்றது. இதில் ஒரு நாள் கள் குடித்தல் என்பது தமிழரின் பாராம்பரிய வாழ்வு முறையில் ஒன்றுதான் என்பதாய் நன்றாய் சொன்னார். (ஒன்றே சொல். நன்றில்லாததும் சொல் என்றா பெயர் மாற்றச் சொல்ல முடியும்?). ஏகப்பட்ட சங்க காலப் பாடல் எல்லாம் சொன்னர் அவர். ஆனால் மக்களை குடித்துக் குட்டிச் சுவராய் ஆவதற்கு வழி சொல்வதாய் எனக்குப் படவில்லை. (அந்த எண்ணத்தில் கண்டிப்பாய் அவர் சொல்லி இருக்க மாட்டார் என்ற நம்ம்பிக்கை உள்ளது)

தமிழருக்கும் மதுவுக்கும் ஆதி காலத்தில் இருக்கும் பழக்கம் பற்றி யாராவது சொன்னாலோ, அல்லது குடிப் பழக்கம் தவறு என்று சொன்னாலும் கூட உடனே எல்லாருக்கும் சோம சுரா போன்ற திராவகங்களை தேவர்கள் கூட அருந்தினர் (தேவர்களை நம்பாதவர்கள் கூட) என்றும் சொல்ல ஆரம்பிப்பர். போதாக் குறைக்கு ஆதி மகளிரையும் வம்புக்கு இழுக்கின்றனர். பொதுவாக அதியமான், ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதை தான் சொல்லுவர். (நெல்லிக்காய் தானே இருக்கும். நெல்லிக்கனி இருக்குமா என்று “அப்பா எனக்கு ஒரு சந்தேகம்” நிகழ்சியில் அந்த அப்பா வயிற்றில் குத்து வாங்கியது பெட்டிச் செய்தி).

சமீப காலமாய் அதியமான் ஔவை பற்றி இன்னொரு செய்தியும் பிரபலமாகி வருகிறது. மது தொடர்பானது தான் அதுவும். அரசனுக்கு ஒரு மடக்கு மது கிடைத்தால், அதை ஔவைக்கே வழங்கிடுவாராம். ஒரு கோப்பை கிடைத்தால் அரசன் பாதி ஔவை பாதி என்று பகிர்ந்து கொள்வாரம். சொல்ல வரும் நீதி: மகளிரும் மது அருந்தினர் என்பதாய். என்னால் இதை ஏற்க முடியவில்லை. பிச்சை புகினும் கற்கை நன்று எனச் சொன்ன ஔவையாக அந்த ஔவை இருக்காது.

எனக்கு என்னமோ அரசன் கொடுப்பதில் வல்லவன், என்று சொல்வதாய் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தான் தெரிகின்றது. கொடுப்பது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கும். என்ன தருகிறோம்? எப்படி தருகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத யோசனை. குளிரால் நடுங்கும் மயிலுக்கு போர்வை கொடுத்தவரை வள்ளல் பட்டியலில் வைத்துள்ளோம். மயிலுக்கு போர்வை தேவையா என்ன? அதே போல் முல்லைக்கு தேர் குடுத்தவரும் கொஞ்சம் அதிகப் பிரசங்கத்தனமாய் தான் படுகிறது. இதிலும் தரும் பொருளை விட தரும் எண்ணம் தான் முக்கியம். அதே போல், மதுவே கிடைத்தாலும் ஔவைக்கு தந்து மகிழ்வார் என்று நாம் ஏன் பொருள் கொள்ளக் கூடாது?

சினிமாவில் மட்டுமே புகை பிடிக்கும், மது அருந்தும் மகளிரை பார்த்த எனக்கு நேரில் அப்படி பார்த்த போது பகீர் என்று தான் இருந்தது. கொல்கொத்தாவில் தான் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு நண்பரின் அழைப்பினை ஏற்று நட்சத்திர உணவகம் சென்றோம் குடும்பத்தோடு. மகளிருக்கு என்ன மது தேவை என்று கேட்ட போது தான், இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்ற சேதி தெரிந்தது..

வள்ளுவரும் கள்ளுக் குடியை விட்டொழியுங்கள் என்கிறார். நம்மாளுங்க புரிந்து கொள்ளும் நீதி, வள்ளுவர் காலத்திலும் சரக்கு அடிக்கும் பழக்கம் இருந்திருக்கு என்பதைத்தான். தமிழருவி மணியன் இந்தச் சூழலினை அழகாய் கையாள்கிறார். கள் குடிப்பது எல்லாம் நடப்பது தான் என்று இருந்த காலத்தில், கள் குடிக்காதே என்று சொன்ன வள்ளுவரை கலக்க்காரன் என்று புகழ்கிறார்.

கமபன் மட்டும் கலகக்காரன் இல்லையா? பல்லாயிரக் கணக்கான தாரங்களை மணந்து வாழும் அரச குடும்பத்தில் பிறந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைசி வரை நிலைநாட்ட கம்பன் காப்பியம் முழுதுமே கலக்கலாய் செய்வதைப் பார்க்கலாம். மூலக் கதையில் கால் பட்டு அகலிகை சாபம் நீங்கியதாய் இருந்தாலும், இந்த கலகக்காரக் கம்பன், ராமனின் கால் தூசு பட்டே அகலிகை மலர்ந்ததாய்க் கூறியதைப் பார்க்கலாம்..

அதுசரி.. மகளிரும் மதுவும் பற்றி அதே கம்பர் ஏதும் சொல்லவில்லையா? என்ற கேள்வி உங்களில் அநேகம் நபர்களுக்கு வந்திருக்குமே??

உங்களுக்கு என்ன? சாதாரணமாய்ச் சொல்லிட்டீங்க. கம்பரிடம் போராடி ஒரு பாட்டு தேடிக் கொண்டு வந்திருக்கிறேன்.

வனவாசம் முடிந்த பிறகு அயோத்தி திரும்புகிறார் இராமன். இராமன் வருகையினை எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எதிர் கொண்டனர் என்பதை விளக்கும் பாடல் தான், நம் நண்பர் கம்பர் தந்த பாடல்.

இராமனைப் பார்க்க வந்தவர்களில் பலர் பலரகம். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதை கம்பர் ரகவாரியாய்ப் பிரித்துப் பார்க்கின்றார். அவர்களுக்கு ராமன் எப்படித் தெரிந்தான் என்பதைச் சொல்லத்தான். இதுவரை ராமனைப் பார்க்காது இருந்து முதல் முதலாய் பார்ப்பவர்க்கு (14 ஆண்டுக்கு உள்ளான விடலைப் பருவத்தின்ருக்கு) தாயைப் பார்த்த உணர்வை ராமன் முகம் தந்ததாம். தன்னை அன்புப் பெருக்கோடு பார்த்த அனைவருக்கும் அமிழ்தம் கிடைத்தது போல் இருந்ததாம். முனிவர்களுக்கு இறைவனே காட்சி அளித்தது போல் இருந்த்தாம்.

நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் செய்தி இப்போது தான் வருகிறது. இராமனைத் தரிசிக்க அழகிய விழிகளை உடைய பெண்டிரும் தான் வந்திருந்தனர். அவர்கள் கண்களுக்கு ராமன் எப்படி இருந்தார் தெரியுமா?? தெளிவே இல்லாத மகிழ்ச்சியினைத் தரும் இனிய மதுவின் தெளிவு போல் இருந்ததாம்.

வழக்கம் போல் மகளிர் கம்ப காலத்திலும் மது அருந்தினர். எனவே தான் இப்படி கம்பர் சொல்லி இருக்கிறார் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிடக் கூடாது. மதுவை இங்கு சுட்டிக் காட்டுவதின் உள் நோக்கம் என்ன? மது என்ன செய்யும்? உற்சாகமாய் ஆடவைக்கும். ஆனால் மது ஆடாது. இராமனும் அப்படித்தான். ஆட்டுவிப்பான். ஆனால் ஆட மாட்டான். (இப்படி கம்பர் நினைத்திருப்பாரோ).

வேதியியல் படிக்கும் போது கிரியாஊக்கி என்று ஒன்று வரும். ஒரு இராசாயண மாற்றத்தைச் செய்யும். ஆனால் அது ஒன்றும் ஆகாது. விசில்ப்ளோவர் என்பதினை ஊதுகுழல் ஊதுவோர் என்று மொழி பெயர்ப்பு செய்தது சரியா என்று என் கல்லூரி நண்பர் அசோகன் கேட்டிருந்தார். என் மனதிற்கு கிரியை ஊக்கி என்று சொல்வது தான் சரியாய்ப் படுகிறது. அவரும் செயல் படுவார் சமூகத்தையும் செயல் படச் செய்வார்.

இதோ அந்தப் பாட்டும் உங்கள் பார்வைக்கு:

எளிவரும் உயிர்கட்க்கெல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்.
ஒளி வரப் பிறந்த்த ஒத்தான் உலகினுக்கு ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். .

சரி.. ராமனை இனி கிரியாஊக்கி என்று அழைக்கலாமா? அல்லது கிரியைஊக்கி என்று விளிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.

புகை நமக்குப் பகையா???


 [முன் குறிப்பு: நான் இன்னமும் புகை பிடிக்கும் கெட்ட பழக்கத்தை ஆரம்பிக்க வில்லை]

புகை பகையா??

இதென்ன கேள்வி? எந்தப் படம் பாத்தாலும், இந்த அறிவுரை தான், நடு நடுவுலே வருதே…??

புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு என்று போட்டே விக்கிறாங்க… Cancer Danger Poison என்கின்ற பெயரிலும் புகைகள் செமையாய் விற்பனை ஆகின்றன. நம்ம ஆட்களுக்கு எது வேண்டாம்ணு சொல்றோமோ அதில் தான் ஈர்ப்பு அதிகம் ஆகும் போலத் தெரியுது…. அதை மறைக்கிறார்களோ அதை திருட்டுத் தனமாய் எட்டிப் பார்ப்பதில் அலாதி சுகம் தான். (எந்த விஷயத்தையும் அளவோடு தான் வச்சிக்கனுமாம்… Advice, ஜாலி, குரூப், போஸ்டிங்க், கிண்டல்,காதலி, சில்மிஷங்கள் etc etc..etc)

அதான் நம்ம பியாரிலாலும் அடிக்கடி வந்து ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டுக்கு மேல் போஸ்டிங்க் வேண்டவே வேண்டாம் என்கிறார்.

சொல்ல வந்த ஒரு விஷயத்தெ சொல்லாம ஜவ்வு மாதிரி இழுத்தா… என்ன இது ராமாயணம் மாதிரி இழுக்குறே என்பார்கள்… (அப்போ ராமாயணம் பத்தியே எழுதும் போது இழுவைக்கு குறை இருக்குமா என்ன??)

இழுவை… புகைக்கும் தொடர்பு உள்ளதாம். இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை..இறுதி என்பது சிகரெட் முடியும் வரையா??. உயிர் போகும் வரை – இது தான் அதன் அர்த்தமாய் இருக்கனும்.

ஒரு சட்டைப்பையில் விவேக், சிகரெட் இருப்பதை மோந்து பாத்து… ஐய்யயோ… அந்த சிகரெட்டா… குப்பை லாரி நாத்தம் வருமேடா…. உன் பக்கத்தில் உன் மனைவி எப்படி வருவா?? குழந்தை எப்படி வரும் ? என்பார்.

சிகரெட்டே இப்படி என்றால், இந்த பீடி சுருட்டு ஆகியவைகள் இன்னும் மோசம்.

2000 வாக்கில் லண்டன் BBC தமிழோசையில் டாக்டர் கலாம் அவர்களிடம், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்டார்கள். அவர் சொன்ன பதில் இன்னும் என் காதில் இருக்கிறது. லஞ்சம் என்பது காட்டாற்று வெள்ளம். அதை மேலேயே தடுத்து அணைகட்ட வேண்டும். கீழே தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

எனக்கு ஒரு விஷயம் புரியலை.. இந்த புகையை தடை செய்து விட்டால்… என்ன குடியா முழுகி விடும்??

சர்க்காருக்கு வருவாய் இழப்பு…

அப்போ இதே விட வருமானம் வரும் பல….ன தொழிலை அரசே ஏற்று நடத்தலாமா??? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு.

வினோபாஜீயிடம் சிலர் கேட்டார்களாம், நமது விவசாயிகளும் பணத்துக்குகாகத் தானே உழைக்கிறார்கள்?.. வினோபாவின் பதில் இதோ: பணம் மட்டும் தான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்கள் நெல் கோதுமைக்குப் பதிலாக கஞ்சா தான் பயிர் செய்திருப்பார்கள். அப்படி இல்லையே..

அப்போ Tamil Nadu Agricutural Unversity மாதிரி Tamil Nadu கஞ்சா Unversity தொடங்கி, அதில் நம்ம கஞ்சா கருப்பை விசி ஆக்கியிரலாமா என்ன??

பாக்கப் போனா, புகையினால் அரசுக்கு வரும் வருமானத்தை விட புகை சார்ந்து வரும் நோய்களுக்கு அரசு அதிகம் செலவு செய்கிறது என்பது தான் உண்மை…

இந்த புகை பத்தி சொன்னா நம்ம பகை ஆயிடுவோம்… அவங்க பாட்டுக்கு புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆத்தட்டும்…நம்ம பாட்டுக்கு இதிலே ஏதும் புதுக் கவிதை இருக்குதான்னு தேடலாம். 

இருவிரல்

நடுவில்

திடீரெனத்

தோன்றும்

ஆறாம் விரல்.

சூப்பரா இருக்கில்லே.. ஆனா கூடவே பிறந்த விரல் சுடாது. இந்த ஆறாம் விரல் அல்ப நேரத்துக்கு அப்புறம் சுடும்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?? கம்பர் ஒரு புகை ஆதரவாளர்… ஒரு புகை இல்லை… நாலு புகைக்கு ஆதரவு தருகிறார்… ஒரு புகையே இவ்வளவு குமட்டும் போது நாலு புகை.. தாங்குமடா பூமி..?? 

நீங்க நினைக்கும் புகை வேறு… கம்பர் நேசிக்கும் புகை வேறு… அறம் பொருள் இன்பம் வீடு இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு புகை விரும்பியாம்..

ஒண்ணும் புரியலையே..!!!

வாங்க அப்படியே அயோத்திக்கு ஓப்பன் ஜீப்புலே போவோம்.. அப்பத்தான் எல்லா புகை பத்தியும் உணரலாம்.

 அயோத்தி ஒரே புகை மண்டலமா இருந்ததாம்.

அன்னதானம் செய்யும் பொருட்டு சமையல் செய்து..செய்து..செய்து..அதன் புகை (அறப்புகை)

கரும்பு ஆலையில் இருந்து வரும் வாசம் மிகுந்த  புகை (Admissible pollutant as per the Pollution Control norms) .. இது பொருள் சார்ந்த புகை.

பெண்கள் கூந்தலுக்கு இடும் அகிலின் புகை (சகிலா என்று மாத்தி யோசிக்காதீங்க)..இது இன்பத்தின் புகை

வேள்வியால் உண்டாகும் புகை.. இது தான் பெரிய்ய்ய்ய்ய்ய்ய வீடு சேர உதவும் புகை.

 இப்படி அந்த அயோத்தியே எப்போதும் புகை மண்டலமா இருந்ததாம்..

 அகில் இடும் புகை அட்டில் இடும் புகை

நகில் இன் ஆலை நறும் புகை நான் மறை

புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்

முகிலின் விம்மி முயங்கின எங்கணும்.

 இப்போ சொல்லுங்க. இந்த புகை.. பகையா??

இதில் வரும் அறம் பொருள் இன்பம் வீடு மேட்டர் மட்டும் சுகி சிவம் பேச்சிலிருந்து ஒட்டு கேட்டு சுட்டது.

இழுக்க இழுக்க இன்பம் (கம்ப)ராமாயணம் இறுதிப் பாடல் வரை… இது எனக்கு… உங்களுக்கு எப்படி இருக்கு???