தெருவெல்லாமே நாடுதான்..


தெருவெல்லாம் நாடு மாதிரி….

இளமையில் கல்.. என்பார்கள்.. எனக்கு என்னமோ இளமையில் பார்த்த சினிமா கல் மாதிரி பதிந்து போயிருக்கு. அப்பொ எல்லாம் வீடுகளில் டிவி இலவசமாய் இல்லாத காலம். இலவசமாய் படம் பார்க்க அப்பப்பொ வாய்ப்பு கிடைக்கும். ரஷ்யாவைப் பற்றி காட்டுவார்கள். கூடவே கறுப்பு வெள்ளை தமிழ் படமும் காட்டுவார்கள். அப்படி பாத்த ஒரு படம் தான் “புன்னகை”. உண்மையோடு போராடும் ஒரு சிவில் இஞ்சினியரின் வாழ்க்கை தான் படக் கரு. வருங்காலத்தில் சிவில் இஞ்சினியர் ஆகப் போகிறோம் என்பதாலோ என்னவோ, அந்தப் படம் என்னை அந்த அளவுக்கு கவர்ந்து விட்டது.

நேற்று நண்பர் ஒருவர், வாங்களேன் துப்பாக்கி படம் பாக்கலாம் என்றார். அப்பொத்தான் சன் லைஃப்பில் புன்னகை படம் ஆரம்பித்தது. நான் புன்னகையுடன் வர முடியாது என்று சொல்லி அமர்ந்தேன். பாத்த படம் தான். இருந்தாலும் அசைய விடாமல் இருக்க வைத்த பாலசந்தரின் சாமர்த்தியம். பாடல்களில் கூட ஏதோ தவற விட்டு விடுமோமோ என்ற நினைப்பில் தான் பார்க்க முடிந்தது. ஊழலற்ற வாழ்வு புன்னகை இன்றி முடியும் என்ற தகவலை (மெசேஜை) புன்னகையுடன் தெரு முழுதும் சொன்ன படம் அது.

தெருத்தெருவாய் எங்கே சுத்தினாலும் கடைசியில் (நான் கம்பரிடம் போவது போல்) வீட்டுக்கு வந்து தானே ஆகணும். எட்டாம் வகுப்பில் ஓர் ஆசிரியர் கட்டுரையினை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி ஒரு டிப்ஸ் கொடுத்தார். எந்தத் தலைப்பாக இருந்தலும் தலையெப் பிச்சிக்காமெ ஜாலியா… “நாட்டுக்கு அடிப்படை வீடு. வீடு செழிப்பாய் இருந்தால் தான் நாடு செழிப்பாய் இருக்கும். நாடு வளமோடு இருந்தால் தான் வீடும் வளமாய் இருக்கும்.” இதை பொத்தாம் பொதுவா எழுதிடனும். பொங்கல் தீபாவளி பத்தி கட்டுரை எழுதனுமா? அப்படிப்பட்ட வீடு மகிழ்வோடு இருக்க பண்டிகைகள் வேணும் என்று மொக்கை போட ஆரம்பிச்சிரலாம். காந்தி நேரு பத்தி எழுதனுமா? அத்தகைய வளமான வீட்டில் பிறந்தவர் தான் என்று ஆரம்பிச்சா போச்சி..

சரி நாமளும் கொஞ்சம் தெருவை விட்டு வீட்டுக்கு வருவோம். வெறும் செங்கல் கட்டிடம் வீடு என்ற பெயர் பெறுவதற்கு அங்கு உயிரும் அதில் சில அன்பும் கலந்து இருக்க வேண்டும். கோவை சிஐடி கல்லூரி விடுதியை முதன் முதலில் பார்த்த போது பிடிக்கவே இல்லை. ஆனா உள்ளே குடியேறிய பிறகு… அதை விட்டிப் பிரிய மனசே வரலை. ஐந்து வருஷ பிஇ யை, ஏன் தான் இப்படி நான்கு வருடம் ஆக்கினார்களோ என்ற கவலையும் தான் கடைசியில் மிஞ்சியது.

வீடுகளின் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். தின்னைகள் வைத்து கட்டிய வீடுகள் ஒரு காலம். இப்பொ பார்க்கிங்க் இருக்கா என்று தான் பாக்க வேண்டும். வீடு கட்டும் ஆட்களிடம் மட்டும் போய் ஆலோசனை சொல்லிவிட முடியாது.. அவரவர்களுக்கு ஆயிரம் தேவைகள். (சிவில் இஞ்சினியர்கள் தான் பாவம் முழி பிதுங்கி இருப்பர்). இப்படித்தான் அந்தமானில் மீட்டர் வட்டி எல்லாம் விட்டு சூப்பரா ஒரு வீடு கட்டினார் ஒருத்தர். கட்டின இடம் மேலூர் பக்கத்துலெ கிராமம். மாமியோட முகம் தெரியும் என்ற அளவுக்கு டைல்ஸ் போட்டு கட்டினார். ஒரு வருஷம் கழிச்சி வந்து பாத்து நொந்தே போனார். கிராமத்து மக்கள் அந்த வீட்டில் வைக்கோலும் எருவும் தான் அடுக்கி வைத்திருந்தனர். அவர்களின் தேவை அது தானே..

கும்பகோணத்தில் பட்டு நெசவுக்காரர்களின் வீடு நீள நீளமாய் இருக்குமாம். ஐந்து சேலை நெய்யத் தேவையான பாவுகளை வீட்டில் நீட்ட வசதியாய் நீளமாய் வீடுகள் இருக்கும். ஆனா இப்பொ போகிற போக்கைப் பாத்தால் எவ்வளவு அகலம் ரோடு போட்டாலும் பத்தாமல் போகுதே… ஆனா டோல் வாங்கிக்கிற இடம் மட்டும் இம்புட்டு அகலமா எப்படி எடம் கேட்டு வாங்குவாங்களோ!!!

அப்படி தெருத் தெருவா அழைஞ்சி அப்படியே…இலங்கைக்கு போலாமே… அங்கே தெரு எப்படி இருந்ததாம்? ஒரு தெரு தாண்டி அடுத்த தெரு போவதுக்குள்ளாற தாவு தீந்து போயிடுமாம்… அது எப்படி இருக்காம்??? ஒரு நாடு விட்டு நாடு போற மாதிரி இருக்காம்.. எல்லார் கிட்டேயும் நல்ல பேர் வாங்கும் ஒரே டைரக்டர் நம்ம கம்பர் தான். யாரையும் குறைவா சொல்லி வைக்கவில்லை…

காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றாமாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று  ஓர்  தேயத்தார்தேயம் சேறல் தெருவிலோர் தெருவில் சேறல்.

கம்பர் எப்பவும் ஓவர் பில்டப் செய்பவர் தானே… கவிஞர்களுக்கு அதுக்கு அனுமதி இருக்கு. அந்தக்காலத்தில் நாடெல்லாம் சின்னதா இருந்திருக்கும்னு நெனைச்சிக்கலாமே…

பத்த வச்சிட்டியே


Do or Die செய் அல்லது செத்துமடி என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீங்க.. வாழ்க்கையில் இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான்… இதனை விட்டால் வேறு வழி இல்லை.. என்கின்ற போது தான் இந்த வார்த்தைகளின் பிரயோகம் வரும். ஆனா இப்பொ எல்லாம் பைக்கில் சிலர் வேகமாப் போவதைப் பாத்தால், அந்த பயணம் தான் வாழ்க்கையின் நோக்கம் என்பதாய் போகிறார்கள். சில சமயம் அதுவே அவர்களின் கடைசிப் பயணமாகவும் மாறி விடுவது தான் வேதனை. இப்படி வேகமாகப் போகும் ஒருவரை மடக்கி கேட்டேன்: “அப்படி என்ன அவசரம்?”. கிடைத்த பதில்: அநிட்3கோ (அந்தமானின் டாஸ்மாக்) கடை மூடி விருவார்கள்.. அதான். அடப்பாவிகளா.

நாட்டுக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். தலைவர்களுக்காய் எரிந்தும் போய் தங்களின் விஸ்வாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். ஹிட்லர் வாழ்க்கையில் நடந்ததாய் சொல்லப்படும் பல கதைகளில் இதுவும் ஒன்று. (இப்படியும் நடக்குமா என்ற பில்டப்புடன் ஆரம்பிக்கலாம் இந்தச் சம்பவத்தை)

ஹிட்லரின் திறமையினைக் கேள்விப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர், அவரிடம் (கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு) உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டாராம். அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஹிட்லர் தன் அடியாளான படையாளனைக் கூப்பிட்டு, இந்த மூனாவது மாடியிலிருந்து குதி என்றாராம். அவனும் ஒன்றும் யோசிக்காமல் குத்தித்து உயிரை விட்டானாம். இதுலெ ஏதும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் (பத்திரிக்கைக் காரங்களுக்கு கூடவே எப்பவுமே அது தான் இருக்குமே?) ஒருத்தர் தான் இப்படியா?? என்று இழுத்தார் அந்த நிருபர். ஹிட்லர் அடுத்த படைக் காவலரை கண்ணால் ஜாடை காட்டினார். அடுத்த உயிர் போனது.

நம்பவே முடியலையே…இது நிருபர். ஹிட்லர் மூன்றாவது ஆளை அழைத்தார். நிருபர் காலில் விழாத குறையாய் வேண்டாம். எனக்காய் ரெண்டு உயிர் போனது போதும் என்றார். படைக்காவலன் பேசினான். யோவ் ஆளை வுடுய்யா… இந்த ஆள் கிட்டெ குப்பெ கூட்றதெ விட சாவுறது மேலுண்ணு அவனவன் சந்தோஷமா சாவுறான். (தகவல் உபயம் சுகிசிவம்). இது எப்படி இருக்கு?

செய்யும்தொழிலில் சிரத்தையோடு செய்யணும் என்பது தான் எல்லாரும் எதிர் பார்க்கிறார்கள். சும்மா ரெண்டு நிமிஷத்தில் செய்யும் நூடூல்ஸில் எத்தனை நுணுக்கம் இருக்கு தெரியுமா? (அவனவன் நொந்து நூல் ஆகும் போது, நூடுல்ஸில் நுணுக்கம் வேற கேக்குதா?) நான் செய்யும் நூடூல்ஸில் எப்பவும் அந்த மசாலா சரீய்யா கரைஞ்சிருக்காது. கட்டி கட்டியா இருக்கும். வீட்டு அம்மணி செய்யும் போது லேசா எட்டிப் பாத்தப்பொ நானு செஞ்சிட்டு வந்த தப்பு விளங்கிடுச்சி. முதலில் தண்ணியிலேயே மசாலா போட்டு விட்டால் அந்த பிரச்சினை தீந்தது. (என்ன ஒரு பெரிய்ய கண்டுபிடிப்பு?)

வாத்தியார் படத்துப் பாட்டில் வரும் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு வசனம். “எனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் கொஞ்ச்சம் நீளம்”. திறமைசாலிகள் கூடவே இருப்பது வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை. ஜால்ராக்களை கூடவே வைத்து இருப்பதில் தான் ஆபத்து ஜாஸ்தி. 100வது திருட்டுக்கு போஸ்டர் ஒட்டி அழகு பார்க்கும் ஜால்ராக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில “கீழ்படிந்துள்ள” என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருப்பார்கள். ஆபீசில் ஒரு பைல் வேண்டும் என்றால் உடனே ஓடி விடுவார்கள் தேட. என்ன பைல் என்பதைக்கூட கேட்காமல் (ஆளை உட்டா பொதுமடா சாமி என்ற ரகம்).

அதே மாதிரி வச்சிட்டு வாடான்னா, பத்த வச்சிட்டு வருகின்ற ஆட்களும் உண்டு. இதிலிருந்து எல்லாரும் தெரிஞ்சிக்கும் உண்மை என்னவென்றால் சொல்ல வேண்டிய சேதியை பக்குவமா பாத்து பதமா சொல்ல வேணும் இல்லாட்டி இப்படி ஏதாவது ஏடா கூடமா நடக்கும். யார் கிட்டெ சொல்றோம் என்பதையும் குறிப்பா சொல்லாமல் விட்டாலும் சிக்கல் தான் வரும்.

ஒரு தலை வச்சிருக்கும் தறுதலைகளான நமக்கே (சாரி.. சாரி.. எனக்கே) இவ்வளவு சிக்கல வந்தா ஒன்பது தலையை extra fitting ஆ வச்சிருக்கும் ராவணனுக்கு வராதா? வந்ததே. “தீ வை” என்ற உத்திரவு பொதுவாய் வந்து விழுந்தது. அனுமன் வாலில் வைத்தனர் அரக்கர் தீயை. அனுமனோ, ஊருக்கே தீயை வைத்தான். அரசாங்க உத்திரவை அச்சரம் பிசகாமல் follow செய்தார்கள் இருவருமே. “என் வாலைக் கொளுத்தும் இவர்களது செயல், இந்த ஊரைக் கொளுத்துக” என்று அனுமனுக்கு பட்டதாய் கம்பர் சொல்கிறார்.

கடவுள் படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றே இவர் வென்றி
சுடுவிக்கின்றது இவ்வூரைச் சுடுக என்று உஐத்து துணிவு என்று
நடு உற்று அமையம் உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான்.

என்ன இனிமே ஏதாவது சொல்லும் போது சரிய்யாச் சொல்லுவோமா???

திரையிசையில் இலக்கியம் (??)


சின்னக் குழந்தைகள் முன்பு, புத்தகத்தை மூடி வைத்து, சட்டென்று ஒரு பக்கத்தை திறந்து படம் இருக்கா? இல்லையா? என்று கேப்போம்.. அந்தக் காலத்தில். அந்த ரேஞ்ச்சில் ஒரு நாள் திரைப்பாடல்களில் இலக்கியத் தரம் இருக்கா இல்லையா என்று விவாதம் வந்தது. அன்றைய விவாதம் செமெ களை கட்டியது என்பதை சொல்லாமல் விட முடியாது. வீட்டுக்கு லேட்டாப் போயி வீட்டுக்காரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை மட்டும் நான் சொல்லவெ மாட்டேன்.

நம்மாளுகளுக்கு ஃபாரின் சரக்குன்னா ஒரே கிக்கு தான். அது பட்டை யாய் இருந்தாலும் சரி.. பாட்டாவே இருந்தாலும் சரி. யோகம் தியானம் என்பது கூட இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போய் வந்து ஆங்கிலத்தில் சொல்லிக் குடுத்தா தான் மண்டையிலெ ஏறுதே… என்ன செய்ய??

அபிராமி அந்தாதி மாதிரி பல அந்தாதி பாட்டுகள் இங்கே எப்பொ இருந்தோ பிரபலம். ஆனா ஹிந்தியிலிருந்து வந்த அந்தாக்சிரியைத் தான் நம் மக்கள் கொண்டாடி குதூகலிப்பர். சினிமாப்பாட்டில் கூட அந்தாதி பாட்டு இருப்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். இதோ சில சாம்பிள்கள்:

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்

பாட்டுப் பாடி மரத்தை சுத்தும் அந்தக் காலத்து சினிமாவும் சரி, முனுக்கென்று கண் சிமிட்டும் நேரத்தில் கனவு வந்து ஆஸ்திரேலியாவோ அல்லது தாய்லாந்து கடற்கரைக்கோ தயாரிப்பாளர் செல்வில் போய்வரும் இந்தக் காலச் சினிமாவிலும் சரி.. பாடல் என்பது முழுக்க நடைமுறையில் இல்லாத ஒன்று.

தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாட்டால் வளர்ந்த சமூகம் என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப் படுத்தினால் தான் உண்டு. என்ன செய்ய நம்ம மறதி அப்படி. இப்பொவும் ஏதோ சடங்காய்த் தானெ, சடங்கு நேரத்தில் கூட பாட்டு சத்தம் கேக்குது. போகிற போக்கில் நீராடும் கடலொடுத்த பாட்டுக்கெ ரிஹெர்ஷல் தேவைப்படும் போல் இருக்கிறது.

ஆக.. சினிமா என்பதே கற்பனை என்றால், அதில் வரும் பாடல் கற்பனையோ கற்பனை. அதில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தலைப்பாக்கட்டு அல்லது மதுரை முனியாண்டி விலாசில் போய் தயிர் சாதம் தேடுவது மாதிரி தான் இதுவும்.

ஆனால் என்றோ எப்போதோ கேட்ட பாடல்கள் இன்னும் இனிமையாக காதுகளில் ஒலிக்கும் போது அவை அமரத்துவம் பெற்ற லிஸ்டில் அடைத்திடலாம். அதாவது கிட்டத்தட்ட இலக்கியத்தரம் என்று. ஆமா இலக்கியத்துக்கு என்ன தரம் என்று கேக்கிறீங்களா?? (பாமரனுக்கு புரியக்கூடாது. நீண்ட ஆயுசு. எப்பவும் இனிக்கனும் – அது தான் இலக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து. எல்லாருக்கும் ஈசியா புரிஞ்ச்சிட்டா அப்புறம் கோனார் நோட்ஸுக்கு ஏது வேலை?).

நம்ம கம்பர் பத்தி கொஞ்ச நாளா யோசிக்கிறதாலெ, சினிமாப் பாட்டுக்கும் கம்பருக்கும் இருக்கும் தொடர்பையும் லைட்டா டச் செய்து பாத்தேன்.

கற்பாம் மாணமாம், கண்ணகியாம் சீதையாம் என்று TMS கணீர் குரலில் பாடுகிறார். கம்பனைக் கூப்பிடுங்கள் கவிதை எழுதுவார் என்கிறார். இன்னொரு கருப்பு வெள்ளை படம் கம்பன் ஏமாந்தான் என்று பாடுகிறது. (பெண்கள் மலர் போல் இல்லை என்கிறார் அவர்)

அன்றைய இலக்கியம் படித்த உயர்தர மக்களுக்காய். (ஒரு வேளை அந்த இலக்கியத்தமிழ் அன்று எல்லாருக்குமே புரிந்திருக்குமோ? பெண்புலவர்கள் கூட இருந்திருக்காங்களே!! குடும்பத்தோடு இலக்கியம் பேசி மகிழ்ந்திருக்கலாம்).

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அங்கு
மலைத்தேன் என நான் மலைத்தேன்.

இப்படி ஒரு பாட்டு சினிமாவில் வந்தது இன்றும் இனிக்கிறது. எல்லார்க்கும் புரியுதே.. அப்பொ அங்கங்கே இலக்கியம் இருக்கத்தானே செய்யுது.

கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் கம்பரின் எண்ணங்களை நவீன சினிமா பாடல்களில் (தெரிந்தோ தெரியாமலோ) புகுத்திய செய்திகள் அங்காங்கே கிடைக்கிறது.

கடலுக்குக் கூட ஈரமில்லையோ? – என்று நவீன கவிஞர்கள் யோசித்து எழுதியது. ஆனால் கம்பரின் கற்பனையோ “மேகத்திற்கே வேர்க்கிறதே” என்று ஆச்சரியப்பட வைக்கிறது. [கார்க்கருள் தடங் கடல்களும் மழைமுகிழ் காணும் வேர்க்க – பார்த்ததுமே மேகமும் கடலும் வேத்து விறுவிறுத்துப் போச்சாம். இது கம்பன் ஸ்டைலில் சொன்னது].

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை.
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை.

இது இன்றைய கவிஞர் காதலன் காதலி பேசுவதாய்… இல்லை இல்லை பாடுவதாய் அமைத்தது. “துயில் இலை ஆதலின் கனவு தோன்றல” – திரிசடை சீதையிடம் சொன்ன ஒரிஜினல் அக்மார்க் சங்கதி.

இந்த நிலவை எதுக்கெல்லாம் தான் கம்பேர் செய்வாங்களொ?? நகம் பாத்தா நிலவு மாதிரி என்னெக்காவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கா?? ஆனா கம்பர் அப்படிப் பாத்திருக்கார். “சிறியவும் பெரியவும் ஆகித் திங்களோ” என்று அச்சரியப்பட்டு அங்கலாய்க்கிறார். ராமரின் நகங்கள் இப்படி இருந்தன என்று சீதையிடம் சொல்கிறார் அனுமன். ஏற்கனவே நொந்து பொயிருக்காக… அந்த நேரத்தில் இப்படி ஒரு பில்டப்பு..??? ஆனா இப்பொதைய சினிமாப் பாடல் வரிகளில் இருப்பது “இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்”. என்ன சுட்ட சரக்கு மாதிரி தெரியுதா?? கம்பர் என்ன காப்பி ரைட்டா வச்சிருந்தார்??

“பார்வையாலெ நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு” என்று ஒரு ஃப்ளோவிலெ இப்போதைய பாடலாசிரியர் எழுதி இருக்கலாம். ஆனா கம்பருக்கு மட்டும் அப்படி ஃப்ளோ வந்திருக்காதா என்ன? “பார்க்கப்பட்டனர் சிலர்” என்று பார்வையாலே பலர் செத்த கதை சொல்கிறார் கம்பர்.

இப்படியாக திரைப்பாடல்கள் அங்காங்கே இலக்கியம், அதுவும் கம்பரிடம் சுட்ட இலக்கிய சங்கதிகள் இருக்கு என்று நிறைவு செய்கிறேன்.

மீண்டும் வருவேன்.