பொறி… பொறி… தீப்பொறி


ஒரு படத்தில் வடிவேல் நடந்து வரும் போதே, செருப்பில் தீப்பொறி பறக்கும்.. எப்படீண்ணே??…  என்று கேட்பவருக்கு, எல்லாம் ஒரு கிரைன்ரா… அதெல்லாம் ஒரு செட்டப்பு…. ஒட்டப்பு என்று சொல்லும் சீனும் சூப்பர் ஹிட்டாக இருக்கும். அப்படி பில்டப் விடுபவரை வைக்கப்போருக்கு தீவைக்க அழைக்கும் அக்கப்போர் இருக்கே.. அது ஒரிஜினல் காமெடியை விட சூப்பர்.

நீ நடந்தால் நடை அழகு… என்பார்கள். ஆனால் நடையில் தீப்பொறி பறக்கும் ஐடியா எப்படி வந்திருக்கும்? பாபா படம் உள்ளிட்ட பல ரஜினி படங்களில் அந்த தீப்பொறி பறக்கும். ராமநாராயணன் இயக்கத்தில் ஒரு யானை நடையிலும் அந்த தீப்பொறி பறந்ததை பாத்ததாய் நினைவு.

அது சரி… நடை ஒரு பக்கம் நடக்கட்டும். பேச்சுக்கும் ஒரு நடை இருக்கு என்கிறார்கள். அந்தக் காலத்தில் திரு விக நடை, அண்ணா நடை என்றார்கள். அது பாடப்புத்தகத்தில் வந்ததாலோ என்னவோ, அதை யாரும் பின்னர் பின்பற்றவில்லை. (கலைஞர் & வைகோ ஆகியோர் விதிவிலக்கு).

பேச்சில் பொடி வைத்து பேசுவது என்கிறார்கள். பொடி போட்டால் தான் பேச்சு வரும் என்று பேசியவர்களும் உண்டு. காரம் மணம் குணம் இப்படி எல்லாம் சேர்ந்து இருக்கிறதுக்குப் பெயர் தான் பொடி வைத்துப் பேசுதல் என்று வைத்துக் கொள்ளலாமா?? பொடி வச்சி இப்படித்தானே சொல்ல முடியும்?

பொடி பறக்கப் பேசியது போய் தீப்பொறி பறக்க, பேச்சு ஆரம்பித்தது பின்னர் தான். தீப்பொறி அடைமொழியுடன் ஆறுமுகம் ஒரு கலக்கு தமிழ்நாட்டையே கலக்கினார் போங்க. அதை கேக்க கட்சி ஆட்களையும் தாண்டி எல்லாரும் போவாகளாம். லேடீஸ் மட்டும் கேட்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன்? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.

பேச்சு நடையில் சுகிசிவம் ஸ்டைல் அழகோ அழகு. டீவியில் வரும் அவர் பேச்சை விட மேடைப்பேச்சு தனி ரகம் தான். அதில் மனசுக்குள் ஒரு தீப்பொறியை உங்களுக்கே தெரியாமல் ஏத்தி வைக்கும் சக்தி வாய்ந்த பேச்சு அவரின் பேச்சு. ஒரு விஷயத்தை ஒரு ஃப்ளோ வில் கொண்டு போய், சொல்ல வேண்டிய சேதியை, சொல்லும் போது மட்டும் High Pitch இல் சொல்வது அவரிடம் கற்க வேண்டிய கலை. சிங்கப்பூரில் அவர் பேசிய பேச்சுக்கள், கீதை பற்றி வளைகுடா நாட்டில் பேசிய ஆடியோவும், நால்வர் பற்றி மதுரையில் பேசிய பேச்சுக்களுகளும் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது.

அதற்கு முற்றிலும் வித்தியாசமாய், அருவி கொட்டுவது போல் வந்து விழும் வார்த்தைகள்.. அதன் சொந்தக்காரர், தமிழருவி மணியன். அவரின் பேச்சில் தீப்பொறி என்று தேடினால் ஒன்றுக் சிக்காது. ஆனால் பேச்சை முடித்தால் ஒரு சோகம் வரும்.. பேச்சை இதற்குள் முடித்து விட்டாரே என்று. பல மணி நேரங்கள் அவர் சொன்ன செய்திகள் அசை போட வைக்கும். அதை விட பெரிய்ய்ய தீப்பொறி என்ன வேண்டும்??. செஞ்சட்டைக்காரர்கள் ஜீவாவைப் பற்றிப் பேசியதை விட இந்த வெள்ளைச் சட்டைக்காரர் தான் அதிகம் பேசி இருக்கிறார். காமராசரும் ஜீவாவும் இல்லாமல், இவர் பேச்சுக்கள் முடிவதில்லை. தமிழ் கூறும் நல் உலகம் ஒரு முறை காது குடுத்துக் கேட்க வேண்டும் இவர்களது மேடைப்பேச்சுகளை.

எதையாவது பாத்தா ஏதாவது பொறி தட்டணும் அல்லது தட்டும். நம்ம ப்ளாக்கில் எழுதுவதும் இப்படி பொறியில் சிக்கிய செய்திகள் தானே. மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லிய காதலின் இலக்கணம், பாத்தவுடன் பொறி தட்டி அப்படியே மனசுக்குள் குண்டு பல்பு எரியுணுமாம்.. (அதுக்கு மட்டும் கரெண்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை)..

தீப்பொறி இருக்கோ இல்லையோ, ஆனா பெரியவர்கள் மத்தியில் ஒரு ஒளிவட்டம் தெரியும். சாமி படம் போடும் ஆசாமிகள் மறக்காமல் அந்த ஒளிவட்டத்தையும் சேர்த்தே வரைகிறார்கள்.

பீச்சில் உலாவும் காதல் ஜோடிகளைப் பாக்கும் போது, இந்த மூஞ்சிக்கெல்லாம் காதல் ஒரு கேடா? என்று கேட்க வேண்டும் என்ற ஒரு ஒரு பொறி தட்டும். கேக்கவா முடியும்? சமீபத்தில் ஒரு ஆதரவான SMS வந்தது. “நம்மை நிராகரித்த செமெ ஃபிகர்களின் தகரடப்பா தலை கணவர்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிடமுடியாது”. (அதே மாதிரி அவகளும் யோசிப்பாகள்லே..என்று உங்களுக்கு பொறி தட்டுதா என்ன??)

தீப்பொறி வர, ஏதோ ரெண்டு உரசனும். அட்லீஸ்ட் பக்கத்திலேயாவது வர வேண்டும். நம்ம வள்ளுவர் என்ன சொல்றாரு தெரியுமா?? தூரமாப் போனாலே சுடுமாம். (நீங்கின் தெறூஉம்). மேலும் விவரங்களுக்கு பாப்பையாவை புடிங்க போதும்.

சினிமாவில் ஒரு பாட்டு. தீப்பொறி பறக்குது. உரசினது எது தெரியுமா? காதலன் காதலியின் நகங்கள்.

எடுத்துக் கொடுக்கையிலெ இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடுபட்டு  மலர் கொஞ்சம் வாடும்
மங்கைநீ சூடிக்கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.

இதுக்கும் அருஞ்சொல் பொருள் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதுக்காக சும்மா உரசிப் பாக்காதீங்க… அப்புறம் வரும் தீக்காயங்களுக்கு நான் பொறுப்பு கிடையாது.

வம்படியா எதையாவது எழுதி அப்புறம் கடைசியா கம்பராமாயணத்தை கொண்டு வருவது என்பது, நானே யோசிக்காமல்  என்னிடம் வந்து சேர்ந்த திட்டம் அது. சும்மா வெளையாட்டா ராமாயணம் படிக்கப் போக (வயசு ஆயிடுச்சி என்று என் இனிய பாதி சொல்வது பார்வையிலேயே தெரியுது) அப்பப்பொ ஏதாவது பொறி தட்டும். அதை குறிப்பு எடுத்து வைப்பேன். பின்னர் அப்படி இப்படி யோசிச்சி.. 150 போஸ்ட் தாண்டி போய்கிட்டிருக்கு.

இன்றைய பொறி தட்டிய சமாச்சாரம்.. அந்த தீப்பொறி தான். அனுமன் முன் போரிட வந்த அரக்க சேனை அப்புட்டு இப்புட்டுன்னு சொல்ல முடியாத ஆளுங்களாம். கூப்புட கூப்பிட வர, கூப்பிடு தொலைவிலேயே நின்றார்களாம். நம்மூர் பிரியாணி பொட்டலமும் ஒரு கட்டிங்கும் தரும் கூட்டங்களில் எப்படி கூட்டம் அலைமோதுமோ, அப்படி இருந்ததாம். அம்புட்டு கூட்டம். அந்தக் கூட்டம் காரணமா அவங்க கையிலெ இருக்கிற ஆயதங்கள் எல்லாம் ஒன்னோடு ஒன்னு மோதி, அதனாலெயே தீப்பொறி பறக்குதாம். அது அப்படியே மேலே பொயி.. அந்தப் பொறி மேகத்தையே பத்த வைக்கப் போயிடுச்சாம்.. சும்மா சொல்லப்படாது. கம்பர் உண்மையிலேயே கலக்கிட்டார். கற்பனையின்  உச்சம் கண்டவர் அவர்..

கூய்த்தரும்தொறும் தரும்தொறும் தானைவெங் குழவன்
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க
காய்த்து அமைந்த வெங் கதிர்ப்படை ஒன்று ஒன்று கதுவி
தேய்ந்து எழுந்தன பொறிக் குலம்மழைக் குலம் தீய.

ஆயுதங்கள் மோதுவதை வார்த்தைகள் மோதுவதாயும் வைத்து எழுதி இருக்கும் ஸ்டைல் கவனிச்சீங்களா?? தரும்தொறும், வந்து, ஒன்று, குலம் ஆகியவை ரெண்டு தடவை வந்து மோதி பொறி ஏத்துதாம்.

அது சரி.. உங்களுக்கு எப்போதாவது ஏதாவது பொறி தட்டியிருக்கா??

எல்லாம்…ம்..எல்லாம்….


சமீப காலமாக பிரகாஷ்ராஜ் கலக்கும் ஒரு ஃபோன் விளம்பரம் டிவியில் பிரசித்தம்..அதிலும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு பின்னர் லேசா கண் சிமிட்டி விட்டு லேசாக சிரித்தபடி ம்…எல்லாம் என்று சொல்வதும், அழகோ அழகு தான்.

இவ்வளவு வரிஞ்சி கட்டி எழுதும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது ஏதோ பலான மெட்டர் என்று… இருக்கட்டுமே..அதுவும் வாழ்க்கையோடு சேர்ந்த பகுதி தானே.. எவ்வளவு என்பதில் தான் மனிதனின் தரம் நிர்ணயம் ஆகிறது.

அந்தக் காலத்தில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று படங்கள் சில வந்தன.. குழந்தைகளோடு அந்தப் படங்கள் போகாது இருந்தோம்.. இப்பொ சின்ன வீடா வரட்டுமா? என்ற பாடல் நமது வீட்டின் முன் அறையில் எல்லார் முன்பும் கேட்கிறது.

சமீபத்திய Science Exhibhition ல் கருத்தடை சாதனங்கள் வைத்து ஒரு எட்டாம் வகுப்பு மாணவி விளக்கிய போது.., கேட்கும் நமக்குத்தான் சங்கடமாய் இருந்தது.

என் பையனிடம், பொடிப்பயலே, Facebook ல் அம்மனமா படம் வருதாம் பாத்து பாரு என்றேன்.. அவன் கூலா சொல்றான், அந்த Close button எதுக்கு இருக்கு?. Internet ல் எல்லாம் தான் இருக்கும். நாம நல்லதை எடுத்துக்க வேணும் என்று லெக்சர் தருகிறான். ம்… என்னத்தெச் சொல்ல???

இந்த பலான சமாச்சாரங்கள் காலம் காலமாய் இருந்து தான் வருகின்றன. அறத்தின் வழியாக பொருள் ஈட்டி அதன் மூலம் இன்பம் துய்க்க வேண்டும் என்கிறார் நமது ஐயன் வள்ளுவர்.

அந்த காலத்து A சர்டிஃபிகேட் வாங்கிய பாடல்களின் தொகுப்புகள் அகப் பாடல்கள் என்று அடக்கி விட்டனர்.

இப்பொ யார் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் படிக்கலாம் என்று வந்ததில் தான் சிக்கலே உருவாகிறது. ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சாமான்யன் ஒருவன் படித்து.., அதை எப்படி பொருள் கொள்வான் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

உணர்சிகளை கட்டுக்கும் வைத்திருக்கும் கலை மனிதனுக்கு வேன்டும் என்பதால் தான், சில சேதிகளை அரசல் புரசலாக வைத்திருந்தார்கள். கம்பராமாயணத்தில் அப்படி ஏகப்பட்ட இடங்களில் அரசல் புரசல்களாக வந்ததை கம்பரஸம் என்று தொகுத்து விட்டார்கள்.

நம்ம கண்ணுக்கும் அப்பப்பொ சில சங்கதிகள் மாட்டுது. அதில் அந்த மாதிரி ஒரு மேட்டரைத் தாண்டி கம்பர் சொல்லும் சேதியும் தெரியுது. ஒரு காட்சி பாக்கலாமா??

அனுமன், ஜாலியா இலங்கைக்கு என்ட்ரி செய்கிறார். அனுமனின் பார்வையில் என்ன என்ன படுகிறது என்பதை கண்ணில் பார்த்த கம்பன் அப்படியே எழுதுகிறார்… வாங்க… நாமளும் கூடவே ஒட்டுப் பாப்போம்.

மனைவிமார்கள் தங்கள் கணவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்… அவர்கள் எப்பேர்பட்டவர்கள் தெரியுமா?? வீராதி வீரர்கள்..சூராதி சூரர்கள்.

அவர்களுக்குத் துணை யார் தெரியுமா? காதல் மயக்கம் தான். உயிரை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும் உடலாய் படுக்கையில் கிடந்தார்களாம் காதல் மயக்கத்தில்..

அந்த மயக்கத்திலும் வாசல் மேல், விழி மேல் விழியே வைத்து பாத்துக் கிடந்தார்களாம். அப்போது தூது சென்ற மகளிர் வந்தார்களாம். அவர்களைப் பாத்ததும்..அவர்களின் முகத்தில் புன்னகையைப் பாத்ததும் போன உயிர் திரும்பி வந்ததாம்… ஆனந்தத்தில் அப்படியே பூரித்தார்களா??…அதுதான் இல்லை…துடித்துப் போய் விட்டார்களாம்..கம்பன் சொன்னது இது.

கம்பன் சொல்லாத கதை இப்பொ பாக்கலாமா… இது கம்பன் எழுதியது என்றாலும் கூட, பார்த்தது யார்? அனுமன். ஒரு வகையில் அனுமனும் தூதர் தானே… சீதா தேவியைப் பாத்துவிட்டு தகவல் சொன்னால் ராமரும் இப்படித்தான் சந்தோஷத்திலும் துடித்துப் போவார் போலும்..என்று அனுமன் நினைப்பதாய் கம்பர் நினைத்து எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.. ஆமா..நீங்க என்ன நெனைக்கிறீங்க???

அதுக்கு முன்னாடி பாட்டையும் போட்றேன் (சன் ம்யூசிக் பாக்கிற பின் விளைவு தான்)

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய சலத்தர் வைகும்
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலின் சாய்வர்
மாதுயர்க் காதல் தூண்ட வழியின் மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை  .

 மீண்டும் அனுமனோடு பாத்து வருகிறேன்.