ஒரு படத்தில் வடிவேல் நடந்து வரும் போதே, செருப்பில் தீப்பொறி பறக்கும்.. எப்படீண்ணே??… என்று கேட்பவருக்கு, எல்லாம் ஒரு கிரைன்ரா… அதெல்லாம் ஒரு செட்டப்பு…. ஒட்டப்பு என்று சொல்லும் சீனும் சூப்பர் ஹிட்டாக இருக்கும். அப்படி பில்டப் விடுபவரை வைக்கப்போருக்கு தீவைக்க அழைக்கும் அக்கப்போர் இருக்கே.. அது ஒரிஜினல் காமெடியை விட சூப்பர்.
நீ நடந்தால் நடை அழகு… என்பார்கள். ஆனால் நடையில் தீப்பொறி பறக்கும் ஐடியா எப்படி வந்திருக்கும்? பாபா படம் உள்ளிட்ட பல ரஜினி படங்களில் அந்த தீப்பொறி பறக்கும். ராமநாராயணன் இயக்கத்தில் ஒரு யானை நடையிலும் அந்த தீப்பொறி பறந்ததை பாத்ததாய் நினைவு.
அது சரி… நடை ஒரு பக்கம் நடக்கட்டும். பேச்சுக்கும் ஒரு நடை இருக்கு என்கிறார்கள். அந்தக் காலத்தில் திரு விக நடை, அண்ணா நடை என்றார்கள். அது பாடப்புத்தகத்தில் வந்ததாலோ என்னவோ, அதை யாரும் பின்னர் பின்பற்றவில்லை. (கலைஞர் & வைகோ ஆகியோர் விதிவிலக்கு).
பேச்சில் பொடி வைத்து பேசுவது என்கிறார்கள். பொடி போட்டால் தான் பேச்சு வரும் என்று பேசியவர்களும் உண்டு. காரம் மணம் குணம் இப்படி எல்லாம் சேர்ந்து இருக்கிறதுக்குப் பெயர் தான் பொடி வைத்துப் பேசுதல் என்று வைத்துக் கொள்ளலாமா?? பொடி வச்சி இப்படித்தானே சொல்ல முடியும்?
பொடி பறக்கப் பேசியது போய் தீப்பொறி பறக்க, பேச்சு ஆரம்பித்தது பின்னர் தான். தீப்பொறி அடைமொழியுடன் ஆறுமுகம் ஒரு கலக்கு தமிழ்நாட்டையே கலக்கினார் போங்க. அதை கேக்க கட்சி ஆட்களையும் தாண்டி எல்லாரும் போவாகளாம். லேடீஸ் மட்டும் கேட்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன்? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.
பேச்சு நடையில் சுகிசிவம் ஸ்டைல் அழகோ அழகு. டீவியில் வரும் அவர் பேச்சை விட மேடைப்பேச்சு தனி ரகம் தான். அதில் மனசுக்குள் ஒரு தீப்பொறியை உங்களுக்கே தெரியாமல் ஏத்தி வைக்கும் சக்தி வாய்ந்த பேச்சு அவரின் பேச்சு. ஒரு விஷயத்தை ஒரு ஃப்ளோ வில் கொண்டு போய், சொல்ல வேண்டிய சேதியை, சொல்லும் போது மட்டும் High Pitch இல் சொல்வது அவரிடம் கற்க வேண்டிய கலை. சிங்கப்பூரில் அவர் பேசிய பேச்சுக்கள், கீதை பற்றி வளைகுடா நாட்டில் பேசிய ஆடியோவும், நால்வர் பற்றி மதுரையில் பேசிய பேச்சுக்களுகளும் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது.
அதற்கு முற்றிலும் வித்தியாசமாய், அருவி கொட்டுவது போல் வந்து விழும் வார்த்தைகள்.. அதன் சொந்தக்காரர், தமிழருவி மணியன். அவரின் பேச்சில் தீப்பொறி என்று தேடினால் ஒன்றுக் சிக்காது. ஆனால் பேச்சை முடித்தால் ஒரு சோகம் வரும்.. பேச்சை இதற்குள் முடித்து விட்டாரே என்று. பல மணி நேரங்கள் அவர் சொன்ன செய்திகள் அசை போட வைக்கும். அதை விட பெரிய்ய்ய தீப்பொறி என்ன வேண்டும்??. செஞ்சட்டைக்காரர்கள் ஜீவாவைப் பற்றிப் பேசியதை விட இந்த வெள்ளைச் சட்டைக்காரர் தான் அதிகம் பேசி இருக்கிறார். காமராசரும் ஜீவாவும் இல்லாமல், இவர் பேச்சுக்கள் முடிவதில்லை. தமிழ் கூறும் நல் உலகம் ஒரு முறை காது குடுத்துக் கேட்க வேண்டும் இவர்களது மேடைப்பேச்சுகளை.
எதையாவது பாத்தா ஏதாவது பொறி தட்டணும் அல்லது தட்டும். நம்ம ப்ளாக்கில் எழுதுவதும் இப்படி பொறியில் சிக்கிய செய்திகள் தானே. மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லிய காதலின் இலக்கணம், பாத்தவுடன் பொறி தட்டி அப்படியே மனசுக்குள் குண்டு பல்பு எரியுணுமாம்.. (அதுக்கு மட்டும் கரெண்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை)..
தீப்பொறி இருக்கோ இல்லையோ, ஆனா பெரியவர்கள் மத்தியில் ஒரு ஒளிவட்டம் தெரியும். சாமி படம் போடும் ஆசாமிகள் மறக்காமல் அந்த ஒளிவட்டத்தையும் சேர்த்தே வரைகிறார்கள்.
பீச்சில் உலாவும் காதல் ஜோடிகளைப் பாக்கும் போது, இந்த மூஞ்சிக்கெல்லாம் காதல் ஒரு கேடா? என்று கேட்க வேண்டும் என்ற ஒரு ஒரு பொறி தட்டும். கேக்கவா முடியும்? சமீபத்தில் ஒரு ஆதரவான SMS வந்தது. “நம்மை நிராகரித்த செமெ ஃபிகர்களின் தகரடப்பா தலை கணவர்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிடமுடியாது”. (அதே மாதிரி அவகளும் யோசிப்பாகள்லே..என்று உங்களுக்கு பொறி தட்டுதா என்ன??)
தீப்பொறி வர, ஏதோ ரெண்டு உரசனும். அட்லீஸ்ட் பக்கத்திலேயாவது வர வேண்டும். நம்ம வள்ளுவர் என்ன சொல்றாரு தெரியுமா?? தூரமாப் போனாலே சுடுமாம். (நீங்கின் தெறூஉம்). மேலும் விவரங்களுக்கு பாப்பையாவை புடிங்க போதும்.
சினிமாவில் ஒரு பாட்டு. தீப்பொறி பறக்குது. உரசினது எது தெரியுமா? காதலன் காதலியின் நகங்கள்.
எடுத்துக் கொடுக்கையிலெ இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கைநீ சூடிக்கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.
இதுக்கும் அருஞ்சொல் பொருள் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதுக்காக சும்மா உரசிப் பாக்காதீங்க… அப்புறம் வரும் தீக்காயங்களுக்கு நான் பொறுப்பு கிடையாது.
வம்படியா எதையாவது எழுதி அப்புறம் கடைசியா கம்பராமாயணத்தை கொண்டு வருவது என்பது, நானே யோசிக்காமல் என்னிடம் வந்து சேர்ந்த திட்டம் அது. சும்மா வெளையாட்டா ராமாயணம் படிக்கப் போக (வயசு ஆயிடுச்சி என்று என் இனிய பாதி சொல்வது பார்வையிலேயே தெரியுது) அப்பப்பொ ஏதாவது பொறி தட்டும். அதை குறிப்பு எடுத்து வைப்பேன். பின்னர் அப்படி இப்படி யோசிச்சி.. 150 போஸ்ட் தாண்டி போய்கிட்டிருக்கு.
இன்றைய பொறி தட்டிய சமாச்சாரம்.. அந்த தீப்பொறி தான். அனுமன் முன் போரிட வந்த அரக்க சேனை அப்புட்டு இப்புட்டுன்னு சொல்ல முடியாத ஆளுங்களாம். கூப்புட கூப்பிட வர, கூப்பிடு தொலைவிலேயே நின்றார்களாம். நம்மூர் பிரியாணி பொட்டலமும் ஒரு கட்டிங்கும் தரும் கூட்டங்களில் எப்படி கூட்டம் அலைமோதுமோ, அப்படி இருந்ததாம். அம்புட்டு கூட்டம். அந்தக் கூட்டம் காரணமா அவங்க கையிலெ இருக்கிற ஆயதங்கள் எல்லாம் ஒன்னோடு ஒன்னு மோதி, அதனாலெயே தீப்பொறி பறக்குதாம். அது அப்படியே மேலே பொயி.. அந்தப் பொறி மேகத்தையே பத்த வைக்கப் போயிடுச்சாம்.. சும்மா சொல்லப்படாது. கம்பர் உண்மையிலேயே கலக்கிட்டார். கற்பனையின் உச்சம் கண்டவர் அவர்..
கூய்த்தரும்தொறும் தரும்தொறும் தானைவெங் குழவன்
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க
காய்த்து அமைந்த வெங் கதிர்ப்படை ஒன்று ஒன்று கதுவி
தேய்ந்து எழுந்தன பொறிக் குலம்மழைக் குலம் தீய.
ஆயுதங்கள் மோதுவதை வார்த்தைகள் மோதுவதாயும் வைத்து எழுதி இருக்கும் ஸ்டைல் கவனிச்சீங்களா?? தரும்தொறும், வந்து, ஒன்று, குலம் ஆகியவை ரெண்டு தடவை வந்து மோதி பொறி ஏத்துதாம்.
அது சரி.. உங்களுக்கு எப்போதாவது ஏதாவது பொறி தட்டியிருக்கா??