அழகா பல்லழகா….



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -20]

கொரோணா வந்து எல்லாரையும் வீட்டோடு முடிக்கிப் போட்டது போல் என் விமானப் பயணங்களும் முடங்கிப் போனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தில்லி வரை சென்று திரும்ப வாய்ப்பு கிடைத்தது. பயணம் முடிந்து, திரும்பியவுடன் சொன்னேன்,”மூக்கையும் வாயையும் மூடியதால், எல்லாரும் அழகானவர்களாத் தெரியுது…” என்று. துணைவியார் கோபமாய்ச் சொன்னார், “அவனவன் மூச்சுவிடச் சிரமத்திலெ இருக்கும் போது, சைட் அடிச்சிட்டு வாரீக…”

முகத்துக்கு அழகு தருவது பல்…. ஆனா அது எப்படி இருக்கு என்பதே இந்த மாஸ்க்கில் மறைந்துவிடுவது நல்லது தானே? கொரோணா வருவதற்கு முன்பே ஒரு முறை, ஒரு பல் ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்கும் மாஸ்க் போட்ட மான் ஒன்று உள்ளே அழைத்துச் சென்றது. என்னை கை கால் எல்லாம் அந்த டெண்டல் சேரில் கட்டிப்போட்டு மாஸ்க் எடுத்தது தான் தாமதம் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அந்தமானின் பற்கள் அப்படி. ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி மாஸ்க் எடுக்காத இடமாப் பாத்து, பல் வைத்தியம் செய்து முடித்தேன். (ஆமா… மனைவியும் படிக்கும் பதிவுகளில், ‘பாக்க லட்சணமான இடத்தில்’ எனச் சொல்ல முடியுமா என்ன…?)

சரி… நாம தான் பல்லைப் பாத்து கலாட்டா செய்றோம்ணா, நம்ம திருஞானசம்பந்தர் தன்னோட தேவாரத்தில் பல் வச்சும் வம்புக்கு இழுக்கிறார். நாமெல்லாம் மின்னலடிக்கும் (சூப்பர் ரின்) வெண்மையான உடை, இதைத்தானே பாத்திருப்போம். ஆனா சிவனடியார்களுக்கு அசுரர்களின் பல்லு மின்னல் மாதிரி தெரிஞ்சதாம்.

முழுக்க தேவார அர்த்தமும் பாத்துட்டு அப்புறம் பாட்டும் பாக்கலாம், வாங்க… கூடவே…; மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.

ஆனா பல்லு வச்சி நிறைய பழமொழிகள் இருந்தாலும், பல்லுப்போனா சொல்லுப் போச்சு என்பது மட்டும் செமெ பாப்புலர். ஆனா, பல்லுப் போன பலர் ஸ்ம்யூலில் பாடிக் கலக்குவது தான் வேடிக்கை. கிராமப்புரங்களில் ஒரு சொலவடை (அது என்ன வடை என்று மட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்) பச்சரிசிப் பல்லழகி... பவழ மொட்டுச் சொல்லழகி...’,மொச்சக் கொட்டப் பல்லழகி… முத்து முத்துச் சொல்லழகி…’ – இப்படி ஒரு கிராமியப் பாடல் வரிகள் வருது.

கிராமப்புறம் வரை வந்தாச்சி…அப்படியே தி. ஜானகிராமன் கதைகளில் வரும் அந்தப் பல்லுப்பாட்டி, சீ..சீ… கொள்ளுப்பாட்டி… இல்லெ இல்லே, பல்லு கொஞ்சம் கொஞ்சம் இருக்கும் பாட்டிகளைப் பாப்போம். (வீட்லெ ஒரு மாதிரியாப் பாக்குறாய்ங்க…. பல்லு இல்லாத பாட்டிகளையுமா சைட் அடிப்பீங்க… என்று கேட்காமல் கேட்பது தெரியுது)

தி.ஜானகிராமன் எழுதிய பாயசம் சிறுகதை. அதில் மணமக்களை ஊர்
விதவைகள் ஊஞ்சலில் வைத்துத் தள்ளும் காட்சி வரும். தி.ஜா.வின் பார்வை, அவரின் வரிகளில் இதோ:

‘எங்கு பார்த்தாலும் பல். அழுக்கிடுக்குப் பல். தேய்ந்த பல். விதவைப் பல். பொக்கைப் பல்.’ சூப்பரா இருக்கில்லெ… கற்பனை.. !இனி நீங்க செய்துகிடுங்க…விடு ஜுட்…

கார் நாற்பது (21) பாடலில் வேறெ லெவல். எதையாவது பாத்தா, காதலியின் ஒரு பாகத்துக்கு ஒப்பு சொல்லுவாக (அட உவமை எனச் சொன்னா, நீங்க ஓடிப் போயிட்டீக என்றால் என்ன செய்ய?) இங்கே என்ன நடக்குது பாருங்களேன் . அலங்கரிக்கப்பட்டத் தேர் வந்த வழியில் சிறிய முல்லையின் அரும்புகளப் பாக்குறாக. அது கூர்மையுற்ற நெற்றியையும், கண்களையும், கூரிய பற்களையும் ஒத்து நிற்கும் என்று, பார்க்கும் பொருள்களெல்லாம் தலைவியை ஒத்துள்ளது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான். இது தாண்டா டாப்பு…

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.21

அப்படியே கம்பன் வீட்டாண்டெ போவோம்ணு பக்கத்தாலே போனா, அவரு தூரப்போ என கொரோணா (பாசிட்டிவ்) வந்த ஆள் மாதிரி விரட்டுகிறார். என்னான்னு கேட்டா, அவரும் ஒரு பல்லு வச்சிருக்கார். பொதுவா, ராக்கெட்டின் பின்னாடி தான் அதிகமா தீ ஜுவாலை கிளம்பும். ஆனா, நம்ம கம்பர் வச்சிருக்கும் ஆயுதத்தின் முன் பகுதியே அக்னியெக் கக்கிட்டுப் போவுதாம். அது என்ன ஆயுதம் எனஉத்துப்பாத்தா… அடெ.. பல்லு… (அட கொக்கமக்கா…பல்லு என்ன இம்புட்டு உக்கிரமான வெப்பனா என்ன?)

ஆமாம் இதெல்லாம் எப்ப நடக்குது எனக் கேக்கீகளா? அனுமனைப் பாம்பு வச்சிக் கட்டும் போது, அதெப் பாத்து அரக்கர்கள் அடிக்கும் கமெண்ட் இப்படியாம்… அது ஒரு பூ மாலை கொண்டு கட்டினது போல் ஒளியுள்ள (இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது. ஆதலால் விரைவுபடாது ஆலோசித்து நல்ல பயனைப் பெறுமாறு சிந்தித்து (அதற்கு அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச்) செய்யுங்கள். (இந்நிலையில் இக்குரங்கு) அரசனிடம் போய்ச் சேர்தல் பயனுடையதன்று என்று சில அரக்கர்கள் சொல்வார்கள்.

’காந்துறுகதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர்சேர்த்தெனப் பொலியும், வாள்முகம்;
தேர்ந்து, உறுபொருள் பெற எண்ணி , செய்யுமின்;
வேந்து உறல் பழுது’ என விளம்புவார், சிலர்.

அப்புறம் வேறு கொஞ்சம் பல்லு..சாரீ… வேலையெப் பாத்துட்டு அப்புறம்…. மீண்டும் வருவேன்…

மனைவிக்கு இடம் கொடேல்


”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகிறான், ஞானத் தங்கமே..” என்று ஞானம் தங்கத்தை தேடுவதையோ, ஞானத்தங்கம் இடம் தேடுவதையோ கணீர் குரலில் சீர்காழி பாடுவார்.

இருக்க இடம் குடுத்தால் படுக்க பாய் கேட்பான் என்பார்கள். இடம் கொடுத்த பிறகு, கொஞ்சம் படுக்க பாய் இருந்தால் நல்லாத் தானே இருக்கும்? அதுக்காக வெல்வெட் வைச்ச மெத்தையா கேட்டாங்க.. வெறும் பாய் தானே! குடுக்காமெ என்ன பழமொழி வேண்டி இருக்கு?

பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு என்று ஒரு ரகம் இருக்கு. அப்புறம் பல் புடுங்கப்பட்ட பாம்பும் இன்னொரு ரகம். முதல் ரகமாய் இருப்பவர்கள் எப்போதுமே அதில் நிலைத்து இருக்க ரொம்பவே பிரயத்தனப் பட வேண்டும். அப்படி இல்லாட்டி, இப்படி ரெண்டாவது ரகத்துக்கு வந்திடுவாய்ங்க.

வீட்டில் புலி. வெளியில் எலி என்பார்கள். சிலரை சிலர். வீட்டிலும் புலி. வெளியிலும் புலி. சிலரை சிலர் சொல்வர். வீட்டில் எலி. வெளியில் எலி. இது பலர் பலரைப் பற்றிச் சொல்லாததாக இருந்தாலும் அது தான் உண்மையே. எலி புலியை Find செய்து Replace with ராமர், கிருஷ்ணன் என்று கூட சொல்லலாம்.

உனக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டேன் என்று அடிக்கடி வீட்டுச் சண்டைகளின் ஊடே கேக்கலாம். அப்பொ எது வரை இடம் கொடுக்கலாம்ணு, நம்ம கட்டபுள்ளெ கோடு போட்ற மாதிரி, கோடு போட்டு வாழ்க்கை நடத்த முடியுமா என்ன? மனைவிக்கு இடம் கொடேல் என்கிறார்கள் ஒருபக்கம். (சின்ன வீட்டுக்கு அதிகம் தரலாம் என்ற உள்குத்து இருக்கோ?) ஆனால் சாமியே சரிபாகம் குடுத்திருக்காரு. அப்படிக்கா.. T 20 மாதிரி வாழ்க்கையில் Life 50 என்று நடத்தினால் வாழ்க்கை ஓடம் Buyancy தவறாமல் லைப்பாய் மாதிரி ஆரோக்கியமாய் இருக்கும்.

இது நான் பேசலை. உள்ளாற போயிருக்கிற தண்ணி பேசுது. இப்படிப் பட்ட டயலாக்களை அதிகமான படத்திலும், அதைவிட அதிகமான இடங்களிலும் கேட்டிருப்பீர்கள். கலர் தண்ணிக்கு அப்படி பேசும் சக்தி இருக்கா என்ன? என்னக்கு என்னவோ, அப்படி பேசுறதுக்காகவே தண்ணியடிப்பதாய் படுகிறது. அடுத்த நாளே பவ்யமாய், சாரி… நேத்து கொஞ்சம் ஓவராயிடுச்சி.. ஓவரா உண்மையெ ஒளறிட்டேன். மனசிலெ ஒன்னும் வச்சிக்காதிங்க. என்று Ctrl + Z க்கு மனு கொடுக்கும்.

மனசிலெ இடம் இருக்கா இல்லையா என்பதை அப்புறம் பாக்கலாம். இந்த உக்கார இடம் கொடுக்கிற சமாச்சாரம் இருக்கே.. அது பெரிய்ய கூத்து. விவேக் ஒரு படத்தில் இண்டர்வியூவுக்குப் போவார். உள்ளே போனதும் உக்காருவார். நான் உன்னை உட்காரச் சொல்லலையே என்றவுடன் நின்றே கேள்விக்கு பதில் தொடரும். (கடைசியில் தீ வச்சி வருவது தொடர்ந்து ஆதித்யா பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்)

பெரும்பாலும் அரசு அதிகாரிகள் இதை அதிகம் எதிர்பார்ப்பதாய்ப் படுகிறது. உட்காருங்க என்று சொல்வதே உச்ச கட்ட மரியாதையாய் தெரிகிறதோ?? பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்ட போது இந்தியர்களை உட்கார விடாத காலத்து சட்டம் இன்னும் பலர் மனதில் இருப்பதாய்ப் படுகிறது எனக்கு. உட்காருங்க என்று சொன்ன பிறகு மட்டுமே, உட்காருவது நல்ல மரபாக சொல்லிக் கொடுக்கப் படுகிறது. [சிலரை உட்கார வைத்து விட்டால் எழுந்திருக்க மாட்டார்கள் என்று, சிலரை நிற்க வைத்தே பேசி அனுப்பி விடுவதாகவும் கொள்ளலாம்]

என்னைப் பொறுத்தவரை, நாற்காலிகள் அழகுப் பொருட்கள் அல்ல. அவை அமர்வதற்காகவே. அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. என் அறைக்குள்ளும் வீட்டிற்குள்ளும் வந்தவர் உட்கார்ந்தே பேசலாம் (யார் வந்தாலும் சரி தான்) என்பது என் சிற்றறிவு சொல்கிறது.

அவர் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிற்கு ஆள் பிடிப்பவராயும் அல்லது மதம் மாற்றும் ஏஜண்டாக இருக்கும் போது அவரை நாம் குண்டுக்கட்டாக வெளியே அனுப்பவதற்குள் தாவு தீந்து போகும் என்பதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன். (சில சமயம் இவர்களிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு ஓட்டலுக்கு சாப்பிடக் கிளம்ப, வந்தவர் எந்த ஓட்டல்.. என்றார்.. அய்யா சாமி ஆளை விடு என்று கிளம்பி கடைசியில் ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டு முடித்தோம். இவர்களிடமிருந்து தப்பிக்க அப்பப்பொ No சொல்லவும் பழகியிருக்க வேண்டும். (பொண்டாட்டிக்கு மட்டும் எப்பொவுமே Yes தான்)

1986 க்கு ஒரு சின்ன டிரிப் அடித்து வரலாம். ஊரில் எல்லாம் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறைகளில் AE (Assistant Engineer), AEE (Assistant Executive Engineer) ஆகியோர்களிடம் அட்டஸ்டேசன் வாங்க நாயாய் அலைந்திருக்கிறோம் ஒரு கும்பலாக. கிரேட் நிகோபார் தீவில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே, அங்கிருந்த EE (Executive Engineer) உட்கார வைத்து டீ எல்லாம் வாங்கிக் கொடுக்க, அப்போதே அந்தமானில் அஸ்திவாரம் தோண்டப்பட்டு விட்டது.

1987ல் ஒரு இண்டர்வியுவிற்குப் போயிருந்தேன். கேள்வி கேட்பவர் மிலிட்ரிக்காரர். மிடுக்கு மீசையுடன் இருந்தார். பயந்து போய் உட்கார்ந்து விட்டேன். மனுஷன் கைகால் ஆட்டத்தைப் பாத்தும் கூட, நான் உட்காரச் சொல்லையே என்று நிக்க வைத்து கேள்வி கேட்டு, கசக்கிப் பிழிந்தார். நான் ஒரே ஒரு ஆள் தான். இருந்தாலும் கேள்வி கேப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. (கடைசியில் ஆர்டர் கொடுத்தும் சேராமைக்கு காரணம், அந்த உட்கார இடம் கொடுக்காத காரணமாயும் இருக்கலாம்)

சரி.. உக்கார இடம் கொடுக்கலாமா வேண்டாமா?? என்று ஒரு பட்டி மன்றம் நடத்தி அதுக்கு நம்ம கம்பரை நடுவரா வச்சா என்ன தீர்ப்பு சொல்லுவார் தெரியுமா? அவரும் நம்ம கட்சிங்க.. (சாரி..சாரி… நானும் கம்பர் கட்சிதானுங்க)

அப்பத்தான் வீடணன் ராமர் அணிக்கு வந்து கொஞ்ச நேரம் தான் ஆவுது. அனுமன் இலங்கையில் செய்த சாதனைகள், & ராவணன் பிளஸ் மைனஸ் எல்லாம் தெரிந்தவர்கள் சொல்லலாம் என்று அறிவுப்பு வருது ராமனிடமிருந்து. லேசாக… எழுகிறார் வீடணன்.. அமர்ந்தே பதில் சொல்லுங்க. இது அன்பாய் ராமவார்த்தைகள். தாமரை மலர் போன்ற கண்களை உடைய ராமன் முழுதும் அறிந்தவனான (Resourse Person – வளநபர்) வீடணனை அமர்ந்தே பதில் சொல்ல வைத்தாராம்.

உட்கார இடம் தர மறுப்பது இன்றைய நாகரீகம். உட்கார்ந்தே பேசலாம் என்பது கம்ப நாகரீகம். முடிவில் கம்பனின் பாடல் பாடல் தருவது என் நாகரீகம்.

எழுதலும் இருத்தி என்றிராமன் ஏயினான்முழுது உணர் புலவனை முளரிக் கண்ணினான்பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்தொழுது உயர் கையினான் தெரியச் சொல்லினான்.

ஒரு மரியாதைக்கு உக்காரச் சொல்லிட்டா, அவர் என்ன கால் மேல் கால் போட்டா உக்கார்ந்தார். அதான் இல்லை. கையினை மேலே தூக்கி அமர்ந்தே வணக்கம் சொல்லி முழுதும் சொன்னாராம். நாம கத்துக்க வேண்டிய சங்கதி கம்பர் கிட்டெ நிறைய்ய இருக்கு.

சிரிக்கும் சிவன்


இப்போதெல்லாம் எந்த வீட்டிற்கு சென்றாலும் அங்கே
வரவேற்பரையில் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் (லாஃபிங் புத்தா) சிரிக்கும் புத்தர் சிலை தான்.

விதம் விதமான வடிவங்களில் நிறங்களில் அளவுகளில் இருந்தாலும் மாறாது பொதுவாய் இருப்பது அந்த ஒரு
சிரிப்பு மட்டும் தான்.

எந்த விழாவாக இருந்தாலும் தவறாது பரிசுப்பொருள்
பட்டியலில் இருக்கவும் இந்த சிரிக்கும் புத்தர் தவறுவதில்லை. சிலர் அதனை பூஜை அறையில் வைத்து வணங்குவதையும் பாத்திருக்கேன்.

அதுவும் தோளின் மேல் பையை சுமந்திருக்கும் சிலைக்கு
வியாபார நிறுவனங்களில் நல்லாவே கிராக்கி இருக்கு.

தத்துவம் தான் என்ன? வாய் விட்டு சிரிச்சா… நோய்
விட்டுப் போகும். அட்லீஸ்ட் இந்த சிரிக்கும் புத்தா
பொம்மை பாத்தாவது சிரிச்சி நாம சந்தோஷமா இருக்க மாட்டோமா என்ற ஒரு சின்ன நப்பாசை தான்.

சிரிக்கும் புத்தா சரி… அது என்ன சிரிக்கும் சிவன்? இதென்ன
புது கலாட்டா?? என்று கேக்கீகளா?? அதுக்குத்தானே
இவ்வளவு பெரீய்ய்ய்ய்ய பீடிகையோடு ஆரம்பிக்கேன்.

வடிவேல் அய்யோ.. அய்யோ என்று கெக்கே பெக்கேன்னு சிரிக்கிற மாதிரி திருவதிகை – ங்கிற ஊரில இருக்கிற கெடில நதிக்கரையில நம்ம சிவன் சிரிக்கிறாராம்.

அதை தன்னோட அந்தக்கால மொபைல் கேமிராவில் திருநாவுக்கரசர் படம் பிடிச்சி வச்சிருக்கார்.

அது சரி… ஏன் சிவன் சிரித்தார்??

காரணம் இது தானாம். இடப்பக்கம் இருக்கும் பார்வதி சட்டென எதுக்காகவோ திரும்பி இருக்கிறார். மயில் தான் கொத்த வருதோன்னு அப்பொ சிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு கொஞ்சம் பயந்து பின் வாங்கிச்சாம். சிவன் தலை மேலே இருக்கிற சந்திரனும் ஐயயோ தன்னை விழுங்கப் போவுதோன்னு பயந்துகிச்சாம்.

அடப்பாவிகளா… எல்லாருமே எனக்குள்ளே தானே கீரீங்க…
அப்படியும் ஏன் தான் பயந்து சாகுறீங்களோன்னு
சிரிக்கிறாராம் சிவன்…

பாட்டு பாக்கலாமா:

கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளையோர் மயிலென்று ஐயுற
கிடந்த நீர்ச்சடைமிசை பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகுதலை கெடில வாணரே

மக்களே இனி சிரிக்கும் புத்தரோடு சிரிக்கும் சிவனையும் தேடிப் பிடியுங்கள்…