பாமரன் பார்வையில் ஃபாரின் – 85


பதினாறு வயதினிலே படம் பாத்திருப்பீங்க. கமல் ரஜினியை விட மயிலின் அழகு கண்ணில் இருக்குமே!… இருக்கட்டும்… இருக்கட்டும்..

அந்தப் படத்தில் ஒரு டயலாக்… இதுக்கு முன்னாடி…இதுக்கு முன்னாடி… என்பதாய் வரும்.

மயிலை அப்படியே மறந்து விட்டு, இந்த டயலாக் நினைவுக்கு வந்த இடம் மலேசியாவின் அருங்காட்சியகமான டயம் டணலில்..

நாமெல்லாம் கணக்கு போட என்ன செய்வோம்.. கால்குலேட்டரில் தட்டுவோம்.

அதுக்கு முன்னாடி?

லாக்ரதம் டேபிளை உயயோகிப்போம்.

அதுக்கு முன்னாடி?

ஸ்லைடு ரூல்… அட…அப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லையே…

இதோ பாருங்கள்…

பாமரன் பார்வையில் ஃபாரின் – 84


தமிழ்த் திரையுலகம் நமக்கு பல சொற்கள், புதுப் பொருள் தரும் சொற்றொடர்களையும் தந்திருக்கிறது.

சம்பவம்

அவனா நீ?

தேவையில்லாத ஆணி

அரசியலில் சகஜமப்பா

அதான் இது

அது வேற வாயி

பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?

இப்படி அவற்றில் சில.

மலேசியாவில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை பத்திரப்படுத்தி, காட்சிக்கும் வைத்திருந்தனர். . எனக்கு என்னவோ அந்த கவுண்டமணி ஜோக்கை விட பெட்ரோமாக்ஸ் தொடர்பான இன்னொரு சம்பவம் (!) தான் நினைவுக்கு வந்தது.

நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் ஓர் ஊர்வலத்தில் வாசிதபடி சென்று கொண்டிருந்தாராம். அப்போது அருகில், அவரின் ஒரு வாசிப்பைக் கேட்டு, தான் தூக்கி வந்த பெட்ரோமாக்ஸ் லைட்டை சபாஷ் என தூக்கிப் போட்டு, மீண்டும் பிடித்தாரம்

அந்த சபாஷ் தனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருதை விடவும் உயர்வு என அவரே சொன்னாராம்.

இனி பெட்ரோமேக்ஸ் லைட் பார்க்கும் போதெல்லாம் வித்வான் ராஜரத்னம் பிள்ளை நினைவுக்கு வரட்டும்.

பாமரன் பார்வையில் ஃபாரின் – 83


மலேசியாவின் டயம் டணலில், அரிக்கேன் விளக்கு வைத்திருந்தார்கள். இந்த தலைமுறை மொபைல் ஃபோன் விளக்கு மட்டுமே அறிந்தவர்களுக்கு இதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. இணையத்தில் அரிக்கேன் விளக்கு தலைப்பில் ஒரு நல்ல கவிதை இருந்தது.



இதோ உங்களுக்காய்…


நான் அரிக்கேன் விளக்கு !
லாந்தர் என்று எனக்கு ஒரு பெயர் உண்டு..
இருப்பினும் புயல்வந்தாலும் அணையாததால்
ஆங்கிலேயன் எனக்கிட்ட பெயர்
அரிக்கேன் விளக்கு !

பொழுது சாயும் வேளையில்
கிராமத்துத் திண்ணைகளில்
என் கண்ணாடி கவசத்தை
கரிபோகத் துடைத்துக் கொண்டிருக்கும்
பாட்டிமார்களை வேடிக்கை பார்த்த
அந்த அரை நூற்றாண்டுக்கு
முன்னர் பிறந்த பெயரன்கள்
என்னோடு நன்கு பரிச்சயப் பட்டவர்கள் !

போன பிறந்தநாளுக்கு
நட்சத்திர உணவு விடுதியில்
எனது போலிகளை அலங்கார
விளக்காய் பார்த்த உங்கள்
இன்றைய பேரன் என்னை
கூகுளில் தேடிக் கொண்டிருக்கலாம் !

பொள்ளாச்சி சந்தைக்கு
நெல்மூட்டை ஏற்றி அசைந்து
செல்லும் மாட்டு வண்டிகளுக்கு
அன்று நான்தான் கலங்கரை விளக்கம் !

மணிச் சத்த சந்தத்தோடு
முணுமுணுத்த நாட்டுப் பாடலுக்கு
அன்றே அசைந்திடும் ஒளிகொடுத்து
ஒலி ஒளி காட்சிகள் கிராமத்து
மண் சாலைகளில் அரங்கேற்றியவன் !

வறியவனோடு
வாழ்ந்ததனால்தானோ
என்னவோ இன்னும் என்னை
தேர்தல் சின்னங்களில்
விட்டு வைத்திருக்கிறார்கள் !

இன்றும்
நரைகண்ட மனிதனின்
மனப் பரணுக்குள்
கொஞ்சம் வெளிச்சமாய்
மிஞ்சியிருக்கும் நான்
சிலசமயங்களில் கவிதையாய்
உருவெடுப்பதுண்டு !

யாரோ அனுபவித்தவர்கள் தான் எழுதி இருக்கிறார்கள்.

நன்றி : ஜி ராஜன் அவர்களுக்கு

தொப்பி கழட்டிய வணக்கங்க…


PaPaKa

[என் நூலானா பாமரன் பார்வையில் கம்பனைப் படித்து 10-02-2014 ல் முனைவர் தஞ்சை மா அய்யாராஜு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு இதோ. T N கிருஷ்ணமூர்த்தி என்ற என் பெயரினை, தமிழ் நெஞ்சன் (Tamil Nenjan) கிருஷ்ணமூர்த்தி என விரிவு செய்து என்னை மெருகு ஏற்றியவர் அவர். நன்றி ஐயா.. நன்றி. அந்தக் கடிதத்தினை அவரின் அனுமதி பெற்றுத் தருகின்றேன்]

ஒரு தமிழனின் பார்வையில் அந்தமான் தமிழ் நெஞ்சன்

அந்தமான் தமிழ் நெஞ்சன் T N கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படைப்பான “பாமரன் பார்வையில் கம்பன்” எனும் அரிய நூலைப் பயின்றேன். நான் என் வாழ்க்கையோட்டத்தில் எத்தனையோ நூல்களைப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் அல்லது புரட்டியிருக்கிறேன். சில நூல்களை மட்டுமே கற்றிருக்கிறேன். அவற்றுள் ஒரு சிலவற்றையே பயின்றிருக்கிறேன். (பயிலுதல் என்பது கற்றுப் பயிற்சித்தல் எனப் பொருள்படும்). நான் பயின்ற சில நூல்களில் இரண்டு நூல்களுக்கு மட்டும் நான் ரசிகனாகி இருக்கிறேன்.

ஒன்று… எஸ் இராமகிருஷ்ணனின் “கதா விலாசம்”

மற்றொன்று T N கிருஷ்ணமூர்த்தியின் “பாமரன் பார்வையில் கம்பன்”

காரணம், “பாமரன் பார்வையில் கம்பன்” ஓர் புதுமைப் படைப்பு, அற்புதப் படைப்பு, பிரமிக்க வைக்கும் படைப்பு, அதன் நடை இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாரும் கையாண்டிராத மணிப்பிரவாள நடை. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வட்டார வழக்கு மாறி மாறி நடை பயிலும் தெளிந்த நீரோட்ட நடை. இது உயர்வு நவிற்சியன்று. உண்மை நவிற்சி [ஓஹோ… இப்படியும் காக்கா பிடிக்கலாமோ என நெனக்கக் கூடாது]
ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு, நச்சுன்னு இருக்கு, சூப்பரப்பு! இத குத்து டைட்டில்னு சொன்னா எல்லாருக்கும் தெள்ளத்தெளிவா புரியும்னு நெனக்கிறேன்.

பொதுவா ”முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சு போட நினைக்காதே” ந்னு சொல்லுவாங்க… ஆனா தமிழ் நெஞ்சன் ஒவ்வொரு பகுதியிலும் அதை எதோட கொண்டாந்து பொறுத்தமா, இருக்கமா.. கொஞ்சமும் நழுவாத படி முடிச்சுப் போட்டிருக்கார்னு பாக்கிறப்போ… மொழங்காலு மொட்டைத் தலை என்ன… வெற்றிடத்தில் கூட முடிச்சுப் போடற தெறமை அவருக்கு இருக்கு…[ஆமா நீங்க பொறந்த ஊரு முடிச்சூருங்களா?]

கட்டிப்புடி… கட்டிப்புடிடா… ங்கிற குத்து டைட்டிலெ மனசுலெ ஏதேதோ கனவோட புரட்டினேன்… நிலமையும், சமயமும் தெரியாமெ கட்டிப்பிடிக்க நெனச்சா… பொசுங்கிப் போயிடுவே மவனேன்னு எச்சரிக்கை.. இது ஒன்னு சும்மா சாம்பிளுக்குத்தான். இப்படி ஒவ்வொரு குத்து டைட்டில்லயும் அவரு சொல்ற விஷயத்தெ நெனெச்சா… ஒரே பிரமிப்பா இருக்கு. இப்படி எல்லாம் எழுதியுருக்கியே, என் செல்லம்னு… அப்படியே ஆரத் தழுவி, கட்டிப்புடிச்சு, நச்சுன்னு நச்சுன்னு ஒரு முத்தம் கொடுக்கனும் போல இருக்கு. [ஆம்பளையா இருக்கிறதலெ எவ்வளவு வசதி பாருங்க… இல்லேன்னா உஷா அம்மாவோட நெற்றிக்கண்ணுக்குத் தப்ப முடியுமா]

ஐயா தமிழ் நெஞ்சனே… உங்க படைப்பை பயின்ற போதும், இப்பவும் எனக்குப் பொறாமையா இருக்கு.. அது எப்படீங்க உங்களுக்கு மட்டும் இது சாத்தியப்படுது?.

அந்தமானிலிருந்து சென்னைக்கு மதியம் ஒரு மணிக்குப் ஃபிளைட். எல்லாரையும் ஒரு குயிக் ரவுண்ட் பாத்துட்ட்ட்ப் போகலாம்னு 9 மணிக்கே மகிழ்வுந்தில் (Pleasure – Ambassodor மட்டுமே புழக்கத்தில் இருந்த காலத்து Translation) பயணித்தேன். அப்போது தான், என் கைகளில் பா பா க. நேரம் போனதே தெரியவில்லை. 12 மணிக்கே ஏர்போர்ட் வந்து விட்டோம். டிக்கெட், ஐடெண்டிகார்ட், பேக்கேக், ட்ராலி அவசரத்துலெ பா.பா.கவை வண்டியிலேயே விட்டுவிட்டேன். Boarding Pass வாங்கி Waiting ரூமில் இருந்த போது பா.பா.க – என் மூளையைத் தட்டியது. யார் யாரோடோ தொடர்பு கொண்டேன். கிடைப்பதற்குள் Boarding தொடங்கிவிட்டது.

பா.பா.க – வைப் பிரிந்தது மனதைப் பிழிந்து எடுத்தது…. பார்க்கில் காதலியுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும் போது.. “ஐயோ… அப்பா…..” என தலையில் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு… வேகமாக நடையைக் கட்டிய காதலியைப் பிரிந்தவன் போல. [என்ன? சொந்த அனுபவமா…? அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலீங்க]

அதுக்கப்புறம்…நாலு நாள் கழிச்சு நண்பர் மூலமா பா.பா.க என் கையில் கிடைத்தது. அசோக வனத்துலெ இருந்த சீதையின் கையில் அநுமன் இராமனின் கணையாழியைக் கொடுத்த போது “ சீதை வாங்கினள், கண்களில் ஒத்தினள், நெஞ்சில் புதைத்தனள், வீங்கிப் புடைத்தனள்” [என் வரிகளை முழுங்கிவிட்டு கருத்தை மட்டும் கையாள்றியா? – கம்பர் கோபப்படுகிறார்] எனக் கம்பர் கூறுவார். அதுக்கும், அதுக்கும் மேலே நான் ஆனந்தப்பட்டேன். பா.பா.க எனக்கு மீண்ட சொர்க்கமாகப் பட்டது. கிடைத்த அன்றே முழுதும் படித்து முடித்தேன். உடனே இந்தப் பாராட்டுரையை எழுதத் தொடங்கினேன். [கலைஞரைப் பாராட்டும் வாலி வைரமுத்து மாதிரி நானும் பட்றேனா…ஐய்யோ… அந்த அளவுக்கெல்லாம் நமக்கு வராதுங்க…]

’கஷாயம்’ என்பது பல மூலிகைகளைக் கொண்டு தயார் செய்யப்படுவது. பார்க்கவும் குடிக்கவும் ஒரு மாதிரி இருந்தாலும் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ‘கஷாயம் வேண்டாம்பா… ஏதாவது ‘சிரப்’ இருந்தா குடுங்க டாக்டர் எனக் கேக்கிற காலம் இது. [என்ன இது இந்த ஆள் ட்ராக் மாறி போறாரேன்னு நெனக்கிறீங்களா! இல்லங்க… படிங்க] அந்த கஷாயம் மாதிரி தான் கம்பனின் வரிகள். பார்த்தா புடிக்காது… படிச்சா..ருசிக்காது… இருந்தாலும் குடிச்சித்தான் ஆகனும். கம்பனைப் படிச்சித்தான் ஆகனும்..

என்ன செய்யலாம்…? சிரப்பு, இல்லாட்டியும் சுகர் கோட்டட் மாத்திரை பாலிசியை நம்ம தமிழ் நெஞ்சனும் புடிச்சிகிட்டார். கம்பக் கஷாயத்தை கொம்புத்தேனுலெ கலந்துட்டார். இந்த வித்தையை சிறப்பா, செம்மையா செய்திருக்கிற தமிழ் நெஞ்சனை.. பாமரனா ஏத்துக்க என்னாலெ முடியலைங்க… பா.பா.க வுக்குப் பதிலா.. “கம்பக் கஷாயம் கொம்புத்தேனில்” எனப் படைப்பிற்குத் தலைப்பிட்டிருந்தால் இன்னும் கச்சிதமா பொருந்தி இருக்குமோன்னு தோணுது.

ஐயா, தமிழ் நெஞ்சனே… போதாதய்யா… போதாது… இந்த மாதிரி வேணும். இன்னும்.. இன்னும்.. பத்தாயிரத்துலெ ஒரு நூறைத்தான் தொட்டிருக்கீங்க.. பாக்கி இருக்கே ஏராளம்…! அதுகளையும் தொடுங்க (நான் தொடுங்கன்னு சொலறதில் வேறு எதுவும் அர்த்தம் இல்ல) அந்த அனுபவத்தை சுகத்தை சொல்லுங்க… இந்த வேண்டுகோளோட once again தொப்பி கழட்டிய வணக்கங்க… (அதாங்க Hats off to you) ஹாங்… வர்ட்டா…!!

அன்புடன்
முனைவர் மா அய்யாராஜு
துனைக்கல்வி இயக்குநர் (ஓய்வு)
மேடவாக்கம் – சென்னை.

பி கு:

இன்னாடா இந்த ஆளு நம்ம ஸ்டைல அப்படியே ஃபால்லோ பண்ணியிருக்கானேன்னு பாக்கிறீங்களா? தலைவரோட ஸ்டைல அப்படியே ஃபால்லோ பன்றவன் தானே ரசிகன்.

இப்படியும் பார்க்கலாமா?


TNK with Dr Saraswathi Ramanathan at A

[பாமரத்தனமாய் கம்பனை எழுத ஊக்கம் அளித்து, என நூலான பாமரன் பார்வையில் கம்பனுக்கு முனைவர் சரசுவதி இராமநாதன் அளித்த அணிந்துரை…. சாரி… மிகப் பெரிய கௌரவம்… இதோ உங்கள் பார்வைக்கு)

இப்படியும் பார்க்கலாமா?

(முனைவர் சரசுவதி இராமநாதன்.
தமிழ்ப் பேராசிரியை – பணி நிறைவு, பள்ளத்தூர்.
தலைவர், கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.
தலைவர், இசைப்பிரியா, திருவாரூர்.
தலைவர், சரசுவதி இராமநாதன் அறக்கட்டளை, பள்ளத்தூர்.
தலைவர், ஔவைக்கோட்டம், திருவையாறு)

ஒன்பது வயதில் காரைக்குடி கம்பன் திருநாளில் பாட மேடையேறி, 10 முதல் 12 வயது வரை நடனம் ஆடி, அதே மேடையில் 22 வயது முதல் இந்த 74 வயதிலும் பேசிவரும் பேறு பெற்ற ஒரே பேச்சாளர் நானாகத்தான் இருக்க முடியும். அது குறித்து நான் இறையருளையும், குருவருளையும் வணங்கி மகிழ்கிறேன். பலப்பல கோணங்களில் கம்பனை அணுகி ஆராயும், அல்லது அரைத்த மாவையே அரைக்கும் எந்த அறிஞரும் சிந்திக்காத புதுக் கோணத்தில் கம்பரை அணுகிப் பல கட்டுரைகள் தந்துள்ள அந்தமான் தமிழ்நெஞ்சன் கிருஷ்ணமூர்த்தியை உளமார வாழ்த்துகிறேன். [ ”என்ன பார்வை உந்தன் பார்வை” என்று தலைப்பிட்டு முன்னுரை எழுதலாமா என எண்ணினேன்! சரிதானே?]

அந்தமான் தமிழர் சங்கத்துடன் எங்கள் ஔவைக்கோட்டம் இணைந்து மாநாடு நட்த்திய போது அறிமுகமான சிரித்த முகத்துத் தமிழ்நெஞ்சனின் மடிக்கணினி (அதாங்க லேப்டாப்) கம்பனை கலகலகம்பர் என அறிமுகப் படுத்தியது. கம்பன் கலகலக்க வைத்தாரோ இல்லையோ, கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகள் கலகலப்பாக, பாமரனையும், கம்பனையும் இணைத்து மகிழ்கிறது. எளிய யாவரும் அறிந்த திரைப்பாடல் வரிகளைத் தலைப்பாக்கி, நடைமுறைப் பேச்சுத் தமிழில் எழுதி அரிய செய்திகளைக் கம்பன் வழி நின்று விளக்கும் அற்புதக் கலவை இவரது கட்டுரைகள்! புதிய சிந்தனைகளை நூல்கள் வழி வெளியிடுவோர் (தேவகோட்டை) மணிமேகலைப் பிரசுரம், எங்கள் அண்ணா தமிழ்வாணனின் அன்புக் குடும்பம் வாழ்க! வளர்க!

எடுத்தவுடனேயே “காக்கா பிடித்த” விசுவாமித்திரர் நமக்கு அறிமுகமாகிறார். நமக்குத் தமிழ் நெஞ்சன் பாடம் சொல்கிறார், “யாராவது காக்கா பிடித்தா உண்மைன்னு நம்பிடாதீங்க. தள்ளி நின்னு ரசிங்க.” (பக்கம் 4)

டி எம் எஸ் என்ற மாபெரும் இசைக்கலைஞன் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்றும், ‘என் கதை முடியும் நேரமிது’ என்றும் பாடியது தான் அவரது திரையிசைப் பயணத்தை முடித்ததா? தசரதன், “இத்தனை நாள் மன்பதை காத்து நான்பட்ட வேதனைகளை இனி என் மகன் இராமன் படட்டும்” என்று சொன்ன வேளைதான் இராமனின் துன்பங்களுக்கு ஆளானதோ? சிந்திக்க வைக்கிறார். எதையும் எதையும் முடிச்சுப் போட வைக்க முடிகிறது. (பக்கம் 6)

வரமா – சாபமா – தசரதன் புத்திர சோகத்தால் மரணம் அடைவான் என்று சலபோசன முனிவன் சாபம் கொடுத்தான். அப்போது தசரதனுக்குப் பிள்ளை இல்லை. ஆகவே பிள்ளை பிறப்பா என மகிழ்ந்தான். அது வரமாயிற்று என்றது அழகு! இப்படி கட்டுரை வருவது ‘வரமா? சாபமா?’ (பக்கம் 9)

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்த அகத்தியன் குறுமுனி. இராமனோ நெடுமையால் உலகளந்த நெடியோன். இருவரும் தழுவிக் கொண்டனர். கம்பனின் வார்த்தை ஜாலம் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றாகப் புலப்பட்டிருக்கிறது. நமக்கும் காட்டுகிறார். (பக்கம் 13)

ஒரு மாலையால் நிலத்தைக் குழி விழச் செய்ய முடியுமா? அவ்வளவு அழுத்தமாகப் பந்து வீசும் “பௌலரா” கூனி என்று கூஇயின் ஆத்திரத்தின் வேகத்தை நாம் அறிய வைக்கிறார் கம்பர்; இல்லை; தமிழ் நெஞ்சன். (பக்கம் 21)

‘பெர்முடாஸ்’ என்ற அரைக்கால் சட்டை நாகரீகம் எங்கும் பரவிவிட்ட்து. குகன் அப்படித்தான் போடு வந்தான். ’காழம் இட்ட குறங்கினன்’ என்ற தொடரின் விளக்கம் நன்று. (பக்கம் 25)
‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்ற வீரப்பனின் வசனம் – சூர்ப்பனகை வாயில் ’உல்டா’ ஆகிறது. (நானும் தமிழ் நெஞ்சன் நடைக்கு வந்து விட்டேனா?) மண்ந்தால் மாதவன் அன்றேல் மரணதேவன் – என்கிறாளாம். (சூர்ப்ப – முறம், நாகா – நகம்) (பக்கம் 31)

‘பெண் பிறந்தேனுக்கென்றால் என்படும் பிறருக்கு?’ என்ற கம்பன் வரி, ‘ செந்தமிழ்த்தேன் மொழியால்’ பாட்டில் ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ?’ என வைத்த்து என்கிறார். சரிதான். ‘கம்பன் கொடுத்த கவிப்பிச்சை ஓரளவு’ என்று கவியரசரே பாடியுள்ளாரே!

நைய்யாண்டியா?

ஏங்க! கிருஷ்ணமூர்த்தி மட்டும் திரைப்பாடல், பட்த்தலைப்புகளை எடுத்தாளலாமா? நான் செய்யக் கூடாதா? கிண்டலில் சமுதாயச் சிந்தனைகளைத் தருவது நல்ல கலைஞர்களுக்கு அழகு! வெறும் சிரிப்பலைகளை மட்டும் வீசாமல் அந்தமான் ஆழ்கடல் பவளம் போல அழகான சமுதாயச் சிந்தனைகளைத் தந்துள்ளமை போற்றற்குரியது. “மனசு முழுக்க மனையாளை வச்சிக்குங்க! பார்க்க நல்லது. பர்சுக்கும் அல்லது” – காலத்திற்குத் தேவையான புத்திமதி இது! ( வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே – பாட்டின் விளக்கம் தொடங்கி, சூர்ப்பநகை இராவணனிடம் பேசுவது வரை கலகலப்புத்தான்.)

’எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்’ விவேக் ‘காமெடி’ எய்ட்ஸ் த்டுப்புக்கான விளம்பரமாயிற்று! தசமுகன், சீதையின் அழகில் மயங்கி உடம்பு பருத்துவிட்டானாம். அவள் கிடைப்பாளா, மாட்டாளா என்ற ஏக்கத்தில் இளைத்து விட்டானாம்!

“வீங்கின, மெலிந்தன வீரத்தோள்களே!” என்றார் கம்பர். தமிழ்நெஞ்சன் ஒரு காலத்தில் கம்பனைக் கிண்டல் செய்தவர் தான்! பத்துத்தலை எந்த வரிசையில் இருந்தாலும் ’பேலன்ஸ்’ ஆகாதே!” என்றவர்! இப்போது இராமாயணத்தை வரிவரியாக விழுந்து விழுந்து படித்து நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். “எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டார்?”

அறை சிறை நிறை

கும்பாபிஷேகத்தின் போது கருடன் வந்த்து என்று தொடங்கி, சடாயு என்ற் கழுகு, இராமனுக்குக் கோபத்தை அடக்கு என்ரு அறிவரை சொன்னதை வளர்த்து,கம்பனின் பாதை அறப்பாதை, அமைதிப் பாதை என முடித்த்து அருமை! லார்ட் மயோ கொலை, அந்தமான் செல்லுலார் சிறை என்று அனைத்தையும் இணைத்து விட்டாரே! அபார மூளை!

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம தோணுதடி’ என்ற பாட்டில் வெற்றிலை இடிக்கும் சத்தம் இடையிசையாக வரும். அதிலே மனம் லயித்து, ‘கொட்ட்டைப் பாக்கும் கொழுந்து வெத்திலை’ குஷ்புவின் ஆட்ட்த்தில் ஈடுபட்டு, அப்பாவின் வெற்றிலை போடும் பழக்கத்தினை அசை போட்டு, ஊரெல்லாம் வெற்றிலையை மென்று வீதியுல் துப்பும் நம் (துப்பு உள்ள துப்பு கெட்ட) மனிதரை நினைத்து வருந்துகிறார். அரக்கிமார் வீசி எறிந்த நகைகள் அனுமனை நடக்க விடாமல் தடுத்ததாம் இலங்கையில் – கம்பர் காட்சிக்கு வம்பர் எங்கெல்லாம் போய் விளக்கம் தருகிறார் பாருங்கள்!

சோகத்திலும் சிரிக்கலாம் – கடவுள் துணையிருந்தால், கடவுள் கூடவே இருந்தால்!

கம்பரைப் படிக்கணும், அன்போடு, இன்னும் அன்பு சேர்ந்து படிக்கணும்.

கம்பன் கணக்கில் புலி. வெள்ளம் என்பதன் விளக்கம் நமக்கு அதைக் காட்டுகிறது.

எதிர்காலத்தில் நிகழ்காலமாய் நினைத்துத் தேசத்திற்கு விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியாரைத் தினம் நினைவு கொள்வோம்.

பொண்டாட்டி இல்லாத நேரத்தில் அதிக்க் கவனம் தேவை!

மனப்பாடமா வாய்ப்பாடுகள் சொல்லும் இந்தியாவின் மனக்கணக்குத்திறன் உஅலக அரங்கில் அவனை உயர்த்தியுள்ளது.

ஏழ்மையைக் கழித்து, செழுமையைக் கூட்டி, சமதர்ம்ம் பெருக்கிட வழி செய்வோம்.

பேசித் தீருங்க பிரச்சினைகளை!
பிரச்சினைகளை அலசிப் பார்த்து முடிவெடுங்க!

நியூட்டனின் விதி – 3 ‘ஒவ்வொரு விசைக்கும் அதற்க்குச் சம்மான எதிர் விசை உண்டு’ என்பது. வாலி சுக்ரீவனைப் போருக்கழைக்குமிட்த்தில் (கிட்கிந்தா காண்டம் – வாலி வதைப்படலம்) இதைக் கம்பன் முன்னரே சொல்லி இருக்கானே! என வியக்கிறார் ஆசிரியர். ‘வாழைப்பழத்தில் ஊசி’ நுழைந்த மாதிரி வாலியில் மார்பில் இராமபாணம் சென்றது. பின் நின்றது! இதை வாழைப்பழ (கரகாட்டக் காரரின் கவுண்டமணி செந்தில்) நகைச்சுவைக் கலாட்டாவில் தொடங்கி, விளங்கிவிட்டு, ஆமாம் எது வாழைப்பழம்? எது ஊசி? என்று கலாய்க்கிறாரே! அழகு!

கழுதைக்குப் பின்னாலும், ஆபீசருக்கு முன்னாலும் அடிக்கடி போய் நிற்காதே! – நல்ல அறிவுரை.

அரசு அலுவலகத்திற்குப் போன கடிதம் மாதிரி ஒரு பதிலும் இல்லை. நல்ல அங்கதம் (Satire). கலைஞரை வாலியும் வைரமுத்துவும் புகழ்வது போல எனக் கிண்டல் வேறு!

மென்மையாகக் காலைப்பிடித்துக் கொடுத்து எழுப்பினால், (கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்) எழுப்பிப் பாருங்கள் சண்டை சச்சரவே இருக்காது. நல்ல தீர்வு! காலில் விழும் கலாச்சாரம் – கம்பனில் நிறைய உண்டு.

தேவையில்லாத கவலைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்! சீதையைப் பிரிந்த இராமன் இயந்திர மனிதன் (Robot) மாதிரி இயங்கினான் எபதால் கம்பனுக்கு எந்திரன் பற்றித் தெரிந்திருக்க்க் கூடும் என்கிறார்.

நொடிப் பொழுதில் விபத்து. ரேஷன் கார்டிலிருந்து அவன் பெயரே நீக்கப்படுகிறது.

திமிங்கில கிலங்கள் (திமிங்கிலங்களையே கொன்றுவிடும் கடல்வால் உயிரினம்) என்று கம்பன் குறிப்பது வியப்புக்குரியது.

நிறைவாக்க் கம்பன் மேலாண்மை குரு என்று கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறார். இன்று காலம், ஆற்றல், மனாழுத்தம் எல்லாவற்ரிற்கும் மேலாண்மை தேவை என்கிறோம். அவையனைத்தும் கம்பநாடனின் இராமகாதையிலே உள்ளன என்றுஇந்த நிர்வாக மேலாண்மையாளர் சொன்னால சரியாய்த்தானே இருக்கும்!

இன்னும் எழுதுக!

எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது அத்தனை செய்திகள்! அதுவும் எளிய இனிய நடையில்! பாமரனிடம் கம்பனைக் கொண்டு செல்லும் அரிய முயற்சி இது! தமிழ்நெஞ்சனே! இனிய கம்பநேசனே! அந்தமானைப் போன்ற அழகான நூலைத் தந்த உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க! வளர்க! இன்னும் எழுதுங்கள்.

என வாழ்த்தும்,
சரசுவதி இராமநாதன்