ஒரு அடிமை சிக்கிட்டான்யா…


valluvar

ஒரு வேலையெ ஒரு ஆளுகிட்டெ குடுக்கிறதுக்கு முன்னாடி, அவனாலெ அதெ செய்ய முடியுமான்னு பத்து தடவெ பலவிதமா பாத்து யோசிச்சி அப்புறமா அவன் கிட்டெ கொடுத்து வேலெ வாங்கனும். இது ஐயன் வள்ளுவன் சொன்னதுங்க. இதெத்தான் Resource Allocation  அது இதுன்னு ஏகமா பக்கம் பக்கமா எழுதி இருக்காய்ங்க. ஆனா நம்ம ஐயன் வள்ளுவன் ரெண்டே வரியிலெ நச்சுன்னு சொல்லிட்டார். வள்ளுவரை இந்தியா முழுதும் அறிமுகம் செய்ததில் பெரும் பங்கு நம்ம அப்துல் கலாம் ஐயாவையே சேரும். அவர் தனது பதவி ஏற்பு விழாவில் குறள் ஒன்றினை தமிழில் கூறி அதன் பொருளை வழக்கமான ஆங்கிலத்தில் கூறியது நினைவில் இருக்கலாம் பலருக்கு. அந்தமான் தீவின் கல்வித்துறை இயக்குனர் கூட (வட இந்தியர் தான்), யார் அந்த வள்ளுவர்? நம்ம கலாம்ஜீ அடிக்கடி சொல்றாரே என்று விசாரித்தார். பொறுப்பாய் குறளின் ஆங்கில வடிவத்தினை அவரிடம் சேர்த்தோம். (ஏதோ நம்மால் முடிந்தது).

சமீப காலமாய் அந்த வேலையை உத்தராகண்ட் எம் பி திரு தருண்விஜய் அவர்கள் செய்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் அந்தமான் வந்திருந்தார். அவரது வருகையினை அறிந்து, அந்தமான் நண்பர் காளிதாசன் அவர்கள் அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார். வாய் மொழி செய்தி பரவி 25க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கூடி விட்டனர் அவர் தங்கியிருந்த இடத்தின் வரவேற்பரையில். சரளமாய் அவர் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தேங்க்ஸ் என்று கேட்டு கேட்டு பழகிய நம் காதுக்கு ”நன்றி” ”நன்றி” என்று அவரிடமிருந்து கேட்பது கூட வித்தியாசமாய்த்தான் தெரிந்தது.

Tarun

குறள் தெரியாத அந்தமான், முழுமை பெறாது என்கிறார். அது போல் வட இந்தியாவில் குறள் அறிமுகம் இல்லாவிடில், அதுவும் முழுமை ஆகாது என்கின்றார் தருண்விஜய். அது சரி…. இம்புட்டு பிரியம் திருவள்ளுவர் மேலே எப்புடி வந்திச்சி? என்று கேட்டேன். ஒரு வேளை முன் ஜென்மத்தில் நான் தமிழனாய் இருந்திருப்பேன் என்று பதிலாய் சொன்னார். எப்படியோ, தமிழின் பெருமையினை பெருக்கிட தமிழர் அல்லாதவர் பலர் முன்னோடியாய் இருந்திருக்க,  இப்பொ இவர் கோடு போட்டு, ரோடும் போடுகின்றார். நாம ஜாலியா அதில் பயணிக்க வலிக்கவா செய்யும்?

சமீபத்தில் மும்பையிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார் அந்தமானுக்கு.. அவருடைய பையன் படிக்கும் பள்ளியில் இருந்து ஆசிரியர் அழைத்தாராம். அப்பா அம்மா ஆசிரியர் குழந்தை உறவு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இருபது அம்ச திட்டம் தந்து அட்வைஸ் மழை பொழிந்தாராம். கடைசியில் தான் அந்த அட்வைஸ் காப்பிரைட் உரிமையாளர் திருவள்ளுவர் என்றாராம் அந்த மராட்டிய ஆசிரியை. அவர் கணவர் பாண்டிச்சேரியில் வேலை பார்க்கும் போது கத்துகிட்டது என்றாராம். [ஆனா நம்ம மக்கள் பாண்டிச்சேரிக்கு போகும் காரணமே வேறெ…]

மறுபடியும் அந்த வேலையினை பாத்துத் தரும், குறளுக்கே வருவோம். கார்பரேட் கலாசாரத்தில் யார் ஒரு வேலையை திறம்படச் செய்ராகளோ, அவர்கள் தலையில் அந்த வேலையெக் கட்டியிரணும். அரசுத்துறை கொஞ்சம் விசித்திரமானது. வேலையெச் செய்யும் ஆளுங்க கிட்டெ வேலையெக் கொடு. மத்தவனுக்கு சம்பளத்தெக் கொடு. இது அரசிதழில் எழுதப் படாத (அ)தர்மம். புதிய டெக்னாலஜியினை கற்பதற்க்கு அரசு ஊழியர்களின் தயக்கம் இருக்கும். காரணம், தெரிந்து கொண்டால் தலையில் வேலையெக் கட்டிடிவாகளேங்கிற பயம் கூடவே இருக்கும். தெரியலை என்றால், தெரியாது என்று தப்பிச்சிரலாம்லெ…

ஆனா சமீபத்திய மோடிஜீயின் அரசு அதுக்கும் ஆப்பு வைத்து விட்டது. தெரியாத விஷயத்தெக் தெரிஞ்சிக்கிங்கொ என்று அறிவுரை வழங்கியுள்ளது. வாராவாரம் புதன் கிழமை 10 முதல் 11 மணிவரை தெரிந்தவங்க தெரிஞ்ச விசயத்தெ தெரியாதவங்களுக்கு (தெரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கும் சேத்துதான்) சொல்லித் தர உத்திரவு வந்திருக்கு. மத்த எடத்திலெ நடக்குதோ இல்லையோ, அந்தமானில் அந்த வேலை அடியேன் மேற்பார்வையில் (நான் இருக்கும் துறையில்) தொடர்ந்து நடக்குது.

10527311_729670610453353_8831568050053572345_n

ஆனா, ஒரே ஆளுகிட்டெ ஓவர் லோடா வேலையெக் கொடுக்கிறது நல்லதா? கெட்டதா? இந்த மாதிரி டவுட்டு எல்லாம் வந்தா நேரா கம்பர் கிட்டெ போய்க் கேட்டா போதும். அவரு சூப்பரா பதில் சொல்லிடுவாரு. நீங்களும் வாங்க ஒட்டுக் கேளுங்க நாம பேசுறதெ. (ஒட்டுக் கேக்கிறதும் ஓட்டுக் கேக்கிறதும் தான் நம்ம தேசிய குணமாச்சே..)

கம்பரே…… எனக்கு ஒரு டவுட்டு…

கம்பர் கேள்வியினை கேக்கும்முன்னர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரே ஆளு மேலெ வேலையெத் தலையி்ல் கட்டுறதிலெ ரெண்டு சிக்கல் இருக்கு. ஒண்ணு அவரோட டென்ஷன் ஏறுது. அடுத்து, அந்த துறையிலெ இந்த ஆளை விட்டா வேற ஆளே இல்லைங்கிற ஒரு கெட்ட இமேஜ் உருவாக்கும். இது ரொம்ப மோசமான இமேஜ். இதெ தவிர்க்கும் வேலையிலெ மும்முரமா இருக்கனும். அதுக்கு பிளான் B பிளான் C தயாரா வச்சிருக்கிற மாதிரி அடுத்தடுத்த ஆளுகளெ தயாரா வச்சிருக்கனும்.

கம்பரே… கேக்கிறேன்னு கோவிச்சுக்கக் கூடாது. வக்கனையா இவ்வளவு பேசுற நீங்க அதெ ஃபாலோ செஞ்சிருக்கீங்களா?

தெரியும் கிட்டப்பா…இப்படி கேப்பேன்னு. நம்ப ராமாயணத்திலேயும் இந்த மாதிரி ஒரு சீனு வருது. அங்கதன் தூதுப் படலம் போய் தேடு கிடைக்கும்.

தேடினேன். கிடைத்தது. இராவணனுடன் யுத்தம் துவங்கும் முன்னர் இன்னொரு முறை தூதுவர் ஒருவரை அனுப்பலாமே என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கிறார்கள். யாரை அனுப்பலாம்? நாமளா இருந்தா என்ன செய்வோம்? பழைய ஃபைல் தேடிப் பாத்து, ஏற்கனவே இந்த வேலையெ அனுமன் பாத்திருக்கான். அவன் தலையிலெ கட்டு என்போம். ஆனா கம்பன் மேன் மேனேஜ்மெண்ட் வேறு மாதிரி. அனுமனை அனுப்பினா, வேற ஆளு இல்லையோங்கிற கெட்ட இமேஜ் வந்திடும். அதனாலெ இப்பொ அங்கதனை அனுப்பலாம் என்று முடிவு செஞ்சாகலாம்.

மாருதி இன்னம் செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏகத்தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

கம்பரோட ஃப்ரீ யோசனை நீங்களும் கடைபிடிக்கலாமே. ஃப்ரீயா கெடெச்சா நாம ஃப்னாயில் கூட குடிப்போமெ. இதெச் செய்ய மாட்டோமா?

அப்புறம் ஏதாவது ஃப்ரீ ப்ளானோட வாரென்…

உற்சாகபானமின்றி உற்சவம் புதுவையில்


ennai paathu 1

”இந்த வீக் எண்ட்டா… சாரி என்னால் முடியாது. பாண்டிச்சேரிக்கு போகிறேன்” என்று சில இடங்களில் சொன்னேன். எல்லோரும் ஒரே விதமாய், ”ம்..ம்… தனியாத்தானே போறீங்க… என்ஜாய்…” என்று வாழ்த்து சொன்னார்கள். அப்படி என்ன பாண்டிச்சேரியில் இருக்கு? அரவிந்த ஆஸ்ரமம், ஆரோவில், பாரதியார் இல்லம் இப்படி இவற்றுக்கு எல்லாம் இல்லாத ஒரு கிக்கான விஷயம், இளைஞர்களை மட்டுமல்ல, அனைத்து பாண்டிச்சேரி தரிசனவாசிகளையும் உற்சாகமூட்டும் அதிசயம் அந்த ”உற்சாகபானம்” தான். சமீபத்திய வார இறுதியின் என் புதுவைப் பயணம் பற்றிய எண்ண ஓட்டங்களின் பதிவு தான் இது.

’பாண்டிச்சேரிக்குப் போனோமா, நாலு பெக் போட்டோமோ, குப்புறப் படுத்தோமா என்று இல்லாமல் எதுக்கு இப்படி விலாவாரியா எழுதணும்?’ என்று நீங்களும் கேக்கலாம். கேக்காட்டியும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா? ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்கள், ’புதுவை விஜயம் பற்றி உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள்’ என்று முகநூலில் ரெண்டுவரி அன்புடன் எழுதி இருந்தார். இந்த தூண்டில் போதாதா நமக்கு? இதெ ரொம்பப் பெருமையா என்னோட பொண்ணுகிட்டெ சொல்லி பீத்திகிட்டேன் நான், ’பாத்தியா சிட்னியிலேர்ந்து என்னோட எழுத்துக்கு வரவேற்பு’ என்று. பட்டென்று பதில் கிடைத்தது, “இது ஏதோ வடிவேலுவை கிட்னி எடுக்கிறதுக்கு கூப்பிட்ற மாதிரியில்லெ இருக்கு” என்று… இந்தக் காலத்து பசங்ககிட்டெ வாயெக் குடுத்தா இப்படித்தான்.

ஒரு காலத்தில் சரக்கு அடிக்க பாண்டிச்சேரி போவாய்ங்க… இப்பொ நல்ல சரக்கு அடிக்க அங்கே போவதாகக் கேள்வி. அப்பொ நான் எதுக்கு போனேங்கிற கேள்வி தானே… இந்த குடி பத்தின கேள்விக்கு இந்தப் பரமக்குடிக்காரன் (கவனிக்க, குடிகாரன் அல்ல), காரைக்குடிக்கு போய் வந்த சின்ன ஃப்ளாஷ்பேக்கோட ஆரம்பிக்கணும். போலாமா.. அப்படியே..

கடந்த மார்ச் மாதம் காரைக்குடிக்கு கம்பன் விழாவில் கலந்து கொள்ளும் இரண்டாம் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் வழக்கம் போல் ஓர் இலக்கியப் பட்டிமன்றம் இருந்தது. அந்தமானில் இருப்பதால் இது போன்ற பட்டிமன்றங்களை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாது போனதால், அந்தக் கிடைத்த வாய்ப்பை நன்கு அனுபவித்து ரசித்துப் பார்த்தேன். பரதன், சடாயூ கும்பகர்ணன் பற்றிய தலைப்பில் காரசாரமாய் விவாதம் ஓடியது. அதில் ஒரு பக்கம் பேசிய பேச்சாளர் தன் பேச்சு முடிந்தவுடன் நைஸாய் நழுவிச் சென்று விட்டார். விசாரித்ததிலும், அவர் பேசும் முறையிலும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெளிவாயிற்று.

அடுத்த நாள் அதே வக்கீல் ஃபேஸ்புக்கிலும் இருப்பது தெரிந்தது. நட்புத்தூது கேட்டுவிட்டு, சுடச்சுட “இப்படி பாதியில் பட்டிமன்றத்தில் எழுந்து போனீர்களே, இது நடுவருக்கு அவமரியாதை செய்வதாய் ஆகாதா? நீதிமன்றத்தில் இப்படிச் செய்தால் நீதிபதி தப்பா நெனைக்கமாட்டாரா?” இப்படிக் கேட்டேன், சின்னப்புள்ளெத் தனமா. பொறுப்பாய் பதில் வந்தது. ஏற்கனவே இப்படி விரைவில் செல்ல வேண்டி, கம்பன் கழகத்தாரிடம் அனுமதி பெற்றதும் தெரியத் தந்தார். (கம்பன் கழகமே அனுமதி தந்து விட்டது. நடுவில் நீ என்ன நாட்டாமெ? என்று மனதில் நினைத்திருப்பாரோ!!!).
மனசுலெ நெனைக்கிறது எல்லாம் எப்படி நமக்கு ஃபுல்லாத் தெரியும்? அது சரிரிரீரீ…ஏதோ ஃபுல் சமாச்சாரம் சொல்ல வந்த மாதிரி இருந்ததே… அது தான் ஓடுது.. அந்த ஃப்ளாஷ் பேக் இன்னும் முடியலை.

அந்த பாதியில் போனவர், இவ்வளவு நல்ல மனுஷரா இருப்பார் என்பதை நான் கனவிலும் எதிர்பாக்கலை. 40 ஆண்டுகாலமாய் கம்பருடன் தொடர்பில் இருப்பவர் அவர். நானு கம்பரைத்தொட்டு 40 மாசம் கூட ஆகலை.. அவரோ, 14 புத்தகங்கள் எழுதியவர் சாம்பிளாக சில புத்தகங்கள் அனுப்பி வைத்தார். எவ்வளவு பெரிய மனிதர், அதுவும் பாரதிவிருது, பாரதி பணிச்செல்வர் விருது, கம்பர் சீர் பரவுவார் விருது, இலக்கியச்சுடர் என்று விருதுகளின் அணிவகுப்பே வைத்திருக்கும் தழும்பாத நிறைகுடம். அவர் தான் திருமிகு த இராமலிங்கம் அவர்கள்.

IMG_0599

என் நூலான ’பாமரன் பார்வையில் கம்பனை’ அனுப்பி வைத்தேன். பாண்டிச்சேரிக்கு வாங்களேன்… கம்பன் விழா இருக்கிறது. அழைத்தார். அத்தோடு நில்லாமல் பலருக்கு அறிமுகம் செய்ய, மேடை ஏற்ற, போக்குவரத்து என்று எல்லாத்துக்கும் ஒரு கரிசனம் காட்டினார். (இவரெப்பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டோமே என்று அரித்து எடுத்தது… கவுண்டமனி செந்திலிடம் கேட்டது போல்)

இப்படித்தான் நாம புதுவைக்கு வந்து சேர்ந்தோம். இப்படி வந்த காரணத்தினாலே, ஃபுல்லு ஆஃபு அந்தப் பேச்சுக்கே எடம் கெடையாது இப்பொ. விழா துவங்கும் முதல் நாள் இரவே ஒரு ரவுண்ட் அடித்தேன். (நீங்க மறுபடியும் அந்த ரவுண்ட் நெனைக்காதீங்க). கம்பன் அரங்கை. கிட்டத்தட்ட அந்தமான் அரங்கை விட மூன்று மடங்கு பெரியது. அரங்கம் நிறையுமா? என்ற சந்தேகம் வழக்கமாய் வந்து தொலைத்தது..

காலையில் குறித்த நேரத்தில் ஆளுநர், முதல்வர், மந்திரிகள் என்று வர, விழா துவக்கம் களைகட்டியது. பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.. கம்பன் விழாவை குடும்ப விழா ஆக்கிவிட்டனர் இப்புதுவை மக்கள். முதல்வர் பேசினாலும் சரி, கவர்னர் ஆங்கிலத்தில் பேசினாலும் சரி, கம்பன் பாடல்களைப் பாடும் போதும், கம்பன் போற்றிகள் போரடிக்காமல் சொன்ன போதும், வழக்காடுமன்றம், நீண்ட சொற்பொழிவு இப்படி எல்லா இடத்திலும் அமைதி காத்தமர்ந்த மக்கள், உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அனைவருக்கும் இடையில் சுண்டல், இத்யாதி நொறுக்குத் தீனிகள் வருவதும் அரங்கை கட்டிப் போட வைக்கிறது. ஆனால் அப்போது மட்டும் கை தட்டல் குறைந்து விடுகிறது. நமக்கென்ன கம்பன் படைத்த இராவணன் மாதிரி கூடுதல் கையா இருக்கு, சாப்பிட்டுக் கொண்டே கையும் தட்ட??

முதல் நாள் நிகழ்ச்சியில் சுகி சிவம் ஐயா வராமல் போக, அதே தலைப்பில் உடனடிப் பொறுப்பு ஏற்று செவ்வனே பேச்சில் வென்றவர் நம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் ஐயாவே தான்.

சிறப்புரை ஆற்ற வந்த, அறவாழி அவர்கள் தனது பேச்சில் சீதையும் மண்டோதரியும் ஒரே அழகு உள்ளவர்கள் என்று குறிப்பிட்டார். மதிய உணவு நேரத்தில் (கொஞ்சம் அடக்கமாய்) கேட்டேன், ’கம்பர் எங்கே அப்படிச் சொன்னார்?’ என்று. கிடைத்த பதில்: இராமன் சொன்ன அடையாளங்கள் வைத்து, அனுமன் பார்வைக்கு அப்படி பட்டதாய், கம்பன் சொன்னதாய், ஐயா சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்புறம் சாப்பாட்டைப் பாப்போம். அரசே, முன்வந்து கம்பன் விருந்தினர்களை கௌரவித்தமை இன்னும் மகிழ்ச்சி. வேளை தோறும் புரவலர்கள் விருந்து உபசாரம் அந்தமான் வரை மணக்கிறது. காரைக்குடி செட்டி நாட்டை, அதன் உபசரிப்பை, முந்திவிட வேண்டும் என்ற முனைப்பு மூச்சுக்கு மூச்சு தெரிகின்றது. ஆரோக்கியமான போட்டி. எப்படியோ நமக்கு நல்ல சாப்பாடு கெடெச்சா போதாது???

ஐயா இராமலிங்கம் தயவில், என்னையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள். இப்படி எதையாவது வம்பா எழுதி கடைசியிலெ கம்பரை புடிச்சி இழுத்ததுக்காக. மேடையிலிருந்து இறங்கி வந்ததும், பக்கத்தில் இருந்தவர் ஆச்சரியமாய் விசாரித்தார்.

அந்தமானிலிருந்தா வந்தீக? எவ்வளவு செலவாகும்?

நான்: ஆமா.. 10000 ஆகும்

ஆச்சரியத்தில் அவர்: போக வரவா?

என் பதில்: இல்லை. வர மட்டும். போய் வர 20000.

அவர் தொடர்ந்தார்..இந்த 100 ரூபா பொண்ணாடை வாங்க, 20000 ரூவா செலவழிச்சீகளா? [என் பொண்டாட்டி கேக்க மறந்த கேள்வி இது… ஞாபகமா யாரோ முகம் தெரியாத நபர் அக்கரையோட கேட்கிறார்] என்னத்தெச் சொல்ல, மன்மோகன் பதில் சொல்லி(?) முகம் திருப்பினேன். அப்புறம் அந்தாளு மொகத்தெப் பாக்குறப்பெல்லாம் கிறுகிறுங்குது…

அந்தமானில் இப்படி தலைசுத்துது என்பது கிறுகிறுன்னு வருது என்பார்கள். ஒரு முறை நான் டாக்டரிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாத தமிழர் (அட நானும் அந்த ஜாதி தானுங்க) இந்த கிறுகிறுன்னு வருது என்பதை ஹிந்தியில் சொல்லுங்க என்றார். எனக்கும் அப்படியே தலை சுத்த ஆரம்பித்தது.

புதுவை பானமோ மற்ற எந்த பானமோ அருந்தினால் அந்த கிறுகிறுன்னு ஏறுவது தான் அதன் உச்சமான கிலுகிலுப்பு… அதிகம் ஏறிவிட்டால் வாந்தி அது இது என்று பார்ட்டியே கெட்டு விடும்…

கம்பராமாயணத்தில் இப்படி ஒரு கிறுகிறுன்னு சுத்தும் இடம் வருது. அனுமன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, வேகம்னா வேகம்… அம்புட்டு வேகமாப் போகின்றார். நாம வழக்கமா ரெயிலில் போனா, எதிர்திசையில் மரங்கள் எல்லாம் ஓடுமே…பாத்திருப்பீக.. அதேமாதிரி இங்கே தெற்கு வடக்கா தானே மத்தது மூவ் ஆகனும்..? இங்கே தான் கம்பனின் மூளை வேலை செய்யுது. கிறுகிறுன்னு சொன்னது இதுக்குத்தான். வழக்கமா கிழக்கு மேற்கா சுத்தும் சூரியன் மேற்கு கிழக்காய் சுத்தினதாய் கம்பர் சேட்டலைட் சொல்லுது. ஒரு வேளை கம்பரும் அனுமனோட மேலே போய், அட சூரியன் நிக்குது..பூமி தான் சுத்துது அதுவும் உல்டாவா என்று சொல்ல வந்திருப்பாரா… இருக்குலாம். அவர் தான் சகலகலா வல்லவராச்சே..

வாங்க அப்படியே லேசா பாட்டு பாக்கலாம்.

தடக்கைநா லைந்து பத்துத் தலைகளு முடையான் றானே
அடக்கியைம் புலன்கள் வென்ற தவப்பயனறுத லோடும்
கடக்குறி யாகமாகங் கிழக்கெழு வழக்கு நீங்கி
வடக்கெழுந் திலங்கை செல்லும் பரிதிவா நவனு மொத்தான்.

என்ன தலை கிறுகிறுன்னு சுத்துதா?

[பாண்டிச்சேரியில் உதவிய நாகராஜுலு, அவர்தம் சகோதரிகள் குடும்பத்தார் & ரமணி ஆகியோர்க்கு நன்றி.]

கிளி (மூக்கு) ஜோசியம்


தெரியாத்தனமா தகவல் அறியும் உரிமை பத்தி தமிழில் ஒரு புத்தகம் எழுதப் போய், அந்தமானில் அதன் கொள்கை விளக்கப் செயலாளர் ரேஞ்சுக்குப் ஆயிட்டேன். அடிக்கடி பல்வேறு துறையினருக்கு பயிற்சி தரவும் அழைப்பு வருகிறது. முதலில் ஒரு மணி நேரம் மட்டும் எடுக்க ஆரம்பித்த பாடம், பின்னர் ஒன்றரை மணி நேரம், அரை நாள், முழு நாள் என்று போய் இப்போது ரெண்டு நாள் தொடர்ந்து வகுப்பு எடுக்கும் அளவுக்கு வந்து விட்டது. (ஏசி ரூமில் பைல்களைப் பாத்துகிட்டு இருக்கு வேண்டிய ஆளுக்கு இப்படி, கால் கடுக்க நின்னு, கத்தி கிளாஸ் எடுப்பது தேவையா? – இது என் வீட்டுக்காரியின் புலம்பல்). கையில் இருக்கும் டாபிக்கோ செமெ dry சப்ஜெக்ட். இதெய் மதிய சாப்பாட்டுக்கு பின்னரும் தொடர்வது தான் பெரீய்ய சவாலான விஷயம்.

ஒரு மனிஷனால் 20 நிமிஷத்துக்கு மேலே எந்த ஒரு சப்ஜெக்ட்டையும் கவனம் சிதறாமல் கேக்க முடியாது என்கிறார் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள். பேச்சாளர்கள் அதுக்காக நகைச்சுவை, சில இடங்களில் அழுத்தமெல்லம் குடுத்து பேசனுமாம். (நானு மதியம் சாப்பாட்டுக்கு பிந்தைய நேரங்களில் Quiz நடத்தி விடுவேன். சின்ன டப்பாவில் நம்பர்களை எழுதி, சுற்றுக்கு விடுவேன்..) அலர்ட்டா இருக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கு. சிலர் சொல்வர் Eye Contact ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. அதையும் அப்பபொ செய்வதுண்டு. கண் பார்த்து பேசுவதை விட, எனக்கு ஏனோ மூக்கு பார்த்தே பேசவே பழகி விட்டது. பொய் சொல்லும் போது பலர் மூக்கின் மேல் விரலைக் கொண்டு செல்வர் என்கிறார்கள். (இப்பொ தெரியுதா நான் ஏன் மூக்கு பாத்து பேசுறேன்னு?)

மனிதர்களையும் சரி… கடவுள் சிலைகளைப் பாக்கும் போதும், இந்த மூக்கு பாக்கும் பழக்கம் வந்து விட்டது. தென்னாட்டு கடவுள்களின் மூக்கும், வட நாட்டுக் கடவுள்களின் மூக்கும் சற்றே வித்தியாசமாப் படுது. எனவே மனசு லயிப்பதில்லை. வடநாட்டு கிருஷ்ணனும் ராமனும் ஏதோ பொம்மை மாதிரித்தான் தெரியுது என் கண்ணுக்கு.. இந்த மூக்கு செய்யும் சேட்டைகளால். இதே மூக்கு பிரச்சினையால் ஹிந்தி சேனல்களில் வரும் சிவனைப் பார்த்தால் பக்திக்குப் பதிலா சிரிப்பு தான் வருது. (சில சமயம் எரிச்சலாவும் இருக்கு).

இந்த மூக்கு நோக்கலில் ஏதாவது சிக்கல் வந்திருக்கா?? ஏன்..ஏன் இந்தக் கொலெவெறி? ஏன்.. நல்லது நடந்ததைப் பத்தி நீங்க, கேக்காட்டியும் சொல்றேனே.. அது ஒரு பாமர மக்கள் விமானம் ஏறாத (டெக்கான் ஏர்லைன் ஒரு ரூபா டிக்கட் தராத) காலம். அந்தமான் வர கப்பல் மட்டும் தான் கதி. பாண்டிச்சேரி நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் அதில் வருவதாய் தகவல் கிடைத்தது. கப்பலில் காற்று வாங்கப் போகும் போதும், சாப்பிடப் போகும் போதும், அனைவரின் மூக்கைத்தான் பாத்துட்டே வந்தேன். ஒரு மூக்கு மட்டும் ரொம்பப் பரிச்சயமான மூக்காய்ப் பட்டது. நீங்க, (நண்பர் பெயர் சொல்லி) இவரின் அப்பாவா என்றேன். உண்மையில் அவர் தானாம். எப்படி நம்ம திறமை??. (இப்பொ அந்த வேலையை, ஒரு மொபைல் கால் செஞ்சிட்டு, என்னோட மூக்கு புலனாய்வுத் துறைக்கு வேலையே இல்லாமல் போயிடுச்சி).

எனக்கு மூக்கில் அடிக்கடி வியர்க்கிறது. என்ன செய்யலாம்? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே. அவரோ, கழுகிற்கு மூக்கில் வேர்க்கிற மாதிரி என்பார்கள். நீங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம் என்றார். சி ஐ டி வேலைக்குப் போனேனோ இல்லையோ, சி ஐ டி (CIT- Coimbatore Institute of Technology) ல் தான் படித்தேன். சி ஐ டி ரேஞ்சுக்கு போகிற மாதிரி சில வேலைகளும், சிலபல என்கொயரிகளும் கைக்கு வரத்தான் செய்யுது.

கிளி மாதிரி பொண்ணு என்பார்கள் ஆனா, மூக்கு மட்டும் அப்படி இருந்தா, கிளி ன்னு கிண்டல் செய்வாய்ங்க. ஆனா கிளி மூக்கு மாபம்பலம் என்றால் பொட்டி பொட்டியா பொட்டி போட்டுட்டு வாங்குவாங்க. ஒரு வேளை பொண்ணு கிளி மாதிரி கலரிலும், கூண்டில் சொன்ன பேச்சு கேக்கிற ஆளா இருக்கனும்கிறது தான் காரணமா இருக்குமோ!!. ஆனா கிளி சொன்னதை திருப்பிச் சொல்லும். கல்யாணம் கட்டின ஆளோ மனைவி சொல்வதையே திரும்பச் சொல்வது தான் வேடிக்கை.

மூக்குக்கும் முழிக்கும் என்ன சம்பந்தம் என்றே விளங்கலைங்க. மூக்கும் முழியுமா இருக்கா என்றும் சொல்வதுண்டு. தான் பார்த்த, தன்னைப் பாதித்த பெண்களின் மூக்கும் முழியும் வைத்து மனதிற்குள் கம்பேர் செய்து கொண்டு, சரி பரவாயில்லை என்று சொல்வது தான் அந்த ரகம். எல்லாம் விநாடிகளில் நடந்து விடும்., எனக்கென்னவோ எந்த ஹாலிவுட் நடிகைகளைப் பாத்தாலுமே கூட நம்மூர் ஜோதிகா, தமன்னா மாதிரி வராது என்று தான் படுது.. (என்ன,… பழைய ஆட்கள் பேரை சொல்றேன்னு பாக்கீகளா…சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான். உங்களுக்கு வேணும்னா, லேட்டஸ் ஆளுக பேரை வச்சிகிடுங்க).

மூக்குக்கு மேல கோபம் வருதே என்கிறார்கள். மற்ற எந்த உறுப்புக்கும் இல்லாத அலாதி சிறப்பு இந்த மூக்குக்கு மட்டும் ஏன், கோபத்தோட சம்பந்தப் படுத்தி விட்டார்கள்? எனக்கென்னவோ மனித உடலில் முதலில் ரீச் ஆகும் பகுதி மூக்காக இருக்கும் போல படுது. (அடிக்கடி கமல் முதல் வடிவேல் வரை மூக்கில் ரத்தம் வருதல் கவனிக்க) அந்தமான் தீவுகளின் நிகோபாரி ஆதிவசி மக்களின் மூக்கு சப்பையாய் இருக்கும். இப்போது சற்றே மாறி வருகிறது. ஏன் என்று கேட்க, ஓர் ஆதிவாசி நண்பர் சொன்னது. முன்பெல்லாம் நமது முழு உணவே இளநீர் தான், இளநீ வெட்டி குடிக்க ஏதுவா மூக்கு அமைப்பு இருந்திருக்கு. இப்பொ ஸ்ட்ரா போட்டு குடிப்பதால் மூக்கில் மாற்றம் தெரிகிறதாம்.

நிறம் மாறும் பூக்கள்.. கேள்விப்பட்டிருப்பீங்க. நிறம் மாறும் மூக்கு பத்தி கேள்விப்பட்டதில்லையா என்று ஒரு போர்டு பாத்தேன். மேலும் விவரங்களுக்கு அணுகவும் என்று கம்பர் பெயர் போட்டிருக்கு. நாம தான் இந்த மாதிரி புதுசா யாரு போர்டு வச்சாலும், என்ன ஏது என்று விசாரிச்சிடுவொமில்லெ.. அய்யன் கம்பர் ராமபிரானின் மூக்கு பாத்து வியந்து போய் நிக்கிறார். சரி அந்த மூக்குக்கு உவமை சொல்ல சரியான ஐட்டம் ஏதும் கையில் மனசுலெ சில்லலெ. Facebook ல் போட்டுப் பாத்திருக்கார். சும்மா Like தான் வருது. ஒண்ணு ரெண்டு Comment மட்டும் தான் வந்ததாம்.

நீலக்கல்லு கிட்டேயிருந்து ஒரு கமெண்ட்: நான் இந்திரனிடமிருந்து வருகிறேன். குற்றம் இல்லை. சிறப்பு இருக்கு. எங்கிட்டே இருந்து வரும் ஒளிக்கொழுந்து ஓகேவா??
மரகதமணி: என்னோட ஒளியின் திரட்சி எப்படி? மாறவே மாறாது..

பச்சோந்தி: கலரெல்லாம் மாறுவேன். எல்லாப் பூச்சியும் பிடிப்பேன். உட்டா இந்திரக் கோபம் என்ற பூச்சி கூட பிடிப்பேன்..என்னெ சொல்லேன்…ப்ளீஸ்..

இதுக்கெல்லாம் மயங்கிடுவாரா..கம்பர்.. உவமை சொல்ல முடியாத மூக்கு தான் சரியான விடை என்று கூட்டத்தோட சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று thread ஐ முடித்து விட்டார்.

எள்ளா நிலத்து இந்திர நீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோதள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆகுமோ

திருவாளர் கம்பர் திருமூக்கு பத்தி சொன்னத பாத்து நீங்க ஏங்க மூக்குக்கு மேலெ விரலை வச்சிட்டீங்க??