கொண்டாடி வரும் வளையல்


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -18]

சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரம் பெரீய்ய சர்ச்சையினை உண்டாக்கிவிட்டது. ஆனா அந்தமான் அதன் மறு பக்கம். மதநல்லிணக்கத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே இத்தீவினைச் சொல்லலாம். நான் கல்யாணம் செஞ்சிகிட்டு (அடெ…முதல் முறையாகத்தாங்க) ஒரு வீட்டுக்குப் போனா, அங்கே ஆரத்தி எடுத்து வரவேற்றது ஓர் இஸ்லாமிய சகோதரி.

அதே சகோதரி பரமக்குடிக்கு வந்தபோது, கருவுற்ற சேதி அறிந்து பரமக்குடியின் முறையில் வளைகாப்பு போல் எல்லாம் செய்து, சிகை அலங்காரம் செய்து ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு எல்லாம் போய் ஃபோட்டோ எடுத்து (அட…அது மொபைல் எல்லாம் வராத காலமுங்கோ); சரி எல்லாத்தையும் விடுங்க..ஆனா வளையல மட்டும் விடாமெ வாங்க. வள்ளுவர் கிட்டே போய் மைக் நீட்டுவோம்; ஏதோ கருத்துச் சொல்ல ரெடியா இருக்கார் அவர். அவர் எப்பவும் 7 வார்த்தைகள் தான் பேசுவார். சில புரியும் சிலபுரியாது. (ரஜினி மாதிரி என வச்சிக்கலாமே)

இப்பொல்லாம் நம்ம தமிழில் வந்த சமாச்சாரங்களை ஆங்கிலத்தில் சொன்னால் தான் ஓஹோ என்று ஒத்துக்கிறாகளாம். நாமளும் வள்ளுவன் பாட்டுக்கு ஆங்கிலக் கோணார் வச்சிப் பாக்கலாமே… (மொதல்லெ பாட்டப் போடப்பா…இதோ இதோ போட்டேன்)

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும்
ஒண்டொடிகண்ணே உள.

Pleasure of all five senses – sight, hearing, taste, smell and touch-
reside together in this girl with shiny bangles. She pleases me completely. (இது ஐயன் சொன்ன மாதிரி தெரியலையே..? வெள்ளைக்காரப் பாஷையில் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்..) நம்ம கையில் போடும் ஐட்டம் இந்த ஒண்டொடி = ஒண் + தொடி – shiny bangle ஒளிரும் வளையல் (என்ன…. எல்லாரும் வளையல் வாங்கக் கிளம்பிட்டீங்களா?)

குன்றியனார் அழைத்தார். அவர் ஹீரோ, கொஞ்சம் போக்கும் வரவுமாய் இருக்கும் பார்ட்டியாம். ஒரு காலகட்டத்தில் வீட்டு அம்மணிகிட்டே வந்து தானே ஆகணும்? (எத்தனை படத்திலெ பாத்திருக்கோம்?) ஆனா வழியில் தோழி மறிச்சி…இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன் எனச் சபதம் (சூள்) வாங்கி, ஹீரோயின் கிட்டே சொல்லப் போனாளாம் .
ஒண்டொடியும் கூடவே வரும், படிச்சிட்டு கூடவே வாங்க…

பாசவலடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்டலயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே!

கொஞ்சம் ஆன்மீகப் பக்கமும் போயிட்டு வந்திடுவோம். (அப்பத்தானே, இந்த உலகம் நம்மை நல்லவன்னு நம்பும்) அப்பொ கவனமா வளையல் வரும் அந்த பக்திப்பாடல் தேடி எடுத்தாச்சி. (எல் ஆர் ஈஸ்வரி பாட்டு மாதிரி வச்சிக்கலாமே)

ஓதி னாய்மறை ஒண்டொடி வண்டமர் ஓதியாள்
பாதி யாய்படர் செஞ்சடை மேற்பணி சூடினாய்
நாதி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்
ஆதி யேஎன வல்லவர்க் கல்லலொன் றில்லையே.

அடேய் சிவனே… ஒளி வீசும் வளையல் அணிந்தவளும் வண்டுகள் விரும்பும் கூந்தலை உடையவளுமான உமையை ஒரு பாதியாக வச்சிருப்பவனே, படரும் செஞ்சடையின்மேல் பாம்பை அணிந்தவனே; கூத்தாடியே; ”வயல் சூழ்ந்த திருநனிப்பள்ளியுள் எழுந்தருளிய ஆதிமூர்த்தியே” என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை;

இந்தமாதிரிப் பதிகம் என்றால், நாம் எப்பவும் ஏதோ தேவாரமோ, திருவாசமோ எனத் தேட வேண்டி இருக்கும். ஆனா இது அதிலெல்லாம் இல்லை. இந்தக்காலத்திலும் இப்படியானப் பாடல்களை ”மதிசூடி துதி” எனப் பாடி வீ சுப்பிரமணியன் அவர்கள்(மரபுக் கவிதைகளாக) தந்துள்ளார் .

அப்படியே கார்நாற்பதில் நம்ம ஒண்டொடி பத்தி என்ன சொல்ல வாராக எனவும் பாத்துடலாமே… இந்ந ஒண்டொடி எதற்காக தலைவனை நினைத்து நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கிறாள். திரண்டு காட்டும் முத்துக்களைப் போல முல்லை நிலமெங்கும் மழைக்கட்டிகள் உருள்கின்றன. புயல் வீசுகிறது. வானம் மழை-அழகுடன் திகழ்கிறது. அவர் வந்துவிடுவார் அன்றோ? தோழி சொல்கிறாள்.

கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று;
எவன் கொலோ, ஒண்டொடி! ஊடும் நிலை?

கம்பன் கிட்டெ நாம கருத்தைக் கேக்காட்டி அவர் கம்பெடுத்து அடிக்க வந்திடுவார். அவரும் ரெடியா ஒரு பாட்டு தந்தார். விளக்கம் எதுவும் சொல்லாம புரியுதே என நினைத்தேன். இது காட்சிப் படல, மிகைப் பாடலாம் (இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ?)

தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள்.

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (16-10-2020)

மன்மதலீலையை வென்றார் உண்டோ….


manmadaleelai

சாதனை படைத்த இந்த பாடல் வரிகளின் பேக்கிரவுண்ட் தெரியுமா உங்களுக்கு? வீட்டில் யாரும் பெருசுகள் (தப்பி பிழைத்து) இருந்தால் கேட்டுப் பாக்கவும். அது காஃபி ஷாப் எல்லாம் இல்லாத ஒரு கற்காலம். தெருவில் நின்னு டீ சாப்பிடும் போது, இந்தப் பாட்டு போட்டால் அந்தத் தெருவே அந்தக் கடைக்கு வந்து டீ குடிச்சிட்டு போகுமாம். எலெந்தெப்பழம், ஓரம் பொ தொடங்கி தற்கால கொலவெறி பாடலுக்கெல்லாம் இல்லாத ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் அந்தப் பாட்டுக்கு இருந்திருக்கிறது. எளிய வார்த்தைகள், இனிய ராகம், எல்லாத்தையும் தாண்டி, தியாகராஜ பாகவதர் குரலும் ஓர் இனிய காரணம். அக்காலத்திலேயே பலரும் அந்தப் பாகவதரின் கிராப்பை வைத்துக் கொண்டனர். இன்றளவும் ”பாகவதர் கிராப்” என்று அந்த பாகவதருக்கு மரியாதை தந்தபடி உள்ளது.

manmadaleelai old

அதே பாடலை சில வருஷம் கழித்து ரீமிக்ஸ் (அப்போதே) செய்து பரமக்குடிக்காரனை குதிரை மீது ஏற வைத்து பின்னோக்கிப் பயணம் செய்ய வைத்தார் பாலசந்தர். இதைப் பத்திப் பேசும் முன்னர் சினிமாவும் சினிமா சேர்ந்த நிலமுமான பரமக்குடிக்கும் அதன் சினிமா தொடர்பும் ஒரு டச் செய்திட்டுப் போகலாம். கமலஹாசன் மூலம் சினிமாவுக்கும் பரமக்குடிக்கும் தொடர்பு வந்ததா? அல்லது சினிமாவில் ஊறிப்போன பரமக்குடியால் கமல் புகழ் பரவினதா? என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

பரமக்குடியின் கிழக்குப் பகுதி முழுக்க நெசவாளர்கள் வசிக்கும் பகுதி. செவிக்குணவில்லாத பொது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. வயித்துக்கு உணவே இல்லாத போதும், சினிமா பார்க்கும் உழைப்பாளர் உலகம் அது. அம்மாவின் மடியில் சவாரி செய்தும், முந்தானையைப் பிடித்து சண்டை போட்டு அரை டிக்கெட் எல்லாம் வாங்கி (நல்ல வேளை அந்த Date of Birth Proof எல்லாம் கேட்டு நச்சரிக்கவில்லை அப்போது) அப்புறம் மீசை முளைத்ததும் தனியே பார்க்கவும் வந்தது தான் எனது சினிமா பார்க்கும் வளர்ச்சிப் படிகள்.

வீட்டில் சினிமா பற்றிய விவாதங்கள் சொந்தக்காரர்கள் பற்றிப் பேசுவது மாதிரி எல்லாம் நடக்கும். (இப்பொல்லாம் குடும்பத்தோடு படத்தையே சேந்து பாக்க முடியறதில்லெ…அப்புறம் எங்கிட்டு அதெப் பத்திப் பேச….? ). பேச்சு வாக்கில், மன்மதலீலை படம் வந்திருக்காமே? என்று கேள்வி வர, நானும் வெளையாட்டாக, அதே பாகவதர் படம் தான்… புத்தம் புதிய காப்பியாக புதுப் பெயரில் ரிலீஸ் செஞ்சிருக்காக என்று சொல்லி வைத்தேன். வீட்டில் இருந்த அத்தனை டிக்கெட்டுகளும் அன்று சினிமா டிக்கெட் எடுத்தன.

பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வில்லங்கமான மன்மதலீலை படம் பத்தித்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? கமலின் கேரக்டர் ஒரு ஸ்திரிலோலர் (நம்மூர்காரருக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன?), சின்ன சபலபுத்தி அல்லது லேடீஸ் வீக்னஸ் என்பது போன்ற சாயலில் வெளுத்து வாங்கிய படம். அழகான மூஞ்சியெ அலங்கோலமாக்கியே பின்னிப் பெடலெடுக்கும் நபர்… இந்தக் கேரக்டரை சும்மா விடுவாரா என்ன?

படம் பார்த்து திரும்பி வந்த, வீட்டில் உள்ள மகளிர் படை எல்லோருமா சேந்து என்னையெ உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க… இனிமே நீ சொல்ற படமே நாங்க போகமாட்டோம் என்று சத்தியப்பிரமானம் வேறு நடந்தது தான் டாப். சின்னப் பையன் நீ எல்லாம் போயிடாதே, என்று அட்வைஸ் அம்புஜமாய் மாறினர் சிலர். எதையுமே செய்ய வேணாம்னு சொல்றச்சே, அதெச் செஞ்சே பாக்கும் குணம் தான் நம்ம ஜீன்லெயெ இருக்கே?? குருப் ஸ்ட்டி என்று (வழக்கமா எல்லோரும் சொல்ற பொய் தான்) சொல்லிட்டு மன்மதலீலைக்குள் நுழைந்தேன்.

ஓரளவு புரிந்த மாதிரி இருந்த்து. அதிகமாய் புரியாத மாதிரியும் இருந்தது. அந்தக் கேரக்டெரின் நீள அகல ஆழ உயரம் புரியாத வயதில் இன்னும் குழப்பங்கள் அதிகரித்தன. காமம் பற்றி புரிஞ்சும் புரியாமலும் இருந்த அந்த நேரத்தில் (இன்னும் அதன் நெளிவு சுழிவுகள் முழுசாய் தெரியும் என்று தைரியமாய் வெளியில் சொல்ல முடியவில்லை) மேலும் குழப்பங்கள் அதிகரித்தன படம் பார்த்த பின்னர். அதில் உச்சகட்ட குழப்பத்தில் ஆழ்த்திய காட்சி ஒன்று. கமல், தன் மனைவி உடை மாற்றுவதையும் கூட சாவி துவாரம் வழியாக எட்டிப் பார்ப்பது போன்ற காட்சி தான் அது. வீக்னஸின் உச்சகட்டமாய் சொன்னது, அந்த வயதில் புரியவில்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள்?

kamal eddipaar

தண்ணி அடித்தவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டுவதும், போதையில் கூட்டு பலாத்காரம் செய்வதும் ஏன் நடக்கிறது? அது தான் அவர்களின் இயல்பு நிலை என்று படுகிறது. சமூக நிர்பந்தங்கள், தானே தனக்குள் செய்து கொண்ட வேலிகள், சரி தவறு என்பதை நிர்ணயம் செய்யும் எல்லைக் கோடுகள், இமேஜ் இப்படி எல்லாமும் சேர்ந்து நல்லவனாக்கும் முயல்வில் வாழ்கிறான் ஒவ்வொரு மனிதனும். குடி, உள்ளே போன போது அதெல்லாம் மறந்து அப்படியே, இயல்பான சமூக விலங்காய் வாழ்பவன், சமூகம் மறந்த விலங்காய் மாறிவிடுகிறான்.

சுருக்கமாய், சுகி சிவம் ஐயா சொன்னது ஞாபகத்துக்கு வருது. மனுஷன் எப்பவுமே அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கிற சண்டையில் தான் வாழ்றான். பெரும்பாலும் அறிவு தோத்துப் போயிடும். நீங்களும் உங்களையே சின்னதா ஒரு டெஸ்ட் செஞ்சி பாத்துகிடுங்க. அதுக்குள்ளெ கம்பர் கிட்டே இருந்த்து ஓர் எஸ் எம் எஸ் வந்திருக்கு. பாத்திட்டு வந்திட்றென்.

தற்சமயம் கவரத்தி தீவில் (இலட்சத்தீவுகளின் தலைநகரே தான்) இருப்பதால் நெட் எல்லாம் சொதப்பி விட்ட்து. அப்படி இருந்தும் கம்பர் SMS மூலம் தொடர்பில் வந்துவிட்டார்.

”என்னப்பூ….இப்படி கதவு இடுக்கிலெ பாக்குறது நாமலும் எழுதி இருக்கோன்லெ….”

”ஐயோ…ஐயனே…. நானு ஏதோ சின்னப்புள்ளெத் தனமா கிறுக்குறேன்…நீங்க ஏதோ சீரியஸா சொல்ல வாரீக…”

கம்பர்: இப்பத்தானே… சுகி சிவம் மெஸேஜ் சொன்னே… அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டம்னு… நீ உணர்ச்சியில் மயங்கி ரசிச்ச ஸீன் அது… நான் அறிவு பூர்வமா எழுதின, எட்டிப் பாக்குற ஸீன் இருக்கு படிச்சிப் பாரு…

எங்கே டூர் போனாலும் கூடவே கொண்டு செல்லும் (மனைவி திட்டுவதையும் பொருட்படுத்தாமல்) கம்பராமாயணத்தை தேடினேன். அடெ..அடடெ.. அதே எட்டிப் பாக்கும் ஸீன். எங்கே? யாரு? எப்பொ?

ஊர் தேடு படலத்தில், கம்பர் படைப்பில் எட்டிப் பார்க்கும் ஹீரோ அனுமன். கமல் கேரக்டர் தான் (மன்மதலீலை படத்தில் தான்) எல்லாருக்கும் தெரியுமே? கம்பரின் அனுமனோ, பொருள்களை விரும்பும் ஆசை என்னும் கொடிய வினையையே வேரோடு பொசுக்கியவனாம் (எவ்வளவு வித்தியாசம் பாத்தீயளா?)

கமல் அப்படியே எட்டிப்பாத்தா, நம்ம அனுமனோ, நூல் மாதிரி… அடெ..அதுக்கும் மெல்லிஸா காத்தெவிட கம்மியா உரு மாறி சாவி துவாரத்திலெ பூந்து பாத்தாராம்.

இன்னிசை மழை மாதிரி, ரொம்ப ஒளி மழை பெய்யும் மாணிக்கத்தில் செஞ்ச சாவித் துவாரமாம் அது…. ம்… இலங்கை எப்படி எல்லாம் இருந்திருக்கு?

தேடியது சீதா தேவியாரை.. என்று சொல்லவும் வேண்டுமோ…
எஸ் எம் எஸ் குடுத்த்துக்கு தேங்க்ஸ் கம்பரே… இதோ உங்க பாட்டு உங்களுக்கே…

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூழினும் இன் இளங்காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ்வினை வேர் அற வீசினான்

இன்னும் வேறு எங்காவது எட்டிப் பாத்துட்டு வாரேன்…

ஒரு பெண்ணின் மனசெத் தொட்டு…


அந்தமானில் ஒரு காலத்தில் நான்கைந்து சினிமா தியேட்டர்கள் இருந்தன. காலப்போக்கில் திருட்டு விசீடிக்களும், நூற்றுக்கனக்கான சேனல்களும் வீட்டிற்கே வந்துவிட, எல்லா தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன. இப்போது மறுபடியும் தசாவதாரம், விஸ்வரூபம் மாதிரியான படங்களை தியேட்டர் எஃபெக்ட்களுடன் பார்க்க வேண்டிய சூழல் வந்துவிட, தற்போது ஒரு சினி காம்ப்ளெக்ஸ் வந்துள்ளது. டிக்கெட் 160 ரூபாய் என்பதை அதிகம் என்கிறார்கள் இத்தீவு மக்கள். பெங்களூர் மால்களின் டிக்கெட்டை விட குறைவு என்றால் யாராவது கேக்கிறாகளா? (ஆமா… மந்திரிமாலில் எவ்வளவு டிக்கெட்? என்று கேட்றாதீங்க… நம்ம பெங்களூர் தோஸ்த் கிரியோட காசில் படம் பாத்ததை எதுக்கு வெளியிலெ சொல்ல??)

சரி நாமளும் புது தியேட்டரை ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் குடும்பத்தோடு. 2 ஸ்டேட் ஹிந்தி படத்துக்கு. சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிக்குப் பிறகு அதே போன்ற “தமிழ்” கதாநாயகி கதைகளில் வந்துள்ள மற்றொரு படம். ஆனால் ஹாஸ்டலில் ஹீரோயினும் ஹீரோவும் ஒன்றாய் படுத்து உருள்வதும் நிரோத் வரைக்கும் காண்பிக்கும் போது குடும்பத்தோடு பாக்க நெளிய வைக்கிறது. வீட்டிலாவது ரிமோட்டை தேடலாம். பாக்யராஜ் மாதிரி காசு போட்டு தேட வைக்கவா முடியும்?

சின்னத்திரையில் படம் பார்க்கும் போது வேறுபல சிக்கல்களும் வரும். சமீபத்தில் கலைஞரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கவிதை பாடியதாகச் செய்திகள் சொன்னது. கூட இருந்த வீட்டுக்காரி, ”நீங்களும் தான் கவிதை எழுதுவீங்களே…எங்கே இத்தனை வருஷத்திலே, எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கீங்களா?” இப்பெல்லாம் கவிதை வடிவத்தில் கூட வில்லங்கம் வருவதை யாரால் தடுக்க முடியும். நீயே ஒரு கவிதை… உனக்கெதற்கு கவிதை? – இப்படி நாசூக்காய் முடித்தேன்.. அப்படியே மதுரையில் பள்ளிக்கூட அசிரியையாய் இருந்தவர் அந்தமானுக்கு வாழ்க்கைப்பட்ட கதையையும் பாக்கலாமே.. அது ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கப் போய் கல்யாணத்தில் முடிந்த கதை.

எனக்கு கல்யாணம், என்ற பேச்சை எடுத்தவுடனேயே, நான் என் பெற்றோறிடம் வைத்த முதல் வேண்டுகோள், அந்தமான் தீவுக்கு ஏத்த பொண்ணா பாருங்க என்பதைத்தான். அதற்காய் அவர்களை முதலில் அந்தமான் வரவழைத்தேன். மூன்று நாள் (மூன்றே நாள் தான்) பெரிய கப்பலிலும், மூன்று நாள் (மறுமடியும் மூனு நாளா….) சிறிய கப்பலிலும் பிரயாணித்து கமோர்ட்டா தீவை அடைந்தோம். ஓரிரண்டு கிலோமீட்டர்கள் மட்டுமே ரோடு உள்ள அழகான ஆதிவாசிகள் வசிக்கும் தீவு. (அம்பு ஈட்டி எல்லாம் இல்லாமல் அன்போடு பழகும் நிகோபாரி இன மக்கள்) இந்த ஊருக்கு வாழத் தகுந்த மாதிரியான ஆளைப் புடிங்க என்றேன்.

கையோடு ஒரு போட்டோவைக் கையில் கொண்டு வந்திருந்தார்கள். சமயம் பாத்து என்னிடம் காட்டினார்கள். பார்த்தவுடன் சொல்லிவிட்டேன், ”இவ, இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா” என்று வடிவேலுவிடம் சொல்வது போல். அந்தப் போட்டோவில் இருந்த பெண் ரொம்ப ஹைஃபை… (வை ஃபை எல்லாம் இல்லாத காலக் கதைங்க இது). அதெல்லாம் எப்படி தெரியும் என்று கேக்கறேளா? நாம சைட் அடிச்ச பொண்ணுங்களைப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?

பரமக்குடியில் எவ்வளவு தான் படித்த நல்ல பொண்ணுங்க இருந்தாலும், மதுரைக்குப் போய் பொண்ணு எடுப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். அப்படியே மதுரையில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் வெயில். வேகாத வெயிலில் கீழவாசல் சந்திப்பில் கரும்பு ஜூஸ் குடிக்க ஆசை வந்தது. அருகிலேயே உறவினர் வீடும் இருப்பதால், அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, கரும்பு ஜூஸும் குடித்து பெண்வேட்டை தொடர முடிவானது. உறவினர் வீட்டில், யாரும் இல்லை. அவர்களின் கணக்குப்பிள்ளை இருந்தார். இப்போதைய சீரியலில் வரும் அப்பா வேடத்துக்குக் கச்சிதமாய் பொருந்தும் முகம். பொறுப்பாய் அவர் தான், வந்த வேலை பற்றி விசாரித்து அனைவருக்கும் கரும்பு ஜூஸ் பரிமாறினார்.
கையில் உள்ள ஜாதகம் எல்லாம் சேராமல் போன சோகக்கதையை அவரிடமும் விவரித்தோம். ”என்கிட்டெ ஒரு ஜாதகம் இருக்கு. அதை வெண்டுமானாலும் சேருதான்னு பாருங்களேன்…” என்றார் பவ்யமாய். கன கச்சிதமாய் பொருந்தியது. அவர், தன் மகளின் ஜாதகம் தான் கொடுத்திருந்தார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. (இது தான் சந்திலெ சிந்து பாடுவது என்று சொல்வதோ).. ஏதொ ஒரு கரும்பு ஜூஸில் ஜாதகப் பொருத்தம் ஆகிவிட்டது. முழுப்பொருத்தம் நன்னாரி சர்பத்தில் நடந்தது.

சம்பிரதாயமாய் பெண்பார்க்கும் படலம் முடிந்த அடுத்த நாள், பெண்ணை அவர் வேலை பார்க்கும் பள்ளியில் போய் சந்தித்து, விலாவாரியாய் கமோர்ட்டா தீவு பற்றி தெரிவித்தேன். அந்த உண்மை பிடித்திருந்தது போல் தெரிந்தது. நன்றாக யோசித்து முடிவு சொல்லவும் அவகாசம் கொடுத்தேன். ஏதாவது குடிக்கலாமே… நன்னாரி சர்பத் நம்மை இன்னும் புரிய வைத்தது. சர்பத் தீரும் வரை பேச நேரம் கிடைத்தது. (சர்பத் காசு அந்த ஆசிரியை தான் தந்தார் என்பது ஆச்சரியமான செய்தி) தண்ணியில்லாக் காடு என்பதை சற்றெ மாற்றி தண்ணியுள்ள காட்டிற்கு வர சம்மதம் சொன்னது இதமாய் இருந்தது மனதிற்க்கு..

என்னுடைய திருமண நாள் பற்றி ஃபேஸ்புக்கில் போட்ட போது புதுதில்லி வாழ் சேகர் அவர்கள், கம்பர் திருமண நாள் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்று கேட்டார். காட்டுவாசம் என்பதை அறிந்தும் கல்யாணத்திற்கு முன்பே என்னுடன் வர் சம்மதம் சொன்னவர் என் இனிய பாதி. அவரைப்பற்றி சொல்ல ஒரு சந்தர்ப்பமாய் இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இப்படி காட்டுவாழ்க்கைக்கு தயாரான என் துணைவியாரை நினைக்கும் அதே நேரத்தில், அப்படியே கம்ப காவியத்திலும் ஒரு காட்டுப் பயணம் எப்படி முடிவாகின்றது என்று பார்க்கலாம். கைகேயி வரத்தில் இராமன் தான் காட்டிற்குச் செல்ல வேண்டும். மனதிற்குள், இலக்குவன் போனாலும் சரி என்று நினைத்து ரெண்டு ஜோடி டிரஸ் கொடுத்து அனுப்புகிறாள் கைகேயி. அப்போதும் கூட சீதையினை காட்டுக்கு அனுப்பும் யோசனையே இல்லை. இராமனும் தனியே போகலாம், சீதையால் இந்த காட்டுவாசம் தாங்க இயலாது என்பதாய் பதில்சொல்ல…அப்படி யோசிக்கும் போதே, சட்டுன்னு உள் சென்றாள் சீதை.. மரவுரியை அணிந்தாள் (எதுக்காவது பேன்ஸி டிரஸ் போட்டிக்கு உதவும் என்று அதையும் சீதை வாங்கி வச்சிருகுமோ?). திரும்பி வந்தாள்.. தொடர்ந்தாள்… கம்பர் வரிகள் தொடர்கிறது.

அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்
நினைவின் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்

வேறு ஏதாவது கேள்விகள் யாராவது கேட்டால், அதன் பதிலையும் கம்பனிடம் கேப்போம்.

நடக்காதென்றால் நடக்காது


நெஞ்சைக் கிழிக்கும் சோக கீதங்களில் இந்த “நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்துவிடும்” பாடலும் ஒன்று. ’நிலையற்ற தன்மைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்லும் பாடல் அது. ’நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒத்திப் போடும் ஒவ்வொரு நேரமும், நாம் கவனமாக அந்த நிச்சயமற்ற தன்மையினை மறக்கிறோம், என்பது மட்டும் சர்வ நிச்சயம். ’இன்னெக்கி செத்தா நாளைக்குப் பால்’ என்று சொல்லும் போதும் கூட அந்த “நாளை” இருப்போம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகின்றது.

பரமக்குடியின் மயாணத்தில் ஒரு அருமையான போர்ட் வைத்திருக்கிறார்கள். ”இன்று நான்; நாளை நீ” என்று. ’வாழ்க்கை இவ்வளவு தான்’ என்பதை சட்டுன்னு புரியும்படி எழுதி வைத்திருக்கும் ’வைரம் வத்தல் வடாம் கடை’க்கு நன்றி சொல்ல வேண்டும். (இதிலும் கூட விளம்பரமா? என்ற சந்தேகம் வேண்டாம். நமக்கு சரக்கு தான் முக்கியம்)

சமீபத்தில் ஒரு பள்ளியில் நடக்கும் பரீட்சைக்கு அதிரடி அதிகாரியாய் போய் நின்றேன். அவ்வப்போது சந்தடிசாக்கில் அங்கு வகுப்பில் நடப்பவைகளையும் உன்னிப்பாய் கவனித்துப் பார்த்தேன். (அங்கு இருப்பவர்களுக்கு நான் இப்படி எல்லாம் எழுதுபவன் என்பது தெரியாது). ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவனை, ஆசிரியர் செமெயாக அடிக்கிறார். அவனது கையில்,அவரது கையால் ஒரு அந்நியனான என் எதிரில். என்ன பாவம் செய்தான் அந்தப் பையன்? லேசாக விசாரித்தேன். ஐ லவ் யூ என்று ஒரு பெண்ணின் பெயரை கையில் எழுதி இருப்பதாய் தகவல் வந்தது. அதுவும் பாடம் நடக்கும் வகுப்பில் நடந்ததாம்.

அடிப்பது என்பது என் மனதிற்கு ஒவ்வாத செயல். அடித்து என்ன சாதிக்க நினைக்கிறார் அந்த ஆசிரியர்? கேட்டேன். “அவனுக்கு அவமானம் வர வேண்டும். அதன் மூலம் திருந்த வேண்டும்” பதில் வந்த்து. நல்ல நோக்கம் தான். ஆனால் என்ன நடக்கிறது? அந்த மாணவன் அதே ஆசிரியரை எதிரியாய் பார்க்கிறான். பழிதீர்க்க நினைக்கிறான். ஆசிரியரின் கார் கண்ணாடி அடிக்கடி உடைகிறது. இருசக்கர வாகனத்தின் சீட் கவர்கள் அடிக்கடி கிழிகின்றன. ஆசிரியர் முழிக்கிறார். மாணவன் மனதிற்குள் சிரித்து மகிழ்கிறான். ஆசிரியர் எது நடக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அதுவா நடக்கிறது?

”தகவல் பெறும் உரிமை (ஆர் டி ஐ) சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வருவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” இது தான் சமீப காலமாய் அதிகமாய் என்னிடம் கேட்கப்படும் கேள்வி. அந்தமானில் இச்சட்டம் பற்றிய பயிலரங்கங்கள் பல தீவுகளில் நடத்திய காரணத்தால் இந்த கேள்வி தவிர்க்க இயலாது போகின்றது. அரசு ஊழியரின் கருத்தாக இல்லாமல், எனது மனதிற்குப் படும் சொந்தக் கருத்தினை உங்களுக்கும் சொல்கிறேன்.
அதற்குமுன் சின்ன குட்டிக் கதை.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் குழந்தையினை அழைத்து வந்தார். “சுவாமிஜீ.. இந்தக் குழந்தை அடிக்கடி வெல்லம் சாப்பிடுகிறாள். அதை நிறுத்த நீங்கதான், ஏதாவது வழி சொல்ல வேண்டும்”. சுவாமிஜீ சிரித்தபடி, ஒரு பத்துநாள் கழித்து வரும்படி கூறினார். தாயாரும் ஏதோ தாயத்து மாதிரி கிடைக்கவிருக்கும் சந்தோஷத்தில் நகர்ந்தார். பத்து நாள் பறந்தோடியது. மறுபடியும் தாயும் மகளும் ஆஜர். சுவாமிஜீ குழந்தையை அன்போடு அழைத்து, “இனி மேல் அடிக்கடி வெல்லம் சாப்பிடாதே” என்று கூறினார். அவ்வளவு தான். தாயார் நினைத்தது ஒன்று. ஆனால் நடப்பதோ வேறு. “என்ன சாமி… தாயத்து கீயத்து அல்லது மந்திரம் ஏதும் இல்லையா?”, ஆதங்கத்துடன் அந்தத் தாய். சுவாமிஜீ, ”இல்லை” என்று தலையசைக்க, அப்பொ இதெச் சொல்லவா பத்து நாளு என்று அந்த அம்மணி நினைப்பதை சுவாமிஜீ உணர்ந்தார். “தாயே…எனக்கும் அடிக்கடி வெல்லம் சாப்பிடும் பழக்கம் இருந்தது. இந்த பத்து நாளில் நான் அதனை மாற்றிக் கொண்டு, குழந்தைக்கு அறிவுரை சொன்னேன். அவ்வளவு தான்” பெரியவரின் அருள் வாக்கு இது. எவ்வளவு உயரத்தில் இருக்கும் மகான்கள் அவர்கள்!!

கதையினை விட்டு இப்பொ நடக்கும் சூழலுக்கு வருவோம்.

வெளிப்படையான நிர்வாகம் அமைந்திட நினைத்து தான் இந்த ஆர்டிஐ சட்டம் 2005 ல் கொண்டு வந்தனர். அரசு எந்த அளவிற்கு வெளிப்படையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அதே அளவு அரசினையே அமைக்கும் அரசியல் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறு இருப்பதாய் தெரியவில்லை. (அரசியல் கட்சிகள், கதையில் வந்த சுவாமிஜீ போல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ரொம்பத்தான் ஓவரோ). இன்னொரு பக்கமாயும் யோசிக்கலாம். அரசியல் கட்சிகளை இதில் இழுக்கும் தகவல் ஆணையத்தின் தீர்ப்பின் 50 க்கும் மேலான பக்கங்களைப் புரட்டினால் அதில் முக்கியமாய், ’கனிசமான அரசின் உதவி பெறும்’ காரணம் தான் தெரிகிறது. கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், ’தங்களுக்கு அரசின் உதவி தேவையில்லை’ என்று தாராளமனதோடு விட்டுக் கொடுத்தால், தானாகவே ஆர்டிஐ பிடியிலிருந்து விலகிவிடலாம். இது இந்தப் பாமரனின் சொந்தக் கருத்து தான். எது நடக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது சரி… நடக்கும் என்பார் நடக்காது என்பது நிலையாமை பற்றியது. அது என்ன நடக்காதென்றால் நடக்காது. இது அவரவர்களின் மனதின் உண்மை நிலை. அப்படியே லேசா பர்வால் இராமாயணம் பக்கம் போகலாம். (அதென்னெ புது பர்வால் இராமாயணம் என்று கேட்கிறீர்களா? ’கம்பர்’ சொல்லின் கடைசி இரண்டு எழுத்தும், வால்மீகியின் முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தது தான் பர்வால் என்கிறேன் நான்). ஆதி ராமாயணமான வால்மீகி ராமகாதையினை விட கம்பர் சிறப்பாய் சொல்லி இருப்பதாய் பலர் எழுதி உள்ளனர். சொல்வேந்தர் சுகிசிவம்தான், அதன் காரணத்தைச் சொல்கிறார். கம்பர் ராமகாதையினை கையில் எடுத்த்து வால்மீகியின் பல ஆண்டுகளுக்குப் பிறகு. காலம் காலமாய் விமர்சனம் செய்யும் இடங்களை மாற்றும் வாய்ப்பு கம்பருக்கு வாய்த்திருக்கிறது. அதை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்கிறார். கம்பரின் ஏடு என் கையில் வரவே எத்தனை நூற்றாண்டு தேவைப்படுது? ஒரே பிரச்சினையை கம்பரும் வாலிமீகியும் எவ்வாறு அலசினர் என்பதை நாமும் கொஞ்சம் அலசுவோம்.

கோபக்காரமுனி விசுவாமித்திரர் அயோத்திக்கு வருகிறார். வால்மீகி பார்வையில் முனியை, தசரதர் சகட்டுமேனிக்கு புகழ்கிறார். முனியை சந்தோஷப்படுத்தினார் வார்த்தையில். (ஒரு வேளை எழுதியதே ஒரு முனி என்ற காரணமாய் இருக்குமோ?). கம்பரில் அது அப்படியே உல்டா. முனி தசரதரை ஐஸ் வைக்கிறார். அரசனிடமே சரணடைந்ததாய் சொல்கிறார்.
இராமனை தன் யாகம் காக்கக் கேட்கிறார் விமு முனி. பாலகனை அனுப்புவதற்குப் பதிலாக, தானே வருவதாய் தசரதன் சொல்கிறார். இதிலும் வால்மீகி, கம்பரின் அப்ரோச் வித்தியாசமாய் தெரிகிறது. இதைக் கேட்டதும் தசரதன் துடித்த துடிப்பை கம்பர் சொல்கிறார்… பிறவிக் குருடன் ஒருவன் விழியில் ஒளி பெற்று மீண்டும் இழந்தவன் போல் துடித்தானாம். [கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்] ராமனுக்குப் பதிலா நானே வருகிறேன். வாங்க கிளம்பலாம் என்கிறார் அந்த அதிரடி அப்பா.

வால்மீகி காதையில் தசரதன் சொல்வதே வேறு… நீங்க சொல்லும் அரக்கர்களிடம் சண்டை போட்டு என்னாலேயே ஜெயிக்க முடியாது. மாரீசன் மாதிரி ஆட்களை யாராலும் ஜெயிக்க முடியாது…. என் மகனால் என்ன செய்ய முடியும்?… எமனை வேண்டுமென்றாலும் வெல்ல முடியும். அந்த அரக்கர்களை வெல்ல முடியாது… இப்படி நடக்காதென்று செல்லிக்கொண்டே இருந்தால், ஏதாவது நடக்குமா? அப்பொ… கடுப்பாக மாட்டாரா விசுவமித்திரர்? போங்கப்பா நீங்களும் உங்க பேச்சும் என்று வெளிநடப்பு செய்ய எத்தனிக்க… அப்புறம் தான் இராமலட்சுமணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

கம்பன் கதைப்படி இராமன், பெருமாளின் அவதாரம் என்பது தசரதனுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே தான் ‘இலக்குமியின் கணவனான இராமனை இங்கு அழைத்து வாருங்கள்’ என்று தசரதன் ஆணையிடுகிறார். இராமனை மட்டும் அழைக்க, உடன்பிறப்பு சேர்ந்தே வருவது இக்காலத்திய இலவச இணைப்பு மாதிரிதான்.

பர்வால் பார்வைகள் தொடரும்.

கடல் முதல் குடம் வரை


“நீங்க உண்மையிலேயே சிவில் இஞ்சினியரிங்க் தான் படிச்சீங்களா..?? பேசாமெ தமிழ் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கலாமே..!!!” – இப்படி என் தர்ம பத்தினி அடிக்கடி கேட்பதுண்டு. இந்த மாதிரி எழுத ஆரம்பித்தது முதல் அடிக்கடி இந்தக் கேள்வி வருது வீட்டில். ஆனா சமீப காலமா என்னை அறிமுகம் செய்பவர்கள் கூட முதலில் இவர் RTI ல் Expert என்று ஆரம்பித்து பின்னர் தான் இஞ்சினியர் என்று அறிமுகம் தொடர்வர்.. என்ன செய்ய?? நானும் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் என்று வடிவேல் பாணியில் மூன்று முறை கத்த முடியுமா என்ன??

சரி எல்லாருக்கும் தேவையான குடிநீர் பிரச்சினை பத்தி எழுதி அந்த கேள்வி கேட்கும் ஆட்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சி செய்யலாம் என்ற நோக்கில் தான் இந்த போஸ்ட் வருகிறது. (வழக்கம் போல் கம்பர் வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது). கடந்த செப்டம்பர் 15 பொறியாளர் தினத்தன்று ஒரு Technical Presentation தரும் பொறுப்பு என் தலையில் வந்து விழுந்தது. சாதாரணமாய் இந்த மாதிரி வேலைகள் என் தலையில் ஜம்முன்னு வந்து விழும்.

கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கும் மேலாய் அந்தமானில் கொட்டித் தீர்க்கும்
மழை. வானம் கொட்டியவை எல்லாம் வீனே கடலில் போகும் விநோதம். மழையை என்றைக்கோ ஒரு நாள் அதிசயமாய் பாக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கு இந்த மாமழை பார்த்து பொறாமை தான் வரும். 1970களில் பரமக்குடியின் வீட்டில் ஆள் உயர குழாயில் எப்பொ தொறந்தாலும் தண்ணி வரும். 80 களில் வீட்டில் தரையை ஒட்டி குழாய் இருந்தது. 90களில் தெருவில் வந்து விட்டது. 2000 ஆண்டு ஆளுயர பள்ளத்தில் இருந்து தண்ணி இறைக்கும் அவலம். 2010 முதல் அடி பம்ப் காலம். 2020ல் மின்சார பம்பு போட வேண்டி இருக்குமோ??? (அது சரி.. மின்சாரம் 2020ல் இருக்குமா??)

சரி… மழை நீர் சேகரிப்பு பத்திய டாபிக் பேசினா ரொம்பவும் பொருத்தமா இருக்கும்னு நெனைச்சி தயார் செய்ய ஆரம்பிச்சேன். Engineers Day செமெ மழையோடவே விடிஞ்சது.. நம்ம டாபிக்குக்காகவே தொடர்ந்து பெய்த மாதிரி.. அந்த அளவு ஊத்து ஊத்து என்று ஊத்தியது (அது சரி .. செமஸ்டர் பரிச்சை சரியா எழுதாமெ போனா, ஊத்திகிச்சின்னு ஏன் சொல்றோம்??) நெனைச்ச மாதிரியே அந்த டாபிக் அன்னெக்கி களை கட்டியது. மற்றவர்கள் உலக சமாச்சாரங்களை படம் போட்டு காட்ட, நான் மட்டும் உள்ளூர் பிரச்சினை பத்தி பேசினா.. கேக்க கசக்குமா என்ன??

தண்ணி பத்தின கணக்கு பாத்தா.. இப்பவே கண்ணெக் கட்டுதே…? ஒலகத்துலெ 70% தண்ணிதான் (அந்த தண்ணியெக் கணக்கிலெயே சேக்கலை). அதிலெ வெறும் 3% தான் குடிக்க லாயக்கா இருக்காம். அதிலும் 1% தான் கைக்கு எடும் தூரத்திலெ இருக்கு. மத்த 2% துருவப் பகுதியிலெ மாட்டிக் கெடக்குது. உலகத்து தண்ணி மொத்தத்தையும் ஒவ்வொரு ஆளுக்கும் கூறு போட்டு குடுத்தாலும் ஆளுக்கு 5100 கணமீட்டர் அளவுக்கு தண்ணி கெடைக்குமாம் 2025 ல் கூட. (அது 1989ல் 9000 Cubic Meter ஆக இருந்தது என்கிறது படிச்சா சோகம் அதிகமாகும்..)

அந்த அளவு தண்ணியே பொது மக்கள் தேவைக்கு போதுமானதா இருக்கும். ஆனாலும் பற்றாக்குறை.. குடம் குடமா வரிசையா நிக்குதே?? ஏன்.. அப்படி? ம்.. அப்படி கேளுங்க.. நம்ம ஆளுங்க இருக்காகலே உலக மக்களின் மூன்றில் இரு பகுதி மக்கள் கால்வாசி மழை பெய்யும் பகுதியிலெ இருக்காய்ங்க.. அப்புறம் இந்த மழை இருக்கே மழை.. அது நம்ம ரமணன் சொல்ற மாதிரி.. வரும்.. ஆனா வராது என்று பூச்சாண்டி காட்டும். உலகளாவிய கதையும் இது தான்.

சிரபுஞ்சி தான் உலகத்தின் அதிக ஈரமான பகுதி (குடை வியாபாரம் அங்கே பிச்சிட்டு போகுமோ?). வருட மழை நாலு மாடி அளவுக்கு பெய்யுமாம். ஆனாலு மழை இல்லாத சொற்ப காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்குமாம். அந்தமானும் இதுக்கு விதி விலக்கு கிடையாது. 4 மாசம் தண்ணி கஷ்டம். (ராமநாதபுரம் அளவுக்கு இல்லை தான்) 8 மாசம் நல்ல மழை பெய்யும். வள்ளுவர் சொல்லும் நல்ல மழை என்பது தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு தேவையான இடத்தில் பெய்யும் மழையாம். அதாவது மனைவியின் அன்பு அல்லது கோபம் மாதிரி. (இது வள்ளுவர் சொல்லாததுங்க)

அந்தமான்லெ அதிகமா காடு தான் இருக்கு. மரங்கள் எல்லாம் வெட்டி அணை கட்டுவது என்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் ஆயிடும். ஒரு யோசனை வந்தது NCC Officer ஒருவரின் மூளையில். கடலை ஒரு ஓரம் கட்டி அணை கட்டினா எப்படி என்று. அதன் ஆய்வு நம்ம கைக்கு வந்தது. Fishing & Shipping வேலைக்கு லாயக்கில்லாத… கடலின் ஒரு பகுதியை அணை போட்டு தடுத்து குடிநீர் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அப்பொ கடல் நீரின் உப்பை எப்படி எடுக்க.?? நம்ம டாஸ்மாக் ஐடியா தான்.. காட்டமா இருக்கும் சரக்கில் தண்ணி கலக்குறோமே, அதே … அதே தான். அப்படியே மழை தண்ணியை அதுலெ கலக்க கலக்க மூணு வருஷத்தில் நல்ல தண்ணி ஆகும் என்று Delhi IIT உறுதி செய்தது.

இவ்வளவு சொல்லிட்டு கம்பர் வரலை என்றால், அது நல்லாவா இருக்கு? கம்பர் ஏதாவது ஐடியா வச்சிருப்பாரோ? கேட்டேன். அவரோ, “பேசாமெ கடல்நீர் முழுசா வெளியே போகுற மாதிரி ஒரு மதகு வச்சிட்டா??” இப்படி கேக்கிறாரு கம்பர். என்ன சாமி இது… இப்படி யாராவது செஞ்சிருக்காகளா? மறுபடியும் கம்பர்: “நான் எழுதின ராமாயணம் ஒழுங்கா படிச்சா இந்த சந்தேகம் வராது”. ஓடிப் போய் படிச்சா… ஆமா…விளங்குது.

அனுமன் முதன் முதலாக Gate way of Lanka வைப் பார்க்கிறார். அது எப்படி எல்லாம் இருக்கு என்பதாய் சொல்கிறார் அனுமன் வாயிலாக. மேருமலை வச்சி செய்த வழியோ? தேவலோகம் போகும் படிக்கட்டோ? ஏழு உலகமும் ஆடாமல் இருக்க முட்டு கொடுத்த தூணோ? இவ்வளவு சொல்லிட்டு, கடல் நீர் வழிந்தோட செய்த மதகோ…?? என்ற கேள்வியோடு அனுமன் பார்வையில் செல்கிறது கம்பன் அறிவியல் பார்வை.?

மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர்புகு கடற்கு வழியோ? என் நினைந்தான்.

கம்பனின் வேறு பார்வையினை வேறு நாளில் பார்ப்போம்.

தலைவாரி பூச்சூட்டி உன்னை….


இந்த விசுவல் மீடியா வந்தலும் வந்தது, எல்லாத்தையுமே நேரில் பாக்கிற மாதிரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த மீடியா மூலம் சில சிக்கலான நேரங்களையும் கவனிக்கவும் முடிகிறது. இந்தியப் பெண் உலக அழகி ஆகும் தருவாயிலும் சரி… ஒலிப்பிக்கில் மெடல் வாங்கும் நேரம் வந்தாலும் சரி.. ஆனந்தத்தில் கண்ணீர் வந்ததை பார்க்க முடிகிறது.. (நீங்களும் பாத்திருப்பீங்க தானே??).. ஆனால் இந்த 6 வது Indian Idol ஜெயித்த விபுல் ஆகட்டும், சுட்டும், குத்தியும் மெடல் வாங்கிய ஆண்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் அழுததாய்த் தெரியவில்லை. (கபில்தேவ் விக்கி விக்கி ஒருமுறை மீடியா முன்பு அழுதது ஒரு தனிக்கதை)

நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வரவழைக்கும் வித்தையினை இந்தப் பெண்கள் எங்கிருந்து தான் கற்றிருப்பார்களோ..?? (இப்படியே போனால், கிளிசரீன் கம்பெனிகள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்). என் கீழ் பணியாற்றும் மகளிரை அழைத்து, கேட்ட லீவு இல்லை என்றாலோ, அல்லது ஏன் இப்படி செய்தீர்கள்? என்று (மெதுவாய்க்) கேட்டாலே போதும் கண்ணில் இருந்து கொட கொட என்று கொட்ட ஆரம்பித்துவிடும். இதை இன்னொரு மகளிர் அணியிடம் கேட்ட போது தான், அதை அவர்கள் தண்ணீர் டேங்க் என்று பெயர் வைத்திருப்பது தெரிந்தது. எப்பொ வேண்டுமானாலும் வெடிக்க தயாராய் வைத்திருக்கும் டேங்க். (மனைவியின் கண்ணீர் எப்போது வரும் என்று அறிந்தவனுக்கு நோபல் பரிசே தரலாம்..)

முழு நீள நகைசுவைப் படம் என்று ஒருகாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி போடாமலும் கூட படம் முழுக்க சிரிப்பே என்று இருக்கும் படங்களும் இருந்தன. அனுபவி ராஜா அனுபவி என்று ஒரு செமெ படம். (முத்துக் குளிக்க வாரியாளா…பாட்டு அதில தான் வரும்) நாகேஷ் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய படம். அந்தப் படம் மட்டும் பாத்துட்டு நீங்க சிர்க்கலை என்றால்… கோவிச்சிக்க வேண்டாம். உங்களிடம் ஏதோ கோளாறு இருக்கு என்று அர்த்தம்.

சோகப் படங்கள் என்று சொல்லாமலேயே வந்த பல படங்கள் பாப்புலர் ஆகியும் உள்ளன. (ஒரு வேளை அட நம்ம வீட்டிலெ நடக்கிற சங்கதி என்று எல்லாருமே அனுபவிச்சி, அழுது பாத்திருப்பாங்களோ..?) திக்கற்ற பார்வதி, துலாபாரம் போன்ற படங்கள் சொல்லலாம். நான் அம்மாவின் முந்தானையை பிடித்து படம் பார்த்த அந்தக் காலம்.. (இப்பொ முந்தானை மட்டும் மாறலை.. ஆனா ஆள் மாறியாச்சி..அட..இன்னும் ஒடைச்சி சொல்லனுமா என்ன??) குலமா குணமா என்று சிவாஜி நடித்த படம். சோகத்தைப் பிழிந்து கண்ணீரில் சிவாஜி முகம் காட்டுவதை குளோசப்பில் காட்டும் போது இடைவேளை வரும். பரமக்குடி தியேட்டரில் முறுக்கு குச்சி ஐஸ் சாப்பிட வந்த அனைவருமே கண்களை துடைத்துக் கொண்டு வந்தது சிவாஜியின் வெற்றியின் ரகசியம்.

சட்டியிலெ இருக்கிறது தானே அகப்பையிலெ வரும்?? கண்ணீரே வாழ்க்கையா இருப்போர்க்கு தாலாட்டும் கண்ணீரை வைத்தே வரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்தப் பாட்டு?? தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் பாட்டு அது… ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து, தொட்டில் நனையும் வரை… உன் தூக்கம் கலையும் வரை கண்ணான பூமகனே… கண்ணுறங்கு சூரியனே.. (சுட்டெரிக்கும் சூரியனை ஞாபகம் வைத்து மகனை சூரியன் என்பதும் அழகு தான்.)

பச்சிளங் குழந்தைகள் கண்ணீர் சிந்தும் இன்னொரு நேரங்கள், பள்ளிக்கூடம் போகும் தறுவாய் தான். என்னோட ரெண்டாம் வகுப்பு டீச்சரை இப்பொ நெனைச்சாலும் பயம் வரும். கறுப்பா பயங்கரமாயும், பயங்கர கறுப்பாவும் வாட்ட சாட்டமா கையில் பிரம்போடு தான் காட்சி அளிப்பார். பனைமரம் பற்றி விரிவாய் சிலாகித்து பாடம் நடத்தப் போய், பனைமரம் டீச்சர் என்று நான் வைத்த பெயர் ரொம்ப காலம் தொடர்ந்து வந்தது. பாரதி தாசனின் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் என்ற கேள்விக்கு பனைமரம் டீச்சர் என்று நான் பதில் சொல்லி இருப்பேன்.

இந்த கண்ணீர் பத்திய சமீபத்திய பாடல் வரிகள் நல்ல ஹிட். கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒடும் நண்பன் போதும்டா.. இது லேட்டஸ்ட் தத்துவம். சமீபத்திய படங்களில் சோகம் இல்லாவிட்டாலும் நெகிழ்வான படக்காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன என்பதை சொல்லத்தான் வேண்டும். திரி இடியட் படம் எத்தனை முறை பார்த்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் கண் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை. (அது சரி… அதை தமிழில் எடுத்தார்களே… அதிலும் அந்த் effect இருந்ததா? பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்!!!)

கண்ணீர் அஞ்சலி சில சம்யங்களில் மனசை என்னவோ செய்யும். கண்ணதாசனுக்காய் வாலி பாடிய அஞ்சலியில் சில வரிகள் இதோ:

உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

மனதைப் பிசையும் வரிகள் இவை… உங்களுக்கு எப்படி இருக்கு??

வாலி கண்ணதாசன் பாரதி தாசன் வரை கண்ணீர் பத்தி சொல்லிட்டு அப்படியே போனா, நம்ம கம்பர் கோவிச்சிக்க மாட்டாரா?? (இப்படி சுத்தி வளைக்கிறதே கம்பனை வம்புக்கு இழுக்கத்தானே..!! அட அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா???)

சீதையிடம் அனுமன் ராமன் சோகத்தில் கண்ணீர் விட்டதை அசோக வனத்தில் சொல்லும் காட்சி. ராமர் எப்படி இருந்தாராம்? தூக்கம் இல்லாமல் கண் செவந்து போய், அறிவே கலங்கி நெருப்பில் இட்ட மெழுகு போல் மெலிந்தே போனாராம். அப்புறம் இந்த கண்ணீர்… இருக்கே அது அவர் போகும் வழி எல்லாம் சேறாக்கியதாம்.. (கல்லும் முள்ளுமாய் இருக்கும் காடே சேறு ஆனதாம் கண்ணீரால் – இது தான் கம்பரின் ஓவர் பில்டப் .. சாரி..சாரி.. கற்பனைத் திறம்)

அவ்வழி நின்னைக் காணாது அயருவான் அரிதின்தேறி
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இவ்வழி இனைய பன்னி அறிவு அழிந்து அரங்கலுற்றான்.

ஆமா உங்களுக்கு கண்ணீர் வந்த அனுபவம் ஏதும் உண்டா??

உலக நாயகனே…


அந்தமானில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்ட தமிழக மண்ணிலிருந்து வந்தவர்கள் தான். மேலூர் தொடங்கி மானாமதுரை வரையிலும் பிறந்த ஊர்க்காரர்கள் தங்களது சொந்த ஊராக மதுரை என்று சொல்லி விடுவர். இதேபோல் மனாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ளவர்கள் ஜாலியாய் பரமக்குடி என்று சொந்த ஊராய் உறவு கொன்டாடுவர். இராமநாதபுரம் என்பதை மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். (ஏன் என்பது தான் விளங்கவில்லை).

எனக்கும் சொந்த ஊர் பரமக்குடி தான். (பரமக்குடியே தாங்க..அக்கம் பக்கம் எல்லாம் இல்லாமல பக்காவா அந்த ஊரே தாங்க). குசலம் விசாரிப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி “உங்க சொந்த ஊரு?”. ஊரை வைத்து இன்னார் இப்படி என்று ஊகம் செய்ய முடியுமோ!!! இருக்கலாம் போல் தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் வளைத்து வளைத்து ஆங்கிலத்தில் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர். அவர்களுக்குள் தமிழில் பேசிக் கொண்ட போது நானும் புகுந்து தமிழில் பதில் சொல்ல, அட நீங்க தமிழா? என்ற ஆச்சரியமான கேள்வி எழுந்தது. [அந்தமான் என்றால் தமிழர்கள் அல்லாதவர்கள் இருக்கும் பகுதி என்ற அவரின் அடிமனதின் உறுதி கேள்வியாய் வந்தது] அடுத்த கேள்வி.. ஆமா தமிழ்நாட்டில் எந்த ஊர்?

நான் பதில் சொன்னேன்: பரமக்குடி.

ம்..ம்… கமலஹாசன் பொறந்த ஊரா?
அப்படி சொல்ல முடியாது. ஆனா.. நானும் கமலஹாசனும் பிறந்தது ஒரே ஊரில். அதாவது பரமக்குடியில் என்றேன். (ஒரு மாதிரியாய் பார்த்தார்கள்). அப்புறம் என்ன!! போர்பந்தருக்கு காந்தியால் வந்த மரியாதை மாதிரியும், எட்டயபுரம் பாரதியால் எட்டிய இடத்தையும் கமலஹாசன் மூலம் பரமக்குடியும் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மையாய் தெரிகிறது.
சொல்லப் போனால் ஒருகாலத்தில் கமலஹாசக்குடி அல்லது கமலனூர் என்று பெயர் மாற்றம் பெற்றாலும் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். பரமக்குடிக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? இது நான் 7 வது படிக்கும் போது ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் அன்று மாலை வாரியாரின் சொற்பொழிவுக்கு வந்து இதையே கேள் என்றார். (அந்த வாத்தியாருக்கு பதில் தெரிந்திருந்தும், நாம் வாரியார் ஸ்வாமிகளின் கூட்டங்களுக்கு போவதை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்ல ஆசையால் பதில் தராது விட்டிருந்தார்). வாரியார் சொன்ன பதில். பரமன் அதாவது பெருமாள் குடி கொண்டுள்ள ஊர்தான் பரமன்குடி… பின்னர் பாமரர்களால் பரமக்குடி ஆனது என்றார்.

கமலஹாசன் படித்த பள்ளி பாரதியார் நடுந்லைப் பள்ளி பரமக்குடியில் இருக்கு. அரசுப் பள்ளிக்கே உரித்தான் அத்தனை அமசங்களும் நிறைந்த பல பள்ளிகளில் இதுவும் ஒன்று. எவ்வளவோ நபர்கள் நல்லா படித்து எங்கெங்கோ இருந்தாலும், தான் படித்த பள்ளிக்கு (அவ்வளவு நல்லா படிக்காட்டியும் கூட..) சில வகுப்பறைகள் கட்டிக் கொடுத்து மரியாதை செய்திருக்கிறார் கமல். நல்ல மனிதர். சிந்தனையாளர் என்பதோடு சமூகத்தில் தனக்கென ஒரு கடமை இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல் பட்டது தான் இந்த காரியம் மூலம் தெரிகிறது.

கமல் படங்களில் ரவிகுமார் இயக்கங்கள் எல்லாம் பளிச் தான். (எல்லா பளிச்சும் சேர்த்துத் தான்). எல்லா படங்களிலும் கடைசிக் காட்சியில் தோன்றி தன் முகம் காட்டும் யுக்தி அவரது. சென்னை ஏர்போர்ட்டில் விமானம் ஏற வரிசையில் நின்றார். அப்போதும் கடைசியில் தான் இருந்தார். ஒரு படம் எடுக்க முயற்சிக்கும் போது நான் தான் விடுபட்ட கடைசி ஆள் என்ற அழைப்பு வர, அந்தமான் விமானத்தில் தாவி ஏறப் பொய் விட்டேன்.

கமலுக்கு எவ்வளவோ பட்டங்கள் இருந்தாலும் இந்த “உலக நாயகன்” என்பது தான் அனைவராலும் சொல்லப் படுகிறது. பத்து வேடங்களில் கலக்கிய கமலின் தசாவதாரம் படத்தில் உலகநாயகனே என்ற பாட்டும் தூள் கிளப்பும். பத்து விதமான அவதாரங்களை எடுத்தவர்க்குத்தான் இது மிகவும் பொருந்தும் என்று யார் தான் யோசித்து சொன்னார்களோ?? அல்லது அப்படி ஒன்று இருப்பதை தெரியாமலெயே சொல்லிட்டாங்களொ.. (சரி இருந்துட்டுப் போகட்டுமெ. அதுக்கு என்ன இப்பொ?)

அது ஒண்ணுமில்லை. இந்த மாதிரி உலகநாயகனே என்று யாராவது யாரையாவது சொல்லி இருக்காங்களா? என்று தேடினேன். கம்பராமாயணத்தில் வந்து தேடல் நின்றது. ராமன் தேடிய சீதை மாதிரி நான் தேடிய சேதி கிடைத்தது.

அனுமன் சீதை இருக்கும் இடத்திற்கு சென்று வந்த பிறகு நடக்கின்ற காட்சியை கொஞ்சமா எட்டிப் பாக்கலாம். அனுமன் முதல்லெ தன் ராஜாவான அங்கதனை வணங்க்கினான். அப்புறம் சாம்பவானை நமஸ்கரித்தான் காலில் விழுந்து. பொறவு எல்லார்க்கும் வணக்கம் வைத்தான். பேச ஆரம்பித்தான். “இங்கிருக்கும் எல்லாருக்கும் உலகநாயகனான இராமனின் தேவி சீதை நன்மை தரும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்”. இப்பொ சொல்லுங்க. உலக நாயகன் என்று முதலில் சொல்லியது யாரு?

வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து பின்னை கடன்முறைக் கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்த இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞாலநாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான்.

அதுசரி உலகநாயகன் கமல் படிச்ச பள்ளிக்கு ஏதோ செய்தார். நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மார்க் எடுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த பரிசு தந்து வருகிறேன்.

கூட்டத்தோடு கோயிந்தா..


இந்த நாடு உருப்படவே படாது. ஒருத்தனும் யோக்கியன் கிடையாது… நாடு எங்கே போகுதுன்னே தெரியலை. ஏன் இவங்க இப்படி இருக்காங்களோ?? இப்படி புலம்பும் பலரை பல இடங்களில், பல நேரங்களில் பாத்திருப்பீங்க. ஆனா அப்படி புலம்புபவர்கள் ஆக்கபூர்வமா ஏதாவது செஞ்சிருக்காங்களா?? இது மட்டும் பதில் தெரியாத கேள்வி.

அப்படி கூட்டத்தில் கூப்பாடு போடுபவர்களை ஏதாவது கருத்து சொல்லும் கூட்டங்களுக்கு அழைத்தால் வரமாட்டார்கள். நமக்கேன் ஊர் பொல்லாப்பு என்று சொல்லி விலகிவிடுவர். ஆனா சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்வது மட்டும் தமது பிறப்புரிமை என்று முழங்கிடுவர்.

சிலர் எந்த கூட்டத்திற்கு வந்தாலும் கேள்வி மழை கேட்டு துளைத்து விடுவார்கள். அவர்களை Mobile Question Paper என்று சூப்பரா பேர் குடுக்கலாம். கேள்வி தான் பிரதானம். என்ன பதில் வருது என்பதைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலையே கிடையாது. அவங்களுக்கு வேண்டியதெல்லாம், நாலு பேரு, அடெ.. எந்த சப்ஜெக்ட்லெயும் கேள்வி கேக்கிறாரே என்று சொல்லிடனும். எல்லா பக்கமும் மூளையை வளர்த்துள்ளார் என்று காது குளிர கேட்டால் தான் அங்கே தூக்கமே வரும்.

நான் அழைப்பு விடுக்கும் கூட்டங்களில், இந்த மதிரி ஆட்களை மறக்காமல் கண்டிப்பாய் அழைத்து விடுவேன். கேள்வி கேக்காட்டியும் கூட, கூட டீ பிரேக்கிலாவது அந்த ஸ்பீக்கரை ஒரு பிடி பிடித்து விடுவர். நாம வேறு ஏதாவது போன் பேச கலண்டுக்கலாம்.

சாய்ந்தால் சாய்ற பக்கம் சாயும் செம்மெறி ஆட்டுக் கூட்டம் என்பார்கள் நம் மக்கள் கூட்டத்தை சில மக்கள். நான் தனியாக இல்லை. பாதுகாப்பாய் ஒரு கூட்டத்தில் இருக்கிறேன் என்று சொல்வது நிறைவான ஒரு சந்தோஷம். லாபமோ நஷ்டமோ, நமக்கு தனியா வராது. பத்து பேத்துக்கு பொதுவா எதுவோ, அது தான் நமக்கு என்பது ஒரு நிம்மதியான வாழ்க்கை.

தேசீயத் தலைவர்களை நம்ம ஊர் ஜாதி சங்கங்கள் Daily Sheet காலண்டரில் போடுவது என்பது தொல்காப்பியர் சொல்ல மறந்த தமிழ் இலக்கண விதி. சன் டீவியின் இந்த நாள் இனிய நாளிலும் சுகிசிவம் ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னார் இதை.

மொபைல் போன் பிரபலமாகாத நாள் ஒன்றினல், சென்னையில் ஒரு STD booth ல் போன் செய்ய நுழைந்த போது அப்படிப்பட்ட ஒரு தலைவரின் போட்டோ போட்ட அந்த காலண்டரை பாத்தேன். நான் கேட்டேன், அப்பொ நாங்க வீட்டிலெ இந்த தலைவர் போட்டோவை மாட்ட முடியாத படி செஞ்சிட்டீங்களே என்றேன். அவரிடம் பதில் ஏதும் இல்லை. இவர்கள் அந்த தலைவர்களுக்கு மரியாதை தரலாம். ஒட்டு மொத்த தமிழக மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து அந்த சாதிக்கு மட்டும் என்று வைப்பது நல்லதாப் படலை.

இப்போது அதையே சுகிசிவம் சொன்னதும் மனசுக்கு நிம்மதியாச்சி.. அட இப்படித்தான் பலரும் நினைக்கிறாய்ங்க. அல்லது அப்படி நினைக்கும் கூட்டத்தில் நானும் இருக்கேன் என்பதில் எனக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வு தான்.

ஒரு வேலைக்கான Recruitment Process நடந்து கொண்டிருந்தது. ஒருவர் வந்தார். தன் மகனோட அப்ளிகேஷன் என்ன ஆச்சி என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் தெரிந்தது அவர் முகத்தில். கணிணியை தட்டி கேட்டதில் ஒரு சான்றிதழ் தராததால் நிராகரிக்கப்பட்டதாய் சொல்லியது. சோகமாய் மாறியது அவரின் முகம். அடுத்து உடனே வந்த கேள்வி,… “இப்படி எத்தை பேர் Reject ஆயிருக்காங்க?”. மீண்டும் கணிணி இதற்கும் பதில் சொல்லியது 1832 பேர்களை என்று. ஓஹோ… கிட்டத்தட்ட ரெண்டாயிரத்திலெ ஒண்ணுதானே.. பரவாயில்லை.. சோகத்தின் முகம் இப்பொ நிம்மதியாய்ப் போனது.

சமீபத்தில் ஒரு SMS வந்தது. அமெரிக்காவில் கரண்ட் போனால் உடனே Call Center க்கு போன் செய்வார்களாம். ஜப்பானில், ஃபியூஸ் போயிருக்கா? என்று பாப்பாங்களாம். இந்தியாவில் மட்டும் பக்கத்து வீட்டிலெயும் கரண்ட் போயிடுச்சா? என்று பாப்பாங்களாம். இது எப்படி இருக்கு? எப்படியும் கூட்டத்தோட கோவிந்தா போடும் முயற்சி தானே??

ஆனா அந்தமானில் மட்டும் கரெண்ட் கட் ஆனால், ஓடிப்போய் அன்றைய நியூஸ் பேப்பரைத்தான் தேடுவோம். ஏன்னா.. எங்கே, எப்போ கரண்ட் இருக்காது என்ற நிலவரம் பேப்பரில் போட்டிருப்பாங்க… நல்ல விஷயம் தானே.. மொபைல் சார்ஜ் செய்யும் வேலை, வாஷிங்க் மிஷின் வேலை எல்லாம் நேரத்தோட பிளான் செய்துக்கலாம்லெ…

ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமாய் இருந்து, இப்பொ சில வீடுகளில் அக்கா அண்ணன் தம்பி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை. முன்பெல்லாம் யாராவது வீட்டுக்கு வந்தால் தாத்தா பாட்டி என்றெல்லாம் அறிமுகம் செய்தது போய், இப்பொ வீட்டிற்கு வந்தவரிடம் புதுசா வாங்க்கின மொபைல் ஃபோன் தான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

நிகோபார் தீவுகளில் இதுவரை கூட்டுக் குடும்பமாய் இருந்து வந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு சொத்துக்களுக்கும் காம்பவுன்ட் சுவர்கள் எல்லாமும் கூட இல்லாமல் தான் இருந்தனர். படித்து நாகரீகம் ஆனவர்கள் எல்லாம் இப்போது அவரவர் வீடுகளில் காம்பவுண்ட் சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள்.. என்னத்தெச் சொல்ல??

கூட்டத்தோடு கோவிந்தா போடுபவர்கள், பெரும்பாலும் பின்பற்றி நடப்பவர்கள். சாதாரணமா சிகரெட் குடிக்கும் ஆட்கள். அதையே தூக்கிப் போட்டு ஸ்டைலா புடிச்சா என் வழி தனி வழி என்று தலைமைக்கே போயிடலாம். அதாவது எதிர் நீச்சல் போடுபவர்களிடம் தான் தலைமைக் குணம் இருக்கும். Leadership Quality என்று அதைத்தான் சொல்கிறோம்.

சுனாமியால் அந்தமான் பாதிப்பு அடைந்த பின்னரும், நான் இங்கே இருப்பதை பாத்து, ஏன் ஏதாவது வேலை மாத்திகிட்டு பரமக்குடி பக்கம் வரலாமில்லெ?என்று கேட்டார்கள். நானும் யோசித்தேன். ஏன் எனக்கு அந்த ரோசனை வரலை? சுனாமி பாதிப்பு எனக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. ஏன்னா?? அது எனக்கு மட்டுமா வந்தது? தீவை உலுக்கிய பூகம்பம் வந்த போது, வீடுகளுக்கு போகப் பயந்து ஒட்டு மொத்தமா எல்லாருமே ரோட்டில் தான் படுத்தோம். அதனால் ஒரு பாதிப்பும் இல்லை.

ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் விபத்து தனி நபர்களை பாதிக்கும். ஊரையே கலக்கும் பேரிடர் ஒன்னும் செய்யாது என்பது அப்போது லேசா தெரிந்தது. ஆனா இந்த பேரிடர் மேலாண்மை (Disaster Management) மேட்டர் நம்ம கண்ணுக்கு இப்பத்தான் தெரிஞ்ச்சாலும் கம்பருக்கு இதைப் பத்தி முன்பே ஐடியா இருந்திருக்கு. என்ன… சாட்சி வேணுமா?? வாங்க மீண்டும் இலங்கை பக்கம் போலாம்.

சம்புமாலி என்ற தளபதி இறந்த சேதியை இராவணனுக்கு சொல்லணும். கம்பர் சொல்லும் விதத்தில் தான் அந்த பேரிடர் மேலாண்மை தெரியும். அந்த சேதி சொல்ல தேவர்கள் தான் முதலில் ஓடி வந்தார்கள். (பால்கனியில் இருந்து படம் பாத்த VIP க்கள் அவர்கள் தானே??).
ஓடி வந்தவர்கள் சொல்ல முடியாமல் (மனதிற்குள் சிரித்தாலும்) மன்னருக்குப் பயந்து விக்கி விக்கி அழுதமாதிரி ஆக்ட் கொடுத்தாகளாம். ராஜாவுக்கு இது தெரியாதா என்ன!! சிரிச்சிட்டே என்ன சேதி என்றாராம்.

ஒரு கொரங்கு செஞ்ச சேட்டையில் சண்டைக்குப் போன நம்மாளுங்க கூட்டத்தொடு கோயிந்தாயிட்டாய்ங்க… அதுலெ நம்ம சம்புமாலியும் ஒருத்தர். எப்படி சேதி சொல்லும் ரகசியம்??

புக்கார் அமரர் பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங்கோயில்
விக்கார் நின்றார் விளம்பார் ஆற்றார் வெருவி விம்முவார்
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான்ஐய நமர் எல்லாம்
உக்கார் சம்புமாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார்.

அது சரி.. நீங்க எப்படி தனி ரகமா?? அல்லது அங்கேயும் கூட்டத்தோடு கோயிந்தாவா??
நீங்களும் தனியா என்னோட ப்ளாக் படிக்கிறதா நெனைச்சிராதீங்க… 2550க்கு மேல் பார்வையாளர்களில் நீங்களும் ஒருவர்.

சமீபத்தில் திருமணம் ஆனவர்…


பெரும்பாலான ஹோட்டல்களின் கதவுகளில் பூட்டு சாவி இருக்கோ இல்லையோ இந்த Just Married – அதான் சமீபத்தில் திருமணம் ஆனவர் என்ற அட்டை கண்டிப்பாய் இருக்கும். ஹோட்டல் காரர்களுக்கு மட்டும் அவர்கள் மேல் ஏன் இவ்வளவு அக்கரை. யாரும் அவர்களை தொந்திரவு செய்து விடக்கூடாது, என்பதில் ஓர் அதீத கவனம். மனைவியின் நொய் நொய் அல்லது கணவனின் கண்டிப்புகள் இவைகளிடமிருந்து தப்பிக்க இந்த மாதிரி மாற்று ஏற்பாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (உங்களுக்கு தெரிஞ்சா தகவல் சொல்லுங்க… பெயர் ரகசியம் காக்கப்படும்)

ஒருவரைப் பார்த்தவுடன் எப்போது திருமணம் ஆகி இருக்கும் என்பதை ஊகிக்க ஒரு சின்ன வழி இருக்கு. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று குஷியா கத்தும் ஆசாமியா? கல்யாணம் ஆகி 20 வருடம் கடந்தவர்.

“நீ பஸ்ஸில் முன்னாடி போ.. நா அப்புறம் வந்து சேர்ந்துக்கிறேன்” என்று சொன்னால், உங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிருக்கும் என்பது ஆரூடம்.

ஒரே பஸ்ஸில் தான் போவார்கள் ஆனால் பேச்சு மூச்சு இருக்காது. போகும் போதும் கணவன் முன்னாடி போக, பின்னால் மனைவி சற்று தள்ளியே.. இது 10 வருட தாம்பத்யத்தின் பின்னால் நடப்பது.

ஒன்று சேர்ந்தே போவது… ஒன்றாய் இருப்பது. இப்படி இருந்தால் இன்னும் சரியா புரிந்து கொள்ள முனைப்பாய் இருக்கும் 5 வருட அனுபவசாலிகள்.

ஒரு சீட்டு இருக்கா.. அதுவே போதும். நாம் ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று கெஞ்சும் பேர்வழிகள் தான் சமீபத்தில் திருமனமான அதிர்ஷ்டசாலிகள்.

இந்த மாதிரியான அதிர்ஷ்டசாலிகள் அந்தமானுக்கும் வரத் தவறுவதில்லை. அந்தமான் வருபவர்கள் அனைவரும் பார்க்கும் ஒரு முக்கிய இடம் இங்கிருக்கும் செல்லுலார் ஜெயில் – கூண்டுச்சிறை. ஜப்பான் நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவார்களாம். இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தியாகபூமி அந்த சிறை வளாகம் (இது என் மனைவி சொன்னது. மனைவி சொன்னா அப்பீல் இருக்கா என்ன??)

இங்கிருக்கும் ஜெயிலில் இரவு நேரத்தில் ஒலி ஒளிக்காட்சி Light & Sound Show நடக்கிறது. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும். அந்த ஜெயில் கட்டும் போதே இருந்து பாத்த ஒரே சாட்சி ஒரு அரச மரம். அந்த அரச மரம் பேசுவது போல் இருக்கும் காட்சி அது. ஓம்பூரியின் குரலில் கம்பீரமாய் இருக்கும். [அந்த நிகழ்ச்சியின் கதாநாயகனே சாரி… நாயகரே அந்த அரச மரம் தான். ஒரு புயலில் அது முரிந்து சாய…. அரசு முனைப்புடன் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் உயிர் தந்துள்ளது.]

பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் ஆங்கிலம் தான் வசதி. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் ஆங்கிலம் பேசினால் அது நல்லாவா இருக்கும்??

சமீபத்தில் கல்யாணம் ஆன ஜோடியிடம் அந்த சிக்கல் வந்தது. மனைவிக்கு ஹிந்தி நஹி. அவருக்கு ரெண்டுமே ஓகே. நான் நாட்டாமையாக மாறி தீர்ப்பு சொன்னேன். ஹிந்தி ஷோவே பெட்டர். கணவன் மனைவிக்கு translate செய்து காட்டலாம். [சொல்லாமல் விட்டது: ஆமா.. ஆமா.. இப்பொ தான் கணவன் பேச முடியும். அப்புறம் கேட்பது தான் நித்திய கடமை ஆகி விடும்.]

இன்னொரு தியரியும் இருக்கிறது. கல்யாணம் ஆன புதிதில் கணவன் சொன்னதை மனைவி கேட்பார். சிறிது காலம் கழித்து மனைவி பேச கணவன் கேட்பான். அதற்கும் சில காலம் கழித்து இருவரும் கத்துவர் தெருவே வேடிக்கை பார்க்கும். ஆமா.. நீங்க எந்த ஸ்டேஜ்ல இருக்கீக?

கல்யாணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது பெண்ணின் தாய் தகப்பன் கண்களில் தெரியுமே ஒரு கலக்கம்… சஸ்பென்ஸ் தெளியாத படம் பாக்கும் உணர்வு. எப்படி இருப்பானோ.. தன் மகள் என்ன செய்வாளோ என்ற பதைபதைப்பு கண்களில் நீராய் பெருகும். அது திருமணத்தின் பொருட்டு அதிகம் தான். என்ன நடகுமோ என்ற திகில் கல்யாணத்தில் மட்டுமா?

1986ல் அந்தமானுக்கு போறேன் என்று கையில் பையோடு பரமக்குடியில் நின்றேன். பஸ்ஸில் போனாலே ஒத்துக்காத மவன்.. ஏதோ அந்தமானாம்.. கப்பலில் போகிறேன் என்கிறான் என்று கேட்ட முறைப்பான என் அப்பாவின் கண்களும் சற்றே கலங்கத்தான் செய்தன. இப்போ, சின்ன போட், கப்பல், கடல் விமானம், ஹெலிகாப்டர், விமானம் என்று சுத்தி வரும் போது அந்த கண்ணீருக்கு அர்த்தம் இல்லை என்று சொல்ல நினைக்கும் நேரத்தில், அவர் இல்லை…

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போயிட்டு வந்திரலாம். அது 1992. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அவ்வளவாய் இல்லாத காலம் அது. டெக்கான் விமானம் வராத காலம். சென்னையிலிருந்து அந்தமான் செல்ல, விமானம் கிளம்ப நான்கு நிமிடங்கள் இருக்கும் போது, தம்பதி சமேதராய் உள்ளே நுழைந்தோம். விமான அதிகாரி கேட்டார், ஏன் இவ்வளவு லேட்?. பள்ளிக்காலம் முதல் சொல்லி வரும் அதே பதில், லேட் ஆயிடுத்து என்றேன்.

அவரும் விடாமல், அதான் தெரியுதே… ஏன் லேட்டாச்சு??. என் பதில் “அதிகாலை எழுந்திரிக்க முடியலை”. அதான் ஏன்? என் கையில் இருந்த கடைசி ஆயிதம் பிரயோகித்தேன். “இப்பொத்தான் முதன் முறையா புதுசா கல்யாணம் ஆயிருக்கு. அதான்” என்றேன்.

அதிகாரி சிரித்தபடி, ஓஹோ… Just Married??? அனுமதித்தார். அட சமீபத்தில் கல்யாணம் ஆன ஆட்களுக்கு இவ்வளவு கருணை காட்டுகிறார்களே?? அதன் பின்னனி ஏதாவது இருக்குமா? என்று யோசித்தேன். கிடைத்தது இன்று.

இராமயணத்தில் இந்த கருணை காட்டும் இடம் வருவதை கம்பர் மறக்காமல் காட்டுகிறார். மறுபடியும் நீங்கள் ஒரு முறை அசோகவனம் வரவேண்டும். ஒளிந்திருந்து அனுமன் துவம்சம் செய்வதை பார்க்க வேணும். சகட்டு மேனிக்கு அரக்கர்களை கொன்று குவித்த அனுமன் ஒரு இடத்தில் சற்றே நிதானிக்கிறார்.

கம்பரின் பார்வையில் “கொல்லும் தன்மை கொண்ட பெரிய்ய்ய யானை மாதிரி” அனுமன் தெரிகிறார். அப்படி இருந்தும், துன்பப்படும் அரக்கியரைப் பாத்து “வூட்டுக்கு போம்மா” என்று அனுப்பி வைக்கிறார். ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு அரக்கர்களை வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கே தான் அந்த Just Married பார்ட்டிகள் கண்ணில் தெரிகிறார்கள்… [அந்தக் காலத்திலும் தெரிஞ்சிடும் போல் இருக்கு.. அந்த வழியல் முகம் பாத்தே..]

அப்போது தான் மணந்த அரக்கியர் சிலருக்கு, அவரது உயிர் போன்ற அரக்கரை கொல்லாது விட்டாராம் அனுமன்.. ஆஹா.. என்னே கருணை..

ஆடல் மாக்களிறு அனையன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.

இத்லெ பெரிய ஆச்சர்யயம் என்ன என்று கேட்டாக்கா… “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பார்கள். ஆனால் அனுமனோ கல்யாணம் செய்யாதவர். “தன் பெறாத இன்பமும் பெறுக இவ்வையகம்” என்று விட்டிருப்பது தான். மனித வாழ்வில் (அரக்க வாழ்விலும் தான்) சந்தோஷமான நேரங்கள் அந்த சமீபத்தில் திருமணம் ஆன தருணங்கள் தான். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமா இருக்குமோ?

ஆமா உங்க பார்வையில் எப்படி படுது?

பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??