தலைவாரி பூச்சூட்டி உன்னை….


இந்த விசுவல் மீடியா வந்தலும் வந்தது, எல்லாத்தையுமே நேரில் பாக்கிற மாதிரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த மீடியா மூலம் சில சிக்கலான நேரங்களையும் கவனிக்கவும் முடிகிறது. இந்தியப் பெண் உலக அழகி ஆகும் தருவாயிலும் சரி… ஒலிப்பிக்கில் மெடல் வாங்கும் நேரம் வந்தாலும் சரி.. ஆனந்தத்தில் கண்ணீர் வந்ததை பார்க்க முடிகிறது.. (நீங்களும் பாத்திருப்பீங்க தானே??).. ஆனால் இந்த 6 வது Indian Idol ஜெயித்த விபுல் ஆகட்டும், சுட்டும், குத்தியும் மெடல் வாங்கிய ஆண்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் அழுததாய்த் தெரியவில்லை. (கபில்தேவ் விக்கி விக்கி ஒருமுறை மீடியா முன்பு அழுதது ஒரு தனிக்கதை)

நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வரவழைக்கும் வித்தையினை இந்தப் பெண்கள் எங்கிருந்து தான் கற்றிருப்பார்களோ..?? (இப்படியே போனால், கிளிசரீன் கம்பெனிகள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்). என் கீழ் பணியாற்றும் மகளிரை அழைத்து, கேட்ட லீவு இல்லை என்றாலோ, அல்லது ஏன் இப்படி செய்தீர்கள்? என்று (மெதுவாய்க்) கேட்டாலே போதும் கண்ணில் இருந்து கொட கொட என்று கொட்ட ஆரம்பித்துவிடும். இதை இன்னொரு மகளிர் அணியிடம் கேட்ட போது தான், அதை அவர்கள் தண்ணீர் டேங்க் என்று பெயர் வைத்திருப்பது தெரிந்தது. எப்பொ வேண்டுமானாலும் வெடிக்க தயாராய் வைத்திருக்கும் டேங்க். (மனைவியின் கண்ணீர் எப்போது வரும் என்று அறிந்தவனுக்கு நோபல் பரிசே தரலாம்..)

முழு நீள நகைசுவைப் படம் என்று ஒருகாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி போடாமலும் கூட படம் முழுக்க சிரிப்பே என்று இருக்கும் படங்களும் இருந்தன. அனுபவி ராஜா அனுபவி என்று ஒரு செமெ படம். (முத்துக் குளிக்க வாரியாளா…பாட்டு அதில தான் வரும்) நாகேஷ் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய படம். அந்தப் படம் மட்டும் பாத்துட்டு நீங்க சிர்க்கலை என்றால்… கோவிச்சிக்க வேண்டாம். உங்களிடம் ஏதோ கோளாறு இருக்கு என்று அர்த்தம்.

சோகப் படங்கள் என்று சொல்லாமலேயே வந்த பல படங்கள் பாப்புலர் ஆகியும் உள்ளன. (ஒரு வேளை அட நம்ம வீட்டிலெ நடக்கிற சங்கதி என்று எல்லாருமே அனுபவிச்சி, அழுது பாத்திருப்பாங்களோ..?) திக்கற்ற பார்வதி, துலாபாரம் போன்ற படங்கள் சொல்லலாம். நான் அம்மாவின் முந்தானையை பிடித்து படம் பார்த்த அந்தக் காலம்.. (இப்பொ முந்தானை மட்டும் மாறலை.. ஆனா ஆள் மாறியாச்சி..அட..இன்னும் ஒடைச்சி சொல்லனுமா என்ன??) குலமா குணமா என்று சிவாஜி நடித்த படம். சோகத்தைப் பிழிந்து கண்ணீரில் சிவாஜி முகம் காட்டுவதை குளோசப்பில் காட்டும் போது இடைவேளை வரும். பரமக்குடி தியேட்டரில் முறுக்கு குச்சி ஐஸ் சாப்பிட வந்த அனைவருமே கண்களை துடைத்துக் கொண்டு வந்தது சிவாஜியின் வெற்றியின் ரகசியம்.

சட்டியிலெ இருக்கிறது தானே அகப்பையிலெ வரும்?? கண்ணீரே வாழ்க்கையா இருப்போர்க்கு தாலாட்டும் கண்ணீரை வைத்தே வரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்தப் பாட்டு?? தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் பாட்டு அது… ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து, தொட்டில் நனையும் வரை… உன் தூக்கம் கலையும் வரை கண்ணான பூமகனே… கண்ணுறங்கு சூரியனே.. (சுட்டெரிக்கும் சூரியனை ஞாபகம் வைத்து மகனை சூரியன் என்பதும் அழகு தான்.)

பச்சிளங் குழந்தைகள் கண்ணீர் சிந்தும் இன்னொரு நேரங்கள், பள்ளிக்கூடம் போகும் தறுவாய் தான். என்னோட ரெண்டாம் வகுப்பு டீச்சரை இப்பொ நெனைச்சாலும் பயம் வரும். கறுப்பா பயங்கரமாயும், பயங்கர கறுப்பாவும் வாட்ட சாட்டமா கையில் பிரம்போடு தான் காட்சி அளிப்பார். பனைமரம் பற்றி விரிவாய் சிலாகித்து பாடம் நடத்தப் போய், பனைமரம் டீச்சர் என்று நான் வைத்த பெயர் ரொம்ப காலம் தொடர்ந்து வந்தது. பாரதி தாசனின் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் என்ற கேள்விக்கு பனைமரம் டீச்சர் என்று நான் பதில் சொல்லி இருப்பேன்.

இந்த கண்ணீர் பத்திய சமீபத்திய பாடல் வரிகள் நல்ல ஹிட். கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒடும் நண்பன் போதும்டா.. இது லேட்டஸ்ட் தத்துவம். சமீபத்திய படங்களில் சோகம் இல்லாவிட்டாலும் நெகிழ்வான படக்காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன என்பதை சொல்லத்தான் வேண்டும். திரி இடியட் படம் எத்தனை முறை பார்த்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் கண் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை. (அது சரி… அதை தமிழில் எடுத்தார்களே… அதிலும் அந்த் effect இருந்ததா? பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்!!!)

கண்ணீர் அஞ்சலி சில சம்யங்களில் மனசை என்னவோ செய்யும். கண்ணதாசனுக்காய் வாலி பாடிய அஞ்சலியில் சில வரிகள் இதோ:

உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

மனதைப் பிசையும் வரிகள் இவை… உங்களுக்கு எப்படி இருக்கு??

வாலி கண்ணதாசன் பாரதி தாசன் வரை கண்ணீர் பத்தி சொல்லிட்டு அப்படியே போனா, நம்ம கம்பர் கோவிச்சிக்க மாட்டாரா?? (இப்படி சுத்தி வளைக்கிறதே கம்பனை வம்புக்கு இழுக்கத்தானே..!! அட அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா???)

சீதையிடம் அனுமன் ராமன் சோகத்தில் கண்ணீர் விட்டதை அசோக வனத்தில் சொல்லும் காட்சி. ராமர் எப்படி இருந்தாராம்? தூக்கம் இல்லாமல் கண் செவந்து போய், அறிவே கலங்கி நெருப்பில் இட்ட மெழுகு போல் மெலிந்தே போனாராம். அப்புறம் இந்த கண்ணீர்… இருக்கே அது அவர் போகும் வழி எல்லாம் சேறாக்கியதாம்.. (கல்லும் முள்ளுமாய் இருக்கும் காடே சேறு ஆனதாம் கண்ணீரால் – இது தான் கம்பரின் ஓவர் பில்டப் .. சாரி..சாரி.. கற்பனைத் திறம்)

அவ்வழி நின்னைக் காணாது அயருவான் அரிதின்தேறி
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இவ்வழி இனைய பன்னி அறிவு அழிந்து அரங்கலுற்றான்.

ஆமா உங்களுக்கு கண்ணீர் வந்த அனுபவம் ஏதும் உண்டா??

எங்கே தொட்டா எங்கே வலிக்கும்??


 தொட்டுக் கொள்ளவா?? என்று செல்லமாய் கேட்கும் பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீங்க… கேக்கும் போதே தொடத் தோன்றும்… அவ்வளவு பாவனையுடன் அமைந்த பாடல் அது.

அதுக்கப்புறம் தொட்டால் பூ மலரும்…என்று சொல்லி, பதிலுக்கு தொடாமல் நான் மலர்ந்தேன் என்று போட்டு வாங்கியது.. அதுக்காக காதலன் தொடவே கூடாது என்ற அர்த்தத்தில் காதலி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை தான்.  தொடாமலேயே என் மலர் போன்ற முகம் இவ்வளவு மலர்கிறதே… நீ தொட்டால்..இன்னும் மலரும் என்று யோசிக்க வைக்குது.. (நான் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறேன்..உங்களுக்கு அப்படி ஏதும் படுதா???)

 காலங்கள் மாறின… அட சன்டாளா..உன் கண் பட்டாலே கர்ப்பம் ஆயிடுவாளே!!! என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்… இது என்ன கண்கட்டு வித்தை என்று யோசிக்க வேண்டாம்.. கர்ண பரம்பரையாக கர்ணன் பிறந்த கதையும் இந்த கர்ப்ப வகை தானே..

சரி அப்படியே… எங்கே தொட்டா எங்கே  வலிக்கும் எரியாவுக்கு வந்து ரவுண்ட் கட்டுவோம்.

கதாநாயகனை வழிக்குக் கொண்டு வர இந்த வலியினை கையில் எடுக்கும் யுத்தி. இதில் நாயகனுக்கு வேண்டிய நபர்கள் அம்மா, அப்பா, தாத்தா, தங்கை, சகோதரன் குழந்தைகள் என்று எது எதுவோ மாறி மாறி வரும்.. ஆனா மாறாத ஒரு விஷயம்… அந்த ஒரு டயலாக்.. அங்கே தொட்டா இங்கே வலிக்கும் என்பது தான்.

மேடைப் பேச்சுகளிலும் எதைத் தொட்டா ஆடியன்ஸ் காதில் சங்கதி ஏறும்? என்பதை தெரிந்து கொள்ளல் அவசியம்.. (இந்த மாதிரி போஸ்டிங்க் போடும் போது உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை நான் போடுகிறேனா?? – என்ன நான் சரியா….எழுதுறேனா???)

இன்று (17-11-2011) லிட்டில் அந்தமான் தீவுகளின் அனைத்து பள்ளிகளும் ஒன்று சேர்ந்து அறிவியல் கண்காட்சி நடத்தினர். நான் தான் சிறப்பு விருந்தினர் இங்கு அதனைத் திறந்து வைக்க…பேச.. (புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பதில் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கிறது). மாணவர்கள் கூட்டம் எக்குத் தப்பாய். கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு அதை பார்க்கவும் பொது ஜனங்கள் வேறு.. இவர்கள் மத்தியில் அறிவியல் பற்றியும் பேச வேன்டும்.

“நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது எங்க அப்பா தண்ணி குடிக்கக் கேட்டா, உடனே கொண்டு வந்து குடுப்பேன்.. இப்பொ நீங்க குடுப்பீங்களா??” இது என் முதல் கேள்வி…

நஹி… என்று உண்மையான பதில் வந்தது. குழந்தைகள் எந்த ஊரிலும் எந்தத் தீவிலும் பொய் சொல்வதில்லை.

“இதெ..இதெ தான் எதிர் பாத்தேன்.. ஏன் இப்படி?? Generation Gap என்று நான் சொல்ல மாட்டேன். This generation needs everything into scientific approach… ஏன் நான் தண்ணீர் தரனும்? நீங்களே ஏன் போய் தண்ணி புடிச்சி தரக்கூடாது?? அக்காவை அல்லது தம்பியை ஏன் கூப்பிடலை?? இவ்வளவு ஏன் எதற்கு எப்படி இப்போதைய பசங்க கேக்கிறாய்ங்க… கேளுங்க… கேளுங்க.. நல்லா கேளுங்க.. இந்த மாதிரியான கேள்விகள் தான் அறிவியலின் ஆதாரம்..” கூட்டம் ஆர்வத்துடன் கேக்க ஆரம்பித்தது.

கண்டுபிடிப்பாளர்கள் எல்லாம் பெரிய படிப்பு படித்தவர்கள் அல்ல. என்னையும் உங்களையும் மாதிரி சாமானியர்கள் தான். சொல்லப் போனால்,  காதுலெ என்ன பஞ்சா வச்சிருக்கே என்று திட்டு வாங்கின பையன் தான் Ear Muff கண்டுபிடித்த சேதியும், வீட்டு வேலை செய்த பெண்மனி மேடம் கியூரி ஆகி இரண்டு நோபல் பரிசு பெற்ற சேதியும் சொல்ல… பசங்க மாத்திரமில்லெ மற்றவர்களும் நல்லா கேட்டார்கள்..

சம்பந்தம் இல்லாததை இழுத்துக் கொண்டு வந்து சம்பந்தப் படுத்தி எழுதுவது எதில் சேத்தி… நான் மட்டும் வம்படியா கம்பரை இழுக்கலையா என்ன???

இப்பொ கம்பர் வந்துட்டாரா… இவர் பாருங்க… சம்பந்தம் இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்வார்.. பாக்கலாமா???

அனுமனைப் பாக்கிறார்.. பாத்தா ஒரு பாய்மரம் மாதிரி தெரியுதாம்.. (எனக்கு என்னமோ Life Boat மாதிரி தெரியுது). ஓகெ Fine.. எப்பொ தெரியுமா?? ஒரு மலைமேலே அனுமன் கால் வைக்கிறார். அப்பொ அந்த மலை அப்படியே பூமிக்கும் கீழே போகுதாம்.. அதெப் பாத்தா ஒரு படகு மூழ்கும் போது பாய்மரம் வெளியே தெரியுதே…அது மாதிரி இருக்காம். இது வரை எல்லாம் சரி தான்.

நடுவில் கம்பர் ஒரு பிட்டு போட்றார் பாருங்க..

அந்த மலையில் அனுமன் கால் அழுத்தத்தால் வானத்திலெ கீற நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மேகம் இவை எல்லாம் கொஞ்சம் மெரண்டு போய் மேலே போயிட்டதாம்.. இங்கே கால வச்சா அங்கே என்ன நடக்குது பாத்தீகளா??

தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிரத் தாழ்ந்து
பாரிடை அழுத்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு எனக் குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே!

இன்னும் வரும்.