கொரங்கை வளத்து கிளி கையில்…


awas anjin

பொதுவா நாய் பட்ட பாடுன்னு சொல்றதெக் கேள்விப் பட்டிருப்பீங்க… [எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம்.. ’இந்தக் ”கேள்வி”ப்படுதல் என்று ஏன் வந்தது?’ என்று. எதாவது ஒரு பதில் சொல்லிவிட்டு, சொல்லக் ”கேள்வி” என்று சொல்வதும் உண்டு. இது மாதிரியான “கேள்வி” பற்றிய கேள்வி ஞானம் அதிகம் எனக்கு இல்லாததால், மீண்டும் நாய் டாபிக்குக்கே தாவலாம்] ஆனா எனக்கு என்னவோ, நாயை வளர்ப்பது தான் நாய்பட்ட பாடு என்பது சமீபத்தில் தெரிந்தது.

என் பையனுக்கு அடிக்கடி இந்த மாதிரி எண்ணம் வரும். ’டாடி… நாம ஒரு நாய் வளத்தா என்ன?’. வழக்கமாய் முடிவெடுக்கும் ’சக்தி’ படைத்த, இல்லத்தரசியிடம் மெஸேஜ் ஃபார்வேர்ட் ஆகும். ’இவனை வளக்கிறதுக்கே நமக்கு நாக்கு தள்ளிப் போகுது. அதிலெ இன்னொரு நாய் வேறெயா?’ இத்தோடு அந்த டாபிக்குக்கு முற்றுப் புள்ளி போடப்படும். நம்ம வீட்டுக் கதை இப்படி இருக்க, நாய் வளர்க்கும் அனுபவம் எனது பக்கத்து வீட்டுக்காரர் மூலம், எங்கள் வீட்டில் தீனிக்காய் திணிக்கப்பட்டது தான், அந்த நாய்க்கு வந்த சோதனைக் காலம்… நமக்கும் தான். (இப்படி இதெல்லாம் எழுதப் போறேன்னு அந்த நாய்க்குச் சத்தியமாய்த் தெரியாதுங்க..)

என் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மிருக வைத்தியர். 16 வயதினிலே படத்தில் மயிலை மடக்கப் பார்க்கும் அதே மாட்டாஸ்பத்திரி டாக்டரே தான். ஆனால் வயது மட்டும் இன்னும் 16 மாதத்தில் பதவி ஓய்வு பெறும் வயது. செய்யும் தொழிலில் பக்தியும் அதிகம். பல ஆண்டுகளாய் நாய் குடும்பத்தை வளர்த்து வருகின்றார் அந்த வங்காளத்து பிராமணர். வாசலில் ஆவாஸ் அஞ்ஜின் (ஞபகம் இருக்கா…? விவேக் கடிபட்ட காட்சி?) என்ற போர்ட் தான் இல்லையே தவிர, ஒரு ஆளையும் உள்ளே விடாது… காத்து நிற்கும், அந்தக் காளி என்ற தாய் நாயும், கல்லூ என்ற மகன் நாயும்.

திடீரென நமது பக்கத்து வீட்டுக்காரருக்கு குடும்ப சகிதமாய் அவசரமாய் கொல்கத்தா கிளம்ப வேண்டிய வேலை வந்தது. ஆஃபீசில் அவரது வேலையினை கூடுதல் பொறுப்பாய், ஒரு டாக்டர் பார்ப்பார் என்று உத்திரவு கிடைத்தது. அப்படி எந்த வித அரசு உத்திரவும் இல்லாமல், அந்த தாய் மகன் நாயை பராமரிக்கும் உபத்திரவம் நம் கைக்கு வந்து சேர்ந்தது.

பை நிறைய பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் பெரிய்ய சைஸ் பிரட்டும் நம் கையில் குடுத்து, “என் கண்ணெயே உன்க்கிட்டெ கொடுத்துட்டுப் போறேன். ஆதில் ஆணந்தக் கண்ணீர் தான் எப்போது பாக்கணும்” என்று நம்மிடம் சொல்லாமல் சொல்லி, கண்கலங்கி அந்த நாய்களிடமும் விடைபெற்றுச் சென்றார்.

அடுத்த நாள் காலையில், பொறுப்பாய், அந்த வாயுள்ள ஜீவன்களுக்கு உணவளிக்க (ஜாக்கிரதையாய் பூட்டிய கேட்டுக்கு வெளியேயே இருந்து, அவசரத்திலும் குறுக்கே கம்பி இருப்பதை மறவாமல்) பேப்பர் இலை பரப்பி அழைத்தேன். எனக்குத் தெரிந்த தமிழ் ஆங்கிலம் சௌராஷ்ட்ரம் ஹிந்தி தெலுங்கு என்று எல்லா பாஷையிலும் கூப்பாடு போட்டுப் பாத்தேன். ம்..ஹும்…ஒன்றும் பயனில்லை. கூப்பிட்ட குரலுக்கும் பதில் இல்லை. இந்த நாய்க்கு சோறு போட, ஒரே நாளில் பெங்காலி கற்றுக் கொள்ள பாலாஜி பப்ளிகேஷன்ஸ் எந்த நூலும் போட்ட மாதிரி தெரியல்லை.

இதே யுத்தம் இரண்டாம் நாளும் தொடர்ந்தது. அன்றும் அந்த நாய்கள் அன்னாவிரதம் செய்து அடம் பிடித்தன. (உண்ணாவிரதம், இந்த அன்னா ஹஜாரே வரவுக்குப் பிறகு அன்னாவிரதம் ஆகி விட்டிருப்பதை, நாய்க்கு மத்தியில் சற்றே மோப்பமிடவும்). ரெண்டு நாள் பிஸ்கெட்டை, நாமெ தின்னு தீத்துட்டு நாய்களை கவனிக்காமெ விட்டோம் என்ற பழிக்கு அஞ்சி, கொல்கொத்தாவுக்கு ஃபோன் செய்து நிலவரம் சொன்னேன். அவரும் அழு குரலில், அது அப்படித்தான், ரெண்டு நாள் நான் இல்லாவிட்டால் இப்படி பட்டினி கிடக்கும், நாளை முதல் சாப்பிட ஆரம்பிக்கும் என்று ஹிந்தியில் அழுதார்.

அதெ முன்னாடியே சொல்லியிருக்கலாமே. அப்படி சொல்லி இருந்தா, ரெண்டு நாள் கழிச்சே வந்திருப்பேனே என்று கேட்டேன் அப்பிராணியாய், அந்த பிராணி அபிமானியிடம். [விவேக் நடத்தும் கோன் பணேகா குரொபதி நிகழ்சியில், மயில்சாமி கேட்கும், ’அந்தக் கடைசி கேள்வி மட்டும் கேளுங்க ஒரு கோடி ரூபாக்கு’ சீன் மனசில் ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது]. ”இதெச் சொல்லியிருந்தா, ரெண்டு நாள் பட்டினி + உங்களுடன் ‘வாங்க பழகலாம்’ ஸ்டைலில் பழக ரெண்டு நாள், ஆக நான்கு நாள் ஆயிருக்கும். அதனால் சொல்லலை” என்று தன்னிலை விளக்கம் அளித்தார். [இதில் ’வாங்க பழகலாம் ஸ்டைல்’ மட்டும் என் இடைச் சொருகல்].

போதாக் கொறைக்கு வீட்டிக்குள் இருந்து, ”ஒரு நாய்க்கு சோறு ஊட்ட முடியல்லெ… நீங்கள்ளெல்லாம் என்னத்தெ ஆஃபீசில் குப்பெ கூட்டி..” என்று அங்கலாய்ப்பு வேறு. (ஒரு நாயா?? ரெண்டு நாய்கள் ஆச்சே !!! – திட்டு வாங்கும் போது எண்ஜாய் பண்ணனும்..இலக்கணம் எல்லாம் பாக்கப் படாது – இது கமலின் திட்டுவாக்கு). முத்தாய்ப்பாய், கிளியெ வளத்து கொரங்கு கையிலெ கொடுத்த கதையாப் போச்சி என்று சொல்ல, நான் இடை மறித்து, கொரங்கெ வளத்து கிளி கையில் கொடுத்துட்டாரு என்றேன்.

எந்தப் பொண்ணுமே கிளி மாதிரி இல்லாட்டிக் கூட, கொரங்கு மாதிரியான கணவன் வந்து வாய்க்கின்ற போது, அந்த கிளிப் பட்டம் அவங்களுக்கு இலவசமாய் தரப்படுது. அது கிடக்கட்டும் ஒரு பக்கம். மரத்திலெ, சம்பந்தமே இல்லாமெ எதுக்கு கிளியையும் குரங்கையும் எதுக்கு ஒன்னு சேத்துப் பேசணும்? இந்த இந்த மாதிரி ஏதாவது டவுட்டு வந்தா, நாம நேரே, கம்பர் ஸ்டோருக்கு ஓடிப் போயிடுவோம்.

கம்பர் கடையில், கம்பர் ஐயா சம்மணம் போட்டு உக்காந்திருக்க, ”இந்த கொரங்கு கிளி சமாச்சாரமா ஏதும் சரக்கு இருக்கா?’ என்று கேட்டேன். அவர் தன்னோட ஐபேடில் தேடிப் ப(பி)டித்து தந்தார். அவர், எப்பொ எது நான் கேட்டாலும், அக்கவுண்டில் எழுதி வச்சிட்டுக் கொடுத்திடுவாரு. நமக்குள் ஒரு சின்ன சின்ன அண்டர்ஸ்டாண்டிங். காந்தி கணக்கு மாதிரி, நமக்குள்ளெ ஒரு கம்ப கணக்கு..

நாம பைக் ஸ்டார்ட் செய்யும் போது, ஒரு ஒதெ ஒதெச்சி செய்யும், அதே ஸ்டைல் கம்பர் காட்டுகிறார். அநுமன் மகேந்திர மலையிலிருந்து ஒரு ஒதெ ஒதெச்சி (ஏர் லங்கா விமானம் இல்லாமல்) இலங்கைக்கு டேக் ஆஃப் ஆகின்றார். அந்த ஒரு உதையில் என்ன என்ன நடந்தது? என்பதை ரொம்ப விரிவா சொல்றார் கம்பர். (அப்பொ கவுண்டமணி செந்தில் உதைக்கும், கம்பர் தான் முன்னோடியோ… நீங்க உதைக்க வர்ரதுக்கு முன்னாடி ஒரு சாம்பிள் மட்டும் சொல்லிட்டு ஓடிப் போயிர்றேன்)

அந்த மலையில் வித்யாதரர்கள் கீறாங்களாம். அவங்களை அவய்ங்க மனைவிமார்கள் கட்டி ஏற்றாகளாம். (அங்கேயுமா???) வெறுத்துப் போயி அவய்ங்க கட்டிங் அடிக்கிறாங்களாம். போதையோடு வந்தவங்களை மேலும் கூடுதலா கட்டி ஏற…. அப்பொத்தான் அநுமன் மலையை உதைக்க, மலை ஒரு ஆட்டம் போடுதாம். அந்த ஆட்டத்தில், கட்டி ஏறிய கட்டழகிகள், பயந்து போய்… பயம் போக, கட்டிப் புடி கட்டிப்புடிடா என்று பாட ஆரம்பிக்கிறார்களாம். அப்படியே மகிழ்ச்சியின் உச்சிக்கே போகும் போது, அடடே…. நாம மட்டும் உச்சிக்கு வந்துட்டோமே!!! வந்த அவசரத்திலெ, நம்ம வீட்டிலெ இருக்கும் கிளியெ மறந்திட்டோமே… என்கிறார்களாம்.

இது தான் குரங்கு உதைக்க, கிளி ஞாபகம் வந்த கதை. இதெப் படிக்கும் போது உங்களுக்கு எந்தப் பைங்கிளி ஞாபகம் வந்ததுன்னு ஒரு வரி எழுதுங்க.. அதுக்கு முன்னாடி கம்பரோட நாலு நல்ல வரியெப் படிச்சிடுங்க ப்ளீஸ்…

ஊறிய நறவு முற்ற குற்றமு முணர்வை யுண்ணச்
சீறிய மனத்தர் தெய்வ மடந்தைய ரூடல் தீர்வுற்று
ஆறின ரஞ்சு கின்றா ரன்பரைத் தழுவி யும்பர்
ஏறின ரிட்டு நீத்த பைங்கிளிக் கிரங்கு கின்றார்.

வில்லங்கப் பொருள் விளக்கம்:
ஊறிய நறவு – அந்தக் கால ஊறல் (இந்தக் கால கட்டிங்)
சீறிய – கட்டி ஏற
மடந்தையர் – நல்ல குட்டிங்க அல்லது சூப்பர் பிகருங்க
உம்பர் – ஆகாசம்

நாயை அப்போவென்று விட்டுவிட்டதால், ஒரு சின்ன பின் குறிப்பு: இலட்சத்தீவுகளுக்கு செல்லும் முன் கவனிக்க. இந்த தீவுகளில் “ஆவாஸ் அஞ்ஜின்” என்ற போர்டு பாக்கவே முடியாது. வாயில்லா ஜீவன் அந்த நாயில்லா தீவுகள் அது.

கம்பன் தேடல்கள் தொடரும்.

திருட்டு மாங்கா புளிக்குமா??


அறிஞர் அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று சொன்னாலும் சொன்னார். அதனை நம் மக்கள் எல்லாருமே, ரொம்பவே சரீய்யா தப்பா புரிஞ்சி கிட்டாய்ங்க போலத்தான் எனக்குப் படுது. (ஒருவேளை இப்படி அர்த்தம் படும்படி இருந்திருந்தா, அவரு இந்த மாதிரி சொல்லாமலேயே இருந்திருப்பாரோ !!!!) அறிஞர் அதுவும் பேரறிஞர், அவரோட பேச்சுக்கு இந்தப் பாமரன் எல்லாம் அருஞ்சொல் பொருள் விளக்கம் மாதிரி சொல்ல முடியுமா என்ன?

எதிர்க் கட்சியை, எதிரிக் கட்சியா நெனைக்கப் படாது என்பது தான் இந்த வாசகத்தின் அடிநாதமான உண்மையின் குரல். (அடுத்த வீட்டுக்காரன் வட நாட்டானாக இருந்தாலும் சரி, சூப்பர் பிகர் ஏதாவது இருக்கா பாரு என்று சொல்வது தான் இன்றைய நவ நாகரீக வடிவம்). எதிரிகளை விரோதிகளாய் நினைக்காமல், அவரிடம் கூட ஏதாவது நல்ல குணங்கள் இருந்தால் அதைப் பேச வேண்டும் என்ற நல்ல கருத்துக்காக சொன்ன சேதி…ஆலோசனை எங்கே போச்சு?? கனி இருக்கும் போது காய் பற்றி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு என்று தானே வள்ளுவரும் ரெண்டு வரி எழுதி வச்சாரு?? நாமும் இனி பழம் நோக்கியே காயை நகர்த்துவோம்.

ஆமா… காய் நகர்த்தல் என்கிறார்களே??? அப்டீன்னா?? அந்த காலத்திலெ காய் வைத்து ஆடிய ஆட்டங்கள் அதிகமாய் இருந்திருக்குமோ?? தாயம், ஆடு புலி ஆட்டம், செஸ் என்று இப்போதைய பெயரில் விளங்கும் சதுரங்கம், பரமபதம் இப்படி எல்லாத்துக்கும் காய் நகர்த்தல் தான் முக்கியமான மூவ். (பாவம்.. இந்தக் காலத்தின் வீடியோ கேம் மட்டுமே விளையாடத் தெரிந்த இளைய தலைமுறைக்கு… இந்த காய் வைத்து விளையாடும் விளையாட்டுகள் பற்றிய பெயர் கூட தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை) ஆனாலும் இந்த காய் வைத்து ஆடும் எல்லா ஆட்டங்களும், ஆரம்பம் ரொம்பவே டல்லு தான் (ஃபேஸ் புக்கில் கூட இப்படி ஆரம்பம் டல்லாத் தானே இருக்கு… அப்புறம் ஆராவாரம் தானே?)

நாம செய்யிற ஒவ்வொரு காரியத்தையும் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தோடு சம்மந்தா சம்மந்தமில்லாமல் சம்பந்தப் படுத்திப் பேசுகிறோமே?… கேட்டிடுருக்கீகளா? இப்படித்தான் ஒரு நாள் ஏதொ பேசிக்கொண்டிருந்தோம். பல்லி அடிக்கடி கத்தியது. அது என்னோட அரட்டைக்காரனுக்கு செமெயா பாதிச்சது. (எனக்கென்னவோ அந்தப் பல்லி குஜாலா, நேத்து ராத்திரி யம்மா என்று பல்லி பாஷையில் பாடுவது போல் இருந்தது.) அத்தனைக்கும் அவரு டாக்டர் வேறு. நோயாளிக்கு ஏதாவது பிரச்சினையா?? போன் போட்டு விசாரிக்கிறார்… அவரால் நிம்மதியாக இருக்க முடியலை.. அரசு மருத்துவர் இவ்வளவு அக்கறையோடயா?? என்று மனதுக்குள் பல்லி கத்துது. நட்ட நடு ராத்திரியில் (இரவு 11 மணி தானுங்க.) நாய் வேறெ கத்திச்சா??? அவரு அப்செட் ஆகி தூங்கப் போயிட்டார். அடுத்த நாள் அந்தமான் தீவில் 4.8 அளவில் பூகம்பம் வந்த செய்தி தெரிந்தது. பல்லிக்கும் நாய்க்கும் தெரியுது… நமக்குத் தெரியலையே?? ஆமா 30 நளில் பல்லி பாஷை கத்துக்க புத்தகம் ஏதும் இருக்கா??

நாய் வித்த காசு குரைக்காது என்பார்கள். அதே போல் ஒரிஜினல் மாம்பழத்தை விடவும் திருட்டு மாங்காய்க்கு ருசியே தனி தான் போலிருக்கு. ஒரு வேளை இலவச இணைப்பு என்பது நமது கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட விஷயமா ஆயிடுச்சோ? தாளிக்க சட்டி கிடைக்கும் என்பதற்காகவே ஏகப்பட்ட எண்ணெய்கள் வாங்கிய திருமதிகள் பலரில் என் தர்ம பத்தினியும் அடக்கம். (ஆனா அந்த தாளிக்கும் பாத்திரம் அத்தனையும் ஒரு தடவை கூட உபயோகப்படாமல் அப்படியே அடுப்பங்கரையில் தூங்கும் என்பது வேறு விஷயம்.) அந்தக் காலத்தில் பலசரக்குக் கடையில் சாமான் வாங்கினால். அம்மாவின் முந்தானையை பிடிச்சிட்டு கூடவே வரும் வாண்டுகளுக்கு அச்சு வெல்லம் அன்பளிப்பா கிடைக்கும். (அதுக்காகவே அம்மா பிள்ளை ஆனவன் நான்) அது டேஸ்டே தனி தான்.

தயிர் எவ்வளவு தான் வாங்கினாலும், அதில் கொஞ்சமாவது கொசுறு இல்லாட்டி கதையாவாது என்பது தனிக்கதை. இலவச இணைப்புகள் தான் மெயின் புத்தகத்தை விட நல்லா இருக்கு. மனிவியுடைய தங்கையை இலவச இணைப்பு என்றும் அழைக்கலாமா?? அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை… எப்படியோ… ஏதோ ஒன்று, சும்மாவோ அல்லது திருட்ட்டுத் தனமாவோ கெடைக்கிறது சுகம்மா இருக்கு. ஏன் இப்படி ஆயிடுச்சி??

தப்பு செய்வவர் தைரியமா, சந்தோஷமா இருக்காய்ங்க… நீதி நேர்மை நாட்டுக்கு நல்லது, நாலு பேத்துக்கு நல்லது செய்யலாம்னு நெனைக்கிறவங்க பயந்து பயந்து, நொந்து நூலாகி இருக்காங்களே?? எங்கேயோ தப்பு நடந்திருக்கே?? இன்னொரு விஷயம் நம்ம நாட்லெ தான் விதி மீறல் செய்வது கௌரவமான செயலா பாக்கப் படுது. ரூல்ஸ் ஃபாலோ பன்றவய்ங, பொழைக்கத் தெரியாதவங்க லிஸ்ட்லெ வந்திடுவாங்க. தப்பு செய்தால் தம்பியா இருந்தா கண்டிக்கலாம். அண்ணன் தப்பு செய்தா??? தம்பியும் சொல்லிக் காட்டலாமா??? ….மே… காட்டியிருக்காங்கலே… இப்பொ கம்பர் எண்ட்ரி ஆகிறார்.

கும்பகர்ணன் இரவணராஜாவோட அன்புத் தம்பி.. என்ன.. எல்லாத் தம்பிகளும் துக்கமா இருப்பாய்ங்க. இவரு கொஞ்சம் தூக்கமவே இருப்பார். அவ்வளவு தான் வித்தியாசம். அவரும் ஒரு நாள் ராஜாவெப் பாத்து சொல்றார்.. ஓவியங்கள் அதிகமா இருந்த நம்ம ராஜ்ஜியத்தெ தீ வந்து சாப்பிட்டுப் போயிடுச்சி…( தீ அழிச்சிடுச்சி என்று நெகட்டிவா சொல்லலை, கம்பர். தீ சாப்பிட்டு விட்டது என்று பாஸிட்டிவா சொல்கிறார்.) நல்ல குடியில் பிறந்த மாற்றான் தோட்டத்து மனைவியை சிறை வச்சியே…நல்லதா அண்ணா??( மோசமான குடியில் பொறந்த ஆளு கூட சகவாசம் வச்சிருந்தா பரவாயில்லையா கும்பண்ணே???)

ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்
கோவியல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?

கும்பகர்ணன் நல்லவரா கெட்டவானா என்று பட்டிமன்றம் வச்சா, இனி மேல் நீங்க நல்லவர்னு ரொம்ப தைரியமா பேசலாம்.