அண்டர் நாயகன்


*மறைந்திருந்து காட்டும் கம்பன் – 1*

கம்பன் தனது 10000 பாடல்களில் கம்பராமாயண காப்பியம் படைத்துள்ளார். ஒரு சில கதைப் பாத்திரங்களையே அடிக்கடி சுட்டிக் காட்ட வேண்டிய சூழல். கம்பன் அச்சிக்கலை எளிதாக கையாள்கிறார். பெயரினை அடிக்கடி குறிப்பிடாமல், மறைத்து அவர்களின் குணங்கள் அல்லது பொருள்கள் பற்றி சொல்லவிழைகிறான்.

மறைந்திருந்து காட்டிய கம்பன் பெயர்களை, கொஞ்சம் நாமும் தினமும் ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா?

இன்று….

*அண்டர் நாயகன்* அருள் தூதன் யான்’ என்பது கம்பன் வரிகள். அண்டர் நாயகன் அருள் பெற்ற தூதன் யான் என்று சீதையிடம் அனுமன் அறிமுகம் செய்து கொள்ளும் இடம் இது.

அண்டர் நாயகன் என்றால் தேவர்களின் தலைவன்.

இராமனைத்தான் இப்படி கம்பன் சொல்கிறார்.

இதோ முழுப் பாடல்.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;

கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,

‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,

தொண்டை வாய்மயிலினைத் தொழுது,தோன்றினான்.

[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]

[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]

*அந்தமான் கிருஷ்ணமூர்த்தி*