மனிதன் Vs கவலை


கவலை இல்லாத மனிதனை நீங்கள் பாத்திருக்கீங்களா? இந்த கேள்விக்கு உடனடியாக கிடைக்கும் பதில் என்ன தெரியுமா? கருவறையில் இருக்கும் பிறவாத குழந்தைக்கும், கல்லரையில் இருப்பவனுக்கும் தான் கலையே இருக்காது என்பது தான். நீங்கள் கவலையில் இருக்கும் போது என்றைக்காவது “ஏன் இப்படி கவலையோடு இருக்கிறேன்?” என்று யோசித்தது உண்டா? அப்படி யோசிக்கும் அந்தக் கணமே அந்தக் கவலை உங்களை விட்டு ஓட ஆரம்பித்து விடும்.

நம்முடைய கவலைகளுக்கு மிக முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தால், அது ரொம்பவும் அல்பமான ஒன்றாக இருக்கும். சிலவற்றை பட்டியல் போடலாமே:

1. தாம் நினைக்கும் ஒன்று நடக்காத போது. (நீங்கள் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று சட்டமா என்ன? அந்தந்த சூழலுக்கு ஏற்ற நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டு நடக்கிறது. நாம் கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?)

2. தாம் எதிர்பாராத ஒன்று நடக்கும் போது. (இது தான் நடக்க வேண்டும் என்று Project Management ல் போட்டுப் பார்க்க வாழ்க்கை ஒன்றும் Project அல்லவே?? நடக்கும் செயல்கள் எல்லாத்தையும் ஜாலியா அனுபவிக்கிறதை விட்டுட்டு கவலைப் படுவானேன்.)

3. நம்மால் ஒன்றுமே செய்ய முடியாத விஷயத்துக்கு முகம் சோர்ந்து போதல். (அப்பா… சென்னை வெய்யில் மண்டையெப் பொளக்குதே…; சே..என்ன இது கரண்ட் கட்?…; ஊரெல்லாம் ஒரே குப்பை?… காசு இல்லாமெ ஒரு காரியமும் ஆகாதா?.. இதுக்கெல்லாம் நீங்க என்ன செய்ய முடியும்? வசதி இருந்தா AC, Invertor போட்டுக்குங்க.. இல்லையா? செருப்பு கொடை சகிதம் வீட்டை விட்டு கிளம்புங்க… முடிஞ்சா நீங்க உங்க ஏரியாவை சுத்தமா வச்சிக்குங்க… காசு இல்லாமெ நடக்கும் வித்தையை நாலு பேத்துக்கு கண்டுபிடிச்சி சொல்லுங்க)

4. தான் நினைப்பது மட்டுமே நடக்க நினைத்தல். (முதலாவதுக்கும் இதுக்கும் ஒரு சின்ன வித்தியாசம். நீங்கள் பரீட்சையில் முதல் வகுப்பில் பாஸாக நினைப்பது முதல் வகை. அதில் வெற்றி பெறும் சாத்தியம் அதிகம். யாரிடமாவது உதவிக்கு போகிறீர்கள். இதில் வெற்றி பெறும் சாத்தியம் ??? சொல்ல முடியாது. வரும்… ஆனா வராது மாதிரி தான். இன்னொரு பக்கமும் இருக்கு என்பதை யோசித்தாலே போதும். கவலையின் ரேகையை கலட்டி விடலாம்.)

ஒட்டு மொத்தமாய் கவலை இல்லாமல் இருக்க நல்ல வழி… எந்த செயலையும் மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. போனா மயிறு என்ற கொள்கையில் செய்வது தான் சரி என்று படுகிறது.

கவலை இல்லாத மனிதன் என்று ஒரு படம் வந்தது. கண்ணதாசன் சொந்தத் தயாரிப்பு அது. அந்தக் காலத்திலேயே ஐந்தாறு லகரங்களுக்கு அவரை கடனாளி ஆக்கிய படம் அது. அந்தப் படமே, என் கவலைகளுக்கெல்லாம் தாயாக அமைந்து விட்டது என்று அவரே பின்னர் புலம்பி இருக்கிறார். அதுக்கு மேலும் சொந்தப் படம் எடுக்கும் ஆசை அந்த கவியரசருக்கு விட்ட பாடில்லை. தவறு செய்து விட்டு, அதைத் தவறு என்று தெரிஞ்சும் மீண்டும் அதே தவறைச் செய்தேன் என்று பின்னர் அவரே வாக்குமூலம் தந்தார்.

அந்தமானில் தமிழ் புத்தகம் எழுதுவது என்பது, நஷ்டம் வரும் என்று தெரிந்தே செய்யும் வியாபாரம் என்பது என் கவலையான ஒரு கருத்து. இதனை சில தமிழகத்து தமிழ் அறிஞர்கள் அந்தமானில் வந்த போது தெரிவித்தேன். அந்தமானில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் அதே நிலைமை தான் என்று அவர்களின் கவலையையும் பதிவு செய்தனர். [ ஒரு வேளை ஆறுதல் சொல்வதற்காய் இப்படிச் சொல்லி இருப்பாரோ??.. சரி உடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கவலை…?]

மனிதன் ஒருபக்கமும் கவலை ஒரு பக்கமும் நின்று கடைந்து அதற்கான காரண அமிர்தம் கண்டு எடுத்தால்… நம் கையில் கிடைப்பது “தோல்வி” தான். தோல்விகள் தான் கவலைகளின் ஒட்டு மொத்த காரணம். என்னவோ, தோல்விகள் தான் வெற்றியின் முதல்படி அப்படி இப்படின்னு எப்படி எப்படியோ சொல்லிப் பாத்த போதும், பலரால் இந்த தோல்விகளை தாங்க முடிவதில்லை. தோல்வியினை மேனேஜ் செய்வது எப்படி என்பதினை வீட்டிலும் சொல்லித் தருவதில்லை. School களில் இதெல்லாம் out of syllabus.

வாழ்க்கை என்பது Chess விளையாட்டு மாதிரி. ஒருபக்கம் நீங்கள். மறுபக்கம் இயற்கை, கடவுள், விதி, காலம் இப்படி ஏதோ ஒன்று உக்காந்து ஆடும். நாமெல்லாம் புதுசா யாருக்காவது Chess விளையாட்டு சொல்லித்தரும் போது வேணும்னே நம்ம தோப்போம். புதுசா கத்துக்கிறவா நன்னா கத்துக்கட்டும் என்ற கரிசனத்தில். இப்படித்தான் உங்களின் ஆரம்ப வெற்றிகள்.. அப்புறம் சில சமயம் டிரா.. அல்லது தோல்வி.. அப்படியே ஆட்டம் தொடரும். எல்லாம் விளையாட்டா எடுத்து ஜாலியா போக வேண்டியது தான்.

இப்பொ என்னோட கவலை எல்லாம், கம்பரை இங்கே எப்படி இழுக்கிறது என்பது தான்… யோசிச்சா.. சிக்காமலா போகும்… சிக்கிடுச்சே…

இலங்கையில் அனுமன் ஏரியல் வியூ பார்க்கும் நேரம்.. பளிங்கினால் ஒரு மாளிகை அல்ல.. பல மாளிகைகள்.. எங்கு பாத்தாலும் சோலை.. அதில் கற்பக மரங்கள்.. அதில் தேன் சொரியும். அது தவிர்த்த இடங்களில் என்றுமே Week End கொண்டாட்டம் மாதிரி குடித்து செமையா பார்ட்டியில் மகிழும் அரக்கர்கள். ஹைலைட் சமாச்சாரம் ஒன்று. கவலையான ஒரு ஆளையும் காணோம்.

பளிங்கு மாளிகை தலந்தொறும் இடம் தொறும் பகந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறுஞ் சோலைகள் தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடிநர் பாடிநர் ஆகி
சளிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்.

கவலையில்லா உலகம் படைக்க ஆசையா? மொதெல்லெ நீங்க கவலைப் பட்றதை விடுங்க.. என்ன சந்தோஷமா??

என்ன சுகம்? ம் ம் ம் என்ன சுகம்?


நினைத்தாலே இனிக்கும் என்பார்கள். சமீபகாலமாய் முகநூல்களில் வெளிவரும் போட்டோவைப் பாத்தாலே வாயில் ஊறும். மீன் பொறியல், இறால் வறுவல் என்று படமாய்ப் போட்டு தாளிப்பது ஒரு பக்கம். சிரிக்கும் சிங்காரியான தமண்ணா (இன்னுமா தமண்ணா என்று கேக்காதீங்க) படங்கள் மறுபக்கம். இப்பத்தான் புரியுது, நீங்க ஏன் அடிக்கடி Facebook பக்கம் போறீங்க? என்று மனைவியிடமிருந்து இடி எல்லாப் பக்கமும். இது நினைத்தாலெ சிரிப்பாத்தான் இருக்கும். (ஆமா கடுப்பா இருக்கு என்கிறதை தைரியமா எழுதவா முடியும்?)

சுகமான சுவையான சேதிகளை ஜாலியா எடுத்துக்கும் மக்கள் சோகத்தில் அப்படியே துவண்டு போவது தான் உறுத்தல் தரும் விஷயம். சோகத்தை தோல்வியை எப்படி எதிர் கொள்வது? இது ஒண்ணும் பெரிய்ய கம்பசூத்திரம் இல்லை. (கம்பர் சூத்திரம் எப்படியும் கடைசியில் வரத்தானே போகுது?).

தோல்விக்கு நம்மை தய்யார் நிலைக்கு வைத்திருப்பது முதல் படி. இது தன்னம்பிக்கைக்கு எதிரானது இல்லையா என்று சுய முன்னேற்ற நூல்கள் படித்தவர்கள் என்னோடு சண்டைக்கு வர வேண்டாம். 10 பேருக்கான வேலைக்கான தேர்வு நடக்கிறது. 2500 பேர் மோதுகிறார்கள். அதில் பத்து பேர் தான் வெற்றி பெற இயலும். மீதம் 2490 பேர் தோல்வி என்று முடங்கி விட முடியுமா என்ன? அந்த 10 பேரில் ஒருவராய் வர முடியுமா? என்று பாக்கனும். இல்லையா.. அடுத்த வாய்ப்பு தேடிப் போகணும். புலம்பாமல்.

கிடைக்காத வாய்ப்புக்கு புலம்புவதை விட கிடைத்த வாய்ப்பை செமைய்யா பயன்படுத்திக்க வேன்டும். உங்களுக்கு ஒரு கணேசன் கதை சொல்லவா?

சத்ரபதி சிவாஜி நாடகத்திற்கு அதற்கு முன்னர் வரை நடித்து வந்த நடிகர் (எம் ஜி ஆர் என்று படித்த நினைவு) அன்று தவிர்க்க முடியாத காரணத்தால் வர முடியாமல் போக, அரை மணி நேரம் வசனம் பார்க்க கிடைத்தது இன்னொரு நடிகருக்கு. மதிய உணவினை தியாகம் செய்து நடித்தே காண்பித்ததால் அவருக்கு உடனே நடிக்கவே வாய்ப்பு தந்தார்கள். அன்று தான் அந்த கணேசன் சிவாஜி கணேசனாக பிறவி எடுத்த தினம். இப்பொல்லாம் நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம் என்று பாராட்டும் அந்த சிவாஜி கணேசன் கதை மூலமாக, நாம் வாய்ப்பை பயன்படுத்தல் எப்படி? என்ற .செய்தி கற்க வேண்டும்.

என் அலுவலக நண்பர் ராம்கி ஒரு தேவியின் கதை சொன்னார். சித்தியின் கொடுமை காரணமாய் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு அறையில் பூட்டப்பட்டாளாம் அந்த தேவி. தேவிக்கு கதவு தான் பூட்டப்பட்டது. அறிவின் கதவு அப்போது தான் திறந்தது. விளையாட நண்பர்கள் யாரும் இல்லாததால் நம்பர்களுடன் விளையாடி மேதையானராம் அந்த தேவி. சகுந்தலா தேவி தான் அந்த தண்டனையைக் கூட வாய்ப்பை பயன்படுத்திய கணித மேதை.

அங்கே இங்கே ஏன் போகணும். என் கதையும் எடுத்து உட்றேனே.. 1987 களில் மாற்றல் ஆன போது உக்கார இடம் இல்லாமல் போய் கம்ப்யூட்டர் ரூமில் நுழைந்தேன். அங்குள்ளோர் பிள்ளையார் படம் போட்டு விளையாடிக் கொண்டிருக்க, நான் ஒரு துறைமுகப்படத்தின் படம் போட பிள்ளையார் சுழி போட்டேன். பாத்த அதிகாரி என்னை மூணு நாள் கணிணி பயிற்சிக்கு சென்னை அனுப்பி வைத்தார். சிமெண்ட், கல்லு, கம்பிகளோடு மட்டும் நின்றிருக்க வேண்டிய என்னை இன்று வலைப்பூ வரை வலம் வர வைத்தது, அந்த உக்கார இடம் இல்லா பிரச்சினை தான்…

தோல்வியால் துவண்டு கிடப்பவர்க்கு இரு கோடுகள் தத்துவம் தான் லாயக்கு. அதாவது நம்முடைய தோல்விகள் சின்னதாக வேண்டுமா? நம்மை பெரிதாக ஆக்கிக்கொள்ள வேன்டியது தான். பிரச்சினை சின்னது ஆகிவிடும். பிரச்சினைக்கான ஆதி காரணம் என்ன என்று பாத்தா.. பயம். ஏன் பயம்? அது பற்றிய அறிவு… தெளிவு இல்லாதது. ஆக அறிவை வளர்த்துக் கொண்டுவிட்டால் பயம் ஏது? பிரச்சினை ஏது?

உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்கிறது பழைய பாடல். காலில் செருப்பு இல்லையா? காலே இல்லாதவனைப் பார் என்கிறது தத்துவம். இன்னும் தெம்பு வர “ஒவ்வொரு பூக்களிலும்..” பாட்டு கேளுங்களேன். கொஞ்ச நேரம் பதுங்கிட்டு மறுபடியும் பாயத் தயாராயிடுங்க.

அந்தமானில் முன்பெல்லாம் தமிழர்களை அய்யாலோக் (ayyalog) என்பர் மிக ஏளனமாக. காலம் உருண்டது. தமிழர்களில் இப்போது தலைவர்கள் உருவானார்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் இப்படி உருவாக உருவாக, மரியாதை தானே வருகிறது தமிழர்களுக்கு. தரம் உயர, நம் தரம் உயர வேண்டும் என்பது மட்டும் நிரந்தரம்.

நம்மை நாம் விஸ்வரூபம் எடுத்து வைத்துக் கொண்டால் நம்மை நோக்கி வரும் துன்பங்களைக்கூட ஜாலியா எடுத்துக்கலாம். என்ன சுகம்..ம்..ம்.. என்றும் பாடலாம். அப்பாடா எப்படியோ தலைப்பைக் கொண்டு வந்தாச்சி.. இனி கம்பரையும் கொண்டு வரனுமே..!! இழுத்திட்டாப் போச்சி…

ஒரு மனிஷன் ஒடம்புலெ சாதாரண காயம் பட்டாலே அலறி அடித்து ஆர்ப்பாட்டம் செய்றோம். அம்பு பாஞ்சா எப்படி வெலெலெத்துப் போவோம்? ஓர் ஒடம்புலெ அம்பு படுது. அந்த அம்பு எப்பேற்பட்டது தெரியுமா? அனல் பறக்கும் அம்பாம் அது. அது ஒடம்புலெ படுது. பட்ட ஆளுக்கு வடிவேல் தூங்குற மாதிரி ஆனந்தமா இருக்காம். அப்படியே யாராவது வந்து சொறிந்து விட்டா எப்படி இருக்கும்? – னு ஏங்கும் போது, அம்பு வந்து தைத்ததே, சொறிஞ்ச மாதிரி சுகமா இருக்காம். யாருக்கு? விஸ்வரூபம் எடுத்து படுத்திருக்கும் அனுமனுக்கு. (உங்களை உயர்த்திக் கொண்டால் துயரம் ஏதும் இல்லை இது அனுமன் சொல்லாத கீதை… சாரி ஹீதை)

எறிந்தனர் எய்தனர் எண் இறந்தன
பொறிந்த எழு படைக்கலம் அரக்கர் போக்கினார்
செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுறச்
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான்

கம்பன் சொன்னா அந்த ஆளு என்ன பெரிய்ய கொம்பனான்னு கேப்பீங்க. ஆனா ஷேக்ஸ்பியர் சொன்னா கேப்பீங்க தானே.. இதோ அவர் சொல்லும் வாழ்வில் வெற்றிபெற மூன்று வழிகள்:

பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
பிறரைக்காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

வாழ்த்துக்களுடன்… மறுபடியும் சந்திப்போம்.