மறைந்திருந்து காட்டும் கம்பன் – 2
கம்பன் மறைந்திருந்து காட்டிய பெயர்களில் இன்று….
தொண்டை வாய்மயில்
தொண்டைவாய் மயிலினைத் தொழுது,தோன்றினான் என்பது கம்பன் வரிகள்.
கோவைக் கனி போலும் வாயினை உடைய மயில் போன்ற…. எனச் சொல்லும் போதே சீதையினைத் தான் கம்பன் சொல்கிறார் என்ற உங்கள் ஊகம் சரியே தான்.
சோகத்தில் இருக்கும் சீதை கூட, அனுமன் பார்வையில் எப்படி இருந்தார் என்பதை நம் கண் முன் நிறுத்திய வரிகள் அவை.
ஒரே பாடலில் இராமனையும், சீதையினையும் பெயர் கூறாமல் அவர்களின் குனங்களால் குறிப்பிட்டமைதான் கம்பனின் சிறப்புக்குணம்.
இதோ முழுப் பாடல்.
கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,
தொண்டை வாய்மயிலி னைத் தொழுது,தோன்றினான்.
[அனுமன்பிராட்டியைப் பார்த்தான் ; பிராட்டியின் நினைவை ஆராய்ந்து; (அதனால்) திடுக்குற்றான்; பிராட்டியின் மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; தேவர்களின் தலைவனான இராமபிரானின் திருவருள் பெற்ற தூதன் யான் என்றுகூறி கோவைக் கனிபோலும் வாயை உடைய மயில்போன்ற பிராட்டியை வணங்கி வெளிப்பட்டான்.]
[5357 – சுந்தர காண்டம்; உருக்காட்டு படலம்]
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி