கேக்கிரான் மேக்கிரான் கம்பெனி


நகைச்சுவை உலகில் வெற்றிக் கொடி கட்டிய காமெடி, அந்த வடிவேலு துபாய் போய்
வந்து அலம்பல் செய்வது தான். எக்கு தப்பா “நீயெல்லாம் என்ன கேக்கிரான்
மேக்கிரான் கம்பெனியிலெ என்ன செஞ்சிருக்கப் போறெ? அங்கே டாய்லெட் கிளீன்
செய்யற வேலையில் தானே இருந்தே”…. என்று குத்து மதிப்பா பார்த்திபன்
கேக்க (பார்த்திபன் குறி என்னெக்காவது தப்புமா?) “அடெ.. நான் இங்கே ஒரு
மாதிரி பில்டிங்ங்க்ங்க் கான்ட்ராக்டர்ன்னு சொல்லி வச்சிருக்கேன்”…
என்று வடிவேல் கெஞ்சுவதும் எல்லாருக்கும் நல்லா ஞாபகம் இருக்குமே!!!

செய்யும் தொழிலே தெய்வம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தான் செய்யும்
தொழிலை சொல்லாமல் மறைப்பதும் சிலருக்குக் கை வந்த கலையாய் இருந்திருக்கு.
அந்தமானிலும் அந்த விபரீதம் அடிக்கடி நிகழும். ஒரு நாள் ஃபோன் வந்தது.
அழுகுரலில் ஒரு பெண்மணியின் குரல். தன் கணவர் அந்தமானில் தன்னை விட்டு
வந்து வாழ்வதாய் தகவல். போய் பாருங்க என்ற வேண்டுகோளொடு முடிந்தது.

நானும் போய் விசரித்தேன். ஊரில் ஐடிஐ மட்டுமே படித்த அவர் அந்தமானில்
இஞ்சினியர் ஆகி (பீலா தான்) இருந்தார். அம்புட்டு பொறுப்பா கம்பெனியில்
வேலை பாத்திருக்கார்.. அவர், வீட்டோட மாப்பிள்ளை ஆகும் ஏற்பாடு வேறு
நடந்திட்டு இருந்திருக்கு. நான் போனதும், வில்லன் வந்த கதையில் வரும்
திருப்பம் போல், ஊருக்கே திரும்ப வேண்டிய நிலை வந்து விட்டது. (ஏதோ
என்னால் ஆன நல்ல காரியம்).

ஒரு காலத்தில் அந்தமானில் இருப்பவர்களுக்கு பொண்ணே குடுக்க மாட்டார்கள்.
அதுக்காகவே இன்னெக்கி அந்தமான், நாளைக்கே மதுரைக்கு மாற்றல் ஆகி வந்து
விடுவேன் என்றெல்லாம் சொல்லி (பொய் தான்) கல்யாணம் செய்து கொண்டு வருவர்.
துறைமுகம் எங்கே மதுரைக்கு வரும் என்ற யோசனை கூட செய்யாமல் பெண் கொடுத்த
புன்னியவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என் மாமனார் ரொம்ப விவரமானவர். 90 களில் மதுரைக்குப் போய் பெண் பார்த்து
விட்டு தீவு திரும்பினேன். நான் இருக்கும் தீவு நன்கவுரி. என்னைப்
பற்றியும் நான் செய்யும் வேலை பற்றியும் விலாவாரியா சிபிஐ ரேஞ்ஜில்
விசாரனை நடத்தி இருப்பது பின்னர் தான் தெரிந்தது. எல்லாம் ஒரு Safety
க்குத்தான் என்றாலும், இப்படி சிபிஐ ரேஞ்சுக்கு தேவையா?? இப்பொ எல்லாம்
அந்தச் சிக்கல் இல்லை. மொபைல் வந்த பிறகு, ஆளைப் புடிச்சிடலாம் என்ற
நம்பிக்கை வந்து விட்டது எல்லாருக்கும்.

சமீபத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானப் பயணம் (மாமனார் செலவு
இல்லிங்க…) மூன்று சீட்டில் நான் நடுவில். இடது பக்கத்தில் இருந்தவர்
என்னைப் பாத்ததும் தமிழா? என்று கேட்டார். (ஏன் அப்படி கேட்டிருப்பார்?).
அவர் துபாயிலிருந்து வருகிறார். வலது பக்கம் இன்னொருவர் வந்து
உக்காந்தார். வந்தவுடன் iPod எடுத்தார் கையில். துபாய்க்காரரோ அப்பா..
பெரிய்ய ஆளுப்பா..என்றார். நானும் என் பங்குக்கு, சலங்கை ஒலி படத்தின்
“கமல் கேமிரா” மாதிரி குட்டியான Galaxy Tab கையில் எடுத்தேன். நீங்களும்
கம்மியில்லையே என்றார் அந்த துபாய்க்காரர்.

நான் பார்த்திபன் ரேஞ்சில் அவரிடம் கேட்டேன் “என்ன செய்யறீங்க துபாய்லெ?”
அவரும் சும்மா வாட்ட சாட்டமா தான் இருந்தார். ஆனா கொஞ்சம் சன்னமான
குரலில், “Labour வேலை தான்” என்றார். “அட நீங்களும் பெரிய்ய ஆள் தான்
என்றேன்” நான். “உலகமே துபாயெப் பாத்து வாயெப் பொளக்கிறதுக்கு நீங்களும்
தான் ஒரு காரணம்” என்றேன். செம ஜாலியாய் ஆகிவிட்டார் மனுஷன். ஊருக்கும்
போனா Building Contractor என்று சொல்வதாய்த் தான் இருந்தாராம். மனதை
மாற்றிக் கொண்டார்.

ஒரே வகுப்பில் படித்து பலமாதிரி பதவிகளில் வேலைக்கு சேர்ந்திருப்பார்கள்.
சில சமயம் சிலர் சிலரின் கீழ் வேலை பார்க்கும் நிலை கூட வரலாம். நான்
ஒருவரின் கீழ் வேலை பார்த்து, பின்னர் அவர், என் கீழ் வேலை பார்க்கும்
அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றது. அதுக்காக செய்யும் தொழிலை
மாத்திக்கிறதோ மறைக்கிறதோ நல்லாவா இருக்கு?

எதற்கும் தயாராய் இருப்பது தான் நல்ல குணாதியம். எதற்கும் என்பதில்,
எல்லா விதமான மோசமான சந்தர்ப்பங்களும் சேர்த்தி தான். பழைய படத்து டயலாக்
இப்படி வரும். “தூங்குபவனைத் தட்டி எழுப்பி, அவன் கையில் வாளையும்
கொடுத்து, தலையையும் நீட்டச் சொல்கிறான்”. இதுக்கு மேலெ ஒரு மோசமான
சிச்சுவேஷன் வருமா என்ன?

சரீ..எல்லாம் சரி.. இந்த மாதிரி சிச்சுவேசனை எப்படி சமாளிக்கிறது? ஒரு
சின்ன டெக்னிக் இருக்கு. பக்கத்திலெ இருக்கும் ஆளை ஒரு தூக்கு
தூக்கிடுங்க போடும். (இப்போல்லாம் தூக்கிடவா என்றால் வேறு மீனிங்க்…
நான் மெய்யாலும் உசத்தி பேசுங்க என்கிறேன்)

அதெப்படி எதிரியை ஒசத்திப் பேச முடியும்?? இப்படியெல்லாம் எக்குதப்பா
கேள்வி கேட்டீங்கன்னா, அப்புறம் நானு உங்களை ராமாயண காலத்துக்கு
கூட்டிட்டு போயிடுவேன். செய்யும் தொழிலை மறைப்பது மாதிரியே, பெரிய்ய
ஆளையும் சும்மா ஜுஜுபி என்று மறைத்துவிட முடியுமா? ரெண்டுக்கும் ஒரே
பதில் தான்.. கூடாது.

அந்தக் காலத்து விசாரணைக் கமிஷன் இலங்கையில் நடக்கிறது. சத்தியத்துக்கோ
அது ஏதோ ஒரு கயித்துக்கோ கட்டுப்பட்டு அனுமன் நிக்கிறான் கை கட்டி
அமைதியாய். (எவ்வளவு சரக்கு இருந்தாலும் அடக்கி வாசிக்கனும்டா மாமு
என்பது ஓரத்தில் கிடைக்கும் இலவச இணைப்பு உபதேசம்). அனுமன் பத்தி கசமுசா
என்று எல்லாரும் வத்தி வச்சிருக்க… ஒரு மனுஷன் மட்டும் அனுமனுக்கு
சப்போர்ட்டாக வருகிறார். யார் தெரியுமா அது? விபீஷணன் என்கிறீர்களா?
அதான் இல்லை.

இராவணன் சபையில், அனுமன் வல்லவரு நல்லவரு என்று சொல்லி சிச்சுவேஷனை
balance செய்வது இந்திரசித்தன். உருவம் தான் குரங்கு. இவன் பலே
கில்லாடிப்பா.. ஆண்மையில் சிங்கம் மாதிரி… சிவன் & திருமால் மாதிரியே
வீரம் மிக்கவன் என்று சொல்வதொடு ஒரு சலாமும் வச்சாராம் அனுமானுக்கு.

புவனம் எத்தனை அவை அனைத்தும் போர்கடந்
தவனை உற்று அரி உருவான ஆண்தகை
சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்
இவன் எனக் கூறி நின்று இரு கை கூப்பினான்.

என்ன நிறைய நாம கத்துக்கணுமோ??

ஓவர் பில்டப்பும் அடக்கி வாசித்தலும்.


இப்பொல்லாம் சென்னை மாதிரியான ஊர்களில் டவுன் பஸ்களில் கூட வெளி மாநிலத்து ஆசாமிகளின் பயணம் தெரிகிறது. அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் மேற்படிப்பு வசதிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதை காட்டுகிறது (மின் வெட்டையும் மீறி…). ஆனால் எப்போதும் பல மாநிலத்தவர்களோடு கலந்து வாழும் வாழ்க்கை அந்தமான் வாழ்க்கை.

மாடிக் குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பீகார் மாநிலத்தவர் (அவர் பையன் என் கூட சேந்து தமிழ் பேச கத்துகிட்டு வர்ரான்). கீழ் தளத்தில் உ.பி & ஆந்திர மாநிலத்தவர். அதனாலெ தான் அந்தமானை மினி இந்தியா என்கிறோம்.

சினிமாவிலும் இந்த டாபிக் வச்சி சூப்பரான ஒரு படம் வந்தது பாரத விலாஸ் என்று. சிவாஜி நடிப்பில் வழக்கம் போல முத்திரை பதித்த படம் அது. அதில் அவர் தன் மனசாட்சியுடன் பேசுவது போல் TMS குரலில் பாட்டு வரும். சக்கை போடு போடு ராஜா…உன் காட்டுலெ மழை பெய்யுது.

அதில் நடுவே ஒரு வசனம் வரும். “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்”. என்னதான் பில்டப் கொடுத்தாலும் ஒரிஜினல் தான் எப்போதும் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லும் தத்துவம் தான் அது.
பில்டப் செய்வது என்று ஆரம்பித்து தமிழ் சினிமாக்களில் தேடினால், ஏகமாய் காமெடிகள் சிக்கும். கல்யாணப் பரிசு தங்கவேலுவின் எழுத்தளர் பைரவன் பில்டப், நாகேஷின் ஓஹோ புரடெக்சன் என்று ஆரம்பித்து சமீபத்திய விவேக் & வடிவேல் வரை தொடரும். (நடுவே ரஜனி & விஜய் கூட அந்த லிஸ்டில் வருவார்கள்… ஹீரோக்கள் என்பதால் அவர்களை ஓரமாய் வைத்து தொடர்வோம்)

துபாய் ரோட்டை பத்தி வடிவேல் சொல்லும்…. சாரி… பில்டப் தரும் காட்சி எப்பொ பாத்தாலும் சிரிப்பாவே இருக்கும். “சோத்தை அள்ளி வச்சி ரசத்தை ஊத்தி கொளைச்சி அடிக்கலாம்டா” என்று சொல்லுவது தான் பீக். நடுவே துபாயில் திருநீறு வைச்சி என்றும் பிட்டு போடுவது நல்ல கலக்கல் தான்.

“கெணத்தைக் கானோம்” என்று அலறி அடித்தபடி வடிவேல் வரும் இன்னொரு காமெடி இருக்கு. சிவில் இஞ்சினியர்களை வைத்து இப்படி ஒரு காமெடி அடிக்கடி பேசப்படுகிறது. (விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்ட அத்துனை சிவில் பொறியாளர்களும் மன்னிக்கவும்.)

காசு ஆசை பிடித்த ஒரு சிவில் இஞ்சினியர் ஒரு கிணறை தோண்டாமல், தோண்டியது போல் ரெக்கார்ட் பில்டப் செய்து காசு பாத்து கிளம்பிட்டாராம். அதுக்கு பின்னால் வந்தவருக்கும் அது தெரிந்து விட்டது. அவர் என்ன சளைத்தவரா என்ன?? அவர் இருந்த 5 வருஷமும் பராமரிப்பு செஞ்ச மாதிரி கணக்கு காட்டி காசு சாப்பிட்டாராம். பின்னர் 5 வருடம் நல்ல மனுஷன் வந்து ஏதும் செய்யாமல் போய் விட்டார்.

அடுத்த முறை வந்தவர் பாத்தார். அட 5 வருஷமா பராமரிப்பே இல்லாமல் இருக்கே. அப்பொ சிறப்பு மராமத்து வேலை செய்ய ஆரம்பித்து ஸ்வாகா செய்து விட்டு அவரின் tenure முடித்தார். சமீபத்திய போஸ்டிங்கில் வந்தவர் காலத்தில் தான் அந்த வடிவேலுவின் காமெடி வந்த காலம். அவர் யோசித்தார். அட… நம்ம ஏரியாவிலெ இப்படி ஏதும் கம்ப்ளெய்ண்ட் வந்தால்???? என்ன செய்வது யோசித்தார். கிணறு தோண்டி பல வருடங்கள் ஆயிடுச்சி.. இனி மராமத்து செய்ய முடியாது. இதெ மூட்றது பெட்டர் என்று மூடும் செலவை அவர் பாக்கெட்டில் போட்டுகிட்டாராம்.

இது கொஞ்சம் ஓவராவே பில்டப் செய்த சேதி மாதிரி தானே தெரியுது??

என் பையன் கிட்டெ கேட்டேன், “உங்க வாத்தியார் யார் பேராவது ரொம்ப உனக்கு பிடிச்சிருக்கா??”

“தெரியும். அம்பேத்கார் பத்தி தானே சொல்ல வர்ரீங்க. அம்பேத்கார் என்பது பீமின் டீச்சர் பெயர் தானே?” இப்படி பதில் வந்தது முந்திரிக் கொட்டை போல் (இந்தக் காலத்து பசங்க கிட்டெ வாயே திறக்க முடியறதில்லை. அப்பொ பொன்டாட்டி கிட்டெ??..ம்…மூச்…)

அம்பேத்கார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். கீழ் சாதி என்று ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட மறுக்கப்பட்ட காலம் அது. அவரும் அவரது ஆதரவாளர்களும் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்து வந்தனர். அதை அறிந்து ஜாதி வெறியர்கள் மாட்டு சாணம், மாட்டின் சிறுநீர் (கோமியம் – உபயம் பாக்யராஜ்) ஆகியவை ஊற்றி பூஜை செய்து, மூன்று நாள் பயன் படுத்தாமல் இருந்தார்களாம். [ஆர். முத்துகுமார் எழுதிய அம்பேத்கார் புத்தகத்தில் இன்னும் பல சேதிகள் படிக்க முடிந்தது]

இது கொஞ்சம் ஓவரா இல்லெ?? இது என் பையன் கேட்ட கேள்வி. அவனால் நம்பவே முடியவில்லை இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பது.

ஓவரா பில்டப் தருவதின் எதிர்ப்பதம் அடக்கி வச்சித்தல். ஒன்னுமே தெரியாமெ இருக்கிறவன் தேமேன்னு இருக்கிறது இந்த லிஸ்டில் வராது. நானும் அந்த லிஸ்டில் தான் இருக்கேன்.

அப்புறம்… “இப்படித்தான் ராமாயணத்தில்…” என்று அடிக்கடி எழுதி வரும் நான் ராமாயணம் முழுசாக்கூட படிக்காமெ, ஆரம்ப பாடத்தில் இருக்கும் கத்துகுட்டி.

அதுக்கு நேர் ஆப்போசிட்டா, எல்லாம் தெரிஞ்ச்சி வச்சிருப்பாக… ஆனா சொல்றதுக்கு முன்னாடி, “ உங்களை விட எனக்கு ஒன்னும் தெரியாது தான். இருந்தாலும் என் சிற்றறிவுக்கு…” இப்படி சொல்வது தான் அடக்கி வாசித்தல்.

இப்படித்தான் ராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது.

அனுமன் சீதையை சந்தித்த இடம். தான் ராமனின் தூதன் என்றும், விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பின்னர் அடக்கமாய், தேவி வாருங்கள் உங்களை நான் ராமன் வசம் கூட்டிச் செல்கிறேன் என்கிறார். அதற்கு மறுமொழி சொல்லும் சீதையோ, தன்னால் அதுக்கு ஓகே சொல்ல முடியாது என்பதற்கு லீகலா காரணங்கள் சொல்கிறார் பல.. இதோ அவற்றில் சில…

1. இலங்கை வரும் போதே பல சிக்கல்களை அனுபவித்த அனுமனுக்கு தன்னை சுமந்து திரும்பும் போது அதே சிக்கல் வந்தால் அனுமனுக்கு அல்லவா சிக்கல் வரும்?
2. ராமரின் வீரத்தை குறைத்த மாதிரி ஆயிடாது??
3. ராவணன் என்னை கொண்டு வந்த மாதிரியே வஞ்சனையா, அனுமன் என்னை கொண்டு போவது.. நல்லாவா இருக்கு?
4. இராவணன் & இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
5. என் கற்பை ராமரிடம் நிரூபிக்க வேண்டாமா?
6. ஆடவரை தீண்டாது இருகும் நான், நீயும் ஆடவன் அல்லவா??
இப்படி நச் நச் என்று போகுது பாயிண்ட்..

ஆனா நான் சொல்ல வந்த சேதி இது இல்லை.

இவ்வளவு லாஜிக்கலா யோசிக்கும் சீதை சொல்லும் முன் அடக்கி வாசித்தது தான் நான் சொல்ல வந்த செய்தி.

சீதை அனுமனிடம் முதலில் சொன்னது இது தான்: நீ சொல்றது ஒனக்கு ஒன்னும் பிரமாதமான வேலையா இருக்காது தான். ரொம்ப ஈஸியாவும் செஞ்சிடுவேதான். நல்லாத் தான் யோசிக்கிறே.. நான் ஒரு பெண். பெரிய(!!!) சிற்றறிவு தான் இருக்கு. எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு படுது. இது என்னோட கருத்து.

இப்படி அடக்கி வாசிச்சிட்டு அப்புறம் தான் அத்தனை லா பாய்ண்டும் வருது சீதையிடமிருந்து.

அறியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதமைச் சில்மதிப் பெண்மையால்.

இதனால் அறியப்படும் நீதி: பில்டப் செய்யலாம். ஆனா ஓவர் பில்டப் கூடவே கூடாது. அடக்கி வாசிக்கலாம். ஆனா தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் சொல்ல வேண்டிய சேதியை சொல்லியே ஆக வேண்டும்.

இது சீதை சொன்ன கீதை.
மீண்டும் சந்திப்போம்.