சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

சின்ன வீடா வரட்டுமா?


chinna veedaa

ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது என்பது இப்போதெல்லாம் ரொம்பவும் சகஜமாகி விட்டது. மதம் விட்டு, ஜாதி தாண்டி, வெளிநாடு வாழ்பவரிடம் உள்ளம் பறொகொடுத்து.. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இந்த “ஓடிப் போய்” என்பது மட்டும் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் அவர்கள் “ஓடித்தான்” செல்கிறார்களா? யோசித்தால் சிரிப்பு தான் வரும். ”ஓடல்” என்பது இங்கே, வேகமான, ரகசியமான நடவடிக்கை அல்லது யாருக்கு தெரியனுமோ அவர்களுக்கு மட்டும் தெரியாமல் நடக்கும் சேதி. யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் செய்தி, பலருக்கும் தெரிந்திருக்கும் என்பது அவர்களுக்கு மட்டும் தெரியாது.

“கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா;
ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?” என்று பாட ஆரம்பிக்கும் பாடல் செம ஹிட்டு. எல்லா பட்டி தொட்டிகளிலும் (ஆமா அப்படிப்பட்ட தொட்டி எங்கே தான் இருக்கு?) பட்டிமன்றங்களிலும் அந்தப் பாடல் அடி வாங்கினாலும் கூட, மக்கள் மனதில் அந்த இசை நன்கு பதிந்து விட்டது. தமிழ் இலக்கியங்களிலும் இப்படிப் பட்ட திருமண முறை இருந்தது என்று சொல்லப் போய், இந்தப் பாட்டுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்து விட்டது.

அவனவன் ஒரு கல்யாணம் செஞ்சிக்கிறியா? என்று கேட்டாலே, ஐயோ கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தக் காலத்திலும் கூட அரசு உத்தியோகத்தில் சேரும் போது ஒரு மனைவி தான் இருப்பதாய் உத்திரவாதம் தர வேண்டும் என்பது விதி. (திருமணம் ஆகாதவற்க்கு இந்தச் சட்டம் செல்லாது.. என்பதை சொல்லவும் வேண்டுமோ??) ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் அரசு ரொம்பவும் கவனமாய் இருக்கு.. (ஆமா குடுக்கிற சம்பளம் ஒரு பொண்டாட்டி வச்சி வாழவே பத்தாது. இதிலெ சின்ன வீடு வேறெயா? என்ற கவலையும் அரசுக்கு இருக்குமோ?)

இஸ்லாமியர்களுக்கு ஜாலிதான். தலாக் என்று மூன்று முறை சொல்லிவிட்டால் செமெ ஜாலி என்று யாரவது நினைத்தால், அது தான் இல்லை. அது கணவன்மார்களுக்குத் தரப்பட்ட சுதந்திரம் என்பதாய் இல்லை. பெண்களுக்குத் தரப்பட்டிருக்கும் பாதுகாப்பு என்பது சமீபத்தில் தெரிய வந்தது. ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி ஒரு பிரச்சினை வந்தது. மூன்றாம் முறையாய் சொல்லும் அந்த வார்த்தையினைப் பிரயோகம் செய்யும் போது, காதால் கேட்ட இருவர் சாட்சியாக வேண்டுமாம். அப்படி சாட்சியாய் சொன்னவரை விசாரித்த போது அப்படி கேட்கவில்லை என்று சொல்ல, தலாக் தலாக் ஆகிப் போனது என்பது தனிக் கதை.

முன்பெல்லாம் கல்யாணம் ஆனவர்கள்; கல்யாணம் ஆகாதவர்கள் இப்படி இரண்டு பிரிவுகள் தான் இருந்தன. பின்னர் ஒரு பிரிவும் சேர்ந்து கொண்ட்து. அதாவது சேர்ந்தே இருப்பர் கல்யாணமா?? மூச்… பேச்சே கிடையாது. இப்பொ சமீபகாலமா மீடியாக்களில் கலக்கும் சமீபத்திய ப்து வரவு. கல்யாணம் ஆகி இருக்கும். ஆனால் சேர்ந்து வாழாமல் இருப்பர்… ம்… அப்பா… இப்பொவே கண்ணெக் கட்டுதே…!!!

அரசுத் துறைகளில் இரண்டு விதமான ஆட்கள் இருப்பார்கள். வேலையினைச் சரியாய் செய்பவர்கள். அதே வேலையினைத் தப்பாய் செய்பவர்கள் இப்படி இரண்டு குரூப். சரிய்யாச் செய்யிரேன் பேர்வழின்னு ரூல்ஸ் தெரியாமெ, அல்லது தப்பு தப்பா ரூல்ஸ் பேசி, தானும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பும், மெதாவிகள் இருப்பார்கள். அதே போல், தப்பான காரியத்தை தப்பே தெரியாதமாதிரி செய்யும் எம காதகர்களும் இருப்பார்கள். தப்பெத் தப்பா செய்யாட்டி, தப்பு தப்பே இல்லெ என்பது எழுதப்படாத விதி. அரசு ஊழியர்கள் பலரின் சின்ன வீட்டு சமாசாரங்கள் இந்த தப்பை, சரியாக செய்யும் லாஜிக்கை நம்பித்தான் ஓடுது.

தில்லியில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. கேஸ் ஸ்டடி என்று சொல்லி ஒரு வில்லங்கத்தை அரங்கேற்றி உங்களின் கருத்து என்ன? என்று அலசுவது தான் பயிற்சியின் அன்றைய வகுப்பின் நோக்கம். ஓர் அரசு ஊழியரை ஒரு தண்ணியில்லாக் காட்டு ஏரியாவில் போஸ்டிங் போட்டாகளாம். கண்ணு கலங்கிப் போனாராம். (நம்ம ராம்நாட் ஆட்களுக்கு எங்கெ போனாலும் சொர்க்கம் தான்.) கதறியபடி போனவருக்கு ஒரு இளம்பெண் ஆதரவாய் பேச, மனைவி என்று சொல்லிக் கொள்ளாமல் மனைவிக்கான எல்லாம் பெற்றாராம். தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதையும் சொல்லி விட்டாராம். (என்ன ஒரு நாணயத்தனம்… வில்லத்தனத்திலும் கூட??) போஸ்டிங் டென்யூர் முடிந்து இதோ வந்திடுவேன் என்று கம்பி நீட்டி விட்டாராம்…

போன மச்சான் திரும்பலையே என்று அவர்கள் ஊர் பாஷையில் புலம்பிக் கொண்டிருந்த அந்த அபலைக்கு ஆதரவு தர கூகுலாண்டவரை உதவிக்கு தேடினாராம் ஓர் இளைஞன். அரசுத்துறையின் தலைமை அதிகாரியின் முகவரி கிடைத்ததாம்.. காதலை உருக்கி எல்லாம் எழுதாமெ, ”ஐயா, இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு கடுதாசி எழுதச் சொல்லுங்க” என்று கெஞ்சி (கவனிக்க கொஞ்சம் கூட கொஞ்சாமல்), கடைசியில் மனைவி (தாலி கட்டாத என்று எழுதாத) என்று முடித்திருந்தாராம். இந்தச் சூழலில் என்ன செய்வது என்பது தான் பயிற்சி வகுப்பின் கேள்வி.

இரண்டாம் கல்யாணம் என்று தெரிந்த காரணத்தால், உடனே அவர் மீது துறை சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏகமனதாய் அனைவரும் சொல்லி முடித்தனர். என் வாதம் சற்று வித்தியாசமாய் வைத்தேன். (நமக்கு மட்டும் ஏன் இப்படி ரோசனெ போவுது?). வந்த கடிதம் ஒரு வேண்டுதல். எந்த விதமான புகாரும் அதில் இருப்பதாய் எனக்குப் படவில்லை.. (ஐயா..நான் சின்ன வீட்டுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று மட்டும் தப்பா நெனைச்சிடாதீங்க ப்ளீஸ்). நடவடிக்கை என்று வந்தால், அது பெரிய வீட்டிற்கும், சின்ன வீட்டிற்கும் சிரமமாய் முடியும். ஆக ஒரு நடவடிக்கை, யாருக்குமே பயனில்லாத போது அது தேவையா? என்று கேள்வியினை வைத்தேன். அந்தமான் சொல், தில்லியின் அரியனை அம்பலத்தில் ஏறவில்லை..

எல்லாம் விடுங்க…********** இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் குடுங்க… அங்கே திருவாளர் கம்பர் இருப்பார். அவர் நம்ம ராமனுக்கே ரெண்டாம் கல்யாணம் செய்ய ப்ளான் செய்கின்றார்… அடப்பாவிகளா… ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்ல வந்த கம்பரை இப்படியா வம்புக்கு இழுப்பது என்று கேட்பது தெரியுது. சின்ன வீடா வரட்டுமா என்று யாராவது கனவிலெ கேட்டாக்கூட லேது லேது என்று சொல்லுவேன் என்று ராமனே வாக்குக் கொடுத்திருக்கார். அவருக்குப் போய் ரெண்டாம் கல்யாணமா என்று கேட்பது என் காதுக்கும் கேக்குது..

ஆனா யோசிக்கிறது யாருன்னு கேட்டா பேஜாராயிடும்… அட நம்ம தசரதன் அன்னாச்சி… இப்பொ சொல்லுங்க எப்படீன்னு? ஜோரா.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. கைப்பிடித்த கணவர்க்கு எப்படி அனுசரனையா இருக்கிறது கற்புன்னு பெண்டிருக்கு சொல்லப்பட்டதோ, அப்படி இந்த நிலகமளை ராமனுக்கு கட்டி குடுத்திடனும் என்று தயரதன் நெனெச்சாராம்… ஐய… அம்புட்டுத்தானா…. நீங்க நானு… அப்புறம் இந்த உலகமே வில்லங்கமா இருக்கலாம்.. அதுக்காக நம்ம கம்பனை அந்த லிஸ்ட்லெ சேக்க முடியுமா என்ன? வாங்க நைஸா அந்த பாட்ட்டையும் பாத்திடலாம்..

கன்னியர் அமைவரும் கற்பின், மா நிலம்
தன்னை இத் தகைதரத் தரும்ம் கைதர
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்

வேறு ஏதாவது வில்லங்கம் மாட்டாமலா போகுது?? யோசிப்போம்..

பாஸ் என்ற இமேஜ்


இந்த இமேஜ் படுத்துற பாடு.. பெரும் பாடுங்க… அது என்ன இமேஜ்? என்று யாராவது கேட்டா, பதில் சொல்றதும் கஷ்டம் தான், (இதுவும் இந்த ஈகோ மாதிரி அல்லது ஆன்மா மாதிரி தான். யாரவது சீரியஸா சொல்றச்சே புரியற மாதிரி இருக்கும், அப்புறம் புரியாத மாதிரியும் இருக்கும்). அவனவன், அவனவன் மேலே மனசிலெ வச்சிருக்கிற ஒரு பெரிய்ய (சில சமயம் கற்பனையான, தெளிவில்லாத) அபிப்பிராயம். இப்படி ஒரு Defition ஓகேவா? (ஆமா… இந்த மாதிரி definition சொல்றப்பொ பிராக்கெட் allowed தானா?)

மாதவன் ஒரு படத்திலெ இப்படித்தான் லேட் நைட்டிலெ ராமேஷ் கண்ணா சகிதமா, வீட்டுக்கு ரெண்டு ஃப்ரண்டுகளைக் கூட்டிட்டுப் போவாரு, பயங்கரமா இமேஜ் பில்டப் செஞ்சிட்டு. தன்னோட மனைவி (ஜோதிகாங்க..) தனக்காக காத்திருந்து, அப்புறம் தான் சாப்பிடுவா என்று சொல்லி அழைத்து வருவார் அந்த ஹீரோ. ஆனா வந்து பாத்தா, எல்லாம் உல்டாவா இருக்கும்? “ஏங்க.. வழக்கம் போல, நீங்களே எடுத்துப் போட்டு சாப்பிடுங்க” என்ற அசரீரி வீட்டுக்கு உள்ளே இருந்து ஹீரோயின் வாயிலாக வந்து, கொஞ்ச நஞ்சம் இருந்த இமேஜையும் போட்டுப் புதைக்கும்.

நண்பர்கள் போனவுடன் தான் வரும், அந்த சீனின் கிளைமாக்ஸ்.. “என்னங்க…, வீட்லெ கல்யாண வயசுலெ பொண்ணெ வச்சிட்டு, இப்படி கண்ட நேரத்திலெ, கண்ட பசங்களை குப்பிட்டு வந்தா, அப்புறம் அந்த பொண்ணு கலயாணத்திலெ இமேஜ் கெடாது?“ மாதிரி ஒரு டயலாக் போட்டு, கதாநாயகி இமேஜை சூப்பரா துக்கி பிடிச்சிருப்பாரு அந்த டைரக்டர். (இப்பொ சொல்லுங்க… என்னாலெ அந்த டைரக்டரோட இமேஜும் கொஞ்சம் மேலெ ஏறி இருக்குமே??).

வீட்டிலெ மதுரையா? சிதம்பரமா? என்ற பிரச்சினை வீட்டிலெ இருக்கோ இல்லையோ, மற்றவர்கள் அதை உன்னிப்பா கவனிப்பார்கள். நானும் அந்த ஜாதி தாங்க. ஒரு பள்ளி ஆசிரியரை இது விஷயமா உத்துப் பாத்து, ஒரு நாள் கேட்டேன். ”என்னங்க… என்ன செய்றதா இருந்தாலும் அம்மனியே அம்சம்னு இருக்கீகளே?” என்று. வந்த பதில் சூப்பர். நாம ஏதாவது சொல்லி தப்பா ஆயிட்டா, காலம் காலமா அதைப் போட்டு, நம்மளெ தாளிச்சிட்டே இருப்பாங்க. ஆனா, அதே அவங்க முடிவாலெ இருந்தா, வீடு அமைதியா இருக்கும். (அப்பொ கூட அவராலெ தாளிச்சிக் கொட்ட முடியாது என்பது தான் அவர் சொல்லாது விட்ட உண்மை). இது தான் நல்ல குடும்பத்தின் வெற்றி இமேஜின் ரகசியம். (எங்க வீட்லெ மதுரையா??? இப்படி யாரும் கேட்றாதீங்க?? அவங்க மதுரைக் காரங்க… எதுக்கு மதுரெ இமேஜ் பத்தியெல்லாம் இப்பொ யோசிக்கனும்?)

ஜெட் வேகம்.. மனோ வேகம் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க.. ஆனா என்னெக் கேட்டா இமேஜ் வேகம் ஒன்னும் இருக்குங்க. அதோட வேகம் கண்டிப்பா உங்க வேகத்தை விடவும் அதிக வேகமா இருக்கும். அதாவது நீங்க ஒரு எடத்துக்குப் போயி சேர்ரதுக்கு முன்னாடி ஒங்களைப் பத்தின இமேஜ் போய்ச் சேர்ந்திடும். அது, ”எந்த அளவுக்கு சரியான இமேஜ்?” என்பது காலப் போக்கில் தான் தெரியும்.

இப்படித் தான் லிட்டில் அந்தமான் தீவிற்க்கு தில்லியில் இருந்து ஓர் உயர் அதிகாரி வந்தார். இங்கிருக்கும் இராணுவப் படையிலிருந்து இரவு உணவிற்க்கு அழைப்பு வந்தது. அவர்கூட இருப்பதால், கூட்டி வர ஏதுவாய் எனக்கும் அழைப்பு (போனாப் போகுதுன்னு) வந்தது. அவருக்கு அங்கு போக இஷ்டமில்லெ. அவர் உற்சாகபானம் பக்கம் போனதில்லை. அசைவமும் அவருக்கு அலர்ஜியாம். என்னிடம் சொன்னார். நானும் Non Veg சாப்பிட மாட்டேன். நீங்களும் அப்படித்தான். சரக்கு எனக்கு ஆவாது. நீங்களும் தொட மாட்டீங்க…(அதெப்படி… என்னோட இமேஜ் இப்படி தாறு மாறா டெல்லி வரைக்கும் தப்பா பரவி இருக்கு என்று இன்று வரை புரியவில்லை).. உங்க முயற்சி இல்லாமலும் சில நேரங்களில் இமேஜ் வளரும்… பரவும்.. ஜாக்கிரதையா இருங்க.

ஆபீசில் யாருக்கவது மெமொ குடுத்தால் அந்த நபர்க்கு கை கால் எல்லாம் நடுங்குவது எதனால்? தங்கள் இமேஜ் கெட்டுப் போகுமோ என்ற பயத்தினால் தான். (சிலபேரு அதை வாங்கி ”வடெ போச்சே” டயலாக்குக்கு முன்னாடி தூக்கிப் போட்ற பேப்பர் மாதிரி தூக்கியும் கெடாசுவாங்க..) தான் ஒரு மெமொ கூட வாங்கியதில்லை என்று ஒருவர், தன்னோட ரிட்டயர்மெண்ட் தினத்தில் பெருமையாப் பேசினார். (ஒரு வேளை மெமொ கொடுக்கத் தெரியாத ஆளுக கிட்டேயே முழு சர்வீசும் கழிச்சிருப்பாரோ?)

இந்த மாதிரி இமேஜ் மோதல்களைத் தவிர்க்க சில ஏற்பாடுகள் உள்ளன. ஓர் ஊழியரைத் திட்டனுமா? தனியா கூப்பிட்டு கட்டி ஏறுங்க.. (அவனும் திருப்பி ஏறினா, அப்பொவும் உங்க இமேஜுக்கு எந்தக் குந்தகமும் வராது). அதே சமயம், அதே ஆளை பாராட்டனுமா? நாலு பேத்துக்கு முன்னாடி கூப்பிட்டு ஒரு சபாஷ் போடுங்க… (ஆனா முக்கா வாசிப் பேருங்க, சபாஷ் சொல்றதுக்கு மூக்காலெ அழுவானுங்க… ஆனா திட்றதெ மட்டும் நாலு பேருக்கு முன்னாடி செய்வாய்ங்க…) ம்…அது தான் அவங்க இமேஜ் என்று விட வேண்டியது தான்.

கம்பரிடமிருந்து ஒரு SMS வந்தது. ”இந்த மாதிரி நீ எழுதுறதுனாலெ, என்னோட இமேஜ் என்ன ஆவுது?” கம்பர் இமேஜுக்கு சிக்கல் வந்ததோ இல்லையோ, எனக்கு கம்பர் இமேஜ் வந்திடுச்சி… ”இதெப்பத்தி கம்பர்…” என்று கேட்கும் அளவுக்கு. எப்படியோ எனக்கு வந்த இமேஜை நான் காப்பாத்தியாக வேண்டும். சரி… கம்பர், இமேஜ் பத்தி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ன? அவர் நேரடியா சொல்லலை.. மறைமுகமா இருக்கு. (அது தான் கம்பன் சொல்லின் ஸ்பெஷல் மெஸேஜ்)

தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு எப்படி இல்லையோ, அதே மாதிரி உங்கள் ”பாஸ்” மேலதிகாரி, முதலாளி, மேலே இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்றும், நீங்க நிர்ணயம் செய்ய முடியாது. வந்து வாய்க்கிறதை அனுபவிச்சே தீரனும். ஆனா ஒன்னு.. நம்ம பாஸோட இமேஜை எந்த விதத்திலும் கீழே இறக்கி விடக் கூடாது. கம்பரின் ராமாயணத்தில் பாஸ் – ராமன்; ஊழயர் – அனுமன்.

ராமன் சீதைக்கு வைத்த அக்னி பரீட்சையில் அனுமனுக்கு அவ்வளவா இஷ்டமில்லை. (ராமனின் இமேஜ் ஏகமாய் அடி வாங்கும் இடம் வேறு அது). சீதை கற்போடு தான் இருக்கிறார் என்பதை நேரில் பாத்த ஒரே சாட்சி அனுமன். தான் சொன்னதை நம்ம பாஸ் சரியா நம்பலையோ என்ற கவலையும் ஒரு பக்கம். கம்பகாப்பியத்தில் நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் ”டோபி சார்” (சலவைத் தொழிலாளி) பேச்சு எல்லாம் கிடையாது. இராவணன் கதை முடிந்து, சீதையை சந்திக்கும் முதல் சீனில் அந்த அக்னி பரீட்சை நடக்கிறது.

அப்புறம் அயோத்திக்கு தகவல் தர, சரியான நெட்வொர்க் இல்லாததால், அனுமன் பரதனைப் பாக்க கிளம்புகிறார். பாஸ் சொன்ன சொல் கேட்டு. அங்கே பரதனிடம் அந்த ஊழியர், ராமனின் இமேஜுக்கு பிரச்சினை வராமல் அந்த அக்னி பரீட்சை பத்தி சொல்லாமல் சொன்ன சீன் பாருங்க….

”பகைவரின் ஊன் நுனியில் பொருந்தப் பெற்ற வேலையுடைய பரதனே! மாலை அணிந்த ராமன், பிரம்மா, சிவன், மயன் எல்லாரும் வாழ்த்த, தேவர்களின் தலைவியாகிய சீதையைப், பிறனிடத்தில் உயிர் வாழ்ந்ததால் சினம் கொள்ள, உடனே அக்னி வந்து அவளது கற்பின் சிறப்பைக் கூறிய அளவில் சினம் தணிந்தான்.” இது பரதனிடம் அனுமன் சொன்னது. சீதை அக்னியில் இறங்கியதை நாசூக்காய் மறைத்து, ராமனின் இமேஜுக்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, அனுமன் வாயிலாக கம்பர் சொன்னது. கடைசியில் கம்பராமாயணப் பாட்டு வருவது என் இமேஜ்… இதோ பாட்டு..

நான்முகன் விடையை யூரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன் முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியைச் சீறி
தேன் முகம் மலரும் தாரான் அரி சொலச் சீற்றம் தீர்ந்தான்.

அதுசரி… இப்பொ யோசிச்சிச் சொல்லுங்க… எது உங்க இமேஜ்??

குடுத்து வைக்காத ஆளு


நெகிழ்வான தருணங்கள் என்று சில, வாழ்க்கையில் வந்து போகும். சிலருக்கு சலிப்பான தருணங்கள் என சில, வாய்ப்பதும் உண்டு. ஒரு பையன் அப்பா கிட்டெ கேட்டானாம். “பெத்த கூலிக்கு வளத்துட்டெ. வளத்த கூலிக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டே. கல்யாணம் செஞ்ச கூலிக்கு இந்தா, புள்ளைகளையும் வளத்து ஆளாக்கு”. எப்படி இருக்கு கதை? அப்பன் நொந்து நூலாயிருக்க மாட்டாரு???

படங்களில் அதிகம் நெகிழ்ச்சியைத் தருபவர், சமீப காலமாக திரு சேரன் அவர்கள். அவர் அந்தமான் வந்திருந்த போதும் கூட சில நெகிழ்வான சம்பங்கள் நடந்தன.. ரங்கத் என்ற தீவிற்கு அவரை அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில், அவர் இறங்கி நடக்க, சிலர் அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோகிராஃப் (சேரன் கிட்டேயேவா??) கேட்டனர். திடுதிப்பென வந்ததால் சிலர் ரூபா நோட்டில் கையெழுத்து கேட்டனர். “என் தகுதியோ, பதவியோ, இந்த ரூபா நோட்ட்டில் கையெழுத்து போடும் அளவு வளர்ந்து விடவில்லை” என்று மறுத்தார்.

பின்னர் விழா மேடையில் சேரன் அவர்களுக்கு ராஜாவின் சிம்மாசனம் மாதிரி சேரும், மற்றவர்களுக்கு சாதாரண சேரும் போட்டு வைத்திருந்தனர். அதைப் பாத்தவுடன் தனக்கும் மற்றவர்கள் மாதிரி சாதரண சேர் மட்டும் இருந்தாலே போதும் என்று பவ்யமாக மறுத்தார். கடைசியில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சேர் தூக்கி வந்து போட்டு சமாளித்தார்கள். (சேர் என்றால் சேரனுக்கு ஆகாதோ??) அவனவன் அந்த மாதிரி நாற்காலி கிடைக்க தவம் கிடக்கிறாய்ங்க.. தவமாய் தவமிருந்த சேரன் அதை ஒதுக்கியது நெகிழ்வாய் இருந்தது.

பாடல்கள் சில அதே மாதிரி நம்மை கிறக்கத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். சமீபத்தில் நான் ரசித்த நல்ல வரிகள்..“…. உன் அலாதி அன்பினில்நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்…”. மழையில் நனையலாம். அன்பு மழையில் நனைய ஆசைப்படலாம். ஆனா… அதே மழையாவே ஆகிவிடுதல்… பே..பே..பேராசை இல்லையா அது??

ஒவ்வொரு பாஷைக்கும் சில வார்த்தைகள் அழகு. இப்படித்தான் தில்லிக்கு 1989 களில் போய் “மயூர் விகார்” எங்கே இருக்கு என்று ஒரு வட நாட்டவரைக் கேட்டேன். “தில்லியில் அப்படி ஏதும் “விகார”மான இடங்கள் இல்லை” என்று கோபமாய் ஹிந்தியில் சொல்லி விலகினார். மயூர் விஹார் என்று சொல்லி இருக்கணுமாம். ம்..ம்.. இந்த ஹிந்தி ஒரே கொழப்பம் தான். “பல்லு கூசுது”, “ஆவி பிடிக்க மருந்து” இதெல்லாம் ஹிந்தியில் எப்படி சொல்வது என்று இன்னும் விளங்கவே இல்லை.. என்ன..??… “அப்படியே கிருகிருங்குது”, “நண்டு ஊர்ர மாதிரி இருக்கு”… இதுக்கும் ஹிந்தியில் வேணுமா?? அய்யா சாமி… ஆளை விடுங்க… தமிழ் வாழ்க.

தமிழில் சூப்பரா ஒரு வழக்கு இருக்கு.. அவனுக்கு என்னப்பா?? “கொடுத்து வச்ச ஆளு”. இதை வேறு மொழியில், மொழி பெயர்ப்பது ரொம்ப கஷ்டம். இப்பேர்ப் பட்ட மகனை அடைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்பார்கள். தவம் செஞ்சி பெத்த புள்ளை என்பதும் ஓரளவு ஒத்துக்க வேண்டிய பொருள். எப்படியோ, தவம் செய்வது என்பது ஒரு பொருளை வேண்டி, இறைவன் முன் விடாப்பிடியா (தன்னை வருத்தி) இருந்து, இறைவன் வரும் வரை பொறுமையா இருப்பது. (நாம ஒரு மெயில் அல்லது போஸ்டிங்க் போட்டு கடவுள் Like or Comment கொடுத்திருக்கிறாரா என்று ஏங்கும் காலம் இப்பொ..)

மனுஷங்க ஏதாவது வேணும்னா கடவுளை வேண்டி தவம் செய்வாய்ங்க… (சில சமயம் அசுரர்கள் கூட செய்வாங்களாம்.. நமக்கு எதுக்கு அந்த வம்பு?). “கடவுளே சரியா தவம் செய்யலையோ!!” என்ற சந்தேகம், யாருக்காவது வருமா? வந்திருக்கே… அட அப்படி ஒரு சந்தேகம், நம்ம தமிழனுக்கு வந்திருக்கு, என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கடவுளையே சந்தேகப்படும் அந்தத் தைரியசாலி வேறு யாரும் இல்லெ. திருவாளர் கம்பர் தான் அவர்.

எங்கெங்கெயோ சுத்தி கடைசியில் கம்பரை இந்த மனுஷன் புடிச்சிட்ராருய்யா.. என்று புலம்புபவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் கடையில். பின்புறம் ஒரு சின்ன குறிப்பு இருந்தது இப்படி: “இப் புத்தகத்தின் நோக்கம், சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும், பெருமையையும் உணர வேண்டும் என்பது மட்டுமே”. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தகத்தின் பெயர். ஆசிரியர்: திவாகர். (அட!!! ஒரே நோக்கில் எழுதும் இவரும் நம்ம ஜாதியா?? அல்லது நானு அவர் ஜாதியா தெரியலை). அவரும் தமிழகத்தில் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து எழுதுகிறார். வித்தியாசமான் இன்னொரு ஒற்றுமை அவருக்கும் துறைமுகத்தில் தான் வேலை.

சரி நம்ம கம்பர் மேட்டருக்கு வருவோம். தவம் செய்வதின் நோக்கமே, தன் நிலையை உயர்த்துதல். அப்புறம் தன்னை பிறரும் நேசிக்கிற மாதிரி செய்தல். சீதை பிறந்து விட்ட காரணத்தினாலேயே, குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்பதும் தவம் செய்து(?) உயர்ந்தன. அதே மாதிரி நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து(?) உயர்ந்தன. ஆனா அசோக வனத்தில் சீதை தவம் செய்யும் முறைகளை பாக்க, ராமன் மட்டும் சரிய்யா தவம் செய்யலையோ?? இது கம்பர் கேள்வி. ராமர் கொடுத்து வைக்கலியோ? – இது இந்த வம்பன் கேட்கும் கேள்வி.

பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்காண நோற்றில் அவன் கமலக் கண்களே.

அவன் பெயிலாமாமே?? அட… இவனும் பெயிலாயிட்டானாமே… அட.. ராமா நீயுமா பெயில்??? இப்படி கேக்கிற மாதிரி இருக்கு இல்லெ?? இருக்கா? இல்லையா??

அமுதைப் பொழியும் நிலவே…


“இரவின் மடியில்” போன்று பல்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். மெகா டீவி தான் இந்த பழைய பாடல்களுக்கு முன்னுரிமை அளித்து முதலிடம் தந்தது என நினைக்கிறேன். பின்னர் இதர சேனல்களும் அதனை வேறு வேறு விதமான பெயர்களைச் சூட்டி மரியாதை செய்யத் தொடங்கினர். எப்படி இருப்பினும் எந்தச் சேனலிலும் இந்த “அமுதைப் பொழியும் நிலவே” பாடல் இல்லாமல் இருக்காது.

சமீபத்தில் புது தில்லி சென்ற போது ஹிந்திப் பழைய பாடல்கள் மட்டும் ஒளிபரப்பி ஒரு சேனல் கலக்கி வந்தது பார்க்க முடிந்தது. ஜல்வா என்று அந்த சேனலுக்கு பெயர். எப்பொ வேண்டுமானாலும் பாக்கலாம்.. சாரி.. கேக்கலாம். தமிழிலும் இப்படி ஒரு சேனல் இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கும் என்ற ஏக்கம் வரத்தான் செய்தது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம அந்த அமுதைப் பொழியும் நிலவைப் பிடித்து சற்றே வம்புக்கு இழுப்போம். (ஆமா.. நமக்கு வேற என்ன வேலை இருக்கு அதைத் தவிர!!!). அமுதம் என்பதே மரணத்தை மறக்கடிக்கும் மந்திர மருந்து. அது தூரமாய் இருந்தால் என்ன? அருகில் இருந்தால் தான் என்ன? ஏன் இந்த விபரீத வேண்டுதல்? இப்படியே யோசிக்க வைத்தது. (எதுக்கு இப்படி யோசிக்கனும்? சும்மா உங்களுக்காய் எழுதுறதுக்குத்தான் சார்..)

பொழிகிறது என்பதை பெரும்பாலும் மழைக்குத்தான் சொல்வார்கள்… அல்லது மழை போல் இருப்பதையும். அந்தி மழை பொழிகிறது… என்ன இன்னெக்கி ஒரே பாச மழை பொழியுது? அன்பு மழையில் நனைந்து… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அமுதை மழை போல் பொழிகிறது. இந்தப் பாடலில் பொழிவது யார்? தன் காதலி. காதலியின் பார்வை மழை மாதிரி எல்லார் மேலும் பட்டால் நல்லாவா இருக்கும்?? எனக்கு.. எனக்குத்தான் என்று தானே எல்லா காதலனும் நினைப்பார்கள்? இதற்கு ஏற்ற மாதிரி வந்த பாடல் தான் இது என்று நினைக்கிறேன்.

Possessiveness என்று சொல்கிறார்களே.. அது காதலுக்கும் சரி.. கடவுள் பக்திக்கும் சரி எல்லாமே பொருந்தும் என்று நினைக்கிறேன். அன்பின் உச்சம், பக்தியின் உச்சம் இப்படி இருப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. அவர்களும் இப்படி அமுதைப் பொழியும் நிலவை அருகில் அழைக்காத குறையாக இருப்பவர்கள் தான்.

இதற்கு மறுபக்கமும் ஒன்று இருக்கிறது. உலகத்து பிரச்சினைகளை சந்திக்க பயந்து, தவறான முடிவுக்கு வருவது. அதுவும் அவசர முடிவை எடுக்கும் உச்சம். பெரும்பாலும் தற்கொலைகள் என்பது ஒரு emotional quick decision என்பார்கள். சமீபத்திய அந்தமான் தீவில் நிகழ்ந்த நிகழ்வு அதனையே கேள்விக்குறி ஆக்குகிறது. ஒருவன் தனது மகளை தூக்கில் தொங்கவிட்டு தானும் தொங்கிய பரிதாபம். அந்தக் காலத்து நல்லதங்காளை நினைவிற்கு கொண்டு வருகிறது. உலகத்தில் நாய் நரி எறும்பு எல்லாம் வாழும் போது நம்மால் மட்டும் வாழ முடியாது என்று எப்படி முடிவு எடுக்க முடிகிறது.
இந்த மாதிரி நடக்காமெ இருக்க அமுதை பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தான் தோன்றுகிறது. சும்மா இப்படி ஏதாவது யோசிக்கிறது தான் தெரிஞ்ச விவரமாப் போச்சே என்று முனகுவது எனக்கும் கேக்கத்தான் செய்யுது.

பிரச்சினைகளுக்கு பயந்து இப்படி ஓட நினைப்பவர்களைப் பார்க்கும் போது, அப்படிப்பட்ட அமுதைப் பொழியும் நிலவு இருந்தா நல்லா இருக்குமே என்று தோன்றுகிறது. இப்படி எல்லாம் இருக்கும் சாத்தியம் இருக்குமா?? கொஞ்சம் பின்னோக்கிப் பயணித்தத்தில் பதில் கிடைத்தது.

கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அனுமன் முதல் இன்னிங்க்ஸில் விளாசு விளாசு என்று வெளுத்துக் கட்டும் நேரம். வாலில் சூடு வைக்க, அது அரக்கர்கள் மீது பட்டு துவம்சம் செய்கின்றன. அந்தச் சூடு சந்திரன் வரைக்கும் தொட்டதாம். (சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்று பாட்டுப் பாடி கேக்க முடியாது) சந்திரனும் கொஞ்சம் உருகி அமுதை அப்படியே பொழிந்ததாம். அது இறக்கும் தருவாயில் இருக்கும் அரக்கர் மேல் விழுந்ததாம். அரக்கர்கள் உயிர் பெற்று வந்தார்களாம்.

நெருக்கி மீ மிசை ஓங்க்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சென்றுஉற
அரக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.

இனிமேல் இந்த அமுதைப் பொழியும் நிலவே பாடல் கேட்கும் போது இன்னும் இனிமையாய் இருக்கும் உங்களுக்கு. என்ன சரி தானே??

தண்ணீ கருத்திருக்கு…


விவேக் காமெடியில் கலக்கிய ஒரு படம். அதில் அவர் தெருக்குழாயில் தண்ணி குடிக்கப் போவார். வெறும் காத்து தான் வரும். அந்த மேலே தூக்கும் குழாயைப் பாத்துட்டு, இந்த மாடலை மாத்தவே மாட்டாங்களா?? என்பார். அது என்னவோ ரொம்ப பழைய மாடல் கொழா மாதிரி நெனைச்சி…

இப்பொ நவ நாகரீகமான விமான நிலையங்களில் எல்லாம் இதை விட மோசமான கொழா வச்சிருக்காங்க என்பது தான் கசப்பான உண்மை. ஹைதராபாத ஏர்போர்ட்டில் இருக்கும் கொழாவில் தண்ணியை வாயில் ஏந்தி குடிக்க சர்க்கஸ் பழகிய ஆட்களால் தான் முடியும். தில்லியின் பிரமாண்டமான Terminal -3 ல் இருக்கிற கொழாயைப் பிடிச்சி சட்டையில் தண்ணீ படாம குடிக்கிற ஆட்களுக்கு பெரிய்ய விருதே கொடுக்கலாம்.

சென்னை ஏர்போர்ட்டில் பேப்பர் கப் வைத்து அந்த சிரமத்தை குறைத்துள்ளனர். மதுரை ஏர்போர்ட் கொஞ்சம் வித்தியாசமானது. மதுரெ மக்கள் ஐடியாவே தனி தான். ஏக நவீனம் என்று வாய் வைத்து குடிக்கும் (நக்கி என்று சொல்வது நல்லாவா இருக்கும்??) கொழா இருக்கும். பக்கத்திலேயே நமக்கு ரொம்பவே பழகிப்போன அந்த நன்னாரி சர்பத் அளவுக்கு பெரிய்ய கிளாஸ் வச்சிருக்காங்க. சட்டை நனையாமல் தண்ணி குடிக்க முடிந்தது.

குடிக்கிற தண்ணிக்கு நாம படும் பாட்டை நெனச்சா சிரிப்பாத்தான் இருக்கு. பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தண்ணி வராத அந்தக் காலம் எப்படி இருந்தது?. பரமக்குடி சந்தைக்கும் சின்னக்கடைக்கும் நடுவில் எங்கள் வீடு. வியாழன் தோறும் சந்தைக்கு வரும் கிராமப்புற விவசாயிகள் கூட்டம் (பெரும்பாலும் மகளிர்….), உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் பங்குனி சித்திரை மாதங்களில், வீட்டின் முன் வந்து அம்மா தண்ணீ என்பர். (அது எப்படி இந்த வீட்டில் மட்டும் வந்து தண்ணீ கேக்கிறாக என்ற சந்தேகம் அப்போதே வந்தது. இந்த வீட்டில் வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற Precedence தான்.)

செம்பு நிறைய்ய தண்ணி எடுத்து தருவேன். சிலர் கையில் அப்படியே ஊத்தச் சொல்வர். முழங்கை வழியே பாதி நீர் ஒழுகும். அப்படியே முந்தானையில் துடைத்துக்கொண்டு நன்றியோடு பார்ப்பர். எப்படிக் குடிக்கிறார்கள் என்று பாக்காதே கேட்டவர்களுக்கு தண்ணி தா.. இது அம்மாவின் கட்டளை.

பள்ளியில் நீதி வகுப்புகளில் ஒரு சின்ன பாக்கெட் டைரி வாங்கி, அதில் தினமும் செய்யும் நல்ல காரியங்கள் எழுதச் சொல்வர் ஆசிரியர். சந்தை நடக்கும் அந்த வியாழன் அன்று மட்டும் இந்த தண்ணி தர்மம் கண்டிப்பா இடம் பெறும். மத்த நாட்களில் வாத்தியார் கேப்பார்… என்ன பரமக்குடி முழுக்க அவ்வளவு முள்ளு ரோடாவா போட்டு வச்சிருக்கா? எல்லாரும் ஒட்டுக்கா “ரோட்டில் கிடந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்டேன்” என்று எழுதி இருக்காங்களே???

மனதில் ஈரத்தை சுரக்க வைக்க அன்றைய ஆசிரியர்கள் செய்த சேவை அது. வீட்டுக்கு யார் வந்தாலும் உடனடியாக தண்ணீ தருவது நல்ல மரபு. வெயிலுக்கு அது தரும் ஆறுதல், வேறு எதுவும் தராது. இலங்கைத் தமிழரிடம் இந்த நல்ல பழக்கம் இல்லையே என்ற வருத்தம்தனை நண்பர் ஒருவர் தெரிவித்தார். இலங்கை பருவநிலை அதற்கு சாதகமாக இருந்திருக்காது என்பது என் கருத்து. சாஸ்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் படி இலங்கையிலிருந்து அந்தமானில் பல குடும்பங்கள் வந்துள்ளனர் என்பது கொசுறு தகவல்.

தண்ணீர் முழுசா இல்லாட்டியும் கூட, அதன் துளி கூட பாக்குறதுக்கு அவ்வளவு சுகத்தைத் தரும் தெரியுமா?. உதாரணமா ரோஜா மேல் சின்ன துளி, புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி எல்லாமே கொள்ளை அழகு.
அந்த நீரின் தொகுப்பு தான் மேகம். மேகம் எதுக்கு பயன் பட்டதோ இல்லையோ, நம்ம சினிமா பாடல்களுக்கு ரொம்ம்ம்ம்பவே கை கொடுத்திருக்கு. மேகம் கருக்கையிலெ.. என்ற பாட்டு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரும் எல்லாருக்கும். வாணிஜெயராமின் குரலில் சுஹாசினியின் சோகமான முகம் எல்லாருக்கும் மனதில் பளிச்சிடும், அந்த பாலைவனச் சோலையில் (அந்தக் காலத்து படம் தானுங்க) மேகமே மேகமே பாடலில்.

தூது விடும் கலை அந்தக் காலத்து செமெ ஹிட்டான ஸ்டைல். இந்தக் காலத்தில் இம்மென்றால் இன்டெர்நெட் ஏனென்றால் எஸ்எம்எஸ் என்று ஆகிவிட்டதில் அந்த தூது எல்லாம் தோது படாது என்று ஆகி விட்டது. மேகத்தையும் தூது விட்டு பாட்டா படி இருக்காங்க. ஆனா மேகத்தை தூதுவிட்டா திசை மாறிப் போகுமுன்னு மேகத்துக்கே டாடா காட்டியதும் திரையிசையில் மட்டும் தான் நடந்திருக்கிறது.

தண்ணீ கருத்திருக்கு என்பதின் மூல அர்த்தம் தேடாமல், கருப்பு தண்னியெப் பத்தி பாக்கலாம். வெள்ளைப் பால் குடித்து வளர்ந்த மனிதனுக்கு கள் மேல் காதல் வரலாம். ஆனா அந்த கரும்தண்ணீ மேல் ஏன் இத்தனை கவர்ச்சி? குடிக்காதே.. குடிக்காதே என்று சொல்லியே குடிக்க அழைக்கிறதே அந்த திராவகம். கருப்பான தண்ணீயை ஹிந்தியில் காலாபானி என்பர். அந்தக் காலத்தில் காலாபானி என்று சொன்னால் அந்தமான் என்று அர்த்தம் (இப்பவும் காலாபானி என்கிறார்கள் அந்தமானை). அந்தமானில் உள்ளேயும் வெளியேயும் அந்த கரும் தண்ணீக்கு எந்த பஞ்சமும் இல்லை.

ராஜபார்வை படத்தில் அந்திமழை பொழிகிறது என்ற ஒரு சூப்பர் பாட்டு வரும். அதில் வரும் வைர வரிகள் இன்றும் நினைவில் இருக்கிறது. தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே… அதெப்படி? தண்ணீரில் நிற்கும் போது வேர்க்கும்?? மணிக்கணக்காய் கடலில் குளிக்கப் போய் உடலை ஊறப் போட்டும் பாத்தாலும் அப்படி ஒன்றும் வேர்க்கிற மாதிரி தெரியலையே…??

கவிஞர்களுக்கே தரப்பட்டுள்ள சுதந்திரம் அது. அவங்க ரேஞ்சே வேறு. எங்கே வேணும்னாலும் போகலாம். என்ன வேணுமாலும் யோசிக்கலாம் பாடலாம்.

இந்த தண்ணீரில் வேர்க்கும் சங்கதி, சுட்ட செய்தி என்று சொன்னா என்னோட சண்டைக்கு வருவீங்க. கிட்டத்தட்ட அதே மாதிரி அந்தக் காலத்திலேயே யோசிச்சவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு சின்ன சீன் வைத்து படம் காட்றார் கம்பர். அரக்கர்கள் போர் செய்யறதைப் பாத்து கடலுக்கும், மேகத்துக்குமே வேர்த்து விறுவிறுத்துப் போச்சாம் (இந்தக்காலத்து பயத்தில் ஊச்சா போகும் வடிவேல் மாதிரி) அரக்கர்களின் ஆராவாராம் ஒருபக்கம். தேவர்களின் வாழ்த்துக்கள் இன்னொரு பக்கம். எது ஒசத்தி?? அதிலென்ன சந்தேகம்? ரெண்டாவது தான் டாமினேட் செய்ததாம்.

கார்க்கருந் தடங் கடல்களும் மழைமுகில் காணும்
வேர்க்க வெஞ்ச்செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாத்து எழு பூசலின் ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்.

எங்கே இன்னொரு முறை அந்த கடமுடா என்று உச்சரிக்க வைக்கும் “கார்க்கருந் தடங் கடல்களும்” வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள்.. உங்களுக்கே வேர்த்துக் கொட்டும். எனக்கு பயமா இருக்கு. நான் ஓடிப் போயிடரேன்…

கூண்டோடு கைலாசம்


விவேக் ஒரு படத்தில் CBI அதிகாரியாக வருவார். மும்தாஜை  விசாரிக்கும் சாக்கில் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? என்று கேட்பார். நல்லா சம்பாதிக்கனும். நாலு பேத்துக்கு உதவனும் என்பார். நாயகன் படத்தில் வரும் பாட்டு டியூன் தான் விவேகுக்கு ஞாபகம் வரும்.

அது சரி… அடிக்கடி நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா? நாலு பேருக்குத் தெரிஞ்சா பொழெப்பு நாறிடும் அப்படின்றாங்களே?? யார் அந்த நாலு பேர்?

இதுக்கும் பதில் ஒரு சினிமா பாட்டு தான் சொல்லுது.

“நாலு பேருக்கு நன்றி. அந்த
நாலு பேருக்கு நன்றி…
ஆளில்லாத அனாதைக் கெல்லாம்
தோள் கொடுத்துச் தூக்கிச் செல்லும்…”

வெளிநாடுகளிலும் அல்லது அந்தமான் மாதிரி தூரத்து இடங்களில் தாயகம் தாண்டி இருப்பவர்களுக்கு, கல்யாணமோ, கருமாதியோ அந்த லீவில் வரும் போது தான்.

சந்தோஷமாய் இருப்பது எப்படி என்று சுகிசிவம் ஒரு ரகசியம் சொல்கிறார். நம்ம மனசு இருக்கே, அது ஒரு வீடியோ ரெக்கார்டர் மாதிரி. சாதாரண வீடியோ கேமிராவில் நாம என்ன செய்வோம்? கல்யாணம், பிறந்தநாள் போன்ற மகிழ்வான தருணங்களில் தான் பயன்படுத்துவோம். அதை அடிக்கடி போட்டும் பாப்போம். ஆனா அந்த மனசுங்கிற ரெக்கார்டர் மட்டும் கெட்டதை மட்டும் ஏன் ரீவைண்ட் செஞ்ச்சி பாக்கனும். அதை டெலீட் செய்துவிட்டால் சந்தோஷமாய் வாழலாமாம்.

ஆனா மதுரை மின் மயாணத்தில் Skype வசதி எல்லாம் இருக்கிறதாம். நண்பர் ஒருவர் சொன்ன தகவல் அது. (அது சரி?… அங்கேயாவது கரெண்ட் இருக்குமா??)

சமீபத்தில் பரமக்குடி சென்ற போது என் நண்பர் வெங்கட்டின் தந்தை இறந்த தகவல் கிடைத்தது.

என்னையும் அவர்கள் வீட்டில் ஒரு மகன் போலத்தான் அழைத்திருந்தனர். தில்லியில் எடுத்த புகைப்படம் பல ஆண்டுகள் பிறகும் கூட அந்த நட்பை பறை சாற்றி வருகிறது. வீட்டிலிருந்து இறுதி யாத்திரைக்கு கிளம்ப அந்த நாலு பேரில் ஒருவனாய், நான் நின்ற போது நெஞ்சு கொஞ்சம் அதிகமாய்த்தான் வலித்தது.

இதற்கும் மேலாய் கடைசியில் தகனத்திற்கு தீ மூட்டுகையில் நண்பன் சொன்ன வார்த்தை: அப்பாவுக்கு என்னென்னவோ செய்யனும் என்று எல்லாம் யோசித்தோமே… கடைசியில் இதைத்தானே செய்ய முடிகிறது என்ற போது… கண்களில் கண்ணீர் தானே வந்தது. கருவை உருவாக்கிய மனிதருக்கு நாம் தரும் கடைசி உணவு அந்த உஷ்னம் தானா??

கரு என்றவுடன் என் மனதில் வேறு ஒரு கருப்பொருள் உதயமாகிறது. கருவாய் இருக்கும் போதே கற்பிக்கும் முயற்சி எல்லாம் முன்பே நடந்திருக்கிறது. அபிமன்யூ கதை எல்லாருக்கும் தெரியும். சுகப்பிரசம் ஆக கருவில் கேட்க வேண்டிய பாடலாய் “நன்றுடையானை தீயதிலானை…” என்ற பாடலை பாடச் சொல்கிறது தமிழ் வேதம்.

கருவா இருந்த போது கற்பித்த கலைகளால் தான் ஒரு பரமக்குடியின் அய்யங்கார் வீட்டு குழந்தை இன்று சகலகலா வல்லவனாய் இருக்கிறது என்று சில வருடங்களுக்கு முன் வந்த தொடர் ஒன்றும் சொன்னது.

கருவில் அறிவு தரப்பட்டிருக்கிறதா??

அந்தமான் தீவுகளின் கடைக்கோடி தீவான கிரேட்நிகோபார் தீவில் ஒரு ஆறு இருக்கிறது. கலத்தியா என்பது அதன் பெயர். கடலும் ஆறும் சந்திக்கும் அந்த மணல் பகுதியில் பிரமாண்டமான கடல் ஆமைகள் வந்து முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும். (நடுவில் நம்ம ஆட்கள் அதை (ஆமை முட்டை) பொரியலாவும் செய்து சாப்பிடுவார்கள்… (நான் அதை ருசி பாத்ததில்லை). ஆமை மட்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து வருவதாய் சொல்கிறார்கள். (ஒரு GPS இல்லை Google Direction இல்லை. ஆனா வர வேண்டிய எடத்துக்கு கரெக்ட்டா வர வேண்டிய நேரத்துக்கு வந்திடும் இந்த சூப்பர் ஆமைகளும்.

அந்த ஆமை குட்டிகள் வெளியே வந்தவுடன் சமர்த்தாய் கடல் தண்ணி பாத்து போக ஆரம்பிக்குது. காலையில் வாக்கிங்க் போன நான் (அங்கே ஏன் வாங்கிங்க் என்ற கேள்வியா?? அங்கு ஒரு பாலம் கட்டும் பணி நடந்தது. அதன் பொறியாளனாய் நான். போதுமா… உங்களுக்கு விளக்கும் சொல்லியே.. போஸ்டிங்க் நீளமாயிடுதே..)

அந்த ஆமை குட்டி அல்லது குஞ்சு வந்தை பாத்து ஒரு ஐடியா வந்தது. அதை ஒரு எலெயிலெ பிடிச்சி அப்படியே டைரக்சனை மாத்தி விட்டேன். அதாவது கடலுக்கு எதிர்புறம். ஒரு நாலு எட்டு தான் அடி எடுத்து வைத்திருக்கும். அப்படியே திரும்பு மறுபடியும் கடல் நோக்கி ஒரு ரீவைண்ட் அடிச்சி நகர ஆரம்பிச்சது.

கருவில் அறிவு இல்லாமல் இந்த வித்தை சாத்தியமா?? மனிதன் பிறந்த பின் கற்றுக் கொள்ள வேண்டிய நீச்சல் இயற்கையில் அந்த ஆமைக்கு தெரிந்திருக்கிறது.. கேட்டால் நமக்கு ஆறறிவு?? பத்தாக் கொறைக்கு ஏழாம் அறிவு பத்தியும் போசுறோம்.

கருவில் அழிவு என்பது ஒரு வேதனையான தருணம்.
ஒவ்வொரு நொடியில் வாரிசு வளர்வதை உணர்ந்து வரும் போது நடுவே அழிவது என்பது துயரத்தின் உச்சம். அதை ஒரு பாட்டில் வடித்ததை சொல்லாமல் விட முடியாது.

சிந்து பைரவி என்று ஒரு படம். அதில் தான் அந்த வேதனை வரிகள் வரும். “என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே,
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே..”

இப்படி வரும். நல்ல வேளை அந்த அறிவை ஆண்டவன் நமக்கு தரவில்லை.

ஆனா அழிக்கனும் என்ற வெறி வந்த பிறகு, எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம். இப்படித்தான் இராமயணத்தில் ஒரு சீன் வருது. அதையும் தான் பாப்போமே!!!

அசோகவனத்தில் அனுமன் சேட்டைகள் தாங்காமல் இராவணனுக்கு SMS போகுது. கடுப்பான இராவணன் தன்னோட தளபதியை அட்சகுமாரனை அனுப்புறார். (தளபதி என்றால் பிரியமான புத்திரன் என்று பொருள் கொள்க ப்ளீஸ்)

தளபதி அனுமானான அந்த குரங்கை பாத்த மாத்திரத்தில் கடுப்புன்னா கடுப்பு..அம்புட்டு கடுப்பு. அப்புடியே ஜிவ்வுன்னு ஏறுது. விஷம் சாப்பிட்ட முகம் போல் இருந்ததாம் அந்த மூஞ்சி. தளபதி சொல்றாராம் இப்படி.. கம்பர் சொல்வது: அந்த கொரங்கை மொதல்லெ அழிக்கிறேன். அப்புறம் மூணு உலகத்திலும் தேடிப்புடிச்சி எல்லா கொரங்கையும் அழிக்கிறேன். வெளியே உள்ள குரங்கு & கர்ப்பத்தில் இருக்கும் குரங்கையும் சேத்தே அழிப்பேன்.

விடம் திரண்டனைய மெய்யான் அவ் உரை விளம்பக் கேளா
இடம்புகுந்து இனையசெய்த இதனொடு சீற்றம் எஞ்ச்சேன்
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல்
கடந்துபின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான்.
இப்பொ தெரியுதா கருக்கலைப்பின் மூலம் எங்கே என்று..

மீண்டும் சந்திப்போம்…