கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)

மலரே குறிஞ்சி மலரே


மலரே….. குறிஞ்சி மலரே….
இந்த மாதிரி ஒரு சேனல் வராதா?? என்ற என் ஏக்கத்தின் பதிலாய் வந்து சேர்ந்தது எங்கள் தீவுக்கும் “முரசு” டீவி. பெயரைப் பார்த்ததும் வைகோ அல்லது விஜயகாந்த் நடத்தும் டீவியாக இருக்குமோ என்று நினைத்தேன். எந்த விளம்பரமும் இல்லாமல் ஆரம்பித்து (இப்போது குறைந்தபட்ச விளம்பரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது). Negative News மட்டுமே குறி பார்த்து சொல்லும் சேனல்களுக்கு மத்தியில் செய்திகளே இல்லாத சேனல் என்றால் மகிழ்ச்சி தானே.. அதுவும் அறிவிப்பாளர் கூட இல்லாமல் தொடர்ந்து பழைய பாடல்கள்.. தேன்மழை தான் போங்கள்..

அதில் அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று… எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் அது. மலரே.. குறிஞ்ச்சி மலரே.. தலைவன் சூட… நீ மலர்ந்தாய். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்ச்சிப் பூவை காதலிக்கு உவமையாய் சொல்ல காதலனுக்கு கசக்குமா என்ன? (காக்கா பிடிப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அதில் குறிஞ்ச்சிப்பூ என்ன குஷ்பூ என்ன?? எல்லாம் ஒரே மீனிங்க்தானே..) மலரை யார் சூடுவர்? மகளிர். அதுவும் மலர்ந்த மலரை விரும்பிச் சூடுவர். ஆனால் இந்தப் பாட்டில் பாருங்களேன்… தலைவன் சூட குறிஞ்ச்சி மலர் மலர்ந்ததோ என்று பாடிய சாக்கில் காதலியை சொல்கிறார். தான் அணியவும், பிறருக்கு அணிவிக்கவும் “சூட” என்ற ஒரே வார்த்தை தான். இந்த அர்த்தத்தோடு பாடல் கேட்டால் இன்னும் இனிக்கும்.

நாமெல்லாம் யார் யாருக்கோ வரவேற்பு வளையம் (Welcome Arch) வைக்கிறோம். இந்த லிட்டில் அந்தமான் தீவிற்கு லேனா தமிழ்வாணன் வந்த போது அவரை வரவேற்க வரவேற்பு வளையம் (Welcome Arch) வைத்தோம். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு வரவேற்பு தந்தவர்கள் நீங்கள் தான் என்றார். பதிலுக்கு நாம் சொன்ன பதில்: இந்த தீவுக்கு வந்த முதல் எழுத்தாளர் நீங்கள். சரி லேனாவை விடுங்க. மலர்களே.. மலர்களே மலருங்கள் என்று வரவேற்பு கொடுப்பதெல்லாம் கூட “ஆயிரம் மலர்களே மலருங்கள்” என்று பாடலாய் பாடி வைத்துள்ளனர். தானாக் கனிவதை தடி கொண்டு கனிய வைக்கும் வித்தையா இது?

பரமக்குடியிலிருந்து 1980 களில் கோவை பொறியியல் கல்லூரியின் விடுதியில் நுழைந்த போது ஏகமாய் புதுமுகங்கள். தமிழகத்தில் தமிழ் பேசவும் தெரியாமல் இருப்பார்களா என்று என் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்த பலர். பலர் பேசிய ஆங்கிலம் என்னை ஓர் ஓரம் விரட்டியது. கோலிக் குண்டும் பம்பரமும் மட்டுமே விளையாடி சென்றவனுக்கு அங்கே கிரிக்கெட், வாலிபால், பேஸ்கெட்பால், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் இப்படி எல்லாம் புதிது புதிதாய்த் தெரிந்தது. அந்த விளையாட்டை விட அதற்க்கான உடைகள் பிரமிப்பின் உச்சத்தை அடைய வைத்தன. TMS SPB சுசீலா இவர்களை தாண்டி விரிவடையாத மனசு பல மைக் ஆசாமிகளின் போஸ்டர்களைப் பார்த்து, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பாத்த மாதிரி விழிலிளித்தேன்.

ரூமில் Hubert ஹுபர்ட் என்பவர் இருந்தார். சொந்த ஊர் என்னவோ நாகர்கோவில் தான். ஆனால் ஆளைப் பாத்தா அப்படித் தெரியவில்லை. ஏற்கனவே மிரண்டு கிடக்கும் எனக்கு, அவர் கையில் இருக்கும் கிடார் இன்னும் பயமுறுத்தியது. ஒரே ஆறுதல் அவர் அந்த கிடாரில் வாசித்த ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடல் மட்டும் தான்.

ஆண்டுகள் கழிந்தன. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தோம். மைக் என்றால் மைல் தூரம் ஓடிய என் கையில் அப்போது மைக். மேடையில் நான். அந்த ஹுபர்ட் நண்பரை தேடிப் போனேன். அவருக்கு நினைவில் சிக்கவில்லை. கடைசியில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடினேன். நினைவுக்கு வந்தது அவருக்கு. குடும்பப் பாடல் பாடி ஒன்று சேரும் (நாளை நமதே, தம்பிக்கு ஒரு பாட்டு மதிரி) குடும்பம் மாதிரி நண்பரை தேடிக் காண உதவிய பாடல் அது.

பெரும்பாலும் மொட்டுக்களை யாரும் வாங்குவதில்லை.. (மல்லிகை விதிவிலக்கு.. மொட்டாக இருந்தாலும் மணம் தரும்.. மலர்ந்த மலருக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல்) கும்மி அடிக்க கட்டைகள் வைத்திருப்பர். ஆனந்தக் கும்மி அடிக்க மென்மையான tool (Property என்றும் Prop என்றும் தற்போது பாப்புலர் ஆகி விட்டன டீவி மூலமாய்) தேவைப் பட்டிருக்குமோ!! அதனால் தான் ஒரு தாமரை வேண்டாம்.. 1000 தாமரை மொட்டுகளோடு ஆனந்தக் கும்மி என்று கவிஞர் கற்பனை செய்திருக்கிறார் போலெ. தாமரை மேல் கற்பனைக் கண் வைக்காத கவிஞர்களே இல்லை எனலாம்.

கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன??

கவிஞர் மனது எப்படியோ, அப்படித் தான் பார்க்கும் இடமெல்லாம் தெரிகிறது. இயற்கையான நிகழ்வுகள் கூட தங்களின் மன நிலைக்கேற்ப பார்க்கும் வலிமை கவிஞர்களின் தனி உரிமை. சாதாரண கவிஞர்களுக்கே இப்படி என்றால், கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு எப்படி இருக்கும்???

சீதையைத் தேடி அனுமன் அலையும் போது, ஒரு அகழி கண்ணில் படுகிறது. அதிலோ மணம் கமழும் தமரை மலர்கள். அது இரவு நேரம். ஆகவே மலர்கள் குவிந்து காணப்பட்டன. நம்ம அனுமனுக்கு எப்படி தெரியுது தெரியுமா?? இவங்க (தாமரை) நம்ம சீதா பிராட்டிக்கு சொந்தக் காரங்களா (காரிகளா) இருக்கணும். இல்லாட்டி அவங்க மாதிரி இவங்க எல்லாம் ஏன் சோகமா இருக்கணும்? இப்படி யோசிக்கிறாராம் அனுமன் மனசு மூலமா கம்பர்.

நறவு நாறிய நாள் நறுந் தாமரைதுறைகள் தோறும் முகிழ்ந்தன தோன்றுமால்சிறையின் எய்திய செல்வி முகத்தினொடுஉறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ

திருமணம் ஆன மகளிரை Mrs என்று முன்பு அழைத்தனர். நாகரீகமாய் இப்போது Ms என்று அழைக்கிறோம். ஆனா கம்பர் அப்போதே “செல்வி” என்று அழைத்திருக்கிறார் சீதையினை. என்ன ஒரு தீர்க்கதரிசி!!!!

சமீபத்தில் திருமணம் ஆனவர்…


பெரும்பாலான ஹோட்டல்களின் கதவுகளில் பூட்டு சாவி இருக்கோ இல்லையோ இந்த Just Married – அதான் சமீபத்தில் திருமணம் ஆனவர் என்ற அட்டை கண்டிப்பாய் இருக்கும். ஹோட்டல் காரர்களுக்கு மட்டும் அவர்கள் மேல் ஏன் இவ்வளவு அக்கரை. யாரும் அவர்களை தொந்திரவு செய்து விடக்கூடாது, என்பதில் ஓர் அதீத கவனம். மனைவியின் நொய் நொய் அல்லது கணவனின் கண்டிப்புகள் இவைகளிடமிருந்து தப்பிக்க இந்த மாதிரி மாற்று ஏற்பாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (உங்களுக்கு தெரிஞ்சா தகவல் சொல்லுங்க… பெயர் ரகசியம் காக்கப்படும்)

ஒருவரைப் பார்த்தவுடன் எப்போது திருமணம் ஆகி இருக்கும் என்பதை ஊகிக்க ஒரு சின்ன வழி இருக்கு. “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று குஷியா கத்தும் ஆசாமியா? கல்யாணம் ஆகி 20 வருடம் கடந்தவர்.

“நீ பஸ்ஸில் முன்னாடி போ.. நா அப்புறம் வந்து சேர்ந்துக்கிறேன்” என்று சொன்னால், உங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிருக்கும் என்பது ஆரூடம்.

ஒரே பஸ்ஸில் தான் போவார்கள் ஆனால் பேச்சு மூச்சு இருக்காது. போகும் போதும் கணவன் முன்னாடி போக, பின்னால் மனைவி சற்று தள்ளியே.. இது 10 வருட தாம்பத்யத்தின் பின்னால் நடப்பது.

ஒன்று சேர்ந்தே போவது… ஒன்றாய் இருப்பது. இப்படி இருந்தால் இன்னும் சரியா புரிந்து கொள்ள முனைப்பாய் இருக்கும் 5 வருட அனுபவசாலிகள்.

ஒரு சீட்டு இருக்கா.. அதுவே போதும். நாம் ரெண்டுபேரும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று கெஞ்சும் பேர்வழிகள் தான் சமீபத்தில் திருமனமான அதிர்ஷ்டசாலிகள்.

இந்த மாதிரியான அதிர்ஷ்டசாலிகள் அந்தமானுக்கும் வரத் தவறுவதில்லை. அந்தமான் வருபவர்கள் அனைவரும் பார்க்கும் ஒரு முக்கிய இடம் இங்கிருக்கும் செல்லுலார் ஜெயில் – கூண்டுச்சிறை. ஜப்பான் நாட்டில் சின்னஞ்சிறு குழந்தைப் பருவத்திலேயே ஹிரோஷிமா நாகசாகி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுவார்களாம். இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய தியாகபூமி அந்த சிறை வளாகம் (இது என் மனைவி சொன்னது. மனைவி சொன்னா அப்பீல் இருக்கா என்ன??)

இங்கிருக்கும் ஜெயிலில் இரவு நேரத்தில் ஒலி ஒளிக்காட்சி Light & Sound Show நடக்கிறது. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும். அந்த ஜெயில் கட்டும் போதே இருந்து பாத்த ஒரே சாட்சி ஒரு அரச மரம். அந்த அரச மரம் பேசுவது போல் இருக்கும் காட்சி அது. ஓம்பூரியின் குரலில் கம்பீரமாய் இருக்கும். [அந்த நிகழ்ச்சியின் கதாநாயகனே சாரி… நாயகரே அந்த அரச மரம் தான். ஒரு புயலில் அது முரிந்து சாய…. அரசு முனைப்புடன் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் உயிர் தந்துள்ளது.]

பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு இந்தி தெரியாத காரணத்தால் ஆங்கிலம் தான் வசதி. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்களும் ஆங்கிலம் பேசினால் அது நல்லாவா இருக்கும்??

சமீபத்தில் கல்யாணம் ஆன ஜோடியிடம் அந்த சிக்கல் வந்தது. மனைவிக்கு ஹிந்தி நஹி. அவருக்கு ரெண்டுமே ஓகே. நான் நாட்டாமையாக மாறி தீர்ப்பு சொன்னேன். ஹிந்தி ஷோவே பெட்டர். கணவன் மனைவிக்கு translate செய்து காட்டலாம். [சொல்லாமல் விட்டது: ஆமா.. ஆமா.. இப்பொ தான் கணவன் பேச முடியும். அப்புறம் கேட்பது தான் நித்திய கடமை ஆகி விடும்.]

இன்னொரு தியரியும் இருக்கிறது. கல்யாணம் ஆன புதிதில் கணவன் சொன்னதை மனைவி கேட்பார். சிறிது காலம் கழித்து மனைவி பேச கணவன் கேட்பான். அதற்கும் சில காலம் கழித்து இருவரும் கத்துவர் தெருவே வேடிக்கை பார்க்கும். ஆமா.. நீங்க எந்த ஸ்டேஜ்ல இருக்கீக?

கல்யாணம் செய்து கொடுத்து கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது பெண்ணின் தாய் தகப்பன் கண்களில் தெரியுமே ஒரு கலக்கம்… சஸ்பென்ஸ் தெளியாத படம் பாக்கும் உணர்வு. எப்படி இருப்பானோ.. தன் மகள் என்ன செய்வாளோ என்ற பதைபதைப்பு கண்களில் நீராய் பெருகும். அது திருமணத்தின் பொருட்டு அதிகம் தான். என்ன நடகுமோ என்ற திகில் கல்யாணத்தில் மட்டுமா?

1986ல் அந்தமானுக்கு போறேன் என்று கையில் பையோடு பரமக்குடியில் நின்றேன். பஸ்ஸில் போனாலே ஒத்துக்காத மவன்.. ஏதோ அந்தமானாம்.. கப்பலில் போகிறேன் என்கிறான் என்று கேட்ட முறைப்பான என் அப்பாவின் கண்களும் சற்றே கலங்கத்தான் செய்தன. இப்போ, சின்ன போட், கப்பல், கடல் விமானம், ஹெலிகாப்டர், விமானம் என்று சுத்தி வரும் போது அந்த கண்ணீருக்கு அர்த்தம் இல்லை என்று சொல்ல நினைக்கும் நேரத்தில், அவர் இல்லை…

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னும் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் போயிட்டு வந்திரலாம். அது 1992. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அவ்வளவாய் இல்லாத காலம் அது. டெக்கான் விமானம் வராத காலம். சென்னையிலிருந்து அந்தமான் செல்ல, விமானம் கிளம்ப நான்கு நிமிடங்கள் இருக்கும் போது, தம்பதி சமேதராய் உள்ளே நுழைந்தோம். விமான அதிகாரி கேட்டார், ஏன் இவ்வளவு லேட்?. பள்ளிக்காலம் முதல் சொல்லி வரும் அதே பதில், லேட் ஆயிடுத்து என்றேன்.

அவரும் விடாமல், அதான் தெரியுதே… ஏன் லேட்டாச்சு??. என் பதில் “அதிகாலை எழுந்திரிக்க முடியலை”. அதான் ஏன்? என் கையில் இருந்த கடைசி ஆயிதம் பிரயோகித்தேன். “இப்பொத்தான் முதன் முறையா புதுசா கல்யாணம் ஆயிருக்கு. அதான்” என்றேன்.

அதிகாரி சிரித்தபடி, ஓஹோ… Just Married??? அனுமதித்தார். அட சமீபத்தில் கல்யாணம் ஆன ஆட்களுக்கு இவ்வளவு கருணை காட்டுகிறார்களே?? அதன் பின்னனி ஏதாவது இருக்குமா? என்று யோசித்தேன். கிடைத்தது இன்று.

இராமயணத்தில் இந்த கருணை காட்டும் இடம் வருவதை கம்பர் மறக்காமல் காட்டுகிறார். மறுபடியும் நீங்கள் ஒரு முறை அசோகவனம் வரவேண்டும். ஒளிந்திருந்து அனுமன் துவம்சம் செய்வதை பார்க்க வேணும். சகட்டு மேனிக்கு அரக்கர்களை கொன்று குவித்த அனுமன் ஒரு இடத்தில் சற்றே நிதானிக்கிறார்.

கம்பரின் பார்வையில் “கொல்லும் தன்மை கொண்ட பெரிய்ய்ய யானை மாதிரி” அனுமன் தெரிகிறார். அப்படி இருந்தும், துன்பப்படும் அரக்கியரைப் பாத்து “வூட்டுக்கு போம்மா” என்று அனுப்பி வைக்கிறார். ஊடல் கொண்ட அரக்கியர் சிலருக்கு அரக்கர்களை வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கே தான் அந்த Just Married பார்ட்டிகள் கண்ணில் தெரிகிறார்கள்… [அந்தக் காலத்திலும் தெரிஞ்சிடும் போல் இருக்கு.. அந்த வழியல் முகம் பாத்தே..]

அப்போது தான் மணந்த அரக்கியர் சிலருக்கு, அவரது உயிர் போன்ற அரக்கரை கொல்லாது விட்டாராம் அனுமன்.. ஆஹா.. என்னே கருணை..

ஆடல் மாக்களிறு அனையன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்
கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்
ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.

இத்லெ பெரிய ஆச்சர்யயம் என்ன என்று கேட்டாக்கா… “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பார்கள். ஆனால் அனுமனோ கல்யாணம் செய்யாதவர். “தன் பெறாத இன்பமும் பெறுக இவ்வையகம்” என்று விட்டிருப்பது தான். மனித வாழ்வில் (அரக்க வாழ்விலும் தான்) சந்தோஷமான நேரங்கள் அந்த சமீபத்தில் திருமணம் ஆன தருணங்கள் தான். அந்த சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கமா இருக்குமோ?

ஆமா உங்க பார்வையில் எப்படி படுது?