தந்தை சொல் மிக்க தந்திரமில்லை


large_89622

”அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க” என்ற சொல் வழக்கு இருக்கு. இது என்னவோ ஒரு பக்கம் பாத்தா அடிக்கு அடித்தளம் போடும் பேச்சு வழக்கா தெரிஞ்சாலும் கூட, ஏதோ அண்ணன் தம்பிகள் கூட உதவாத செய்தி தான் பெரிசா படுது எனக்கு. அடியாத மாடு படியாது என்றும் சொல்லுவாக. அப்பொ அண்ணன் தம்பிக மாட்டெ விட கேவலமா பாக்கிறாகளா அன்பர்களே! நண்பர்களே… அது சரி…இப்பொ எதுக்கு இந்த ஆராய்ச்சின்னு கேக்கீகளா? இருங்க.. இருங்க.. சொல்லத்தானே போறேன்…

அஞ்சில் வளையாதது அம்பதில் வளையாது என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அஞ்சி வயசில் வாங்கிய அடி அம்பது தாண்டினாலும் மறக்காம வச்சிருக்கு. இந்தக் கதெ தான் உங்களுக்கும் சொல்ல வந்தேன். ஆமா… கதெ கேட்டு கதெ கேட்டு வளந்த நாடு நம்ம நாடுங்கிறது பழங்கதையா போச்சு. இப்பொல்லாம், வாட்ஸ் அப்பில் ஜோக் படிச்சி ஜோக் படிச்சி வளந்த நாடுன்னு சொல்ல்லாம் போலெ. இளமையில் கல் என்பது எனக்கு இளமையில் பட்ட அடி மாதிரி பசு மரத்து ஆணி மாதிரி.. (சின்ன வய்சிலெ படிச்சதெல்லாம் ஞாபகம் வருதா என்ன?) முதுகுலெ பதிஞ்சு போச்சி.

சின்ன வயசிலெ விளையாடாத நபர்கள் யாராவது இருப்பாகளா என்ன? என்ன… இப்பொ இருக்கிற மாதிரி பிளே ஸ்டேஷன் 3, கம்ப்யூட்டர் கேம்கள் மாதிரி இல்லை நம்ம விளையாடின கேம்கள். எதையாவது சாக்கு வச்சி, எங்கிருந்தாவது எங்கினயாவது ஓடனும். வேத்து விறுவிறுக்கும். அதையும் மூக்கையும் ஒன்னாவே சேத்து அப்பப்பொ நாம சட்டைக்கு பண்டமாற்றம் செய்வோம். அந்த வெளெயாட்டு ரூட்லெ என்னோட அப்பா உக்காந்திருந்தார். ஏதோ எண்ணெயெ தலையில் தேய்க்க உக்காந்திருந்த மாதிரி பின்னாடி தான் வெளங்கிச்சி. (அங்கெனெயா உக்காந்திருந்தார்? இப்படி விவேக் மாதிரி கேள்வி எல்லாம் வேண்டாமெ!) போற வேகத்தில் கையையும் எண்ணெயையும் ஒரு சேர தள்ளிவிட்டு ஓட…சாரி… நிக்க, விழுந்தது முதுகில் ஒரு தரும(மில்லா) அடி. சுருண்டு விட்டேன்.

அந்த அன்னெக்கி விழுந்த ஒரு அடியில் நான் என் அப்பாவிடமிருந்து பல ‘அடி’கள், இல்லை இல்லை பல கிலோ மீட்டர்கள் விலகிப் போய்விட்டேன். அரசுத்துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாய் மனு அனுப்புவது மாதிரி அம்மாவிடம் ’துரூ ப்ராப்பர் சேனலில்’ பேசும் ஆளாக மாறிவிட்டேன். அதை என் அப்பாவும், ஏதோ தன் மேல் இருக்கிற மரியாதை என்றே நினைத்து மகிழ்ந்ததும் அவ்வப்போது தெரிந்தது. ஆனா நமக்குத்தானே அந்த ’புறமுதுகு’ சமாச்சாரம் தெரியும்?

காலங்கள் உருண்டன. ஒருமுறை ஆஸ்பத்திரியில் நான் படுத்துக் கிடக்க, எனக்கு சேவை செய்ய வேறு வழியே இல்லாமல் அப்பா.. அப்போது தான் தன் பழைய கதைகளும், ’பாசக்கார அப்பா’வின் உண்மை சொரூபமும் தெரியத் தெரிய.. ”அடடா..அடடா…. இந்த அப்பாவையா அந்த ஒரு அடி இவ்வளவு தூரம் பிரித்து விட்டது?” என்று யோசிக்க வைத்தது. அவர் கஷ்டப்பட்டது முழுதும், நான் அப்படி எங்கும் அடிபடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தானே? காலத்தின் கணக்கு வேறு மாதிரி இருந்தது. நான் இப்போது அந்தமானில் சுகமாய் வாழும் போது அதை முழுதும் பார்த்து மகிழ அவர் கொடுத்து வைக்கவில்லை.

சரி… இறந்த பிறகு செய்யும் சடங்குகள் செய்யலாம் என்றால், அந்தமானில் அதுக்கும் வழியில்லை. குறிப்பிட்ட சமூக வழக்கங்களுக்கு மட்டும் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். தேதி பற்றி தகவல் சொல்லும் பரமக்குடி ஐயரே, ’அந்தமானுக்கு வரட்டுமா?’ என்றார் பொறுப்பாக. அன்று விஜய் மல்லய்யாவும், இன்று ஸ்பைஷ் ஜெட்டும் கை விரிக்க டிக்கெட் விலையும் ஆகாய விமானம் போல் ஆகாயத்தை தொடும் அளவுக்கு இருக்கு. எப்படியோ இல்லாளுக்குத் தெரிந்த மந்திரங்களோடு, அந்தமான் தீவின் பீச்களை அதிகமாய் மாசு படுத்தாமல் ஒரு முழுக்கு போட்டு அப்பாவை நினைவு கூர்ந்தேன்..

அப்பாவை இப்படி அப்பாவியா தப்பா நெனைச்சேனே என்ற வேதனை உள்ளூர வரத்தான் செய்தது.

ஆறுதல் கூற வந்தார் கம்பர். “வாழ்க்கையிலெ இதெல்லாம் சகஜமப்பா…”

”வணக்கம் கம்பரே… அப்பொ, ராமாயணத்திலெயும் இப்படி ஏதாவது கீதா சாமீ?”

”ஏன் இல்லை? அந்த இளவல் இலக்குவனே, கண்ணாபின்னான்னு திட்டியிருக்கானே… ” – இது கம்பர்.

கொஞ்சம் விரிவா சொன்னா நல்லா இருக்கும்.

கம்பர் கனவில் விவரம் சொன்னதை உங்களுக்கு விளக்கமா சொல்றேன் இப்பொ…

அப்பா புள்ளெக்கு இடையில் நடக்கும் கோபத்தின் வெளிப்பாடு. களம்: இராமன் காடு செல்லத் தயாராய் இருக்கும் நேரம். செய்தி அறிந்த இலக்குவன் கோபமாய் கொந்தளித்தானாம். ”என் கண் எதிக்கவே நாட்டெ கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அப்புறம் பெப்பே சொன்னா அது கொடுமையான் அரசன் செயல் தானே? அப்புடி நம்மாலெ இருக்க முடியாது நீங்க காட்டுக்கு போக, நானு துன்பத்தோடு இங்கேயே கிடக்க… ” இப்படி வருது இலக்குவன் வாயிலாக.

அப்பாவை திட்டிபுட்டு அப்புறம் சமாதானம் ஆவது எல்லாம் அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் சேதி போலெ.. சாமான்யன்கள், நாமெல்லாம் விதிவிலக்கா என்ன?

அப்படியே விதியேன்னு பாட்டையும் லேசா படிங்க பார்க்கலாம்.

நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என்கட்புலமுன் உனக்கு ஏஎந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல் என்றான்.

மீண்டும் வருவேன்.

மதுரெக்காரெய்ங்களே போதும்….


vadi mdu

எப்பொப் பாத்தாலுமே சிரிப்பை வரவழைக்கும் காமெடிகளில், வடிவேல் காமெடி டாப் தான். அவர் அரசியல் பேசினாலும் அதுவும் மெகா காமெடியாய் இருந்தது தான் பெரிய்ய காமெடி. அவரின் காமெடி கலக்கலில், மதுரைக் காரங்களை வம்பிழுப்பதாய் வந்த காமெடியும் ஒன்று. தெருவில் அண்ணன் தம்பி சண்டையை விலக்கி விடப் போய், வகையாய் வடிவேல் வாங்கிக் கட்டிக் கொள்வதாய் காமெடி வரும். அதில் முத்தாய்ப்பாய், இதெ ஏண்டா முன்னாடியே சொல்லலை என்று கேட்க, நம்ம மதுரெக் காரெய்ங்க எவன் சொன்ன பேச்சு கேக்கிறான்? என்பதாய் முடிவது தான் காமடியின் உச்சம். இந்தப் பக்கம் போகாதீங்க, அக்கா தங்கச்சி சண்டை நடக்கிறது என்றவுடன், அக்கா தங்கச்சியா……? என்று பதறி வடிவேல் ஓடுவது, இன்னும் நினைவில் அனைவருக்கும் இருக்கும்.

ஏன் மதுரைக்கு இப்படி ஒரு சோதனை? கோபாமாய் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவ(ள்)ர், கேள்வி கேட்ட பூமி இது. சிவ பெருமான் என்று தெரிந்துமே கேள்வி கேட்டவர்கள் அவதரித்த பூமி. என்ன…கொஞ்சம் சூடு பூமி.. அதனாலெ பேச்சிலும் கொஞ்சம் நெடி அதுவும் வீர நெடி இருக்கும். இதெ மாத்த முடியாது… நாங்களும் செய்வோமில்லெ… மதுரெக் காரெய்ங்கன்னா சும்மாவா?? இந்த மாதிரியான டயலாக், மதுரெக் காரய்ங்ககிட்டே இருந்து எப்படியாது ஒரு வகையில் வெளி வருவதைப் பாக்க முடியும்.

இந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதற்கு நான் ஊகிக்கும் முக்கிய காரணம், மற்ற ஊர்க் காரர்கள் இங்கு பெரும்பாலும் குடியேறாமையாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 1980களில் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கோவை மக்களின் நாகரீகம், வரிசை ஒழுங்கு எல்லாம் திகைப்பூட்ட வைத்தது. வரிசையில் நின்று ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி அப்புறம் இன்னொரு வழியால் (அது காலியாகவே இருக்கும்) திரும்பிப் போவர். இந்த வழியாய் யாரும் போய் டிக்கெட் வாங்க மாட்டாய்ங்களா என்று மதுரைத்தனமாய் கேட்ட காலங்களும் உண்டு.

அதே மாதிரி, அந்தக்கால சேரன் பஸ்களில் நீளமாய் கயிறு ஒன்று கட்டி இருப்பார்கள். ஒரு முனை காலிங்பெல் மாதிரி ஒன்றில் போய் முடியும். கண்டக்டர் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை இழுத்து வண்டியை நிறுத்துவார். கிளப்புவார். எனக்கோ பயங்கரமான ஆச்சரியம் என்ன்ன்னா, அதெப்படி இந்தக் கயிரை கண்டக்டர் மட்டும் தான் இழுப்பார்? மற்ற பயணிகள் இழுக்க மாட்டாய்ங்களா?? கேட்டேன்… வந்த பதில் இது தான்: மதுரெக்காரெய்ங்க புத்தி போகுதா?

குடும்பத்தாருடன் கோவையில் நண்பர் வீட்டில் தங்கினோம். அவர்களின் பணிவும் மரியாதையும் பார்த்து என் மகள் திக்குமுக்காடிப் போனார். மதுரெப் பாஷை பேசிக் கேட்டவர்களுக்கு, அந்த ஏனுங்க, இருக்குதுங்களா? வேணுங்களா? என்ற மரியாதை கலந்த வார்த்தைகள் தேனாய் இனித்திருந்தது என்று சொல்லவும் வேணுமா? வீடுகளில் விடுங்க… கடையில், அதுவும் ஒரு செருப்புக் கடைக்குப் போக, அவர்களும் அதே மரியாதை மாந்தராய் பேச… ’என்ன இந்த ஊர்க்காரெய்ங்க எல்லாரும் இப்புடித்தான் இருக்காய்ங்க!!!???’ என்ற வியப்புடன் கேள்வி வந்தது என் புதல்வியிடமிருந்து.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கு நடுவிலெ சண்டை ஏதாவது நடந்தா, எட்டிப் பாத்து அடிவாங்கும் (வடிவேல் போல்) செயல் மதுரெக் காரெய்ன்க்கிட்டெ அதிகம் ஏன் நடக்குது? ம்… சும்மா…அதெல்லாம் கெடையாது என்கிறீர்களா? அப்பொ நாட்டாமெ தீர்ப்பு சொன்னா ஒத்துக் கிவீங்களா? என்னோட நாட்டாமை எப்பவுமே கம்பர் தான். என்ன மிஸ்டர் கம்பர் சார்.. மரத்தடி செம்பு எல்லாம் ரெடி… அப்புறம் என்ன சொல்லுங்க நாட்டாமெ சார்…

இப்படி எல்லாம் பேசுனா எந்த நாட்டாமையும் தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்க. ஒரு முக்கியமான டயலாக் சொல்லனும். “எல்லாம் ஆளுக்காளுக்கு பேசிட்டிருந்தா எப்படிப்பா?? நாட்டாமை நறுக்குண்ணு நாலு வார்த்தை சட்டுன்னு சொல்லுங்க…”

இதுக்குத்தான் காத்திருத்து போல் கம்பர் ஆரம்பித்தார்.
ஏதாவது வித்தியாசமா நடந்தா ஒடனே ஓடியாந்து பாக்குறதுங்கிறது ஒன்னும் புதுசு இல்லெ. அந்தக் காலத்திலேயே நடந்திருக்கு..

மதுரெக்கார ஆசாமிகளை விட்டுத்தள்ளு.. சாமிகளே கூட இப்படித்தான்..

சாமிகளா? எப்பொ நடந்தது சாமி? – இது பவ்யமாய் நான்.

ஆமா… ராமாயணத்திலெ அந்த சீன் வருது. அனுமன் இருக்கானே அனுமன், மலை மாதிரி இருக்கிறவன், வலிமையான தோள் உள்ளவன். குரங்குகளில் சிறந்தவன். கடல் கடந்து இலங்கைக்கு போகுறப்போ, காற்றே கலங்கிப் போச்சாம். அதிசயம் என்ன? என்று ஆண்டவர்களே வெரெஸ்ஸா ஓடி வந்தாங்களாம். வர்ரப்பொ அவங்கவங்க, பிளேன்லெ வந்தாகலாம். வந்த அவசரத்திலெ அவய்ங்க பிளேனே முட்டி மோதி கடல்லெ விழுந்து ஒடெஞ்சே போச்சாம்…

அந்தக் காலத்து கதையே இப்படி இருக்க, நம்ம மதுரெக் கதை பராவா இல்லியே???

அப்படியே பாட்டும் லேசா மோதிக்காமெ பாருங்க…

குன்றொடு குணிக்குங் கொற்றக் குவவுத்தோட் குரங்குச் சீயம்
சென்றுறு வேகத் திண்கா லெறிதரத் தேவர் வைகும்
மின்றொடர் வானத் தான விமானங்கள் விசையிற்றம்மின்
ஒன்றொடொன் றுடையத் தாக்கி காக்கட லுற்ற மாதோ.

என்ன நாட்டாமெ தீர்ப்பு ஓகேவா?… அல்லது மாத்திச் சொல்லச் சொல்றீங்களா?