பாமரன் பார்வையில் ஃபாரின் – 75


மலேசியாவில் மகிழ வேண்டிய செய்தியில் ஒன்று அவர்கள் பேசும் தமிழ்.

தூய தமிழில் பேசுகிறார்கள். கதைக்கிறார்கள், விடயம், அம்மம்மா என்ற இலங்கைத் தமிழ் சொல் ஏதுமின்றி சரளமான தமிழ் வருகிறது.

ஆங்கில வார்த்தை கலப்பின்றி தமிழ் பேசுவதை ஒரு பெருமையாகவே கருதுகிறார்கள்.

நாமக்கல் அக்காவை ஒரு கடையில் சந்தித்தேன். அவர்கள் பேசும் தமிழ் கேட்கவே அவர்கள் கடைக்கு அடிக்கடி சென்றேன்.

பல தமிழ்சொற்களின் உருவாக்கிகளும் இவர்கள் தானாம்.

முகக்கவசம் என்பதின் தமிழாக்கம் பாருங்கள். (கவசம் என்பது வடமொழிச் சொல் எதற்கு? தமிழில் சொல் இருக்க?)

வாழ்க மலேசியத் தமிழ்.

உரோமபத மன்னன் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 6

கம்பன் காப்பியத்தில் இன்றும் நாம் காண இருப்பது வசிட்ட முனிவர் சொன்ன காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய முனிவர்களின் சந்திப்பில் சில ஆலோசகள் சொல்லப்படுகிறது. அதனை அமலாக்கும் விதமாய் அடுத்த இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

நாட்டிற்கு மழையினை வரவழைக்க ஒரு சிறப்பான தவமுனியினை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் அவையில் இருந்த பெண்கள் எழுந்து நின்று, நாங்கள் சென்று அந்தத் தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர். நம் முன் இம்மகளிர் சந்திப்பில் சில கேள்விகளை எழுப்புகிறது.

மகளிர் அரசவையில் இருந்திருக்கிறார்களா?
மகளிருக்கு அரசுப் பணிகளில் பங்கேற்கும் உரிமையும் தரப்பட்டிருக்கிறதா?
அப்படி மகளிர் சொல்லும் ஆலோசனையும் ஏற்கப்பட்டுள்ளதா?

இவைகளின் பதில், மகளிரை அடிமைகளாக நடத்தவில்லை என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும்.

கம்பன் சந்திப்பில் மகளிர் என்றே சொல்வதாய் எனக்குப் பட்டது. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் வர்ணனைகளை வைத்து உரையாசிரியர்களோ, அவர்கள் விலைமகளிர் என்று சொல்கின்றனர். அப்படி என்ன சொல்லி விட்டார் நம் கம்பன்? அவையில் வந்த மகளிர் இப்படி இருந்தார்களாம். ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடையவர்களாகவும் இருந்தார்களாம். அது போக, யாம் சென்று முனிவனை அழைத்து வருவோம் என்று கூறிய துணிவு இருந்த்தினாலும் அம்மாதர் விலை மகளிர் தான் எனச் சொல்கின்றனர் சான்றோர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும், விலைமகளிரை அரசவையில் வைத்துக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறதா? அதுவும் அரச காரியங்களைல் மூக்கை நுழைக்கும் அளவு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறதா? யோசிக்க வைக்கிறது.
அதனை தெளிவுபடுத்திக் கொள்ள சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும் என்ற நூலைக் கையில் எடுத்தேன். சங்க காலம் என்பது மனித வளத்தினை வடித்தெடுப்பதற்கான பொற்காலம் என்கிறார்கள். இதனை திருநெல்வேலியிலிருந்து முனைவர் இரா சிவசங்கரி அவர்கள் சிறப்பான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். (செம்மூதாய் வெளியீடு)

தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் இன்று வரை பல பெயர்களால் விலைமகளிரைக் குறிப்பிட்டுள்ளனர். பரத்தையர் என்பது சங்க இலக்கிய இலக்கணத்தில் காணமுடிகிறது. பின்னர் அற இலக்கியங்களில் வரைவின் மகளிர் என்று சொல்கிறார்கள். காப்பியங்களில் கணிகையர் என்றும் காலத்திற்கு ஏற்றார்போல் அவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. சங்ககாலத்தில் கூறப்பட்ட காமக்கிழத்தி என்பவள் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொண்டபின் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப் பட்ட பெண்களாவர். இவர்களையும் மூன்று வகைப்படுத்திச் சொல்லி இருக்கிறார் இளம்பூரணார். இதில் ஒத்தகிழத்தி என்பவள், தலைவியை ஒத்த குலத்தை உடைய இரண்டாவது உரிமைப் பெண் என்கிறார். [அதாவது குருடான கோழி எல்லாம் கிடையாது.] இழிந்த கிழத்தி என்பவர் அரசர்களால், அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட பெண்களாம். வரையப்பட்டோர் என்பவர்கள் ஆடல், பாடல், அழகு, அறிவில் சிறந்து பலருக்கு காலம் கணித்து தந்து, கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்தில் இருந்து, தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமை பெண் என்கிறார்.

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே பொருள் வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் பொதுமகளிர். தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே சான்று சொல்கின்றன. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி போன்றவை சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள். [நன்றி: ம.செந்தமிழன் வலைப்பூ] அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோர் தேவரடியார்.

கம்பன் எழுதிய இராம அவதார நூலை அரங்கேற்றம் செய்ய ஒரு அரங்கேற்றப்(!) பாவையின் சிபாரிசு தேவைப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்று ஒரு தாசி இருந்தாளாம். கம்பன் காவியத்திற்கு சான்றிதழ் இவரிடமிருந்து பெற்று வந்தால் தான் அரங்கேற்றம் செய்ய இயலும் என்றனராம் அறிஞர்கள். தாசி உருவில் நடமாடும் சரஸ்வதியாம் அவர். அவரும் ஒரு பாடலைப் பாடி அதை ஏட்டில் எழுதி கம்பரிடம் கொடுத்தாராம் படிக்காமலே. ”என்னுடைய காவியத்தை ஆய்வு செய்யப் போவதில்லையா?” என்று கம்பர் கேட்க, ”இல்லை இராமகாதை அரங்கேற்றத்தின் போது எப்படியும் எனக்கும் அழைப்பு வரும். அப்பொழுது தங்கள் திரு வாயாலேயே அதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதில் சொன்னாராம். அஞ்சனாட்சி எழுதிக் கொடுத்த பாடல்

அம்பரா வணி சடை யரண யன் முதல்
உம்பரான் முனிவரால் யோக ராலுயர்
இம்பரார் பிணிக்கரு மிராம வேழஞ்சேர்
கம்பராம் புலவரைக் கருஹ்திலிருத்து வாம்.

இத்தனை சிரமங்களுக்கு பின்னர்தான் அந்த இராமகாதை அரங்கேற்றம் ஆகியிருக்கிறது [நன்றி: கம்பர் இராமாயணம் அரங்கேறிய கதை – கவிமாமணி பூவாளூர் ஜெயராமன்] அந்த ராமகாதை தான் இப்பொழுது கம்பராமாயணம் என்று நாம் எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சரி… மீண்டும் அந்த சந்திப்பு நிகழ்ந்த பாடலை பார்த்துவிட்டு அடுத்த சந்திப்பிற்கு தயாராவோம்

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
யாவது?” எனக் குணிக்கும் வேலை.
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை
மாதர் எழுந்து. “யாம் ஏகி அருந் தவனைக்
கொணர்தும்” என வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாக உடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களை எல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்றகுற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது? என்று சிந்திக்கும் போது, ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய மாதர் சிலர் எழுந்து நாங்கள் சென்று அந்த அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே


பக்கம் 1

அன்மையில் முன்னாள் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தமானுக்கு வந்திருந்தார். தமிழ் அமைப்புகள், இலக்கியம் தொடர்பான ஆட்களை சந்திக்க வேண்டும் என்றாராம் (அதை அவரும், தனது குடும்ப உறுப்பினர்கள் காது படாமல் ரகசியமா சொன்னாராம். வர வர இந்த இலக்கிய மன்றக் கூட்டம் கூட, ஏதோ மலையாளப் படம் பார்க்கும் ரேஞ்சுக்கு ரகசியமா போய் வரும் நிலமைக்கு போய்விடும் போல் இருக்கு). நம் இலக்கிய கூட்டத்துக்கு வந்தார். மனுஷர் சும்மா சொல்லக் கூடாது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பின்னி எடுத்தார். மருத்துவர் என்பதால் இலவச ஆலோசனை என்று ஆரம்பிக்க கடைசியில் ஸ்டார்டிங்க் டிரபிள் என்று அவரை மாத்ருபூதம் ஆக்கிவிட்டனர் நம் மக்கள்.

பெரும்பாலான டாக்டர்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் தான் வாழ வேண்டி இருக்கிறது. (சிலர் பலான டாக்டர்களாகவும் இருந்து விடுகிறார்கள்). ஆக மருத்துவக் கல்வியை ஏன் தமிழில் கற்றுத்தரக் கூடாது என்ற கேள்வியை அன்று முன் வைத்தோம். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதாய் பதில் வந்தது. அடுத்த வாரம் கூடிய கூட்டத்தில் அதே தலைப்பில் கருத்துக்கள் கூற முடிவு செய்து அலசினோம். ஆரம்பக்கல்வி தமிழில் படித்து பின்னர் மேற்படிப்பில் ஆங்கிலத்தில் மாறும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி பேச்சு தான் மேலோங்கி இருந்தது. அந்தச் சிக்கல் தன் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்ற காரணத்திற்க்காய் ஆங்கில வழியில் பிள்ளைகளை சேர்ப்பதாய் (பல்வேறு காரணங்களோடும்) கூறினர்.

ஒரு கல்வி அதிகாரி தன் அனுபவத்தினை கூறினார். பள்ளி வரை தமிழ் வழியில் பயின்றவர் அவர். கல்லூரியில் ஆங்கில மீடியத்திற்கு (வேறு வழியின்றி) நுழைந்தார். கணிதப் பேராசிரியர் கணக்கை செய்து காண்பிக்கிறார் (ஆங்கிலத்தில் தான்). எல்லாம் புரிகிறது. கடைசியில் ஆமரெட் எங்கிறார் ஆசிரியர் (சாரி..சாரி… பேராசிரியர்). அவருக்கோ அந்த ஆம்ரெட் என்றால் என்ன என்றே விளங்கவில்லை. மற்ற வகுப்புத் தோழர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லையாம். ஒட்டு மொத்தமாய் ஆமரெட் என்றால் அந்தக் கணக்கு முடிந்துவிட்டது என்று தோராயமாய் புரிந்து வைத்திருந்தார்கள். பின்னர் தான் ஆம்ரெட் என்பது Am I Right? என்று ஆங்க்கிலத்தில் சொல்லி இருக்கிறார் என்று புரிந்ததாம். ஆமா மற்ற எல்லா மாணவர்களும் ஏன் எல்லாம் புரிந்த மாதிரி இருந்தார்கள் தொறந்த புத்தகமா??

பக்கம் 2:

புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பது நல்லது என்பார்கள் (யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியலை. நமக்கு எப்பொ எது சாதகமா இருக்கோ அப்பொ அதெ சொல்லிவிட வேண்டியது தான்) சின்ன ஊரில் அதிகாரியாய் இருப்பதில் சில சவுகரியங்கள். எந்த விழா என்றாலும் தலைமை தாங்க அழைப்பு வரும். மைக் கையிலும் வரும். கவனமா போன தடவை பேசியதை தவிர்த்து பேச வேண்டும். (மொத்த கூட்டமும் அடுத்து வரும் கலை நிகழ்ச்சிக்காய் காத்திருக்க, அவர்கள் முன்னால் பேசுவது கொஞ்சம் சிரமம் தான்).

சமீபத்தில் ஒரு மாணவர் அறிவியல் பொருட்காட்சியினை திறந்து வைத்து தலைமை தாங்கும் வாய்ப்பு வந்தது. மனதிற்குள் இப்படி வேசவேண்டும் என்று ஒரு முன்னோடம் விட்டிருந்தேன். (ஹிந்தியில் பேச வேண்டும் என்பதால் கூடுதல் கவணம் தேவைப்படுகிறது). அந்தக் காலத்தில் நான் சிறுவனாய் இருந்த போது, என் அப்பா, என்னிடம் தண்ணீர் கொண்டு வா என்பார். நான் உடனே ஓடிப் போய் கொண்டு வந்து தருவேன். ஆனால் இப்பொ… நீங்க ஏன் போய் எடுத்துக்கக் கூடாது? என்னை மட்டும் ஏன் கூப்பிட்றீங்க? அக்கா கிட்டெ ஏன் சொல்லலை? இவ்வளவு கேள்வி வருது. தண்ணீர் கொன்டு வரத் தயார். ஆனால் இப்பொ எல்லாம் இந்த தகவல் தேவைப்படுது பசங்களுக்கு. We are living in the age of Informations. கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்ப்பது தான் அறிவியல் பூரவமான வாழக்கை. அந்த மாதிரியான கேள்விகள் கேட்பது நல்லது..” இப்படி சொல்ல உத்தேசித்தேன்.

மேடை ஏறிய பின்னர் தான் தெரிஞ்சது, மேடைக்கு முன்னர் எல்லாம் பிரைமரி ஸ்கூலில் படிக்கும் பசங்க.. எனக்கு குஷி ஆய்டுத்து. நான் அப்பா சொன்ன பேச்சைக் கேட்டேன்.. என்று ஆரம்பித்து, உணர்ச்சிவசப்பட்டு அப்பொ நீங்க?? என்று கூட்டத்தைப் பாத்து கேட்டேன். கேப்போம் என்று பதில் கோரஸா வந்தது. (இப்படி திறந்த புத்தகமா இருக்க்காகளே..).. சிலர் கேக்கிறதில்லை என்கிறார்கள் என்று சமாளித்து முடித்தேன்.

பக்கம் 3

அந்தமானில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு சிவ கார்த்திகேயன் தொகுப்பாளராய் வந்திருந்தார். (அவர் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நடந்த கதைங்க இது). நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் இரண்டு வரிசைகளிலும் விஐபிகள் கொண்டு நிறைத்திருந்தார்கள். சிவ கார்த்திகேயன் தகிடுதத்தம் செய்து பார்க்கிறார். முதல் ரெண்டு ரோ ஆட்கள் சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நரசிம்ம ராவ் அளவில் இருக்கிறார்கள். நாம அப்புடி இல்லீங்க.. சிரிப்பு வந்தா சிரிச்சி வைச்சிடுவோம்.. (சில சமயம் மயாணத்தில் யாராவது ஜோக் அடிக்க அங்கும் சிரித்த கொடுமை நடந்துள்ளது).

கடுப்பான சிவ கார்த்திகேயன்..உண்மையிலேயே உங்களுக்கு காது எல்லாம் கேக்காதா? அல்லது வாய் பேச வராதா?.. ஆமா அப்படி வாய் பேசாதவங்க எப்படி சிரிப்பாங்க தெரியுமா என்றார். நானும் என் குடும்பத்தாரும் மொழி படத்தில் ஜோதிகா செய்ததை செய்து காட்டி.. அட இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே என்று சபாஷ் வாங்கினோம்.

இலக்கியப் பக்கம்:

மேனேஜ்மெண்ட் குரு என்று பலரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராமர் தான் சரியான மேனேஜ்மெண்ட் குரு என்று வட நாட்டு புத்தகம் சொல்லி அது தமிழிலும் வந்துள்ளது. (ராம்ஜெத்மலானி ராம் நல்ல கணவர் இல்லை என்கிறார்). ஆனா சீதை என்ன சொல்றாங்க என்று பாக்கலாம். (எங்க ஆத்துக்காரருக்கு அவ்வளவு வெவரம் பத்தாது என்று நோபல் பரிசு வாங்கியவரின் மனைவியே சாதாரணமாய் சொல்லும் சூழலையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க..)

ஒரு தலைவன் (அல்லது மேனேஜர்) எப்படி இருக்க வேண்டும்?. எல்லா சூழலிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். மெமொ அடுத்த அளுக்கு தரும் போதும் சரி.. தான் மேலதிகாரியிடம் டோஸ் வாங்கும் போதும் சரி.. ஒரே மனநிலையில் இருக்கனும்(அதாங்க திறந்த புத்தகமா… ஓஹோ.. கல்லுளிமங்கன் அப்படியும் சொல்லலாமோ..சொல்லிக்கிங்க.. நீங்களாச்சி..உங்க மேனஜராச்சி). இப்படி ராமர் இருந்தாராம். யாரு சொல்றாங்க.. சீதையே சர்டிபிகேட் தர்ராங்க.

தலைக்கு கிரீடம் வருகிறது என்ற போதும் சரி… காட்டிற்கு போக வேண்டும் என்ற போதிலும் சரி இரண்டையும் ஒரே மாதிரி பார்த்த முகம் அந்த ராமரின் முகம். அவரின் முகம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மாதிரியே.. (நம்ம பாஷயில் திறந்த புத்தகமா) இருந்தாராம். அப்படி இருந்த ராமரை இலங்கையில் இருக்கும் போது நினைத்தாராம் சீதை. அதை படம் பிடித்துக் காட்டுகிறார் நம் கம்பர்.

மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத் திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித் திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத் திருக்கும் முகத்தினை உன்னுவாள்

இப்பொ சொல்லுங்க.. மேனேஜ்மெண்ட் குரு யாரு? ராமர்? சீதை? கம்பன்?

மருமகள் மெச்சிய மாமியார்


[அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற சித்திரைமலர் “தேனமுது” சிற்றிதழில் வெளி வந்த கட்டுரை]

சமீபத்தில் இணையதளத்தில் படித்த ஒரு செய்தி. இராமாயண காலத்தில் முகநூல் என்று அழைக்கப்படும் ஃபேஸ்புக் வசதி இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை வலை விரித்திருந்தார் ஒரு நண்பர். அதன் போக்கில் ராமரும் சீதையும் இலக்குவனுடன் கானகம் செல்கின்றனர். அதனை வலைத்தளத்தில் இராமர் அறிவிப்பார். அதனை கைகேயி லைக் செய்திருக்க வேண்டும் என்பதாய் முடிகிறது.

கைகேயி அப்படி எல்லாம் மகிழ்ந்திருப்பாரா? என்ற கேள்வியை புறம் தள்ளி விட்டு, கைகேயி மேல் சீதையின் அபிப்பிராயம் எப்படி? என்ற கேள்விக்கு பதில் தேடலாம். அதன் மூலமாய் மாமியார் மருமகள் உறவு எப்படி இருத்தல் நலம் என்ற தெளிவான சிந்தனையை உங்கள் முன் வைக்க விளைகிறேன்.

ராமர் கானகம் போக வேண்டும் என்பது தான் கைகேயி வாங்கிய வரத்தின் சரத்து. அதில் சீதையும் சேர்ந்து கொண்டது தானாக நடந்தது. ஆக சீதையினை வருத்தப்பட வைக்கும் நோக்கம் நேரடியாக கைகேயிக்கு இல்லை. எனவே சீதைக்கு கைகேயி மேல் நேரிடையான எந்த கோபம் வருவதற்கும் வாய்ப்பில்லை.

இராமன் காட்டுக்குப் போனால் சீதையும் உடன் செல்வார் என்று எப்படி கைகேயியால் யோசிக்காது இருக்க முடிந்தது? மனது சஞ்சலத்தில் இருக்கும் போது எல்லாவற்றையும் சரிவர யோசிக்க இயலாது என்பதைத்தான் பதிலாகத் தர இயலும். மனக்குழப்பத்தில் அப்போது கைகேயி இருந்திருக்கிறார். குழப்பத்தில் உச்சியில் நின்று உணர்ச்சிப் பெருக்கால் எடுக்கப்பட்ட முடிவு அது.

ஆனால் அதே சமயம், உணர்ச்சிப் பெருக்கில் கூட சரியான முடிவினை எடுக்க முடியும் என்பதையும் இராமயணம் சொல்லத் தவறவில்லை. அப்படி செய்தவர் இராவணன். இராமனை வீழ்த்தி சீதையினைக் கவரலாம் என நினைத்த இராவணன், தன் முடிவை மாற்றிக் கொண்டானாம். இராமன் இல்லாமல் சீதை உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று இராவணன் கருதியதால் இராமனைக் கொல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு வஞ்சகமாய் கவர நினைத்தானாம். இது கம்பன் வழிச்செய்தி.

குழந்தை வளர்ப்பில் நவீனகால உளவியல் நிபுனர்கள் கூற்று என்னவெனில், நாம் சொல்லித்தந்து கற்றுக் கொள்வதை விட நம் நடைமுறையிலிருந்து பழகுவது அதிகமாம். ஆனால் நாம் என்ன சொன்னாலும் அதனையே திரும்பச் சொல்லும் கிளி வேறு ரகம். கானகத்தில் வாழ்ந்த போது இராமனும் சீதையும் சேர்ந்து கிளி வளர்த்துள்ளனர். அந்தக் கிளிக்கு தன் தாயார் பெயரான கைகேயி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். மாமியார் மீது எக்காரணம் கொண்டும் காழ்ப்புணர்வு வந்து விடக் கூடாது என்பதில் கணவன்மார்கள் மிகக் கவனமாய் இருத்தல் வேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறதோ?

இதை கம்பன் தன் வரிகளில் சொல்லும் இடம் தான் இன்னும் கவனிக்க வேண்டிய இடம். அதாவது அனுமன் சீதையினை அடையாளம் கண்டு, திரும்பும் சமயம் மனதில் நிற்கும் சில பசுமையான நினைவுகளை ராமனுக்கு சொல்லும் பொருட்டு சொல்லிய செய்தி தான் இந்தச் சம்பவம். இதோ கம்பரின் வரிகள்:-

என் ஓர் இன் உயிர்மென்ன் கிளிக்கு யார் பெயர் ஈகேன்
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என்
அன்னைதன் பெயர் ஆக என அன்பினொடு அந்நாள்
சொன்ன மெய்ம் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடந்தோய்.

[“உண்மை வழி பின்பற்றுபவனே(அனுமானே)! ‘நாயகனே (இராமனே)! என் இனிய உயிர் போன்ற மென்மையான கிளிக்கு யார் பெயரை வைப்பது?’ என்று நான் (சீதை) கேட்டேன். உடனே ‘என் தாயாகிய மாசற்ற கேகய மன்னன் மகளாகிய கைகேயியின்பெயரை இடுக’ என்று அன்போடு அக் காலத்தில் சொன்ன உண்மைமான மொழியையும் இராமனிடம் சொல்வயாக”]

இன்னொரு சேதியினையும் அனுமன் வசம் சொல்கிறார் சீதை. துயரத்தின் உச்சத்தில் உயிர் போவதாய் இருந்தாலும் கூட, அந்தத் தருணத்திலும் தன் மாமியார்களை வணங்கி தான் விடை பெற்றேன் என்ற தகவல் சேர்த்துவிட வேண்டுகிறார். இத்தகவலை இராமன் தன் தாயாரிடம் சொல்ல மறந்தாலும் அனுமனே, நீ சொல்வாயாக என்ற வேண்டுகோள் விடுக்கிறார். இதோ கம்பரின் வரிகள்:-

சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன் பால் அருள் இனமையால்
மறக்கும் ஆயினும் நீ மறவேல் ஐயா

[“இலங்கையில் சீதை இறக்கிறாள். அப்போது சிறப்பு மிக்க தன் மாமியார் மூவரையும் வணங்கினாள்- என்னும் இச் சொற்களை, என் மாமியாரிடம் கூறுமாறு தருமத்தின் தலைவனான இராமனிடம் சொல் அனுமனே. இராமன் இந்தச் செய்தியினை சொல்ல மறந்து விடுவானாயின், ஐயனே! நீ இதை அவர்களிடம் தெரிவிக்க மறந்திடாதே.”]

இந்த செய்திகள் இரண்டாய் இருந்தாலும் கூட சொல்ல வந்த கருத்து ஒண்றே தான். மாய்யாரிடம் மருமகள் வைத்திருக்கும் மரியாதை, வைத்திருக்க வேண்டிய மரியாதை. இது தான் சீதை மூலம் கம்பர் நம் அனைவருக்கும் சொல்லும் நீதி. மாமியாரை மதிக்கும் மருமகள்களை உருவாக்கும் முயற்சியில் கம்பரோடு வாருங்கள் நாமும் கை சேர்த்து நடப்போம்.

தனியே… தன்னந் தனியே..


தனிமையிலே இனிமை காண முடியுமா??
இது ஓர் அரதப் பழசான கேள்வி. ஆனா அதுக்கு சொல்லும் பதில் என்ன தெரியுமா?நள்ளிரவிலே சூரியனும் தெரியுமா?? கேள்வியையே பதிலாகச் சொல்லும் யுத்தி இது. இதே மாதிரி இன்னொரு கேள்வி இருக்கு.

பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? (இந்த மாதிரி கேள்விகள்  ஃப்ரீ sms உலகில் பிரபலம்) ஆனா, இதுக்கு பதில் கூட ஒரு கேள்வியாய் தான் சொல்ல முடியும்.

பதில் :  பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்.

இதையே  ஆச்சரியத்துடனும் பதிலாய் கேக்கலாம்
பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் !!!!!!

பெண்களால் கடுமையாய் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்ப ஜாலியாவே சொல்லலாம் “பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்” என்று.

தனியா உக்காந்து யோசிச்சா இப்படி நெறையவே யோசிக்கலாம் போல இருக்கு. தனி ஒரு மனுஷனுக்கு சோறு இல்லாட்டி இந்த லோகத்தையே சுட்டு பொசுக்கலாம்னாரு நம்ம பாரதி.

தனி ஆளா நின்னு சமைக்கிறதும் கூட ஒரு யோகம் மாதிரி தான் இருக்கு. பொண்டாட்டி கூட இல்லாத நேரத்தில் வம்படியாய் காலை நேரத்தில் சமைக்கும் ஐட்டமாய் நூடூல்ஸ் தான் பிரதான உணவாக அமையும். (அது சரி அதை 2 நிமிடத்தில் சமைக்க முடிகிறவருக்கு கின்னஸ்ஸில் கூட பேர் போடலாம்)

தனி ஆளா நொந்து நூலாகி நூடூல்ஸே கதி என்று இருப்பவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன். (ரகசியமா வச்சிக்குங்க.. உங்க மனைவிக்கு கூட சொல்லாதீங்க. அந்த நூடூல்ஸ் செய்யும் போது மொதல்ல மசாலாவை போட்டு நல்ல சுட வைங்க. அதோட லேசா சிக்கன்/மட்டன்/மீன் மசாலாவையும் கொஞ்சம் சேத்துப் பாருங்க.. தனி டேஸ்டு கெடைக்கும் பாருங்க. சைவப் பிரியர்கள் வேறு ஏதாவது கரம் மசாலாவை சேத்துப் பாருங்க)  .

பாரதி சொன்ன மாதிரி சோத்துப் பிரச்சினை பெரும் பிரச்சினை தான். ஆனா அதே பாரதி செத்தும் ஈக்களுக்குத்தான், உணவாய் அதிகம் இருந்தான் என்பது தான் சுவாரஸ்யமான சேதி.

வைரமுத்துவின் வரிகள் இப்படி வருது

அவன் சவத்தின் பின்னால்
வந்த ஆட்களின்
எண்ணிக்கையை விட
அவன் கண்களின்
மொய்த்த ஈக்களின்
எண்ணிக்கை அதிகம்.

ஒரு தனி மனிதனின் வெற்றியோ அல்லது தோல்வியோ, அவன் தனியாய் இருக்கும் போது எப்படி யோசிக்கிறானோ, அதைப் பொறுத்துத் தான் அமையும்.

மனசாலெ கூட தப்பாவே நெனைக்கப் படாது. இது தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்பதன் எளியா சாலமன் பாப்பையார்த்தம். ஆனா என்ன நடக்குது நாட்லெ??.

நம்மாளு தனியா இருக்கும் போது பெரும்பாலும் சின்னத்திரையில் படங்கள் பாத்துகிட்டே இருந்தா கனவிலெ கூட தமன்னா தான் வரும். என்ன செய்ய? நம்ம நெனைப்பு அப்படி.

ஒரு தனி மனித அவமானங்கள் தான், பிற்காலத்தில் அவர்களை சரித்திர புருஷனாய் அவதாரம் எடுக்கவும் செய்கிறது. ஒரு ரயில் பயண அவமானம் தான் மோஹன்சந்த் கரம்சந்தை மஹாத்மா காந்தி ஆக்கியது. சமூக அவமானங்கள் தான் ஒரு பீமை, அண்ணல் அம்பேத்காராய் ஆக்கியது. ராணுவ வேலையின் நிராகரிப்பு தான் அப்துல் கலாமை இந்திய தலைமைக்கே இட்டுச் சென்றது.

அதெல்லாம்… பெரிய்ய ஆட்களுக்கு.. நம்மளை மாதிரி சாமானியர்கள் என்ன செய்ய?? அதுக்கும் வள்ளுவன் தான் வழி சொல்றார். வச்சா குடுமி, செரைச்சா மொட்டை இப்படி எல்லாம் வாணாம். இந்த லோகம் எது வாணாம்னு சொல்லுதோ, அதெ நீயும் வேணாம்னு சொல்லு. என்ன ஒரு சிம்பிள் லாஜிக்.

தமிழ்மொழி வளரவும் இதே மாதிரி தனியா யோசிச்சா உடனே பதிலும் கெடைக்கும். தனியே இருக்கும் போது சிந்திக்கும் மொழி தமிழாய் இருக்கட்டும். மத்ததெல்லாம் தானே நடக்கும். என்ன தமிழில் யோசிக்கிறீங்களா??

அந்தமான் போன்ற தீவுகளில் தற்கொலைகள் அதிகம் என்ற ஒரு பேச்சு இருந்தது. தனிமை ஆக்கியதன் பின் விளைவு பிணமாய் ஆனதோ? ஆனால் இப்பொ கொஞ்சம் மாறி இருக்கிறதா படுது. மொபைல் என்னும் மந்திரக்காரி எப்போதும் கூட இருப்பதால், தனிமை என்பதே இல்லையே..

சமீபத்திய ஒரு வார இதழில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிளவு வருவதற்கு காரணமே அதிகம் பேசாததே எங்கின்ற மாதிரி தான் போட்டிருந்தார்கள். ஆனா பேசினாத்தான் பிரச்சினை என்று எத்தனை ஆண் மக்கள் மௌனவிரதம் இருக்கிறார்கள் என்பது எப்படி அந்த டாக்டருக்கே தெரியாமப் போச்சோ.. இப்படி தனியா புலம்ப வேண்டியது தான்.

தனியா ஒரு ஆளு சொன்ன கூட்டமா சொன்னதுக்குச் சமம் என்பது நம்ம சினிமா சித்தாந்தம். ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்னமாதிரி சொல்றது அதுக்குத்தான்.

தெரு நாய் வேண்ணா கூட்டமா வரும். வெறி நாய் தனியாத் தான் வரும். சிங்கம் சிங்கிளா வரும். பன்னிங்க தான் கூட்டமா வரும்.

பக்கத்து வீட்டு பையனைக் கூப்பிட்டு பாடுப்பா என்றால், பயந்து ஓடியே போயிட்டன். ஆனா பாத்ரூமில் செமெய்யா பாட்றான். தனிமை தான் அங்கே பயத்தை விரட்டுதா?

ஆக தனிமை பலமா பலவீனமா?

ஒரு பட்டிமன்றம் வச்சி, நடுவரா யாரா கூப்பிடலாம்?? நம்ம கம்பரை கூப்பிட்டா அவர் என்ன முடிவு சொல்வார்.

அவர் தனிமைக்கு தனிமையே பலம் என்கிறார். மீண்டும் ஒரு டிரிப் அசோகவனம் போயே ஆகனும். அங்கே அனுமன் ராவணனின் தளபதியோட மல்லுக்கு நிக்கிறார்.

ஏக ஆர்ப்பாட்டத்துடன் எழுந்தது அரக்க சேனை. அனுமனை அப்படியே சுத்தி வளைச்சிட்டாய்ங்க. அந்தி மழை பொழிகிறது மாதிரி அங்கே ஆயுத மழை பொழியுது. Security Guard  க்கே பயத்திலே வேர்த்துக் கொட்டினா எப்படி இருக்கும்? அப்படி தேவர்களுக்கும் வேர்த்துப் போச்சாம். நாரதர் மாதிரி ஆட்கள் சும்மா அதிருதில்லெ என்று சொல்லும் போதே விண்ணுலகமும் மண்ணுலகமும் லேசா அதிருச்சாம். அந்த சேனையோட அனுமன் தானும் தன் தனிமையும் சேர்ந்து வர சண்டைக்கு புறப்பட்டானாம். இது கம்பன் தீர்ப்பு.

ஆர்த்து எழ்ய்ந்து அரக்கர் சேனை அஞ்ச்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது பொழிந்தது அம்மா! பொரு படைப் பருவ மாரி
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும்
தார்த் தனி வீரன் தானும் தனிமையும் அவர் மேல் சார்த்தான்.

என்ன… தனியா யோசிக்கிறீங்களா?? வெற்றி உங்களுக்குத்தான். ஆல் த பெஸ்ட்.

அடைந்தால் மஹாதேவன்..இல்லையேல்


தமிழ் சினிமாவிலெ வரும் சில பாட்டுக்கள் பாத்தா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ – ன்னு தான் யோசிக்கத் தோணுது..

சாதாரணமா இருக்கிறதை ஏதோ காதலிக்காக ஆகுற மாதிரி சொல்றது பழைய சரக்கு தான்.. பழைய செய்யுள் சொன்னா “ஒரு மண்ணும் புரியலைன்னு” கமெண்ட் வரும்.

 ஆனா சினிமா பாட்டு புரியும். தெளிவுரை பொழிப்புரை தேவையில்லை.. (தேவை இல்லைன்னு சொல்லியே இம்புட்டு வியாக்யானம் எழுதுறெ??).. சரி விஷயத்துக்கு வர்ரேன்.

அச்சமில்லை அச்சமில்லைன்னு ஒரு படம். சரிதா நெல்லைத் தமிழ் பேசி கலக்கிய படம். தமிழ் படத்திற்கே Sub Tittle தேவைப்படும் அளவுக்கு நெடுநெல்லைத்தமிழ்.

(நான் நெல்லை நண்பர் ஒருவரை பக்கத்தில் வைத்து தான் ஓரளவு புரிந்து கொண்டேன்) அதில் ஒரு பாட்டு வரும். கதாநாயகியப் பாத்து வெக்கப்பட்டு செவ்வெந்திப் பூ சிவப்பாச்சி..

பாடல் பதிவின் போது அதனை செவ்வெந்திப் பூவும் சிவப்பாச்சி.. என்று மேலும் மெருகு ஏத்துனாங்களாம்.

வைரமுத்து வரவுக்குப் பிறகு வார்த்தை ஜாலங்கள் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. மனுஷனுக்கு வேத்துக் கொட்டினா, தண்ணியால கழுவலாம். “தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே..” இது வைர வரிகள்…

சாத்தியமா இதெல்லாம்…மூச் .. கேக்கவே கூடாது.

பயணங்கள் முடிவதில்லை. இதில் ஒரு பாட்டு

“கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அடித்ததினால்
கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்குக் கூட ஈரமில்லையோ??”

அந்தமான்ல எங்கே பாத்தாலும் தண்ணி தான்..(நீங்க நெனைக்கிற அந்த தண்ணியும் தான்)..கடல் முழுக்க தண்ணி.. இருந்தாலும் ஈரம் இல்லையான்னு கேக்கிறார் கவிஞர்.

எல்லாம் ஒரே காதல் பத்தி நெனைச்சாலே இப்ப்டித் தான் எழுத வருமோ??

இதெல்லாம் தூக்கி சாப்பிட்ற மாதிரி வந்திருக்கும் சமீபத்திய கற்பனை.

ஆத்தி..ஆத்தி..ஆத்தி. அதில்

“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா?” என்று கவிஞர் கேக்கிறார்.

வெள்ளாவியில வச்சி வெளுத்தா இன்னா ஆகும்?? சரி.. நமக்கு எதுக்கு அந்த வம்பு??

அது சரி … தலைப்பு ஏதோ.. அடைந்தால் மஹாதேவியை உல்டா பன்னி எழுதின மாதிரி இருக்கு. அதைப் பத்தி மூச்சே விடலை.
ஓகே..ஓகே.. வந்துட்டேடேடேன்ன்ன்ன்ன்ன்…

இதெல்லாம் டூப்பு… நான் தான் டாப்பு என்று சொல்ற மாதிரி ஒரு கவிஞர் கற்பனை ஓடுது.

ஒரு பெண் ஒரு ஆணை அசைப்படரா.. (எம்ஜிஆர் படத்து சீன் மாதிரி). உன்னை அடையனும் இல்லையேல் சாகனும். இதெல்லாம் எல்லாரும் அடிக்கிற டயலாக் தானே! இந்த நபர் கொஞ்சம் மேலே போறார்.

சாகிற மனுஷி எதை குடிச்சி சாவா? விஷம் தானே.. விஷம் குடிச்சி சாகுற மாதிரி எழுதிட்டா சாதாரண கவிஞர்.

 கவிச் சக்கரவர்த்தி எழுதினா எப்படி இருக்கும்? அமிர்தம் குடிச்சே செத்துப்போவேன் என்கிறார். ஆத்தி…ஆத்தி..எம்புட்டு புளுகு..)

அமிரதம் சாப்பிட்டா சாவே கிடையாது..அதை குடிச்சுட்டு சாவேன்னு சொல்ற அந்த கிறுக்கி யாருன்னு நீங்க தெரிஞ்ச்சிக்க வேணாமா??

சூர்ப்பனகை.

ஹீரோ???????

ராமன் தான்

ராமனைப் பாத்து கிறங்கும் இடத்தில் கம்பர் போட்ட பிட்டு இது..

ராமனோட அகன்ற மார்பைப் பாத்தாளாம் சூர்ப்பனகை. அப்படியே தழுவனும் இல்லாட்டி அமுதம் சாப்பிட்டாவது சாவனும் ன்னு அந்த சிச்சுவேஷனை எழுதுறார் நம்ம கம்பர்

பாட்டு இதோ:

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்குஇனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்.

நாளைக்கு வேற ஏதாவது கலாய்க்கலாம்..