இப்படி சொன்னவுடன் காதலியின் பளிங்கு மாதிரியோ, கண்ணாடி மாதிரியோ இருக்கிற கண்ணத்தில் போய் மெய்யாலுமே முகம் பாக்க போயிடாதீங்க.. இந்த காலத்து பொண்ணுங்க அவ்வளவு மேக்கப் போட்டிருப்பாளுக…. நாம எங்கிட்டு போயி முகம் பாக்க??
முகத்தில் முகம் பாக்க இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். பேசாமெ உங்க வெப் கேமிராவை கொஞ்சம் உத்துப் பாத்தாலே போதுமே!! சரி அதுவும் இல்லையா?? இருக்கவே இருக்கு, மொபைல் கேமிரா. Self Shot அடிக்கிற வித்தை தான் இப்பொ எல்லா டப்பா ஃபோனும் தான் செய்யுதே?? உங்க மொகத்தெ நீங்களே பாத்துகிடுங்க..
25000 போட்டு வாங்கின Samsang Galaxy Tab என்னென்ன வித்தைகள் செய்யும் என்ற கேள்விக்கு என் பையன் சொன்ன பதில்: இதெ வச்சி மொகம் பாத்து ஷேவிங் செஞ்சிக்கலாம் என்கிறான். 5 ரூபா கண்ணாடியோட technically advanced costly replacement (சார்ஜ் செய்ய மறந்தால் அதுவும் அம்பேல் தான்!!)
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய் என்கிறது ஒரு தத்துவம். அப்படிப் பாத்தா, சூர்யா கல்யாணத்துக்கு முன்னாடி அம்புட்டு ஆம்பிளைப் பசங்களும் ஜோதிகா ஆயிருக்கனுமே!!! அல்லது இப்பொ பசங்க எல்லாம் தமண்ணாவாவா மாறிட்டாக?? ஆக… ஆகி விடுவது என்றால்… உணர்வில் அப்படி..
பாரதியும் அப்படித்தான். கண்ணனின் காதலியாய் மாறி கண்ணம்மாவாய் அவதாரம் எடுத்தார். ஆண்டாளும் இதே வகை தான். மதுரையில் கிருஷ்ண பகவானின் நாயகியாய் தன்னை பாவித்தபடி வாழ்ந்து நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று பெயரே பெற்றார். இப்போதைய சாமியார்கள் பார்வைமட்டும் (கதா) நாயகிகளின் முகம் நோக்கி ஓடுதே? இதுவும் நாயகி பாவமாக்கும் முயற்சியோ?? யாருக்குத் தெரியும்? (மதுரைக்கு சோதனை வருவது புதுசா என்ன??)
ஒருவரின் முகத்தைப் பாத்து ஆளு எப்படி என்று எடை போடும் கலை, வர்த்தக நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு அத்துப்படியாய் இருக்கும். ஆனால் பெரும் ஜமீன் பரம்பரையாய் இருந்தாலும் ரொம்பவும் சிம்பிளான உடை உடுத்தும் மக்கள் கோவை பகுதியில் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று படுகிறது. அவர்கள் முகம் பார்த்து ஆள் எப்படி என்று எல்லாம் எடை போட்டுவிட முடியாது.
ஒரு சின்ன கார் வைத்திருப்பவன் செய்யும் பந்தாவே எக்குதப்பா இருக்கும் இந்தக் காலத்தில், பத்து பதினைந்து லாரி, ஓரிரு கல்வி நிறுவனங்கள் நடத்தும் அதிபரின் எளிமை பாத்து அரண்டு போய்விட்டேன். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
லைலா மஜ்னு காதல் பற்றி பேசாத ஆட்களே இருக்க மாட்டார்கள். காதலில் இதயத்தை இடம்பெயர்த்த மூத்த முதல் காதலர்கள் அவர்கள். ஒரு விசாரனை வருகிறது. கேள்வி லைலாவை நோக்கி, “உன் பெயர்?”
லைலாவின் பதில்: மஜ்னு.
மஜ்னுவிடம் மறுபடியும் அதே கேள்வி.
பதில்: லைலா.
ஒருவருக்குள் ஒருவர் மாறி மாறி வாழும் காதல் சரித்திரம் அது.
முகத்தில் மலர்ச்சி காதலில் தான் வருமா? கடவுளிடம் அப்படி இருக்காதா? கடவுள் சன்னதியில் சமீபத்தில் நடந்த நிகழ்வு. திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாய் அரச்சனை யார் பேருக்கு என்ற கேள்விக்கு நாம பெரிய்ய லிஸ்ட் தருவோம் (நட்சத்திரம் ராசி சகிதமாய்… உங்களுக்கு கண்டது எல்லாம் ஞாபகத்துலெ இருக்கு.. இந்த நட்சத்திரம் மட்டும் ஏன் மனசிலெ நிக்க மாட்டேங்குது என்ற என் மனையாளின் திட்டும் மறுபக்கம்)
ஒரு பக்தர் சொன்னது மட்டும் என்னை உற்றுப் பார்க்க வைத்தது. ஓர் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக அர்ச்சனை செய்யுங்கள் என்றார். (ஊரில் நல்லவர்கள் அங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்… நம்ம கண்ணுக்கு அப்பப்பொ தான் தென்படுகிறார்கள்). ஊர் மக்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் நானும் மகிழ்வாய் இருக்க முடியும் என்ற உயரிய எண்ணம்.
நாமளும் தான் தினமும் எத்தனையோ முகத்தெப் பாக்கிறோம். நமக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியாது. ஆனா கம்பர் பார்வை மட்டும் வித்தியாசமா இருக்கும். எந்த எடம் தெரியுமா? ராவணனின் அரண்மனை. இழுத்து வரப்பட்ட நிலையில் அனுமன். பத்து தலையையும் பதறாமல் பார்க்கிறான் அனுமான். ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் தெரிகிறதாம்.
ஒரு முகம் தன்னோடு வேலை செய்யும் தேவர்களுடன் அரசியல் பேசியதாம். சில முகங்கள் மந்திராலோசனை நடத்தியதாம். ஒரு முகம் தீய சிந்தனையில் இருந்ததாம். அட… ஒரு முகம் சீதை முகம் மாதிரி இல்லெ இருக்கு!!!.. இது எப்படி இருக்கு??
இராவணன் நினைப்பில் சதா சர்வகாலமும் சீதை இருப்பதால் அவனின் ஒரு முகம் சீதை முகம் போல் ஆகிவிட்டது என்கிறார் கம்பன். ஒரு வேளை அனுமன் கூட, எப்பவுமே சீதையை மீட்பதில் குறியாய் இருந்ததால் அனுமன் கண்ணுக்கு இப்படி படுகிறதோ.. இருக்கலாம்.
நம் மனசிலும் இப்படியான பத்து முக சிந்தனைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முறையாவது நல் சிந்தனைகளை ஒருமுகப் படுத்த முயற்சிக்கலாமே!!!
இதோ கம்பன் பாடல் வரிகள்:
தேவரொடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒருமுகம் முயல
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில
பூவை சானகி உரவொளி ஒரு முகம் பொருந்த
என்ன… ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி பாட்டு ஞாபகம் வருதா?