முகத்தில் முகம் பார்க்கலாம்…


இப்படி சொன்னவுடன் காதலியின் பளிங்கு மாதிரியோ, கண்ணாடி மாதிரியோ இருக்கிற கண்ணத்தில் போய் மெய்யாலுமே முகம் பாக்க போயிடாதீங்க.. இந்த காலத்து பொண்ணுங்க அவ்வளவு மேக்கப் போட்டிருப்பாளுக…. நாம எங்கிட்டு போயி முகம் பாக்க??

முகத்தில் முகம் பாக்க இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். பேசாமெ உங்க வெப் கேமிராவை கொஞ்சம் உத்துப் பாத்தாலே போதுமே!! சரி அதுவும் இல்லையா?? இருக்கவே இருக்கு, மொபைல் கேமிரா. Self Shot அடிக்கிற வித்தை தான் இப்பொ எல்லா டப்பா ஃபோனும் தான் செய்யுதே?? உங்க மொகத்தெ நீங்களே பாத்துகிடுங்க..

25000 போட்டு வாங்கின Samsang Galaxy Tab என்னென்ன வித்தைகள் செய்யும் என்ற கேள்விக்கு என் பையன் சொன்ன பதில்: இதெ வச்சி மொகம் பாத்து ஷேவிங் செஞ்சிக்கலாம் என்கிறான். 5 ரூபா கண்ணாடியோட technically advanced costly replacement (சார்ஜ் செய்ய மறந்தால் அதுவும் அம்பேல் தான்!!)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய் என்கிறது ஒரு தத்துவம். அப்படிப் பாத்தா, சூர்யா கல்யாணத்துக்கு முன்னாடி அம்புட்டு ஆம்பிளைப் பசங்களும் ஜோதிகா ஆயிருக்கனுமே!!! அல்லது இப்பொ பசங்க எல்லாம் தமண்ணாவாவா மாறிட்டாக?? ஆக… ஆகி விடுவது என்றால்… உணர்வில் அப்படி..

பாரதியும் அப்படித்தான். கண்ணனின் காதலியாய் மாறி கண்ணம்மாவாய் அவதாரம் எடுத்தார். ஆண்டாளும் இதே வகை தான். மதுரையில் கிருஷ்ண பகவானின் நாயகியாய் தன்னை பாவித்தபடி வாழ்ந்து நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று பெயரே பெற்றார். இப்போதைய சாமியார்கள் பார்வைமட்டும் (கதா) நாயகிகளின் முகம் நோக்கி ஓடுதே? இதுவும் நாயகி பாவமாக்கும் முயற்சியோ?? யாருக்குத் தெரியும்? (மதுரைக்கு சோதனை வருவது புதுசா என்ன??)

ஒருவரின் முகத்தைப் பாத்து ஆளு எப்படி என்று எடை போடும் கலை, வர்த்தக நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு அத்துப்படியாய் இருக்கும். ஆனால் பெரும் ஜமீன் பரம்பரையாய் இருந்தாலும் ரொம்பவும் சிம்பிளான உடை உடுத்தும் மக்கள் கோவை பகுதியில் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று படுகிறது. அவர்கள் முகம் பார்த்து ஆள் எப்படி என்று எல்லாம் எடை போட்டுவிட முடியாது.

ஒரு சின்ன கார் வைத்திருப்பவன் செய்யும் பந்தாவே எக்குதப்பா இருக்கும் இந்தக் காலத்தில், பத்து பதினைந்து லாரி, ஓரிரு கல்வி நிறுவனங்கள் நடத்தும் அதிபரின் எளிமை பாத்து அரண்டு போய்விட்டேன். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

லைலா மஜ்னு காதல் பற்றி பேசாத ஆட்களே இருக்க மாட்டார்கள். காதலில் இதயத்தை இடம்பெயர்த்த மூத்த முதல் காதலர்கள் அவர்கள். ஒரு விசாரனை வருகிறது. கேள்வி லைலாவை நோக்கி, “உன் பெயர்?”
லைலாவின் பதில்: மஜ்னு.
மஜ்னுவிடம் மறுபடியும் அதே கேள்வி.
பதில்: லைலா.
ஒருவருக்குள் ஒருவர் மாறி மாறி வாழும் காதல் சரித்திரம் அது.

முகத்தில் மலர்ச்சி காதலில் தான் வருமா? கடவுளிடம் அப்படி இருக்காதா? கடவுள் சன்னதியில் சமீபத்தில் நடந்த நிகழ்வு. திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாய் அரச்சனை யார் பேருக்கு என்ற கேள்விக்கு நாம பெரிய்ய லிஸ்ட் தருவோம் (நட்சத்திரம் ராசி சகிதமாய்… உங்களுக்கு கண்டது எல்லாம் ஞாபகத்துலெ இருக்கு.. இந்த நட்சத்திரம் மட்டும் ஏன் மனசிலெ நிக்க மாட்டேங்குது என்ற என் மனையாளின் திட்டும் மறுபக்கம்)

ஒரு பக்தர் சொன்னது மட்டும் என்னை உற்றுப் பார்க்க வைத்தது. ஓர் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக அர்ச்சனை செய்யுங்கள் என்றார். (ஊரில் நல்லவர்கள் அங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்… நம்ம கண்ணுக்கு அப்பப்பொ தான் தென்படுகிறார்கள்). ஊர் மக்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் நானும் மகிழ்வாய் இருக்க முடியும் என்ற உயரிய எண்ணம்.

நாமளும் தான் தினமும் எத்தனையோ முகத்தெப் பாக்கிறோம். நமக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியாது. ஆனா கம்பர் பார்வை மட்டும் வித்தியாசமா இருக்கும். எந்த எடம் தெரியுமா? ராவணனின் அரண்மனை. இழுத்து வரப்பட்ட நிலையில் அனுமன். பத்து தலையையும் பதறாமல் பார்க்கிறான் அனுமான். ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் தெரிகிறதாம்.
ஒரு முகம் தன்னோடு வேலை செய்யும் தேவர்களுடன் அரசியல் பேசியதாம். சில முகங்கள் மந்திராலோசனை நடத்தியதாம். ஒரு முகம் தீய சிந்தனையில் இருந்ததாம். அட… ஒரு முகம் சீதை முகம் மாதிரி இல்லெ இருக்கு!!!.. இது எப்படி இருக்கு??

இராவணன் நினைப்பில் சதா சர்வகாலமும் சீதை இருப்பதால் அவனின் ஒரு முகம் சீதை முகம் போல் ஆகிவிட்டது என்கிறார் கம்பன். ஒரு வேளை அனுமன் கூட, எப்பவுமே சீதையை மீட்பதில் குறியாய் இருந்ததால் அனுமன் கண்ணுக்கு இப்படி படுகிறதோ.. இருக்கலாம்.

நம் மனசிலும் இப்படியான பத்து முக சிந்தனைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முறையாவது நல் சிந்தனைகளை ஒருமுகப் படுத்த முயற்சிக்கலாமே!!!

இதோ கம்பன் பாடல் வரிகள்:

தேவரொடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒருமுகம் முயல
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில
பூவை சானகி உரவொளி ஒரு முகம் பொருந்த

என்ன… ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி பாட்டு ஞாபகம் வருதா?

காதலில் ஜெயிப்பது எப்படி?


காதலில் சொதப்புவது எப்படி? என்று அருமையான படம் வந்தது. இன்றைய காதலின் உண்மை நிலவரத்தை தோலிருச்சி (எதை எதையோ உரிச்சியும்) காட்டியது. காதலில் சொதப்புகிறார்களோ இல்லையொ, காதலிப்பவர்களின் சொதப்பல் தான் மிகப் பெரிய சொதப்பல்.

காதல் எவ்வளவு சிரமமோ, அதை விட அதனைச் சொல்வது அல்லது வெளிப்படுத்துவது. ஏன் இப்படி இவ்வளவு சிக்கல்கள்? காதல் மலர்வதற்கு எந்தவித காரண காரியங்களும் தேவை இல்லை. இப்படி ஏதும் காரண காரியங்களுக்காய் காதலித்தால் அதனை புராஜக்ட் என்று அழைக்கலாம் என்று ஓகே ஓகே (ஒரு காதல் ஒரு கண்ணாடி) படம் சொல்லித் தருகிறது. கவுக்கிறது என்ற கொச்சையான சமாச்சாரத்தை மங்களகரமாய் மொழி பெயர்த்து Project என்கிறார்கள்.

காதலை காதலியிடம் தெரிவிப்பது எவ்வளவு சிரமமோ, அதே சிரமம் பெற்றோர்களிடம் அவர்கள் தம் காதலையும் தெரிவிப்பது. எனக்கு அந்த மீடியேட்டர் வேலை வந்து சேர்ந்தது. (புரோக்கர் என்பதை எப்படியெல்லாம் மாத்திச் சொன்னாலும்… அதை சொல்லாமல் இருக்க முடிவதில்லை). பையனின் அப்பாவிடம் நைஸாக ஆரம்பித்தேன்.

உங்க பையனுக்கு ஏதோ லவ் மேட்டர் இருக்கிறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்ககளே??
கிடைத்த பதில்: “ஆமா…. அவர்களை நம்பி நாம் இருக்கும் போது அவர்கள் நம் அனுமதி கேப்பாங்க என்று எதிர் பாப்பதே தப்பு”. என்ன நிதர்ஷனமான யதார்த்தமான அப்பா…!!!.
சில ஆண்டுகள் கழிந்தன. அதே அப்பாவிடம் கேட்டேன்: மருமகள் எப்படி?

“இந்த மாதிரி மக கெடைக்க ஆண்டவன் அருள் இருந்திருக்கனும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஊரிலிருந்து ஒரே ஜாதி ஒரே மதம் பாத்து பெண் எடுத்திருந்தாலும் கூட இப்படி அமைந்திருக்குமா தெரியவில்லை..” இப்படிப் போனது அவர் பதில். இது ஜெயித்த காதல் கதை.

இன்னொரு வீட்டில் நடந்த கதை. தங்கையின் கல்யாணத்திற்கு, அண்ணன் தன் கல்லூரித் தோழர் தோழிபடை பட்டாளத்துடன் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தோழி மட்டும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்த்து வருகிறாள். கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதை கவனிக்கத் தவறவே இல்லை. விடைபெறும் நேரம் வந்தது. தோழி சாதாரனமாய் ஆசி வாங்க அம்மா காலில் விழுந்தாள். நம்மாளு சொன்ன கடைசி வார்த்தை, “அம்மா இது தாம்மா நம்ம மாட்டுப் பொண்ணு..”. ஏதாவது மறுப்பு சொல்ல முடியுமா? அம்மாவாலும்… யாராலுமே!!!

அதற்கு நேர் மாறாக நாள் நட்சத்திரம் பற்பல பொருத்தம் என்று தடபுடலாக நடந்த ஒரு கல்யாணம். இரண்டு வருடத்திற்குள், தன் IT துறை கணவன் அடிப்பதாய் மனைவி புகார் சொன்ன போது நொந்து போனார்கள் பெற்றோர். “பேசாமல் நீயும் யாரையாவது லவ் பண்ணித் தொலெச்சிருக்கலாமே” என்ற அளவுக்கு வந்து விட்டது நெலமை.

ஜெயித்த காதல் ஒரு பக்கம். தோற்ற காதல் பல. தன் காதலி ஒரு கிளியோபாட்ரா என்று சொக்கி விழுந்தவன் அவன். ஓரிரு வருடங்களில் அந்த காதலி 90 கிலோவை நெருங்க, காதலன் முகம் தொங்கிப் போனது.

ஆட்டத்தோடு பாட்டுப் பாடும் ஜாலியான ஆசாமி இன்னொருவன். காதல் அதில் தான் தொடக்கம். கல்யாணத்தின் பின் ஆட்டமும் இல்லை. பாட்டும் காணோம். மனுஷன் நொந்து போய் குடியில் திளைக்க, வருடங்கள் உருண்டன. தன் கணவர் உயிரோடு இருந்து தொல்லை தருவதை விட இறப்பதே மேல் என்றது அந்தக் காதலி. விதவை ஆவதை விரும்பி ஏற்ற அந்த மாஜி காதலி..ஆமா.. காதல் ஏன் இப்படி ஆச்சி??

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நண்பர்கள் பெரும்பாலும் தங்களுக்குள் மச்சி (மச்சான்) என்றோ, மாப்பிள்ளை என்றோ அழைத்துக் கொள்வர். உண்மையில், நண்பர்களுக்குள் அப்படி உறவு அமைவதும் உண்டு. என் கல்யாணத்திற்கு வந்த ரெண்டு நண்பர்கள் ஒன்றாய் பஸ்ஸில் போகும் போதே இப்படி தங்கை பற்றிச் சொல்ல விரைவில் எனக்கு கல்யாணப் பத்திரிக்கை வந்தது.

சரீ..இதெல்லாம் சரி… தலைப்பு என்ன? காதலில் ஜெயிப்பது எப்படி? சொல்லிட்டு காதல் கத்தரிக்காய் மட்டும் சொல்லிட்டு வந்தா எப்படி? அது ஒண்ணுமில்லை சார். கிரேஸி மோகனின் ஒரு நாடகம் DVD ல் பாத்தேன். “கிரேஸி கிஷ்கிந்தா” அதிலும் ராமாயணம் வந்தது.. கிரேஸியின் டிராமாவில் மட்டும் தான் இராமாயணம் வருமா? நம்ம போஸ்டிங்லெயும் வருமே!!!

காதலித்துப் பார் வருஷங்கள் நிமிஷமாகும். நிமிடங்கள் வருஷங்களாகும். இது வைரமுத்துவின் பார்முலா. காதலில் ஜெயிக்க கம்பர் ஒரு பார்முலா சொல்கிறார். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க..

காதலில் விழுந்தவர்களின் கண்களுக்கு காதலி மட்டும் தான் காதலியாய்த் தெரிவாராம். மற்றவரெல்லாம் ஆண்கள் மாதிரி தெரிய வேண்டுமாம். என்ன நம்ப மாட்டீங்களா..?? இதோ சற்றே விரிவாய்..

இராவணனுக்கு சீதை மேல் காதல். (அடுத்தவன் பொண்டாட்டி மேலே வருவது மோகம் தானே?? காதலா என்ற கேள்விக்கு பதிலை வேறு என்றைக்காவது வைத்துக் கொள்வோம்.) நாகர்கள் வழும் பாதாள லோகம் தொடங்கி பிரம்மன் வாழும் சத்தியலோகம் வரைக்கும் அதன் இடைப்பட்ட எந்த இடத்திலும் மயில் மாதிரி பிகருங்க இருந்தாலும் அவர்கள் எல்லாம் காதல் கொண்டவர்களின் கண்களுக்கு ஆடவராகத் தெரிந்தார்களாம்.

சரி இப்பொ Test வைக்கலாமா?? உங்க காதலியை மனசுலெ நெனைச்சுக்குங்க.. தமண்ணா முதல் திவ்யாபாலன் ஹன்சிகா அமலாபால் இப்படி யாரைப் பாத்தாலும் ஆண்களாக காட்சி தர வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் காதலில் ஜெயிக்கிறீங்க…

அப்படியே அந்த குஷி மூடில் பாட்டையும் படிச்சிருங்க…:

ஏகநாயகம் தேவியை எதிர்த்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.

அப்புறம் வரட்டா..???

[இந்தப் பதிவிற்கு புதிய நடிகைகளின் பெயர் தேவை என்று சொன்னவுடன், இது போதுமா? என்று பெயர் தந்து உதவிய மதுரை மைந்தன் ருப்பா கேசவ ராஜாவுக்கு என் சிறப்பு நன்றிகள்].

அது போல் வருமா? இந்தப் பொன்னாள்?


ஆண் குரல் மட்டும் உருகி உருகிப் பாடும் இந்தப் பழைய பாட்டு, தேன்கிண்ணம் போன்ற நிகழ்ச்சிகளில் கண்டிப்பாய் இடம் பெறும். ஆனால் கூடவே வரும் பெண் குரல், வெறும் ஹம்மிங்க் மட்டுமே செய்து கிரங்க வைக்கும் பாடல் அது.. நாம எல்லாத்தையும் உட்டுட்டு அந்த “போல்”… அதை மட்டும் வச்சிட்டு காயை நகர்த்துவோம்.

“அரசியல்லெ இதெல்லாம் சகஜமப்பா” என்று டயலாக் நாம் சொல்லுவோம்.. ஆனா இதுக்கு, முன்னாடி ஏதாவது ஏடாகூடமா ஒரு சேதி நடந்திருக்கனும்.. அப்பத்தான் இந்த சகஜ டயலாக்கை சகஜமா சொல்ல முடியும். சமீபத்திய நிகழ்வு இது தான். ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கியவர் கட்சி மாறிவிட்டார். அடுத்த கட்சிக்குப் போயிட்டா ஊழல் கரைஞ்சிடுமா?? ஆளை உட்ட கட்சி கேக்குது.. கங்கையில் சின்ன ஓடை வந்து கலந்தா, அதுவும் புனிதம் ஆவது போல் என்று பதில் சொல்லுது வரவுக் கட்சி.. நமக்கெதுக்கு கட்சி விவகாரம்?? அந்த “போல” இங்கேயும் வந்திடுச்சா?? அடுத்த கட்சிக்கு இல்லெ இல்லெ காட்சிக்கு.. சாரி ஒரு கதைக்குப் போவோம்.. (இது தெரிஞ்ச கதை தானே என்பவர்கள் அடுத்த போலவுக்குத் தாவலாம்).

கங்கைக்கரையில் ஒரு முதியவர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். தன் மனைவியை கங்கை அடித்துக் கொண்டு போகிறது, என்பதை தெளிவாய்த் தெரிவிக்கிறது அந்த அவலக்குரல். காப்பாற்றப் போனவர்களை அவரே தடுக்கிறார். “ஒரு சாபமமிருக்கு. பாவம் செய்யாத நபர் தான் தன் மனைவியை காப்பாற்ற முடியும்” என்கிறார்.

“இல்லாட்டி… பாவம் செய்தவர் தலை தண்ணீரில் கரைந்து விடும்”. கதை கேட்டு கூட்டமும் கரைந்து விடுகிறது. ஒரு மீனவ இளைஞன் ஜம்மென்று குதித்து கிழவியை கரை சேர்த்தான்.. (இந்த இடத்தில் கிழவி என்று சொன்ன காரணம்… நீங்க பாட்டுக்கு படத்து சீன் மாதிரி தண்ணியை உறுஞ்சும் காட்சி வரும்னு ஜொள்ளு விடாமல் இருக்கத் தான்.)

கூட்டம் வியப்போடு கேட்டது. என்னப்பா?? ஒரு பாவமும் செய்யலையா நீ?? பதில் தெம்போடு வந்தது… ஹ..ஹ…ஹ…. செய்திருந்தேன்.. கங்கையில் மூழ்கினதாலே எல்லாமெ போயிடுச்சி போலெ என்று முடித்தார். (அந்த “போல” அங்கும் ஆஜர்)

இங்கிட்டியும் அங்கிட்டியும் சுத்திப் பாத்தா.. அங்கே வடிவேலானந்தா நிற்கிறார். அவர் பக்கத்திலே யாரோ போலீஸ் மாதிரி தெரியுதே?? பார்த்திபனா இருக்குமோ?? சே..சே.. அவர் பக்கத்தில் இருந்தா வடிவேல் முகத்தில் சிரிப்பு ஏது?? ஒரே அவஸ்தை தானே.. (ஆனா நமக்கு செமெ ஜாலிதான், அந்தக் கூட்டணியால்).. வேற யாரு?? அட நம்ம டைரக்டர் கம் நடிகர் வெட வெட மனோபாலா தான். வ.வே லேசாக தட்டுகிறார் அவர் நெஞ்சை. ரொம்ப பீத்திக்காதெ.. உன்னெயெ தப்பா போலீஸ் வேலைக்கு சேத்தாக போல… (போல வந்ததால் நாம் வந்த வேலை முடிந்தது.. நகர்வோம்)

சொந்தகதை சொல்லலைன்னா எனக்கு தூக்கம் எப்படி வரும்?? என் வீட்டுக்காரியும் அப்பப்பொ என்னையெ கேப்பா.. உங்களை தப்பா இஞ்ஜினியர் வேலைக்கு சேத்துடாங்க போல. பேசாமா தமிழ் வாத்தியாரா போய் பரமக்குடியிலேயே இருந்திருக்கலாம்…(கம்பராமாயணத்தை விடாமல் இருப்பதை குத்திக் காட்டுறாப்பலெ..)

காட்டுறாப்பலெ… வந்தாப்லெ, போனாப்லெ, சொன்னாப்லெ என்ற வார்தைகள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனா யூஸ் செஞ்சிருக்கீங்களா.. நான் அடிக்கடி யூஸ் செஞ்சிருக்கேன். எப்பொ இதை யூஸ் செய்ய முடியும் தெரியுமா?? உங்களோடு எப்போதோ கூட படித்தவர்.. நண்பர் தான். இப்போது உயர் பதவியில் இருக்காப்லெ. இருக்கிறான் என்று உரிமையுடன் சொல்வதா? அல்லது இருக்கிறார் என்று மரியாதையுடன் சொல்வதா என்ற குழப்பமா?? அந்த “பொலெ” ஐ சேர்த்தா பிரச்சனைக்கு குட் பை. (அது வீட்டுக்காரி பேச்சுக்கும் சொல்லலாம் என்பது சீக்ரட்டான சேதி)

அப்படியே ஊர்க்கதையும் பாப்போமே.. பரமக்குடியில் அந்தக் கால தியேட்டர்களில் படம் பாக்க, பெண்களில் இடுப்பில் வரும் குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.. தியேட்டர் வரை நடந்து வந்து, டிக்கட் எடுக்கும் நேரத்தில் மட்டும் அம்மா, பெரியம்மா, சித்தி, பக்கத்து வீட்டு அக்கா இப்படி யார் இடுப்பாவது எனது சவாரிக்கு தோதாக கிடைக்கும். ஓசியில் படம் பாத்துட்டு, இடைவேளையில் முறுக்கு, குச்சி ஐஸ் சாப்பிட்டு… வாவ்.. அந்த சந்தோஷம் போல இப்பொ வருமா?? இப்பொ தியேட்டர் என்னமோ ஏசி தான்.. ஆனா மனசுலெ ஏன் இத்தனை வெப்பம்??

அந்தக் கால நடிகைகளில் அபிநய சுந்தரி சரோஜா தேவியை தன் மகள் போல்.. மக படம் போட்டிருக்காங்க.. போய் பாக்கணும்.. என்று பெரியம்மாக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று இப்படி எந்த நடிகையையாவது இப்படி கூப்பிட மனசு வருமா? ஆரம்ப கால சுஹாசினி, ரேவதி வேண்டுமானால் சொல்லலாம் போலெ… இப்பொ சமீபத்ததிய நடிகைகளில் சினேகா..?? ஓகே வா???

உங்க மூக்கு சூப்பரா தமண்ணா மூக்கு போல இருக்கு… இப்படிச் சொன்னா என்ன அரத்தம். கொஞ்சம் இலக்கணப் பக்கம் போனால், உவமை என்று சொல்லுவாய்ங்க.. ஐஸ் வைக்க பொய் சொன்னா, அது உலகத்திலெ இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்றது (இல்பொருள் உவமை அணி); சாதாரணமா நடக்கிறதை இதுக்காகவே நடக்குது போலெ என்று சொல்வது என்ன வகை? (தற்குறிப்பேற்று அணி – இது சரி தானா?? தமிழ் அறிஞர்கள், தவறு என்றால் மன்னிக்கவும்).. இந்த நேரத்தில் என் மனசுல பட்டதை சொல்லியே ஆகனும். எனக்கு தமண்ணா ஓகே.. ஆனா அந்த மூக்கு தான் கொஞ்சம் ஒதைக்குதே..? ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு??

சரி இத்தனை போல தேடிய பிறகு எங்கே முடிக்க?? வேறு எங்கே.. கம்பராமாயணம் தான்.. கம்பர் உவமை சொல்றதிலெயும் மஹா கெட்டிக்காரர்.. நம்ம லெவலுக்கு தமண்ணாவை வச்சி இவ்வளவு எழுதினா…, பக்தி சிரத்தையோட ராம காவியம் படைத்தவர்… அவர் கண்ணுக்கு உவமை வந்து கொட்டாதா என்ன?? வந்ததே..

தானா தினசரி நடக்கும் செயல்… உலகத்திலெ இல்லாத ஒண்ணு… ரெண்டையும் காக்டெயிலா கலந்து கலக்கி நம்மை மகிழ்விக்கிறார் கம்பர். இலங்கையில் அனுமன் பாத்த முதல் நாள் மாலை நேரம். சூரியன் மறைகிறது.. அது கம்பன் பார்வையில் வேறு மாதிரி தெரியுது.
எப்பொவுவே கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியன் அன்று வடக்கில் உதித்து தெற்கில் மறைஞ்சதாம்.. அது சரி எதுக்கு இப்படி?? ராவணன் தவத்தோட பயன் எல்லாம் சீதையைக் கவர்ந்ததால் போய்விட, இனி அழியப் போகிறான் என்பது சூரியனுக்கு தெரிஞ்சு போச்சாம். ராவணன் 20 கைகள், பத்து தலை வச்சி, ஐந்து புலங்களையும் அடக்கி பெற்ற தவம் வீனாச்சே என்று பன்ச் வேறு வைக்கிறார் கம்பர்..

தடக்கை நால் ஐந்து பத்துத் தலைகளும் உடையான் தானே
அடக்கி ஐம்புலங்கள் வென்று தவப்பயன் அறுதலோடும்
கெடக் குறியாக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கைசெல்லும் பரிதி வானவனும் ஒத்தான்.

இனிமே எதைப் பாத்தாலும் அல்லது யாரைப் பாத்தாலும் வேறு ஏதாவது போல யோசிக்க முடியுமான்னு பாருங்க..

நீங்க அசப்பில் தமண்ணா மாதிரி…


நீங்க அசப்பில் தமண்ணா மாதிரி…

இப்படி நீங்க யார் கிட்டெயாவது சொல்லிப் பாருங்க… உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.. (கொஞ்ச நாளுக்குத்தான் இந்தப் பெயரை யூஸ் செய்யலாம். அப்புறம் ஆள் பேரை மாத்தி அதே புளுகு புளுக வேண்டியது தான்).

நாம பொதுவா எப்பொ சந்தோஷமா இருப்போம் தெரியுமா?? யாராவது நம்மளை பத்தி ஏதாவது சொல்லனும் நல்ல விதமா…அதே ஏதாவது வில்லங்கமா சொன்னாங்க…அம்புட்டு தான்…அன்னெக்கி பூரா மூட் அவுட்… அவங்களுக்கும் அவங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கும்..

துணிமணி நகை நட்டு இவை எல்லாம் அந்த எதிர்பார்ப்பின் விரிவு தானோ… ஒரு வகையில் ஃபேஸ்புக்கில் எழுதுவது கூட அதன் extension மாதிரி தான். அதுவும் ஒருத்தரோட கம்பேர் செய்து சொல்லிட்டா தாங்கவே முடியாது நம்மாலெ…

நாம ஏதாவது எசகு பிசகா சொன்னா… அண்டப் புளுகு…ஆகாசப் புளுகு என்பார்கள்… ஆனா அதையே கவிஞர்கள் சொன்னா… தலையில வச்சி ஆடுவாங்க…

எப்பொவுமே தமிழ் பாட்டு பக்கமே தலை வச்சி படுக்கும் நாம் கொஞ்சம் மாறுதலா வடக்கே தலை வச்சி படுத்துப் பாக்கலாமே…

ஜேசுதாஸ் பாடிய ஜப் தீப் ஜலே ஆனா பாட்டில் வரும் வரிகளில், நீ வந்த பிறகு தான் நட்சந்திரங்களே வருதுங்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொருவர் காதலியின் கையைப் பாக்கிறார்… மெஹந்தியில் சிவந்திருக்காம்..(அது இல்லாமலும் சிவப்பு தானே??) ஆனா அது அந்த சிவப்பு இல்லையாம்.. என் இதயம் வடிக்கும் ரத்தமாம்.. இது எப்படி இருக்கு?? (அச்சா சிலா தியா துனே)

தூனே காஜல் லகாயா பாடலில் உன் கண்ணில் கரு மை இட்டால், பகல் கூட ராத்திரி அயிடுமடி என்கிறார் மற்றவர்.

கஜல் பாடல்கள் போல் தமிழிலும் பல பாட்டு இருக்கு… வைர முத்து அதை எல்லா வாயிலும் கொண்டு சென்றவர். சாம்பிளுக்கு ஒரு பாட்டு போடலாமா??

உன் வெள்ளிக் கொலுசொழி வீதியில் கேட்டால்…. அத்தனை ஜன்னலும் திறக்கும்.

நீ சிரிக்கும் போது பௌர்னமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும்

நீ மல்லிகை பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும். …

இந்த மாதிரி நீங்க சொன்னா..உங்களை ஒரு மாதிரியா பாப்பாய்ங்க.. கவிஞருக்கு லைசன்ஸ் இருக்கு இப்படி சொல்லலாம்.

அடப்பாவிகளா.. இல்பொருள் உவமை என்று இதைத் தானே காட்டுக் கத்தல் கத்தி தமிழ் வாத்தியார் சொன்னார்.. அப்பொ மண்டையில் ஏறலையே..

இப்பொ சிம்பிளா சொல்லவா… தமண்ணா சிரிச்சா காது வரை வாய்… காது வரை வந்தா அது வாயா??? அது கார்ட்டூன்.. ஆனா அப்படி சொல்லுவோம்… அப்பொ இ பொ உ அ இனி மறக்காது உங்களுக்கு..

டொய்ங்க்… Hi …
ஒரு Chat Message வருது. யாருன்னு பாத்தா… நம்ம friend கம்பர் தான். Hai… Whats Up பதில் தந்தேன்..

என்ன டாபிக் இன்னெக்கி?

உவமை பத்தி…உங்களை பத்தி சொல்ல இருந்தேன்…அதுகுள்ளே நீங்களே வந்துட்டீங்க….

கம்பர் Offline ஆகி விட்டார்.

சரி நம்ம தொடர்வோம்.. பாரதி மேலெ நல்ல அபிப்பிராயம் வந்து பாரதி தாசன் ஆனார் கனக சுப்புரத்தினம். அவர் மாதிரியே…மாதிரியே சுப்பு ரத்தின தாசன்…ஆகி அதுவே சுரதா ஆன கதை சொல்லிட்டு அப்புறம் கம்பருக்கு போவோமே… ஆமா உவமைக் கவிஞர் சுரதாவை உவமை டாபிக்லெ எடுக்காமெ இருக்க முடியுமா???

இப்பொ கம்பரை பாக்க போவோம்… ஒரு இடத்திலெ கம்பர் தினறுகிறார்.. இதுக்கு உவமையே சொல்றதுக்கு இல்லையேன்னு…எந்த இடம் தெரியுமா?? சீதையை முதன் முதலில் பாத்த இடம் தானே??? அது தான் இல்லை… அந்த ஐயோ..சமாச்சாரம் தான் எல்லாரும் சொல்றாகளே…நாம வேற மேட்டர் பாக்கலாமே??

நம்பிக்கை இல்லாத மனத்தோட வாணர சேனையைப் பாக்கிறார்…பாக்கிறார்…பாக்கிறார்… நம்பிக்கை அப்பவே வந்திருச்சி. ஆமா எப்படி இருந்தது தெரியுமா?? கம்பர் யோசிக்கிறார்.. கடல் ஆழம் மாதிரி… இல்லையே…அதைக் கண்டுபிடிக்கத்தான் Echo Sounder மாதிரி சாதனம் இருக்கே…

இருபது நாள் ராமர் லெட்சுமன் ரெண்டு பேரும் Shitf போட்டு மாத்தி மாத்தி Duty பாத்து… பாத்தால் கூட பாதி கூட்டத்தைத்தான் பாக்க முடியுமாம்… முழுப் படை பத்தி சொல்ல உவமையே இல்லையேன்னு கவலையில் இருக்காராம் கம்பன்..

அடங்க் கொப்புரானே… கம்பண்டா…

அத்தியொப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறுயாதோ பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்போர் எத் திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ

இந்த ரேஞ்ச்சுலே போனா நானும் கம்பராமாயணம் பாதி முடிக்கிறதே பெரிய விஷயம்ன்னு நெனைக்கிறேன்.

நீதி: முடிந்தவரை எவரையாவது பாராட்டுங்கள்… முடியலையா..இந்த மாதிரி நாம எழுதுவதையாவது படிங்க..

தொடருவேன் !!!