நம்பிக்கை… ரொம்ப முக்கியம்…


கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அதான் ஒவ்வொரு வருஷமும் தான் வருதே!! அதுலெ என்ன புதுசா இருக்கு? -ன்னு பாக்கிறீங்களா? அது சரி தான். ஒவ்வொரு வருஷமும் சொல்லி வச்ச மாதிரி பசங்களெ விட பொண்ணுங்க அதிகம் மார்கஸ் வாங்குறாங்களே? ஒரு வேளை மதிப்’பெண்’ என்று இருப்பதால் இப்படி இருக்குமோ! அப்பொ பசங்க அதிகம் மார்க் வாங்க வேறெ வழியே இல்லெ? மார்க்கை இனி ’மதிப்பாண்’ என்று சொல்லி வேண்ணா ட்ரை செய்யலாம்.

இது போக, எங்க ஸ்கூலில் 100க்கு 100 சதவீத தேர்வு என்று முரசு கொட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் நம்ம கண்ணை சுண்டி இழுக்கும். அடுத்த நாளே நம்மை சோகத்தில் ஆழ்த்தும் ‘பரீட்சை தோல்வி.. மணவன்/மாணவி தற்கொலை’ என்பதும் கண்டிப்பாய் வரும். இந்த வருஷம் என்னவோ அது கொஞ்சம் அதிகமானது தான் மன்சுக்குக் கஷ்டமா இருக்குங்க. என்னமோ பிரம்மன் படெச்சதே இந்த பரீட்சை பாஸ் செய்யத்தான் என்ற மாதிர்ல்லெ படுது. ஒரு வேளை ஃபெயில் ஆவதற்க்காகவுமே படைத்திருக்கலாமே.. என்ன நான் சொல்றது?. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கலாமே…

Exam suicide

வாழ்வில் நம்பிக்கை தர அந்தக் காலத்தில் உதயமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. அதற்கும் முன்பு துணிவே துணை என்றும் சொல்லி வார இதழ்கள் வந்தன. [ஆனால் நடிகைகள் துணியே தொல்லை என்று இருப்பது தனிக் கதைங்க]. ”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை வாழ்விலே..” என்று தற்கொலைக்கு முயல்பவரை காப்பாத்தி கரை சேத்த கதை எல்லாம் வந்திருக்கு. இப்பொ அந்த மாதிரியான டோஸ் கெறைஞ்சதினாலே இப்படி இருக்கலாமோ?

vaaz winaiththaal vaazalaam

தற்சமயம் நம்பிக்கையினை யார் சொல்கிறார்களோ இல்லையோ, நகை விளம்பரங்கள் போட்டி போட்டு சொல்லித் தருகின்றன. நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வே காலி என்று பல மனோ தத்துவ நிபுனர்கள் நிருபீத்துள்ளனர். மூன்று நண்பர்கள் சேந்து நம்பிக்கையோட உங்களை ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பிடலாம்..[அது சரி தெரியாமத்தான் கேக்குறேன்..அப்படி செய்றவன் நண்பனா என்ன?]

நீங்கள் தெருவில் வருகிறீர்கள். முதல் நன்பன் (?) சோகமாய், ‘என்னடா மச்சி? ஒடம்பு சரியில்லையா?’ உங்களை கவுக்கும் சதியை ஆரம்பிக்கிறான். இல்லையே என்று சொல்லி அடுத்து பயணம் செய்கிறீகள். ரெண்டாவது ஃப்ரண்ட் வந்து கலாய்க்கிறான். ‘என்ன மாமு, ஆஸ்பத்திரியிலிருந்து வர்ர மாதிரி இருக்கே? என்ன ஆச்சி?’ அப்பவே லேசா ஜுரம் வர ஆரம்பித்திருக்கும். சொல்லாமலேயே கடைசி தோஸ்த் வருவான். உங்கள் வாய், அவனின் கேள்விக்கு முன்பே வரும். ‘காலையிலிருந்தே ஒரு மாதிரியா இருக்கு. ஆஸ்பிடலுக்கு போகணும் வர்ரியாடா?’ இது தான் நம்பிக்கையின் தத்துவம். உங்களை கவுக்க குவாட்டர் கூட வேணாம். இந்த மாதிரி பசங்க ரெண்டு பேரு போதும்.

ஒவ்வொரு பூக்களிலும் என்று ஒரு பாட்டு பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன அந்தக் காலக் கட்டத்தில். இப்படி நம்பிக்கைகளை அள்ளி அள்ளித்தரும் படங்கள் இமேஜ்களாக வாட்ஸ் அப்பில் குவிகின்றன. பாக்கும் பலர், இது ஏதோ அடுத்தவைங்க படிக்கத்தான் இலாயக்கு என்று  பொறுப்பா அடுத்த குரூப்புக்கு பகிர்ந்திட்டு டெலீட் செய்துடுவாங்களோ? [நான் அப்படித்தான் செய்றேன்)

சின்னப் புள்ளையா இருக்கும் போது கடவுள் மறுப்பு கோஷங்கள் பல சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். சரி.. கடவுளை எப்புடி நம்புறது? – இப்படி கேளவி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ”இவங்க தான் உன்னோட அப்பா அம்மா. நம்புறியா?” ”ஆமா..” என் பதில் அது. ”இதெ நம்புறியே, கடவுள் இருக்குன்னா நம்ப மாட்டேங்கிறியே.. நம்புப்பா.. நம்பிக்கை தான் வாழ்க்கை…” அப்பொ எல்லாம் ஒத்துக்க முடியலை. ஆனால் இப்பொ அதை காலம் தான் நம்ப வைத்தது.

Suki sivam
சுகி சிவம் பேச்சில் ஒரு முறை கேட்டது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு சின்னதா வித்தியாசம் இருக்காம். அம்மாவால் தான் நீ பிறந்தாய் என்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அப்பாவால் தான் பிறந்தாய் என்பது அந்த அம்மா ஒருத்திக்குத் தான் தெரியும். [ரொம்ப யோசிக்காதீங்க… எவ்வளவு மோசமான உதாரணம்.. இப்புட்டு லைட்டா சொல்லிட்டாரு நம்ம எழுத்துச் சித்தர்.] எல்லாம் தன் எழுத்து & பேச்சின் மீது இருக்கும் நம்பிக்கைங்க..

இப்படித் தானுங்க, ராமாயணம் இந்த மாதிரியான பல நம்பிக்கையினை வளர்க்க நமக்குச் சொல்லிக் குடுக்குதுங்க. தோல்விகள் பல கடவுளின் அவதாரத்துக்கே வருது. அப்பவும் கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் பாணியில் கடவுளே கூட இருப்பது தான் நம்பிக்கையின் உச்சம். நடப்பதை அப்படியே வாங்கிக் கொள்வது என்பது தான் வாழ்வின் அர்த்தமே. ஆமா… மேலதிகாரி திட்டுவதை மட்டும் எப்படித் தான் ஜாலியா அனுபவிச்சு, அதெ மிமிக்ரி மாதிரி செய்து காட்றீங்க? இப்படியே, நம்ம எல்லா தோல்விகளையும் ஜாலியா எடுத்துகிட்டா, நம்பிக்கை தானா வருமே..

கலங்கி நிக்கும் ஒரு மனிஷனுக்கு ஆறுதல் சொல்றது தான் ரொம்ப முக்கியம். அப்படியே லைட்டா ஃப்ளைட் எல்லாம் ஏறாமெ கிஷ்கிந்தா போலாம் அங்கே கம்பர் நம்பிக்கையூட்டும் படலம் பாக்கலாம். (அப்படி எந்தப் படலமும் கெடையாதுங்க)

வாலி இறந்த பின்னர் நடக்கும் காட்சி. அங்கதனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். சொல்வது யார் தெரியுமா? மறைந்து நின்று தாக்கிய இராமன் தான். (ரொம்பத்தான் லொல்லுன்னு சொல்லத் தோணுதா?) அதெவிட சூப்பர் நம்பிக்கை வருது. இராமனின் தாமரை போன்ற அடிகளை வணங்கினான் அங்கதன். (இது.. இது தான் நம்பிக்கை) நீல நிறத்து இராமன் அருளோடு பாத்தாராம்.(ம்..அட்ரா..அட்ரா சக்கை) ”நீ நல்ல புள்ளையா இருக்க ஒரு டிப்ஸ் தர்ரேன். இந்த சுக்ரீவனை சிறிய தந்தை என்று நெனைக்காதே. உன் அப்பாவாவே நெனைச்சிக்க”. இத்தோடு விட்டாரா கம்பர்? இது மட்டும் சொல்லி இருந்தா கம்பர் எப்புடி கவிச்சக்ரவர்த்தி ஆவுறது? அவர் ஒரு பிட்டு சேக்குறார். ”உன் பிறப்புக்கு காரணமான…” பாத்தீகளா… சுகி சிவம் ஐயா ஸ்டைல் தானே இது… சாரி..சாரி.. கம்பர் ஸ்டைல் தான் சுகி சிவமும் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ, நமக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதே நம்பிக்கையில், என் கண்ணு இல்லெ.. என் செல்லம் இல்லெ.. இந்தக் கம்பர் பாட்டும் படிச்சுடு கண்ணு…

வாலி காதலனும் ஆண்டு மலரடி வணங்கினானை
நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல்ல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தையாம் என முறையின் நிற்றி

மீண்டும் வருவேன்..நம்பிக்கையோடு…

பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??