இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே


பக்கம் 1

அன்மையில் முன்னாள் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தமானுக்கு வந்திருந்தார். தமிழ் அமைப்புகள், இலக்கியம் தொடர்பான ஆட்களை சந்திக்க வேண்டும் என்றாராம் (அதை அவரும், தனது குடும்ப உறுப்பினர்கள் காது படாமல் ரகசியமா சொன்னாராம். வர வர இந்த இலக்கிய மன்றக் கூட்டம் கூட, ஏதோ மலையாளப் படம் பார்க்கும் ரேஞ்சுக்கு ரகசியமா போய் வரும் நிலமைக்கு போய்விடும் போல் இருக்கு). நம் இலக்கிய கூட்டத்துக்கு வந்தார். மனுஷர் சும்மா சொல்லக் கூடாது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பின்னி எடுத்தார். மருத்துவர் என்பதால் இலவச ஆலோசனை என்று ஆரம்பிக்க கடைசியில் ஸ்டார்டிங்க் டிரபிள் என்று அவரை மாத்ருபூதம் ஆக்கிவிட்டனர் நம் மக்கள்.

பெரும்பாலான டாக்டர்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் தான் வாழ வேண்டி இருக்கிறது. (சிலர் பலான டாக்டர்களாகவும் இருந்து விடுகிறார்கள்). ஆக மருத்துவக் கல்வியை ஏன் தமிழில் கற்றுத்தரக் கூடாது என்ற கேள்வியை அன்று முன் வைத்தோம். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதாய் பதில் வந்தது. அடுத்த வாரம் கூடிய கூட்டத்தில் அதே தலைப்பில் கருத்துக்கள் கூற முடிவு செய்து அலசினோம். ஆரம்பக்கல்வி தமிழில் படித்து பின்னர் மேற்படிப்பில் ஆங்கிலத்தில் மாறும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி பேச்சு தான் மேலோங்கி இருந்தது. அந்தச் சிக்கல் தன் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்ற காரணத்திற்க்காய் ஆங்கில வழியில் பிள்ளைகளை சேர்ப்பதாய் (பல்வேறு காரணங்களோடும்) கூறினர்.

ஒரு கல்வி அதிகாரி தன் அனுபவத்தினை கூறினார். பள்ளி வரை தமிழ் வழியில் பயின்றவர் அவர். கல்லூரியில் ஆங்கில மீடியத்திற்கு (வேறு வழியின்றி) நுழைந்தார். கணிதப் பேராசிரியர் கணக்கை செய்து காண்பிக்கிறார் (ஆங்கிலத்தில் தான்). எல்லாம் புரிகிறது. கடைசியில் ஆமரெட் எங்கிறார் ஆசிரியர் (சாரி..சாரி… பேராசிரியர்). அவருக்கோ அந்த ஆம்ரெட் என்றால் என்ன என்றே விளங்கவில்லை. மற்ற வகுப்புத் தோழர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லையாம். ஒட்டு மொத்தமாய் ஆமரெட் என்றால் அந்தக் கணக்கு முடிந்துவிட்டது என்று தோராயமாய் புரிந்து வைத்திருந்தார்கள். பின்னர் தான் ஆம்ரெட் என்பது Am I Right? என்று ஆங்க்கிலத்தில் சொல்லி இருக்கிறார் என்று புரிந்ததாம். ஆமா மற்ற எல்லா மாணவர்களும் ஏன் எல்லாம் புரிந்த மாதிரி இருந்தார்கள் தொறந்த புத்தகமா??

பக்கம் 2:

புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பது நல்லது என்பார்கள் (யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியலை. நமக்கு எப்பொ எது சாதகமா இருக்கோ அப்பொ அதெ சொல்லிவிட வேண்டியது தான்) சின்ன ஊரில் அதிகாரியாய் இருப்பதில் சில சவுகரியங்கள். எந்த விழா என்றாலும் தலைமை தாங்க அழைப்பு வரும். மைக் கையிலும் வரும். கவனமா போன தடவை பேசியதை தவிர்த்து பேச வேண்டும். (மொத்த கூட்டமும் அடுத்து வரும் கலை நிகழ்ச்சிக்காய் காத்திருக்க, அவர்கள் முன்னால் பேசுவது கொஞ்சம் சிரமம் தான்).

சமீபத்தில் ஒரு மாணவர் அறிவியல் பொருட்காட்சியினை திறந்து வைத்து தலைமை தாங்கும் வாய்ப்பு வந்தது. மனதிற்குள் இப்படி வேசவேண்டும் என்று ஒரு முன்னோடம் விட்டிருந்தேன். (ஹிந்தியில் பேச வேண்டும் என்பதால் கூடுதல் கவணம் தேவைப்படுகிறது). அந்தக் காலத்தில் நான் சிறுவனாய் இருந்த போது, என் அப்பா, என்னிடம் தண்ணீர் கொண்டு வா என்பார். நான் உடனே ஓடிப் போய் கொண்டு வந்து தருவேன். ஆனால் இப்பொ… நீங்க ஏன் போய் எடுத்துக்கக் கூடாது? என்னை மட்டும் ஏன் கூப்பிட்றீங்க? அக்கா கிட்டெ ஏன் சொல்லலை? இவ்வளவு கேள்வி வருது. தண்ணீர் கொன்டு வரத் தயார். ஆனால் இப்பொ எல்லாம் இந்த தகவல் தேவைப்படுது பசங்களுக்கு. We are living in the age of Informations. கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்ப்பது தான் அறிவியல் பூரவமான வாழக்கை. அந்த மாதிரியான கேள்விகள் கேட்பது நல்லது..” இப்படி சொல்ல உத்தேசித்தேன்.

மேடை ஏறிய பின்னர் தான் தெரிஞ்சது, மேடைக்கு முன்னர் எல்லாம் பிரைமரி ஸ்கூலில் படிக்கும் பசங்க.. எனக்கு குஷி ஆய்டுத்து. நான் அப்பா சொன்ன பேச்சைக் கேட்டேன்.. என்று ஆரம்பித்து, உணர்ச்சிவசப்பட்டு அப்பொ நீங்க?? என்று கூட்டத்தைப் பாத்து கேட்டேன். கேப்போம் என்று பதில் கோரஸா வந்தது. (இப்படி திறந்த புத்தகமா இருக்க்காகளே..).. சிலர் கேக்கிறதில்லை என்கிறார்கள் என்று சமாளித்து முடித்தேன்.

பக்கம் 3

அந்தமானில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு சிவ கார்த்திகேயன் தொகுப்பாளராய் வந்திருந்தார். (அவர் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நடந்த கதைங்க இது). நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் இரண்டு வரிசைகளிலும் விஐபிகள் கொண்டு நிறைத்திருந்தார்கள். சிவ கார்த்திகேயன் தகிடுதத்தம் செய்து பார்க்கிறார். முதல் ரெண்டு ரோ ஆட்கள் சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நரசிம்ம ராவ் அளவில் இருக்கிறார்கள். நாம அப்புடி இல்லீங்க.. சிரிப்பு வந்தா சிரிச்சி வைச்சிடுவோம்.. (சில சமயம் மயாணத்தில் யாராவது ஜோக் அடிக்க அங்கும் சிரித்த கொடுமை நடந்துள்ளது).

கடுப்பான சிவ கார்த்திகேயன்..உண்மையிலேயே உங்களுக்கு காது எல்லாம் கேக்காதா? அல்லது வாய் பேச வராதா?.. ஆமா அப்படி வாய் பேசாதவங்க எப்படி சிரிப்பாங்க தெரியுமா என்றார். நானும் என் குடும்பத்தாரும் மொழி படத்தில் ஜோதிகா செய்ததை செய்து காட்டி.. அட இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே என்று சபாஷ் வாங்கினோம்.

இலக்கியப் பக்கம்:

மேனேஜ்மெண்ட் குரு என்று பலரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராமர் தான் சரியான மேனேஜ்மெண்ட் குரு என்று வட நாட்டு புத்தகம் சொல்லி அது தமிழிலும் வந்துள்ளது. (ராம்ஜெத்மலானி ராம் நல்ல கணவர் இல்லை என்கிறார்). ஆனா சீதை என்ன சொல்றாங்க என்று பாக்கலாம். (எங்க ஆத்துக்காரருக்கு அவ்வளவு வெவரம் பத்தாது என்று நோபல் பரிசு வாங்கியவரின் மனைவியே சாதாரணமாய் சொல்லும் சூழலையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க..)

ஒரு தலைவன் (அல்லது மேனேஜர்) எப்படி இருக்க வேண்டும்?. எல்லா சூழலிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். மெமொ அடுத்த அளுக்கு தரும் போதும் சரி.. தான் மேலதிகாரியிடம் டோஸ் வாங்கும் போதும் சரி.. ஒரே மனநிலையில் இருக்கனும்(அதாங்க திறந்த புத்தகமா… ஓஹோ.. கல்லுளிமங்கன் அப்படியும் சொல்லலாமோ..சொல்லிக்கிங்க.. நீங்களாச்சி..உங்க மேனஜராச்சி). இப்படி ராமர் இருந்தாராம். யாரு சொல்றாங்க.. சீதையே சர்டிபிகேட் தர்ராங்க.

தலைக்கு கிரீடம் வருகிறது என்ற போதும் சரி… காட்டிற்கு போக வேண்டும் என்ற போதிலும் சரி இரண்டையும் ஒரே மாதிரி பார்த்த முகம் அந்த ராமரின் முகம். அவரின் முகம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மாதிரியே.. (நம்ம பாஷயில் திறந்த புத்தகமா) இருந்தாராம். அப்படி இருந்த ராமரை இலங்கையில் இருக்கும் போது நினைத்தாராம் சீதை. அதை படம் பிடித்துக் காட்டுகிறார் நம் கம்பர்.

மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத் திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித் திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத் திருக்கும் முகத்தினை உன்னுவாள்

இப்பொ சொல்லுங்க.. மேனேஜ்மெண்ட் குரு யாரு? ராமர்? சீதை? கம்பன்?

வந்தாரய்யா ஜுனியர் வந்தாரய்யா


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும். இதெல்லாம் வாரிசுகளுக்காய் வரிஞ்சு கட்டிச் சொல்லும் வாக்கியங்கள். இது முற்றிலும் உண்மை தானா? காந்திஜியோடொ பிதாஜீ, விவேகானந்தரோட டாடி, சுஜாதவோடொ தோப்பனார் எல்லாம் யார் என்று கேட்டால் பலருக்கு அவர்களின் பெயர் கூட தெரியாது. இதே மாதிரி பல பிரபலங்களின் வாரிசுகளின் பெயர்களும் தெரியாமலேயே போனதும் உண்டு. இன்னொரு பக்கம் தகப்பனை மிஞ்சி மேயும் வாரிசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரையுலகில் வாரிசுகள் வந்து கொண்டிருக்கிறார்கள். பலர் கலக்கிக் கொண்டிருக்க, மண்ணைக் கவ்விய மைந்தர்களும் உண்டு தான். அரசியலில் வாரிசுகளுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. பெரிய்ய நிர்வாகத்திறமை, கடின உழைப்பு என்று சப்பை கட்டு கட்டினாலும், உன்னிப்பா கவனிச்சா ஒரு பொறி தட்டும். ஒரு பிரபலத்தின் வாரிசு, சிறு வயதில் ஏதாவது ஒளறும். அந்த வார்த்தைக் கோர்வைகளைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் அந்த வட்ட மாவட்ட சுற்றுகள். அந்த வாரிசு, பாம்பாக இருந்தாலும் அது பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு. அதனால் நிர்வாகம் மிக எளிதாக ஏதுவாகி விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுது??

திருவாசகம் பற்றிச் சொல்லும் போது சுகி சிவம் அவர்களிடமிருந்து ஒரு சுட்ட பழம், பறித்து உங்களுக்குப் பரிமாறலாம் என்று இருக்கேன். அந்தக் காலத்தில் ராசாவோட மகன் மக்கா இருந்தாலும் ராசா ஆய்டுவான். ஆனா மந்தரி மகன் மந்திரி ஆகிவிட முடியாது.. புத்திசாலியா இருந்தா தான் மந்திரி ஆக்குவாங்க (அந்தக் காலத்தில்). மந்திரி மகன், புத்திசாலியா இருந்தாத் தான் மந்திரி ஆக முடியும். அப்படி ஒரு மந்திரி தான் வாதவூரான்.. பிற்காலத்தில் மணிவாசகர் ஆனவர்.

வாரிசு வேண்டும் என்றும், அதுவும் அந்த வாரிசு நல்லபடியா பிறக்க வேண்டும் என்றும் பல வேண்டுதல்கள் வைக்கிறார்கள். அதனை நிறைவேற்றி வைக்கவும் சில பல Gynacologist கடவுள்கள் இருக்கின்றன. அப்படி பிறக்கும் கொழந்தைக்கும் சாமி பெயரும் வைப்பார்கள். நானும் அப்படி வேண்டுதல் வைத்தேன். எங்கள் சார்பில் கர்ப்ப ரக்சாம்பிகையிடம் இமெயில் அனுப்பப் பட்டது. மாமியார் சார்பில் சப்தகன்னி அம்மனுக்கு கூரியரும் தரப்பட்டது. குழந்தை வரம் கிடைத்தது. அப்புறம் ரெண்டு சாமிக்கும் கோபம் வராத மாதிரி, பொண்ணுக்கு சப்தரக்சிகா என்று பெயர் வச்சி, ரெண்டு சாமியையும் கூல் செஞ்சிட்டோம்.
அபிமன்யூ மாதிரி வயித்தில் இருக்கும் போதெ கத்துக் கொண்டு, அதி புத்திசாலிக் குழந்தை பிறக்கவும் இந்த பரமக்குடிக்காரர்கள் முயற்சி செய்துள்ளார்கள். அவர்கள் பெற்றது வெற்றியா என்று சகல கலா வல்லவர்தான் சொல்ல வேண்டும். ஆனா பழுத்த ஆன்மீகக் குடும்பத்தில் நிகழ்ந்த வேண்டுதல் ஏன் இப்படி ஒரு நாத்திகனை உருவாக்கித் தந்தது? இதற்க்கு அந்தக் கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மஹாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை நீதிமன்றத்துக்குப் போனாராம். அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனராம் (நீதிபதி உட்பட). அந்த அளவு மரியாதையின் உச்சத்தில் இருந்தவர் அவர். பின்னர் ஒருகட்டத்தில் ஒரு குற்றவாளி அதே நீதிமன்றத்தில் வந்தார். அவரின் பெயர் கேட்டபின்னர், அப்பா பெயர் கேட்டனர். அவர் சொன்ன பதில், தேசத்தின் தந்தை பெயர். ஆடிப் போய் விட்டனர் அனைவரும். (அப்புறம் மன்னித்து விட்டது தனிக்கதை). தேசப்பிதாவிடம் இதைப்பற்றிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் தெரியுமா நண்பர்களே.. “அந்தப் பையன் பிறக்கும் சூழலில் நானும் அப்படித்தான் இருந்தேன்”. இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தேசப்பிதாவால் மட்டுமே தர முடியும்.

தமிழக எழுத்தாளர்களில் சுஜாதாவை விட்டு விட்டு பட்டியல் போட முடியுமா என்ன? அவரது வாரிசுகள் யாராவது அப்படி எழுதுகிறார்களா? தெரியலையே?? தமிழ்வாணன் வாரிசுகளில் லேனா தமிழ்வாணன் மட்டும் அப்படியே அதே பாணியில். அது சரி.. அவரின் வாரிசு..? எழுதுவதாய் தெரியவில்லை.. ஆமா இப்பத்தான் ஐடி வந்தாச்சே..எதுக்கு மத்த வேலைகள் எல்லாம்? காமெடி நடிகர் செந்தில் மகன் பல் டாக்டர். பழைய நடிகர் ஜெய்சங்கரின் வாரிசு கண் டாக்டர். ஆனா கண்டக்டரா இருந்து நடிக்க வந்து ஹா..ஹா.. கலக்கிட்டிருக்கார் வாரிசுகளோட..

தலைமுறை இடைவெளி என்ற வார்த்தை யார் தான் கண்டுபிடிச்சாங்க என்றே தெரியவில்லை. நம்ம வாரிசுகளை நம்மாள ஒழுங்கா திட்டக் கூட முடியலை. நாங்கல்லாம் அந்தக் காலத்திலெ, காலுக்கு செருப்பில்லாமெ, நடந்தே போயி…. இப்படி நாம படிச்ச விவரத்தெ முழுசா கேக்கவும் தயாரா இல்லை இப்பொ பசங்க. உடனே எதிர்க் கேள்வி வரும்… அப்பா உங்கப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.. உங்களுக்கு செருப்பு வாங்கித் தரலை.. ஆனா எங்கப்பா ஒரு இஞ்ஜினியருப்பா… செருப்பு ஷு பிளே ஸ்டேஷன் எல்லாம் வாங்கித் தரணும்ப்பா… என்ன பதில் சொல்ல??

ராமாயணத்தில் இப்படி ஒரு சூழல் வருகிறது. (அங்கே சுத்தி இங்கே சுத்தி வந்தாரய்யா ராமாயணத்துக்கு என்று பாடுவது கேக்குது). இலங்கையில் அனுமர் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சண்டையின் முன்னோட்டம். எதிரில் இந்திரசித்தன். இ சி அம்பு எய்கிறான் அனுமன் மீது. அடச்சீ என்று கோபம் வருது நம்ம வானர தூதனுக்கு. இந்திர சித்தனை தேரோடு தூக்கி வானத்திலெ வீரமா வேகமா எறிஞ்சி வீரப்பா சிரிப்பு சிரித்தாராம்.

இது வரை எல்லாம் ஓகே தான். கம்பர் ஒரு இடைச் செருகல் வைக்கிறார். கோபம் & தேரைத் தூக்கி எறிதல்.. இந்த ரெண்டுக்கும் நடுவுலெ சின்ன கேப். அதில் அனுமன் வேகமாமாமாமாப் போனாராம். வேகம் என்றால் வேகம், அது எப்பேற்பட்ட வேகம் தெரியுமா? ராமனின் அம்பு தான் வேகமானது. இதை அனுமனிடம் கேட்டா என்ன சொல்வார்?? ஆமா… ஆமா… Boss is always correct. ராம் தான் அனுமனின் Boss. கம்பர் சொல்லி இருக்கலாம் ராமன் அம்பு மாதிரி வெரெஸ்ஸாப் போனார் என்று.. சொல்லலையே

கம்பர் கலையே ஓவர் பில்டப்தானே… ராமன் அம்பைவிட அதி வேகமாக விரைந்து போனாராம். கொஞ்ச Gap ல என்ன வெளையாட்டு காட்டுகிறார் பாத்தீகளா??

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவக்க னன்றான்
வித்தகன் சிலை விடு கணைவிசையினும் கடுகி
அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான்.

மீண்டும் ஒரு கம்பர் கலாட்டாவோடு சந்திப்போம்…..