மதுரெக்காரெய்ங்களே போதும்….


vadi mdu

எப்பொப் பாத்தாலுமே சிரிப்பை வரவழைக்கும் காமெடிகளில், வடிவேல் காமெடி டாப் தான். அவர் அரசியல் பேசினாலும் அதுவும் மெகா காமெடியாய் இருந்தது தான் பெரிய்ய காமெடி. அவரின் காமெடி கலக்கலில், மதுரைக் காரங்களை வம்பிழுப்பதாய் வந்த காமெடியும் ஒன்று. தெருவில் அண்ணன் தம்பி சண்டையை விலக்கி விடப் போய், வகையாய் வடிவேல் வாங்கிக் கட்டிக் கொள்வதாய் காமெடி வரும். அதில் முத்தாய்ப்பாய், இதெ ஏண்டா முன்னாடியே சொல்லலை என்று கேட்க, நம்ம மதுரெக் காரெய்ங்க எவன் சொன்ன பேச்சு கேக்கிறான்? என்பதாய் முடிவது தான் காமடியின் உச்சம். இந்தப் பக்கம் போகாதீங்க, அக்கா தங்கச்சி சண்டை நடக்கிறது என்றவுடன், அக்கா தங்கச்சியா……? என்று பதறி வடிவேல் ஓடுவது, இன்னும் நினைவில் அனைவருக்கும் இருக்கும்.

ஏன் மதுரைக்கு இப்படி ஒரு சோதனை? கோபாமாய் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவ(ள்)ர், கேள்வி கேட்ட பூமி இது. சிவ பெருமான் என்று தெரிந்துமே கேள்வி கேட்டவர்கள் அவதரித்த பூமி. என்ன…கொஞ்சம் சூடு பூமி.. அதனாலெ பேச்சிலும் கொஞ்சம் நெடி அதுவும் வீர நெடி இருக்கும். இதெ மாத்த முடியாது… நாங்களும் செய்வோமில்லெ… மதுரெக் காரெய்ங்கன்னா சும்மாவா?? இந்த மாதிரியான டயலாக், மதுரெக் காரய்ங்ககிட்டே இருந்து எப்படியாது ஒரு வகையில் வெளி வருவதைப் பாக்க முடியும்.

இந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதற்கு நான் ஊகிக்கும் முக்கிய காரணம், மற்ற ஊர்க் காரர்கள் இங்கு பெரும்பாலும் குடியேறாமையாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 1980களில் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கோவை மக்களின் நாகரீகம், வரிசை ஒழுங்கு எல்லாம் திகைப்பூட்ட வைத்தது. வரிசையில் நின்று ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி அப்புறம் இன்னொரு வழியால் (அது காலியாகவே இருக்கும்) திரும்பிப் போவர். இந்த வழியாய் யாரும் போய் டிக்கெட் வாங்க மாட்டாய்ங்களா என்று மதுரைத்தனமாய் கேட்ட காலங்களும் உண்டு.

அதே மாதிரி, அந்தக்கால சேரன் பஸ்களில் நீளமாய் கயிறு ஒன்று கட்டி இருப்பார்கள். ஒரு முனை காலிங்பெல் மாதிரி ஒன்றில் போய் முடியும். கண்டக்டர் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை இழுத்து வண்டியை நிறுத்துவார். கிளப்புவார். எனக்கோ பயங்கரமான ஆச்சரியம் என்ன்ன்னா, அதெப்படி இந்தக் கயிரை கண்டக்டர் மட்டும் தான் இழுப்பார்? மற்ற பயணிகள் இழுக்க மாட்டாய்ங்களா?? கேட்டேன்… வந்த பதில் இது தான்: மதுரெக்காரெய்ங்க புத்தி போகுதா?

குடும்பத்தாருடன் கோவையில் நண்பர் வீட்டில் தங்கினோம். அவர்களின் பணிவும் மரியாதையும் பார்த்து என் மகள் திக்குமுக்காடிப் போனார். மதுரெப் பாஷை பேசிக் கேட்டவர்களுக்கு, அந்த ஏனுங்க, இருக்குதுங்களா? வேணுங்களா? என்ற மரியாதை கலந்த வார்த்தைகள் தேனாய் இனித்திருந்தது என்று சொல்லவும் வேணுமா? வீடுகளில் விடுங்க… கடையில், அதுவும் ஒரு செருப்புக் கடைக்குப் போக, அவர்களும் அதே மரியாதை மாந்தராய் பேச… ’என்ன இந்த ஊர்க்காரெய்ங்க எல்லாரும் இப்புடித்தான் இருக்காய்ங்க!!!???’ என்ற வியப்புடன் கேள்வி வந்தது என் புதல்வியிடமிருந்து.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கு நடுவிலெ சண்டை ஏதாவது நடந்தா, எட்டிப் பாத்து அடிவாங்கும் (வடிவேல் போல்) செயல் மதுரெக் காரெய்ன்க்கிட்டெ அதிகம் ஏன் நடக்குது? ம்… சும்மா…அதெல்லாம் கெடையாது என்கிறீர்களா? அப்பொ நாட்டாமெ தீர்ப்பு சொன்னா ஒத்துக் கிவீங்களா? என்னோட நாட்டாமை எப்பவுமே கம்பர் தான். என்ன மிஸ்டர் கம்பர் சார்.. மரத்தடி செம்பு எல்லாம் ரெடி… அப்புறம் என்ன சொல்லுங்க நாட்டாமெ சார்…

இப்படி எல்லாம் பேசுனா எந்த நாட்டாமையும் தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்க. ஒரு முக்கியமான டயலாக் சொல்லனும். “எல்லாம் ஆளுக்காளுக்கு பேசிட்டிருந்தா எப்படிப்பா?? நாட்டாமை நறுக்குண்ணு நாலு வார்த்தை சட்டுன்னு சொல்லுங்க…”

இதுக்குத்தான் காத்திருத்து போல் கம்பர் ஆரம்பித்தார்.
ஏதாவது வித்தியாசமா நடந்தா ஒடனே ஓடியாந்து பாக்குறதுங்கிறது ஒன்னும் புதுசு இல்லெ. அந்தக் காலத்திலேயே நடந்திருக்கு..

மதுரெக்கார ஆசாமிகளை விட்டுத்தள்ளு.. சாமிகளே கூட இப்படித்தான்..

சாமிகளா? எப்பொ நடந்தது சாமி? – இது பவ்யமாய் நான்.

ஆமா… ராமாயணத்திலெ அந்த சீன் வருது. அனுமன் இருக்கானே அனுமன், மலை மாதிரி இருக்கிறவன், வலிமையான தோள் உள்ளவன். குரங்குகளில் சிறந்தவன். கடல் கடந்து இலங்கைக்கு போகுறப்போ, காற்றே கலங்கிப் போச்சாம். அதிசயம் என்ன? என்று ஆண்டவர்களே வெரெஸ்ஸா ஓடி வந்தாங்களாம். வர்ரப்பொ அவங்கவங்க, பிளேன்லெ வந்தாகலாம். வந்த அவசரத்திலெ அவய்ங்க பிளேனே முட்டி மோதி கடல்லெ விழுந்து ஒடெஞ்சே போச்சாம்…

அந்தக் காலத்து கதையே இப்படி இருக்க, நம்ம மதுரெக் கதை பராவா இல்லியே???

அப்படியே பாட்டும் லேசா மோதிக்காமெ பாருங்க…

குன்றொடு குணிக்குங் கொற்றக் குவவுத்தோட் குரங்குச் சீயம்
சென்றுறு வேகத் திண்கா லெறிதரத் தேவர் வைகும்
மின்றொடர் வானத் தான விமானங்கள் விசையிற்றம்மின்
ஒன்றொடொன் றுடையத் தாக்கி காக்கட லுற்ற மாதோ.

என்ன நாட்டாமெ தீர்ப்பு ஓகேவா?… அல்லது மாத்திச் சொல்லச் சொல்றீங்களா?

குடுத்து வைக்காத ஆளு


நெகிழ்வான தருணங்கள் என்று சில, வாழ்க்கையில் வந்து போகும். சிலருக்கு சலிப்பான தருணங்கள் என சில, வாய்ப்பதும் உண்டு. ஒரு பையன் அப்பா கிட்டெ கேட்டானாம். “பெத்த கூலிக்கு வளத்துட்டெ. வளத்த கூலிக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டே. கல்யாணம் செஞ்ச கூலிக்கு இந்தா, புள்ளைகளையும் வளத்து ஆளாக்கு”. எப்படி இருக்கு கதை? அப்பன் நொந்து நூலாயிருக்க மாட்டாரு???

படங்களில் அதிகம் நெகிழ்ச்சியைத் தருபவர், சமீப காலமாக திரு சேரன் அவர்கள். அவர் அந்தமான் வந்திருந்த போதும் கூட சில நெகிழ்வான சம்பங்கள் நடந்தன.. ரங்கத் என்ற தீவிற்கு அவரை அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில், அவர் இறங்கி நடக்க, சிலர் அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோகிராஃப் (சேரன் கிட்டேயேவா??) கேட்டனர். திடுதிப்பென வந்ததால் சிலர் ரூபா நோட்டில் கையெழுத்து கேட்டனர். “என் தகுதியோ, பதவியோ, இந்த ரூபா நோட்ட்டில் கையெழுத்து போடும் அளவு வளர்ந்து விடவில்லை” என்று மறுத்தார்.

பின்னர் விழா மேடையில் சேரன் அவர்களுக்கு ராஜாவின் சிம்மாசனம் மாதிரி சேரும், மற்றவர்களுக்கு சாதாரண சேரும் போட்டு வைத்திருந்தனர். அதைப் பாத்தவுடன் தனக்கும் மற்றவர்கள் மாதிரி சாதரண சேர் மட்டும் இருந்தாலே போதும் என்று பவ்யமாக மறுத்தார். கடைசியில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சேர் தூக்கி வந்து போட்டு சமாளித்தார்கள். (சேர் என்றால் சேரனுக்கு ஆகாதோ??) அவனவன் அந்த மாதிரி நாற்காலி கிடைக்க தவம் கிடக்கிறாய்ங்க.. தவமாய் தவமிருந்த சேரன் அதை ஒதுக்கியது நெகிழ்வாய் இருந்தது.

பாடல்கள் சில அதே மாதிரி நம்மை கிறக்கத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். சமீபத்தில் நான் ரசித்த நல்ல வரிகள்..“…. உன் அலாதி அன்பினில்நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்…”. மழையில் நனையலாம். அன்பு மழையில் நனைய ஆசைப்படலாம். ஆனா… அதே மழையாவே ஆகிவிடுதல்… பே..பே..பேராசை இல்லையா அது??

ஒவ்வொரு பாஷைக்கும் சில வார்த்தைகள் அழகு. இப்படித்தான் தில்லிக்கு 1989 களில் போய் “மயூர் விகார்” எங்கே இருக்கு என்று ஒரு வட நாட்டவரைக் கேட்டேன். “தில்லியில் அப்படி ஏதும் “விகார”மான இடங்கள் இல்லை” என்று கோபமாய் ஹிந்தியில் சொல்லி விலகினார். மயூர் விஹார் என்று சொல்லி இருக்கணுமாம். ம்..ம்.. இந்த ஹிந்தி ஒரே கொழப்பம் தான். “பல்லு கூசுது”, “ஆவி பிடிக்க மருந்து” இதெல்லாம் ஹிந்தியில் எப்படி சொல்வது என்று இன்னும் விளங்கவே இல்லை.. என்ன..??… “அப்படியே கிருகிருங்குது”, “நண்டு ஊர்ர மாதிரி இருக்கு”… இதுக்கும் ஹிந்தியில் வேணுமா?? அய்யா சாமி… ஆளை விடுங்க… தமிழ் வாழ்க.

தமிழில் சூப்பரா ஒரு வழக்கு இருக்கு.. அவனுக்கு என்னப்பா?? “கொடுத்து வச்ச ஆளு”. இதை வேறு மொழியில், மொழி பெயர்ப்பது ரொம்ப கஷ்டம். இப்பேர்ப் பட்ட மகனை அடைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்பார்கள். தவம் செஞ்சி பெத்த புள்ளை என்பதும் ஓரளவு ஒத்துக்க வேண்டிய பொருள். எப்படியோ, தவம் செய்வது என்பது ஒரு பொருளை வேண்டி, இறைவன் முன் விடாப்பிடியா (தன்னை வருத்தி) இருந்து, இறைவன் வரும் வரை பொறுமையா இருப்பது. (நாம ஒரு மெயில் அல்லது போஸ்டிங்க் போட்டு கடவுள் Like or Comment கொடுத்திருக்கிறாரா என்று ஏங்கும் காலம் இப்பொ..)

மனுஷங்க ஏதாவது வேணும்னா கடவுளை வேண்டி தவம் செய்வாய்ங்க… (சில சமயம் அசுரர்கள் கூட செய்வாங்களாம்.. நமக்கு எதுக்கு அந்த வம்பு?). “கடவுளே சரியா தவம் செய்யலையோ!!” என்ற சந்தேகம், யாருக்காவது வருமா? வந்திருக்கே… அட அப்படி ஒரு சந்தேகம், நம்ம தமிழனுக்கு வந்திருக்கு, என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கடவுளையே சந்தேகப்படும் அந்தத் தைரியசாலி வேறு யாரும் இல்லெ. திருவாளர் கம்பர் தான் அவர்.

எங்கெங்கெயோ சுத்தி கடைசியில் கம்பரை இந்த மனுஷன் புடிச்சிட்ராருய்யா.. என்று புலம்புபவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் கடையில். பின்புறம் ஒரு சின்ன குறிப்பு இருந்தது இப்படி: “இப் புத்தகத்தின் நோக்கம், சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும், பெருமையையும் உணர வேண்டும் என்பது மட்டுமே”. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தகத்தின் பெயர். ஆசிரியர்: திவாகர். (அட!!! ஒரே நோக்கில் எழுதும் இவரும் நம்ம ஜாதியா?? அல்லது நானு அவர் ஜாதியா தெரியலை). அவரும் தமிழகத்தில் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து எழுதுகிறார். வித்தியாசமான் இன்னொரு ஒற்றுமை அவருக்கும் துறைமுகத்தில் தான் வேலை.

சரி நம்ம கம்பர் மேட்டருக்கு வருவோம். தவம் செய்வதின் நோக்கமே, தன் நிலையை உயர்த்துதல். அப்புறம் தன்னை பிறரும் நேசிக்கிற மாதிரி செய்தல். சீதை பிறந்து விட்ட காரணத்தினாலேயே, குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்பதும் தவம் செய்து(?) உயர்ந்தன. அதே மாதிரி நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து(?) உயர்ந்தன. ஆனா அசோக வனத்தில் சீதை தவம் செய்யும் முறைகளை பாக்க, ராமன் மட்டும் சரிய்யா தவம் செய்யலையோ?? இது கம்பர் கேள்வி. ராமர் கொடுத்து வைக்கலியோ? – இது இந்த வம்பன் கேட்கும் கேள்வி.

பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்காண நோற்றில் அவன் கமலக் கண்களே.

அவன் பெயிலாமாமே?? அட… இவனும் பெயிலாயிட்டானாமே… அட.. ராமா நீயுமா பெயில்??? இப்படி கேக்கிற மாதிரி இருக்கு இல்லெ?? இருக்கா? இல்லையா??

ஆத்தி ஆத்தி ஆத்தி..என்னாச்சி..


செம்மொழியான தமிழ்மொழி என்ற பாடலுக்கு அடுத்து இப்போது எல்லோராலும் முனுமுனுக்க வைக்கப்படும் பாடல் இந்த ஆத்தி..ஆத்தி தான்.

நம் மக்களுக்கு கலர் என்றாலே ஒரு மயக்கம்… கிறக்கம் தான். அதுவும் செக்கச்செவேல்னு ஒரு பிகர் மாட்டாதான்னு லோ..லோன்னு அலைவானுங்க.. அப்புறமா அந்த வெளுப்பைப் பாத்து என்ன கலரு தெரியுமா???

சுண்டுனா ரத்தம் வரும்.. இப்படி டயலாக் வேறு.(எம்
ஜி ஆர் முதல் சோணியா வரை எல்லாம் கலரும் வியப்பு தான்)

செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது
சமீபத்திய வடிவேலானந்தாவின் பொன்மொழி..

இது இப்படி இருக்க… எப்புடி இம்புட்டு கலரா இருக்காக? என்ற ஆய்வின் விளைவு தான் சமீபத்திய ஆத்தி… ஆத்தி…
பாடல்.

“வெள்ளாவி வச்சுன்னை வெளுத்தாகளா??
வெயிலுக்கு காட்டாம இருந்தாகளா??”
இவைகள் கவிஞர் வியப்பின் உச்சங்கள்.

வெள்ளாவி என்பது பழுப்பான வேட்டியினை சலவைக்கு போட்டு வெள்ளையாக்கி வருவதைத் தான் பெரும்பாலும் குறிப்பிடுவர்.  ஆனால் துணி வெந்து போய் வருவது
தான் அந்த வெண்மையின் ரகசியம். (ஒரு சில வாஷிங்க் மிஷின்கள் கூட இப்படி வெந்நீர் சலவை செய்யும் வசதியை வைத்துள்ளது)

வெள்ளாவியில் வேகவைப்பது ஒரு பழங்காலத்து தண்டனை முறை என்று தான் இது வரை நினைத்து
வந்தேன். இந்தப் பாட்டு கேட்ட பிறகு அந்த நினைப்பை
மாத்திகிட்டேன்..

அதே வெள்ளாவியில் தண்டனை என்று தேவாரம் அருளிய அருளாளரை நிக்க வச்சாகளாம்.
அது அப்போ அவருக்கு அபஸ்வரம் இல்லாத வீணை, மாலை இள வெயில், வண்டின் ரீங்காரம் இருக்கும்
பொய்கை இப்படி எல்லாம் இருந்ததாம்.

அன்மையில் நடிகரும் இயக்குநருமான சேரன் அவர்கள்
அந்தமான் வந்திருந்த போது இங்கு ரம்யமான இயறகையோடு இயைந்த வாழ்வை சிலாகித்துப்
பேசினார்.

இந்த ஊரில் மூன்று நாளாய் இருக்கும் நானே கொஞ்சம் கலரா ஆய்ட்ட மாதிரி தெரியுது என்றார். பயங்கர கருப்பாய் இருந்த பக்கத்து சீட்டில் இர்ந்த நபரை பாத்து,
நீங்க இப்பவே இப்படி இருக்கீக.!!! முன்னாடி ஊர்ல
எப்பிடி இருந்திருப்பீங்க்க!!! என்று வெறுப்பேத்தினார்.

ஆக மொத்தத்தில் வெயிலுக்கு காட்டாம இருந்தா வெளுக்குமோ??

இந்தியர்களின் நிறத்தை கேலி செய்த ஆங்கிலேயருக்கு பதிலடி தந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பத்தி படிச்சிருக்கீங்களா??
“இறைவன் மூன்று கேக் செய்தார். ஒன்று சுத்தமாய் கருகி
விட்டது. அவர்கள் கருப்பர்கள். இன்னொரு கேக் வேகாமலேயே எடுக்கப்பட்டது. வெள்ளையர்கள் அவர்கள். மூன்றாவது தான் பக்குவமாய் சமைக்கப்பட்ட சுவையான கேக். இந்தியர்கள் நிறம் அது.”

பாட்டை ரசிப்போம்..
நிறங்களையும் ரசிப்போம்…
ஆனால் பேதம் பாராட்டாமல் இருக்க பழகுவோம்.