உலக (முழுதும்) கால் பந்து…


Ball

உலகமே கால் பந்தாட்டம் பத்திப் பேசிட்டும், டீவியில் பாத்திட்டும் இருக்கிறச்செ.. நாம மட்டும் சும்மா காலாட்டிட்டுக் கெடந்தா நல்லாவா இருக்கும்? இதை எழுதுவதற்கு முன், மழைக்குக் கூட நான் இந்த ஃபுட்பால் விளையாடும் கிரவுண்டுக்குள் ஒதுங்கியதில்லை என்பதை சொல்லி விட்டே தொடர்கின்றேன்.. (அது சரி… மழை பேஞ்சா கிரவுண்ட்லெ எப்படி ஒதுங்க முடியும்? என்ற உங்க அறிவுபூர்வ கேள்வியை நான் பாராட்டுகிறேன்). அப்பொ எப்படி அதைப்பத்தி எழுத முடியும்னு கேக்கிறீங்களா? காதல் கவிதை எழுதுறவங்க எல்லாம் காதலித்தவர்களா என்ன? (ஆனா…. காதலித்தவர்கள் அனைவரும் கவிதை எழுதியிருப்பார்கள் என்பதை ஓரளவுக்கு நம்பலாம்). அப்பொ நானு…. ஹி..ஹி…

சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு சில விருந்தாளிகள் வந்திருந்தனர். வந்தவங்க ஏதாவது வில்லங்கத்தை வீட்டில் கிளப்பி விட்டுச் செல்வது தான், நம்ம ஆட்களோட தேசியக் குணம் ஆச்சே..!! அன்றும் அப்படித்தான் ஆச்சி. சும்மா தேமேன்னு கேம் ஆடிட்டு இருந்த என் பையனெப் புடிச்சி, படிச்சி என்ன ஆகப் போறதா உத்தேசம்? என்று கேட்டனர். மறக்காமல் என்னைப் பாத்து, உங்க நிறைவேறத ஆசை எல்லாம், உங்க பையன் மேல் திணிக்காதீர்கள் என்று அட்வைஸ் வேறு. என்னோட நிறைவேறத ஆசையெல்லாம், வெளியில் சொல்லுகின்ற மாதிரியாவா இருக்கு..? ஐயோ..ஐயோ…

யாரும் (இந்த யாரும் என்பதில் நானும் அடக்கம்) எதிர்பாக்காத மாதிரி பையன், சூப்பரா ஒரு பதில் சொன்னான். ஃபுட்பால் டீமுக்கு மேனேஜராகப் போகனும் என்று. அன்று வரை அவன் ஒரு நாளும் ஃபுட்பால் ஆடியே நான் பார்த்ததில்லை. எனக்கு மட்டும் தான் இப்படி என்றில்லை. சீட்டுக்கட்டை நானும் ஒரு முறை லாவகமாய் கலக்கி, பிரிச்சிப் போடும் போது, என அப்பாவும் இப்படித்தான் திகைத்துப் போனார். சமீபத்தில் அந்தமான் வந்த வழக்கறிஞர் ஜெயராஜனின் குடும்பத்திலும் இப்படித்தான் நிகழ்ந்தது. வீட்டிற்கு வந்த ஆரவக் கோளாறில் ஆங்கிலப் பாடல் ஒன்றை சுதி சுத்தமா பாட (நானும் அன்று தான் அந்த ஆங்கிலப் பாடலை முதன் முதலாய்க் கேட்டேன்) ஆரம்பித்தனர். தன் பிள்ளைகள் இவ்வளவு நன்றாய், அதுவும் ஆங்கிலப் பாடல் பாடுவார்கள் என்பதே அந்த வக்கீலுக்கும் அன்று தான் தெரியும் என்பதே அன்றைய ஹைலைட். [நீதி: உங்கள் பிள்ளைகளின் கூடுதல் திறமை பற்றி தெரிந்து கொள்ள ஆவலா? உடனே அந்தமானுக்கு வரவும். கூடவே எனது வீட்டிற்க்கும் தவறாது ஒரு விசிட் அடிக்கவும்]

மறுபடியும் கால் பந்து பக்கம் கால் வைப்போம். இந்த உலக கால் பந்து போட்டி ஆரம்பிச்சதிலிருந்து நம்ம முக்கால் வாசி தூக்கம் தொலெஞ்சி போச்சி… (வயசான காலத்திலெ கலைஞர் கூட பார்ப்பதாய் தகவல் தெரிய, நம்ம தூக்கத்துக்கும் வந்தது வெட்டு..) நாமளும் யூத்துன்னு சொல்லிக்க என்னென்ன தியாகம்ல்லாம் செய்ய வேண்டியிருக்கு? ஆரம்ப கால மேட்ச்களை பார்க்காமல் விட்டேன். ஆபீசில், தெருவில் அதைப் பற்றியே கேட்டுத் தொலைக்க…(அது ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்டு உயிரெ வாங்குகிறார்கள்?), நான் ஃபுட்பால் பாக்கிறதில்லை என்று உண்மை விளம்பியாய் சொல்லி வைத்தால், ஏதோ வித்தியாசமான ஜந்துவைப் பாக்கிற மாதிரி பாக்க ஆரம்பித்தனர். இதுக்கு பேசாமெ மேட்ச் பாத்தே தொலைக்கலாம் என்று பாக்க ஆரம்பித்துவிட்டேன்.

தலைபோடு தலையினை கோபத்தோடு முட்டி, போட்டி போட்டு ஆடிய சங்கதியினைக் கூட அழகாய் அமுல், தன் விளம்பரத்தில் பயன் படுத்திக் கொண்டிருந்தது பாக்க ரசிக்கும்படியும் இருந்தது. கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலபார் பகுதிகளில் கோலகலத் திருவிழா போல் நடக்குமாம்.. அந்த கால்பந்து மழையின் சாரலால் கொச்சியின் நகரங்களிலும் லேசாய் நனைய முடிந்தது. சின்னஞ்சிறு தீவுகளான இலட்சத்தீவுகளில் கூட ஜெர்மனிக்கும், அர்ஜெண்டைனாவிற்கும், பிரேஜில் அணிகளுக்கும் மிகப் பெரிய அளவிலான ஃப்ளக்ஸ் போர்டுகள் வைத்து தங்கள் அபிமானத்தைக் காட்டி இருப்பதைப் பார்க்க முடிந்தது. [ஆனா, நம்ம பாலாபிஷேகம் நடத்தும் மதுரெ ஸ்டைல் யாராலும் மிஞ்ச முடியாது தான்].

வழக்கம் போல் ஆஜ்தக் ஹிந்தி சேனலும் தன் கேலியும் கிண்டலும் கலந்த கார்ட்டூன் படத்தை ”ஸோ சாரீரீரீ….” என்று சொல்லி கால் பந்தாட்டத்தையும் அரசியலையும் கலந்து நையாண்டி செய்துள்ளது. பாஜக ஒரு அணியாகவும் காங்கிரஸ் ஒரு அணியாகவும் ரெண்டு பக்கமாய் உண்டு இல்லை என்று கலாய்க்கிறது அந்தக் கலாட்டா. அதில் ஹைலைட் சமாச்சாரம், திக்விஜய் சிங்கை கோல்கீப்பராய் காட்டி, ஒட்டு மொத்த ஆட்டத்தையும் மோடி ஒருவரே ஆடுவது போலவும் காட்டியது தான். சந்தடி சாக்கில் அத்வானி & மு ம ஜோஷி ஆகியோரை ஓரம் கட்டுவதும் நாசூக்காய் காட்டியது நகைச்சுவையின் உச்சம்.

இந்த மாதிரி உச்சங்களை விட்டுத் தள்ளுங்க. பசங்களை நாம் கேள்வி கேட்டுத் தாளிக்கிறோமா? அதுக்கு பதிலா என்னோட பையனும் ஒரு நாள் அடம் பிடிச்சி என் ஆஃபீஸ் வந்து ஒரு நாள் நோட்டம் விட்டுப் போனான். நாம மட்டும் தான் பாத்ததை எழுதுவோமா என்ன? அவனும் பாத்ததை அப்படியே புட்டுப் புட்டு வைத்தான். [நல்ல வேளை எழுதி மானத்தை வாங்கலை]. இந்தப் பக்கம் டிரேயில் இருக்கும் ஃபைல்களை எடுத்து ஹிந்தியில் கைநாட்டு வைத்து அந்தப் பக்கம் போட்றீங்க.. அப்பப்பொ ஃபோன் கால் அட்டன் செய்றீங்க. மெயில் பாத்து பதில் போட்றீங்க. யாரையாவது கூப்பிட்டு ஏதோ சொல்றீங்க அல்லது கேக்கிறீங்க. ஃபேக்ஸ் வருவதை பாத்து ஏதோ கிறுக்கிறீங்க.. அப்பப்பொ சைட் விசிட்டுன்னு சுத்தக் கிளம்பிற்றீரீங்க. [அப்படிப்பாத்தா…. அடுத்தவன் பார்வையிலெ நாம பாக்கிற வேலை, ஒரு வேளை இவ்வளவு சிம்பிளாவா இருக்கு?]

நான் பதில் சொன்னேன். ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாய் இருப்பது என்பது, கால் பந்தாட்டத்தில் கோல்கீப்பராய் இருப்பது மாதிரி. இரண்டும் ஒரே மாதிரியான பொறுப்புகள் உள்ள பதவி. பத்து பேரின் ஒட்டு மொத்த தாக்குதல் எப்படி கோலியின் மீதே இருக்கோ, அப்படித்தான் மேலதிகாரியின் பணியும். எல்லா பந்தையும் எதிர் கொள்ள வேண்டும். எங்காவது கொஞ்சம் அசந்தால் எதிர் அணிக்கு சாதகமாய் அமைந்து விடும். பல பார்வையாளர்களின் ஏச்சு பேச்சுக்கும் ஆளாக வேண்டி வரும். பையன் தொடர்ந்தான். எதுக்கும் எதுக்கும் டாடி கம்பேர் செய்றீங்க? இனி அடுத்து கம்பராமாயணம் தானா? நான் உங்க ஆட்டத்துக்கு வரலை. ஃபுட்பால் ஹைலைட்ஸ் பாக்க கிளம்பிவிட்டான்.

இதே மாதிரி ஒரு சின்ன கம்பேரிஷன் கம்பராமாயணத்திலெ…. இல்லெ.. இல்லெ.. பெரிய புராணத்திலெ வருது. என் எஸ் கிருஷ்ணன் காமெடியில் கலக்கிய கிந்தன் சரித்திரம் பாத்திருப்பீங்க. அதன் ஒரிஜினல் தான் அந்த நந்தனார் கதை. அதில் வரும் ஒரு சின்ன சங்கதி. நந்தன் வசிக்கும் குக்கிராமத்தில் குடிசைகள். குடிசைக்குப் பக்கத்தில் நாய்கள் இல்லாமலா இருக்கும்? ஆனா நாய்கள் இருந்தாலும், சத்தமில்லாமெ இருக்காம். எப்புடி?

சேக்கிழார் பெருமான் சொல்கீறார்… (கீரன் சொன்னதுங்க இது..) அங்கு வாழும் மக்கள் கையில் இரும்புக் காப்பு அணிந்து இருந்தனராம். அந்தக் காப்பு நாயின் கழுத்தை அழுத்தும் போது கூட சத்தமே இல்லையாம். ஏனென்றால், அங்கு தெருவில் விளையாடும் (அந்தக் காலங்க… அது) குழந்தைகள் அரைஞானில் கட்டியுள்ள மணிகள் ஓசை எழுப்ப, அந்த நாய் கத்தல் கேக்காமெப் போச்சாம். எப்புடி????? பெரிய்ய புராணத்திலெ இப்புடி. பெரிய்ய காப்பியமான நம்ம கம்பராமாயணத்திலெ கம்பர் எப்படி கம்பேர் செஞ்சிருக்கார்ன்னு பாக்கலாமா?

அநுமன் இலங்கை கோட்டை வாயிலைப் பார்க்கிறான். அதன் ஒளியையும் பார்க்கிறான் அப்படியே ஆகாயத்தில் ”நின்னு” ஒளிவிடும் சூரியனையும் பார்க்கிறான். ஞாபகம் வருது கம்பனுக்கும் (அநுமனுக்கும்), மின்மினிப்பூச்சியின் வெளிச்சம். பகல்லெ தான் காணாமெப் போயிடுமே, அந்த மாதிரி காணாமப் போயிட்டியே என்று சூரிய்னைப் பாத்து நெனெச்சாகலாம் கம்பரும் அநுமனும். இது எப்படி இருக்கு? சூரியன் உதித்து மறையும் என்று நம்பிய காலத்தில் “ஒரே இடத்தில் நிற்பதாய்” கம்பர் கூறுவதை உற்று நோக்கிக் கவனிக்க அந்தப் பாட்டையும் பாருங்க…

அண்ட முற்றவும் வீங்கிரு கைற்றுநின் றலரி
கண்ட வாற்றினிக் கடிநகர் நெடுமனைக் கதிர்கள்
உண்ட வாற்ரினொன் றிரைப்பரி தொப்பிடிற் றன்முன்
விண்ட வாய்ச்சிறு மின்மினி யென்னவும் விளங்கா

உலகமே உலகக் கால்பந்தை நினைக்கையில், கம்பன் காட்டிய உலக முழுப்பந்தான சூரியனை, அதுவும் நின்று ஒளி தரும் எனச் சொன்ன அறிவியல் அறிஞர் கம்பனையும் சற்றே நினைவு கூர்வோம்.

உற்சாகபானமின்றி உற்சவம் புதுவையில்


ennai paathu 1

”இந்த வீக் எண்ட்டா… சாரி என்னால் முடியாது. பாண்டிச்சேரிக்கு போகிறேன்” என்று சில இடங்களில் சொன்னேன். எல்லோரும் ஒரே விதமாய், ”ம்..ம்… தனியாத்தானே போறீங்க… என்ஜாய்…” என்று வாழ்த்து சொன்னார்கள். அப்படி என்ன பாண்டிச்சேரியில் இருக்கு? அரவிந்த ஆஸ்ரமம், ஆரோவில், பாரதியார் இல்லம் இப்படி இவற்றுக்கு எல்லாம் இல்லாத ஒரு கிக்கான விஷயம், இளைஞர்களை மட்டுமல்ல, அனைத்து பாண்டிச்சேரி தரிசனவாசிகளையும் உற்சாகமூட்டும் அதிசயம் அந்த ”உற்சாகபானம்” தான். சமீபத்திய வார இறுதியின் என் புதுவைப் பயணம் பற்றிய எண்ண ஓட்டங்களின் பதிவு தான் இது.

’பாண்டிச்சேரிக்குப் போனோமா, நாலு பெக் போட்டோமோ, குப்புறப் படுத்தோமா என்று இல்லாமல் எதுக்கு இப்படி விலாவாரியா எழுதணும்?’ என்று நீங்களும் கேக்கலாம். கேக்காட்டியும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா? ஆஸ்திரேலிய நண்பர் அன்பு ஜெயா அவர்கள், ’புதுவை விஜயம் பற்றி உங்கள் ஸ்டைலில் எழுதுங்கள்’ என்று முகநூலில் ரெண்டுவரி அன்புடன் எழுதி இருந்தார். இந்த தூண்டில் போதாதா நமக்கு? இதெ ரொம்பப் பெருமையா என்னோட பொண்ணுகிட்டெ சொல்லி பீத்திகிட்டேன் நான், ’பாத்தியா சிட்னியிலேர்ந்து என்னோட எழுத்துக்கு வரவேற்பு’ என்று. பட்டென்று பதில் கிடைத்தது, “இது ஏதோ வடிவேலுவை கிட்னி எடுக்கிறதுக்கு கூப்பிட்ற மாதிரியில்லெ இருக்கு” என்று… இந்தக் காலத்து பசங்ககிட்டெ வாயெக் குடுத்தா இப்படித்தான்.

ஒரு காலத்தில் சரக்கு அடிக்க பாண்டிச்சேரி போவாய்ங்க… இப்பொ நல்ல சரக்கு அடிக்க அங்கே போவதாகக் கேள்வி. அப்பொ நான் எதுக்கு போனேங்கிற கேள்வி தானே… இந்த குடி பத்தின கேள்விக்கு இந்தப் பரமக்குடிக்காரன் (கவனிக்க, குடிகாரன் அல்ல), காரைக்குடிக்கு போய் வந்த சின்ன ஃப்ளாஷ்பேக்கோட ஆரம்பிக்கணும். போலாமா.. அப்படியே..

கடந்த மார்ச் மாதம் காரைக்குடிக்கு கம்பன் விழாவில் கலந்து கொள்ளும் இரண்டாம் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் வழக்கம் போல் ஓர் இலக்கியப் பட்டிமன்றம் இருந்தது. அந்தமானில் இருப்பதால் இது போன்ற பட்டிமன்றங்களை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லாது போனதால், அந்தக் கிடைத்த வாய்ப்பை நன்கு அனுபவித்து ரசித்துப் பார்த்தேன். பரதன், சடாயூ கும்பகர்ணன் பற்றிய தலைப்பில் காரசாரமாய் விவாதம் ஓடியது. அதில் ஒரு பக்கம் பேசிய பேச்சாளர் தன் பேச்சு முடிந்தவுடன் நைஸாய் நழுவிச் சென்று விட்டார். விசாரித்ததிலும், அவர் பேசும் முறையிலும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெளிவாயிற்று.

அடுத்த நாள் அதே வக்கீல் ஃபேஸ்புக்கிலும் இருப்பது தெரிந்தது. நட்புத்தூது கேட்டுவிட்டு, சுடச்சுட “இப்படி பாதியில் பட்டிமன்றத்தில் எழுந்து போனீர்களே, இது நடுவருக்கு அவமரியாதை செய்வதாய் ஆகாதா? நீதிமன்றத்தில் இப்படிச் செய்தால் நீதிபதி தப்பா நெனைக்கமாட்டாரா?” இப்படிக் கேட்டேன், சின்னப்புள்ளெத் தனமா. பொறுப்பாய் பதில் வந்தது. ஏற்கனவே இப்படி விரைவில் செல்ல வேண்டி, கம்பன் கழகத்தாரிடம் அனுமதி பெற்றதும் தெரியத் தந்தார். (கம்பன் கழகமே அனுமதி தந்து விட்டது. நடுவில் நீ என்ன நாட்டாமெ? என்று மனதில் நினைத்திருப்பாரோ!!!).
மனசுலெ நெனைக்கிறது எல்லாம் எப்படி நமக்கு ஃபுல்லாத் தெரியும்? அது சரிரிரீரீ…ஏதோ ஃபுல் சமாச்சாரம் சொல்ல வந்த மாதிரி இருந்ததே… அது தான் ஓடுது.. அந்த ஃப்ளாஷ் பேக் இன்னும் முடியலை.

அந்த பாதியில் போனவர், இவ்வளவு நல்ல மனுஷரா இருப்பார் என்பதை நான் கனவிலும் எதிர்பாக்கலை. 40 ஆண்டுகாலமாய் கம்பருடன் தொடர்பில் இருப்பவர் அவர். நானு கம்பரைத்தொட்டு 40 மாசம் கூட ஆகலை.. அவரோ, 14 புத்தகங்கள் எழுதியவர் சாம்பிளாக சில புத்தகங்கள் அனுப்பி வைத்தார். எவ்வளவு பெரிய மனிதர், அதுவும் பாரதிவிருது, பாரதி பணிச்செல்வர் விருது, கம்பர் சீர் பரவுவார் விருது, இலக்கியச்சுடர் என்று விருதுகளின் அணிவகுப்பே வைத்திருக்கும் தழும்பாத நிறைகுடம். அவர் தான் திருமிகு த இராமலிங்கம் அவர்கள்.

IMG_0599

என் நூலான ’பாமரன் பார்வையில் கம்பனை’ அனுப்பி வைத்தேன். பாண்டிச்சேரிக்கு வாங்களேன்… கம்பன் விழா இருக்கிறது. அழைத்தார். அத்தோடு நில்லாமல் பலருக்கு அறிமுகம் செய்ய, மேடை ஏற்ற, போக்குவரத்து என்று எல்லாத்துக்கும் ஒரு கரிசனம் காட்டினார். (இவரெப்பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டோமே என்று அரித்து எடுத்தது… கவுண்டமனி செந்திலிடம் கேட்டது போல்)

இப்படித்தான் நாம புதுவைக்கு வந்து சேர்ந்தோம். இப்படி வந்த காரணத்தினாலே, ஃபுல்லு ஆஃபு அந்தப் பேச்சுக்கே எடம் கெடையாது இப்பொ. விழா துவங்கும் முதல் நாள் இரவே ஒரு ரவுண்ட் அடித்தேன். (நீங்க மறுபடியும் அந்த ரவுண்ட் நெனைக்காதீங்க). கம்பன் அரங்கை. கிட்டத்தட்ட அந்தமான் அரங்கை விட மூன்று மடங்கு பெரியது. அரங்கம் நிறையுமா? என்ற சந்தேகம் வழக்கமாய் வந்து தொலைத்தது..

காலையில் குறித்த நேரத்தில் ஆளுநர், முதல்வர், மந்திரிகள் என்று வர, விழா துவக்கம் களைகட்டியது. பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்தது ஒரு இன்ப அதிர்ச்சி.. கம்பன் விழாவை குடும்ப விழா ஆக்கிவிட்டனர் இப்புதுவை மக்கள். முதல்வர் பேசினாலும் சரி, கவர்னர் ஆங்கிலத்தில் பேசினாலும் சரி, கம்பன் பாடல்களைப் பாடும் போதும், கம்பன் போற்றிகள் போரடிக்காமல் சொன்ன போதும், வழக்காடுமன்றம், நீண்ட சொற்பொழிவு இப்படி எல்லா இடத்திலும் அமைதி காத்தமர்ந்த மக்கள், உண்மையில் பாராட்டப் பட வேண்டியவர்கள். அனைவருக்கும் இடையில் சுண்டல், இத்யாதி நொறுக்குத் தீனிகள் வருவதும் அரங்கை கட்டிப் போட வைக்கிறது. ஆனால் அப்போது மட்டும் கை தட்டல் குறைந்து விடுகிறது. நமக்கென்ன கம்பன் படைத்த இராவணன் மாதிரி கூடுதல் கையா இருக்கு, சாப்பிட்டுக் கொண்டே கையும் தட்ட??

முதல் நாள் நிகழ்ச்சியில் சுகி சிவம் ஐயா வராமல் போக, அதே தலைப்பில் உடனடிப் பொறுப்பு ஏற்று செவ்வனே பேச்சில் வென்றவர் நம் இலக்கியச்சுடர் இராமலிங்கம் ஐயாவே தான்.

சிறப்புரை ஆற்ற வந்த, அறவாழி அவர்கள் தனது பேச்சில் சீதையும் மண்டோதரியும் ஒரே அழகு உள்ளவர்கள் என்று குறிப்பிட்டார். மதிய உணவு நேரத்தில் (கொஞ்சம் அடக்கமாய்) கேட்டேன், ’கம்பர் எங்கே அப்படிச் சொன்னார்?’ என்று. கிடைத்த பதில்: இராமன் சொன்ன அடையாளங்கள் வைத்து, அனுமன் பார்வைக்கு அப்படி பட்டதாய், கம்பன் சொன்னதாய், ஐயா சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.

அப்புறம் சாப்பாட்டைப் பாப்போம். அரசே, முன்வந்து கம்பன் விருந்தினர்களை கௌரவித்தமை இன்னும் மகிழ்ச்சி. வேளை தோறும் புரவலர்கள் விருந்து உபசாரம் அந்தமான் வரை மணக்கிறது. காரைக்குடி செட்டி நாட்டை, அதன் உபசரிப்பை, முந்திவிட வேண்டும் என்ற முனைப்பு மூச்சுக்கு மூச்சு தெரிகின்றது. ஆரோக்கியமான போட்டி. எப்படியோ நமக்கு நல்ல சாப்பாடு கெடெச்சா போதாது???

ஐயா இராமலிங்கம் தயவில், என்னையும் மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார்கள். இப்படி எதையாவது வம்பா எழுதி கடைசியிலெ கம்பரை புடிச்சி இழுத்ததுக்காக. மேடையிலிருந்து இறங்கி வந்ததும், பக்கத்தில் இருந்தவர் ஆச்சரியமாய் விசாரித்தார்.

அந்தமானிலிருந்தா வந்தீக? எவ்வளவு செலவாகும்?

நான்: ஆமா.. 10000 ஆகும்

ஆச்சரியத்தில் அவர்: போக வரவா?

என் பதில்: இல்லை. வர மட்டும். போய் வர 20000.

அவர் தொடர்ந்தார்..இந்த 100 ரூபா பொண்ணாடை வாங்க, 20000 ரூவா செலவழிச்சீகளா? [என் பொண்டாட்டி கேக்க மறந்த கேள்வி இது… ஞாபகமா யாரோ முகம் தெரியாத நபர் அக்கரையோட கேட்கிறார்] என்னத்தெச் சொல்ல, மன்மோகன் பதில் சொல்லி(?) முகம் திருப்பினேன். அப்புறம் அந்தாளு மொகத்தெப் பாக்குறப்பெல்லாம் கிறுகிறுங்குது…

அந்தமானில் இப்படி தலைசுத்துது என்பது கிறுகிறுன்னு வருது என்பார்கள். ஒரு முறை நான் டாக்டரிடம் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாத தமிழர் (அட நானும் அந்த ஜாதி தானுங்க) இந்த கிறுகிறுன்னு வருது என்பதை ஹிந்தியில் சொல்லுங்க என்றார். எனக்கும் அப்படியே தலை சுத்த ஆரம்பித்தது.

புதுவை பானமோ மற்ற எந்த பானமோ அருந்தினால் அந்த கிறுகிறுன்னு ஏறுவது தான் அதன் உச்சமான கிலுகிலுப்பு… அதிகம் ஏறிவிட்டால் வாந்தி அது இது என்று பார்ட்டியே கெட்டு விடும்…

கம்பராமாயணத்தில் இப்படி ஒரு கிறுகிறுன்னு சுத்தும் இடம் வருது. அனுமன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, வேகம்னா வேகம்… அம்புட்டு வேகமாப் போகின்றார். நாம வழக்கமா ரெயிலில் போனா, எதிர்திசையில் மரங்கள் எல்லாம் ஓடுமே…பாத்திருப்பீக.. அதேமாதிரி இங்கே தெற்கு வடக்கா தானே மத்தது மூவ் ஆகனும்..? இங்கே தான் கம்பனின் மூளை வேலை செய்யுது. கிறுகிறுன்னு சொன்னது இதுக்குத்தான். வழக்கமா கிழக்கு மேற்கா சுத்தும் சூரியன் மேற்கு கிழக்காய் சுத்தினதாய் கம்பர் சேட்டலைட் சொல்லுது. ஒரு வேளை கம்பரும் அனுமனோட மேலே போய், அட சூரியன் நிக்குது..பூமி தான் சுத்துது அதுவும் உல்டாவா என்று சொல்ல வந்திருப்பாரா… இருக்குலாம். அவர் தான் சகலகலா வல்லவராச்சே..

வாங்க அப்படியே லேசா பாட்டு பாக்கலாம்.

தடக்கைநா லைந்து பத்துத் தலைகளு முடையான் றானே
அடக்கியைம் புலன்கள் வென்ற தவப்பயனறுத லோடும்
கடக்குறி யாகமாகங் கிழக்கெழு வழக்கு நீங்கி
வடக்கெழுந் திலங்கை செல்லும் பரிதிவா நவனு மொத்தான்.

என்ன தலை கிறுகிறுன்னு சுத்துதா?

[பாண்டிச்சேரியில் உதவிய நாகராஜுலு, அவர்தம் சகோதரிகள் குடும்பத்தார் & ரமணி ஆகியோர்க்கு நன்றி.]

தலைவாரி பூச்சூட்டி உன்னை….


இந்த விசுவல் மீடியா வந்தலும் வந்தது, எல்லாத்தையுமே நேரில் பாக்கிற மாதிரி பார்க்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. அந்த மீடியா மூலம் சில சிக்கலான நேரங்களையும் கவனிக்கவும் முடிகிறது. இந்தியப் பெண் உலக அழகி ஆகும் தருவாயிலும் சரி… ஒலிப்பிக்கில் மெடல் வாங்கும் நேரம் வந்தாலும் சரி.. ஆனந்தத்தில் கண்ணீர் வந்ததை பார்க்க முடிகிறது.. (நீங்களும் பாத்திருப்பீங்க தானே??).. ஆனால் இந்த 6 வது Indian Idol ஜெயித்த விபுல் ஆகட்டும், சுட்டும், குத்தியும் மெடல் வாங்கிய ஆண்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் அழுததாய்த் தெரியவில்லை. (கபில்தேவ் விக்கி விக்கி ஒருமுறை மீடியா முன்பு அழுதது ஒரு தனிக்கதை)

நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் வரவழைக்கும் வித்தையினை இந்தப் பெண்கள் எங்கிருந்து தான் கற்றிருப்பார்களோ..?? (இப்படியே போனால், கிளிசரீன் கம்பெனிகள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்). என் கீழ் பணியாற்றும் மகளிரை அழைத்து, கேட்ட லீவு இல்லை என்றாலோ, அல்லது ஏன் இப்படி செய்தீர்கள்? என்று (மெதுவாய்க்) கேட்டாலே போதும் கண்ணில் இருந்து கொட கொட என்று கொட்ட ஆரம்பித்துவிடும். இதை இன்னொரு மகளிர் அணியிடம் கேட்ட போது தான், அதை அவர்கள் தண்ணீர் டேங்க் என்று பெயர் வைத்திருப்பது தெரிந்தது. எப்பொ வேண்டுமானாலும் வெடிக்க தயாராய் வைத்திருக்கும் டேங்க். (மனைவியின் கண்ணீர் எப்போது வரும் என்று அறிந்தவனுக்கு நோபல் பரிசே தரலாம்..)

முழு நீள நகைசுவைப் படம் என்று ஒருகாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி போடாமலும் கூட படம் முழுக்க சிரிப்பே என்று இருக்கும் படங்களும் இருந்தன. அனுபவி ராஜா அனுபவி என்று ஒரு செமெ படம். (முத்துக் குளிக்க வாரியாளா…பாட்டு அதில தான் வரும்) நாகேஷ் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய படம். அந்தப் படம் மட்டும் பாத்துட்டு நீங்க சிர்க்கலை என்றால்… கோவிச்சிக்க வேண்டாம். உங்களிடம் ஏதோ கோளாறு இருக்கு என்று அர்த்தம்.

சோகப் படங்கள் என்று சொல்லாமலேயே வந்த பல படங்கள் பாப்புலர் ஆகியும் உள்ளன. (ஒரு வேளை அட நம்ம வீட்டிலெ நடக்கிற சங்கதி என்று எல்லாருமே அனுபவிச்சி, அழுது பாத்திருப்பாங்களோ..?) திக்கற்ற பார்வதி, துலாபாரம் போன்ற படங்கள் சொல்லலாம். நான் அம்மாவின் முந்தானையை பிடித்து படம் பார்த்த அந்தக் காலம்.. (இப்பொ முந்தானை மட்டும் மாறலை.. ஆனா ஆள் மாறியாச்சி..அட..இன்னும் ஒடைச்சி சொல்லனுமா என்ன??) குலமா குணமா என்று சிவாஜி நடித்த படம். சோகத்தைப் பிழிந்து கண்ணீரில் சிவாஜி முகம் காட்டுவதை குளோசப்பில் காட்டும் போது இடைவேளை வரும். பரமக்குடி தியேட்டரில் முறுக்கு குச்சி ஐஸ் சாப்பிட வந்த அனைவருமே கண்களை துடைத்துக் கொண்டு வந்தது சிவாஜியின் வெற்றியின் ரகசியம்.

சட்டியிலெ இருக்கிறது தானே அகப்பையிலெ வரும்?? கண்ணீரே வாழ்க்கையா இருப்போர்க்கு தாலாட்டும் கண்ணீரை வைத்தே வரும். உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்தப் பாட்டு?? தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் பாட்டு அது… ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து, தொட்டில் நனையும் வரை… உன் தூக்கம் கலையும் வரை கண்ணான பூமகனே… கண்ணுறங்கு சூரியனே.. (சுட்டெரிக்கும் சூரியனை ஞாபகம் வைத்து மகனை சூரியன் என்பதும் அழகு தான்.)

பச்சிளங் குழந்தைகள் கண்ணீர் சிந்தும் இன்னொரு நேரங்கள், பள்ளிக்கூடம் போகும் தறுவாய் தான். என்னோட ரெண்டாம் வகுப்பு டீச்சரை இப்பொ நெனைச்சாலும் பயம் வரும். கறுப்பா பயங்கரமாயும், பயங்கர கறுப்பாவும் வாட்ட சாட்டமா கையில் பிரம்போடு தான் காட்சி அளிப்பார். பனைமரம் பற்றி விரிவாய் சிலாகித்து பாடம் நடத்தப் போய், பனைமரம் டீச்சர் என்று நான் வைத்த பெயர் ரொம்ப காலம் தொடர்ந்து வந்தது. பாரதி தாசனின் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் என்ற கேள்விக்கு பனைமரம் டீச்சர் என்று நான் பதில் சொல்லி இருப்பேன்.

இந்த கண்ணீர் பத்திய சமீபத்திய பாடல் வரிகள் நல்ல ஹிட். கண்ணை கலங்க வைக்கும் பிகரு வேணாம்டா.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒடும் நண்பன் போதும்டா.. இது லேட்டஸ்ட் தத்துவம். சமீபத்திய படங்களில் சோகம் இல்லாவிட்டாலும் நெகிழ்வான படக்காட்சிகள் கண் கலங்க வைக்கின்றன என்பதை சொல்லத்தான் வேண்டும். திரி இடியட் படம் எத்தனை முறை பார்த்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் கண் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை. (அது சரி… அதை தமிழில் எடுத்தார்களே… அதிலும் அந்த் effect இருந்ததா? பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்!!!)

கண்ணீர் அஞ்சலி சில சம்யங்களில் மனசை என்னவோ செய்யும். கண்ணதாசனுக்காய் வாலி பாடிய அஞ்சலியில் சில வரிகள் இதோ:

உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

மனதைப் பிசையும் வரிகள் இவை… உங்களுக்கு எப்படி இருக்கு??

வாலி கண்ணதாசன் பாரதி தாசன் வரை கண்ணீர் பத்தி சொல்லிட்டு அப்படியே போனா, நம்ம கம்பர் கோவிச்சிக்க மாட்டாரா?? (இப்படி சுத்தி வளைக்கிறதே கம்பனை வம்புக்கு இழுக்கத்தானே..!! அட அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா???)

சீதையிடம் அனுமன் ராமன் சோகத்தில் கண்ணீர் விட்டதை அசோக வனத்தில் சொல்லும் காட்சி. ராமர் எப்படி இருந்தாராம்? தூக்கம் இல்லாமல் கண் செவந்து போய், அறிவே கலங்கி நெருப்பில் இட்ட மெழுகு போல் மெலிந்தே போனாராம். அப்புறம் இந்த கண்ணீர்… இருக்கே அது அவர் போகும் வழி எல்லாம் சேறாக்கியதாம்.. (கல்லும் முள்ளுமாய் இருக்கும் காடே சேறு ஆனதாம் கண்ணீரால் – இது தான் கம்பரின் ஓவர் பில்டப் .. சாரி..சாரி.. கற்பனைத் திறம்)

அவ்வழி நின்னைக் காணாது அயருவான் அரிதின்தேறி
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இவ்வழி இனைய பன்னி அறிவு அழிந்து அரங்கலுற்றான்.

ஆமா உங்களுக்கு கண்ணீர் வந்த அனுபவம் ஏதும் உண்டா??