நம்பிக்கை… ரொம்ப முக்கியம்…


கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அதான் ஒவ்வொரு வருஷமும் தான் வருதே!! அதுலெ என்ன புதுசா இருக்கு? -ன்னு பாக்கிறீங்களா? அது சரி தான். ஒவ்வொரு வருஷமும் சொல்லி வச்ச மாதிரி பசங்களெ விட பொண்ணுங்க அதிகம் மார்கஸ் வாங்குறாங்களே? ஒரு வேளை மதிப்’பெண்’ என்று இருப்பதால் இப்படி இருக்குமோ! அப்பொ பசங்க அதிகம் மார்க் வாங்க வேறெ வழியே இல்லெ? மார்க்கை இனி ’மதிப்பாண்’ என்று சொல்லி வேண்ணா ட்ரை செய்யலாம்.

இது போக, எங்க ஸ்கூலில் 100க்கு 100 சதவீத தேர்வு என்று முரசு கொட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் நம்ம கண்ணை சுண்டி இழுக்கும். அடுத்த நாளே நம்மை சோகத்தில் ஆழ்த்தும் ‘பரீட்சை தோல்வி.. மணவன்/மாணவி தற்கொலை’ என்பதும் கண்டிப்பாய் வரும். இந்த வருஷம் என்னவோ அது கொஞ்சம் அதிகமானது தான் மன்சுக்குக் கஷ்டமா இருக்குங்க. என்னமோ பிரம்மன் படெச்சதே இந்த பரீட்சை பாஸ் செய்யத்தான் என்ற மாதிர்ல்லெ படுது. ஒரு வேளை ஃபெயில் ஆவதற்க்காகவுமே படைத்திருக்கலாமே.. என்ன நான் சொல்றது?. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கலாமே…

Exam suicide

வாழ்வில் நம்பிக்கை தர அந்தக் காலத்தில் உதயமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. அதற்கும் முன்பு துணிவே துணை என்றும் சொல்லி வார இதழ்கள் வந்தன. [ஆனால் நடிகைகள் துணியே தொல்லை என்று இருப்பது தனிக் கதைங்க]. ”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை வாழ்விலே..” என்று தற்கொலைக்கு முயல்பவரை காப்பாத்தி கரை சேத்த கதை எல்லாம் வந்திருக்கு. இப்பொ அந்த மாதிரியான டோஸ் கெறைஞ்சதினாலே இப்படி இருக்கலாமோ?

vaaz winaiththaal vaazalaam

தற்சமயம் நம்பிக்கையினை யார் சொல்கிறார்களோ இல்லையோ, நகை விளம்பரங்கள் போட்டி போட்டு சொல்லித் தருகின்றன. நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வே காலி என்று பல மனோ தத்துவ நிபுனர்கள் நிருபீத்துள்ளனர். மூன்று நண்பர்கள் சேந்து நம்பிக்கையோட உங்களை ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பிடலாம்..[அது சரி தெரியாமத்தான் கேக்குறேன்..அப்படி செய்றவன் நண்பனா என்ன?]

நீங்கள் தெருவில் வருகிறீர்கள். முதல் நன்பன் (?) சோகமாய், ‘என்னடா மச்சி? ஒடம்பு சரியில்லையா?’ உங்களை கவுக்கும் சதியை ஆரம்பிக்கிறான். இல்லையே என்று சொல்லி அடுத்து பயணம் செய்கிறீகள். ரெண்டாவது ஃப்ரண்ட் வந்து கலாய்க்கிறான். ‘என்ன மாமு, ஆஸ்பத்திரியிலிருந்து வர்ர மாதிரி இருக்கே? என்ன ஆச்சி?’ அப்பவே லேசா ஜுரம் வர ஆரம்பித்திருக்கும். சொல்லாமலேயே கடைசி தோஸ்த் வருவான். உங்கள் வாய், அவனின் கேள்விக்கு முன்பே வரும். ‘காலையிலிருந்தே ஒரு மாதிரியா இருக்கு. ஆஸ்பிடலுக்கு போகணும் வர்ரியாடா?’ இது தான் நம்பிக்கையின் தத்துவம். உங்களை கவுக்க குவாட்டர் கூட வேணாம். இந்த மாதிரி பசங்க ரெண்டு பேரு போதும்.

ஒவ்வொரு பூக்களிலும் என்று ஒரு பாட்டு பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன அந்தக் காலக் கட்டத்தில். இப்படி நம்பிக்கைகளை அள்ளி அள்ளித்தரும் படங்கள் இமேஜ்களாக வாட்ஸ் அப்பில் குவிகின்றன. பாக்கும் பலர், இது ஏதோ அடுத்தவைங்க படிக்கத்தான் இலாயக்கு என்று  பொறுப்பா அடுத்த குரூப்புக்கு பகிர்ந்திட்டு டெலீட் செய்துடுவாங்களோ? [நான் அப்படித்தான் செய்றேன்)

சின்னப் புள்ளையா இருக்கும் போது கடவுள் மறுப்பு கோஷங்கள் பல சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். சரி.. கடவுளை எப்புடி நம்புறது? – இப்படி கேளவி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ”இவங்க தான் உன்னோட அப்பா அம்மா. நம்புறியா?” ”ஆமா..” என் பதில் அது. ”இதெ நம்புறியே, கடவுள் இருக்குன்னா நம்ப மாட்டேங்கிறியே.. நம்புப்பா.. நம்பிக்கை தான் வாழ்க்கை…” அப்பொ எல்லாம் ஒத்துக்க முடியலை. ஆனால் இப்பொ அதை காலம் தான் நம்ப வைத்தது.

Suki sivam
சுகி சிவம் பேச்சில் ஒரு முறை கேட்டது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு சின்னதா வித்தியாசம் இருக்காம். அம்மாவால் தான் நீ பிறந்தாய் என்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அப்பாவால் தான் பிறந்தாய் என்பது அந்த அம்மா ஒருத்திக்குத் தான் தெரியும். [ரொம்ப யோசிக்காதீங்க… எவ்வளவு மோசமான உதாரணம்.. இப்புட்டு லைட்டா சொல்லிட்டாரு நம்ம எழுத்துச் சித்தர்.] எல்லாம் தன் எழுத்து & பேச்சின் மீது இருக்கும் நம்பிக்கைங்க..

இப்படித் தானுங்க, ராமாயணம் இந்த மாதிரியான பல நம்பிக்கையினை வளர்க்க நமக்குச் சொல்லிக் குடுக்குதுங்க. தோல்விகள் பல கடவுளின் அவதாரத்துக்கே வருது. அப்பவும் கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் பாணியில் கடவுளே கூட இருப்பது தான் நம்பிக்கையின் உச்சம். நடப்பதை அப்படியே வாங்கிக் கொள்வது என்பது தான் வாழ்வின் அர்த்தமே. ஆமா… மேலதிகாரி திட்டுவதை மட்டும் எப்படித் தான் ஜாலியா அனுபவிச்சு, அதெ மிமிக்ரி மாதிரி செய்து காட்றீங்க? இப்படியே, நம்ம எல்லா தோல்விகளையும் ஜாலியா எடுத்துகிட்டா, நம்பிக்கை தானா வருமே..

கலங்கி நிக்கும் ஒரு மனிஷனுக்கு ஆறுதல் சொல்றது தான் ரொம்ப முக்கியம். அப்படியே லைட்டா ஃப்ளைட் எல்லாம் ஏறாமெ கிஷ்கிந்தா போலாம் அங்கே கம்பர் நம்பிக்கையூட்டும் படலம் பாக்கலாம். (அப்படி எந்தப் படலமும் கெடையாதுங்க)

வாலி இறந்த பின்னர் நடக்கும் காட்சி. அங்கதனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். சொல்வது யார் தெரியுமா? மறைந்து நின்று தாக்கிய இராமன் தான். (ரொம்பத்தான் லொல்லுன்னு சொல்லத் தோணுதா?) அதெவிட சூப்பர் நம்பிக்கை வருது. இராமனின் தாமரை போன்ற அடிகளை வணங்கினான் அங்கதன். (இது.. இது தான் நம்பிக்கை) நீல நிறத்து இராமன் அருளோடு பாத்தாராம்.(ம்..அட்ரா..அட்ரா சக்கை) ”நீ நல்ல புள்ளையா இருக்க ஒரு டிப்ஸ் தர்ரேன். இந்த சுக்ரீவனை சிறிய தந்தை என்று நெனைக்காதே. உன் அப்பாவாவே நெனைச்சிக்க”. இத்தோடு விட்டாரா கம்பர்? இது மட்டும் சொல்லி இருந்தா கம்பர் எப்புடி கவிச்சக்ரவர்த்தி ஆவுறது? அவர் ஒரு பிட்டு சேக்குறார். ”உன் பிறப்புக்கு காரணமான…” பாத்தீகளா… சுகி சிவம் ஐயா ஸ்டைல் தானே இது… சாரி..சாரி.. கம்பர் ஸ்டைல் தான் சுகி சிவமும் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ, நமக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதே நம்பிக்கையில், என் கண்ணு இல்லெ.. என் செல்லம் இல்லெ.. இந்தக் கம்பர் பாட்டும் படிச்சுடு கண்ணு…

வாலி காதலனும் ஆண்டு மலரடி வணங்கினானை
நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல்ல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தையாம் என முறையின் நிற்றி

மீண்டும் வருவேன்..நம்பிக்கையோடு…

பத்த வச்சிட்டியே


Do or Die செய் அல்லது செத்துமடி என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீங்க.. வாழ்க்கையில் இருக்கும் கடைசி வாய்ப்பு இது தான்… இதனை விட்டால் வேறு வழி இல்லை.. என்கின்ற போது தான் இந்த வார்த்தைகளின் பிரயோகம் வரும். ஆனா இப்பொ எல்லாம் பைக்கில் சிலர் வேகமாப் போவதைப் பாத்தால், அந்த பயணம் தான் வாழ்க்கையின் நோக்கம் என்பதாய் போகிறார்கள். சில சமயம் அதுவே அவர்களின் கடைசிப் பயணமாகவும் மாறி விடுவது தான் வேதனை. இப்படி வேகமாகப் போகும் ஒருவரை மடக்கி கேட்டேன்: “அப்படி என்ன அவசரம்?”. கிடைத்த பதில்: அநிட்3கோ (அந்தமானின் டாஸ்மாக்) கடை மூடி விருவார்கள்.. அதான். அடப்பாவிகளா.

நாட்டுக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். தலைவர்களுக்காய் எரிந்தும் போய் தங்களின் விஸ்வாசத்தைக் காட்டி இருக்கிறார்கள். ஹிட்லர் வாழ்க்கையில் நடந்ததாய் சொல்லப்படும் பல கதைகளில் இதுவும் ஒன்று. (இப்படியும் நடக்குமா என்ற பில்டப்புடன் ஆரம்பிக்கலாம் இந்தச் சம்பவத்தை)

ஹிட்லரின் திறமையினைக் கேள்விப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர், அவரிடம் (கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு) உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டாராம். அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் ஹிட்லர் தன் அடியாளான படையாளனைக் கூப்பிட்டு, இந்த மூனாவது மாடியிலிருந்து குதி என்றாராம். அவனும் ஒன்றும் யோசிக்காமல் குத்தித்து உயிரை விட்டானாம். இதுலெ ஏதும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் (பத்திரிக்கைக் காரங்களுக்கு கூடவே எப்பவுமே அது தான் இருக்குமே?) ஒருத்தர் தான் இப்படியா?? என்று இழுத்தார் அந்த நிருபர். ஹிட்லர் அடுத்த படைக் காவலரை கண்ணால் ஜாடை காட்டினார். அடுத்த உயிர் போனது.

நம்பவே முடியலையே…இது நிருபர். ஹிட்லர் மூன்றாவது ஆளை அழைத்தார். நிருபர் காலில் விழாத குறையாய் வேண்டாம். எனக்காய் ரெண்டு உயிர் போனது போதும் என்றார். படைக்காவலன் பேசினான். யோவ் ஆளை வுடுய்யா… இந்த ஆள் கிட்டெ குப்பெ கூட்றதெ விட சாவுறது மேலுண்ணு அவனவன் சந்தோஷமா சாவுறான். (தகவல் உபயம் சுகிசிவம்). இது எப்படி இருக்கு?

செய்யும்தொழிலில் சிரத்தையோடு செய்யணும் என்பது தான் எல்லாரும் எதிர் பார்க்கிறார்கள். சும்மா ரெண்டு நிமிஷத்தில் செய்யும் நூடூல்ஸில் எத்தனை நுணுக்கம் இருக்கு தெரியுமா? (அவனவன் நொந்து நூல் ஆகும் போது, நூடுல்ஸில் நுணுக்கம் வேற கேக்குதா?) நான் செய்யும் நூடூல்ஸில் எப்பவும் அந்த மசாலா சரீய்யா கரைஞ்சிருக்காது. கட்டி கட்டியா இருக்கும். வீட்டு அம்மணி செய்யும் போது லேசா எட்டிப் பாத்தப்பொ நானு செஞ்சிட்டு வந்த தப்பு விளங்கிடுச்சி. முதலில் தண்ணியிலேயே மசாலா போட்டு விட்டால் அந்த பிரச்சினை தீந்தது. (என்ன ஒரு பெரிய்ய கண்டுபிடிப்பு?)

வாத்தியார் படத்துப் பாட்டில் வரும் சரித்திரப் புகழ் பெற்ற ஒரு வசனம். “எனக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் கொஞ்ச்சம் நீளம்”. திறமைசாலிகள் கூடவே இருப்பது வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை. ஜால்ராக்களை கூடவே வைத்து இருப்பதில் தான் ஆபத்து ஜாஸ்தி. 100வது திருட்டுக்கு போஸ்டர் ஒட்டி அழகு பார்க்கும் ஜால்ராக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில “கீழ்படிந்துள்ள” என்பதற்கு உதாரணமாகவும் சிலர் இருப்பார்கள். ஆபீசில் ஒரு பைல் வேண்டும் என்றால் உடனே ஓடி விடுவார்கள் தேட. என்ன பைல் என்பதைக்கூட கேட்காமல் (ஆளை உட்டா பொதுமடா சாமி என்ற ரகம்).

அதே மாதிரி வச்சிட்டு வாடான்னா, பத்த வச்சிட்டு வருகின்ற ஆட்களும் உண்டு. இதிலிருந்து எல்லாரும் தெரிஞ்சிக்கும் உண்மை என்னவென்றால் சொல்ல வேண்டிய சேதியை பக்குவமா பாத்து பதமா சொல்ல வேணும் இல்லாட்டி இப்படி ஏதாவது ஏடா கூடமா நடக்கும். யார் கிட்டெ சொல்றோம் என்பதையும் குறிப்பா சொல்லாமல் விட்டாலும் சிக்கல் தான் வரும்.

ஒரு தலை வச்சிருக்கும் தறுதலைகளான நமக்கே (சாரி.. சாரி.. எனக்கே) இவ்வளவு சிக்கல வந்தா ஒன்பது தலையை extra fitting ஆ வச்சிருக்கும் ராவணனுக்கு வராதா? வந்ததே. “தீ வை” என்ற உத்திரவு பொதுவாய் வந்து விழுந்தது. அனுமன் வாலில் வைத்தனர் அரக்கர் தீயை. அனுமனோ, ஊருக்கே தீயை வைத்தான். அரசாங்க உத்திரவை அச்சரம் பிசகாமல் follow செய்தார்கள் இருவருமே. “என் வாலைக் கொளுத்தும் இவர்களது செயல், இந்த ஊரைக் கொளுத்துக” என்று அனுமனுக்கு பட்டதாய் கம்பர் சொல்கிறார்.

கடவுள் படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றே இவர் வென்றி
சுடுவிக்கின்றது இவ்வூரைச் சுடுக என்று உஐத்து துணிவு என்று
நடு உற்று அமையம் உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான்.

என்ன இனிமே ஏதாவது சொல்லும் போது சரிய்யாச் சொல்லுவோமா???

பொறி… பொறி… தீப்பொறி


ஒரு படத்தில் வடிவேல் நடந்து வரும் போதே, செருப்பில் தீப்பொறி பறக்கும்.. எப்படீண்ணே??…  என்று கேட்பவருக்கு, எல்லாம் ஒரு கிரைன்ரா… அதெல்லாம் ஒரு செட்டப்பு…. ஒட்டப்பு என்று சொல்லும் சீனும் சூப்பர் ஹிட்டாக இருக்கும். அப்படி பில்டப் விடுபவரை வைக்கப்போருக்கு தீவைக்க அழைக்கும் அக்கப்போர் இருக்கே.. அது ஒரிஜினல் காமெடியை விட சூப்பர்.

நீ நடந்தால் நடை அழகு… என்பார்கள். ஆனால் நடையில் தீப்பொறி பறக்கும் ஐடியா எப்படி வந்திருக்கும்? பாபா படம் உள்ளிட்ட பல ரஜினி படங்களில் அந்த தீப்பொறி பறக்கும். ராமநாராயணன் இயக்கத்தில் ஒரு யானை நடையிலும் அந்த தீப்பொறி பறந்ததை பாத்ததாய் நினைவு.

அது சரி… நடை ஒரு பக்கம் நடக்கட்டும். பேச்சுக்கும் ஒரு நடை இருக்கு என்கிறார்கள். அந்தக் காலத்தில் திரு விக நடை, அண்ணா நடை என்றார்கள். அது பாடப்புத்தகத்தில் வந்ததாலோ என்னவோ, அதை யாரும் பின்னர் பின்பற்றவில்லை. (கலைஞர் & வைகோ ஆகியோர் விதிவிலக்கு).

பேச்சில் பொடி வைத்து பேசுவது என்கிறார்கள். பொடி போட்டால் தான் பேச்சு வரும் என்று பேசியவர்களும் உண்டு. காரம் மணம் குணம் இப்படி எல்லாம் சேர்ந்து இருக்கிறதுக்குப் பெயர் தான் பொடி வைத்துப் பேசுதல் என்று வைத்துக் கொள்ளலாமா?? பொடி வச்சி இப்படித்தானே சொல்ல முடியும்?

பொடி பறக்கப் பேசியது போய் தீப்பொறி பறக்க, பேச்சு ஆரம்பித்தது பின்னர் தான். தீப்பொறி அடைமொழியுடன் ஆறுமுகம் ஒரு கலக்கு தமிழ்நாட்டையே கலக்கினார் போங்க. அதை கேக்க கட்சி ஆட்களையும் தாண்டி எல்லாரும் போவாகளாம். லேடீஸ் மட்டும் கேட்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன்? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.

பேச்சு நடையில் சுகிசிவம் ஸ்டைல் அழகோ அழகு. டீவியில் வரும் அவர் பேச்சை விட மேடைப்பேச்சு தனி ரகம் தான். அதில் மனசுக்குள் ஒரு தீப்பொறியை உங்களுக்கே தெரியாமல் ஏத்தி வைக்கும் சக்தி வாய்ந்த பேச்சு அவரின் பேச்சு. ஒரு விஷயத்தை ஒரு ஃப்ளோ வில் கொண்டு போய், சொல்ல வேண்டிய சேதியை, சொல்லும் போது மட்டும் High Pitch இல் சொல்வது அவரிடம் கற்க வேண்டிய கலை. சிங்கப்பூரில் அவர் பேசிய பேச்சுக்கள், கீதை பற்றி வளைகுடா நாட்டில் பேசிய ஆடியோவும், நால்வர் பற்றி மதுரையில் பேசிய பேச்சுக்களுகளும் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது.

அதற்கு முற்றிலும் வித்தியாசமாய், அருவி கொட்டுவது போல் வந்து விழும் வார்த்தைகள்.. அதன் சொந்தக்காரர், தமிழருவி மணியன். அவரின் பேச்சில் தீப்பொறி என்று தேடினால் ஒன்றுக் சிக்காது. ஆனால் பேச்சை முடித்தால் ஒரு சோகம் வரும்.. பேச்சை இதற்குள் முடித்து விட்டாரே என்று. பல மணி நேரங்கள் அவர் சொன்ன செய்திகள் அசை போட வைக்கும். அதை விட பெரிய்ய்ய தீப்பொறி என்ன வேண்டும்??. செஞ்சட்டைக்காரர்கள் ஜீவாவைப் பற்றிப் பேசியதை விட இந்த வெள்ளைச் சட்டைக்காரர் தான் அதிகம் பேசி இருக்கிறார். காமராசரும் ஜீவாவும் இல்லாமல், இவர் பேச்சுக்கள் முடிவதில்லை. தமிழ் கூறும் நல் உலகம் ஒரு முறை காது குடுத்துக் கேட்க வேண்டும் இவர்களது மேடைப்பேச்சுகளை.

எதையாவது பாத்தா ஏதாவது பொறி தட்டணும் அல்லது தட்டும். நம்ம ப்ளாக்கில் எழுதுவதும் இப்படி பொறியில் சிக்கிய செய்திகள் தானே. மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லிய காதலின் இலக்கணம், பாத்தவுடன் பொறி தட்டி அப்படியே மனசுக்குள் குண்டு பல்பு எரியுணுமாம்.. (அதுக்கு மட்டும் கரெண்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை)..

தீப்பொறி இருக்கோ இல்லையோ, ஆனா பெரியவர்கள் மத்தியில் ஒரு ஒளிவட்டம் தெரியும். சாமி படம் போடும் ஆசாமிகள் மறக்காமல் அந்த ஒளிவட்டத்தையும் சேர்த்தே வரைகிறார்கள்.

பீச்சில் உலாவும் காதல் ஜோடிகளைப் பாக்கும் போது, இந்த மூஞ்சிக்கெல்லாம் காதல் ஒரு கேடா? என்று கேட்க வேண்டும் என்ற ஒரு ஒரு பொறி தட்டும். கேக்கவா முடியும்? சமீபத்தில் ஒரு ஆதரவான SMS வந்தது. “நம்மை நிராகரித்த செமெ ஃபிகர்களின் தகரடப்பா தலை கணவர்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிடமுடியாது”. (அதே மாதிரி அவகளும் யோசிப்பாகள்லே..என்று உங்களுக்கு பொறி தட்டுதா என்ன??)

தீப்பொறி வர, ஏதோ ரெண்டு உரசனும். அட்லீஸ்ட் பக்கத்திலேயாவது வர வேண்டும். நம்ம வள்ளுவர் என்ன சொல்றாரு தெரியுமா?? தூரமாப் போனாலே சுடுமாம். (நீங்கின் தெறூஉம்). மேலும் விவரங்களுக்கு பாப்பையாவை புடிங்க போதும்.

சினிமாவில் ஒரு பாட்டு. தீப்பொறி பறக்குது. உரசினது எது தெரியுமா? காதலன் காதலியின் நகங்கள்.

எடுத்துக் கொடுக்கையிலெ இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடுபட்டு  மலர் கொஞ்சம் வாடும்
மங்கைநீ சூடிக்கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.

இதுக்கும் அருஞ்சொல் பொருள் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதுக்காக சும்மா உரசிப் பாக்காதீங்க… அப்புறம் வரும் தீக்காயங்களுக்கு நான் பொறுப்பு கிடையாது.

வம்படியா எதையாவது எழுதி அப்புறம் கடைசியா கம்பராமாயணத்தை கொண்டு வருவது என்பது, நானே யோசிக்காமல்  என்னிடம் வந்து சேர்ந்த திட்டம் அது. சும்மா வெளையாட்டா ராமாயணம் படிக்கப் போக (வயசு ஆயிடுச்சி என்று என் இனிய பாதி சொல்வது பார்வையிலேயே தெரியுது) அப்பப்பொ ஏதாவது பொறி தட்டும். அதை குறிப்பு எடுத்து வைப்பேன். பின்னர் அப்படி இப்படி யோசிச்சி.. 150 போஸ்ட் தாண்டி போய்கிட்டிருக்கு.

இன்றைய பொறி தட்டிய சமாச்சாரம்.. அந்த தீப்பொறி தான். அனுமன் முன் போரிட வந்த அரக்க சேனை அப்புட்டு இப்புட்டுன்னு சொல்ல முடியாத ஆளுங்களாம். கூப்புட கூப்பிட வர, கூப்பிடு தொலைவிலேயே நின்றார்களாம். நம்மூர் பிரியாணி பொட்டலமும் ஒரு கட்டிங்கும் தரும் கூட்டங்களில் எப்படி கூட்டம் அலைமோதுமோ, அப்படி இருந்ததாம். அம்புட்டு கூட்டம். அந்தக் கூட்டம் காரணமா அவங்க கையிலெ இருக்கிற ஆயதங்கள் எல்லாம் ஒன்னோடு ஒன்னு மோதி, அதனாலெயே தீப்பொறி பறக்குதாம். அது அப்படியே மேலே பொயி.. அந்தப் பொறி மேகத்தையே பத்த வைக்கப் போயிடுச்சாம்.. சும்மா சொல்லப்படாது. கம்பர் உண்மையிலேயே கலக்கிட்டார். கற்பனையின்  உச்சம் கண்டவர் அவர்..

கூய்த்தரும்தொறும் தரும்தொறும் தானைவெங் குழவன்
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க
காய்த்து அமைந்த வெங் கதிர்ப்படை ஒன்று ஒன்று கதுவி
தேய்ந்து எழுந்தன பொறிக் குலம்மழைக் குலம் தீய.

ஆயுதங்கள் மோதுவதை வார்த்தைகள் மோதுவதாயும் வைத்து எழுதி இருக்கும் ஸ்டைல் கவனிச்சீங்களா?? தரும்தொறும், வந்து, ஒன்று, குலம் ஆகியவை ரெண்டு தடவை வந்து மோதி பொறி ஏத்துதாம்.

அது சரி.. உங்களுக்கு எப்போதாவது ஏதாவது பொறி தட்டியிருக்கா??

பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??

பாகப் பிரிவினை


பழங்கதை:

அது 1986. ஈ மெயில், ஆன்லைன் டிக்கெட்டிங் இல்லாத காலம்.

டிக்கெட்டுக்காய் ஒரு தந்தி வந்தது. அந்தமானுக்கு வர கப்பல் டிக்கெட் உறுதியாகி விட்டது என்று. சென்னை அலுவலகம் வந்தேன். உடனே தம்பு செட்டி தெருவில் போய் டிக்கெட் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்..

தெருப்பெயர் வித்தியாசமாய்ப் பட்டது. ஏன் இந்தப் பெயர் வந்தது???

அரதப் பழங்கதை:

ஒரு காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தார்களாம். சொத்துத் தகறாறில் (பெரிய தகராறு என்பதால் ர , ற ஆகிவிட்டது)வீட்டை ரெண்டாக்கி விட்டார்களாம். எல்லாம் பிரித்தாகி விட்டது. ஒரு செம்பு மட்டும் தான் மிச்சம்

விஜய் ஒரு படத்தில் வக்கீலுக்கு அசிஸ்டென்டாக இருந்து வாதி பிரதிவாதி இருவரையும்  பஞ்சாயத்து செய்து அனுப்புவார். அவர்கள் போகும்போது வரப்பு நீயே வச்சிக்க..இல்லெ நீயே வச்சிக்க என்று தோளில் கை போட்டு போவார்கள்.

இப்படித்தான் தம்பிமார்கள் இருவரும் செம்பை விட்டுக் கொடுத்தனர். ஆனால் மகளிர் அணி அந்த செம்பை விடுவதாய் இல்லை.

ஒரு செம்பை வைத்து வடிவேலுக்கு நிச்சயமான ஒரு கல்யாணத்தை ஒரு கல்யாண புரோக்கர் நிறுத்துவாரே, அந்த மாதிரி பிரச்சினை வளர்ந்தது.

செம்பு மேல அந்த மனைவிமார்களுக்கு என்ன அவ்வளவு பிரியம்?? கணவன்மாரின் நெத்தி பாத்து அடிக்க தேவையாய் இருந்திருக்குமோ!!! செம்பை விற்கவும் அவர்கள் தயாராக இல்லை. இறுதியில் ஆளுக்குப் பாதியாய் செம்பையும் வெட்டி எடுத்துக் கொண்டார்களாம்.

இது ஊர் முழுதும் பரவிவிட செம்பு வெட்டியவர்கள் உள்ள தெரு என்று முதலில் பேசப்பட, பின்னர் செம்பு வெட்டி தெரு என்றாகி இப்போது தம்பு செட்டி தெரு என்றாகி ஜாதி பெயர் நீக்கி இன்று தம்பு தெரு என்று பல் இளிக்கிறது.

இதைப் படிப்பவர்களில் ஒருவர்: சும்மா.. நீங்க பாட்டுக்கு கதை விடாதீங்க…

டி என் கே: ஆதாரம் – கம்பன் நேற்று இன்று நாளை By சிகி சிவம்.
இ ப ஒ: அய்யய்யோ…. அப்பொ அடுத்த பாரா கம்ப ராமாயணம்
தானா???

சங்ககாலம்:

நிலம், இடம் இதுக்கே இவ்வளவு சண்டை பிடிக்கும் இந்தக் காலத்தில்.. ஆட்சியையே அப்படியே தூக்கிக் கொடுக்க… அதையும் வாங்காமெ… இல்லை..நீயே வச்சிக்க.. எனக்கு வேண்டாம் என்று சொல்வது சொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்.

கம்பராமாயணத்தில்

“அரசு நின்னதே ஆள்க” இது இராமன் பரதனைப் பாத்து சொன்னது.

“சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்
மன்னன் ஆதி; என்சொல்லை மறாது என்றான்”

இது பரதன் சத்ருகனிடம் சொன்னது. நீ அரசை  வசிக்கப்பான்னு.

“யானாம் இவ்வரசை ஆள்வேன்”

இந்தக் கதை இங்கே வேண்டாம் பரதண்ணா… என்னை ஆளைவிடு என்று அவரும் கலண்டுக்கிறார்.

சகோதரபாசம் இப்படி இருக்கனும் என்று கம்பன் எதிர் பாக்கிறார்.

சரி.. இதெல்லாம் இப்பொ சாத்தியமா??