கொடுக்கிற தெய்வம்.,


சமீபத்தில் ஒருவர் ஆபீசுக்கு வந்திருந்தார். வந்த வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஊர் உலகம் எல்லாம் சுத்தி வந்து பேச்சை எடுத்து வந்து பின்னர் வந்த வேலை பத்தி ஆரம்பிப்பது தான் நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலையாச்சே.. (சில சம்பயங்களில் அவர்கள் வந்திருக்கும் வேலையை விட, இந்த மாதிரி இடைச் சொருகலாக வரும் இலவச இணைப்புகள் ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும்) சரி..சரி.. மேட்டரைச் சொல்லுப்பா..அது சுவாரஸ்யமா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் என்கிறீர்களா?? அதுவும் சரி தான்.

பேசிக்கொண்டு வந்தவர், தமிழில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? என்று கேட்டார். ஏதோ கொஞ்சமா இருக்கு..என்றேன். (அடிக்கடி மனைவியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்கு என்ற விபரம் அவரிடம் சொல்ல முடியுமா என்ன?? ஏதோ உங்களிடம் அதனைக் கொட்டி ஆறுதல் அடையலாம்.) உங்கள் புளுடூத்தின் கதவைத் திறந்து வைங்களேன் என்றார். நானும் சரி என்று செய்தேன் கேட்டபடி. அவர் ஒரு ஆடியோ சொற்பொழிவினை அமைதியாய் என் மொபைலுக்குக் கடத்தினார்.

ஒரு மணி நேரமாய் ஓடும் உணர்ச்சி பூரவமான சீமான் அவர்களின் பேச்சு அது. தொடக்கத்தில் தமிழருவி மணியனின் நடையில் காமராஜைச் சுற்றி வந்தாலும் பின்னர் அப்படியே பெரியார், ஈழம், தலித், பகுத்தறிவு என்று அழகாய் காட்சி மாறி வருகிறது. கேட்பவர்களை அப்படியே கட்டிப் போடவைக்கும் பேச்சு அது. நடு நடுவே கெட்ட வார்த்தைகள் போல் வந்தாலும், அந்தக் கோபாவேசமான பேச்சுச் சூழலுக்கு அது தவறாகப் படவில்லை. பேச்சுக் கலை என்பது எப்படி சீமானுக்கு இவ்வளவு கைவந்த கலையாய் ஆயிற்று?? கடவுள் கொடுத்த வரமா இருக்குமோ!! அவர் தான் கடவுளே இல்லை என்கிறாரே!!! அவருக்கு ஏன் இந்த பேச்சுக் கலையை கூரையைப் பிய்த்துக் தருவது போல் தந்தார் அந்த (இல்லாத) கடவுள் அவருக்கு??

கோவில்களில் இருவகை. செல்வம் கொட்டும் கோவில்கள் ஒருவகை. மரத்தடி பிள்ளையார் மறுவகை. இது தேவாலயங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் இருக்கும் சிறிய அந்தமானிலும் 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்த்தாலே பிரமாண்டம் என்று தோற்றமளிக்கும் வகையில் ஒரு பக்கம். பழைய சினிமா டெண்ட் கொட்டகையை நினைவு படுத்தும் தேவாலயங்கள் மறு பக்கம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தரும் என்பது எல்லா கடவுள்களுக்கும் பொதுவோ என்னவோ யாருக்குத் தெரியும்?

சப்பர் பா2ட்3கே தேத்தா என்று கூரையை பிய்த்துக் கொண்டு தரும் கலையை ஹிந்தியிலும் சொல்வர். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து அப்படியே உள்ளே போனா எப்படி இருக்கும்? – என்ற கற்பனை ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி. வாழைப் பழத்தை தரலாம். அதையும் உரிச்சியும் தரலாம். அப்படியே வாயில் தினித்து குச்சி வைத்து தினிக்கவா முடியும் என்றும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்யாத ஆட்களுக்கு சொல்லும் வார்த்தைகள் இது..

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு நேர் மாறாக ஒரு சொல்லாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பட்ட இடத்திலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பது தான் அது. அது எப்படி சாத்தியமாகும்? அடி பட்ட இடத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். இருந்த போதிலும் அதில், சிறு வேதனை வந்தாலும் அதுவே பிரமாண்டமாய் இருக்கும். உலகையே தூக்கிக் கொண்டிருக்கும் ஹெர்குலிஸுக்கு மேலும் ஒரு வெட்டுக்கிளி கூட தூக்க முடியாதாம். (9ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் படித்தது)

இதையே அதே 9ம் வகுப்பில் தமிழாசிரியர் வள்ளுவர் சொன்னதையும் காட்டினார். மயிலிறகு அளவு அதிகம் சுமந்தாலும் வண்டி குடை சாய்ந்து விடுமாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

இதனை அந்தக் காலத்தில் தமிழக அரசு சூப்பரா குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. மூட்டை முடிச்சை குறையுங்கள். வண்டிப் பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள். வாழ்க்கைப் பயணம் சுகமாகும் என்று சொல்லி இந்த குறளையும் நல்ல குறலில் பாட்டாக பயன்படுத்தியது.

ஒரு நிமிஷம்… கம்பர்கிட்டெ இருந்து ஒரு Message வந்திருப்பதாய் டொய்ங்க் என்ற சத்தம் சொல்கிறது… பாத்தா… “என்ன இன்னெக்கி ஐயன் வள்ளுவன் தான் Climax ஆ??”..

இல்லை கம்பரே… உங்களை விட்டா எனக்கு வேறு வழி இல்லை முடிக்க.. இதோ வந்திட்டேன்..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று தான் எல்லாரும் சொல்வார்கள். கம்பர் அப்படிச் சொல்லிட்டா.. அப்புறம் கம்பருக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீதை சிறையில் (சகல வசதிகளும் இருக்கும் நல்ல உயர்தர Open Jail தான்) இருந்தாலும் சோகம் உருக்குகிறதாம். எப்படி? புண்ணைப் பிளந்து அதில் நெருப்பை நுழைத்தது போல் என்கிறார் கம்பர். புண் சிரமம். நெருப்பு.. கேக்கவே வேணாம். ரெண்டும் சேந்தா??

ஒரு Flow Char போடும் அளவுக்கு கேள்விகள். மாயமானைத் தேடிப் போன இராமன் இலக்குவனை காணலையோ? If Yes இராவணன் தான் கடத்திச் சென்றார் என்பதை அறியவில்லையோ?? If Yes இலங்கை இருக்குமிடம் தெரியாது இருப்பர் போலும்… இப்படி எல்லாம் கவலைப் பட்ட சீதையின் வேதனை இப்படி இருந்ததாம்.
கண்டிலங்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்கொண்டு இறந்தமை அறிந்திலராம் எனக் குழையாபுண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள்

கம்பன் கலாட்டாக்கள் தொடரும்.

மாடி மேலே மாடி…


“மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேத்து வைக்கும் சீமானே…” இந்தப்பாட்டு எந்தப் படம் என்று தெரியுமா?? தெரியாதவர்களுக்கான அடுத்த கேள்வி… ஒஹோ ப்ரடெக்ஷன் தெரியுமா?? அதுவும் தெரியவில்லையா?? காதலிக்க நேரமில்லை என்ற பாட்டு எந்தப் படத்தில் வரும்?? இதுவும் தெரியவில்லையென்றால் நீங்கள் சினிமா அறிவு கொஞ்சமும் இல்லாதவர் என்று தான் அர்த்தம்.

மாடி வீடு என்பது, பணக்காரத் தனத்தின் ஓர் அளவுகோளாக இருந்தது.. ஒண்டிக் குடித்தனத்தில் இருந்தவரை, என் தந்தையாரின் ஆசையே, மாடி வீடு கட்ட வேண்டும் என்பது தான். அது அவர் இருந்த வரை நிறைவேறவில்லை. நான் சின்னதாய் சொந்த ஊரில், பரமக்குடியில் மாடி வீடாய் கட்டிய போது அவர் இல்லை அதை பார்த்து ரசிக்க.

அடுத்த தலைமுறை பார்வையில் இது எப்படி இருக்கிறது?? அதையும் தான் கேட்டுப் பாக்கலாமே என்று, என் பையனிடம் கேட்டேன். பொடிப்பயலே.. மாடி வீடு, கார் இதெல்லாம் இருக்கு. நாம் ஏழையா? பணக்காரர்களா??

பையன் பதில்: இரண்டும் இல்லை. நடுத்தரம். மாடி வீடு, கார் இருந்தாலும் நடுத்தர வர்க்கம் என்ற நிலை தான் இன்றைக்கு. அல்லது நடுத்தர வர்க்கத்தினர், வீடு கார் வைத்திருக்கும் நிலைக்கு வந்து விட்டனர் என்பதுவும் தெரிகிறது.

ஏழாவது மாடியில் இருந்தாலும் FLAT ல் இருப்பவர் மாடிகளின் சொந்தக்காரர் ஆகிவிட முடியாது.. இவைகள் எல்லாம் இந்த நவீன காலக் கட்டாயங்கள்..

மாடிகளை ஆங்கிலத்தில் ஏன் தான் STORY என்கிறார்களோ… இன்னும் காரணம் விளங்கவில்லை.. அதிகமா கதை விடுகிறவர்களுக்கு தோதா கதைக்கும் மாடிக்கும் ஒரே பேரா வைத்து விட்டார்களோ…

ஏழை, மாடி வீட்டில் வாழ்ந்து விடலாம்.. ஆனால் மாடி வீட்டில் இருந்தவர்கள் திடீரென்று ஏழைகளாய் மாறும் விதி வித்தியாசமானது. அந்த ஏழைகளின் நிலை பரிதாபமானது. அரசுக் குடி இருப்பு மாடிகளில் வாழும் ஏழைகளும்(??) இருக்கத்தான் செய்கிறார்கள்..எல்லாம் இருக்கும்… ஆனால் எதுவும் சொந்தம் இல்லை..

நீ எதை நினைக்கிறாயோ… அதாகவே ஆகி விடுகின்றாய் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். நெனைப்பு தான் பொழைப்பெக் கெடுக்குது என்றும் கேட்டுருப்பீங்க.. Positive Thinking and Negative Impact பற்றி கூறும் செயல்கள் இவை.

பணக்காரர் ஒருத்தருக்கு ஏழை நினைப்பு பத்தி சுகி சிவத்திடம் சுட்ட கதை ஒன்று. (அவரும் இந்தக் கதையை வேறு எங்காவது சுட்டது தானே??)

ஒரு ஊரிலெ ஒரு பணக்காரர் இருந்தாராம். வெத்திலெ போடுவது இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். கொத்து கொத்தா வெத்திலை எப்பொழுதுமே தட்டுலெ வச்சிருப்பார். ஆனா உள்ளதில் அழுகினதை பொறுக்கி எடுத்து வாயில் போடுவார்…நல்லதை நாளைக்கு சாப்பிடுவோமே என்று வைப்பார்.. நாளையும் அதே மாதிரி அழுகினதை அழிப்பார் முதலில்.. நல்லது, நாளை சாப்பிடலாம்.. என்று சொல்லியே, நாட்களை கடத்துவார்.. ஆனால் அந்த “நாளை” என்பது வரவே வராது.. அப்படியே இறந்தும் போனார்.

இறுதிக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தது.. இறுதியாய் ஒரு தடவை அவருக்கு விருப்பமானதை வைத்து, காரியம் செய்ய நினைத்தார்கள். அவர்களுக்கு அந்த வெற்றிலை ஞாபகம் வந்தது. நல்ல கும்பகோணம் கொழுந்து வெத்திலையினை கொண்டு வந்தனர்.. நடுவில் ஓடி வந்த அவர் மகன், “அப்பாவுக்கு அழுகிய வெத்திலை தான் பிடிக்கும்.. அதை மட்டுமே வையுங்கள்” என்றாராம்..

இது தான் ஏழையாய் வாழ்ந்த மாடி வீட்டு பணக்காரனின் நிலையினைச் சொன்ன கதை.

மாடிகள் கட்டிடமான வீடுகள் தாண்டி இன்னும் சிலவாகவும் இருக்குதே..!!!

அடுக்கு மாடி மாதிரி… அடுக்கு மல்லி… மாடி பஸ்..(இன்னும் ஏறாத காரணத்தால் அதீத ஆசை ஏற இருக்கு)

ஆமா.. ஏதோ பொகையும் வாசனை வருதே… ரொம்ப சரி… கம்பப் புகை தான் அது.. இவ்வளவு இழுத்து, கம்பரை மட்டும் இழுக்காமல் விடுவோமா என்ன??

கம்பர் பார்வையில் இந்த மாதிரி ஒரு அடுக்கு தெரியுது.. யார் மூலமா?? அனுமன் மூலாமா பாத்ததை, 3ஜி கேமிராவில் பாத்தது மாதிரி பாக்காமலேயே எழுதுறார் கம்பர்.

அடுக்கு மல்லி மாதிரி, அடுக்கு தாமரை அவர் கண்ணில் தெரியுது. அது என்ன ரெண்டு தாமரைகள்? ஒன்று முகம். இன்னொன்று, அதை தாங்கி நிற்கும் கை (அதான் இது என்று சொன்ன கவுண்டமனி செந்தில் கதையா தெரியலை!!!).. எங்கே இந்த காட்சி??

சீதையை தேடப் போன போது கண்ணில் பட்ட சங்கதி தான் அது. அழகான மனைவி.. குற்றம் செய்த கணவர்.. அதனால் பிரிந்த அவளின் சோகம்.. மோகமும் கூட… காமத்தீயால் மார்பில் சாத்திய சந்தனமே தீய்ந்து போக.. முள்ளே இல்லாத அந்த தாமரை முகத்தைத் தாங்கி தாமரைக் கைகளே இருந்ததாய் சொல்கிறார் கம்பர்..

நலனுறு கணவர் தம்மை நவைஉறப் பிரிந்து விம்மும்
முலைஉறு கலவை தீய முள் இலா முளரிச் செங்க்கேழ்
மலர்லிசை மலர் பூத்தென்ன மலர்க்கையால் வதனம் தாங்கி
அலமரும் உயிரினரோடும் நெடிதுயிர்த்து அயிர்கின்றாரை.

ஹலோ..உங்க கண்ணுக்கும் இப்படி ஏதாவது மாடி வீட்டு சங்கதி தெரியுதா?? மாடி வீட்டு பிகர் தெரிஞ்சாலும்

பரவாயில்லெ..தைரியமாச் சொல்லுங்க..