ஹிந்தியும் நானும்


Abi 1

அபியும் நானும் படத்தெ எல்லாரும் ரசித்துப் பாத்திருப்பீங்க. அந்தப்படம் ஏன் பிடிச்சிருக்கு? ன்னு கேட்டா, ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொல்லுவீங்க. ஆனா, எனக்கு என்னவோ, அந்தப் படத்தோட பெயரே ரொம்பப் பிடிச்சிப் போச்சி.. (இம்புட்டு நாள் கழிச்சி எழுதுறதுக்கும் ஆச்சி). அந்தப் பட டைட்டில் என்னை பள்ளிக்கூட நாட்களுக்குக் கூட்டிப் போயிடுச்சி. ஆறாவது வகுப்பில் பரமக்குடி பள்ளியில் பி என் நாகநாதன் அவர்கள் நடத்திய பாடத்தை நினைவு படுத்திடுச்சி அந்தப் பட டைட்டில். ஆங்கிலத்தில் அபியும் நானும் மாதிரி சொல்வதானால் எப்பொவுமே Abi & I என்று தான் சொல்லணுமாம். I and Abi என்று சொல்லக் கூடாதாம். ஆனால் தமிழில் அந்தச் சிக்கலே கிடையாது. நானும் அவனும், அவனும் நானும் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

abi 2

இப்பொ அந்த ஹிந்தியும் நானும் டாபிகுக்கு வரலாம். தமிழ் நாட்டுக்கும் ஹிந்திக்கும் தான் ஏழாம் பொருத்தம் இருகிறது உலகத்துக்கே தெரிஞ்ச கதை தானே? சமீபத்திலெ மங்கல்யான் வெற்றியினை இந்தியாவே கொண்டாடிக் கொண்டிருக்க, டீவியிலெ நாமெல்லாம் மயில்சாமி அன்னாதுரையத் தேடிக் கொண்டிருக்க, காமெடி நடிகர் மயில்சாமியோடு சூரிய வணக்கத்தில் பேசிக் கொண்டிருந்தனர் சன் குழுமத்தினர். அதெப்படி படிக்கத் தெரியாமல் வெளிநாடு எல்லாம் போய் கஷ்டமாயில்லையா என்று கேட்டனர். ஒரு வெளிநாட்டில், இங்கிலீஸ் ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டாராம். காமெடி நடிகர் சீரியஸாக, எனக்கு தெரியாவிட்டாலும் என் மகன்களை ”இங்கிலீஸ் படிங்க.. ஹிந்தி படிங்க” என்று சொல்லி அவர்களும் நல்லா படிச்சி நல்லா இருக்காங்க என்றார். ஹிந்தி எதிர்ப்பு சேனல்களில் இப்படி ஹிந்தி ஆதரவு செய்தி வருவது வித்யாசமாய்ப் பட்டது.

இப்படித்தான் என் அப்பாவும் ஒரு தடவை ராமேஷ்வரம் போய் வரும் போது முழுக்க ஹிந்திக் காரர்கள் நடுவில் சிக்கிக் கொண்டு தடுமாற, நான் வம்பாய் ப்ராத்மிக் மத்யமா என்று ஹிந்தி படிக்கத் திணிக்கப் பட்டேன். அறம் செய விரும்பு என்பதற்கே கோணார் உரை தேடும் அந்தக் காலத்தில் வம்படியாய் ஹிந்தி படிப்பது சிரமமாய் தான் பட்ட்து. பின்னே சும்மாவா பரமக்குடி சின்னக் கடை பஜார் முதல் ஆத்துப்பாலம் வரை அஞ்சு கிமீ போய் வர வேண்டுமே?). அப்பா மீதும் வம்பாய் “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா…” என்று சொல்லிக் கொடுத்த ஹிந்தி வாத்தியார் மீதும் புரியாமலேயே கோபம் தான் வந்தது.

abi 3

அப்படியே நானும் BE படித்து முடித்து வேலைக்கு மனு போடும் போது கவனமாய் ஹிந்தி பேசும் இடங்களுக்கு அப்ளிகேஷன் போடுவதைத் தவிர்த்து வந்தேன். சிவில் படிப்பு படித்தவர்களுக்கு தமிழகத்தில் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையிலும்… ஹிந்தி ஒழுங்காய் படிக்காத காரணத்தால் இப்படி ஹிந்தி பெல்ட் இடங்களுக்கு அப்ளிகேஷன் கூட போட முடியாமல் இருந்தது. கால ஓட்டத்தில் அந்தமானில் ஹிந்தி பேச வேண்டி இருக்கும் என்ற உண்மை தெரியாமலேயே வந்து சேர்ந்தேன்.

அந்தமானில் வந்து இறங்கியவுடன் இங்கு வாழும் தமிழர்கள் அத்தனை பேரும் ஹிந்தியில் பேசித் தள்ளுவதைப் பாத்தா நமக்குத் தலை சுத்த ஆரம்பித்த்து. ஹிந்தி தெரியாத காரணத்தால் சில இளம் பெண்களிடம் சகஜமாய் பேச முடியாத சங்கடம் வேறு மானத்தை வாங்கியது. (தோதாக அப்போது தான் புதிதாய் வேலைக்குச் சேர்ந்த சில இளைஞிகளும் இருந்தனர். ஹிந்தியில் சந்தேகம் என்று சொல்லி கடலை போடவும் முடிந்தது. ஹிந்தி பேச ஒரு பெங்காலி நண்பர் சொன்ன ரெண்டு டிப்ஸ்… 1. அடுத்தவன் சிரிப்பதை பொருட்படுத்தாமல் பேச வேண்டும். 2. தெரியாத வார்த்தைக்கு ஓ போட்டு சமாளிக்கணும். [அம்மாவுக்கு சங்கடம் வரும் போது உதவும் ஓ மாதிரி]

நான் ஹிந்தி பேச ஆரம்பித்தாலே எல்லாரும் சிரிக்க ஆரம்பித்து விடுவர். கவலைப்படாமல் தொடர்ந்தேன். இந்த ஓ விதியும் கொஞ்சம் பாக்கலாமே.. கடப்பாறையைக் கையில் எடுத்து கல்லின் கீழே வைத்து கல்லை இங்கிருந்து அந்த இடத்திற்கு தள்ளு என்று ஹிந்தியில் சொல்ல வேண்டும். ஒ ஹாத் மே லேகர் ஓ நீசே ஓ கரோ ஓ சே ஓ மே ஓ கரோ.. இப்படி முதலில் சொல்லி அப்புறம் வார்த்தை வளர வளர போட்டு நிரப்பும் வித்தை காலப் போக்கில் வர ஆரம்பித்தது.

ஆண்டுகள் கடந்தன. மற்றவர்களின் ஹிந்தி சுமாராய் இருப்பதால் என் ஹிந்தி நல்ல ஹிந்தி என்று சொல்லப்பட, ரேடியோ, தூர்தர்சனிலும் தொடர்கிறது என் ஹிந்திப் பயணம். அந்தமானில் டாலிக் எனப்படும் TOLIC – Town Official Language Implementation Committee க்கு செயளர் ஆகி மலர் வெளியிடும் அளவுக்கு வந்துட்டேன். தற்போது லட்சத்தீவுகளின் டாலிக் அமைப்புக்கு தலைமைப் பொறுப்பும் இருக்கிறது. (நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? அல்லது பேய்க்கு வாழ்க்கைப் பட்டா புளிய மரத்துக்கு ஏறப் பயந்தா எப்படி? எப்படி வேணும்னாலும் நெனெச்சுக்குங்க)

போன வாரம் லீவில் பேங்களூர் சுத்திக் கொண்டிருக்கும் போது தில்லியிலிருந்து (ரெண்டு மாதத்தில் ஓய்வு பெற இருக்கும்) ஒரு (திருமதி) செயலர் வருவதாகவும், ஹிந்தி வேலையை ஆய்வு செய்யவே வருவதாகவும் செய்தி வர, என் லீவுக்கு வந்தது வேட்டு. என் ஹிந்தியும், என சக ஊழியர்களின் துல்லியமான உச்சரிப்பும் அவருக்கு பிடித்துவிட நாங்கள் அவருக்காய் வழங்கிய பொக்கேக்களை அதான் பூச்செண்டுகளை, நம் துறை ஊழியர்களுக்கே வழங்கி கௌரவித்தமை பெருமையாகவே இருந்தது.

கம்பர் இறங்கி வந்தார். ”நல்லா மாட்டிக்கிட்டெ… இந்த டாபிக்லெ எப்படி இராமாயணம் கொண்டு வருவே?” கிண்டலாய்க் கேட்டார்.

இங்கே சொல்றதுக்கு முன்னே அங்கே அவர்களிடமே சொல்லிட்டேனே… இது நான்.

என்னப்பா வம்பா ஏதாவது சொல்லி வச்சியா?? – கம்பர் கேள்வியில் வருத்தம் தெரிந்தது.

தொடர்ந்தேன். அதெல்லாம் ஒன்றும் இல்லை ஐயனே… கொச்சியில் இருந்து அகத்தி தீவுக்கு விமானம் ஏறி, அப்புறம் கவரத்தி தீவுக்கு ஹெலிகாப்டரிலும் பயணம் செய்த அந்த பொக்கே என்ற பூங்கொத்து அவ்வளவு விரைவாக நம் கைக்கே திரும்பி வந்தது சுக்ரீவனைப் பாக்கப்போன இலக்குவன் வேகமா போனமாதிரி வேகமா வந்திடுச்சே என்றே செயலரிடம். வாவ் என்று ஒரு ஆச்சரியம் வந்தது..

நீங்களும் கிட்கிந்தா காண்டத்து கிட்கிந்தைப் படலத்தில் வரும் அதெப் படிச்சா ஒரு வாரே…வா சொல்லிட மாட்டீங்க.. ?? (அந்த அல்ப சந்தோஷத்துக்குத்தானே இம்புட்டு எழுதுறது)

வாலியின் வலிமையான தம்பி சுக்ரீவனைப் பாக்க, மனுகுல திலகமான இராமன் தம்பி இலக்குவன் கிளம்புகிறான். சுட்டுப் பொசுக்கும் காட்டில், வானையே தொட்டு நிற்கும் ஏழு மராமரங்களைப் போகும் வேகத்தில் அப்படியே தள்ளிட்டுப் போறதெப் பாக்கறச்செ, ஏழு மரங்களெத் தொளச்சிட்டுப் போன இராமபாணம் மாதிரியே போனானாம். எப்புடீடீடீ???

வெம்பு கானிடைப் போகின்ற வேகத்தால்
உம்பர் தோயு மராமரத் தூடுசெல்
அம்பு போன்றன னன்றடல் வாலிதன்
தம்பி மேற்செலு மானவன் தம்பியே

வேகம் பற்றி சொல்ல கம்பன் யூஸ் செய்ததை சந்தடி சாக்கில் நானும் யூஸ் செய்திட்டேன். தப்புங்களா என்ன??

ஆஸ்திரேலியா நண்பர் அன்பு ஜெயா அவர்கள் கவனத்திற்கு… உவமையணியும் உயர்வு நவிற்சி அணியும் ஒரே பாட்டில் இருக்காம்… உங்களுக்குத் தெரியாததா??

வேறு அவல் கெடச்சா மெல்ல வர்றேன்.

கடல் முதல் குடம் வரை


“நீங்க உண்மையிலேயே சிவில் இஞ்சினியரிங்க் தான் படிச்சீங்களா..?? பேசாமெ தமிழ் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கலாமே..!!!” – இப்படி என் தர்ம பத்தினி அடிக்கடி கேட்பதுண்டு. இந்த மாதிரி எழுத ஆரம்பித்தது முதல் அடிக்கடி இந்தக் கேள்வி வருது வீட்டில். ஆனா சமீப காலமா என்னை அறிமுகம் செய்பவர்கள் கூட முதலில் இவர் RTI ல் Expert என்று ஆரம்பித்து பின்னர் தான் இஞ்சினியர் என்று அறிமுகம் தொடர்வர்.. என்ன செய்ய?? நானும் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் என்று வடிவேல் பாணியில் மூன்று முறை கத்த முடியுமா என்ன??

சரி எல்லாருக்கும் தேவையான குடிநீர் பிரச்சினை பத்தி எழுதி அந்த கேள்வி கேட்கும் ஆட்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சி செய்யலாம் என்ற நோக்கில் தான் இந்த போஸ்ட் வருகிறது. (வழக்கம் போல் கம்பர் வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது). கடந்த செப்டம்பர் 15 பொறியாளர் தினத்தன்று ஒரு Technical Presentation தரும் பொறுப்பு என் தலையில் வந்து விழுந்தது. சாதாரணமாய் இந்த மாதிரி வேலைகள் என் தலையில் ஜம்முன்னு வந்து விழும்.

கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கும் மேலாய் அந்தமானில் கொட்டித் தீர்க்கும்
மழை. வானம் கொட்டியவை எல்லாம் வீனே கடலில் போகும் விநோதம். மழையை என்றைக்கோ ஒரு நாள் அதிசயமாய் பாக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கு இந்த மாமழை பார்த்து பொறாமை தான் வரும். 1970களில் பரமக்குடியின் வீட்டில் ஆள் உயர குழாயில் எப்பொ தொறந்தாலும் தண்ணி வரும். 80 களில் வீட்டில் தரையை ஒட்டி குழாய் இருந்தது. 90களில் தெருவில் வந்து விட்டது. 2000 ஆண்டு ஆளுயர பள்ளத்தில் இருந்து தண்ணி இறைக்கும் அவலம். 2010 முதல் அடி பம்ப் காலம். 2020ல் மின்சார பம்பு போட வேண்டி இருக்குமோ??? (அது சரி.. மின்சாரம் 2020ல் இருக்குமா??)

சரி… மழை நீர் சேகரிப்பு பத்திய டாபிக் பேசினா ரொம்பவும் பொருத்தமா இருக்கும்னு நெனைச்சி தயார் செய்ய ஆரம்பிச்சேன். Engineers Day செமெ மழையோடவே விடிஞ்சது.. நம்ம டாபிக்குக்காகவே தொடர்ந்து பெய்த மாதிரி.. அந்த அளவு ஊத்து ஊத்து என்று ஊத்தியது (அது சரி .. செமஸ்டர் பரிச்சை சரியா எழுதாமெ போனா, ஊத்திகிச்சின்னு ஏன் சொல்றோம்??) நெனைச்ச மாதிரியே அந்த டாபிக் அன்னெக்கி களை கட்டியது. மற்றவர்கள் உலக சமாச்சாரங்களை படம் போட்டு காட்ட, நான் மட்டும் உள்ளூர் பிரச்சினை பத்தி பேசினா.. கேக்க கசக்குமா என்ன??

தண்ணி பத்தின கணக்கு பாத்தா.. இப்பவே கண்ணெக் கட்டுதே…? ஒலகத்துலெ 70% தண்ணிதான் (அந்த தண்ணியெக் கணக்கிலெயே சேக்கலை). அதிலெ வெறும் 3% தான் குடிக்க லாயக்கா இருக்காம். அதிலும் 1% தான் கைக்கு எடும் தூரத்திலெ இருக்கு. மத்த 2% துருவப் பகுதியிலெ மாட்டிக் கெடக்குது. உலகத்து தண்ணி மொத்தத்தையும் ஒவ்வொரு ஆளுக்கும் கூறு போட்டு குடுத்தாலும் ஆளுக்கு 5100 கணமீட்டர் அளவுக்கு தண்ணி கெடைக்குமாம் 2025 ல் கூட. (அது 1989ல் 9000 Cubic Meter ஆக இருந்தது என்கிறது படிச்சா சோகம் அதிகமாகும்..)

அந்த அளவு தண்ணியே பொது மக்கள் தேவைக்கு போதுமானதா இருக்கும். ஆனாலும் பற்றாக்குறை.. குடம் குடமா வரிசையா நிக்குதே?? ஏன்.. அப்படி? ம்.. அப்படி கேளுங்க.. நம்ம ஆளுங்க இருக்காகலே உலக மக்களின் மூன்றில் இரு பகுதி மக்கள் கால்வாசி மழை பெய்யும் பகுதியிலெ இருக்காய்ங்க.. அப்புறம் இந்த மழை இருக்கே மழை.. அது நம்ம ரமணன் சொல்ற மாதிரி.. வரும்.. ஆனா வராது என்று பூச்சாண்டி காட்டும். உலகளாவிய கதையும் இது தான்.

சிரபுஞ்சி தான் உலகத்தின் அதிக ஈரமான பகுதி (குடை வியாபாரம் அங்கே பிச்சிட்டு போகுமோ?). வருட மழை நாலு மாடி அளவுக்கு பெய்யுமாம். ஆனாலு மழை இல்லாத சொற்ப காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்குமாம். அந்தமானும் இதுக்கு விதி விலக்கு கிடையாது. 4 மாசம் தண்ணி கஷ்டம். (ராமநாதபுரம் அளவுக்கு இல்லை தான்) 8 மாசம் நல்ல மழை பெய்யும். வள்ளுவர் சொல்லும் நல்ல மழை என்பது தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு தேவையான இடத்தில் பெய்யும் மழையாம். அதாவது மனைவியின் அன்பு அல்லது கோபம் மாதிரி. (இது வள்ளுவர் சொல்லாததுங்க)

அந்தமான்லெ அதிகமா காடு தான் இருக்கு. மரங்கள் எல்லாம் வெட்டி அணை கட்டுவது என்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் ஆயிடும். ஒரு யோசனை வந்தது NCC Officer ஒருவரின் மூளையில். கடலை ஒரு ஓரம் கட்டி அணை கட்டினா எப்படி என்று. அதன் ஆய்வு நம்ம கைக்கு வந்தது. Fishing & Shipping வேலைக்கு லாயக்கில்லாத… கடலின் ஒரு பகுதியை அணை போட்டு தடுத்து குடிநீர் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அப்பொ கடல் நீரின் உப்பை எப்படி எடுக்க.?? நம்ம டாஸ்மாக் ஐடியா தான்.. காட்டமா இருக்கும் சரக்கில் தண்ணி கலக்குறோமே, அதே … அதே தான். அப்படியே மழை தண்ணியை அதுலெ கலக்க கலக்க மூணு வருஷத்தில் நல்ல தண்ணி ஆகும் என்று Delhi IIT உறுதி செய்தது.

இவ்வளவு சொல்லிட்டு கம்பர் வரலை என்றால், அது நல்லாவா இருக்கு? கம்பர் ஏதாவது ஐடியா வச்சிருப்பாரோ? கேட்டேன். அவரோ, “பேசாமெ கடல்நீர் முழுசா வெளியே போகுற மாதிரி ஒரு மதகு வச்சிட்டா??” இப்படி கேக்கிறாரு கம்பர். என்ன சாமி இது… இப்படி யாராவது செஞ்சிருக்காகளா? மறுபடியும் கம்பர்: “நான் எழுதின ராமாயணம் ஒழுங்கா படிச்சா இந்த சந்தேகம் வராது”. ஓடிப் போய் படிச்சா… ஆமா…விளங்குது.

அனுமன் முதன் முதலாக Gate way of Lanka வைப் பார்க்கிறார். அது எப்படி எல்லாம் இருக்கு என்பதாய் சொல்கிறார் அனுமன் வாயிலாக. மேருமலை வச்சி செய்த வழியோ? தேவலோகம் போகும் படிக்கட்டோ? ஏழு உலகமும் ஆடாமல் இருக்க முட்டு கொடுத்த தூணோ? இவ்வளவு சொல்லிட்டு, கடல் நீர் வழிந்தோட செய்த மதகோ…?? என்ற கேள்வியோடு அனுமன் பார்வையில் செல்கிறது கம்பன் அறிவியல் பார்வை.?

மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர்புகு கடற்கு வழியோ? என் நினைந்தான்.

கம்பனின் வேறு பார்வையினை வேறு நாளில் பார்ப்போம்.

ஓவர் பில்டப்பும் அடக்கி வாசித்தலும்.


இப்பொல்லாம் சென்னை மாதிரியான ஊர்களில் டவுன் பஸ்களில் கூட வெளி மாநிலத்து ஆசாமிகளின் பயணம் தெரிகிறது. அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் மேற்படிப்பு வசதிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதை காட்டுகிறது (மின் வெட்டையும் மீறி…). ஆனால் எப்போதும் பல மாநிலத்தவர்களோடு கலந்து வாழும் வாழ்க்கை அந்தமான் வாழ்க்கை.

மாடிக் குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பீகார் மாநிலத்தவர் (அவர் பையன் என் கூட சேந்து தமிழ் பேச கத்துகிட்டு வர்ரான்). கீழ் தளத்தில் உ.பி & ஆந்திர மாநிலத்தவர். அதனாலெ தான் அந்தமானை மினி இந்தியா என்கிறோம்.

சினிமாவிலும் இந்த டாபிக் வச்சி சூப்பரான ஒரு படம் வந்தது பாரத விலாஸ் என்று. சிவாஜி நடிப்பில் வழக்கம் போல முத்திரை பதித்த படம் அது. அதில் அவர் தன் மனசாட்சியுடன் பேசுவது போல் TMS குரலில் பாட்டு வரும். சக்கை போடு போடு ராஜா…உன் காட்டுலெ மழை பெய்யுது.

அதில் நடுவே ஒரு வசனம் வரும். “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்”. என்னதான் பில்டப் கொடுத்தாலும் ஒரிஜினல் தான் எப்போதும் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லும் தத்துவம் தான் அது.
பில்டப் செய்வது என்று ஆரம்பித்து தமிழ் சினிமாக்களில் தேடினால், ஏகமாய் காமெடிகள் சிக்கும். கல்யாணப் பரிசு தங்கவேலுவின் எழுத்தளர் பைரவன் பில்டப், நாகேஷின் ஓஹோ புரடெக்சன் என்று ஆரம்பித்து சமீபத்திய விவேக் & வடிவேல் வரை தொடரும். (நடுவே ரஜனி & விஜய் கூட அந்த லிஸ்டில் வருவார்கள்… ஹீரோக்கள் என்பதால் அவர்களை ஓரமாய் வைத்து தொடர்வோம்)

துபாய் ரோட்டை பத்தி வடிவேல் சொல்லும்…. சாரி… பில்டப் தரும் காட்சி எப்பொ பாத்தாலும் சிரிப்பாவே இருக்கும். “சோத்தை அள்ளி வச்சி ரசத்தை ஊத்தி கொளைச்சி அடிக்கலாம்டா” என்று சொல்லுவது தான் பீக். நடுவே துபாயில் திருநீறு வைச்சி என்றும் பிட்டு போடுவது நல்ல கலக்கல் தான்.

“கெணத்தைக் கானோம்” என்று அலறி அடித்தபடி வடிவேல் வரும் இன்னொரு காமெடி இருக்கு. சிவில் இஞ்சினியர்களை வைத்து இப்படி ஒரு காமெடி அடிக்கடி பேசப்படுகிறது. (விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்ட அத்துனை சிவில் பொறியாளர்களும் மன்னிக்கவும்.)

காசு ஆசை பிடித்த ஒரு சிவில் இஞ்சினியர் ஒரு கிணறை தோண்டாமல், தோண்டியது போல் ரெக்கார்ட் பில்டப் செய்து காசு பாத்து கிளம்பிட்டாராம். அதுக்கு பின்னால் வந்தவருக்கும் அது தெரிந்து விட்டது. அவர் என்ன சளைத்தவரா என்ன?? அவர் இருந்த 5 வருஷமும் பராமரிப்பு செஞ்ச மாதிரி கணக்கு காட்டி காசு சாப்பிட்டாராம். பின்னர் 5 வருடம் நல்ல மனுஷன் வந்து ஏதும் செய்யாமல் போய் விட்டார்.

அடுத்த முறை வந்தவர் பாத்தார். அட 5 வருஷமா பராமரிப்பே இல்லாமல் இருக்கே. அப்பொ சிறப்பு மராமத்து வேலை செய்ய ஆரம்பித்து ஸ்வாகா செய்து விட்டு அவரின் tenure முடித்தார். சமீபத்திய போஸ்டிங்கில் வந்தவர் காலத்தில் தான் அந்த வடிவேலுவின் காமெடி வந்த காலம். அவர் யோசித்தார். அட… நம்ம ஏரியாவிலெ இப்படி ஏதும் கம்ப்ளெய்ண்ட் வந்தால்???? என்ன செய்வது யோசித்தார். கிணறு தோண்டி பல வருடங்கள் ஆயிடுச்சி.. இனி மராமத்து செய்ய முடியாது. இதெ மூட்றது பெட்டர் என்று மூடும் செலவை அவர் பாக்கெட்டில் போட்டுகிட்டாராம்.

இது கொஞ்சம் ஓவராவே பில்டப் செய்த சேதி மாதிரி தானே தெரியுது??

என் பையன் கிட்டெ கேட்டேன், “உங்க வாத்தியார் யார் பேராவது ரொம்ப உனக்கு பிடிச்சிருக்கா??”

“தெரியும். அம்பேத்கார் பத்தி தானே சொல்ல வர்ரீங்க. அம்பேத்கார் என்பது பீமின் டீச்சர் பெயர் தானே?” இப்படி பதில் வந்தது முந்திரிக் கொட்டை போல் (இந்தக் காலத்து பசங்க கிட்டெ வாயே திறக்க முடியறதில்லை. அப்பொ பொன்டாட்டி கிட்டெ??..ம்…மூச்…)

அம்பேத்கார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். கீழ் சாதி என்று ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட மறுக்கப்பட்ட காலம் அது. அவரும் அவரது ஆதரவாளர்களும் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்து வந்தனர். அதை அறிந்து ஜாதி வெறியர்கள் மாட்டு சாணம், மாட்டின் சிறுநீர் (கோமியம் – உபயம் பாக்யராஜ்) ஆகியவை ஊற்றி பூஜை செய்து, மூன்று நாள் பயன் படுத்தாமல் இருந்தார்களாம். [ஆர். முத்துகுமார் எழுதிய அம்பேத்கார் புத்தகத்தில் இன்னும் பல சேதிகள் படிக்க முடிந்தது]

இது கொஞ்சம் ஓவரா இல்லெ?? இது என் பையன் கேட்ட கேள்வி. அவனால் நம்பவே முடியவில்லை இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பது.

ஓவரா பில்டப் தருவதின் எதிர்ப்பதம் அடக்கி வச்சித்தல். ஒன்னுமே தெரியாமெ இருக்கிறவன் தேமேன்னு இருக்கிறது இந்த லிஸ்டில் வராது. நானும் அந்த லிஸ்டில் தான் இருக்கேன்.

அப்புறம்… “இப்படித்தான் ராமாயணத்தில்…” என்று அடிக்கடி எழுதி வரும் நான் ராமாயணம் முழுசாக்கூட படிக்காமெ, ஆரம்ப பாடத்தில் இருக்கும் கத்துகுட்டி.

அதுக்கு நேர் ஆப்போசிட்டா, எல்லாம் தெரிஞ்ச்சி வச்சிருப்பாக… ஆனா சொல்றதுக்கு முன்னாடி, “ உங்களை விட எனக்கு ஒன்னும் தெரியாது தான். இருந்தாலும் என் சிற்றறிவுக்கு…” இப்படி சொல்வது தான் அடக்கி வாசித்தல்.

இப்படித்தான் ராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது.

அனுமன் சீதையை சந்தித்த இடம். தான் ராமனின் தூதன் என்றும், விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பின்னர் அடக்கமாய், தேவி வாருங்கள் உங்களை நான் ராமன் வசம் கூட்டிச் செல்கிறேன் என்கிறார். அதற்கு மறுமொழி சொல்லும் சீதையோ, தன்னால் அதுக்கு ஓகே சொல்ல முடியாது என்பதற்கு லீகலா காரணங்கள் சொல்கிறார் பல.. இதோ அவற்றில் சில…

1. இலங்கை வரும் போதே பல சிக்கல்களை அனுபவித்த அனுமனுக்கு தன்னை சுமந்து திரும்பும் போது அதே சிக்கல் வந்தால் அனுமனுக்கு அல்லவா சிக்கல் வரும்?
2. ராமரின் வீரத்தை குறைத்த மாதிரி ஆயிடாது??
3. ராவணன் என்னை கொண்டு வந்த மாதிரியே வஞ்சனையா, அனுமன் என்னை கொண்டு போவது.. நல்லாவா இருக்கு?
4. இராவணன் & இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
5. என் கற்பை ராமரிடம் நிரூபிக்க வேண்டாமா?
6. ஆடவரை தீண்டாது இருகும் நான், நீயும் ஆடவன் அல்லவா??
இப்படி நச் நச் என்று போகுது பாயிண்ட்..

ஆனா நான் சொல்ல வந்த சேதி இது இல்லை.

இவ்வளவு லாஜிக்கலா யோசிக்கும் சீதை சொல்லும் முன் அடக்கி வாசித்தது தான் நான் சொல்ல வந்த செய்தி.

சீதை அனுமனிடம் முதலில் சொன்னது இது தான்: நீ சொல்றது ஒனக்கு ஒன்னும் பிரமாதமான வேலையா இருக்காது தான். ரொம்ப ஈஸியாவும் செஞ்சிடுவேதான். நல்லாத் தான் யோசிக்கிறே.. நான் ஒரு பெண். பெரிய(!!!) சிற்றறிவு தான் இருக்கு. எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு படுது. இது என்னோட கருத்து.

இப்படி அடக்கி வாசிச்சிட்டு அப்புறம் தான் அத்தனை லா பாய்ண்டும் வருது சீதையிடமிருந்து.

அறியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதமைச் சில்மதிப் பெண்மையால்.

இதனால் அறியப்படும் நீதி: பில்டப் செய்யலாம். ஆனா ஓவர் பில்டப் கூடவே கூடாது. அடக்கி வாசிக்கலாம். ஆனா தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் சொல்ல வேண்டிய சேதியை சொல்லியே ஆக வேண்டும்.

இது சீதை சொன்ன கீதை.
மீண்டும் சந்திப்போம்.