அறை..சிறை…நிறை….


அந்தமான் என்றாலே எல்லாருக்கும் ஞாபகம் வருவது ஜெயில்தான். இந்த பிளாக் ஆரம்பிச்சி 145 போஸ்ட் தாண்டி ஓடும் போது தான் இந்த சிறை பத்தி எழுதாம விட்டது தெரியுது. (அது சரி இன்னெக்கி என்ன ஆச்சி?? அந்த திடீர் ஞானோதயம் என்று கேக்கீகளா??… இருக்கு… அதையும் தான் சொல்லாமெலெயா போயிடுவேன்??)

அந்தமானில் அந்த கூண்டுச்சிறை உருவாக வேண்டும் என்ற சூழல் உருவான இடத்துக்கு இன்னெக்கி போனேன். ஆனா நீங்க அப்படியே காலச்சக்கரத்தை பின்னாடி சுத்தி இதே மாதம் 8ம் தேதி.. ஆனா வருஷம் மட்டும் 1872க்கு வரணும்.

அந்தமானின் தீவுகளில் மவுண்ட் ஹரியட் எனப்படும் ஓர் உயரமான இடம் அது. (இப்போது கூட அந்த இடம் மத்த இடங்களை விட ரொம்ப கூலா இருக்கும். ஹனிமூன் ஜோடிகளுக்கு உகந்த இடம் என்பது ஒரு கூடுதல் தகவல்). லார்ட் மயோவுக்கும் அந்த இடம் ரொப்பவும் பிடிச்சிருந்தது.. இருக்காதா பின்னெ…?? ராணியும் தான் கூடவே வந்திருந்தாகலாம். (ராணி தானா என்பதற்கு வரலாற்று சான்று தேட வேண்டும்)

ஒரு தேனிலவுக் கூடம் கட்டலாமா என்று யோசிக்க வேண்டிய நேரத்தில் அந்த இடத்தில் ஒரு சான்டேரியம் கட்டலாமே என்று யோசித்தாராம் அந்த மனுஷன். ஒரு வேளை ராணியை தனியே உட்ரலாம் என்ற எண்ணமா இருந்திருக்குமா?? யாருக்கு தெரியும்??

அதே யோசனையில் 15 நிமிடம் பயணம் செய்து திரும்புகிறார் லார்ட் மயோ. ஹோப் டவுன் என்ற இடத்தில் நல்ல ஒரு வரவேற்பு காத்திருக்கிறது அவருக்கு. ராணியை சொகுசான உயரமான இடத்தில் உக்கார வைத்து தனக்கு கொடுக்கப்பட இருக்கும் வரவேற்பை ஏற்க தெம்பாக நடக்கிறார். அது அவரது கடைசி நடை என்பது அவருக்கே அப்போது தெரியாது.

வரவேற்பு ஏற்பாடு சரியாக ராணியால் பார்க்க முடிந்ததோ இல்லையோ ஒரு கொலையை அவரால் தெளிவாய் பார்க்க முடிந்தது. ஆம் கொலை செய்தவர் ஷேர் அலி. பரிதாபமாய் உயிர்விட்டவர் வேறு யாரும் அல்ல… லார்ட் மயோ தான் அது. கணவரின் கடைசி வார்த்தைகளை உயிர் பிரியும் போது கேட்க முடியவில்லை ராணியால். ஏனென்றால், அவரரோ கொலையைப் பாத்து மயங்கி கிடந்தார்.

அந்த ஒரு உயிர் பலி தான், அதுவரை இருந்த “அந்தமான் ஓபன் ஜெயில்” என்ற கான்செப்டை குழி தோண்டி புதைக்க வைத்து, கூண்டுச்சிறை என்னும் கொடுஞ்சிறை தோன்ற அஸ்திவாரம் போட்டது. எண்ணம் ஈடேற 24 ஆண்டுகள் ஆனது. 1896ல் செல்லுலார் ஜெயிலின் அஸ்திவாரம் தோண்டும் பணி ஆரம்பம் ஆனது.

அங்கு அப்போது கணபதி ஹோமம் செய்திருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஆனால் அந்த லார்ட் மயோ கொல்லப்பட்ட பகுதியில் அந்த ஹோமம் நடந்தது இன்று. முத்து மாரியம்மன் கோவில் ஒன்று தமிழர்களின் முயற்சியால் கும்பாபிஷேகம் வரை இனிதாய் இன்று நிகழ்ந்தது.

எல்லா கும்பாபிஷேக நிகழ்விலும் தவறாது கருடன் வருவதாய் சொல்கிறார்கள். இன்றும் 20 நிமிட மந்திரங்களுக்குப் பின்னர் ரெண்டு கருடர்கள் வந்து வட்டமிட்டது இன்றைய ஹைலைட் சமாச்சாரங்கள். கருடன் வந்தது இருக்கட்டும்… கருடன் சொன்ன சேதி பத்தி எதும் தெரியுமா உங்களுக்கு??

அதெச் தெரிஞ்ச்சிக்க இன்னும் கம்ப காலம் வரைக்கும் போயே ஆக வேண்டும். அடிக்கடி கோபப் படுவோர்கள் கவனத்திற்கு… இனி மேல் ஏன் இப்படி லொள் என்று விழுகிறீர்கள்? என்று யாராவது கேட்டா, தைரியமா சொல்லுங்க.. அந்த ராமனுக்கே கோபம் வந்திருக்கே என்று.

ராமர் கோபப்பட்ட இடம் அந்த ஜடாயு என்ற கருடன் சொன்ன செய்தி (சீதையினை ராவணன் வஞ்சித்து எடுத்துப் போன தகவல்) கேட்ட போது தான்.

இந்த மூ உலகத்தையும் இந்த சினம் கொண்ட அம்பினால் அழிப்பேன் என்ற ராமனின் கூற்றுக்கு ஜடாயு பொறுப்பாய் சொன்ன பதில்: ஓர் அற்பன் தீமை செய்தால் அதுக்காக தீமை செய்யாத உலகத்தையா அழிப்பது?? கோபம் வேண்டாம்… இராமன் சீற்றம் குறைந்தது…

சீறி இவ்உலகம் மூன்றும் தீந்து உக சினவாயம்பால்
நூறுவென் என்று கையில் நோக்கிய காலை நோக்கி
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம்
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி

ஒரு லார்ட் மயோவின் மறைவுக்கு பின்னால் எழுந்த கோபம், எத்தனை எத்தனை கொடுமைகளை அந்த சிறையால் அனுபவிக்க வைத்தது… ஆனால் நம்ம கம்பர் சொல்லும் சேதியோ.. அமைதிப் பாதை…

என்ன நான் சொல்வது சரி தானே??

வரும்… ஆனா வராது..


வரும்… ஆனா வராது..

தமிழ் திரையுலகம் நிறைய வார்த்தைகளை நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதில், இந்த வரும்.. ஆனா வராது என்பதும் அடக்கும். அந்த பணிகள் இப்போது மேலும் விரிவடைந்து தமிழக எல்லை ஏன் இந்திய எல்லையையும் தாண்டி போய்விட்டது.. (இந்த கொலைவெறிக்கு தில்லி, பூனே, ஹைதராபாத், கல்கத்தா, அந்தமானிலும் அதன் அர்த்தம் சொல்லி சொல்லி அலுத்துப் போய்விட்டேன்..சமீபத்தில் நிகோபாரி ஆதிவாசிகளும் கொலைவெறி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். எனக்குப் புரியலை ஏன் இந்தக் கொலைவெறி??)

அதை விடுங்க.. இந்த Facebook வந்தாலும் வந்தது கவிஞர்கள் எல்லா இடங்களிலும் பின்னிப் பெடல் எடுக்கிறார்கள். அதிலும் தமிழ் தாயகம் குரூப்பில் வரும் கவிதைகள் அசத்தலோ அசத்தல். சமீபத்தில் Magi Mahendira னின் கவிதை வரிகள் என்னை மிகவும் ஈர்த்து வருகின்றன.

இதோ அவரின் சாம்பிள் வரிகள்..:

எல்லோருக்கும்
சூரியன் வந்தால் தான் விடியல்.
எனக்கு மட்டும்
உன் கனவு முடிந்தால்
மட்டுமே விடியல்.

கனவில் கூட அவளை பிரிந்து விடாமல் வாழ நினைக்கும் வார்த்தைகள்.. சூப்பரா இருக்கு இல்லெ?? (இருக்கா.. இல்லையா??)

இப்படியே சினிமா கவிகள் எப்படியெல்லாம் யோசிச்சி இருக்காங்க என்பதை ஒரு பார்வை பாக்கலாமா??

“மானே தேனே கட்டிப்பிடி” இப்படி ஒரு பாட்டு. மானை கட்டிப் பிடிக்கலாம். ஆனா தேனை எப்படி கட்டிப்பிடிக்க முடியும்?

இன்னும் ஒருவர் பார்க்கிறார் காதலியின் கண்ணை. அது மான் விழி போல் தெரியுதாம். (ராத்திரி இருட்டில் பார்த்திருப்பாரோ??) அன்புள்ள மான் விழியே.. என்று மட்டும் அழைத்து அதில் திருப்தி அடைந்து விடுகிறார்.
மாத்தி யோசிப்பதில் கவிஞர்களுக்கு நிகர் கவிஞர்கள் தான். அதில் பக்திப் பாடல் பாடிய கவிஞர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா… திருத்தனி மலை மீது எதிரொலிக்கும்!!! அப்பா..அகாசப் புளுகுடா சாமி..
திருப்பரங்குன்றம் எங்கே இருக்கு… திருத்தணி எங்கே இரூக்கு.. ஒரு வேளை இந்தக் காலத்து மொபைல் நெட்வொர்க் ஏதும் இருந்திருக்குமோ???

சிரித்துச் சிரித்து என்னை சிறையில் இட்டாய் என்றது பழைய பாடல் வரிகள். தவறு செய்தால் தானே ஜெயிலுக்குப் போவார்கள்? காதலியைப் பாத்தாலே தவறு செய்யத் தோணுமோ?? தவறு செய்தவர்கள் மட்டுமா ஜெயிலுக்குப் போகிறார்கள். தியாகம் செய்தவர்களும் தானே..!! அப்பொ.. தன் இதயத்தை காதலிக்காய் தியாகம் செய்தவர்கள் சிறைக்குப் போவார்களோ… யாருக்குத் தெரியும்?? காதல் வந்தால் எல்லாமே வரும்.

இதே சங்கதியினை தற்போதைய பாடல் வரிகள், ஒரு படி மேலே போய் “சிரிப்பால் என்னைச் சிதைத்தாய்” என்று “கோ” வில் கோபப்படாமல் வருகிறது.

கேட்டுக் கேட்டு பழகிய ஸும்பக் சலோ பாடலை என்ன தான் தமிழில் சாருக்கான் பாடினாலும் அந்த ஹிந்தி பாடல் தான் முன்னாடி வருது.. அதிலும் தேடினால் அழகான வரிகளில் ஒன்று… புன்னகை உன் தாய்மொழியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மொழிப் பிரச்சனைக்கு எவ்வளவு நல்ல தீர்வு.

கவிஞர்கள் எவ்வளவோ சொல்ல வருகிறார்கள்.. ஆனால் முடிவதில்லை.. வார்த்தைகள் பஞ்சமா?? புத்தர் வாழ்க்கையில் நடந்த சின்ன சம்பவம் அது.

ஒரு நபருக்கு ஏனோ தெரியவில்லை, புத்தரை சுத்தமாகப் பிடிக்கலை.. (ஆமா.. நான் எழுதுறதும் எல்லாருக்கும் பிடிக்கவா செய்யுது..??) புத்தர் தெருவில் நடந்து வந்த போது வேகமாய் வந்த அந்த நபர் காரித் துப்பி விட்டு நகர்ந்தார். கூட வந்த சிஷ்யப் பிள்ளைகளுக்கோ செம கடுப்பு.. கன்னா பின்னா வென்று கட்டி ஏறி விட்டார்கள் அந்த நபரை..

சாந்தமே உருவான புத்தர் அவர்களை சமாதானப் படுத்தினார்.. அமைதி.. அமைதி.. கோபப் பட வேண்டாம்..

எப்படி சாமி.. உங்க மேலே துப்பிட்டுப் போனா… எப்படி சும்மா இருக்க முடியும்?

புத்தர் மறுபடியும் சிரித்தார்: நண்பர்களே.. உங்கள் மனது அறிவு நினைப்பதை வார்த்தையால் சொல்லி விட்டீர்கள். அவர் சொல்ல வந்த சேதிக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்க வில்லை. அதற்கு சமமாய் துப்பி விட்டுச் சென்றுள்ளார். இது அவரின் கருத்து. என் கருத்துக்கு நீங்கள் எவ்வளவு மரியாதை தருகிறீர்களோ, அதே அளவு மரியாதை அந்த கருத்துக்கும் தர வேண்டும் என்றார்.. மாமனிதர்கள்… மா மனிதர்கள் தான்.

கவிஞர்களுக்கும் இந்த வார்த்தைப் பஞ்சம் வரும்.. சொல்ல வந்ததும் .. வார்த்தைகள் வராமல் சொல்லாமல் போவதும் அப்புறம் “சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன். வார்த்தையின்றித் தவிக்கிறேன் என்பதும்… கவிதைகளில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமனி ஸ்டைலில் சொல்லமுடியும்.

சாதாரன சினிமா கவிஞர்களுக்கே இப்படி என்றால், கவிச்சக்ரவர்த்தி கம்பருக்கு எப்படி இருக்கும்?? (வந்துட்டான்யா..வந்துட்டான்யா இலக்கியத்துக்கு என்று சொல்வது காதில் கேக்குதே…)

ஊர் தேடு படலத்தில் அனுமனின் பார்வை இலங்கையின் மாளிகைகளும் அதோடு சேர்ந்த செல்வங்கள் மேலும் படுகிறது. ஆஹா… இந்திர லோகம் மாதிரி இருக்கே என்று மலைக்கிறார் மாளிகை மட்டும் பாத்து… சீ..சீ… அப்படி சொல்வதும் கம்மி தான்.. அப்பொ அது சரின்னே வச்சிகிட்டாலும், அந்த செல்வங்களுக்கு எதை வச்சி கம்பேர் செய்ய??
முடியலை.. என்று வடிவேலு பானியில்

அனுமன் சொன்னதாய் வார்த்தைகள் வராமல் கம்பர் சொல்கிறார் தன் வார்த்தை மூலமாய்.

இணைய மாடங்கள் இந்திரர்க்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின் அச்சொல்லும் மாசுண்ணும்
அனையது ஆம் எனின் அரக்கர் தம் திருவுக்கும் அளவை
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும்

அது சரி… உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னு தோணுதா??? இப்பவே சொல்லிடுங்க…