சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

சின்ன வீடா வரட்டுமா?


chinna veedaa

ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது என்பது இப்போதெல்லாம் ரொம்பவும் சகஜமாகி விட்டது. மதம் விட்டு, ஜாதி தாண்டி, வெளிநாடு வாழ்பவரிடம் உள்ளம் பறொகொடுத்து.. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இந்த “ஓடிப் போய்” என்பது மட்டும் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் அவர்கள் “ஓடித்தான்” செல்கிறார்களா? யோசித்தால் சிரிப்பு தான் வரும். ”ஓடல்” என்பது இங்கே, வேகமான, ரகசியமான நடவடிக்கை அல்லது யாருக்கு தெரியனுமோ அவர்களுக்கு மட்டும் தெரியாமல் நடக்கும் சேதி. யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் செய்தி, பலருக்கும் தெரிந்திருக்கும் என்பது அவர்களுக்கு மட்டும் தெரியாது.

“கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா;
ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?” என்று பாட ஆரம்பிக்கும் பாடல் செம ஹிட்டு. எல்லா பட்டி தொட்டிகளிலும் (ஆமா அப்படிப்பட்ட தொட்டி எங்கே தான் இருக்கு?) பட்டிமன்றங்களிலும் அந்தப் பாடல் அடி வாங்கினாலும் கூட, மக்கள் மனதில் அந்த இசை நன்கு பதிந்து விட்டது. தமிழ் இலக்கியங்களிலும் இப்படிப் பட்ட திருமண முறை இருந்தது என்று சொல்லப் போய், இந்தப் பாட்டுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்து விட்டது.

அவனவன் ஒரு கல்யாணம் செஞ்சிக்கிறியா? என்று கேட்டாலே, ஐயோ கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தக் காலத்திலும் கூட அரசு உத்தியோகத்தில் சேரும் போது ஒரு மனைவி தான் இருப்பதாய் உத்திரவாதம் தர வேண்டும் என்பது விதி. (திருமணம் ஆகாதவற்க்கு இந்தச் சட்டம் செல்லாது.. என்பதை சொல்லவும் வேண்டுமோ??) ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் அரசு ரொம்பவும் கவனமாய் இருக்கு.. (ஆமா குடுக்கிற சம்பளம் ஒரு பொண்டாட்டி வச்சி வாழவே பத்தாது. இதிலெ சின்ன வீடு வேறெயா? என்ற கவலையும் அரசுக்கு இருக்குமோ?)

இஸ்லாமியர்களுக்கு ஜாலிதான். தலாக் என்று மூன்று முறை சொல்லிவிட்டால் செமெ ஜாலி என்று யாரவது நினைத்தால், அது தான் இல்லை. அது கணவன்மார்களுக்குத் தரப்பட்ட சுதந்திரம் என்பதாய் இல்லை. பெண்களுக்குத் தரப்பட்டிருக்கும் பாதுகாப்பு என்பது சமீபத்தில் தெரிய வந்தது. ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி ஒரு பிரச்சினை வந்தது. மூன்றாம் முறையாய் சொல்லும் அந்த வார்த்தையினைப் பிரயோகம் செய்யும் போது, காதால் கேட்ட இருவர் சாட்சியாக வேண்டுமாம். அப்படி சாட்சியாய் சொன்னவரை விசாரித்த போது அப்படி கேட்கவில்லை என்று சொல்ல, தலாக் தலாக் ஆகிப் போனது என்பது தனிக் கதை.

முன்பெல்லாம் கல்யாணம் ஆனவர்கள்; கல்யாணம் ஆகாதவர்கள் இப்படி இரண்டு பிரிவுகள் தான் இருந்தன. பின்னர் ஒரு பிரிவும் சேர்ந்து கொண்ட்து. அதாவது சேர்ந்தே இருப்பர் கல்யாணமா?? மூச்… பேச்சே கிடையாது. இப்பொ சமீபகாலமா மீடியாக்களில் கலக்கும் சமீபத்திய ப்து வரவு. கல்யாணம் ஆகி இருக்கும். ஆனால் சேர்ந்து வாழாமல் இருப்பர்… ம்… அப்பா… இப்பொவே கண்ணெக் கட்டுதே…!!!

அரசுத் துறைகளில் இரண்டு விதமான ஆட்கள் இருப்பார்கள். வேலையினைச் சரியாய் செய்பவர்கள். அதே வேலையினைத் தப்பாய் செய்பவர்கள் இப்படி இரண்டு குரூப். சரிய்யாச் செய்யிரேன் பேர்வழின்னு ரூல்ஸ் தெரியாமெ, அல்லது தப்பு தப்பா ரூல்ஸ் பேசி, தானும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பும், மெதாவிகள் இருப்பார்கள். அதே போல், தப்பான காரியத்தை தப்பே தெரியாதமாதிரி செய்யும் எம காதகர்களும் இருப்பார்கள். தப்பெத் தப்பா செய்யாட்டி, தப்பு தப்பே இல்லெ என்பது எழுதப்படாத விதி. அரசு ஊழியர்கள் பலரின் சின்ன வீட்டு சமாசாரங்கள் இந்த தப்பை, சரியாக செய்யும் லாஜிக்கை நம்பித்தான் ஓடுது.

தில்லியில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. கேஸ் ஸ்டடி என்று சொல்லி ஒரு வில்லங்கத்தை அரங்கேற்றி உங்களின் கருத்து என்ன? என்று அலசுவது தான் பயிற்சியின் அன்றைய வகுப்பின் நோக்கம். ஓர் அரசு ஊழியரை ஒரு தண்ணியில்லாக் காட்டு ஏரியாவில் போஸ்டிங் போட்டாகளாம். கண்ணு கலங்கிப் போனாராம். (நம்ம ராம்நாட் ஆட்களுக்கு எங்கெ போனாலும் சொர்க்கம் தான்.) கதறியபடி போனவருக்கு ஒரு இளம்பெண் ஆதரவாய் பேச, மனைவி என்று சொல்லிக் கொள்ளாமல் மனைவிக்கான எல்லாம் பெற்றாராம். தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதையும் சொல்லி விட்டாராம். (என்ன ஒரு நாணயத்தனம்… வில்லத்தனத்திலும் கூட??) போஸ்டிங் டென்யூர் முடிந்து இதோ வந்திடுவேன் என்று கம்பி நீட்டி விட்டாராம்…

போன மச்சான் திரும்பலையே என்று அவர்கள் ஊர் பாஷையில் புலம்பிக் கொண்டிருந்த அந்த அபலைக்கு ஆதரவு தர கூகுலாண்டவரை உதவிக்கு தேடினாராம் ஓர் இளைஞன். அரசுத்துறையின் தலைமை அதிகாரியின் முகவரி கிடைத்ததாம்.. காதலை உருக்கி எல்லாம் எழுதாமெ, ”ஐயா, இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு கடுதாசி எழுதச் சொல்லுங்க” என்று கெஞ்சி (கவனிக்க கொஞ்சம் கூட கொஞ்சாமல்), கடைசியில் மனைவி (தாலி கட்டாத என்று எழுதாத) என்று முடித்திருந்தாராம். இந்தச் சூழலில் என்ன செய்வது என்பது தான் பயிற்சி வகுப்பின் கேள்வி.

இரண்டாம் கல்யாணம் என்று தெரிந்த காரணத்தால், உடனே அவர் மீது துறை சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏகமனதாய் அனைவரும் சொல்லி முடித்தனர். என் வாதம் சற்று வித்தியாசமாய் வைத்தேன். (நமக்கு மட்டும் ஏன் இப்படி ரோசனெ போவுது?). வந்த கடிதம் ஒரு வேண்டுதல். எந்த விதமான புகாரும் அதில் இருப்பதாய் எனக்குப் படவில்லை.. (ஐயா..நான் சின்ன வீட்டுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று மட்டும் தப்பா நெனைச்சிடாதீங்க ப்ளீஸ்). நடவடிக்கை என்று வந்தால், அது பெரிய வீட்டிற்கும், சின்ன வீட்டிற்கும் சிரமமாய் முடியும். ஆக ஒரு நடவடிக்கை, யாருக்குமே பயனில்லாத போது அது தேவையா? என்று கேள்வியினை வைத்தேன். அந்தமான் சொல், தில்லியின் அரியனை அம்பலத்தில் ஏறவில்லை..

எல்லாம் விடுங்க…********** இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் குடுங்க… அங்கே திருவாளர் கம்பர் இருப்பார். அவர் நம்ம ராமனுக்கே ரெண்டாம் கல்யாணம் செய்ய ப்ளான் செய்கின்றார்… அடப்பாவிகளா… ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்ல வந்த கம்பரை இப்படியா வம்புக்கு இழுப்பது என்று கேட்பது தெரியுது. சின்ன வீடா வரட்டுமா என்று யாராவது கனவிலெ கேட்டாக்கூட லேது லேது என்று சொல்லுவேன் என்று ராமனே வாக்குக் கொடுத்திருக்கார். அவருக்குப் போய் ரெண்டாம் கல்யாணமா என்று கேட்பது என் காதுக்கும் கேக்குது..

ஆனா யோசிக்கிறது யாருன்னு கேட்டா பேஜாராயிடும்… அட நம்ம தசரதன் அன்னாச்சி… இப்பொ சொல்லுங்க எப்படீன்னு? ஜோரா.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. கைப்பிடித்த கணவர்க்கு எப்படி அனுசரனையா இருக்கிறது கற்புன்னு பெண்டிருக்கு சொல்லப்பட்டதோ, அப்படி இந்த நிலகமளை ராமனுக்கு கட்டி குடுத்திடனும் என்று தயரதன் நெனெச்சாராம்… ஐய… அம்புட்டுத்தானா…. நீங்க நானு… அப்புறம் இந்த உலகமே வில்லங்கமா இருக்கலாம்.. அதுக்காக நம்ம கம்பனை அந்த லிஸ்ட்லெ சேக்க முடியுமா என்ன? வாங்க நைஸா அந்த பாட்ட்டையும் பாத்திடலாம்..

கன்னியர் அமைவரும் கற்பின், மா நிலம்
தன்னை இத் தகைதரத் தரும்ம் கைதர
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்

வேறு ஏதாவது வில்லங்கம் மாட்டாமலா போகுது?? யோசிப்போம்..