சந்தேகம் என்னும் ஒரு சரக்கு


இப்படி ஒரு காலத்தில் பழைய பாட்டு வரும். அரதப் பழசு தான்… (ஆமா..அந்த ”அரத”ங்கிறதுக்கு என்ன மீனிங்கு?-ன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்). அது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த சந்தகத்தையும் சரக்கோட ஏன் கோர்த்துச் சொல்றாய்ங்க என்கிறதும் மண்டையெக் கொடெயுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றது? என்று மனதுக்குள் நினைக்கிறேன். “உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” வீட்டுக்காரியும் வினா எழுப்புகிறாள்… ரெண்டுக்கும் பதில் இல்லை…

தண்ணி…. சாப்பிடலாம், குடிக்கலாம், அருந்தலாம், பருகலாம், தாகம் தீர்த்துக் கொள்ளலாம்… எல்லாம் சரி தான். அடிக்கலாம் என்றால் மட்டும் பலர் அடிக்க வருவார்கள், அந்தக்காலத்தில் கம்பு வைத்து. ஆனால் பலர் இக்காலத்தில் ஜாலியாக ஓடி வந்துடுவாங்க கம்பெனி குடுக்க. சந்தேகமும் அப்படி தண்ணி அடிப்பது போன்ற போதை தரும் சமாச்சாரமா? தண்ணியை நாம் அடிக்கலாம். (மெஜாரிட்டி ஆட்களைச் சொல்கிறேன்…மது விரோதிகள் மன்னிக்கவும்) ஆனா… சந்தேகம் நம்மை அடிக்கும்.

சின்ன வயசில் சிறு சிறு திருட்டுகள் செய்வது எல்லாருக்கும் வழக்கம் தானே? மஹாத்மா காந்தியே செய்திருக்கிறார். சரி காந்தி கதை ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம சொந்தக் கதைக்கு வருவோம். ஸ்கூல் படிக்கிறச்செ… குரூப் ஸ்ட்டி படிக்கப் போறோம்னு சொல்லிட்டு நம்ம அப்படியே சினிமாவுக்குப் போயிடுவோம். (தப்பை தடயமில்லாமெ செய்ய சினிமா டிக்கெட் எல்லாம் பொறுப்பா கிழிச்சிப் போட்றுவோம்.. அதெல்லெம்..கரெக்டா செய்வோம்லெ..) கொஞ்ச நாள் கழிச்சி அம்மா கிட்டெ அதெ உளறி விடுவேன்… (இப்பொவும் அதே வியாதி தான்… உளறும் இடம் மட்டும் மனைவியா மாறிப் போச்சி.. அம்புட்டு தான்).

நல்லது செய்யும் போது நம்மை அறியாமலேயே சில வில்லங்கங்களும் வந்து சேரும். அப்படித்தான் உண்மை விளம்பியாய் இருப்பதால் சில சந்தேகங்களும் வந்து சேரும். உண்மையாகவே குரூப் ஸ்டடி போட்டு மண்டையைக் கசக்கி படிச்சிட்டு டயர்டா வீட்டுக்குப் போவேன். அம்மாவிடமிருந்து, என்ன படம் எப்படி இருந்தது? என்ற கேள்வி வரும். கோபம் என்றால் கோபம் அவ்வளவு கோபம் கோபமாய் வரும். உலகத்தில் யார் தான் ”அம்மா”விடம் கோபத்தைக் காட்ட முடியும்? விதி வலியது என்று விட வேண்டியது தான். இப்பொவும் அப்படித்தான். மாங்கு மாங்கு என்று (வீட்டில் ஃபோன் கூட செய்யாமல்) பார்லியமெண்ட் கேள்விக்குப் பதிலோ, ஆக்ஷன் பிளான் டாக்குமெண்டோ, விஜிலென்ஸ் கேள்விக்கு பதிலோ தயார் செய்து விட்டு, வீட்டுக்கு வந்தால், பார்ட்டி எப்படி இருந்தது? என்று மனைவியிடமிருந்து சந்தேகக் கேள்வி வரும்… (அப்பவும் நாம கோபப்படாமல் இருப்போம்லெ…)

நிலைமையினச் சமாளிக்க நண்பர் ஒருவர் நல்ல ஐடியா தந்தார்… தினமும் 5 மணிவரை வேலை என்றால், எப்போதும் ஊர் சுத்திட்டு 7 மணிக்குத்தான் கெளம்பனும் வூட்டுக்கு. ஒரு வேளை 5 மணிக்கே கடெயெ மூடிட்டு வீட்டுக்குப் போனாலும் கூட, அம்மணி அமிர்தாஞ்சன் கையோடு கொண்டு வந்து ”என்னங்க…ஒடம்பு சரியில்லெயா…நேரத்தோட ஊட்டுக்க வந்துட்டீக.” என்று நிப்பாகளாம்… இது எப்படி இருக்கு? யாராவது செஞ்சிட்டு அப்புறம் சொல்லுங்க… நானும் முயற்சி செய்றேன்…

ஆஃபீசில் சிலர் வந்து விட்டுப்போன பின்னரும் கூட, சில வாசனை அங்கேயே நிற்கும். ஒரு முறை குறிப்பிட்ட சில மகளிர் வந்து போன பின்னர் மூக்குப் பொடி [ டி வி எஸ் ரத்தினம் பட்டணம் பொடியே தான்] வாசம் குமட்டிக் கொண்டு வந்தது. உதவியாளரிடம் என்ன வாசம்? என்று கேட்டேன். அவர் ஏதோ ஒரு நல்ல(?) பிரண்ட் பெர்ஃப்யூம் என்றார். அடுத்த நாள் பாத்தா… அந்த பெர்ஃப்யூம் என் மேஜை மேல்… எனக்கு ஏதோ ரொம்பவும் பிடிக்கும் என்று வாங்கியே வந்து விட்டார் போலும்…. ஆமா… அவர் ஏன் அதை எனக்கு வாங்கித் தர வேண்டும்? …சந்தேகப் புத்தி ஆரம்பித்தது…

சந்தேகத்தில் மனுஷன் சாவுறது ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்திலெ… அதே சந்தேகம் காரணமா ஒரு யானை உயிர் விட்ட சோகம் அந்தமான்லெ நடந்தது. ஒரு வன அதிகாரியை மதம்பிடித்த யானை கொன்று விட்டது. அது மற்றவர்களையும் கொன்று விடுமோ என்ற சந்தேகம் தான் அந்த உயிர் பிரியக் காரணம். ஆனா ஆய்வு என்ன சொல்லுதாம், 59 சதவீதம் திருட்டு வேட்டைக்காரர்களாலும், 15% ரயிலில் அடிபடுவது (இது அந்தமானில் இல்லை), 13% விஷ உணவு, 8% மின்சாரம் தாக்கி மரணமுமாய் நிகழ்கிறதாம். இனி ஆய்வாளர்கள் சந்தேகத்துக்கும் கொஞ்சம் % ஒதுக்கி வைக்கலாம்.

rouge

மதம் பிடிக்க ”காமம்” தான் காரணம் என்பதை நம்மில் பலர் ஒப்புக் கொள்ளத் தயாராய் இல்லை. அது யானையாய் இருந்தாலும் நாமாய் இருந்தாலும் சரி. யானைக்கு சரியான ஜோடி கிடைக்காத போது தான் மதமே பிடிக்குமாம். அதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமாம். ஆனால் மனுஷனுக்கு மதம் பிடிக்க அப்படி எந்த காரணமும் வேண்டியதில்லை. தமிழைக் காதலிப்பவ்ர்களுக்கு காமத்தை விடவும், காமத்துப் பால் அதிக சுவை என்று சொல்லக் கேள்வி.

வாட்ஸப்பில் நோட்டம் இடச் சொல்லி சத்தம் வந்தது. எட்டிப்பாத்தா, கம்பர்…

ஹை…கிச்சா…

ஹை கம்பரே – இது என் பதில்.

கம்பர்: சந்தேகத்திலெ யானை செத்த கதை சொன்ன மாதிரி தெரியுது..ஆனா, யானைக்கே சந்தேகம் வந்த கதை தெரியுமா??

நான்: சொல்லுங்க ஐயனே தெரிஞ்சிகிடறேன்…

கம்பர்:- சுந்தரகாண்டம்…ஊர் தேடு படலத்தில் அநுமன் கண்ணுக்கே தெரிஞ்சது…ஒனக்குத் தெரியலையா…போய்த் தேடிப்படி..

கம்பர் ஆஃப் லைன் ஆகிவிட்டார்..நான் கம்பரில் ஆழ்ந்துவிட்டேன்..

அந்தக் காலத்து மகளிர் உடலிலிருந்து வீசும் (இயற்கையான) புகை மணமும், மற்ற பிற செண்ட் போன்ற ஐட்டங்களும் குளிக்கிறச்சே அந்த அகழித் தண்ணியிலெ கலந்திடுச்சாம். அப்பொ, அங்கெ குளிக்க வந்த யானைகளின் உடம்பிலும் அந்த வாசனையும் கலரும் ஏறிடிச்சாம். அதெப் பாத்து பெண் யானைகள் எல்லாம் சந்தேகத்தோட, எப்படி மற்ற பெண்யானைகளோடு சேரலாம் என்று காச் மூச் என்று கத்தினவாம்…

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை யானைக்கும் கூட சொல்ல வந்த கவிச்சக்ரவர்த்தியின் பாடல் வரிகள் இதோ…

நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலப் பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால்

பொல்லாத சந்தேகம் யானையையும் பாடாப் படுத்தியிருக்கே..

இப்பொ சொல்லுங்க…உங்க சந்தேகம் எதெப்பத்தி?????

ஊதா ஆ ஆ ஆ ஆ கலரு…


uudhaa

சில தினங்களுக்கு முன்னர் அந்தமான் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ”தகவல் பெறும் உரிமைச் சட்டம்” பற்றிய ஒரு நிகழ்ச்சி. நீங்கள் அதில் கலந்து கொண்டு, நேயர்கள் நேரில் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிட வேண்டும் என்பதாய் கோரிக்கை வந்தது. இது வரை நான், என் மடிக்கணிணி வைத்து படம் காட்டித் தான் பயிற்ச்சி வகுப்புகள் நட்த்தி வருகின்றேன். அதே மாதிரி வசதி இருந்தால் நன்றாய் இருக்கும் என்றேன். அதனாலென்ன? செய்தால் போச்சு.. ஒரே ஒரு விண்ணப்பம்… ஊதா கலர் சட்டையினைத் தவிர்க்கவும்”. இப்படி வந்தது தான் அந்த நேரலை வாய்ப்பு.

நேரலை என்பதால் கேள்விகள் கேட்க ஏதுவாய் அன்றைய அந்தமான் தினசரிகளில் உங்கள் சந்தேகங்களுக்கு ஆர் டி ஐ எக்ஸ்பர்ட் (இப்படி ஒரு பட்டம் அவங்களாவே கொடுத்துட்டாங்க) பதில் அளிக்கிறார் என்று என் பெயரோடு போட்டும் விட்டார்கள். (டாக்டர் எஸ் காளிமுத்து ரேஞ்சில் அப்பப்பொ உங்க பேரு பேப்பரிலெ வருது என்று என் நண்பர்கள் கலாய்ப்பதும் உண்டு). போதாக் குறைக்கு ஃபேஸ்புக்கில், போட ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷம் வேறு… (ஆமா அதுக்காக, பீத்திக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கெடெச்சது என்று உண்மை சொல்ல முடியுமா என்ன?)

இந்த மாதிரி நிகழ்ச்சிகள், மேடை ஏற்றம் இப்படி எல்லாம் சந்தர்ப்பம் வரும் போது, புதிய செட் டிரஸ் வாங்கித் தரும் வழக்கம் என் இல்லாளுக்கு இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. இன்றும் இப்படித்தான் நல்லதாய் (நானே சொல்லிக் கொண்டால் எப்படி?) புதுசு வாங்கி, புதுசா வாங்கினாலும் அதன் மடிப்பின் சுருக்கங்களையும் பெட்டி போட்டு தேய்த்து சுடச்சுட போட்டு அனுப்பி வைத்தார். (சென்று வா… வென்று வா என்று வெற்றித் திலகம் இடாத குறைதான்). லேசான மேக்கப் உமனின் டச்சப் எல்லாம் செய்து முடித்து ரெக்கார்டிங் ரூமில் சென்றேன்.

”நீங்க கேள்வி கேக்கிற ஆள் தானே? இங்கே உக்காருங்க” என்று கஷ்டப்பட்டு, இஷ்டமின்றி அவர் நாக்கில் ஹிந்தி வார்த்தைகள். ஒரு சேர் காட்டப்பட்டது. (என்னெப்பாத்தா பதில் சொல்ற ஆள் மாதிரி தெரியலையோ என்ற கவலையும் வந்தது… என்ன செய்ய…? என் முகராசி அப்படி). நான் பதில் சொல்ல வந்த ஆள் என்றேன் சரளமான ஹிந்தியில். அப்புறம் இருக்கை இடம் மாறியது. அதிகரிகள் ஊழியர்கள் என்று எல்லாமே முழுக்க தென்னிந்தியர்களாய் அதுவும் தமிழர் குழுவாய் அங்கு குழுமியிருந்தனர். இன்னொருவர் உள்ளே வந்தார். என்னை முழுதும் பார்த்தார். எனக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்து, “இந்த ஊர்க்காரங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. சொல்லச் சொல்ல, ஊதா முழுக்கால் சட்டை போட்டு வந்து நம்ம உயிரை எடுக்கிறாய்ங்க… ” (புளு என்பதற்கு ஊதா என்றும், பேண்ட்க்கு முழுக்கால் சட்டை என்றும் எனக்குப் புரியாமல் பேசுறாகளாம்…. தமிழன் அறிவு மெச்சத்தான் வேண்டும்.)

விவேக் காமெடி ஞாபகம் வந்தது. “பாஸ்போர்ட் போட்டோதானே என்று அன்னெக்கி ஜட்டி கூடத்தான் போடாமெப் போனேன்… அதெல்லாம் உமக்குத் தேவையா ஓய்” என்று டிராஃபிக்கில் மடக்கும் போலீசிடம் விவேக் சொன்ன டயலாக் சொல்லி, நிலைமையை சகஜமாக்கினேன். நீங்க தமிழா சார்? என்ற கேள்வியோடு, இடம் கலகலப்பானது.

Picture1

லேப்டாப்பா… படமா… சொல்லவே இல்லையே… வழக்கமான அரசு இயந்திரத்தின் கம்யூனிகேஷன் கேப் பல்லை இளித்துக் காட்டியது. கடைசியில் அவரே, இன்னெக்கி பேச்சு (பேச்சோடொ) மட்டும் இருக்கட்டும். அடுத்த முறை அந்த படம் காட்ற வேலை எல்லாம் வச்சிக்கலாம் என்று உடன்படிக்கை ஆனது.
முகநூல் நண்பர்களான, அமெரிக்கா கார்த்திக் பாபு, சேலம் ஜெயராஜன் இப்படி இவர்களும் கேள்விக் கணை தொடுக்க, நேரலை உலகளாவிய நிகழ்வாய் மாறியது. [சார் நான் கேள்வி கேட்க நெனெச்சேன்..லயனே கெடெக்கலை.. இந்த புகார் இன்றும் வருகின்றது..]

RTI in DD PB

நேரலையில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று நான் எதிர் பாக்கவே இல்லை. கேள்வி கேக்கும் நபரை பாக்கவே படாது. கேமிராவை பாத்தே பேச வேண்டுமாம். (பேசாமெ ஒரு ஜோதிகா படமாவது அங்கே மாட்டி வச்சிருக்கலாம்) தொலைபேசி வழியாக கேள்விகள் வரும் போது, ”என்னது??” என்று முகத்தை விகாரமாய் ஆக்கிவிடக் கூடாது. (இயற்கையாவே கொஞ்சம் அப்படி இருக்கு.. என்ன செய்ய?) கூடுமானவரைக்கும் கூடுதலாக ஆங்கிலம் உபயோகிக்காமல் ஹிந்தியில் பதில் தர வேண்டும். (அமெரிக்கா சேலம் போர்ட்பிளேயர் என மூன்று கேள்விகள் தொடர்ந்து ஆன்கிலத்தில் வந்து சென்றது) இத்தனைக்கும் மேலே, வீட்டில் மனைவியும் பையனும் பாத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த உதறல் வேறு. இத்தனைக்கும் நடுவில் ஈசியான ஒரே வேலை, ஆர் டி ஐ கேள்விக்கு பதில் சொல்வது தான்…

நிகழ்வு முடிந்தவுடன், ஊதா..ஆ..ஆ…ஆ… கலரு என்று சத்தமாய்ப் பாடினேன். கருப்பூக் கலரு….. என்று பதில் பாட்டு வந்தது. ”யாரது என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுவது?” என்று தேடினேன். பின்னே சாந்தமாய் கம்பர்.

கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு இப்படித்தானே சாமி பாட்டு வரணும் – இது நான்.
சுந்தர காண்டம் (படம் பாக்க ஓடிட வேண்டாம்), ஊர் தேடு படலம் படிச்சா புரியும். ஐயன் கம்பர் சொல்லிட்டா, படிக்காமெ இருக்க முடியுமா என்ன?

அனுமன் இலங்கையில் நுழைந்து சீதையைத் தேடும் இடம். ஒரு மாளிகை தெரிகிறது. பளிங்கினால் ஒரு மாளிகை… பவளத்தால் மணி மண்டபம்…. இது சினிமா பாட்டு இல்லீங்க.. கம்பர் சொன்னதுங்க. அந்த வெளிச்சத்திலெ போக சிரமமா இருக்குமாம். கற்பக மரங்களோட நிழல் இருக்கிறதாலெ தேவலையாம் அனுமனுக்கு. அந்த மரத்திலும் தேன் கொட்டுதாம்… அந்த மாளிகையில் வீடணன் மறைந்து மறைந்து வாழ்ந்தாராம். எப்படி? எப்படி? மறைந்தது எப்படி?

தருமத்தின் நிறம் வெண்மையாம். ஆனா, அரக்கர்கள் கருப்பா இருக்கிறச்சே, அவர்களோடு நாம் இருக்க முடியாதே என்று தன் கலரை மாத்தி கருப்பா…(பயங்கரமா – இது கம்பர் சொல்லாத்துங்க) மாறி வாழ்ற மாதிரி விபீஷணனும் மறைந்து வாழ்கிறாராம்.

பளிக்கு வேதியைப் பவளத்தின் கூடத்து பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

இனிமே… ஊதா கலரு ரிப்பன் பாட்டும், கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு பாட்டும் கேட்டால், மாளவிகாவையும் மீறி கம்பர் ஞாபகத்துக்கு வரணும். என்ன சரியா???

மதுரெக்காரெய்ங்களே போதும்….


vadi mdu

எப்பொப் பாத்தாலுமே சிரிப்பை வரவழைக்கும் காமெடிகளில், வடிவேல் காமெடி டாப் தான். அவர் அரசியல் பேசினாலும் அதுவும் மெகா காமெடியாய் இருந்தது தான் பெரிய்ய காமெடி. அவரின் காமெடி கலக்கலில், மதுரைக் காரங்களை வம்பிழுப்பதாய் வந்த காமெடியும் ஒன்று. தெருவில் அண்ணன் தம்பி சண்டையை விலக்கி விடப் போய், வகையாய் வடிவேல் வாங்கிக் கட்டிக் கொள்வதாய் காமெடி வரும். அதில் முத்தாய்ப்பாய், இதெ ஏண்டா முன்னாடியே சொல்லலை என்று கேட்க, நம்ம மதுரெக் காரெய்ங்க எவன் சொன்ன பேச்சு கேக்கிறான்? என்பதாய் முடிவது தான் காமடியின் உச்சம். இந்தப் பக்கம் போகாதீங்க, அக்கா தங்கச்சி சண்டை நடக்கிறது என்றவுடன், அக்கா தங்கச்சியா……? என்று பதறி வடிவேல் ஓடுவது, இன்னும் நினைவில் அனைவருக்கும் இருக்கும்.

ஏன் மதுரைக்கு இப்படி ஒரு சோதனை? கோபாமாய் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவ(ள்)ர், கேள்வி கேட்ட பூமி இது. சிவ பெருமான் என்று தெரிந்துமே கேள்வி கேட்டவர்கள் அவதரித்த பூமி. என்ன…கொஞ்சம் சூடு பூமி.. அதனாலெ பேச்சிலும் கொஞ்சம் நெடி அதுவும் வீர நெடி இருக்கும். இதெ மாத்த முடியாது… நாங்களும் செய்வோமில்லெ… மதுரெக் காரெய்ங்கன்னா சும்மாவா?? இந்த மாதிரியான டயலாக், மதுரெக் காரய்ங்ககிட்டே இருந்து எப்படியாது ஒரு வகையில் வெளி வருவதைப் பாக்க முடியும்.

இந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதற்கு நான் ஊகிக்கும் முக்கிய காரணம், மற்ற ஊர்க் காரர்கள் இங்கு பெரும்பாலும் குடியேறாமையாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 1980களில் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கோவை மக்களின் நாகரீகம், வரிசை ஒழுங்கு எல்லாம் திகைப்பூட்ட வைத்தது. வரிசையில் நின்று ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி அப்புறம் இன்னொரு வழியால் (அது காலியாகவே இருக்கும்) திரும்பிப் போவர். இந்த வழியாய் யாரும் போய் டிக்கெட் வாங்க மாட்டாய்ங்களா என்று மதுரைத்தனமாய் கேட்ட காலங்களும் உண்டு.

அதே மாதிரி, அந்தக்கால சேரன் பஸ்களில் நீளமாய் கயிறு ஒன்று கட்டி இருப்பார்கள். ஒரு முனை காலிங்பெல் மாதிரி ஒன்றில் போய் முடியும். கண்டக்டர் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை இழுத்து வண்டியை நிறுத்துவார். கிளப்புவார். எனக்கோ பயங்கரமான ஆச்சரியம் என்ன்ன்னா, அதெப்படி இந்தக் கயிரை கண்டக்டர் மட்டும் தான் இழுப்பார்? மற்ற பயணிகள் இழுக்க மாட்டாய்ங்களா?? கேட்டேன்… வந்த பதில் இது தான்: மதுரெக்காரெய்ங்க புத்தி போகுதா?

குடும்பத்தாருடன் கோவையில் நண்பர் வீட்டில் தங்கினோம். அவர்களின் பணிவும் மரியாதையும் பார்த்து என் மகள் திக்குமுக்காடிப் போனார். மதுரெப் பாஷை பேசிக் கேட்டவர்களுக்கு, அந்த ஏனுங்க, இருக்குதுங்களா? வேணுங்களா? என்ற மரியாதை கலந்த வார்த்தைகள் தேனாய் இனித்திருந்தது என்று சொல்லவும் வேணுமா? வீடுகளில் விடுங்க… கடையில், அதுவும் ஒரு செருப்புக் கடைக்குப் போக, அவர்களும் அதே மரியாதை மாந்தராய் பேச… ’என்ன இந்த ஊர்க்காரெய்ங்க எல்லாரும் இப்புடித்தான் இருக்காய்ங்க!!!???’ என்ற வியப்புடன் கேள்வி வந்தது என் புதல்வியிடமிருந்து.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கு நடுவிலெ சண்டை ஏதாவது நடந்தா, எட்டிப் பாத்து அடிவாங்கும் (வடிவேல் போல்) செயல் மதுரெக் காரெய்ன்க்கிட்டெ அதிகம் ஏன் நடக்குது? ம்… சும்மா…அதெல்லாம் கெடையாது என்கிறீர்களா? அப்பொ நாட்டாமெ தீர்ப்பு சொன்னா ஒத்துக் கிவீங்களா? என்னோட நாட்டாமை எப்பவுமே கம்பர் தான். என்ன மிஸ்டர் கம்பர் சார்.. மரத்தடி செம்பு எல்லாம் ரெடி… அப்புறம் என்ன சொல்லுங்க நாட்டாமெ சார்…

இப்படி எல்லாம் பேசுனா எந்த நாட்டாமையும் தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்க. ஒரு முக்கியமான டயலாக் சொல்லனும். “எல்லாம் ஆளுக்காளுக்கு பேசிட்டிருந்தா எப்படிப்பா?? நாட்டாமை நறுக்குண்ணு நாலு வார்த்தை சட்டுன்னு சொல்லுங்க…”

இதுக்குத்தான் காத்திருத்து போல் கம்பர் ஆரம்பித்தார்.
ஏதாவது வித்தியாசமா நடந்தா ஒடனே ஓடியாந்து பாக்குறதுங்கிறது ஒன்னும் புதுசு இல்லெ. அந்தக் காலத்திலேயே நடந்திருக்கு..

மதுரெக்கார ஆசாமிகளை விட்டுத்தள்ளு.. சாமிகளே கூட இப்படித்தான்..

சாமிகளா? எப்பொ நடந்தது சாமி? – இது பவ்யமாய் நான்.

ஆமா… ராமாயணத்திலெ அந்த சீன் வருது. அனுமன் இருக்கானே அனுமன், மலை மாதிரி இருக்கிறவன், வலிமையான தோள் உள்ளவன். குரங்குகளில் சிறந்தவன். கடல் கடந்து இலங்கைக்கு போகுறப்போ, காற்றே கலங்கிப் போச்சாம். அதிசயம் என்ன? என்று ஆண்டவர்களே வெரெஸ்ஸா ஓடி வந்தாங்களாம். வர்ரப்பொ அவங்கவங்க, பிளேன்லெ வந்தாகலாம். வந்த அவசரத்திலெ அவய்ங்க பிளேனே முட்டி மோதி கடல்லெ விழுந்து ஒடெஞ்சே போச்சாம்…

அந்தக் காலத்து கதையே இப்படி இருக்க, நம்ம மதுரெக் கதை பராவா இல்லியே???

அப்படியே பாட்டும் லேசா மோதிக்காமெ பாருங்க…

குன்றொடு குணிக்குங் கொற்றக் குவவுத்தோட் குரங்குச் சீயம்
சென்றுறு வேகத் திண்கா லெறிதரத் தேவர் வைகும்
மின்றொடர் வானத் தான விமானங்கள் விசையிற்றம்மின்
ஒன்றொடொன் றுடையத் தாக்கி காக்கட லுற்ற மாதோ.

என்ன நாட்டாமெ தீர்ப்பு ஓகேவா?… அல்லது மாத்திச் சொல்லச் சொல்றீங்களா?

இன்ப அதிர்ச்சிப் பரிசு


இன்ப அதிர்ச்சிப் பரிசு

சமீப காலமாய் வரன் தேடுவது எவ்வளவு சிரமமான காரியமாக இருக்கிறதோ, அதை விட நமக்கு, அந்த கல்யாண விழாவுக்குத் தேவையான பரிசுப் பொருள் தேடுவது அதீத சிரமமான காரியமாகி விட்டது. சிறு பிராயத்து திருமணப் பரிசுகளின் பட்டியலைப் பாரத்தால், முழுதுமாய் பாத்திரங்களும் பண்டங்களுமாய்த் தான் இருக்கும். திருமணம் ஆனவுடன் தம்பதிகளுக்கு பாத்திரங்கள் தேவை என்பதை அறிந்து பரிசு கொடுத்த காலம் அது. (ஒரு வேளை பாத்திரம் அறிந்து…… போடு என்று சொன்னதிலும் ஏதும் உள் அர்த்தம் இருக்கலாமோ?)

காலம் மாற மாற, இந்தப் பாத்திரப் பரிமாற்றம் கூட மாறித்தான் வருகின்றது. (இன்னும் மதுரை போன்ற மாநகரங்களில், திருமண சீசன்களில், பாத்திரக் கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிவதைப் பார்க்க முடிகிறது. சீர்வரிசைக்கும் மக்கள் வரீசையாய் வாங்க நிற்பதும் உண்டு). இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்னரே என்னென்ன தேவையோ, அவை அனைத்தும் வாங்கி வைத்து விடுகின்றனர். அல்லது எல்லாம் வாங்கிய பிறகு தான் கலயாணம் என்றும் பலர் உள்ளனர். (வருங்கால மனைவி மேல் இவ்வளவு கரிசனமா?). சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், வீடு வாசல் எல்லாம் வாங்கிய பிறகு தான் திருமணம் என்றும் இருக்கிறார்கள். (எல்லாம் செட்டில் ஆன பிறகு தான் மற்ற “எல்லாம்” என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம்). வங்காளிகள் இதில் மிகவும் கவனமாய் இருந்து 40 வயதாகியும் செட்டிலும் ஆகாமல், கல்யாணமும் ஆகாமல் கடைசியில், கிடைத்த வாழ்க்கை வாழ்கின்றதை அந்தமானில் காண முடிகின்றது.

அப்படி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிவிடப் போகுது? இதில் இன்னொரு சின்ன சௌகரியம் இருக்கிறது. ”எனக்கு கல்யாணம் ஆனப்பொ எங்க வீட்டுக்காரர் சின்னதா ஒரு கருப்பு வெள்ளை டீவி தான் வச்சிருந்தார். நானு வந்த பொறவு தான் கலர்டீவி மொதக்கொண்டு எல்லாமே வந்தது” இப்படி தம்பட்டம் அடித்துக் கொள்ள, வீட்டிக்கு விளக்கு ஏற்ற வரும் அம்மனிக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாமே… (பொறுப்பில்லாத ஆட்களுக்காய் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு??)

நமக்கு மற்றவர்கள் என்ன பரிசு கொடுத்தார்களோ அதையே நாம் அவர்களுக்கும் பரிசாய் தரமுயல்வது ஒரு ரகம். அவர்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு இது தேவை என்று விசாரித்து அறிந்து தருவதும் ஒரு கலைதான். (அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வீட்டிற்க்குப் போய் ஆராய்ந்து பரிசு தர முயல்வது). சிலர் வெட்கத்தை விட்டு, ”எனக்கு இதை நீ வாங்கிக் கொடு பரிசாய்” என்று கேட்பவர்களும் உண்டு. ஆனால் அந்த பரிசின் விலை கொடுக்க நினைத்ததினை விட அதிகம் ஆகி விட்டால் அதே வெட்கமில்லாமல், வித்தியாச தொகையை கேட்டு வாங்குவதும் நடக்கும்.

கல்யாணப் பரிசாய் பெரும்பாலோரின் தெரிவு கடிகாரமாய்த்தான் இருக்கின்றது. ஒரு வீட்டில் எத்தனை தான் மாட்டி வைக்க முடியும்? (அதுக்காக டாய்லெட், பாத்ரூம் என்று எல்லாமா மாட்டி விட முடியும்??). விழாக்களில் பிரபலங்களுக்கு மரியாதைப் பரிசுகளாய் வரும் பொன்னாடைகளை அவர்கள் என்னதான் செய்வார்கள்? (பொன்னாடை என்று அழகு தமிழில் இருப்பதை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்ய முடிவதில்லை. வெறும் சால்வ் என்ற சொல்லோடு அது முடிந்து விடுகின்றது. தமிழன் அந்த ஆடைக்கு பொன் என்று பெயர்சூட்டி அதிலும் மகிழ்வு காண்கிறான்… வாழ்வின் இரகசியமே… மகிழ்தல் என்பதில் எப்போதும் தமிழருக்கு தனி அக்கரை இருந்திருப்பதை மறுக்க இயலாது.

சாதாரணமான பரிசை எதிர்பார்த்து பள்ளிகளில் போட்டிகள் நடக்கும் போது மிகப் பெரிய பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ”இன்ப அதிர்ச்சி”ப் பரிசு கன்னடத்துப் பைங்கிளிக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது அவருக்கு அந்தப் பெயர் இல்லை. பேங்களூரில் (அப்போது பெங்களூருவும் இல்லை தான்) புனித தெரசா பள்ளியில் அந்த இளம் சரோஜா பாடியிருக்கிறார் ஒரு இசைப் போட்டியில். தலைமை தாங்கியவர் அன்றைய பிரபல நடிகர் கம் தயாரிப்பாளர் ஹன்னப்ப பாகவதர். இந்த இனிய குரலை சினிமாவுக்கு பயன்படுத்தலாமே என்று இன்ப அதிர்ச்சிப் பரிசு தந்தாராம். குரல் தேர்வின் போதே, நடிகை ஆக்கலாமே என்று அவர் மனது ஓடியதாம். அந்த ஹன்னப்பரின் மனதில் ஓடிய அன்றைய பரிசு, 1958 முதல் தமிழக ரசிகர்களின் இதயங்களில் அபிநய சுந்தரியாய் இன்னும் இருக்கிறது. [ஆமா…நெஞ்செத் தொட்டுச் சொல்லுங்க… ஹன்னப்ப பாகவதர், சரோஜாதேவி இவர்களில் உங்களுக்கு யாரைத் தெரியும்?] வில்லங்கமான ஆசாமிகளுக்குத் தெரிந்த அந்த .. .. .. தேவியைப் பற்றி…. சாரி… நான் மறந்திட்டேன்.
அந்தக் காலத்தில் ஏதாவது வெற்றியடைந்தால் அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது. என்ன ஆதாரம் என்று கேப்பீகளே?? முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு பாக்கீக?.. இப்படிப் பட்ட ஒரு வெற்றிப் பரிசாகத் தான், முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தது. சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்ச்ச்ச்ச்சா தரணும் என்று (கவுண்டமனி போல்) நினைத்தாராம். அப்போது கையில் சிக்கிய பெரிய்ய்ய்ய பரிசு தெய்வானை. அப்புறம் என்ன டும் டும் டும் தான். (சிலருக்குத்தான் இப்படி டபுள் லக்கி பிரைஸ் அடிக்கிறது முருகன் மாதிரி).

அப்படியே லேசா (கம்)பர் + வால்(மீகி) = பர்வால் இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தலாம். சிவதனுசை ஒடிப்பவர்க்கு சீதையினை இல்லாள் ஆக்கும் பரிசுத் திட்டம் ஜனக மஹாராஜரிடம் உதயமானது. டப்பாவிலெ கெடெச்ச பொண்ணு, ஒரு டம்மி பீஸுக்கு போயிடக்கூடாது என்ற ஜனகனின் டக்கரான ஐடியா அது. ராமர் ஹீரோவா இருந்தாலுமே கூட, வில் ஒடிக்கும் திட்டமாய் மிதிலையின் வருகை ஏற்பாடு ஆகவில்லை. விசுவாமித்ரர் அழைக்கிறார். ஏதோ மிதிலையில் வேள்வி நடக்குதாம். ஒரு பார்வை பாத்துட்டு வரலாம். (காசா பணமா… இது அவர் சொல்லாமல் விட்டதுங்க). “…மிதிலையர் கோமான் புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்…” இது கம்பரின் வாசகம்.

ஆனா அடுத்த பிட்டு அதே கம்பர் போட்றார்; ராமானுக்கே தெரியலை இங்கே சீதையை மணக்கப் போறோம் என்பது. ஆனா, மிதிலை நகரக் கொடிக்கு தெரிஞ்சிருக்காம். அதுக்கும் மேலே, அந்த திருமண ரகசியம் தெரிந்த தேவமாதர்கள் எப்படி சந்தோஷமா ஆடுவாங்களோ, அப்படி அந்தக் கொடியும் ஆடிச்சாம். ”… மணம் செய்வான் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆடக் கண்டார்….”; இப்படிப் போகுது கம்பரின் கற்பனை.

வால்மீகி பக்கம் கதை வேறு மாதிரி. (கதை கந்தல் மட்டும் எங்குமே சொல்ல முடியாத அளவு, இரண்டுமே செமெ சுவாரஸ்யம் தான்). விசுவாமித்திரருக்காய் வந்த வேலை முடிந்த பின்னர், அங்கிருந்த மகரிஷிகள், ”ஜனகரின் வேள்வியை ஜாலியா ஒரு ரவுண்ட்டு சும்மா பாத்துட்டு வரலாம்; அப்படியே ஏதோ சிவதனுசு இருக்காமே, அதையும் ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்” என்று சொல்ல அதனை விசுவாமித்திரரும், ராம இலட்சுமணர்களும் ஒப்புக்கொண்டனர்.

பின்னர் ஜனகர் சந்திப்பு நிகழ்கிறது. ஜனகர், ”இந்த ரெண்டு வாண்டுகள் யார்?” என்று கேட்கிறார். அப்போது எல்லா ஃப்ளாஷ்பேக் சொல்லி முடித்த பிறகு, அப்படியே ”இந்த நகரில் உள்ள சின தனுசுவைக் காண்பதற்காக இங்கு வந்துள்ளனர்” என்று முடிக்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் மேலே போய், “இந்தப் பசங்க இதெப் பாக்க விருப்பப் பட்டாய்ங்க. அதான் நானும் சரீன்னு கூட்டியாந்தேன்” என்கிறார் அந்த முனுக் என்றால் சாபம் தரும் முனி.

வால்மீகியின் கதையில் இந்த “கண்ணோடு கண் நோக்கல், நண்டுப்பிடியாய் பார்த்தல், அண்ணலும் நோக்கி அவளும் நோக்கல்…” எல்லாம் கிடையாது. ஜனகர் சீதை பத்தின ஹிண்ட் தருகிறார். முனிவரோ, ”ராமா சிவதனுசு இதான்.. நல்லா பாத்துக்க”; இவ்வளவு தான். ராமருக்கு வில்லைப் பாத்த்தும் வீரம் பீறீடுகிறது. ”இதைத் தொடவா, நாணேற்றவா?” என்று கேக்க, மகரிஷியும் “அப்படியே ஆகட்டும்” என்பதாய் முடிந்து, சீதை, வீரத்துக்குப் பரிசாய் கிடைக்கிறது இராமனுக்கு.

அதுசரீ… இப்பொல்லாம் இப்படி வீரம் காட்டினா பொண்ணு பரிசு என்றால், எந்த வெளையாட்டு வைக்க முடியும்? ”ஆங்கிரி பேர்ட்” மாதிரி ஏதாவது வெச்சாத்தான் உண்டு. அதுக்கு முன்னாடி பிரிகுவாலிபிகேசன் ரவுண்ட் வச்சி, அதில் ஸ்மார்ட்டான ஆட்களை வடிகட்டுவதும் நடக்கலாம்.

பர்வால் பார்வைகள் தொடரும்.

மதுவும் மகளிரும்…


எத்தனைக் கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை என்
சிந்தையிலே தான் பேதமடா –

இப்படி ஒரு பாட்டு கமலஹாசன் இளமைத் துள்ளலோடு வலம் வந்த மன்மதலீலை படத்தில் வந்தது. இது ஏதோ மதுவைப் பற்றி சொல்வதாய்த் தான் மேலோட்டமாய்ப் பார்த்தால் தெரியும். ஆனால் மன்மதலீலை படம் பார்த்தவர்களுக்கு அந்த வில்லங்கமான ”அந்த” அரத்தமும் தெரிய வரும். நாம் அதில் அதீத நாட்டத்தைச் செலுத்தாமல், சற்றே பின் வாங்கி, சில பிற விவரங்களை உள்வாங்கச் செல்வோம்.

மது பற்றி தொடங்கியதால் அது பற்றி மேலும் யோசிப்போம். இன்றைய சூழலில், ”சம்பவம்” என்றால் ”கொலை” என்று எப்படி ”அருஞ்சொல் பொருள் விளக்கம்” ஆக மாறிப் போனதோ, அப்படித்தான் மதுவின் அர்த்தமும் மாறிப் போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன். மது என்ற தேன், எப்போது மயக்கம் தரும் மதுவாய் மயங்கியது என்பது பெரிய்ய கேள்விக்குறி தான்.

மதுரம், மதுகுமார், மதுமிதா, மதுகலா இப்படி எல்லாம் பெயர் வைத்துள்ளனர். அதில் இருக்கும் மதுவிற்கும், டாஸ்மாக்கில் விற்கும் மதுவிற்கும் எந்தத் தொடர்வும் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றே கருதுகிறேன்.

தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் நேரலை, கோப்புக் காட்சிகள், சித்தரிக்கப் பட்டவை இப்படியான அறிவிப்புகள் தான் அறியத் தருவர். பின்னர் விளம்பரங்களின் “நிபந்தனைக்கு உட்பட்டவை” என்று வர ஆரம்பித்தன. பின்னர் “இவை திறனாளர்களை வைத்து உருவாக்கியவை. நீங்கள் செய்ய முயல வேண்டாம்” என்ற எச்சரிக்கை எக்கச்சக்கமாய் வரத் தொடங்கின. உங்கள் முதலீடுகள் சரியான வரவைத் தராவிட்டால் எங்களைத் திட்ட வேண்டாம் என்பதை மிகவும் ”நல்ல” முறையில் சொல்லவும் வந்தன பின்னர்.

புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று போடத் தொடங்கியது தான் சிக்கலை துவக்கி விட்ட்து. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது இல்லை என்று போட ஆரம்பித்தனர். (ஆமா மது நட்டுக்கு நல்லது தானே என்று அரசு தரப்பில் வாதம் வைக்க மாட்டார்களா?) இப்போது வரும் படங்களில் விளம்பர இடைவெளியில் மட்டும் தான் இந்த புகையும் மதுவும் வராமல் இருக்கிறது. என்ன செய்ய? இப்போதைக்கு புகையும் மதுவும் தான் தெரிந்துள்ளது. இப்படியே போனால், பலான இடம் போவதை காட்டும் போது “எய்ட்ஸ் வரும் வாய்ப்பு உள்ளது” என்றும் போடலாமே. அப்புறம், கோபம் அதிகம் வருவதை காட்டும் போது, ”இரத்த அழுத்தம் வரலாம்” என்றும் போட்டு வைக்கலாம். இதேபோல் இரத்தக் களரியாய் வரும் காட்சிகளில், “கலவரங்கள் அமைதியினை நீக்கும்” என்றும் நீதி போதனைகள் காட்சிகளில் தொடரலாம்.

இதே டீவியில் நல்ல செய்திகளும் வரத் தவறுவதில்லை. ஒன்றே சொல் நன்றே சொல் அருமையான தகவல்களை அள்ளித் தருகின்றது. இதில் ஒரு நாள் கள் குடித்தல் என்பது தமிழரின் பாராம்பரிய வாழ்வு முறையில் ஒன்றுதான் என்பதாய் நன்றாய் சொன்னார். (ஒன்றே சொல். நன்றில்லாததும் சொல் என்றா பெயர் மாற்றச் சொல்ல முடியும்?). ஏகப்பட்ட சங்க காலப் பாடல் எல்லாம் சொன்னர் அவர். ஆனால் மக்களை குடித்துக் குட்டிச் சுவராய் ஆவதற்கு வழி சொல்வதாய் எனக்குப் படவில்லை. (அந்த எண்ணத்தில் கண்டிப்பாய் அவர் சொல்லி இருக்க மாட்டார் என்ற நம்ம்பிக்கை உள்ளது)

தமிழருக்கும் மதுவுக்கும் ஆதி காலத்தில் இருக்கும் பழக்கம் பற்றி யாராவது சொன்னாலோ, அல்லது குடிப் பழக்கம் தவறு என்று சொன்னாலும் கூட உடனே எல்லாருக்கும் சோம சுரா போன்ற திராவகங்களை தேவர்கள் கூட அருந்தினர் (தேவர்களை நம்பாதவர்கள் கூட) என்றும் சொல்ல ஆரம்பிப்பர். போதாக் குறைக்கு ஆதி மகளிரையும் வம்புக்கு இழுக்கின்றனர். பொதுவாக அதியமான், ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதை தான் சொல்லுவர். (நெல்லிக்காய் தானே இருக்கும். நெல்லிக்கனி இருக்குமா என்று “அப்பா எனக்கு ஒரு சந்தேகம்” நிகழ்சியில் அந்த அப்பா வயிற்றில் குத்து வாங்கியது பெட்டிச் செய்தி).

சமீப காலமாய் அதியமான் ஔவை பற்றி இன்னொரு செய்தியும் பிரபலமாகி வருகிறது. மது தொடர்பானது தான் அதுவும். அரசனுக்கு ஒரு மடக்கு மது கிடைத்தால், அதை ஔவைக்கே வழங்கிடுவாராம். ஒரு கோப்பை கிடைத்தால் அரசன் பாதி ஔவை பாதி என்று பகிர்ந்து கொள்வாரம். சொல்ல வரும் நீதி: மகளிரும் மது அருந்தினர் என்பதாய். என்னால் இதை ஏற்க முடியவில்லை. பிச்சை புகினும் கற்கை நன்று எனச் சொன்ன ஔவையாக அந்த ஔவை இருக்காது.

எனக்கு என்னமோ அரசன் கொடுப்பதில் வல்லவன், என்று சொல்வதாய் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தான் தெரிகின்றது. கொடுப்பது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கும். என்ன தருகிறோம்? எப்படி தருகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத யோசனை. குளிரால் நடுங்கும் மயிலுக்கு போர்வை கொடுத்தவரை வள்ளல் பட்டியலில் வைத்துள்ளோம். மயிலுக்கு போர்வை தேவையா என்ன? அதே போல் முல்லைக்கு தேர் குடுத்தவரும் கொஞ்சம் அதிகப் பிரசங்கத்தனமாய் தான் படுகிறது. இதிலும் தரும் பொருளை விட தரும் எண்ணம் தான் முக்கியம். அதே போல், மதுவே கிடைத்தாலும் ஔவைக்கு தந்து மகிழ்வார் என்று நாம் ஏன் பொருள் கொள்ளக் கூடாது?

சினிமாவில் மட்டுமே புகை பிடிக்கும், மது அருந்தும் மகளிரை பார்த்த எனக்கு நேரில் அப்படி பார்த்த போது பகீர் என்று தான் இருந்தது. கொல்கொத்தாவில் தான் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு நண்பரின் அழைப்பினை ஏற்று நட்சத்திர உணவகம் சென்றோம் குடும்பத்தோடு. மகளிருக்கு என்ன மது தேவை என்று கேட்ட போது தான், இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்ற சேதி தெரிந்தது..

வள்ளுவரும் கள்ளுக் குடியை விட்டொழியுங்கள் என்கிறார். நம்மாளுங்க புரிந்து கொள்ளும் நீதி, வள்ளுவர் காலத்திலும் சரக்கு அடிக்கும் பழக்கம் இருந்திருக்கு என்பதைத்தான். தமிழருவி மணியன் இந்தச் சூழலினை அழகாய் கையாள்கிறார். கள் குடிப்பது எல்லாம் நடப்பது தான் என்று இருந்த காலத்தில், கள் குடிக்காதே என்று சொன்ன வள்ளுவரை கலக்க்காரன் என்று புகழ்கிறார்.

கமபன் மட்டும் கலகக்காரன் இல்லையா? பல்லாயிரக் கணக்கான தாரங்களை மணந்து வாழும் அரச குடும்பத்தில் பிறந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைசி வரை நிலைநாட்ட கம்பன் காப்பியம் முழுதுமே கலக்கலாய் செய்வதைப் பார்க்கலாம். மூலக் கதையில் கால் பட்டு அகலிகை சாபம் நீங்கியதாய் இருந்தாலும், இந்த கலகக்காரக் கம்பன், ராமனின் கால் தூசு பட்டே அகலிகை மலர்ந்ததாய்க் கூறியதைப் பார்க்கலாம்..

அதுசரி.. மகளிரும் மதுவும் பற்றி அதே கம்பர் ஏதும் சொல்லவில்லையா? என்ற கேள்வி உங்களில் அநேகம் நபர்களுக்கு வந்திருக்குமே??

உங்களுக்கு என்ன? சாதாரணமாய்ச் சொல்லிட்டீங்க. கம்பரிடம் போராடி ஒரு பாட்டு தேடிக் கொண்டு வந்திருக்கிறேன்.

வனவாசம் முடிந்த பிறகு அயோத்தி திரும்புகிறார் இராமன். இராமன் வருகையினை எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எதிர் கொண்டனர் என்பதை விளக்கும் பாடல் தான், நம் நண்பர் கம்பர் தந்த பாடல்.

இராமனைப் பார்க்க வந்தவர்களில் பலர் பலரகம். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதை கம்பர் ரகவாரியாய்ப் பிரித்துப் பார்க்கின்றார். அவர்களுக்கு ராமன் எப்படித் தெரிந்தான் என்பதைச் சொல்லத்தான். இதுவரை ராமனைப் பார்க்காது இருந்து முதல் முதலாய் பார்ப்பவர்க்கு (14 ஆண்டுக்கு உள்ளான விடலைப் பருவத்தின்ருக்கு) தாயைப் பார்த்த உணர்வை ராமன் முகம் தந்ததாம். தன்னை அன்புப் பெருக்கோடு பார்த்த அனைவருக்கும் அமிழ்தம் கிடைத்தது போல் இருந்ததாம். முனிவர்களுக்கு இறைவனே காட்சி அளித்தது போல் இருந்த்தாம்.

நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் செய்தி இப்போது தான் வருகிறது. இராமனைத் தரிசிக்க அழகிய விழிகளை உடைய பெண்டிரும் தான் வந்திருந்தனர். அவர்கள் கண்களுக்கு ராமன் எப்படி இருந்தார் தெரியுமா?? தெளிவே இல்லாத மகிழ்ச்சியினைத் தரும் இனிய மதுவின் தெளிவு போல் இருந்ததாம்.

வழக்கம் போல் மகளிர் கம்ப காலத்திலும் மது அருந்தினர். எனவே தான் இப்படி கம்பர் சொல்லி இருக்கிறார் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிடக் கூடாது. மதுவை இங்கு சுட்டிக் காட்டுவதின் உள் நோக்கம் என்ன? மது என்ன செய்யும்? உற்சாகமாய் ஆடவைக்கும். ஆனால் மது ஆடாது. இராமனும் அப்படித்தான். ஆட்டுவிப்பான். ஆனால் ஆட மாட்டான். (இப்படி கம்பர் நினைத்திருப்பாரோ).

வேதியியல் படிக்கும் போது கிரியாஊக்கி என்று ஒன்று வரும். ஒரு இராசாயண மாற்றத்தைச் செய்யும். ஆனால் அது ஒன்றும் ஆகாது. விசில்ப்ளோவர் என்பதினை ஊதுகுழல் ஊதுவோர் என்று மொழி பெயர்ப்பு செய்தது சரியா என்று என் கல்லூரி நண்பர் அசோகன் கேட்டிருந்தார். என் மனதிற்கு கிரியை ஊக்கி என்று சொல்வது தான் சரியாய்ப் படுகிறது. அவரும் செயல் படுவார் சமூகத்தையும் செயல் படச் செய்வார்.

இதோ அந்தப் பாட்டும் உங்கள் பார்வைக்கு:

எளிவரும் உயிர்கட்க்கெல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்.
ஒளி வரப் பிறந்த்த ஒத்தான் உலகினுக்கு ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். .

சரி.. ராமனை இனி கிரியாஊக்கி என்று அழைக்கலாமா? அல்லது கிரியைஊக்கி என்று விளிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.

கொடுக்கிற தெய்வம்.,


சமீபத்தில் ஒருவர் ஆபீசுக்கு வந்திருந்தார். வந்த வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஊர் உலகம் எல்லாம் சுத்தி வந்து பேச்சை எடுத்து வந்து பின்னர் வந்த வேலை பத்தி ஆரம்பிப்பது தான் நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலையாச்சே.. (சில சம்பயங்களில் அவர்கள் வந்திருக்கும் வேலையை விட, இந்த மாதிரி இடைச் சொருகலாக வரும் இலவச இணைப்புகள் ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும்) சரி..சரி.. மேட்டரைச் சொல்லுப்பா..அது சுவாரஸ்யமா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் என்கிறீர்களா?? அதுவும் சரி தான்.

பேசிக்கொண்டு வந்தவர், தமிழில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? என்று கேட்டார். ஏதோ கொஞ்சமா இருக்கு..என்றேன். (அடிக்கடி மனைவியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்கு என்ற விபரம் அவரிடம் சொல்ல முடியுமா என்ன?? ஏதோ உங்களிடம் அதனைக் கொட்டி ஆறுதல் அடையலாம்.) உங்கள் புளுடூத்தின் கதவைத் திறந்து வைங்களேன் என்றார். நானும் சரி என்று செய்தேன் கேட்டபடி. அவர் ஒரு ஆடியோ சொற்பொழிவினை அமைதியாய் என் மொபைலுக்குக் கடத்தினார்.

ஒரு மணி நேரமாய் ஓடும் உணர்ச்சி பூரவமான சீமான் அவர்களின் பேச்சு அது. தொடக்கத்தில் தமிழருவி மணியனின் நடையில் காமராஜைச் சுற்றி வந்தாலும் பின்னர் அப்படியே பெரியார், ஈழம், தலித், பகுத்தறிவு என்று அழகாய் காட்சி மாறி வருகிறது. கேட்பவர்களை அப்படியே கட்டிப் போடவைக்கும் பேச்சு அது. நடு நடுவே கெட்ட வார்த்தைகள் போல் வந்தாலும், அந்தக் கோபாவேசமான பேச்சுச் சூழலுக்கு அது தவறாகப் படவில்லை. பேச்சுக் கலை என்பது எப்படி சீமானுக்கு இவ்வளவு கைவந்த கலையாய் ஆயிற்று?? கடவுள் கொடுத்த வரமா இருக்குமோ!! அவர் தான் கடவுளே இல்லை என்கிறாரே!!! அவருக்கு ஏன் இந்த பேச்சுக் கலையை கூரையைப் பிய்த்துக் தருவது போல் தந்தார் அந்த (இல்லாத) கடவுள் அவருக்கு??

கோவில்களில் இருவகை. செல்வம் கொட்டும் கோவில்கள் ஒருவகை. மரத்தடி பிள்ளையார் மறுவகை. இது தேவாலயங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் இருக்கும் சிறிய அந்தமானிலும் 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்த்தாலே பிரமாண்டம் என்று தோற்றமளிக்கும் வகையில் ஒரு பக்கம். பழைய சினிமா டெண்ட் கொட்டகையை நினைவு படுத்தும் தேவாலயங்கள் மறு பக்கம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தரும் என்பது எல்லா கடவுள்களுக்கும் பொதுவோ என்னவோ யாருக்குத் தெரியும்?

சப்பர் பா2ட்3கே தேத்தா என்று கூரையை பிய்த்துக் கொண்டு தரும் கலையை ஹிந்தியிலும் சொல்வர். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து அப்படியே உள்ளே போனா எப்படி இருக்கும்? – என்ற கற்பனை ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி. வாழைப் பழத்தை தரலாம். அதையும் உரிச்சியும் தரலாம். அப்படியே வாயில் தினித்து குச்சி வைத்து தினிக்கவா முடியும் என்றும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்யாத ஆட்களுக்கு சொல்லும் வார்த்தைகள் இது..

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு நேர் மாறாக ஒரு சொல்லாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பட்ட இடத்திலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பது தான் அது. அது எப்படி சாத்தியமாகும்? அடி பட்ட இடத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். இருந்த போதிலும் அதில், சிறு வேதனை வந்தாலும் அதுவே பிரமாண்டமாய் இருக்கும். உலகையே தூக்கிக் கொண்டிருக்கும் ஹெர்குலிஸுக்கு மேலும் ஒரு வெட்டுக்கிளி கூட தூக்க முடியாதாம். (9ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் படித்தது)

இதையே அதே 9ம் வகுப்பில் தமிழாசிரியர் வள்ளுவர் சொன்னதையும் காட்டினார். மயிலிறகு அளவு அதிகம் சுமந்தாலும் வண்டி குடை சாய்ந்து விடுமாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

இதனை அந்தக் காலத்தில் தமிழக அரசு சூப்பரா குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. மூட்டை முடிச்சை குறையுங்கள். வண்டிப் பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள். வாழ்க்கைப் பயணம் சுகமாகும் என்று சொல்லி இந்த குறளையும் நல்ல குறலில் பாட்டாக பயன்படுத்தியது.

ஒரு நிமிஷம்… கம்பர்கிட்டெ இருந்து ஒரு Message வந்திருப்பதாய் டொய்ங்க் என்ற சத்தம் சொல்கிறது… பாத்தா… “என்ன இன்னெக்கி ஐயன் வள்ளுவன் தான் Climax ஆ??”..

இல்லை கம்பரே… உங்களை விட்டா எனக்கு வேறு வழி இல்லை முடிக்க.. இதோ வந்திட்டேன்..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று தான் எல்லாரும் சொல்வார்கள். கம்பர் அப்படிச் சொல்லிட்டா.. அப்புறம் கம்பருக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீதை சிறையில் (சகல வசதிகளும் இருக்கும் நல்ல உயர்தர Open Jail தான்) இருந்தாலும் சோகம் உருக்குகிறதாம். எப்படி? புண்ணைப் பிளந்து அதில் நெருப்பை நுழைத்தது போல் என்கிறார் கம்பர். புண் சிரமம். நெருப்பு.. கேக்கவே வேணாம். ரெண்டும் சேந்தா??

ஒரு Flow Char போடும் அளவுக்கு கேள்விகள். மாயமானைத் தேடிப் போன இராமன் இலக்குவனை காணலையோ? If Yes இராவணன் தான் கடத்திச் சென்றார் என்பதை அறியவில்லையோ?? If Yes இலங்கை இருக்குமிடம் தெரியாது இருப்பர் போலும்… இப்படி எல்லாம் கவலைப் பட்ட சீதையின் வேதனை இப்படி இருந்ததாம்.
கண்டிலங்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்கொண்டு இறந்தமை அறிந்திலராம் எனக் குழையாபுண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள்

கம்பன் கலாட்டாக்கள் தொடரும்.

அவனா நீ???


இன்றைய படங்களையும் காமெடி காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புரியும். அவைகள் ஒரு வகையில் நம் சமூகத்தோடு ஒன்றாகக் கலந்து போய் உள்ளன என்பதும் தான், நான் சொல்ல வந்த சேதி. சில வார்த்தைகள் திரைப்படங்களில் “சினிமாவில் பயன்பாட்டிற்கு முன்” மற்றும் “சினிமாவில் பயன்பாட்டிற்கு பின்” என்று சொல்லும் அளவுக்கு மாறியே போய் விட்டன. வருங்கால வரலாறு இதனை கிமு கிபி என்று அழைப்பது போல், சிமு சிபி என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

இப்பெல்லாம் “அவனா நீ?” என்று யாரையும் சாதாரணமாய் கேட்டுவிட முடியாது. கேட்டால் அதனால் உண்டாகும் பாதகங்களுக்கும் அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டி வரும். அடுத்தவர் மனம் கோணாது நடப்பது என்பது ஒரு கலை. அது சிலருக்கு பிறப்பிலேயே வரும். சிலருக்கு என்பது வயது தாண்டினாலும் வராது. கோவை பக்கம் சூப்பரான ஒரு வட்டார வழக்கு இருக்கு. சுட்டுப் போட்டாலும் வராது என்பார்கள். ஏன் தான் இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு இன்னும் சுட்டுப் போட்டாலும் புரியலை.

சமீபத்தில் அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் ஒரு சின்ன உல்லாச விருந்துக்கு ஏற்பாடு ஆனது.. (உல்லாசம் என்றவுடன்.. உங்கள் கற்பனை சிறகுகள் எல்லாம் பறக்க விட வேண்டாம்.. ஏதோ வீட்டுல உக்காந்து சாப்பிடறதுக்குப் பதிலா, ஹோட்டலில் போய் நின்னுட்டு சாப்பிட்டு வர வேணும் அம்புட்டு தான். பில்லுக்கும் பல்லிளிக்கும் நபருக்கும், வாசற்கதவு திறந்து சலாம் வைப்பவருக்கும் பணம் தரவேணும் என்பது எழுதப்படாத விதி).
சில ஜாலியான குடும்ப விளையாட்டுகள் வைத்தோம். பேப்பர் கப் என்று கிடைக்கும் 25 கப்களை ஒன்றாக அடுக்கி, அதனை வலது & இடது என்று கை மாற்றி மேலிருந்து எடுத்து கீழாய் அடுக்க வேணும். கணவன் மனைவி ஜோடிகளுக்கு இடையே போட்டி நடந்தது. போட்டி போட்டு நடந்த போட்டியின் முத்தாய்ப்பாய், அன்று ஓய்வு பெறும் அதிகாரியை அழைத்தோம். பொறுமையாய் தன் மனைவியை சற்றும் விட்டுத் தராமல் மனைவிக்கு சமமாய் கப்களை நகர்த்தி ஒரு நிமிடத்தில் விளையாட்டை முடித்தார். இறுதியில் சிறந்த ஜோடிக்கான சிறப்பு பரிசை தந்தோம் என்பது கொசுறுத் தகவல்.
மனைவியின் மனம் வருந்தி விடக் கூடாதே என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முகம் தெரியா விருந்தினர்களையும் உபசரிக்க திண்ணை வைத்து வீடு கட்டியது அந்தக் காலம். உழைப்பாளிகளின் சுமைகளை இறக்கி வைக்க, சுமை தாங்கி எல்லாம் இருந்தது. குடிக்க தண்ணி கேட்டால் செம்பு நிறைய கிடைத்தது ஒரு காலம். இப்பொ பாக்கெட் தண்ணி வாங்கி குடிக்கும் காலம். அடுத்தவர் பற்றி நமக்கு அக்கறை குறைக்கும் வித்தை மிக அக்கரையோடு கற்பிக்கப் படுகிறதோ!!!

காக்கை வடை திருட்டும் கதை, நரி காக்கையை ஏமாற்றும் கதை இவை எல்லாம் நமக்கு கிடைத்த பால பாடங்கள். ஏமாற்றுவது என்பது ஒரு தவறு இல்லை என்று அந்த பிஞ்சு உள்ளங்களில் பதிந்து விட்டது. நடுவில் சினிமா படங்களும் சில தத்துவங்களை மனதில் பதிக்கின்றன. நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவுமே தப்பில்லை – போன்றவை சாம்பிள் சினிமா தத்துவங்கள். நேர்மை நியாயம் எல்லாம் அந்தக்காலத்து நாடகம் & சினிமாக்களில் மட்டுமே பாக்க முடிகிறது.

இப்பேற்பட்ட சூழலில் நம்மை யாராவது மனசு நோகடிக்கும்படி செய்தால் அல்லது பேசினால் கஷ்டமாத்தான் இருக்கு. அதை எப்படி சமாளிப்பது என்பது அவரவர் சாமர்த்தியம். ஆனா இதே சங்கடத்தை அடுத்தவர்க்கு நாம் தராமல் இருக்கலாமே?? மாமியார் மருமகள் கொடுமை, ராகிங்க் போன்றவை ஒழிய இந்த மனோபாவ மாற்றம் தேவை. ஒரு புரமோஷன் கொடுக்க உயர் அதிகாரிக்கு வலிக்கிறது. ஏன் என்று கேட்டா, அவருக்கு இப்படி லேசா கெடைக்கலியாம்??? கோர்ட்டுக்கு எல்லாம் போய் தான் கெடேச்சதாம்.. அதனாலெ.. அடுத்தவங்களுக்கும் லேசிலெ தரமாட்டாராம்..
நான் செருப்பு கூட இல்லாமல் ஸ்கூலுக்கு போனேன். நடந்து தான் போனேன். நானும் இப்பொ என் பையனையும் “செருப்பில்லாமெ போ” என்று சொல்லவில்லையே… நல்லதா ஷு வாங்கி தரலையா?? காரில் போக வசதி செய்து தரலையா?? இதே மாதிரியான எண்ணங்கள் வேலை செய்யும் இடத்திலும் இருக்கலாமே என்பது என் கருத்து..
நல்லா இரு… என்று சொல்வதும், நல்லா வருவே என்று சொல்வதும் கூட சினிமாவில் வேறு பொருள்.. சரி.. நாம கம்பர் இந்த மாதிரி சமாசாரம் ஏதாவது சொல்லி இருக்காரா என்று தேட ஆரம்பிக்கலாமா என்று தேடினேன். தேடினால் கிடைக்காமல் போகாது என்பது சரி தான் கிடைத்தது.
ஹனுமன் நெற்றியில் ஒரு Spy Camera வச்சிட்டேன். அவரு என்ன பேசுகிறார் யோசிக்கிறார் (??) பார்க்கிறார் வரைக்கும் நீங்களும் பார்க்கலாம். ஆனா சிந்தனையின் Copy Right மட்டும் கம்பருக்கு. இலங்கையின் ஏரியல் வியூ தெரிகிறதா உங்களுக்கும்?? பிரம்மாண்டமான அரண்மனை… சுகமான நித்திரையில் ஒருவன். ஹனுமன் பார்க்கிறார். “அவனா நீ?” (இராவணனா நீ என்று தான் பொருள்??) அப்படியே இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் தானே ஆயுள்.. அது வரை.. நல்லா இரு என்று ஆசி செய்து நகர்கிறார். செவிக்கு தேனாய் இனிக்கும் இராமனின் புகழினை திருத்தமாய் சொல்கின்ற வானரத் தலைவன் வாயால் வாழ்த்தினால் பலிக்காமலா போகும்!!
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கைகவித்து நீங்கிடச் சில பகல்என்பது கருதாசெவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும்கவிக்கு நாயகம் அனையவன் உறையுளைக் கடந்தான்.
இனி மேல் வாழ்க வளமுடன் என்றாவது சொல்லிப் பாருங்கள்.. அவங்களோடு நீங்களும் நல்லா இருப்பீங்க..

திரையிசையில் இலக்கியம் (??)


சின்னக் குழந்தைகள் முன்பு, புத்தகத்தை மூடி வைத்து, சட்டென்று ஒரு பக்கத்தை திறந்து படம் இருக்கா? இல்லையா? என்று கேப்போம்.. அந்தக் காலத்தில். அந்த ரேஞ்ச்சில் ஒரு நாள் திரைப்பாடல்களில் இலக்கியத் தரம் இருக்கா இல்லையா என்று விவாதம் வந்தது. அன்றைய விவாதம் செமெ களை கட்டியது என்பதை சொல்லாமல் விட முடியாது. வீட்டுக்கு லேட்டாப் போயி வீட்டுக்காரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை மட்டும் நான் சொல்லவெ மாட்டேன்.

நம்மாளுகளுக்கு ஃபாரின் சரக்குன்னா ஒரே கிக்கு தான். அது பட்டை யாய் இருந்தாலும் சரி.. பாட்டாவே இருந்தாலும் சரி. யோகம் தியானம் என்பது கூட இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போய் வந்து ஆங்கிலத்தில் சொல்லிக் குடுத்தா தான் மண்டையிலெ ஏறுதே… என்ன செய்ய??

அபிராமி அந்தாதி மாதிரி பல அந்தாதி பாட்டுகள் இங்கே எப்பொ இருந்தோ பிரபலம். ஆனா ஹிந்தியிலிருந்து வந்த அந்தாக்சிரியைத் தான் நம் மக்கள் கொண்டாடி குதூகலிப்பர். சினிமாப்பாட்டில் கூட அந்தாதி பாட்டு இருப்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். இதோ சில சாம்பிள்கள்:

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்

பாட்டுப் பாடி மரத்தை சுத்தும் அந்தக் காலத்து சினிமாவும் சரி, முனுக்கென்று கண் சிமிட்டும் நேரத்தில் கனவு வந்து ஆஸ்திரேலியாவோ அல்லது தாய்லாந்து கடற்கரைக்கோ தயாரிப்பாளர் செல்வில் போய்வரும் இந்தக் காலச் சினிமாவிலும் சரி.. பாடல் என்பது முழுக்க நடைமுறையில் இல்லாத ஒன்று.

தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாட்டால் வளர்ந்த சமூகம் என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப் படுத்தினால் தான் உண்டு. என்ன செய்ய நம்ம மறதி அப்படி. இப்பொவும் ஏதோ சடங்காய்த் தானெ, சடங்கு நேரத்தில் கூட பாட்டு சத்தம் கேக்குது. போகிற போக்கில் நீராடும் கடலொடுத்த பாட்டுக்கெ ரிஹெர்ஷல் தேவைப்படும் போல் இருக்கிறது.

ஆக.. சினிமா என்பதே கற்பனை என்றால், அதில் வரும் பாடல் கற்பனையோ கற்பனை. அதில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தலைப்பாக்கட்டு அல்லது மதுரை முனியாண்டி விலாசில் போய் தயிர் சாதம் தேடுவது மாதிரி தான் இதுவும்.

ஆனால் என்றோ எப்போதோ கேட்ட பாடல்கள் இன்னும் இனிமையாக காதுகளில் ஒலிக்கும் போது அவை அமரத்துவம் பெற்ற லிஸ்டில் அடைத்திடலாம். அதாவது கிட்டத்தட்ட இலக்கியத்தரம் என்று. ஆமா இலக்கியத்துக்கு என்ன தரம் என்று கேக்கிறீங்களா?? (பாமரனுக்கு புரியக்கூடாது. நீண்ட ஆயுசு. எப்பவும் இனிக்கனும் – அது தான் இலக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து. எல்லாருக்கும் ஈசியா புரிஞ்ச்சிட்டா அப்புறம் கோனார் நோட்ஸுக்கு ஏது வேலை?).

நம்ம கம்பர் பத்தி கொஞ்ச நாளா யோசிக்கிறதாலெ, சினிமாப் பாட்டுக்கும் கம்பருக்கும் இருக்கும் தொடர்பையும் லைட்டா டச் செய்து பாத்தேன்.

கற்பாம் மாணமாம், கண்ணகியாம் சீதையாம் என்று TMS கணீர் குரலில் பாடுகிறார். கம்பனைக் கூப்பிடுங்கள் கவிதை எழுதுவார் என்கிறார். இன்னொரு கருப்பு வெள்ளை படம் கம்பன் ஏமாந்தான் என்று பாடுகிறது. (பெண்கள் மலர் போல் இல்லை என்கிறார் அவர்)

அன்றைய இலக்கியம் படித்த உயர்தர மக்களுக்காய். (ஒரு வேளை அந்த இலக்கியத்தமிழ் அன்று எல்லாருக்குமே புரிந்திருக்குமோ? பெண்புலவர்கள் கூட இருந்திருக்காங்களே!! குடும்பத்தோடு இலக்கியம் பேசி மகிழ்ந்திருக்கலாம்).

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அங்கு
மலைத்தேன் என நான் மலைத்தேன்.

இப்படி ஒரு பாட்டு சினிமாவில் வந்தது இன்றும் இனிக்கிறது. எல்லார்க்கும் புரியுதே.. அப்பொ அங்கங்கே இலக்கியம் இருக்கத்தானே செய்யுது.

கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் கம்பரின் எண்ணங்களை நவீன சினிமா பாடல்களில் (தெரிந்தோ தெரியாமலோ) புகுத்திய செய்திகள் அங்காங்கே கிடைக்கிறது.

கடலுக்குக் கூட ஈரமில்லையோ? – என்று நவீன கவிஞர்கள் யோசித்து எழுதியது. ஆனால் கம்பரின் கற்பனையோ “மேகத்திற்கே வேர்க்கிறதே” என்று ஆச்சரியப்பட வைக்கிறது. [கார்க்கருள் தடங் கடல்களும் மழைமுகிழ் காணும் வேர்க்க – பார்த்ததுமே மேகமும் கடலும் வேத்து விறுவிறுத்துப் போச்சாம். இது கம்பன் ஸ்டைலில் சொன்னது].

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை.
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை.

இது இன்றைய கவிஞர் காதலன் காதலி பேசுவதாய்… இல்லை இல்லை பாடுவதாய் அமைத்தது. “துயில் இலை ஆதலின் கனவு தோன்றல” – திரிசடை சீதையிடம் சொன்ன ஒரிஜினல் அக்மார்க் சங்கதி.

இந்த நிலவை எதுக்கெல்லாம் தான் கம்பேர் செய்வாங்களொ?? நகம் பாத்தா நிலவு மாதிரி என்னெக்காவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கா?? ஆனா கம்பர் அப்படிப் பாத்திருக்கார். “சிறியவும் பெரியவும் ஆகித் திங்களோ” என்று அச்சரியப்பட்டு அங்கலாய்க்கிறார். ராமரின் நகங்கள் இப்படி இருந்தன என்று சீதையிடம் சொல்கிறார் அனுமன். ஏற்கனவே நொந்து பொயிருக்காக… அந்த நேரத்தில் இப்படி ஒரு பில்டப்பு..??? ஆனா இப்பொதைய சினிமாப் பாடல் வரிகளில் இருப்பது “இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்”. என்ன சுட்ட சரக்கு மாதிரி தெரியுதா?? கம்பர் என்ன காப்பி ரைட்டா வச்சிருந்தார்??

“பார்வையாலெ நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு” என்று ஒரு ஃப்ளோவிலெ இப்போதைய பாடலாசிரியர் எழுதி இருக்கலாம். ஆனா கம்பருக்கு மட்டும் அப்படி ஃப்ளோ வந்திருக்காதா என்ன? “பார்க்கப்பட்டனர் சிலர்” என்று பார்வையாலே பலர் செத்த கதை சொல்கிறார் கம்பர்.

இப்படியாக திரைப்பாடல்கள் அங்காங்கே இலக்கியம், அதுவும் கம்பரிடம் சுட்ட இலக்கிய சங்கதிகள் இருக்கு என்று நிறைவு செய்கிறேன்.

மீண்டும் வருவேன்.

பார்த்தாலே போதும்….


ஒவ்வொரு விசயத்திலும் ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு மாதிரியாவே இருக்கும். ஒரே மாதிரியா இருக்காது. எனக்கு சுகிசிவம் ரொம்பவே பிடிக்கும். என் பார்வையில் அவர் சொல்லும் எல்லாமே நல்லதா தான் படுது. ஆனா சிலருக்கு அதில் உடன்பாடு இல்லை.

அவர் சொன்ன ஓர் உதாரணம் பஸ்ஸில் கடைசி வரிசையில் சீட் கிடைத்து அவஸ்தைப் பட்ட ஒருவரின் கதை. திரும்பி வரும் போது அவருக்கு நல்ல சீட் கிடைத்து விட்ட்து. அப்படியே அடுத்தவர் கடைசி சீட்டில் படும் அவஸ்தையை ரசிக்கலாம் என்று பாத்தாராம். அங்கே சமீப காலத்தில் திருமணமான தம்பதிகள் ஆனந்தமாய் ஒவ்வொரு வளைவுகளிலும் மகிழ்ந்து கொண்டிருந்தார்களாம். எப்படி மாறுகிறது ஒவ்வொருவரின் பார்வையும்??

இப்படித்தான் அந்தமானுக்கு வருபவர்களின் பார்வையும் மாறுகிறது. ஒரு காலத்தில் கைதிகளுக்காய் உருவான தீவு, தெரிந்தோ தெரியாமலோ இன்டர்நெட் புன்னியத்தில் ஒரு சுற்றுலா தளமாய் மாறிவிட்ட்து. 90 வாக்கில் நாம் பிளைட்டில் ஏறினால் ஒருவர் அல்லது ரெண்டு முகம் தான் புதுமுகம்… அறியா முகமாய் இருக்கும். இப்போது விமானம் முழுக்கவே புதுமுகமாய் இருக்கிறது. அந்த அளவு அலைமோதும் உல்லாச பயணிகள்.

சமீபத்தில் ஹனிமூனுக்கு என்று அந்தமான் வந்த ஒருவர் “தீஞ்சி போயிட்டேன்” என்று சொல்லி இருந்தார் தன் முகநூலில். அந்தமான் வருபவர்கள் நல்லது என கருதுவது… விமான பயணம், இயற்கையான சூழல். (அத்துடன் குளு குளு என்று இருக்கும் என்ற தவறான அபிப்பிராயம்) குறைந்த நாட்களில் அதிக இடம் பார்த்தல்.

அந்தமான் வர நினைக்கும் ஹனிமூன் தம்பதிகளுக்கு என்னால் முடிந்த டிப்ஸ் இதோ:

1. அதிகாலை 4.30 மணிக்கே விமானம் ஏறி அன்றும் ஒரு நாள் அந்தமானில் இருக்கலாமே என்ற எண்ணத்தை கை விடுங்கள். அப்படி செய்தால், 2.30 மணிக்கே ஏர்போர்ட் வரவேண்டும். அதுக்கு 1 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.. அப்படியே போய் பிளைட்டில் தூங்க வேண்டும்.. தேவையா இதெல்லாம். காலை 10 மணிவாக்கில் இருக்கும் பிளைட் புடிங்க.
2. டவுன் விட்டு தள்ளி இருக்கும் ஹோட்டலா பாருங்க.
3. பாராடாங்க் லைம் ஸ்டோன் கேவ் பார்க்கும் ஆசை வேண்டாம். இதுக்கும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து, ஒரு மணி நேரம் காரில் போய்… அப்புறம் ஜெரவா ஏரியாவுக்காய் காத்திருந்து… அதில் ஒரு மணி நேரம் பயணித்து அப்புறம் பெரிய படகில் ஏறி மறு தீவு போய்… அங்கிருந்து முக்கால் மணி நேரம் சின்ன போட்டில் போய்… அதுக்கு அப்புறமா ஒரு கிலோமீட்டர் நடையாய் நடந்தால்… பாக்க முடியும் இடம்… தான் அந்த லைம் ஸ்டோன் கேவ். அப்புறம் லபோதிபோ என்று 3 மணிக்குள் திரும்பியாகும் கட்டாயம். புது மண தம்பதிகளுக்கு இதெல்லாம் தேவையா??
4. கூட்டம் அலைமோதும் ஹாவ்லாக் கூட தவிர்க்கலாம்… அதுக்குப் பதிலா, அழகாய் உங்களுக்காய் கத்திருக்கும் நீல் தீவு போங்க அது உங்களுக்கு சொர்க்கம்.
5. மியூசியம், Science Centre இதெல்லாம் வேண்டாம்… வெறும் பீச் மட்டும் பாருங்க..
6. மே முதல் நவம்பர் வரை மழை காலம். மத்த நாளில் செமெ வெயில்.. நம்ம பரமக்குடி & சென்னை வெயில் மாதிரி தான். ஹனிமூனுக்கு எப்ப வருவது? என்பது உங்களுக்கு எப்பொ கல்யாணம் ஆவது என்பதை பொறுத்தது. நான் என்ன சொல்ல??

இந்த டிப்ஸ் வெறும் ஹனிமூன் பார்ட்டிகளுக்கு மட்டும் தான். சிறு குழந்தைகளுடன் வருவோர், பெரிய குழந்தைகளும் உடன் வருவதும், வயதான அப்பா அம்மாவை விமானம் காட்ட வரும் நல்ல குடிமக்களும் எதிர் பார்க்கும் டிரிப் முற்றிலும் மாறுபடும். அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அரத்தங்கள். மாற்றங்கள்.

சமீபத்திய விளம்பரங்கள் பக்கம் பார்வையைத் திருப்பினால் விசித்திரமான விஷயம் ஒன்று கண்ணில் பட்ட்து. சங்க கால காதலன் காதலியோ, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இருப்பர். அவர்களின் நிஜக் காட்சியில் கூட அது தான் தெரியும். ஒரு சிறிய சுனையில் நீர் அருந்த வரும் இரண்டு மான்கள். விட்டுக் கொடுத்து அந்த நீர் அப்படியே இருந்ததாம் ரெண்டு பேருமே குடிக்காமல் … மனசு நிறைந்திருக்கும்..

ஆனா இப்பொ தொலைக்காட்சியில் வரும் கோக் விளம்பரமோ, காதலனும் காதலியும் போட்டி போட்டு குடிப்பதாய் காட்டுகிறது. காதலிலும் போட்டிதான் என்பதாய் தான் அந்த பார்வையில் பார்க்க முடிகிறது.
வயிறு நிறையும் தான்.. ஆனா மனசு???

பாடல்கள் பக்கம் பார்வையை திருப்புமுன் புதுக் கவிதை ஒன்றையும் பாத்துட்டுப் போயிடலாம்.

அன்றைய பிரபலமான புதுக்கவிதை அது..
நீ முதன் முறையாய்
என்னைப் பார்த்தபோது
நெஞ்சில் முள்
தைத்து விட்டது.

முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்..
எங்கே
இன்னொரு முறை பார்.

சினிமாப் பாடல்கள் பக்கம் சற்றே நமது பார்வையை செலுத்தித்தான் பாப்போமே…
ஓராயிரம் பார்வையிலே… உன் காதலை நான் அறிவேன் – காதலுக்காய் ஓராயியம் பார்வைகள் காத்திருக்கும் அவலமா அது?

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே… இது தமிழின் மூன்றில் ஒரு பாகத்தை கண்ணில் காணும் பாக்கியம்.

ஒரு நிலவோ கொள்ளை அழகு. நூறு நிலவு எப்படி இருக்கும்? கண்ணுக்குள் நூறு நிலவா?? இவ்வப்டி இரு கேள்வி.

முகத்தில் முகம் பாக்கலாம். ஆனா நகத்தில்?? நகம் கூட இருபது நிலவுகளா தெரியுதாம்..

பார்வையாலே நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு.. பேச்சு நின்ற யோக மௌனநிலை.

ஒரு தலை ராகம் படத்தில் வரும் ஒரு பழைய டயலாக். உன் பார்வை பட்டாலே கர்ப்பம் ஆயிடுவா.. அப்படி பார்வையில் வரம் வாங்கி கர்ணன் பிறந்த வரலாறும் இருக்கே.. இந்த பார்வை தான் புராணத்தில் நோக்கு என்று மாறும். அதை நம்மாளு மாத்தி யோசித்தது இப்படி:

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
கூடவே அவள்
அண்ணனும் நோக்கினான் – இது இன்றைய நிலை.

எப்படியோ ராமாயணம் வரை வந்தாச்சி.. அப்படியே ஒரு எட்டு அசோகவனமும் பார்த்துட்டு போகலாமே…

அங்கே அனுமன் ஜாலியா விளையாடின்டு இருக்கார். அவரது சேட்டையை பாத்து அவாவா மிரண்டு போய் கிடக்கா.. கம்பரும் சொல்ல வார்த்தை வராமெ இருக்கார்… பின்னெ..பட்டு பட்டுன்னு அரக்கர்கள் செத்துப் போக அப்படியே வருது கம்பர் வார்த்தைகளும்.

அரக்கர்கள் இறந்து விழுந்தனர். எப்படி? எப்படி? இறந்தது எப்படின்னு கேட்டா… இழுக்கப்பட்டதால் சிலர், இடிபட்டதால் பலர், தூக்கி எறியப்பட்டதால், பிடி பட்டதால், அனுமன் சத்தம் கேட்டே சிலர், அடி வாங்க்கி செத்ததை பாத்து பயந்தும் செத்தனர். எல்லாத்தை விடவும் கொடுமை அனுமன் பாத்த பார்வையால் பாத்தே செத்துப் போனர் என்பது தான் வேடிக்கை.

ஈர்க்கப் பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப் பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப் பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப் பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.

பட்டனர் சிலர் சிலர், பட்டார் ஆகியயவைகளை Copy & Paste செய்ய முடிந்த கம்பர் பாடல் இது. ஆமா உங்க பார்வையில் எப்படி படுது..??

சைவம் அசைவம் முசைவம்…


பதில் தெரியாத கேள்விகள் என்ன? என்ன? என்று ஒரு கேள்வி கேட்டால் அதுக்கே பதில் தெரியாதுன்னு நெனைக்கிறேன். சாம்பிள் கேள்விகள் இதோ சில:

வானத்தில் நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை?
முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?
Why dis Kolaveri பாட்டில் வரும் அந்த கொலைவெறிக்கு என்ன அர்த்தம்?
மருத நாயகம் படம் எப்பொ வரும்?
சுகுனா சிக்கன் விளம்பரத்தில் வரும் அனு சிக்கன் சாப்பிடுவாங்களா?
அது சரி முட்டை சைவமா அசைவமா? (முசைவம் என்று பெயர் தரலாமா?)

இந்த முட்டை சமாச்சாரம் வச்சிட்டு நாம கொஞ்சம் மண்டையெக் கொடைவோம். மிகக் குறைவான அளவினர் தான் அந்தமானில் சைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். வட இந்திய சைவர்கள்(?) கோழி இறால் என்று எதையும் விட்டு வைப்பதில்லை. வங்காளத்து சைவம் லிஸ்டில் மீன் இருக்கிறது. மேற்கு வங்கத்து வீடுகளில் வீட்டுக்கு வீடு குளம் மாதிரி அமைத்து அதில் மீன் வளர்த்து அதைத் தான் வங்காளிகள் விரும்பி சாப்பிடுவார்களாம் – நம்மூர் தோட்டம் போட்டு காய்கறி வளர்ப்பது மாதிரி.

நம்மூர் சைவ மக்கள் பரவாயில்லை இப்பொத்தான் கொஞ்சம் கொஞ்சம் முட்டை வரை வந்திருக்கிறார்கள்.

சாப்பாடு வச்சி ஒரு மனுஷனோட குணம் அமையும்னு கீதை வரை சொல்லியிருக்காங்க. எனக்கு என்னவோ அது ஏதோ சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயமாத்தான் தெரியுது. அப்பா அம்மா வீட்டிலே என்ன சாப்பிடச் சொல்லிக் குடுத்தாங்களோ, அது தானே தொடருது. ஆடு கோழி சாப்பிட வைத்தார்கள். அது வரை சரி. பன்னிக்கறி..??? சீ..சீ.. மனுஷன் தின்பானா?? ன்னு சொல்ல வைத்தது.

அந்தமான் தீவில் வந்தபிறகு தான் தெரிகிறது அதை சாப்பிட ஒரு கூட்டமே இருக்கு என்று. அவர்களிடம் பாம்பு பற்றி கேட்டால்..சீ..சீ.. அதெல்லாமா சாப்பிடுவார்கள் என்கிறார்கள்.

பாம்புக் கறி சாப்பிடவும் ஆட்கள் இல்லாமலா இருக்காங்க?? (அது சரி.. இல்லையா? இருக்காங்களா?… இருக்காக தான்)

ஹாங்காங்க் சென்ற போது சுத்த சைவர் ஒருவர் உடன் வந்தார். பன் மாதிரி ஏதோ ஒன்று நடுவே சிக்கன் வைத்து கொடுத்தனர். சைவம் என்று கேட்டவுடன் சிக்கனை கழட்டி கொடுத்தனர். நண்பர் அன்று கொலைப் பட்டினி தான்.

ஒரு பஃபே அன்று சைவ நண்பர் சந்தோஷமாய் சோறு மட்டும் சாப்பிட்டு வந்தார். இந்த ஊரில் கிஸ்மிஸ் நல்லா இருக்கு. சோத்திலும் போட்டிருக்காங்க என்றபடி ரசித்து சாப்பிட்டு வந்தார். நான் ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அது கிஸ்மிஸ் இல்லை. சின்ன சின்ன இறால். அவர் பட்டினி கிடக்க வேண்டாமென்று சும்மா இருந்து விட்டேன்.

கோழிக்கோடில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டு விட்டு நண்பரிம் சொன்னேன், பரவாயில்லையே கேரளாவில் ஆட்டுக்கறி 5 ரூபாய்க்கே அள்ளி வைக்கிராய்ங்க என்றேன். அவர் லேசாய் சிரித்தார். நான் சாப்பிட்டது மாட்டிறைச்சி என்பது பின்னர் தான் தெரிந்தது.

என்ன நான் சரியாப் பேசுறேனா? – ன்னு கேக்கிற மாதிரி.. எல்லாரும் அவசியம் அவங்களுக்குளேயே கேட்டுக்க வேண்டிய கேள்வி ஒன்னு இருக்கு. அது தான் : “என்ன நான் சரியாத்தான் சாப்பிட்றேனா??”

பசிக்கு சாப்பிடாதீங்க.. ருசிக்கும் சாப்பிடாதீங்க… நீங்க எந்த மாதிரி வேலை செய்றீங்களோ அதுக்குத் தகுந்த மாதிரி சாப்பிடுங்க.. வேலைக்கேத்த சோறு. இது நான் சொல்லலைங்க… National Institute of Naturopathy, Pune ல் சொல்லிக் குடுத்தாங்க இதை.. அதான் எனக்குத் தெரியுமே என்று சொல்றது என் காதுக்கும் கேக்குது. ஆனா அந்த மாதிரி சாப்பிட்றிங்களா?? அதானே தெரியாது..

சாப்பாடு மாதிரி சொல்லிக் குடுக்கப்பட்ட இன்னொரு சங்கதி இந்த நாணம். “நாணமோ… இன்னும் நாணமோ?” என்ற TMS பாடும் பாட்டில் கூட அந்த நாணம் லேசா மேலோட்டமாத் தெரியும்.

அந்தமானுக்கு வரும் உல்லாசப் பயணிகள் இங்குள்ள ஆடையில்லா மனிதர்களின் போட்டோவை பாத்தே நாணமாய் நெளிவதும் ஒரு ஜாலியான விஷயம் தான். ஆனா அந்த ஆடையில்லா மனிதர்களுக்கு அப்படி ஒரு நாணம் இருப்பதாகவே தெரியலை என்பது தான் ஆச்சரியமான் செய்தி.

அப்படியா சேதின்னு ஒடனே பிளைட் புடிச்சி அந்தமானுக்கு வந்திடாதீங்க.. இப்பொ ரொம்ப கட்டுப்பாடுகள் ஆயிப்போச்சி… படத்திலும் திருட்டுத்தனமா எடுத்து இன்னும் You Tube லும் இருக்கும் படத்திலும் பாத்தா தான் உண்டு.

நாணம் வந்தா என்ன செய்வாய்ங்க?? உங்க கிட்டே கேட்டா நீங்க கொஞ்சம் யோசிப்பீங்க.. நம்ம டிகிரி தோஸ்த் கம்பர் கிட்டெ கேட்டா.?? (அது சரி.. டிகிரிக்கும் தோஸ்த்துக்கும் என்ன சம்பந்தம்?? அதை தனியா ஒரு போஸ்டிங்க்லெ பாப்போம்.) அவரு தான் பதில் ரெடிமேடா வச்சிருப்பார்.

கம்பர் என்ன சொல்றார் தெரியுமா? நாணம் வந்தா மொகம் வெளிறிப் பொகுமாம். அதுவும் மாமேரு மலை எப்படி வெளுப்பா இருக்குமோ அந்த மாதிரியாம். அது சரி இதை எங்கே சொல்றாருன்னு கேக்கீகளா?

அப்பொ என் கூட கொஞ்சம் அனுமன் மாதிரி மதில் சொவத்திலெ ஏறி வந்து இலங்கையின் வானளாவிய கோபுரங்களைப் பாக்க வாங்க. அதை கீழோட்டமா பாத்த பஞ்ச பூதங்கள், அட என்று குஷி ஆயிட்டாங்களாம். ஆனா மேலே பாத்து.. அடடா அது தப்பு என்று நாணி வெளிறிப் போன மாதிரி இருந்ததாம். இது அனுமன் கண்ணில் தெரிந்த காட்சி. கம்பன் சொல்வது.

எனக்கென்னவோ இதே பாணியில் வந்த புதுக் கவிதையும் பின்னர் சினிமாப் பாடலும் தான் வில்லங்கமா ஞாபகத்துக்கு வருது.

உன் இடையைப் பாத்த்தேன்
பிரம்மன் கஞ்சன்
என்று நினைத்தேன்.

சற்றே நிமிர்ந்து பாத்தேன்
அவன் வள்ளல்
என்பது புரிந்த்து.

கம்பர் பாட்டை போட்டு நல்ல பேரு வாங்கிக்குவோம்..

நீரும் வையமும் நெருப்பும் மேல்நிமிர் நெடுங்க் காலும்
வாரி வானமும் வழங்கல் ஆகும் தம் வளர்ச்சி
ஊரின் இந் நெடுங்க் போபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்ததால்
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழு முற்றும் வெள்கி.

என்ன சொல்லுங்க… நல்ல பேரு கெடைக்குமா?