இந்த இமேஜ் படுத்துற பாடு.. பெரும் பாடுங்க… அது என்ன இமேஜ்? என்று யாராவது கேட்டா, பதில் சொல்றதும் கஷ்டம் தான், (இதுவும் இந்த ஈகோ மாதிரி அல்லது ஆன்மா மாதிரி தான். யாரவது சீரியஸா சொல்றச்சே புரியற மாதிரி இருக்கும், அப்புறம் புரியாத மாதிரியும் இருக்கும்). அவனவன், அவனவன் மேலே மனசிலெ வச்சிருக்கிற ஒரு பெரிய்ய (சில சமயம் கற்பனையான, தெளிவில்லாத) அபிப்பிராயம். இப்படி ஒரு Defition ஓகேவா? (ஆமா… இந்த மாதிரி definition சொல்றப்பொ பிராக்கெட் allowed தானா?)
மாதவன் ஒரு படத்திலெ இப்படித்தான் லேட் நைட்டிலெ ராமேஷ் கண்ணா சகிதமா, வீட்டுக்கு ரெண்டு ஃப்ரண்டுகளைக் கூட்டிட்டுப் போவாரு, பயங்கரமா இமேஜ் பில்டப் செஞ்சிட்டு. தன்னோட மனைவி (ஜோதிகாங்க..) தனக்காக காத்திருந்து, அப்புறம் தான் சாப்பிடுவா என்று சொல்லி அழைத்து வருவார் அந்த ஹீரோ. ஆனா வந்து பாத்தா, எல்லாம் உல்டாவா இருக்கும்? “ஏங்க.. வழக்கம் போல, நீங்களே எடுத்துப் போட்டு சாப்பிடுங்க” என்ற அசரீரி வீட்டுக்கு உள்ளே இருந்து ஹீரோயின் வாயிலாக வந்து, கொஞ்ச நஞ்சம் இருந்த இமேஜையும் போட்டுப் புதைக்கும்.
நண்பர்கள் போனவுடன் தான் வரும், அந்த சீனின் கிளைமாக்ஸ்.. “என்னங்க…, வீட்லெ கல்யாண வயசுலெ பொண்ணெ வச்சிட்டு, இப்படி கண்ட நேரத்திலெ, கண்ட பசங்களை குப்பிட்டு வந்தா, அப்புறம் அந்த பொண்ணு கலயாணத்திலெ இமேஜ் கெடாது?“ மாதிரி ஒரு டயலாக் போட்டு, கதாநாயகி இமேஜை சூப்பரா துக்கி பிடிச்சிருப்பாரு அந்த டைரக்டர். (இப்பொ சொல்லுங்க… என்னாலெ அந்த டைரக்டரோட இமேஜும் கொஞ்சம் மேலெ ஏறி இருக்குமே??).
வீட்டிலெ மதுரையா? சிதம்பரமா? என்ற பிரச்சினை வீட்டிலெ இருக்கோ இல்லையோ, மற்றவர்கள் அதை உன்னிப்பா கவனிப்பார்கள். நானும் அந்த ஜாதி தாங்க. ஒரு பள்ளி ஆசிரியரை இது விஷயமா உத்துப் பாத்து, ஒரு நாள் கேட்டேன். ”என்னங்க… என்ன செய்றதா இருந்தாலும் அம்மனியே அம்சம்னு இருக்கீகளே?” என்று. வந்த பதில் சூப்பர். நாம ஏதாவது சொல்லி தப்பா ஆயிட்டா, காலம் காலமா அதைப் போட்டு, நம்மளெ தாளிச்சிட்டே இருப்பாங்க. ஆனா, அதே அவங்க முடிவாலெ இருந்தா, வீடு அமைதியா இருக்கும். (அப்பொ கூட அவராலெ தாளிச்சிக் கொட்ட முடியாது என்பது தான் அவர் சொல்லாது விட்ட உண்மை). இது தான் நல்ல குடும்பத்தின் வெற்றி இமேஜின் ரகசியம். (எங்க வீட்லெ மதுரையா??? இப்படி யாரும் கேட்றாதீங்க?? அவங்க மதுரைக் காரங்க… எதுக்கு மதுரெ இமேஜ் பத்தியெல்லாம் இப்பொ யோசிக்கனும்?)
ஜெட் வேகம்.. மனோ வேகம் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க.. ஆனா என்னெக் கேட்டா இமேஜ் வேகம் ஒன்னும் இருக்குங்க. அதோட வேகம் கண்டிப்பா உங்க வேகத்தை விடவும் அதிக வேகமா இருக்கும். அதாவது நீங்க ஒரு எடத்துக்குப் போயி சேர்ரதுக்கு முன்னாடி ஒங்களைப் பத்தின இமேஜ் போய்ச் சேர்ந்திடும். அது, ”எந்த அளவுக்கு சரியான இமேஜ்?” என்பது காலப் போக்கில் தான் தெரியும்.
இப்படித் தான் லிட்டில் அந்தமான் தீவிற்க்கு தில்லியில் இருந்து ஓர் உயர் அதிகாரி வந்தார். இங்கிருக்கும் இராணுவப் படையிலிருந்து இரவு உணவிற்க்கு அழைப்பு வந்தது. அவர்கூட இருப்பதால், கூட்டி வர ஏதுவாய் எனக்கும் அழைப்பு (போனாப் போகுதுன்னு) வந்தது. அவருக்கு அங்கு போக இஷ்டமில்லெ. அவர் உற்சாகபானம் பக்கம் போனதில்லை. அசைவமும் அவருக்கு அலர்ஜியாம். என்னிடம் சொன்னார். நானும் Non Veg சாப்பிட மாட்டேன். நீங்களும் அப்படித்தான். சரக்கு எனக்கு ஆவாது. நீங்களும் தொட மாட்டீங்க…(அதெப்படி… என்னோட இமேஜ் இப்படி தாறு மாறா டெல்லி வரைக்கும் தப்பா பரவி இருக்கு என்று இன்று வரை புரியவில்லை).. உங்க முயற்சி இல்லாமலும் சில நேரங்களில் இமேஜ் வளரும்… பரவும்.. ஜாக்கிரதையா இருங்க.
ஆபீசில் யாருக்கவது மெமொ குடுத்தால் அந்த நபர்க்கு கை கால் எல்லாம் நடுங்குவது எதனால்? தங்கள் இமேஜ் கெட்டுப் போகுமோ என்ற பயத்தினால் தான். (சிலபேரு அதை வாங்கி ”வடெ போச்சே” டயலாக்குக்கு முன்னாடி தூக்கிப் போட்ற பேப்பர் மாதிரி தூக்கியும் கெடாசுவாங்க..) தான் ஒரு மெமொ கூட வாங்கியதில்லை என்று ஒருவர், தன்னோட ரிட்டயர்மெண்ட் தினத்தில் பெருமையாப் பேசினார். (ஒரு வேளை மெமொ கொடுக்கத் தெரியாத ஆளுக கிட்டேயே முழு சர்வீசும் கழிச்சிருப்பாரோ?)
இந்த மாதிரி இமேஜ் மோதல்களைத் தவிர்க்க சில ஏற்பாடுகள் உள்ளன. ஓர் ஊழியரைத் திட்டனுமா? தனியா கூப்பிட்டு கட்டி ஏறுங்க.. (அவனும் திருப்பி ஏறினா, அப்பொவும் உங்க இமேஜுக்கு எந்தக் குந்தகமும் வராது). அதே சமயம், அதே ஆளை பாராட்டனுமா? நாலு பேத்துக்கு முன்னாடி கூப்பிட்டு ஒரு சபாஷ் போடுங்க… (ஆனா முக்கா வாசிப் பேருங்க, சபாஷ் சொல்றதுக்கு மூக்காலெ அழுவானுங்க… ஆனா திட்றதெ மட்டும் நாலு பேருக்கு முன்னாடி செய்வாய்ங்க…) ம்…அது தான் அவங்க இமேஜ் என்று விட வேண்டியது தான்.
கம்பரிடமிருந்து ஒரு SMS வந்தது. ”இந்த மாதிரி நீ எழுதுறதுனாலெ, என்னோட இமேஜ் என்ன ஆவுது?” கம்பர் இமேஜுக்கு சிக்கல் வந்ததோ இல்லையோ, எனக்கு கம்பர் இமேஜ் வந்திடுச்சி… ”இதெப்பத்தி கம்பர்…” என்று கேட்கும் அளவுக்கு. எப்படியோ எனக்கு வந்த இமேஜை நான் காப்பாத்தியாக வேண்டும். சரி… கம்பர், இமேஜ் பத்தி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ன? அவர் நேரடியா சொல்லலை.. மறைமுகமா இருக்கு. (அது தான் கம்பன் சொல்லின் ஸ்பெஷல் மெஸேஜ்)
தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு எப்படி இல்லையோ, அதே மாதிரி உங்கள் ”பாஸ்” மேலதிகாரி, முதலாளி, மேலே இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்றும், நீங்க நிர்ணயம் செய்ய முடியாது. வந்து வாய்க்கிறதை அனுபவிச்சே தீரனும். ஆனா ஒன்னு.. நம்ம பாஸோட இமேஜை எந்த விதத்திலும் கீழே இறக்கி விடக் கூடாது. கம்பரின் ராமாயணத்தில் பாஸ் – ராமன்; ஊழயர் – அனுமன்.
ராமன் சீதைக்கு வைத்த அக்னி பரீட்சையில் அனுமனுக்கு அவ்வளவா இஷ்டமில்லை. (ராமனின் இமேஜ் ஏகமாய் அடி வாங்கும் இடம் வேறு அது). சீதை கற்போடு தான் இருக்கிறார் என்பதை நேரில் பாத்த ஒரே சாட்சி அனுமன். தான் சொன்னதை நம்ம பாஸ் சரியா நம்பலையோ என்ற கவலையும் ஒரு பக்கம். கம்பகாப்பியத்தில் நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் ”டோபி சார்” (சலவைத் தொழிலாளி) பேச்சு எல்லாம் கிடையாது. இராவணன் கதை முடிந்து, சீதையை சந்திக்கும் முதல் சீனில் அந்த அக்னி பரீட்சை நடக்கிறது.
அப்புறம் அயோத்திக்கு தகவல் தர, சரியான நெட்வொர்க் இல்லாததால், அனுமன் பரதனைப் பாக்க கிளம்புகிறார். பாஸ் சொன்ன சொல் கேட்டு. அங்கே பரதனிடம் அந்த ஊழியர், ராமனின் இமேஜுக்கு பிரச்சினை வராமல் அந்த அக்னி பரீட்சை பத்தி சொல்லாமல் சொன்ன சீன் பாருங்க….
”பகைவரின் ஊன் நுனியில் பொருந்தப் பெற்ற வேலையுடைய பரதனே! மாலை அணிந்த ராமன், பிரம்மா, சிவன், மயன் எல்லாரும் வாழ்த்த, தேவர்களின் தலைவியாகிய சீதையைப், பிறனிடத்தில் உயிர் வாழ்ந்ததால் சினம் கொள்ள, உடனே அக்னி வந்து அவளது கற்பின் சிறப்பைக் கூறிய அளவில் சினம் தணிந்தான்.” இது பரதனிடம் அனுமன் சொன்னது. சீதை அக்னியில் இறங்கியதை நாசூக்காய் மறைத்து, ராமனின் இமேஜுக்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, அனுமன் வாயிலாக கம்பர் சொன்னது. கடைசியில் கம்பராமாயணப் பாட்டு வருவது என் இமேஜ்… இதோ பாட்டு..
நான்முகன் விடையை யூரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன் முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியைச் சீறி
தேன் முகம் மலரும் தாரான் அரி சொலச் சீற்றம் தீர்ந்தான்.
அதுசரி… இப்பொ யோசிச்சிச் சொல்லுங்க… எது உங்க இமேஜ்??