பாஸ் என்ற இமேஜ்


இந்த இமேஜ் படுத்துற பாடு.. பெரும் பாடுங்க… அது என்ன இமேஜ்? என்று யாராவது கேட்டா, பதில் சொல்றதும் கஷ்டம் தான், (இதுவும் இந்த ஈகோ மாதிரி அல்லது ஆன்மா மாதிரி தான். யாரவது சீரியஸா சொல்றச்சே புரியற மாதிரி இருக்கும், அப்புறம் புரியாத மாதிரியும் இருக்கும்). அவனவன், அவனவன் மேலே மனசிலெ வச்சிருக்கிற ஒரு பெரிய்ய (சில சமயம் கற்பனையான, தெளிவில்லாத) அபிப்பிராயம். இப்படி ஒரு Defition ஓகேவா? (ஆமா… இந்த மாதிரி definition சொல்றப்பொ பிராக்கெட் allowed தானா?)

மாதவன் ஒரு படத்திலெ இப்படித்தான் லேட் நைட்டிலெ ராமேஷ் கண்ணா சகிதமா, வீட்டுக்கு ரெண்டு ஃப்ரண்டுகளைக் கூட்டிட்டுப் போவாரு, பயங்கரமா இமேஜ் பில்டப் செஞ்சிட்டு. தன்னோட மனைவி (ஜோதிகாங்க..) தனக்காக காத்திருந்து, அப்புறம் தான் சாப்பிடுவா என்று சொல்லி அழைத்து வருவார் அந்த ஹீரோ. ஆனா வந்து பாத்தா, எல்லாம் உல்டாவா இருக்கும்? “ஏங்க.. வழக்கம் போல, நீங்களே எடுத்துப் போட்டு சாப்பிடுங்க” என்ற அசரீரி வீட்டுக்கு உள்ளே இருந்து ஹீரோயின் வாயிலாக வந்து, கொஞ்ச நஞ்சம் இருந்த இமேஜையும் போட்டுப் புதைக்கும்.

நண்பர்கள் போனவுடன் தான் வரும், அந்த சீனின் கிளைமாக்ஸ்.. “என்னங்க…, வீட்லெ கல்யாண வயசுலெ பொண்ணெ வச்சிட்டு, இப்படி கண்ட நேரத்திலெ, கண்ட பசங்களை குப்பிட்டு வந்தா, அப்புறம் அந்த பொண்ணு கலயாணத்திலெ இமேஜ் கெடாது?“ மாதிரி ஒரு டயலாக் போட்டு, கதாநாயகி இமேஜை சூப்பரா துக்கி பிடிச்சிருப்பாரு அந்த டைரக்டர். (இப்பொ சொல்லுங்க… என்னாலெ அந்த டைரக்டரோட இமேஜும் கொஞ்சம் மேலெ ஏறி இருக்குமே??).

வீட்டிலெ மதுரையா? சிதம்பரமா? என்ற பிரச்சினை வீட்டிலெ இருக்கோ இல்லையோ, மற்றவர்கள் அதை உன்னிப்பா கவனிப்பார்கள். நானும் அந்த ஜாதி தாங்க. ஒரு பள்ளி ஆசிரியரை இது விஷயமா உத்துப் பாத்து, ஒரு நாள் கேட்டேன். ”என்னங்க… என்ன செய்றதா இருந்தாலும் அம்மனியே அம்சம்னு இருக்கீகளே?” என்று. வந்த பதில் சூப்பர். நாம ஏதாவது சொல்லி தப்பா ஆயிட்டா, காலம் காலமா அதைப் போட்டு, நம்மளெ தாளிச்சிட்டே இருப்பாங்க. ஆனா, அதே அவங்க முடிவாலெ இருந்தா, வீடு அமைதியா இருக்கும். (அப்பொ கூட அவராலெ தாளிச்சிக் கொட்ட முடியாது என்பது தான் அவர் சொல்லாது விட்ட உண்மை). இது தான் நல்ல குடும்பத்தின் வெற்றி இமேஜின் ரகசியம். (எங்க வீட்லெ மதுரையா??? இப்படி யாரும் கேட்றாதீங்க?? அவங்க மதுரைக் காரங்க… எதுக்கு மதுரெ இமேஜ் பத்தியெல்லாம் இப்பொ யோசிக்கனும்?)

ஜெட் வேகம்.. மனோ வேகம் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க.. ஆனா என்னெக் கேட்டா இமேஜ் வேகம் ஒன்னும் இருக்குங்க. அதோட வேகம் கண்டிப்பா உங்க வேகத்தை விடவும் அதிக வேகமா இருக்கும். அதாவது நீங்க ஒரு எடத்துக்குப் போயி சேர்ரதுக்கு முன்னாடி ஒங்களைப் பத்தின இமேஜ் போய்ச் சேர்ந்திடும். அது, ”எந்த அளவுக்கு சரியான இமேஜ்?” என்பது காலப் போக்கில் தான் தெரியும்.

இப்படித் தான் லிட்டில் அந்தமான் தீவிற்க்கு தில்லியில் இருந்து ஓர் உயர் அதிகாரி வந்தார். இங்கிருக்கும் இராணுவப் படையிலிருந்து இரவு உணவிற்க்கு அழைப்பு வந்தது. அவர்கூட இருப்பதால், கூட்டி வர ஏதுவாய் எனக்கும் அழைப்பு (போனாப் போகுதுன்னு) வந்தது. அவருக்கு அங்கு போக இஷ்டமில்லெ. அவர் உற்சாகபானம் பக்கம் போனதில்லை. அசைவமும் அவருக்கு அலர்ஜியாம். என்னிடம் சொன்னார். நானும் Non Veg சாப்பிட மாட்டேன். நீங்களும் அப்படித்தான். சரக்கு எனக்கு ஆவாது. நீங்களும் தொட மாட்டீங்க…(அதெப்படி… என்னோட இமேஜ் இப்படி தாறு மாறா டெல்லி வரைக்கும் தப்பா பரவி இருக்கு என்று இன்று வரை புரியவில்லை).. உங்க முயற்சி இல்லாமலும் சில நேரங்களில் இமேஜ் வளரும்… பரவும்.. ஜாக்கிரதையா இருங்க.

ஆபீசில் யாருக்கவது மெமொ குடுத்தால் அந்த நபர்க்கு கை கால் எல்லாம் நடுங்குவது எதனால்? தங்கள் இமேஜ் கெட்டுப் போகுமோ என்ற பயத்தினால் தான். (சிலபேரு அதை வாங்கி ”வடெ போச்சே” டயலாக்குக்கு முன்னாடி தூக்கிப் போட்ற பேப்பர் மாதிரி தூக்கியும் கெடாசுவாங்க..) தான் ஒரு மெமொ கூட வாங்கியதில்லை என்று ஒருவர், தன்னோட ரிட்டயர்மெண்ட் தினத்தில் பெருமையாப் பேசினார். (ஒரு வேளை மெமொ கொடுக்கத் தெரியாத ஆளுக கிட்டேயே முழு சர்வீசும் கழிச்சிருப்பாரோ?)

இந்த மாதிரி இமேஜ் மோதல்களைத் தவிர்க்க சில ஏற்பாடுகள் உள்ளன. ஓர் ஊழியரைத் திட்டனுமா? தனியா கூப்பிட்டு கட்டி ஏறுங்க.. (அவனும் திருப்பி ஏறினா, அப்பொவும் உங்க இமேஜுக்கு எந்தக் குந்தகமும் வராது). அதே சமயம், அதே ஆளை பாராட்டனுமா? நாலு பேத்துக்கு முன்னாடி கூப்பிட்டு ஒரு சபாஷ் போடுங்க… (ஆனா முக்கா வாசிப் பேருங்க, சபாஷ் சொல்றதுக்கு மூக்காலெ அழுவானுங்க… ஆனா திட்றதெ மட்டும் நாலு பேருக்கு முன்னாடி செய்வாய்ங்க…) ம்…அது தான் அவங்க இமேஜ் என்று விட வேண்டியது தான்.

கம்பரிடமிருந்து ஒரு SMS வந்தது. ”இந்த மாதிரி நீ எழுதுறதுனாலெ, என்னோட இமேஜ் என்ன ஆவுது?” கம்பர் இமேஜுக்கு சிக்கல் வந்ததோ இல்லையோ, எனக்கு கம்பர் இமேஜ் வந்திடுச்சி… ”இதெப்பத்தி கம்பர்…” என்று கேட்கும் அளவுக்கு. எப்படியோ எனக்கு வந்த இமேஜை நான் காப்பாத்தியாக வேண்டும். சரி… கம்பர், இமேஜ் பத்தி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ன? அவர் நேரடியா சொல்லலை.. மறைமுகமா இருக்கு. (அது தான் கம்பன் சொல்லின் ஸ்பெஷல் மெஸேஜ்)

தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு எப்படி இல்லையோ, அதே மாதிரி உங்கள் ”பாஸ்” மேலதிகாரி, முதலாளி, மேலே இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்றும், நீங்க நிர்ணயம் செய்ய முடியாது. வந்து வாய்க்கிறதை அனுபவிச்சே தீரனும். ஆனா ஒன்னு.. நம்ம பாஸோட இமேஜை எந்த விதத்திலும் கீழே இறக்கி விடக் கூடாது. கம்பரின் ராமாயணத்தில் பாஸ் – ராமன்; ஊழயர் – அனுமன்.

ராமன் சீதைக்கு வைத்த அக்னி பரீட்சையில் அனுமனுக்கு அவ்வளவா இஷ்டமில்லை. (ராமனின் இமேஜ் ஏகமாய் அடி வாங்கும் இடம் வேறு அது). சீதை கற்போடு தான் இருக்கிறார் என்பதை நேரில் பாத்த ஒரே சாட்சி அனுமன். தான் சொன்னதை நம்ம பாஸ் சரியா நம்பலையோ என்ற கவலையும் ஒரு பக்கம். கம்பகாப்பியத்தில் நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் ”டோபி சார்” (சலவைத் தொழிலாளி) பேச்சு எல்லாம் கிடையாது. இராவணன் கதை முடிந்து, சீதையை சந்திக்கும் முதல் சீனில் அந்த அக்னி பரீட்சை நடக்கிறது.

அப்புறம் அயோத்திக்கு தகவல் தர, சரியான நெட்வொர்க் இல்லாததால், அனுமன் பரதனைப் பாக்க கிளம்புகிறார். பாஸ் சொன்ன சொல் கேட்டு. அங்கே பரதனிடம் அந்த ஊழியர், ராமனின் இமேஜுக்கு பிரச்சினை வராமல் அந்த அக்னி பரீட்சை பத்தி சொல்லாமல் சொன்ன சீன் பாருங்க….

”பகைவரின் ஊன் நுனியில் பொருந்தப் பெற்ற வேலையுடைய பரதனே! மாலை அணிந்த ராமன், பிரம்மா, சிவன், மயன் எல்லாரும் வாழ்த்த, தேவர்களின் தலைவியாகிய சீதையைப், பிறனிடத்தில் உயிர் வாழ்ந்ததால் சினம் கொள்ள, உடனே அக்னி வந்து அவளது கற்பின் சிறப்பைக் கூறிய அளவில் சினம் தணிந்தான்.” இது பரதனிடம் அனுமன் சொன்னது. சீதை அக்னியில் இறங்கியதை நாசூக்காய் மறைத்து, ராமனின் இமேஜுக்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, அனுமன் வாயிலாக கம்பர் சொன்னது. கடைசியில் கம்பராமாயணப் பாட்டு வருவது என் இமேஜ்… இதோ பாட்டு..

நான்முகன் விடையை யூரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன் முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியைச் சீறி
தேன் முகம் மலரும் தாரான் அரி சொலச் சீற்றம் தீர்ந்தான்.

அதுசரி… இப்பொ யோசிச்சிச் சொல்லுங்க… எது உங்க இமேஜ்??

அங்க(male) வஸ்திரம்


கொஞ்ச காலம் முன்பு வரைக்கும், தாலி செண்டிமெண்ட் படங்கள் சக்கை போடு போட்டன. (இப்பொ எல்லாம் பிரமாண்டமான படங்கள் தான் வெற்றி பெறுகின்றன). ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் தாலியின் மகிமை, இப்படி காலாவதி ஆகிவிட்டதைப் பாத்தால் வியப்பாத்தான் இருக்கு. சமீபத்தில் ஒரு ரவுடி பலாத்காரமாய் தாலிகட்ட, அதை தூக்கி எறிய நாயகி வரும் போது, தாலி பற்றிய டயலாக் பீரிடும் படம் பாத்தேன். சிரிப்பாத் தான் இருந்தது. சாதாரன சாம்பு, சோப்புக்கு பயந்து தாலியைக் கலட்டி வைக்கும் இந்தக் காலத்தில்..??? பியூட்டி பார்லரில் தாலியை மாட்டி வைக்க தனி ஏற்பாடே இருப்பதாய் கேள்வி.. எட்டிப் பாக்க ஆசை தான். விட மாட்டேன் என்கிறார்களே!!

ஸ்டேட்டஸ் சிம்மள் பற்றி சூப்பரான ஒரு பதிவை இதயம் பேத்துகிறது ஜவஹர் எழுதி இருந்தார். கார், மொபைல் இதெல்லாம் எப்படி Status Symbol ஆனது என்று அந்தப் பதிவு பேத்துகிறது… சாரி..பேசுகிறது. என்னைக் கேட்டா (யாரு கேக்கிறா?) தாலியையும் இதில் சேத்துக்கலாம். மஞ்சள் கயிறில் ஆரம்பித்த அந்தத் தாலி, இப்பொ மஞ்சள் கலரில் ஜொலிக்கும் தங்கத்துக்கு மாறி விட்டது. அந்தக் காலத்தில் தாலியை அடகு வைப்பது போதாத காலத்தில். ஆனா இப்பொ தாலி செய்யவே எல்லாத்தையும் வைத்தாலும் போதாது போல் இருக்கு. ஜுவல்லரி முதலாளிகள் புத்திசாலிகள். எங்காவது தாலி மாதிரி கொஞ்சம் சேட்டை செய்து வித்தை காட்டி விடுகிறார்கள்.

பெண்களுக்கு தாலி போல் ஆண்களுக்கு அப்படி ஒன்றும் இல்லையா என்று யோசிக்கும் போது (உன்னை யாரு இப்படி யோசிக்கச் சொன்னது?) தான் பூணூல் மனசிலெ சிக்கியது. ஆண்களில் சிலருக்கு பூணூல் ஓர் அடையாளமாய் வந்து நிக்குது. 1980 களில் பூணூலைக் கலட்டி எறியும் போது அப்படியே Slow motion ல் அலைகள் ஓய்வது போலக் காட்டிய அ. ஓ இல்லை என்று ஒரு படம் வந்தது. அதே போல் அதுக்கு அப்புறம் பாக்கியராஜ் பூணூல் போடும் போதும் மங்கல இசை முழங்க அதுவும் Slow motion ல் தான் வரும். மாற்றங்கள் மாறுதல்கள் இப்படி மெதுவாத்தான் வரும் என்று நாசூக்காச் சொல்றாகளோ? இருக்கலாம். காலப்போக்கில் இதுவும் காலாவாதியாகி விட்டது.

என்னோட பையன் முன்னாடி எல்லாம், ஆதித்யா சிரிப்பொலி மாதிரி காமெடி சேனல்களை விரும்பிப் பாப்பான். இப்பொ சமீப காலமா முரசு, சன் லைப்ல வர்ர படத்தை அப்பப்பொ விரும்பிப் பாக்குறான். வெவரம் கேட்டா, அப்பா, ”அந்தக் காமெடியை விட இந்தப் பழைய படங்களோட காமெடி சூப்பரா இருக்குப்பா.. இவங்க டிரஸ்ஸு, டான்ஸ், டயலாக், பாட்டு, முக expression, இப்படி எல்லாமே செமெ காமெடியா இருக்குப்பா” என்கிறான். சமீப காலமா காணாமப் போன சங்கதிகள் எல்லாம் படத்திலெ பாத்தாலும் சிரிப்பாத் தான் இருக்கு.

ஒரு சமயம் காஞ்சிபுரம் போயிருந்தேன். சரி வந்தது தான் வந்தாச்சி, அந்த ”தெய்வத்தின் குரல்” எழுதின தெய்வத்தை(??)யும்தான் தரிசித்து வரலாம்னு கிளம்பிட்டேன். உள்ளே போகும் முன், சட்டையைக் கழட்டனும் என்றார்கள். ஏற்கனவே இப்படி கேராளா கோவில் ஒன்றில் கலட்டியதாய் ஞாபகம். சரி.. கழட்டி பாத்தா… நான் ஒத்தெ ஆளு தான், பூணூல் இல்லாமெ நிக்கிறேன். ஒத்தெப் பிராமணன் என்பார்கள். நான் பிராமினாய் ஒத்தையாய் நின்றேன்.

நான் பிராமணனா? என்று கேள்வியினை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தமிழினை என்றும் நெஞ்சோடு வைத்திருக்கும் எனது பூர்வீகம் தேடினால், தற்போதைய குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கு போக வேண்டி வரும். வந்தோரை வாழ வைக்கும் தமிழகம், நம்மையும் வாழ வைத்தது… வைக்கிறது.. இனியும் வாழ வைக்கும். மதுரையில் மெய்யாலுமே ”மதுரை”( மதுரையா? சிதம்பரமா என்பதின் மதுரை) ஆண்ட காலம் அது. வந்து பல நூறாண்டுகள் கடந்த போதும், பூணூல் போடலாமா என்ற பிரச்சினை வந்தது. ராணி மங்கம்மாள் முன்னிலையில் மணிக்கணக்காய் வாதிட்டு (இப்பொது பிரச்சினை வந்திருந்தால் வருடக் கணக்கில் ஆயிருக்கும்) பூணூல் போடலாம் என்று ஒரு சாசனம் (தெலுங்கில் எழுதி) கொடுத்து பிரச்சினை முடித்தார்கள்.

மநு தர்மம் என்ன தான் சொல்கிறது என்று மேலோட்டமா ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அதில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூணூல் அணியலாம் என்றும் அரசல் புரசலா தெரிஞ்சது. அங்கேயும் ஒரு பஞ்ச் இருக்கு. எல்லாரும் எல்லா பூணூலும் போட்டுவிட முடியாது. பருத்தி, சணல், உல்லன் நூல்கள் வைத்து தனித் தனியே அணிய வேணுமாம். அப்படியே மேஞ்ச போது மாமிசம் சாப்பிட அனுமதியும் இருக்கு என்கின்ற தகவலும் சிக்கியது. அந்தமானில் கடல் உணவு ஜாலி தான்.. எல்லார்க்கும். குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாக்கும் நாம், இந்த மாதிரியான விஷயங்களிலும் ரொம்பவே மாறிட்டோம் என்று மட்டுமே தான் சொல்ல முடியும்.

படத்தில் காட்டப் படும் அளவுக்கு பூணூலின் மகத்துவம் இருக்கோ இல்லையோ, தேவையான நேரங்களில் போட்டுக் கலட்டுவதும் பாக்கத்தான் முடிகிறது. முக்கியமான நல்லது கெட்டதுகளில் கல்யாணம் கருமாதி போன்ற நேரங்களில் பூணூல் முக்கிய அம்சமாய் இருக்கிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார்… உற்சாக பாணம் அருந்தும் சமயங்களில் பூணூலை கழட்டி வைத்து விடுவார். தேவையான நேரங்களில் மட்டும் அணிபவர்களும் உண்டு. அந்தமானின் சிறு சிறு தீவுகளில் பூஜாரிகளின் நிலை இது போல் தான். பூஜை நேரத்தில் மட்டும் பவ்யமாய் பூணூலோடு தரிசனம் தருவர். மத்தது எல்லாம்…எல்லாமே… உண்டு தான்.

இந்த வம்பன் பார்வையில் இன்று மாட்டி வதை படுவது இந்தப் பூணூல். இந்தப் பூணூல், அந்தக் காலத்தில் கம்பரின் பார்வையில் படுது. எப்புடி எழுதுறாரு பாக்கலாமா?
அசோக வனத்தில் இராவணன் வருகிறார் .. பராக்..பராக்..பராக்.. நீலக்கலர்ல ஒரு மலை (பாத்தாலே கிரானைட் குவாரி போட்டு விக்கத் தோணும் அளவுக்கு ரிச் கலர்). அது மேலேயிருந்து ரொம்ப பள்ளத்துக்கு விழுகிற மாதிரி வெள்ளை வெள்ளேர்னு… பூணூலா… அது தான் இல்லை. அப்படி பளீர்னு பட்டு நூல்ல செஞ்ச மாலை மாதிரி இருக்கிற மேலாடை.. ம்.. அப்புறம், கழுத்தில் மாலை. அதில் மணிகள் ஒளி வீசுதாம்.. அது சும்மா சுகமான இள வெய்யில் (ஈவினிங் பஜ்ஜி சாப்பிட்டு டீ குடிக்கிற சுகம்) மாதிரி இருக்குமாம். இப்பொத் தான் கிளைமாக்ஸிலெ மிஸ்டர் பூணுல் தெரிகிறார். கருமேகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னலைப் போல. வாவ்… கலக்கிட்டீங்க கம்பரே… இராவணன் அசைந்து வரும் போது அவரோடு சேர்ந்து அந்தப் பூணூலும் அசைஞ்சி வந்ததாம்.

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நித்த வெள் அருவியின் நிமிர்த்தபால் நிறப் பட்டின் மாலை உத்திரியம் பண்பறப் பசும் பொன் ஆரத்தின்மால்நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இளவெயில் பொருவசூல் நிறக் கொண்மூக் கிழிந்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க.

இராவண மகராசா எப்போவும் பூணூல் போடுவாரா? அல்லது சீதை யை பார்க்கும் நல்ல(??) காரியம் செய்யும் போது மட்டும் போட்டாரா என்பதை ஆய்வாளர்கள் கையில் விட்டு, நான் கலண்டுகிறேன்.

நொடிப் பொழுதில்…


இந்தா.. ஒரு நிமிஷத்திலே வந்திடறேன் என்று சொல்லக் கேட்டிருப்போம். அதை விடை விரைவில் வருகிறேன் என்பவர்கள் சட்டுன்னு வருகிறேன் என்று சொல்லும் பேர்வழிகள். ஹிந்தியில் இதனை இயூ கி3யா.. இயூ ஆயா என்பார்கள். அதாவது போயிட்டு வந்திடறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் வந்துவிடுவதாய் சென்றுவிடும் போது சொல்வதுண்டு. பெரும்பாலும் டீ வாங்க சொல்லும் போது இந்த வாக்கியம் காதில் விழும். ஆனால் டீ மட்டும் என்னவோ அரை மணி நேரம் கழித்து ஆறியபடி தான் வரும்.

சரவன பவனைச் சடுதியில் வரவழைக்கும் முயற்சி கந்த சஷ்டி கவசத்தில் நடக்கிறது. இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று உருகி உருகிப் பாடுகிறார் மாணிக்க வாசகர் திருவாசகத்தில். தொல்காப்பியத்தில் தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் பற்றிச் சொல்லும் போதும் இந்த இமை மூடும் நேரம் என்று தான் வருகிறது. (சன் டீவியின் நிரமலா பெரியசாமி, ஆகாஷ்வாணியின் சரோஜ் நாராயணசாமியின் சில உச்சரிப்புகள் இந்த நெறிக்குள் அடங்காது)

முழுவதையும் பாடலாக பாடும் பழக்கம் நம் தமிழரிடையே முன்பெல்லாம் இருந்து வந்தது. முற்றோதல் என்று அதற்க்குப் பெயர். திருவாசக முற்றோதல் பற்றி மட்டும் தான் கேள்விப்பட்டிருந்த எனக்கு, தொல்காப்பிய முற்றோதல் பற்றிய தகவல் ஆச்சரியமாய் இருந்தது. (உங்களிடம் பகிர ஒரு வாய்ப்பும் கிட்டியாகி விட்டது) இன்றைய தலைமுறையிடம் திருக்குறள் சேர ஒரே வழி அதனை ஏ ஆர் ரஹுமான் இசையமைப்பது மட்டும் தான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என்பதை விண்னைத்தாண்டி வருவாயா படத்தில் பயன்படுத்திய விதம் பாத்திருப்பீங்களே…
மைசூரில் இயங்கும் மைய அரசின் செம்மொழி நிறுவனம் இந்த தொல்காப்பிய முற்றோதல் என்று ஐந்து இசைக் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது. (ரூ 250 வீதம் 1250க்குள் இசை மழையில் நனையலாம்). இதுவரையில் தொல்காப்பியத்தை தொடாதவர்களும் (நான் உட்பட) இதனை கேட்டு மகிழ நல் வாய்ப்பு. கொஞ்சம் பொறுமை காத்தால் யாராவது இலவசமாய் இணையத்தில் ஏற்றினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. நல்ல செய்தி நாலு பேரிடம் சென்றால் சரிதானே??

சட்டுன்னு நம்ம இந்த “சட்டுன்னு” டாபிக்கிற்கு திரும்புவோம். இமைக்கும் நேரத்திற்குள் என்னென்னவோ நடந்துவிடும். படியைல் பயணம் நொடியில் மரணம் என்பது நேரில் பார்த்தவர்களால் தான் அதன் வழியினை புரிந்து கொள்ள இயலும். நடுத்தெருவில் தேங்காய் உடைத்து தன் மகங்களை காக்கும் இந்த நேரத்தில் விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் இப்படி கண் இமைக்கும் நேரத்தில் தானே நடக்கின்றன?

சட்டுன்னு நடக்கும் ஒரு அவமானம் தாங்காமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதைவிட 1000 மடங்கு மேலான அவமானங்களை அசட்டை செய்யாமல் வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதே அவமானங்களை உதறித்தள்ளி அதிலேயே வெறி கிளம்பி பின்னர் சாதனையாளனாய் உயர்ந்த சம்பவங்களும் உண்டு. மோஹந்தாஸ் கரம் சந்த் காந்தியின் அந்த தென் ஆப்பிரிக்க இரயில் பயண அவமானம் தான் சட்டென்று அவரை மஹாத்மா என்ற இலக்கு நோக்கி பயணிக்க வைத்தது. பாரதியிடம் பழகிய சிதம்பரம் தான் சட்டென்று கம்பலோட்டிய தமிழனாய் உயரவும் வைத்தது.

சட்டென்று வரும் இன்னொரு சமாச்சாரம் கோவம். எதெய்யுமே பிளான் பன்னித்தான் செய்யனும் என்பது இந்த கோவத்துகிட்டெ சொன்னா, அந்த கோவத்துக்கே கோவம் வந்திடும். ஆனால் போட்டுக் கொடுக்கும் ஆட்களின் முதல் திட்டமே உங்களை கோபத்தை தூபம் போட்டு, அதனை தனக்கு வேண்டாத ஆட்கள் மேல் திருப்பி விடத்தான். அதுவும் சட்டுன்னு நீங்க கோபமாயிட்டா அந்த எட்டப்பர்களுக்கு செமெ ஜாலிதான்.

சீதைக்கும் இப்படி சட்டென்று கோபம் வந்திருக்குமா?? நேத்து Facebook Chat வசதி வைத்து கம்பரிடம் கேட்டேன். அவரும் ஆம் என்கிறார். சட்டென்று தேடியபோது ஆமா…. கிடைத்தே விட்டது.

வீட்டில் நடந்த ஒரு ரகசியமான சண்டையும் சச்சரவுமான செய்தி. அது ராமனுக்கும் சீதைக்கும் மட்டும் தான் தெரியும். அதில் சீதைக்கு சட்டென்று கோபம் வந்ததாய் ராமன் சொல்லும் இடம். [சீதைக்கு தான் சொல்லும் சேதியாக அனுமனிடம் சொல்லிய சேதி அது]

காட்டுலெ இருப்பது கஷ்டமான வேலை. அதுவும் கொஞ்ச நாள் தானே (அட ராமா… 14 வருடம் என்பது கொஞ்ச நாளா???) அதுவரை அயோத்தியில் தாயார்களுக்கு பணிவிடை செய்து இருக்கலாமே என்று ராமன் சீதையிடம் சொல்ல, அதற்கு தனக்கு முன்பாகவே சட்டுன்னு டிரஸ் மாத்திட்டு சட்டுன்னு கோபத்தோடு வந்தாராம் சீதை.

நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயார்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தீ என அச்சொற்கு
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும்
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய்.

சரி.. இப்பொ சொல்லுங்க…உங்களுக்கு சட்டுன்னு எது ஞாபகத்துக்கு வருது?

மதுரெ மதுரெ தான்…


சுத்தி சுத்தி எப்படியாவது மதுரைக்காரங்க வாயிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் வந்து விழும் வார்த்தைகள் தான் இந்த மதுரெ மதுரெ தான்.

எனக்கு என்னவோ மதுரை என்றதும் மல்லி தான் நினைவுக்கு வரும். அந்தமான் தீவுகளில் மல்லிகை பூ வந்து சேர்கையில் பக்கத்தில் போய் பாத்த தான் அட இது மல்லி..என்பதே தெரிய வரும்.

கையில் கிளி வைத்திருக்கும் மீனாட்சி இருக்கும் ஊரில் கிளி மாதிரி அழகான பெங்களுக்கு பஞ்சமே இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்த 4ம் நம்பர் பஸ்ஸில் ஒரு வேளையும் இல்லாமல் சும்மா சுற்றுபவர்களும் இருக்காங்க..

வீட்டில் மதுரையா?? சிதம்பரமா?? என்று உலகத்தில் எந்த மூலையிலுன் கேட்கும் அளவுக்கு மதுரை பேமஸு. சமீப காலமாய் மதுரெ கிட்னிக்குமாடா பேமஸு என்ற வடிவேலுவின் டயலாக் அசத்தலோ ஆசத்தல்.

மதுரை மண்ணை அனுபவித்து வைரமுத்து கவிதையே பாடலாக தொகுப்பில் எழுதி இருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த வரிகள்..உங்களுக்கும் பிடிக்கும்..அட..அடடே என்று சொல்ல வைக்கும்.

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் 
பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் 
தோகைமார்தம் மெல்லடியும் 
மயங்கி ஒலித்த மாமதுரை – இது 
மாலையில் மல்லிகைப் பூமதுரை!

நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான் 
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ் 
அழுந்தப் பதிந்த சுவடுகளும் 
காணக் கிடைக்கும் பழமதுரை – தன் 
கட்டுக் கோப்பால் இளமதுரை!

தமிழைக் குடித்த கடலோடு – நான் 
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர் 
ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 
மானம் எழுதிய மாமதுரை – இது 
மரபுகள் மாறா வேல்மதுரை!  

போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும் 
பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை 
நிறுத்திப் போகும் வளையொலியும் 
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண் 
தூங்கா திருக்கும் தொழில்மதுரை!

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும் 
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம் 
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று 
பட்டப் பகலில் பாழ்மதுரை!

நெஞ்சு வறண்டு போனதனால் – வையை 
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப் 
பட்டாப் போட்டுக் கொண்டதனால் 
முகத்தை இழந்த முதுமதுரை – பழைய 
மூச்சில் வாழும் பதிமதுரை

கடைசி வரிகள் பாடும் போது உங்களையும் அறியாமல் ஒரு சோகம் வரத்தான் செய்யும்… எப்படி இருந்த மதுரை இப்படி ஆயிடுச்சே என்ற கவலையும் கண்டிப்பாக சேர்ந்திருக்கும்.

சமீபத்திய மதுரையே இப்படி இருந்தா…கம்பன் காலத்து மதுரை எப்படி இருக்குன்னு பாக்க வேணாமா… வாங்க..ஏறுங்க…நம்ம Time மிஷினில் ஏறினால் கம்பன் காலத்துக்கு நொடியில் பயணம் at free of cost.

எல்லா உலகமும், எல்லா வகையிலும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் இருப்பவை ரெண்டாம்..1. முத்து 2. தமிழ் (அதுவும் இயல்,இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தது). இந்த ரெண்டும் எக்கச்சக்கசக்கமாய் ஓர் எடத்திலெ இருந்தா அங்கெ செல்வங்களுக்கு குறையே இருக்காதாம்… அப்பேற்பட்ட இடம் தேவலோகம் தான்.. ஆனா மதுரையிலு இதெல்லாம் கீது..அதனாலெ மதுரெயும் தேவலோகம் தான் என்கிறார் கம்பர்.

அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ
எத் திறத்திலும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத் தமிழும் தந்து முற்றலால்.

இப்பொ மதுரெ மதுரெ தான் ஒத்துக்கிறீங்களா??? எங்கே..எல்லாருமா சேர்ந்து ஓ போடுங்க பாக்கலாம்.