அந்தக் கொசு செத்துப் போச்சா?


thampi raamaiyaa

சில சினிமாப் படங்கள் பாத்துட்டு வந்தா ஜம்முன்னு சில டயலாக் அல்லது பாட்டு மனசுலெ நிக்கும். (சில பேத்துக்கு சில நாயகிகள் ஜில்லுன்னு பல நேரங்களில் மனசிலெ நிக்கலாம்) ஆனால் முக்கியமானது  ஒன்று… தியேட்டரில் மட்டும் படம் பாத்துட்டு திரும்பணும். அப்பொத்தான் இந்த அனுபவங்தை உங்களால் உணர முடியும். வீட்டிலெ உக்காந்துட்டு திருட்டு வீசீடி பாத்தா எந்த எஃபெக்டும் வராது. படம் இன்னுமா பாக்கலை? என்று ரொம்ப கேவலமான பார்வையை வேண்டுமானால் இது தடுக்கலாம்.

சமீபத்தில் அந்தமான் தலைநகராம் போர்ட்பிளேயரில் இப்படி ஒரு படம் பாத்து வந்த நிம்மதி கிடைத்தது. புதிதாய் கட்டியுள்ள நவீன தியேட்டர் அது. பாத்த படம் தனி ஒருவன். (தனியா இல்லீங்கோ. குடும்பத்துடன் பார்த்த முதல் படமும் இது தான்). படம் என்னவோ நல்ல சிந்தனையை தூண்டும் செய்தியில் தொடங்கினாலும், படம் பலப்பல அதிரடி ஹைடெக்குகள் சுமந்து வந்தாலும், நல்ல இசையில் பாடல் வரிகள் கவர்ந்தாலும், அனைத்து மகளிருக்கும் மனதிலெயாவது எதிர்பார்க்கும் வரனாய் (ஒரு காலத்தில்) விளங்கிய அரவிந்தசாமி வில்லனாய் கலக்கினாலும் சரி, மனசிலெ கடைசியிலெ என்னவோ அந்த “கடைசியிலெ அந்தக் கொசு செத்துப் போச்சா?” என்ற டயலாக் தான் மனசுலெ நின்னது.

ஒரு வேளை அந்த ”தம்பி ராமையா” யாவின் அப்பாவித்தனம் தான் கதையின் மூலக்கருவோ? (நீங்க படம் பாரக்கலையா? அப்பொ புரியாது?) அப்பாவியாய் இருத்தல் என்பது ஒரு இயல்பு. குழந்தைகளிடம் தான் அந்த இயல்பு இருக்கும். வளர்ந்த பின்னர், அறிவு(??) என்னவோ வளர்ந்து விட்டதாய் நினைத்துக் கொண்டு, நாம் இயல்பிலிருந்து விலகி விடுகின்றோம். படத்திலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, அப்பாவியாய் இருந்து விட்டால் மகிழ்வாய் வாழ்வினைக் கடத்தி விடலாம். மகிழ்ச்சியாக வாழ்வது தான் வாழ்க்கையின் லட்சியம்னு நானு நெனைக்கிறேன். இதெ மிஞ்சி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்கலேன். சந்தோஷமாக் கேக்போமெ! (நல்லா கவனிங்க. சந்தோஷமா…)

நேத்து ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் தொடர்பான விழாவில் பேச எனக்கும் கையில் மைக் கிடைத்தது. 100 நபர்களை அடக்கிய கூட்டம் கொள்ளும் அளவிலான கோவில் தான். அதில் 80 வரையிலும் குழந்தைகள் மாணவர்கள் இப்படித்தான். நான் உடபட இன்னொரு பேராசிரியர், ஒரு விஞ்ஞானி இப்படி மூவர் பேசிட ஏற்பாடு. (அபதுல் கலாமுக்குபின்னர் சைண்டிஸ்ட் என்று அறிமுகம் செய்த போதே கைதட்டல் பறந்தது. என் கையில் சோதனை முயல்வாய் மைக் தரப்பட்டு களத்தில் இறக்கப்பட்டேன். அப்பாவியாய்…  அவர்களே, இவர்களே.. என்று ஹிந்தியில் தொடங்கி, பின்னர் அனைவருக்கும் ஜென்மாஷடமி வாழ்த்தும் சொல்லியாச்சி. யாரும் கேக்கிற மாதிரியே இல்லெ நம்ம பேச்செ.

வந்த கூட்டம் மொத்தமுமே, போட்டிகளில் கலந்து கொண்டவர்கள். இன்னும் கலந்து கொள்ள இருப்பவர்கள். அவர்களின் பெற்றோர். இவ்வளவு தான் என்பது அப்போது தான் உரைத்தது. யாரும் யாருடைய பேச்சையும் கேக்க வரவில்லை என்பது புரிஞ்சது. (எல்லாமே நமக்கு மட்டும் ஏன் லேட்டாவே புரியுது?) எல்லாருடைய கவனம் முழுதும் பரிசு யாருக்கு கிடைக்கும்? ஆளுக்காள் நம்க்கும் கிடைக்காதா? என்ற ஆவலில் இருப்பதும் புரிந்தது.

sara sara

நிலைமையை சீராக்க ”ஒரு கதை சொல்லட்டுமா?” என்று கேட்டேன். சட்டென்று “ஓ” என்று பதில் வந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதும், கல்லூரியில் படித்த போதும், இல்லெ இல்லெ.. இருந்த போதும், இது மாதிரியான கேள்விக்கு ”வேண்டாம்” என்று விரட்டி அடித்து எல்லாமும் கூட ஏனோ, தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு இஞ்ஜினியர் ஆறாவது மாடியில் உள்ளார். உதவியாளர் கீழ் தளத்தில் உள்ளார். அவரை அழைக்க வேண்டும். கதை சொல்ல ஆரம்பித்தேன். எப்படி கூப்பிட? சொல்லுங்களேன்… என்றேன். ”மைக் தான் கையில் இருக்கே” என்றும், ”மைபைல் என்னாச்சி?” என்றும் நம்மை உண்டு இல்லை என ஆக்கினாலும், கதையால் ஆடியன்ஸ் கட்டுக்குள் வந்தது அப்பாடா என்று ஆனது. இன்னொரு கதையும் சொல்லி அன்று முடித்தேன்

கல்லூரிப் பேராசிரியரே, ”எப்படியோ பசங்களை சமாளிச்சிப் பேசிட்டீங்க..” என்று சொன்னது மிகப் பெரிய பரிசாய்ப் பட்டது அந்த ஆசிரியர் தின நாளில். அமர்ந்தேன் அப்பாவியான முகத்தோடு. (இருக்கிற முகம் தானே இருக்கும். அதுக்காக கமல் மாதிரி மொகத்தெ மாத்திட்டு வர முடியுமா என்ன?).

”அடப்பாவி… அப்பாவி, பாமரன், சாமான்யன் இன்னும் எத்தனெ பேரு தான் இருக்கு?” அசரீரியாய் கேள்வி வந்தது.

திரும்பி யாரென்று பார்த்தால், அட… நம்ம டிகிரி தோஸ்த் கம்பர்.

”ஹாய்” என்று அப்படியே, ”ராமாயணத்திலெ இப்படி ஒரு அப்பாவி கேரக்டெர் உங்க பார்வையில் யாரு? சொல்லுங்களேன்” என்றேன்.

appavi kulandai

“நூத்துக்கணக்கான வருஷங்களா, பட்டிமன்றங்கள் நடத்தி விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுவும் இதில் ஒன்று. சத்ருக்கணன், ஊர்மிளா, மண்டோதரி, திரிசடை இப்படி பட்டியல் தொடரும்.” pபதில் சொல்லிட்டு பறந்தார் கம்பர். அப்பப்பொ நமக்கு இப்படி டிப்ஸ் சொல்லிட்டு மறைவது பழக்கம் தானே

பரதனைப் பத்தி யோசிச்சேன். பதவி தலைக்கு வந்தாலும் கூட வேண்டாம் என்று உதறியது. அப்புறம் தான் ஆளாமல் பாதகை வைத்தே ஆண்டது. 14 ஆண்டுக்குள் வரலைன்னா, தீக்குள் இறங்க முயன்றது… அப்பா..அப்பப்பா. யுத்த காண்டத்து மிட்சிப் படலத்தில் பரதனது அப்பாவித்தனம் காட்சி கம்பன் வரியில் பாக்கலாம்.

இராவணவதம் முடிந்து, அக்னிப்பிரவேஷம் முடிந்த பின்னர் திரும்புகின்றனர் மகிழ்வோடு. மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் பரதன் பற்றிய நினைவு கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாமோ. பதைத்துப் போகிறார் ராமர். நெட்வொர்க், இமெயில் எல்லாம் இல்லாத காலம். அனுமனிடம் தான் தூது சொல்லி அனுப்பப்படுகிறது. தூது சொல்ல தோதா ஒரு ஆளு கெடெச்சா எவ்வளவு சௌகரியமாப் போச்சி? பறந்து வருகிறார் பரதனிடம் தகவல் சொல்ல அனுமன். அப்பாவியாய், ”இம்புட்டு குட்டியூண்டு குரங்கு ஒதவி செஞ்சதா சொல்லுதே, இதெல்லாம் கேக்க நல்லாவா இருக்கு?” என்று நினைக்கிறார். (கம்பர் சொன்னாரா என்று கேட்க வேண்டாம்) இந்தப் பாட்டெப் படிச்சாப் புரிஞ்சிக்கலாம்.

ஈங்கு நின்று யாம் உனக்கிசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின் உவப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான்.

பரதன் நம்ப ஏதுவாய் தன் வடிவைப் பெரிதாக்கிக் காட்டுகின்றான் அனுமன். அப்புறம் பரதன் ஏதோ சொல்ல, அது அனுமன் காதுக்கு ஏறவில்லையாம். (அவ்வளவு உயரம் காரணமாய்) ஐயா கொஞ்சம் சிறு உடம்புக்கு வாங்க, காதுலெ வாங்க என பரதன் அழைத்ததாய் கம்பன் வரைந்ததை படிக்க நான் அழைக்கிறேன்.

என்ன இப்பொ நான் சொல்றது உங்க காதுலெ ஏறுதா?

சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.