மைனஸ் X ப்ளஸ் = ப்ளஸ்


மணியடிச்சாச் சோறு அது மாமனாரு வீடு என்பார்கள். அப்படீன்னா.. அந்தக் காலத்து கடிகாரங்களில் அரை மணிக்கு ஒரு தரம் மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும். அப்போ மாமனார் வீட்டுக்குப் போன மாப்பிள்ளைக்கு, அரை மணிக்கு ஒரு தரம் ஏதாவது திங்கத் தீனி வரும் என்று அர்த்தமா? ஒரு வேளை மணியடிச்சாச் சோறு அது மாமியாரு வீடா இருக்குமோ!! அங்கே வேணும்னா மணி அடிச்சா சோறு தருகிறார்களோ என்னவோ. அந்தமானில் கைதிகளை ஏற்றி வந்த கப்பலில் இதே வழக்கம் இருந்திருக்குமோ.? இன்றும் கூட பயணிகள் கப்பலில் மணி அடித்துச் சோறு போடும் வழக்கம் மாறாது இருக்கிறது. மற்ற பயணிகள் கப்பலில் எப்படி என்பதை வேறு யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாய் இருக்கும்.

என்னோட மாமனார் வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் சொல்றேனே.. அந்தமானை இன்னும் பலர் வெளிநாடு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். (ஒரு வேளை எனக்கும் இதே தப்பான அபிப்பிராயத்தில் தான் பொண்ணு குடுத்திருப்பாரோ?). அந்தமானை பல நேரங்களில் இந்திய வரைபடத்தில் காட்டாதது ஒரு காரணமாய் இருக்கலாம். (ஆமா டீவி அளவுக்கு இந்தியா மேப்பைச் சுறுக்கினாலே, அதில் அந்தமான் மங்கலாத் தெரியும். அதில் டீவி விளம்பரத்துக்கு இடம் விட்டு காட்டும், இந்தியா மேப்பில் அந்தமான் கானாமலே போயிடும்). பாஸ்போர்ட் வாங்கிட்டுதான் அந்தமான் வரணுமா? ரூபா அங்கே செல்லுபடியாகுமா? அங்கும் இங்கும் எவ்வளவு டயம் வித்தியாசம்? என்று பாமரத்தனமாய் கேள்விகள் கேட்கும் எத்தனையோ விவரமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேவா இருக்க முடியும்? அவனவன் எடுக்கிற முடிவு, நமக்கு சாதகமா இருக்கு என்று விட வேண்டியது தான்.

அந்தமானில் அதிகாலை காலை 4.30 க்கே நல்லா விடிய ஆரம்பித்து விடும். அதே மாதிரி மாலை 4.35 வாக்கில் இருட்டத் தொடங்கிவிடும். இங்கே தொழிலளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வருவர். (டியூசன் கலாச்சாரம் 4.30க்கே ஆரம்பித்து விட்டது) இந்த மாதிரியான நேரங்களில் சாப்பிட்டு தூங்கிப் பழகிய (25 வருடங்களுக்கும் மேலாய்) எனக்கு மாமனார் வீட்டுக்கு போனால் சிரமம் தான். காலை 5 மணிக்கே நான் மட்டும் முழித்து.. திரு திரு முழித்துக் கொண்டு கிடப்பேன். இரவு 10.30 க்கு படுக்க தலையணை தேடுவேன். எல்லா சீரியலும் முடிந்தால் தான் சமயல் அது தமிழக கலாச்சாரம். பத்தாக் குறைக்கு, மதுரையில் தண்ணீ வருவது நள்ளிரவு 12 மணிக்கு. மணியடிச்சா சோறு எனக்கு சரிப்படலை.

வடிவேல் ஒரு படத்தில் மணியடிப்பவராக வருவார். இந்திக் காரர்களிடம் ஏதோ எக்கு தப்பாகச் சொல்ல அந்த ”பெல்பாய்”, என இருந்தவர் உடனே “Bad Boy” ஆக பெயர் பெறுவார். அந்த மாதிரி Bell Boy பற்றிய ஒரு கதை அனேகமா எல்லாரும் கேட்டிருப்பீங்க. அதாங்க், படிக்கலைன்னு அவரை சர்ச் விட்டு விரட்டப் போக, அவர் சூப்பரா, சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சி கோடீஸ்வரன் ஆயிட்டார். படிக்காமெயே இப்பிடி ஆயிட்டீகளே, நீங்க மட்டும் படிச்சிருந்தா?…. அவர் சொன்ன பதில் “நான் பெல்பாயா இருந்திருப்பேன்.

அந்த பெல்பாய் வேலையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது ஒரு மைனஸ். வியாபாரத்தில் ஈடுபடுதல் ஒரு ப்ளஸ். இப்போது பழைய நிலமையை விட முன்னேறி இருப்பது ப்ளஸ். [ஆகக்கூடி, மைனஸ் ப்ளஸ் ப்ளஸ் = ப்ளஸ் என்று தானே ஆகிறது என்று கணக்குப் புலிகள் சண்டைக்கு வர வேண்டாம்.]

இந்த டிசம்பர் வந்து விட்டாலே அந்த சுனாமி வந்து சென்ற அந்தக் கருப்பு ஞாயிறு ஞாபகம் வந்து விடும். 2004 டிசம்பரில் வானம் பார்த்து நடுத்தெருவில் படுத்தது இன்னும் நினைவில் இருக்கு. உயிர் பொருள் இழப்புகள் அத்தனையும் அந்தச் சுனாமி தந்து விட்டுச் சென்றது. இப்போது அனைவருக்கும் வீடு என்ற அளவில் அரசின் சலுகையினை அந்தத் துயரில் கலக்கம் அடைந்தோர்க்கு கிடைத்துள்ளது. இருக்க இடமின்றி இருந்த, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுக்குக் கூட இப்போது வீடு சொந்தமாய் விட்டது. இங்கும் அதே கணக்குப் பார்முலா தான். [ Minus X Plus = Plus].

ஒட்டு மொத்தமாய் சொல்வதென்றால், வீழ்வது தவறே இல்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. அந்த துயரிலிருது வெளியே வர நாம் எடுக்கும் முயற்ச்சிகள் .. அதுவும் பாசிட்டிவான முயற்சிகள், நம்மை நிச்சயம் மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும் என்பது தான் இங்கே சொல்ல வரும் சேதி. தவறி விழுந்து நடை பயிலாத குழந்தை உண்டா என்ன? ஆனால் நம்மில் பலர் ஏதாவது சோதனை வந்தால் உயிரே போன மாதிரி ஆகின்றனரே! சமீபத்தில் காதல் தோல்வியில் இருவரும் தற்கொலச் செய்தி வந்தது. இந்த மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமே அந்த காதல் கத்தரிக்காய் திருமணம் தானா?? (நான் காதலுக்கு எதிரி இல்லை. காதல் தற்கொலையால், காதலை கொலை செய்பவர்களுக்கு எதிரி).

இந்த மேட்டரை இந்த வெத்து வேட்டே இப்படி நீட்டி முழக்கி எழுதினா, கம்பர் அதனை கம்பராமாயணத்தில் டச் செஞ்சிருக்க மாட்டாரா என்ன?? இருக்கே… அனுமன் இலங்கையில் முதல் சுற்றில் துவம்சம் செய்து திரும்பிய நேரம். பார்க்கிறார் இராவணன். (நம்ம சுனாமி துவம்சம் செய்ததை சரி செய்ய TRP – Tsunami Rehabilitation Programe ஆரம்பித்த மாதிரி இராவணன் ARP – Anuman Rehabilitation Programe ஆரம்பித்திருப்பாரோ). தெய்வத் தச்சன் மயனோட மேற்பார்வையில், பிரம்மனே களத்தில் இறங்கி, இராவணன் சொன்ன படி, சொன்ன Target Date ல் செய்து முடித்தாராம். எல்லா வேலையும் முடிச்சிட்டு, இலங்கேஸ்வரன் அப்படியே அன்னாந்து பாத்தார். அந்த வானலோகத்தில் இருக்கும் அமராவதியை விட இலங்காபுரி சூப்பரா இருக்காம். கடைசியா ஒரு பன்ச் டயலாக் வேற… அட.. ஏற்கனவே இருந்த இலங்கையை விடவும் நல்லா இருக்கே!!!!. இப்பொ நீங்களே சொல்லுங்க… Minus X Plus =????

பொன்னினும் மணியுனும் அமைந்த பொற்புடைநன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான்முன்னையின் அழகு உடைத்து என்று மெய் கழல்மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.

மிஸ்டர் கம்பர் அவர்களே, அந்த மயன் அவர்களோட மெயில் ஐடி எப்படியாவது வாங்கிக் கொடுங்க.. இன்னும் சில TRP வேலைகள் அந்தமானில் முடிக்கனும்.

அது இது எது?


இப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியில் வந்து கொண்டிருக்கிறது. நீங்களும் பார்த்து ரசித்திருப்பீர்கள். அதில் ரெண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. அந்த நிகழ்ச்சியே கலகலப்பான ஒன்று தான். ஆனா அப்படிப்பட்ட கலகலப்பானவர்களை உம்மனா மூஞ்சி ஆக்க முயலும் ஒரு சுற்று இருக்கு. செமைய்யா காமெடி நடந்திட்டிருக்கும். போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடாது. மூன்று போட்டியாளர்களுமே சிரிப்பை அடக்கி வைத்திருப்பது தான் காமெடியின் உச்சம்.

வாழ்க்கையில் இந்த வித்தையினை கற்று வைத்திருப்பவர்கள் சகட்டு மேனிக்கு வெற்றி பெறுவதை பாத்திருக்கலாம். சிரிக்கக் கூடாத நேரத்தில் சிரித்துத் தொலைப்பதை தவிர்ப்பதும்… சிரிக்க வேண்டிய நேரத்தில் கம்முண்ணு கெடக்கிற வித்தையும் எத்தனை பேருக்கு வரும்? இன்னொரு மேட்டரும் இருக்கே!! பெரும்பாலான ஆபீஸ் பார்ட்டிகளில் அதைப் பார்க்கலாம். பெரிய்ய ஆபீசர் சொல்லும் மொக்கை ஜோக்கை எல்லாரும் ரசித்துச் சிரிப்பார்கள். நல்ல ஜோக்கை அந்த அதிகாரி ரசிக்காவிட்டால் யார் முகத்திலும் சிரிப்பா..??? .மூச்.. சான்ஸே இல்லெ…

புத்தகத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (என்னமோ இது வரை எழுதினதெல்லாம் சொந்தச் சரக்கா என்ன??) சிரிப்பிற்குப் பின்னர் எழுந்த கதை தான் ராமாயணமும் மகாபாரதமும். சிரிக்கக் கூடாத நேரத்தில் திரௌபதி சிரித்ததன் விளைவு தான் பாரதம். சிரிக்க வேண்டிய நேரத்தில் கூனி சிரிக்காமல் விட்டதால் நிமிர்ந்தது தான் இராமாயணம். சிரிப்பை… சிரிக்க வேண்டியதை.. சிரிக்கக் கூடாததை சரியாக மேனேஜ் செய்வதை, அந்த விஜய் டிவி வளர்ப்பதாய் எனக்குப் படுகிறது.

அதில் வரும் இன்னொரு segment ஒரிஜினல் அக்மார்க் ஆளை, ரெண்டு டூப்ளிகேட் ஆட்களிடமிருந்து தேடிக் கண்டுபிடிப்பது. வாழ்க்கைக்கும் இந்த மாதிரி தேவைதான் என்று படுகிறது. அதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒரிஜினல் நபரை விட டூப்ளிகேட் அசத்தும் நடிப்பு.

அரசுத்துறைகளில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வக்காலத்து வாங்க ஒருவரை அழைத்து வர அனுமதி கிடைக்கும். அவரை Defence Assistance என்பார்கள். அதே போல் அரசு சார்பாகவும் ஒருவர் வாதிடுவார். அந்த இருவரில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் அந்த Defence Assistance தான். அரசு சார்பில் வாதிடுபவர் தோற்றால் அவருக்கு ஏதும் நஷ்டமில்லை. ஆனால் Defence Assistance வாதத்தில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கும் வழியே உள்ளது.

அந்த டிவி நிகழ்வும் இதைத்தான் செம்மையாய் செய்கிறது. ஒரிஜினல் அலுங்காமெ குலுங்காமெ இருக்க.., டூப்ளிகேட்கள் வெற்றி பெற நடிப்பில் அசத்தும் ஜாலியான நிகழ்ச்சி அது. வைரமுத்துவின் கவிதை தான் ஞாபகத்துக்கு வருது.

உண்மை எப்போதும்
புல்லாங்குழல் வாசித்தே
வழக்கம்.

பொய்க்கு எப்போதும்
முரசடிப்பதே பழக்கம்.

இராமாயணத்தில் ஒரு காட்சி..(எப்போவும் இராமயணம் கடைசியிலெ தானே வரும். இதில் முதல் இடை எல்லா பக்கமும் ராமாயணம் வருதே என்று கேக்க வேணாம். இது ஒரு இடைச் சொருகல்) ராமன் இலக்குவனோடு இரவு ஹெவியா சாப்பிட்டு நைட் வாக் போறாங்க.. வழியில் கூத்து ஒண்ணு நடந்திட்டிருக்கு. கூத்து ஏதாவது நடந்தா எட்டிப் பாக்கும் நல்ல பழக்கம் அப்பொவும் இருந்திருக்கு. பாத்தா… அங்கும் ராமாயணம் தான் (அங்கேயுமா???). சீதையைக் காணோம் என்று நடிப்பு ராமன் புலம்புகிறார்.. புலம்புகிறார்.. அம்புட்டு புலம்பு புலம்புகிறார்.

ராமன் இலகுவனைப் பாத்து கேக்கிறார்.. “ஏண்டா தம்பி… நான் கூட இப்படி புலம்பலையேடா???” இலக்குவன் பதில்: உங்களுக்கு கைதட்டல் அவசியமில்லை. இந்த வேட ரமனுக்கு கைதட்டல் அவசியம்.. அதான்.

அடுத்தவனின் கவனம் நம் மீது விழுவதற்கு நாம் செய்யும் சேட்டைகள் தான் எத்தை எத்தனை??. அது தவறிவிடும் போது நாம் சோகத்தில் மூழ்கி விடுகிறோம். இது அது எது சொல்லித்தரும் அடுத்த தத்துவம் இது.

“இதுவா அதுவா எது?” என்ற போது என் மனதில் உதித்த இன்னொரு செய்தி Deccisson Making அதாவது முடிவெடுக்கும் திறன். இதுவா? என்று சொஞ்சம் யோசிக்கலாம். அதுவா? என்று சற்றே பாக்கலாம். ஆனால் எது? என்ற முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். இதற்காக Strength weakness Opportunities and Threat எல்லாம் பாக்கணும் என்று நீட்டி முழக்கி சொல்லித் தரப்படுகிறது. சுருக்கமா SWOT என்றும் சொல்வார்கள்.

இப்பொ ராமாயணத்துக்கு வரலாம் (மறுமடியுமா???). ராமாயணக் கதாநாயகன் ராமராய் இருந்தாலும் கூட Management வல்லுநர்கள் பார்வையில் (யார் அந்த வல்லுநர்கள் என்று கேட்டுராதீங்க..) Leadership Qualities உள்ள நபர் அனுமன் தான். ராமனை பாத்த மாத்திரத்தில் அடையாளம் கண்டது தொடங்கி வாலியை பின்னல் இருந்து வதம் செய்தது வரை, பின்னால் இருந்து செயலாற்றியவர் அனுமர். (அனுமன், அனுமர் ஆனதை கவனிக்கவும்). அவ்வளவு செஞ்ச்சிட்டு ஒண்ணுமே தெரியாத அப்பாவி தணுஷ் மாதிரி மூஞ்சியை வச்சிக்கும் Quality வேறு யாருக்கு வரும்?

முடிவெடுக்கும் திறத்திலும் தீரர் அவர். அவருக்கு மனதிலேயே அத்தனை SWOT சேதிகளும் அத்துப்படி. இங்கே அவருக்கு வந்திருக்கும் பிரச்சினைக்கு அவர் எப்படி முடிவு எடுக்கிறார் என்று பாக்கலாமா??

கைதி போன்ற சூழலில் தூது போன இடம் அது. சேதி சொல்ல வந்தவன் இராவணனை கொல்ல தேதி குறிக்கும் இடம் தான் அது. என்னைக் கொல்வது இந்த ராசாவால் ஆவாது (Strength). அதே மாதிரி அந்த ராஜாவை நம்மளாலெயும் ஒண்ணும் செய்ய முடியாது. (Weakness). அப்படியே நாம் சண்டெ போட்டாலும், ரெண்டு பேரும் போட்ற சண்டை அந்த ராமாயணம் மாதிரி நீண்டுகிட்டே இருக்கும். (Threat). அந்த மாதிரியான ஒரு சண்டெ தேவையா நமக்கு.. அதுக்கு சரியான வேளை வரும் வரைக்கும் காத்திருக்கணுமா?.. (Opportunities) ஆமா.. அது தான் முடிவு என்று முடிவு செய்கிறார்.

என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன்
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால்
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான்
துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ

இனி மேல் அது இது எது என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் பாருங்கள்.. (இது விஜய் டிவிக்கான விளம்பரம் அல்ல)