சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

படவா கோபியும் ஐயோ கம்பனும்…


Kuwait
என் பொறியியல் கல்லூரித் தோழரும், குவைத் தமிழ் சங்க தலைவருமான பழனிகுமாரிடமிருந்து ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு நடக்கும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, நல்ல பேச்சாளர்கள் பெயர் சொல்லேன் என்று கேள்வியுடன் ஆரம்பித்தது அந்த உரையாடல். நானும் என் சிற்றறிவுக்கு எட்டிய, கேள்விப்பட்ட சிறிய, பிரபலமான பெயர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன். ஏறக்குறைய என்னால் பரிந்துரை செய்யப்பட்ட அனைவரின் பேச்சுக்களையுமே குவைத் தமிழ்வாழ் மக்கள் நேரில் கேட்டு இன்புற்றிருந்தனர் (நம்ம சரக்கும் அவ்வளவு தான் என்பதும் சொல்லனுமா என்ன).

 நான் ஒரு பெயர் சொல்வேன். சிரிக்கக் கூடாது என்று நண்பர் பழனி தொடர்ந்தார் (இப்பொல்லாம் வில்லங்கம் போன்லெ கூட வருமாமே?). நானும் லேசாக சிரித்தபடியே, சொல்லுப்பா என்றேன். ”அந்தமான் கிருஷ்ணமூர்த்தியை பேச அழைத்தால் என்ன?” என்றார் என் நண்பர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “என்னெயெ வச்சி காமெடி கீமெடி பன்னல்லையே” என்றேன் நான். லீவு வாங்கி, வெளிநாடு செல்ல அனுமதி வாங்கி (வீட்டுக்காரி கிட்டேயும் பெர்மிஷன் வாங்கி).. விசா வாங்கி… இப்படி இத்தனை….வாங்கி… இதெல்லாம் சாத்தியமா என்று தலை சுற்றியது. குவைத்லே வெயில் அதிகம் என்பதால் ஏதாவது கோளாறோ என்றும் யோசித்தேன். அத்தனையும் கச்சிதமாய்,  அதுவும் மிகக் குறுகிய நாளில் மளமளவென்று எல்லாம் முடிந்தன. மனைவியிடம் நல்ல பேர் வாங்க இந்த டிரிப்பை யூஸ் செய்யவும் ஒரு ஹிட்டன் அஜெந்தா மனதிற்குள் உருவானது.  ஹனிமூனுக்கு நல்ல எடமாக் கூட்டிட்டு போகலையே என்ற இல்லத்தரசியின் ஏக்கத்தை (கல்யாணம் ஆகி இவ்வளவு ஆண்டுகள் பின்னர்) அந்த இலக்கியப் பயணம் நிறைவேற்றியது.

 குவைத் முக்கிய நிகழ்வில் நான் மட்டும் வேட்டி கட்டிப் போய் நிற்க, எல்லாரும் கோட் சூட் என்று வந்து என்னை Odd Man Out ஆக்கி விட்டார்கள். (சமீபத்திய காரைக்குடி கம்பன் விழாமேடையில் நான் மட்டும் ஜீன்ஸ் போட்டுப் போய் அங்கும் வித்தியாசமாய் உணர்ந்தேன்..) டிரஸ் என்பதை எப்படி போடுவது என்று சொல்லிக் கொடுக்க கமல் ஆளை வச்சிருக்கிற மாதிரி நாமளும் ஆள் தேடனுமோ…. அல்லது கூட இருக்கும் ஆளை இதுக்கும் தயார் செய்யனுமோ??.

 பொதுவா விழா ஆரம்பித்தவுடன் சிறப்புப் பேச்சாளர் பேச அழைப்பு வரும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கலை நிகழ்ச்சிகள் கலைகட்டி செமெ கலகலப்பா போயிட்டு இருந்தது. படவா கோபியின் மிமிக்ரியும் இசை நிகழ்ச்சியும் டாப் கியரில் போய்க் கொண்டிருந்த போது லேசா பிரேக் விட்டு, என்னைப் பேச அழைத்தார்கள்.

எல்லை தாண்டிய தமிழ் பற்றி பேசினேன்… நடுவே, கடவுளையே திட்டும் தைரியம் கொண்ட தேவார ஆசான்கள் பற்றியும் குறிப்பிட்டேன். படவா கோபி பக்கத்தில் இருந்தார். பெயரே வித்யாசமாகப் பட்டது. படவா என்பதை திட்டுவதற்க்குத் தானே பயன் படுத்துவார்கள். அதுவே எப்படி பெயராக ஆகிவிட்டது.. அல்லது ஆக்கிக் கொண்டார். இவரைப் போல் கம்பர் இப்போது இருந்தால், ஐயோ கம்பன் என்று ஆகி இருப்பார் என்று கம்பரையும் சேர்த்து முடித்தேன். (இப்பொ எல்லாம் ஆஃபீஸ் காரியமாய் இருந்தால் கூட கடைசியில் கம்பராமாயணம் வந்து விடுகிறது)

 குவைத்தை இத்தோடு விட்டு விட்டு ரிவர்ஸ் கியரில் கொஞ்சம் கோவை பொறியியல் கல்லூரிக்கே போலாமே… அந்தக் காலகட்டம் தான் கவிஞர்வைரமுத்துதிரைக்குபாடல்எழுதத் தொடங்கிய நல்ல நேரம்.அவர் வரிகளில் மாணவர்கள் மத்தியில் ஒரு பலமான ஈர்ப்பு இருந்தது என்பதைமறந்திருக்கமுடியாது. அப்போதும்சரி இப்போதும் சரி எவ்வளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவுக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் பார்க்கத்தான் முடிந்தது. 
நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ராதா அம்பிகா (இந்தக் கால சீரியலில் வரும் அம்பிகாவையும், ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் வரும் ராதாவையும் பாத்து ”என்ன அந்தக் காலத்து ரசனை?” என்று சண்டைக்கு வரவேண்டாம்) என்று ஜொள்ளு விடுவோர் மத்தியில் என் அறை முழுக்க வைரமுத்துவின் படம் ஒட்டி வைத்திருந்தேன்.. ஒரு அபிமானம்..& ஈர்ப்பு தான்.

 அலைகள் ஓய்வதில்லை படத்தில் “விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்ற வைரமுத்துவின் வைரவரிகள் வரும். பாடலின் முடிவில் “…காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்” என்று முடியும். என்ன தான் வைரமுத்துவின் பரம ரசிகன் என்றாலும் ஒரு நல்ல கவிதையின் ஊடே, (கடைசியிலாகட்டும் இப்படி) ”போட்டான்” என்று கவிஞர் போட்டதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை அப்போது.

 இப்பொ அப்படியே…. கம்பன் கவிதைகளை மேலோட்டமாய் படித்தபோது (எதையுமே முழுசா படிக்க மாட்டியா? – என்று யாரும் கேட்டு விட வேண்டாம்) ’போட்டான்’ போலவே ’போனான்’ என்பதும் கொஞ்சம் சறுக்கின மாதிரி தெரியுது… (கொழுப்புடா உனக்கு…அவனவன் 40 50 வருஷம் கம்பனைப் படிச்சிட்டு சும்மா இருக்காய்ங்க… நீ குத்தமா சொல்றே… இதுவும் வேண்டாமெ ப்ளீஸ்..) ஏதோ மனசுலெ பட்டது. சொல்றேன்.. அவ்வளவு தான்.

அடிக்கடி வந்து தலையைக் காட்டி விடாமல் போனாலும், இந்த ’போனான்’ கம்பனின் கவிதையிலும் அவ்வப்போது தலை காட்டுகிறான் தான். “குன்றுக்கப்பால் இரவியும் மறையப் போனான்”, ”..பழிச்சொடும் பெயர்ந்து போனான்”. இப்படி சிலவும் வந்து போகுது. கம்பரின் பாடல்களில் அதிகம் எடுத்தாளப்படும் ஒரு பாட்டிலும் அந்தப் போனான் வருது என்பது தெரியுமா? அதையும் தான் பாப்போமே…

 வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனும் இடையாளுடன் இளையோனுடனும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயொ இவன் வடிவென்பது அழியா அழகுடையான்..

 இதில் ஐயோ என்பது கவிஞர்கள் பயன்படுத்த தயங்கிய ஒரு வார்த்தை. கம்பர் ஐயோவும் பயன் படுதுகிறார். கூடவே போனான் என்பதையும் பயன்படுத்தி, அப்பாடா.. வைரமுத்துவுக்கும் வக்காலத்து வாங்கிட்டார்.. அது சரி நானு இப்பொ கம்பருக்கு என்னும் கொஞ்சம் வக்காலத்து வாங்கிட்டு வாரேன்..

 ஏதோ..இராமன், சீதை இலக்குவன் ஆகியோருடன் போனான்… என்று மட்டும் பார்க்காமல், இராமன் அழகை வர்ணிக்கத் திணறும் கம்பர் என்பதையும் தாண்டி, கம்பர் ஒரு குறுந்தாடி வைக்காத சைண்டிஸ்ட் என்று சொன்னால் நம்ப மாட்டீங்க… வெளக்கம் சொன்னா நம்புவீக தானே..

 முதல் வரியின் பொருள் கொஞ்சம் பாக்கலாம். கதிரவனின் ஒளி, தன் உடம்பிலிருந்து வரும் கதிர். ரெண்டும் சண்டை போட்டு சூரியன் செத்துப் போச்சாம்.. கருப்பான (இராமன் கலருதான்) உடலில் சூரியக் கதிர்கள் ஈர்க்கும் என்பதை அன்றே சொன்னவன் கம்பன்..

அடுத்து ராமனுக்கு உதாரணம் சொல்லும் மூன்றாவது வரி பாருங்களேன்..

மையோ, மரமகதமோ, மறிகடலோ, மழைமுகைலோ… ஏதோ கம்பன் மானாவுக்கு மானான்னு கிறுக்குனமாதிரி நம்ம மர மண்டைக்குத் தோணும். ”ம” சீரீஸில் வரனும். கருப்பாவும் இருக்கனும். ஏதோ சொல்லனும்னு வருகிறார் நம் கம்பர்.

மரகதம் – ஒரு திடப் பொருள்;

மறிகடல் – திரவம்

மழைமுகில் – வாயு

அட..அடடெ… அப்புறம் மை – செமிசாலிட்..

ஐயோ இப்படி ஒன்னுலையுமே ஒன்னையே கம்பேர் செய்ய முடியலையே ராமா…என்று முடிக்கிறார்.
[ரெண்டாவது வரி என்ன பாவம் செய்தது? அதிலும் வெளெயாடுகிறார் கம்பர்… ”பொய்யோ எனும் இடையாளொடும்” – இடை இருக்கு என்றால் அது பொய்யாம்…ஐயோ..ஐயோ…]

கம்பரா கொக்கா..

இனிமே யாரும் ஐயோ ஐயோன்னா…சிரிக்காதீங்க..சிந்திங்க

நீங்களும் ஆகலாம் சைண்டிஸ்ட் கம்பர் மாதிரி..