தெருவெங்கும் கார்த்திகை தான்


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -15]

இந்தக்கொரோணா காலம் வந்தாலும் வந்திச்சி, செய்யும் எல்லா வேலையும், ”நாம அப்பவே சொன்னது தானே இதெல்லாம்!” எனச் சொல்வதெக் கேட்டுக் கேட்டு, காதெல்லாம் வலிக்குது. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். நாமெல்லாம அம்புட்டு அறிவாளிகள் இல்லைங்கிறத ஒத்துக்க, பலருக்குக் கஷ்ட்டமா இருந்தாலும், நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எனச் சிலராவது இப்பொ நம்ப ஆரம்பித்துள்ளனர். நாமளும் நம்ம பங்குக்குக் கார்த்திகை மாதம் ஏன் தீபம் ஏற்றும் வழக்கம் வந்தது, எனத் தேடி வைப்போமே! (வீட்டுக்காரி செய்யும் செயல்களுக்கே அரத்தம் புரியல்லே, காலம் காலமா செய்து வரும் செயலுக்குக் காரணம் புரியுமா என்ன?)

அடைமழை பெய்து ஓய்ஞ்சி, ஐப்பசி மாசம் முடிஞ்சி அப்புறம் வரும் மாதம் தான் கார்த்திகை. தொடர்ந்து பெய்த மழையினால் பூமியும் வானமும் ஜில்லென்று குளிர்ந்து, அப்படியே சிலு சிலுவென காற்று வீசும் போது, ஒளியும் ஒலியும் , (சாரி சாரீ…ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி) ஒளியும் வெப்பமும் தேவை என்பதை, அழகாகவும் மங்கலமாகவும் வெளிப்படுத்தும் திருநாள் தான் கார்த்திகைத் திருநாளாம். தங்களையும் அலங்கரித்துக் கொண்டு, மேலும் அழகாக்குவது அந்த தீபமேற்றும் அழகான குத்துவிளக்குகள், பார்ப்போரின் கண்களுக்கு ஓர் இலவச இணைப்பு.

இருளிலும் குளிரிலும் அல்லல்படும் சின்னஞ்சிறு உயிர்களுக்கு ஒளியும் வெப்பமும் தந்து அதுகளையும் வாழவிடும் பொருட்டே, கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலையிலும் மாலையிலும் வீடுகளின் முன்பாக வரிசையாக விளக்கேற்றி வைக்கும் வழக்கம் வந்ததாம். காலப்போக்கில் தீபம் ஏத்துங்க என்றால், கிண்டல் செய்யவும், அப்புறம் அதெ வச்சே மீம்ஸ் போடவும் இது பயன்பட்டு வருகிறது.

அகநானூறு, நற்றிணை, களவழி நாற்பது போன்ற சங்க இலக்கியங்களில் அறுமீன் என்று ஆங்காங்கே வருதாம்.

கார்த்திகை மாதமோ, காயலாங்கடை வியாபாரமோ, எந்த நேரத்திலும் சுட்டெரிக்கும் வெயிலில் மணலில் உக்காந்திருக்கும் இளம் (சிலநேரம் முது)சிட்டுக்களைப் பாக்கும் போது எப்படி இவர்களால் உக்கார முடியுது? எனத் தோன்றும் (அவனவன் வெயில் கூட தெரியாமெ இருக்கான். நீங்களும் இருக்கீகளே? இப்படிப்பட்ட கேள்வி வந்ததால், நான் என் இல்லத்தரசியை மெரினாவுக்கு அழைத்துச் செல்வதில்லை)

ஆனா இந்தமாதிரி மண்டைகாயும் வெயிலில் காதலியோட திரிவதும் நம்ம பண்பாட்டின் ஓர் அங்கம் போலத் தெரியுது. அகநானூறு பாடலில் ஒளவையார் கூட இந்தமாதிரி காட்சியெப் பாத்து சொல்லி இருக்காய்ங்க… காதலனும் காதலியும் தங்கள் ஊரையும் சுற்றத்தாரையும் விட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் வெம்மை மிகுந்த கானகத்தின் வழியே போறாகளாம்.அப்பொ கண்ணில் தெரியும் காட்சி பாருங்களேன்…

நம்ம வைகை மாதிரி நீரில்லா காட்டாற்றின் கரையோரம் மரங்களின் கிளைகள் தாழ்ந்திருக்க, அதன் நிழலில் உயர்ந்த மணல் மேடுகள் இருக்காம். வரிசையா நிக்கும் இலவ மரங்களின் எல்லா அரும்புகளும் செவேலென்று அழகாப் பூத்திருக்காம். அந்தக் காட்சி, இளம் பெண்கள் ஏற்றி வைத்த கார்த்திகை விளக்குகளின் நெடிய வரிசை போல இருந்ததாம்.

சிலப்பதிகாரம் கார்த்திகையை “அழல்’ என்று கூறுகின்றது (அப்பாடா என் பதிவைத் தவறாது படிக்கும் நண்பர் முத்துமணி அவர்கள் (சிலப்பதிகாரப் பிரியர்) மனம் மகிழ்வார்.

வைரமுத்துவின், “கவிதையே பாடலாக” என்ற மேடைப் பாடலிலும்
( கலைஞர் முன்னிலையில் எஸ்.பி.பி. குரலில் பாடிய பாடலில் ) கேட்கும் போதே, மார்கழி என்றால் குளிரும்; கார்த்திகை என்றால் அங்கே கதகதப்பாகவும் இருக்கும்.

”மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்..” இது திரைப்பாடலுக்கான வரி.

…..நீ என்னைக் கடந்த காலம்,
மனசெல்லாம் மார்கழி தான்,
தெருவெல்லாம் கார்த்திகை தான்…..

இது ’கவிதையே பாடலாக’ பாடல் வரி.

கார் நாற்பதின் பக்கம் நம்ம நினைவுக் காரின் கதவைத் திறப்போம். அட…அங்கும் கார்த்திகை தான்.

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி; சிலமொழி!
தூதொடு வந்த, மழை. 26

சில சொற்கள் மட்டும் பேசும் தோழியே!

கார்த்திகை, தலைமையான திருநாள். நாட்டு மக்கள் எல்லாம் தெருவில் விளக்கு ஏற்றி வழிபடுவர். அந்தக் கார்த்திகை விளக்குப் போல நிலமெல்லாம் தோன்றிப் பூ பூத்துத் திகழ்கிறது. மழை பொழிகிறது. இது அவர் வருகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறி.

இனி நேரே நம்ம கம்பர் கிட்டேப் போய் பாட்டு கேட்டா… செமெ கடுப்பிலெ இருக்கார். ஆமா சுக்கிரீவன் சொன்ன நேரத்தில் வரலையாம்.. (அவரு வராங்காட்டி என்ன, கார்த்திகை வருதா இல்லையா? அது தான் நமக்கு முக்கியம்)

அன்ன காலம் அகலும் அளவினில்,
முன்னை வீரன், இளவலை, ‘மெய்ம்பினோய்!’
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன்; என் செய்தவாறு அரோ?

நமக்கெல்லாம் குளிர்காலம் என்பது ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் அடங்கிய கூதிர் எனப்படும் இலைகள் கூம்பி உதிரும் காலமாகும். அக்காலம் நீங்கியவுடன், இராமன் இலக்குவனைப் பார்த்து, வாரேன்னு சொன்ன சுக்ரீவன் வரலையே? நான்கு மாதம் கழிந்த பின்பும் வரலையே? என்ன செய்கிறார் அந்த சுக்ரீவன்? எனக் கேட்டாராம் இராமன் இலக்குவனிடம்.

மீண்டும் வருவேன்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (04-10-2020)

துளித் துளித் துளித் துளி மழைத்துளி



[கார் நாற்பதில் கம்பராமாயணம் -17]

இந்தக்கால சூரி, சந்தானம் போல் அந்தக்கால நகைச்சுவை நடிகர்களில் உச்சத்தில் கொடி கட்டிப் பறந்தவர் டணால் தங்கவேலு. பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் (வில்லன் உட்பட) மக்கள் மனதில் நிற்பதோ, அந்த நகைச்சுவைப் பாத்திரம் தான். அதுவும் அந்த அறிவாளி படத்தின் வெற்றிக்கே அவரின் காமெடியும் ஒரு காரணம். அவர், படத்தின் ஒரு காட்சியில் ‘ஃபைல் எங்கே’ என்பார். அவரின் மனைவியோ, ‘ஏய் பயலே….’ என வேலைக்காரப் பையனை அழைப்பதும் செமெ தமாஷா இருக்கும்.

பயல் பற்றி செய்தி தேடினால் எளிதில் சிக்கும் நமக்கு, அந்த பாரதியார் தொடர்பான ‘பாரதி சின்னப் பயல்’ சம்பவம். காந்திமதிநாதன் என்ற புலவர், பாரதியின் மீது பொறாமைப்பட்டு அப்படி முடியும் வெண்பா கேட்டாராம். பாரதியோ பாட்டு எழுதி, கடைசி வரியில் ”காந்திமதிநாதனைப் பார் அதி சின்னப்பயல்…” என முடித்தாராம். அப்புறம்தான் அவர் வயதைக் கருத்தில் கொண்டு, காந்திமதிநாதர்க்கு பாரதி சின்னப்பயல் என மாற்றினாராம். (ஆக புலவர்களுக்கும் சண்டையும் சச்சரவும் அப்பவும் இருந்திருக்கு)

ஃபைல், பயல் அடுத்து பெயல் பக்கம் போவோம். பெயல் என்றால் பெய்து கொண்டிருப்பது; அடெ சட்டுன்னு விளங்குதே… அப்பொ மழை தான் அதன் பொருள். அரசனுக்கே அடேய், ஒழுங்கா வேலெ செய்; இல்லாட்டி மழைகூட, போடா வெளியே எனச் சொல்லாமல் கொள்ளாமல் போயிடுமாம்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

இது ஐயன் வள்ளுவன் சொன்னது . அப்படியே, சினிமாப் பக்கம் போனால் அங்கே ஒரு பாட்டு கேக்குது.

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ,
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

(வீட்டுக்காரிக்கு எப்பொ எது மயக்கும்? என்பது மட்டும், எப்போதும் ஒரு புரியாத புதிர் தான்)

ஆனா, இங்கே ஒக்கூர் மாசாத்தியாரின் கதாநாயகிக்கு மட்டும் பொன் மாலைப் பொழுதுக்குப் பதிலா புன்மாலைப் பொழுதா இருக்காம். ஏனாம்? கார்ப்பருவம் கண்டு வருந்தித் தோழியிடம் தலைவி இவ்வாறு பேசுகிறாள். முல்லைப்பாட்டின் அடி ஆறு சொற்கள் தான்.

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை

ஆனா பெயல் என்றது அதிகம் அறியப்படும் வாசகம் (கிட்டத்தட்ட ரஜினியின், நான் ஒரு தடவெ சொன்னா….ரேஞ்சுக்கு) இருக்கும் பாட்டும் இருக்கு. ஏன்னா இந்தப்பாட்டு காதலுக்கு (வைரமுத்துவுக்கு முன்னாடியே) வக்காலத்து வாங்கின பாட்டு. நீங்க வேற லெவல், நாங்க இருக்கும் ரேஞ்சே வேறெ, ஐஃபோனும், ஆண்டிராய்டும் ஆகவும் இருக்கலாம்; எப்படி ரெண்டு பேருக்கும் ஜோடி பொருந்தும்? ஆனா அன்பு கலந்து சிவப்பு மண்ணில் மழைநீர் கலந்து செந்நீர் ஆனமாதிரி கலந்துட்டோமாம். குறுந்தொகையில் இப்படி. பாரதிராஜா எடுத்தா இன்னும் தித்திக்கும். இளையராசா இசையோடு.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
செம்புலப்பெயல் நீரார்

பெயல் ஒட்டியே அப்படியே கார் நாற்பதில் 24 வது பாடலுக்கு வருவோம். மலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய வானம் இருக்கும் ஆனால் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க, நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

பெயல், அதான், மழை பற்றிக் கம்பன் என்ன மனசிலெ நெனெச்சி வச்சிருக்கார் என்பதையும் பாத்திடலாமே. கோசல நாட்டோட ஆற்றினைப் பாடிக் காட்டும் கம்பன். (ஆமா ஆற்றங்கரையில் வேறு எந்த குளு குளுப்பான சேதிகளும் தென்படலியா கம்பரே?)

கம்பர் வானம் பார்க்கிறார். மேகம் தெரியுது. திருநீறு பூசின மாதிரி இருக்காம். மலையெச் சுத்தி மாலை மாதிரி சுத்திப் போகுதாம். கடைசியில் கடல் போய்ச் சேராமெ மேயுதாம்… (கடலுக்குக்கூட ஈரமில்லையோ எனப் பாட ஏதுவாய்) திடீரெனப் பாத்தாக்கா, சிவப்பா இருப்பவன் கருப்பா ஆயிட்டாராம். அகில் என்ற பியூட்டிபார்லர் சமாசாரத்தை மார்பில் பூசிய இலக்குமியினை இதயத்தில் வைத்துள்ள திருமாலின் கரிய கலரா ஆயிட்டதாம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே!

மழை பெய்துவரும் நேரமா, கார்நாற்பதின் அடுத்த பாடலோடு மீண்டும் வருவேன்.

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (12-10-2020)