சந்தேகம் என்னும் ஒரு சரக்கு


இப்படி ஒரு காலத்தில் பழைய பாட்டு வரும். அரதப் பழசு தான்… (ஆமா..அந்த ”அரத”ங்கிறதுக்கு என்ன மீனிங்கு?-ன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்). அது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த சந்தகத்தையும் சரக்கோட ஏன் கோர்த்துச் சொல்றாய்ங்க என்கிறதும் மண்டையெக் கொடெயுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றது? என்று மனதுக்குள் நினைக்கிறேன். “உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” வீட்டுக்காரியும் வினா எழுப்புகிறாள்… ரெண்டுக்கும் பதில் இல்லை…

தண்ணி…. சாப்பிடலாம், குடிக்கலாம், அருந்தலாம், பருகலாம், தாகம் தீர்த்துக் கொள்ளலாம்… எல்லாம் சரி தான். அடிக்கலாம் என்றால் மட்டும் பலர் அடிக்க வருவார்கள், அந்தக்காலத்தில் கம்பு வைத்து. ஆனால் பலர் இக்காலத்தில் ஜாலியாக ஓடி வந்துடுவாங்க கம்பெனி குடுக்க. சந்தேகமும் அப்படி தண்ணி அடிப்பது போன்ற போதை தரும் சமாச்சாரமா? தண்ணியை நாம் அடிக்கலாம். (மெஜாரிட்டி ஆட்களைச் சொல்கிறேன்…மது விரோதிகள் மன்னிக்கவும்) ஆனா… சந்தேகம் நம்மை அடிக்கும்.

சின்ன வயசில் சிறு சிறு திருட்டுகள் செய்வது எல்லாருக்கும் வழக்கம் தானே? மஹாத்மா காந்தியே செய்திருக்கிறார். சரி காந்தி கதை ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம சொந்தக் கதைக்கு வருவோம். ஸ்கூல் படிக்கிறச்செ… குரூப் ஸ்ட்டி படிக்கப் போறோம்னு சொல்லிட்டு நம்ம அப்படியே சினிமாவுக்குப் போயிடுவோம். (தப்பை தடயமில்லாமெ செய்ய சினிமா டிக்கெட் எல்லாம் பொறுப்பா கிழிச்சிப் போட்றுவோம்.. அதெல்லெம்..கரெக்டா செய்வோம்லெ..) கொஞ்ச நாள் கழிச்சி அம்மா கிட்டெ அதெ உளறி விடுவேன்… (இப்பொவும் அதே வியாதி தான்… உளறும் இடம் மட்டும் மனைவியா மாறிப் போச்சி.. அம்புட்டு தான்).

நல்லது செய்யும் போது நம்மை அறியாமலேயே சில வில்லங்கங்களும் வந்து சேரும். அப்படித்தான் உண்மை விளம்பியாய் இருப்பதால் சில சந்தேகங்களும் வந்து சேரும். உண்மையாகவே குரூப் ஸ்டடி போட்டு மண்டையைக் கசக்கி படிச்சிட்டு டயர்டா வீட்டுக்குப் போவேன். அம்மாவிடமிருந்து, என்ன படம் எப்படி இருந்தது? என்ற கேள்வி வரும். கோபம் என்றால் கோபம் அவ்வளவு கோபம் கோபமாய் வரும். உலகத்தில் யார் தான் ”அம்மா”விடம் கோபத்தைக் காட்ட முடியும்? விதி வலியது என்று விட வேண்டியது தான். இப்பொவும் அப்படித்தான். மாங்கு மாங்கு என்று (வீட்டில் ஃபோன் கூட செய்யாமல்) பார்லியமெண்ட் கேள்விக்குப் பதிலோ, ஆக்ஷன் பிளான் டாக்குமெண்டோ, விஜிலென்ஸ் கேள்விக்கு பதிலோ தயார் செய்து விட்டு, வீட்டுக்கு வந்தால், பார்ட்டி எப்படி இருந்தது? என்று மனைவியிடமிருந்து சந்தேகக் கேள்வி வரும்… (அப்பவும் நாம கோபப்படாமல் இருப்போம்லெ…)

நிலைமையினச் சமாளிக்க நண்பர் ஒருவர் நல்ல ஐடியா தந்தார்… தினமும் 5 மணிவரை வேலை என்றால், எப்போதும் ஊர் சுத்திட்டு 7 மணிக்குத்தான் கெளம்பனும் வூட்டுக்கு. ஒரு வேளை 5 மணிக்கே கடெயெ மூடிட்டு வீட்டுக்குப் போனாலும் கூட, அம்மணி அமிர்தாஞ்சன் கையோடு கொண்டு வந்து ”என்னங்க…ஒடம்பு சரியில்லெயா…நேரத்தோட ஊட்டுக்க வந்துட்டீக.” என்று நிப்பாகளாம்… இது எப்படி இருக்கு? யாராவது செஞ்சிட்டு அப்புறம் சொல்லுங்க… நானும் முயற்சி செய்றேன்…

ஆஃபீசில் சிலர் வந்து விட்டுப்போன பின்னரும் கூட, சில வாசனை அங்கேயே நிற்கும். ஒரு முறை குறிப்பிட்ட சில மகளிர் வந்து போன பின்னர் மூக்குப் பொடி [ டி வி எஸ் ரத்தினம் பட்டணம் பொடியே தான்] வாசம் குமட்டிக் கொண்டு வந்தது. உதவியாளரிடம் என்ன வாசம்? என்று கேட்டேன். அவர் ஏதோ ஒரு நல்ல(?) பிரண்ட் பெர்ஃப்யூம் என்றார். அடுத்த நாள் பாத்தா… அந்த பெர்ஃப்யூம் என் மேஜை மேல்… எனக்கு ஏதோ ரொம்பவும் பிடிக்கும் என்று வாங்கியே வந்து விட்டார் போலும்…. ஆமா… அவர் ஏன் அதை எனக்கு வாங்கித் தர வேண்டும்? …சந்தேகப் புத்தி ஆரம்பித்தது…

சந்தேகத்தில் மனுஷன் சாவுறது ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்திலெ… அதே சந்தேகம் காரணமா ஒரு யானை உயிர் விட்ட சோகம் அந்தமான்லெ நடந்தது. ஒரு வன அதிகாரியை மதம்பிடித்த யானை கொன்று விட்டது. அது மற்றவர்களையும் கொன்று விடுமோ என்ற சந்தேகம் தான் அந்த உயிர் பிரியக் காரணம். ஆனா ஆய்வு என்ன சொல்லுதாம், 59 சதவீதம் திருட்டு வேட்டைக்காரர்களாலும், 15% ரயிலில் அடிபடுவது (இது அந்தமானில் இல்லை), 13% விஷ உணவு, 8% மின்சாரம் தாக்கி மரணமுமாய் நிகழ்கிறதாம். இனி ஆய்வாளர்கள் சந்தேகத்துக்கும் கொஞ்சம் % ஒதுக்கி வைக்கலாம்.

rouge

மதம் பிடிக்க ”காமம்” தான் காரணம் என்பதை நம்மில் பலர் ஒப்புக் கொள்ளத் தயாராய் இல்லை. அது யானையாய் இருந்தாலும் நாமாய் இருந்தாலும் சரி. யானைக்கு சரியான ஜோடி கிடைக்காத போது தான் மதமே பிடிக்குமாம். அதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமாம். ஆனால் மனுஷனுக்கு மதம் பிடிக்க அப்படி எந்த காரணமும் வேண்டியதில்லை. தமிழைக் காதலிப்பவ்ர்களுக்கு காமத்தை விடவும், காமத்துப் பால் அதிக சுவை என்று சொல்லக் கேள்வி.

வாட்ஸப்பில் நோட்டம் இடச் சொல்லி சத்தம் வந்தது. எட்டிப்பாத்தா, கம்பர்…

ஹை…கிச்சா…

ஹை கம்பரே – இது என் பதில்.

கம்பர்: சந்தேகத்திலெ யானை செத்த கதை சொன்ன மாதிரி தெரியுது..ஆனா, யானைக்கே சந்தேகம் வந்த கதை தெரியுமா??

நான்: சொல்லுங்க ஐயனே தெரிஞ்சிகிடறேன்…

கம்பர்:- சுந்தரகாண்டம்…ஊர் தேடு படலத்தில் அநுமன் கண்ணுக்கே தெரிஞ்சது…ஒனக்குத் தெரியலையா…போய்த் தேடிப்படி..

கம்பர் ஆஃப் லைன் ஆகிவிட்டார்..நான் கம்பரில் ஆழ்ந்துவிட்டேன்..

அந்தக் காலத்து மகளிர் உடலிலிருந்து வீசும் (இயற்கையான) புகை மணமும், மற்ற பிற செண்ட் போன்ற ஐட்டங்களும் குளிக்கிறச்சே அந்த அகழித் தண்ணியிலெ கலந்திடுச்சாம். அப்பொ, அங்கெ குளிக்க வந்த யானைகளின் உடம்பிலும் அந்த வாசனையும் கலரும் ஏறிடிச்சாம். அதெப் பாத்து பெண் யானைகள் எல்லாம் சந்தேகத்தோட, எப்படி மற்ற பெண்யானைகளோடு சேரலாம் என்று காச் மூச் என்று கத்தினவாம்…

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை யானைக்கும் கூட சொல்ல வந்த கவிச்சக்ரவர்த்தியின் பாடல் வரிகள் இதோ…

நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலப் பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால்

பொல்லாத சந்தேகம் யானையையும் பாடாப் படுத்தியிருக்கே..

இப்பொ சொல்லுங்க…உங்க சந்தேகம் எதெப்பத்தி?????

சட்டை செய்யாதவர்கள்


சட்டை செய்யாதவர்கள்…

ஆடையின்றிப் பிறந்தோம்… ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கேள்வி கேட்கும் ஒர் அற்புதமான பழைய பாடல் கேட்டிருப்பீங்க. ஆடைக்கும் ஆசைக்கும் அப்படி என்ன சம்பந்தம்? ஆசையினைத் துறக்க அறிவுரை சொன்னவர்கள், முதலில் ஆடையைத் தான் துறக்கிறார்கள். (ஆனால் சினிமாவில் வரும் நாயகிகள் ஆடையினைத் துறந்து, நம் ரசிகர்களின் ஆசையினைத் திறந்து விடுகிறார்கள் என்பது தனிக்கதை)

ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்கிறார்கள். ஆதிகாலத்தில் நாமெல்லாம் கூட ஆடையின்றித்தான் இருந்தோம். நாகரீகம் என்று சொல்லி ஆடையில் ஆளை வகைக்படுத்தும் கலையும் ஆகரீகம் என்ற பெயரில் வளர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. அந்தமான் தீவுகளில் இன்னும் சில ஆதிவாசிகள் முழுநிர்வாணமாகவும், அரை நிர்வாணத்திலும் வாழத்தான் செய்கிறார்கள். ஆனால் காலில் சாக்ஸ், முழு பேண்ட், முழுக்கை சட்டை என்று திரியும் நவநாகரீக (என்று சொல்லிக் கொண்டு, 5 வயது சிறுமிகளை சில்மிஷம் செய்யும்) மனிதர்களை மட்டும் கொசு எப்படி தேடிக் கடிக்கிறது? ஆதிவாசிகளை கடிப்பதில்லையே? கடித்தாலும் மலேரியா போன்ற நோய்கள் அவர்களுக்கு அவ்வளவாக வருவதில்லையே? அப்பொ ஆடை வெறும் சுமை தானா?

கோட்டும் சூட்டும் மாட்டிக் கொண்டு வாழ்ந்த மோஹன்தாஸின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் அவரை ஆடையைக் குறைத்து மஹாத்மா ஆக்கியது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது மதுரை என்றும் சொல்கிறார்கள். ஆடை தயாரித்து வாழும் நெசவாளர்களும், விவசாயிகளும் மேலாடையில்லாமல் அமர்ந்திருக்க, அங்கே தான் ஆடைகுறைப்பு முடிவு எடுத்தாராம். காந்திப் பொட்டல் (அப்பொ பொட்டல் காடாய் இருந்த இன்றைய மென்யின் ரோட் இருக்கும்) அந்த இடத்தில் ஒரு சின்ன பொம்மை வடிவில் (வடநாட்டு சாமி மாதிரி) காந்தி சிலையும் வைத்திருக்கிறார்கள். காந்திய்ன் கொள்கைகளை மற்றவர்கள் மதிக்கிறார்களோ இல்லையோ, இன்றைய இளைஞிகள் தான் சரிவர ஆடைக் குறைப்பில் பின்பற்றுவதை மேத்தா கவிதை குத்தி காட்டி இருப்பதை படித்திருப்பீர்கள்.

சமீபத்திய பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு காரணம் என்று சொல்லியவர்களை பெண்கள் அணி செமெ டோஸ் விடுகிறது. வெளிநாடுகளில் உடைகள் குறைந்தாலும், இல்லாவிட்டாலும் கூட பெரிதாய் பாதிப்பதில்லை. இங்கேயோ… மேலாடை கொஞ்சம் விலகினாலும் ஹார்மோன்கள் கலகம் செய்யுது. (ஆமா.. அந்த ஹார்மோன்கள் அங்கே மட்டும் ஏன் வேலை செய்வதில்லை??). முன்பெல்லாம் அந்தமான் வரும் வெளி நாட்டுப் பயனிகள் ஆடையில் அவ்வளவு கவனம் இல்லாது தான் இருப்பர். சமீப காலமாய் நம்மைக் கண்டதும், துண்டு போட்டு அங்கங்களை மூடும் தமிழ் கலாச்சாரத்துக்கு வந்து விட்டார்கள். (ம்… அவனவன் எடுக்கிற முடிவெல்லாம் நமக்குச் சாதகமவே அமையுது)

கோட் சூட்டு போடுவதில் ஒரு பெரிய்ய்ய கௌரவமே இருப்பதாய் பலர் யோசிக்கிறார்கள். அது வெள்ளையர்கள் ஆண்ட போது, அங்கிருந்து இந்தியாவிற்க்கும் இறகுமதி ஆன வெட்டிப் பந்தா அது. சுவாமி விவேகாநதரை பார்த்து ஒரு வெளிநாட்டுக்காரர் கேட்டாராம். “கொஞ்சம் நாகரீகமாய் உடை உடுத்தக் கூடாதா?” என்று. அதுக்கு அவர் சொன்ன பதில், “உங்கள் நாட்டு நாகரீகம் உடையில் இருக்கலாம். ஆனால் இந்திய நாகரீகம், நடத்தையில் இருக்கிறது”. என்றாராம். (ஊரெல்லாம் டாஸ்மாக் கடை திறது வைத்துவிட்டு, இன்னும் இந்த நடை நடத்தை என்றெல்லாம் சொல்ல முடியுமா?)

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான உடை நமது இந்திய நாட்டில் தான். ஒரு நாடு… ஒரு உடை… என்றெல்லாம் கிடையாது இங்கே. (நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் கைலி கட்ட அனுமதி கிடையாது. அது ஒரு மதத்தினர் மட்டும், கட்டுவதாய் இருந்தது. வேட்டியை விட சைக்கிள் ஓட்டுவதில் கைலி தான் ரொம்பவும் சௌகரியம் என்பதால் அனுமதி கிடைத்தது). வேலக்குப் போகும் பெண்களுக்கு சேலை ரொம்ப அசௌகரியம். அப்படி சேலையில் வரும் அம்மணிகளுக்கு, வேலையினை விட சேலையின் மீது தான் கவனம் அதிகம் இருக்குமோ!!

உச்சி வெயில் மண்டெயெப் பிளந்து, வேத்து விறுவிறுத்துப் போகும், இந்த இந்திய சூழலில் டை கட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு டை கட்டத் தெரியாது என்பது அந்தமானில் எல்லாருக்கும் தெரியும். ஒரு Engineers Day ல் வேடிக்கை விளையாட்டு என்று ஆட்களை மேடைக்குப் கூப்பிட, நானும் முந்திரிக் கொட்டையா மேடைக்குப் போயிட்டேன். அப்புறம் தான் தெரியுது. யாரு டை சீக்கிரம், அதுவும் பெர்பெக்ட்டா கட்றாங்களோ, அவங்க தான் வின்னர் என்று. (ஒருவர் ”எத்தனை நாட்?” என்று கேள்வி கேட்ட பிறகு தான், அப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிந்தது). அதை வீடியோ எடுத்து லோக்கல் கேபிள் டிவீயும் அடிக்கடி என் மாணத்தை வாங்குது.

விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம், என்று கவிஞர் கற்பனை செய்கிறார். கவிஞர்கள் கற்பனையில் கூட, மேலாடை போட்டுத்தான் பாத்திருக்கிறார்கள். மேலாடை இல்லாத கேரளா பக்கமும், சல்வார்களும் சங்கடமாய்த் தான் இருக்குது. (ஆத்தாளுக்கும் தாவணி போட்டும் அழகு பாத்தது சினிமா உலகம்)

கம்பனடிப்பொடி என்று இப்போதைக்கு அழைக்கப்படும், சா கணேசன் அவர்கள் சுதந்திரப் போராளி என்று பலருக்குத் தெரியாது. அவரை ஒரு ஆங்கிலேயர் சுட வந்தாராம். ”எங்கே சுடு பாக்கலாம்” என்று சட்டைடையைக் கழட்டிக் காண்பித்தாராம். அப்போது கழட்டினவர் தான். பின்னர் சட்டையப் பத்தின சட்டை செய்யாமல், செமெ ஜாலியா, உலகமெங்கும் கம்பன் கழகம் அமையப் பாடுபட்டவர் தான் அந்த சட்டை அணியாத தமிழர்.

ஆனால் சமீப காலமா சின்னத்திரை சட்டை கலட்டும் வேலையினைச் செய்து வருவதைப் பாக்க முடியுது. (ஆமா… பெண்கள்ளின் உடையை இதுக்கு மேல் குறைக்க முடியாது.. என்று ஆண்கள் பக்கம் வந்திருப்பாங்களோ!!). சந்தோஷத்துக்கும் ஆடைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?? அப்படித்தான் தெரியுது. சின்னத்திரையில் வரும் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகளில் கிளைமாக்ஸில் சந்தோஷத்தின் உச்சிக்கு போய் சட்டையைக் கழட்டும் (கன்றாவிக்) காட்சிகள் நடப்பதைப் பாத்திருக்கலாம்.

ஜி மெயிலில் கம்பர் ஒரு மெயில் அனுப்பியிருப்பதாய் என் மொபைலில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. ஓடிப் போய் தொறந்து பாத்தா… இந்த ஆடை கழட்டி எறிந்து சந்தோஷத்தை கொண்டாடுவதை தனது ராமாயணத்தில் சொல்லி இருப்பதாய் தெரிவித்திருந்தார். அதெ உங்களுக்கும் சொல்லுங்க என்கிறார். சொல்லிட்டாப் போச்சி…

இராம அவதாரம் நிறைவேறிய நேரம். அதான், இராவணன் இறந்து போய் கீழே கிடக்கிறான். வானுலக தெய்வங்களுக்கு ரொம்பவே குஷி ஆயிடுச்சாம். அப்பொ மூனு மணி நேரம் பாக்கும் கிளைமாக்ஸே இவ்வளவு திரில் இருக்கிறச்சே, ஆண்டாண்டு காலமாய் எதிர் பாத்த விஷயம் குஷியா இருக்காதா என்ன? வானத்திலிருந்து பூமிக்கே நேரா குதிச்சாங்களாம். அது மட்டுமா?? காலால் எட்டி உதைத்தனர் பூமியை. திரிகூட மலையே ரெண்டாய் ஆயிடுச்சாம். அப்புறம் நம்ம சங்கதி…?? ம்… அதான்.., தங்கள் மேலாடையையும் உடையையும் கலட்டி எறிந்து ஆடிப் பாடினார்களாம்.

குதித்தனர் பாரிடை குன்று கூறுறமிதித்தனர் வடகமும் தூசும் வீசினார்துதித்தனர் பாடினர் ஆடித் துள்ளினார்மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்.

சாமிகளே செஞ்சது… இந்த ஆசாமிகள் செய்வது தப்பா?? நன்றி கம்பரே..உங்கள் மெயிலுக்கு.

தெருவெல்லாமே நாடுதான்..


தெருவெல்லாம் நாடு மாதிரி….

இளமையில் கல்.. என்பார்கள்.. எனக்கு என்னமோ இளமையில் பார்த்த சினிமா கல் மாதிரி பதிந்து போயிருக்கு. அப்பொ எல்லாம் வீடுகளில் டிவி இலவசமாய் இல்லாத காலம். இலவசமாய் படம் பார்க்க அப்பப்பொ வாய்ப்பு கிடைக்கும். ரஷ்யாவைப் பற்றி காட்டுவார்கள். கூடவே கறுப்பு வெள்ளை தமிழ் படமும் காட்டுவார்கள். அப்படி பாத்த ஒரு படம் தான் “புன்னகை”. உண்மையோடு போராடும் ஒரு சிவில் இஞ்சினியரின் வாழ்க்கை தான் படக் கரு. வருங்காலத்தில் சிவில் இஞ்சினியர் ஆகப் போகிறோம் என்பதாலோ என்னவோ, அந்தப் படம் என்னை அந்த அளவுக்கு கவர்ந்து விட்டது.

நேற்று நண்பர் ஒருவர், வாங்களேன் துப்பாக்கி படம் பாக்கலாம் என்றார். அப்பொத்தான் சன் லைஃப்பில் புன்னகை படம் ஆரம்பித்தது. நான் புன்னகையுடன் வர முடியாது என்று சொல்லி அமர்ந்தேன். பாத்த படம் தான். இருந்தாலும் அசைய விடாமல் இருக்க வைத்த பாலசந்தரின் சாமர்த்தியம். பாடல்களில் கூட ஏதோ தவற விட்டு விடுமோமோ என்ற நினைப்பில் தான் பார்க்க முடிந்தது. ஊழலற்ற வாழ்வு புன்னகை இன்றி முடியும் என்ற தகவலை (மெசேஜை) புன்னகையுடன் தெரு முழுதும் சொன்ன படம் அது.

தெருத்தெருவாய் எங்கே சுத்தினாலும் கடைசியில் (நான் கம்பரிடம் போவது போல்) வீட்டுக்கு வந்து தானே ஆகணும். எட்டாம் வகுப்பில் ஓர் ஆசிரியர் கட்டுரையினை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி ஒரு டிப்ஸ் கொடுத்தார். எந்தத் தலைப்பாக இருந்தலும் தலையெப் பிச்சிக்காமெ ஜாலியா… “நாட்டுக்கு அடிப்படை வீடு. வீடு செழிப்பாய் இருந்தால் தான் நாடு செழிப்பாய் இருக்கும். நாடு வளமோடு இருந்தால் தான் வீடும் வளமாய் இருக்கும்.” இதை பொத்தாம் பொதுவா எழுதிடனும். பொங்கல் தீபாவளி பத்தி கட்டுரை எழுதனுமா? அப்படிப்பட்ட வீடு மகிழ்வோடு இருக்க பண்டிகைகள் வேணும் என்று மொக்கை போட ஆரம்பிச்சிரலாம். காந்தி நேரு பத்தி எழுதனுமா? அத்தகைய வளமான வீட்டில் பிறந்தவர் தான் என்று ஆரம்பிச்சா போச்சி..

சரி நாமளும் கொஞ்சம் தெருவை விட்டு வீட்டுக்கு வருவோம். வெறும் செங்கல் கட்டிடம் வீடு என்ற பெயர் பெறுவதற்கு அங்கு உயிரும் அதில் சில அன்பும் கலந்து இருக்க வேண்டும். கோவை சிஐடி கல்லூரி விடுதியை முதன் முதலில் பார்த்த போது பிடிக்கவே இல்லை. ஆனா உள்ளே குடியேறிய பிறகு… அதை விட்டிப் பிரிய மனசே வரலை. ஐந்து வருஷ பிஇ யை, ஏன் தான் இப்படி நான்கு வருடம் ஆக்கினார்களோ என்ற கவலையும் தான் கடைசியில் மிஞ்சியது.

வீடுகளின் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். தின்னைகள் வைத்து கட்டிய வீடுகள் ஒரு காலம். இப்பொ பார்க்கிங்க் இருக்கா என்று தான் பாக்க வேண்டும். வீடு கட்டும் ஆட்களிடம் மட்டும் போய் ஆலோசனை சொல்லிவிட முடியாது.. அவரவர்களுக்கு ஆயிரம் தேவைகள். (சிவில் இஞ்சினியர்கள் தான் பாவம் முழி பிதுங்கி இருப்பர்). இப்படித்தான் அந்தமானில் மீட்டர் வட்டி எல்லாம் விட்டு சூப்பரா ஒரு வீடு கட்டினார் ஒருத்தர். கட்டின இடம் மேலூர் பக்கத்துலெ கிராமம். மாமியோட முகம் தெரியும் என்ற அளவுக்கு டைல்ஸ் போட்டு கட்டினார். ஒரு வருஷம் கழிச்சி வந்து பாத்து நொந்தே போனார். கிராமத்து மக்கள் அந்த வீட்டில் வைக்கோலும் எருவும் தான் அடுக்கி வைத்திருந்தனர். அவர்களின் தேவை அது தானே..

கும்பகோணத்தில் பட்டு நெசவுக்காரர்களின் வீடு நீள நீளமாய் இருக்குமாம். ஐந்து சேலை நெய்யத் தேவையான பாவுகளை வீட்டில் நீட்ட வசதியாய் நீளமாய் வீடுகள் இருக்கும். ஆனா இப்பொ போகிற போக்கைப் பாத்தால் எவ்வளவு அகலம் ரோடு போட்டாலும் பத்தாமல் போகுதே… ஆனா டோல் வாங்கிக்கிற இடம் மட்டும் இம்புட்டு அகலமா எப்படி எடம் கேட்டு வாங்குவாங்களோ!!!

அப்படி தெருத் தெருவா அழைஞ்சி அப்படியே…இலங்கைக்கு போலாமே… அங்கே தெரு எப்படி இருந்ததாம்? ஒரு தெரு தாண்டி அடுத்த தெரு போவதுக்குள்ளாற தாவு தீந்து போயிடுமாம்… அது எப்படி இருக்காம்??? ஒரு நாடு விட்டு நாடு போற மாதிரி இருக்காம்.. எல்லார் கிட்டேயும் நல்ல பேர் வாங்கும் ஒரே டைரக்டர் நம்ம கம்பர் தான். யாரையும் குறைவா சொல்லி வைக்கவில்லை…

காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றாமாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று  ஓர்  தேயத்தார்தேயம் சேறல் தெருவிலோர் தெருவில் சேறல்.

கம்பர் எப்பவும் ஓவர் பில்டப் செய்பவர் தானே… கவிஞர்களுக்கு அதுக்கு அனுமதி இருக்கு. அந்தக்காலத்தில் நாடெல்லாம் சின்னதா இருந்திருக்கும்னு நெனைச்சிக்கலாமே…

சாத்தானின் நாகரீகம்


அன்பு நெஞ்சங்களே,

இப்போது நாம் வாழும் நாகரீகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது??

பணம்…பணம்…அதை ஈட்ட பணம்… நுகர் பொருள் தேவைக்கான கலாச்சாரம்.

முன்பு கூட்டுக் குடும்பமாய் இருந்த நாம் இப்போது தனித்தனிக் குடும்பமாய் ஆகிவிட்டோம். இப்போது அந்த குடும்பமும் தனித்தனியாய் நிற்க ஆரம்பித்துள்ளது.

இந்த நுகர் பொருள் கலாச்சார நாகரீகத்தைத் தான் சாத்தானின் நாகரீகம் என்று காந்தியடிகள் 1947களிலேயே அழைத்தார். அவரை மகாத்மா ஆக்கிவிட்டு நாம் சாமான்யர்கள்…நம்மால் இதெல்லாம் ஆகாது என்று இருந்து விட்டோம்.

இப்படியே போனால, ஒரு தாய் தனது மகனுக்கு எழுதும் கடிதம் இப்படி இருக்கும்..

மகனே,
நீ பிறந்த அன்று
நம் தோட்டத்தில் நாங்கள்
நட்டு வைத்தோம் ஒரு
தென்னங்கன்று.

எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்..
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது.

இன்று எங்கோ இருந்தபடி
நீ ஈட்டும் பணம்
உனக்கு மட்டும் தான்
இன்பம் தருகிறது.

அன்று நாங்கள்
நட்டு வைத்த தென்னங்கன்றோ
இன்று எங்களுக்கு
சுவை நீரும் சுக நிழலும்
தந்து கொண்டிருக்கிறது.

ஒருநாள் ஈமெயிலில் நீ
மூழ்கிக்கிடக்கும் போது
எங்களை ஈ மொய்த்த
செய்தி வந்து சேரும்.
அதனால் என்ன??

எங்கள் இறுதி யாத்திரையில்
நீ இல்லாமல் போனாலும்
அந்த தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்…

* * * *

இதில் “அன்பு நெஞ்சங்களே” தவிர மற்ற அனைத்தும் தமிழருவி மணியன் வழங்கிய சொற்பொழிவு ஒலிக் குறுந்தகடில் சுட்டது.

நண்பர்களே,

உங்கள் மனசாட்சி சுட்டால் உடன் அம்மா, அப்பா, மற்ற இதர உறவினர்களுடன் ஒரு வார்த்தை மனம் திறந்து பேசித்தான் பாருங்களேன். நான் பேசி விட்டுத்தான் இந்தப் போஸ்டிங்க் அனுப்பி வைக்கிறேன்.

அப்பொ நீங்க????