கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)

மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா?


இதென்ன கேள்வி?? பொண்டாட்டி தொந்திரவு வேணாம்னு தானே, மாஞ்சி மாஞ்சி பேஸ்புக்கு முன்னாடி மணிக்கணக்கா கெடக்கிறாய்ங்க… இதுலெ.. கூப்புட்றது எப்படின்னு…. நல்லா கேக்குறானுங்கப்பா கொஸ்சினு…இப்படி உங்க மனசுலெ ஓடும் படம் எனக்கும்.. கொஞ்சம் கேக்கத்தான் செய்யுது.. ஏன்ன்னா… நானும் உங்க கட்சி தானே!! மனைவியை எப்படி அழைப்பது? என்ற கேள்வி வந்த்துமே…. செத்த இருங்க… என் வீட்டுக்காரி அழைப்பு வந்திருக்கு.. என்ன ஏதுன்னு கேட்டுட்டு, அப்புறம் வாரேன்…(ஐ பி எல்லுக்கு கமான், புலாவா ஆயா ஹைன்னு சொல்லிட்டு ஓட்ற மாதிரி ஓட வேண்டி இருக்கு பாருங்களேன்!)

மனைவியை எப்படி அழைப்பது என்பதற்குப் பதிலா… மனைவியின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்ற வித்தையை கொஞ்சம் பாத்துட்டுப் போலாமே… அவங்க உங்க கிட்டெ கேக்கும் போதே, அவர்களிடம் அந்த கேள்விக்கான பதில் இருக்கும். ரொம்பக் கவனமா கேக்கிற மாதிரி மொகத்தெ வச்சிக்கிடுங்க.. புரிஞ்சாலும் புரியாத மாதிரி மொக பாவனையா வச்சிக்கனும். எதிர் கேள்விகள், உங்கள் மேதாவித்தனைத்தைக் காட்டாமல், அவர்களின் மேதாவித்தனம் வெளிப்படும்படி கேக்கலாம். [என்ன சொதப்பலா சொன்னாலும், மேதாவித்தனம் மாதிரி, உச்சுக் கொட்டியிரனும்]. எல்லாம் முடிச்சு அவங்க என்ன நெனெச்சாங்களோ, அதை அவய்ங்க வாயிலிருந்து வரும் வரை பொறுமையா வெயிட் செய்யனும். அது வந்து விழுந்தவுடன், அட,,.. இதெத்தானெ நானும் நெனெச்சேன்ன்ன்ன்ன் என்று புளுகனும்… நல்ல தாம்பத்யத்தின் ரகசியம் வெளியே சொல்லிட்டேனோ??

சரீ… கூப்பிடு தொலைவில் இருக்கும் மனையாளை எப்படி கூப்புடுவது என்று கேட்டேனே… என்னங்க… ஏனுங்க.. ஏண்ணா, மச்சான், மாமா, மாமோய், என்று கணவர்களை கூப்பிடுவது தெரிகின்றது. மனதிற்குள் கடன்காரன் சனியன் என்று அழைப்பது இங்கு நாகரீகம் கருதி குறிப்பிடப் படவில்லை. ஆனால் அப்படியே, மனைவியை கூப்பிட அகராதிகள் தான் தேட வேண்டியுள்ளது. பெயர் சொல்லி அழைக்கும் கலாச்சாரம் இப்போதைக்கு வந்துவிட்டது. என் அன்பே, காதலியே, உயிரே, கண்ணே, அமுதே.. என்று கல்யாணத்துக்கு முன்னர் கொஞ்சிவிட்டு, அப்புறம் கல்யாணம் ஆன மயக்கத்தில், செல்லம்…செல்லக்குட்டி, செல்லக் கழுதெ..என்றெல்லாம் அழைப்பதும், அப்படியே கொஞ்ச வருடங்கள் கழித்து நாயே, பேயே என்று மனதிற்குள் அழைப்பதும் கணக்கில் வராது.

வட இந்தியர்களுக்கு ஒரு சௌகரியம் இருக்கிறது. டாக்டரின் டக்கர் மனைவியினை டாக்டராயின் என்றும், ஆசிரியனின் ஆசைமனைவியை உபாத்யாயின் என்றும் அழைப்பார்களாம். அப்பொ இஞ்ஜினியரான என் இனிய மனைவியை எப்படி அழைப்பார்கள் என்று கேட்டேன். இஞ்ஜினியராயின் என்று பதில் வந்தது.

அவங்க ஊர் பழக்கம் விட்டுத்தள்ளுங்க. அந்தமான் நிலவரம் பாக்கலாமே. பேர் சொல்ல குழந்தைகள் வேண்டும் என்று சொன்ன காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்பெல்லாம் கொழந்தைகளோட பேரெ வச்சித்தான் அவங்க அப்பா அம்மாவைக் கூப்பிடராங்க… ரக்சிகா அப்பாவோ, விஜயம்மா என்றும் தான் வழக்கமாய் ஆகி விட்டது.

மனைவியை மம்மீ என்று அழைக்கலாமா? (அப்பாடா அங்கே சுத்தி, அந்தமான் சுத்தி இப்பொ தலைப்புக்கு வந்தாச்சி…) மனைவியை தாய் என்ற உயர்நத இடத்தில் வைத்துப் பார்ப்பது ரொம்ப நல்ல விஷயம் தானே…இந்த இடத்தில் கமபரைக் கொண்டு வந்தால் நல்லா இருக்குமோ என்று படுது… கொண்டாந்துட்டாப் போச்சி…

காரியம் ஆகணுமா காலிலே விழுந்தாவது காரித்தை முடி..அப்புறம்… ”தேர்தல் வாக்குறுதியா..?? அதெல்லாம் சும்மா ஒரு சம்பிரதாயம் தானே” என்று, இப்பொ சொல்லும் அதே ரேஞ்சுக்கு கம்பன் காட்டும் ஓர் இடம் இருக்கு. வாலிவதம் செய்த காட்சி.. ”ராமனே ஆனாலும் மறைந்திருந்து வாலியை கொன்னது சரியா?” என்று இன்னும் சர்ச்சை நடந்திட்டுத்தான் இருக்கு. அப்படி கெட்ட பேரு வாங்கிக் கொடுக்கக் காரணமாய் இருந்த சுக்ரீவன் அப்புறமா, ஓவரா ‘ஹேங்க் ஓவர்’ ஆகும் அளவுக்கு ஓவரா குடிச்சிட்டு இருந்தானாம். பார்த்தார் இளவல் இலக்குவன்… கோபம்னா கோவம்.. உங்கவூட்டு எங்கவூட்டு இல்லெ… அம்புட்டு கோவமா வேக நடை போட்டு கிஷ்கிந்தையில் நுழைந்தார். தடுத்தார் தாரை… விதவைக் கோலத்தில் வாலியின் மனைவி… பார்த்தவுடன் தன் தாயார்கள் நினைவு வந்ததாம். (தாயார்கள் என்பதில் கைகேயியும் அடக்கம்). கோபம் அடங்கியதாம்…
மனைவியின் கோபம் நம்மீது பாய்வதை தடுக்க, அல்லது ஒடுங்க, மனைவியை தாய் மாதிரி நினைக்கலாமோ!!??

அது வரைக்கும் சரீரீரீ…இதென்னெ மம்மீ என்று அழைப்பது? இதுக்கு விளக்கம் சொல்ல நீங்கள் என்னோடு இன்று பாஸ்போர்ட் விசா இல்லாமல் குவைத் வரவேண்டும்.

mammii

அங்கே தான் என் நண்பர் பழனிகுமார் தன் மனைவியை மம்மீ என்று அழைத்து வருவதைப் பார்த்தேன். சற்றே வித்தியாசமாகப் பட்டது. ”ஏன் இப்படி?” என்றேன். ”பெயர் சொல்லித்தான் கூப்பிட்டு வந்தேன். என் குழந்தைகளும் நாம் செய்வதையே அப்படியே செய்வது போல், அவர்களும் பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன வம்பாப் போச்சே என்று, மம்மீ என்று குழந்தைகள் வாயிலிருந்து வரவழைக்க செய்த வேடிக்கையான ஏற்பாடு இன்றும் தொடர்கிறது” என்கிறார்.

எப்படி இருக்கு கதை..? இளைய தலைமுறை நல்லா இருக்க என்ன என்ன தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கு? உறவுமுறைகள் உட்பட..!!!

மீண்டும் ஒரு முறை கம்பர் கிட்டே போலாமே… அங்கே கணவரைக் குறித்துச் சொல்ல வேண்டும், அப்போது, மனைவியின் கணவர் என்று பிட்டுப் போடுகிறார் கம்பர். விரிவாப் பாக்கலாமா? இராமன் மேல் பாசம் கொண்டுள்ள கைகேயி இராமனை காடு அனுப்பும் போது தான் இப்படி வருகின்றது. ரெண்டு வரம் தர்ரதாச் சொன்னியே, ஒன்னிலெ எம் புள்ளெ நாடாளவும், இன்னொன்னுலெ சீதை புருஷன் காடாள்வதுமாக வரங்கள் ரெண்டும் கேட்பதாக வருகிறது கம்பனில்.

இராமன் என்று சொன்னால் எங்கே, ஒளிந்திருக்கும் பாசம் மேலே வந்துவிடுமோ என்று பயந்து, கம்பர் அதனை மறைத்துச் சொல்லாமல், ”சீதையின் கணவன்” என்று சொல்வது, இப்பொ நாம அந்தமான்லெ குழந்தைகள் பேர் சொல்லி அவங்க அப்பா என்று சொல்ற மாதிரி தானே இருக்கு?
வால்மீகி தான், கம்பரின் ”மூலம்”. ஆனால் வரிக்கு வரி காப்பி என்று மட்டும் சொல்லிட முடியாது. வால்மீகியின் வரிகளில், இராமனுக்கு பதவி ஏற்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் அப்படியே பரதனுக்கு செஞ்சிட்டு (இராமனுக்குப் பதிலா பரதன் மட்டும்), இராமனை காட்டுக்கும் அனுப்பிடுங்க என்பதாய் வருகிறது.

பாவம் மாமியார் மருமகள் மீது என்ன பிரச்சினையோ, சீதை பெயரை கைகேயி இழுப்பதாய் கம்பர் சொன்னது இந்த வம்பனுக்குப் படுகின்றது. இதோ பாட்டும்… வருது:

ஏய் வரங்கள் இரண்டின், ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால்
போய்வனம் ஆள்வது எனப் புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள்..

அந்த கடைசி வரியில் வரும் சிறந்த என்பது இப்பொ வரும், காமெடியில் கலக்கும், “ரொம்ப நல்லவ” மாதிரி தெரியுது எனக்கு. உங்களுக்கு?

பொய் சொல்லக் கூடாது காதலி…


காதலில் பொய் சொல்லக் கூடாதா? அல்லது காதலியிடம் பொய் சொல்லக் கூடாதா? என்று ஒரு கேள்வி வந்தால், எல்லாரும் சொல்லும் ஒரே பதில் “இரண்டிலும் பொய் சொல்லலாம்”. ஏனென்றால் காதல், கத்தரிக்காய், கவிதை இதெல்லாம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளரும் புலவர் பெருமகனார்களின் வளர்ப்புப் புத்திரிகள். கவிதைக்குப் பொய் அழகு. கவிதையில்லையேல் காதல் இல்லை. காதல் சொல்லுமிடம் (அல்லது செல்லுமிடம்) காதலி. அப்பொ பொய் செல்லுபடியாகுமிடம் காதல்… (அப்பொ, கல்யாணம்?? ’பொய் சொல்லி செமெயாய் மாட்டிக் கொள்ளுமிடம்’ என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்)

காதல் கசக்குதய்யா… என்று வர வர பாடினாலும், அதென்ன பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்குவது போல் காதலியை இறக்க முடியுமா என்ன? அப்பொ சுகமான காதல் என்பது சொல்லாமலே வரணும். (பொய் சொல்லாமலும், என்று நான் சொல்கிறேன்).

காதலன் காதலியிடம் சொல்லும் பாட்டு, இப்படி வருது:

பொய் சொல்லக் கூடாது காதலீலீலீலீ……
(அப்படியே பொய் சொல்லிவிட்டாலும்..)
பொய் சொன்னாலும் மெய் தான் அது காதலி..

ஆக பொய்க்கும் காதலுக்கும் தொடர்பு இருக்கு என்பதை மட்டும் சொல்லிபுட்டு முன்னே போவோம்.

ஆனால் அந்த காதல் வயப்படும் போது சொல்லிய பொய்கள், கல்யாணம் என்ற ஒரு பந்தம் வந்த பிறகு காத்து இறங்கிய பலூன் ஆக புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. இங்கெ தான் காதல், கல்யாணத்தில் வந்து தடம் புரளும் இடம். சரி அவர்கள் சண்டை போடட்டும், நாம கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு, அப்படியே வெளியே மேய்வோம்…

வாழ்க்கைக்கும் பொய்க்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு? உண்மை விளம்பிகள் கோஷ்டி (ரொம்பக் குறைவு என்றாலும் கூட) சிரமத்துக்கு ஆளாகி இருக்கு. பொய்யும் புரட்டும் சொல்லி புரள்பவர்களிடம் செல்வலெட்சுமியும் பெட்டி(யி)ல் கூட இருக்கிறாள். காந்தீஜி பாத்த ஹரிச்சந்திரா படமோ நாடகமோ, நமக்கு சொல்லும் பாடமே, உண்மையா இருக்க நெனைச்சா… தனக்கு மட்டுமில்லெ, பொண்டாட்டி புள்ளெகளுக்கும் கஷ்டம் தானுன்னு இப்பொவும் புரியுது. ஆனா, அந்த ஆளுக்கு மட்டும் ஏன் புரியலெ? ஆனா அப்படி மாத்தி யோசிச்சதாலெ தான் மோஹன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லலாம்.

உண்மைக்குக் காலம் இருக்கு என்று திரி இடியட் (தமிழில் நண்பன்) படத்தில் வரும் இண்டர்வியூ காட்சிகளில், கைதட்டலுக்கு வேண்டுமானாலும் கை கொடுக்கலாம். உண்மையில் உண்மை, வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும்? இது உண்மையிலேயே கஷ்டமான கேள்வி தான். ஒரு கேஸ் (எந்த கேஸு என்று வில்லங்கமா கேள்வி வேண்டாம்) பாக்கலாம்.

ஓர் அழகான பருவப் பெண்ணை சில ரவுடிகள் துரத்துகிறார்கள். (என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எத்தனை படம் பாத்திருப்பீங்க??). அந்த வாலிப மங்கை உங்க வீட்டிலெ வந்து ஒளிஞ்சிக்கிறா… (நீங்களும் ஹீரோ ஆக இதோ ஒரு சான்ஸ்..) ரவுடிகள் உங்க வீடு தேடி வர்ராய்ங்க… கேக்கிறாய்ங்க.. நீங்க அப்பொ என்ன சொல்லுவீங்க??

உண்மை விளம்பியாய் இருப்பீர்களா? அல்லது ”பொண்ணா? இங்கேயா? நானே பொண்டாட்டி ஊருக்க் போயிட்டான்னு கவலையோட இருக்கேன்.. வாங்க.. வாங்க..நானும் உங்க கூட வந்து தேடறேன்..” என்று சொல்வீர்களா?? இப்படிச் சொன்னா நீங்க நல்ல புள்ளெ… நம்மன் ஐயன் வள்ளுவரும் நம்ம கட்சிங்க…
உண்மைக்கு 2000 வருஷத்துக்கு முன்னாலேயே டெபனிஷன் குடுத்துட்டாரு அய்யன். யார் ஒருவருக்கும் தீமை நடக்காதவாறு சொல்லப்படும் எந்த ஒரு சொல்லும், (அதில் பொய்யும் அடக்கம் தான்) உண்மை என்றே கருதப்படும்.

கம்பரிடமிருந்து பேஸ்புக்கில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. “நாங்களும் சொல்லி இருக்கோம்லெ…” என்று. அட நம்ம கம்பர்கிட்டேயும் போய் கேப்போமே என்று பதிலுக்கு ”சொல்லுங்கண்ணே..சொல்லுங்க..” என்றேன்.

ராமன் பொய் செய்த காட்சி தெரியுமா? – இது கம்பன்.

கம்பன் பாட்டே, படித்தவுடன் புரியாது. (யாராவது கோணார் நோட்ஸ் மாதிரி எழுதி வச்சாத்தான் புரியும்). இவரது பேஸ்புக் எழுத்துக்கும் இவர்கிட்டேயே கேப்போமே??)

”பொய் செய்த….??? புரியலையே ஸ்வாமி!!!”

கம்பர் பதில் உடனே வந்தது. (இந்தப் பாமரன் மேல் கம்பருக்கு கொள்ளெப் பிரியம்)
”எல்லோரும் பொய் சொல்லுவார்கள். இராமன் பொய் சொல்லி அதைச் செய்தும் காட்டி இருக்கிறார்.”

என் கேள்வி தொடர்ந்தது. “அப்பொ அது தப்பில்லையா?”

”நாலு பேத்துக்கு நல்லது செஞ்சா…எதுவுமே தப்பில்லை…(தென் பாண்டி சீமையிலே… தேரோடும் வீதியிலே)” சொல்லி விட்டு கம்பர் ஆப்லைனுக்கு போய் விட்டார்.

நான் தேட ஆரம்பித்தேன். சாதாரணமா எவனாவது தப்பு செஞ்சாலே, அதெ நோண்டி நோண்டிப் பாப்போம். அப்பொ ராமனே செஞ்சா..??? உடுவோமா?? கெடெச்சது கைக்கு.

ராமன் காட்டுக்குப் போகும் இடம். ராமன் இருக்கும் இடம் சீதைக்கு மட்டுமா அயோத்தி? [மாமனார் வீட்டில் டேரா அடிக்கும் போது நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம், ம்ம்ம்ம்ம் சீதை இருக்குமிடம் தான் ராமனுக்கும் மிதிலை]. எல்லா மக்களுக்கும் அதே நிலை தான். மக்கள் நினைத்தார்களாம். நாமும் ராமர் கூடவே போயிட்டா… போற இடமே அயோத்தியா அல்லது மிதிலையா ஆயிடுமே?? அவங்க சந்தோஷமா இருப்பாகளே… என்று நினைத்ததாம் அக்கூட்டம். (அந்தக் கூட்டம் தானே வந்த கூட்டம், கட்டிங், பிரியாணி பொட்டலம், செலவுக்கு மேல் காசு இதெல்லாம் வாங்கி வந்த கூட்டமில்லை)..

எல்லாம் தெரிஞ்ச நம்ம ராமனுக்கு, மாஸ் சைக்காலஜியும் தெரிந்திருக்கு. ஒரு சின்ன ஐடியா (ராமர் மக்களை ஏமாத்தினா, அதுக்குப் பேரு ஐடியா… நாம செஞ்சா ஐ பி கோ செக்சன்… ஜாக்கிரதை). காலங்காத்தாலெ ரதத்தை அயோத்தி போற மாதிரி போக்கு காட்டி (நல்லா தடம் தெரியும் படி பொய்யா செஞ்சி, அப்படியே காட்டுக்கு ஓடிப் போயிடலாம்). அது சாட்சாத் அந்த ராமனே சொல்லி செஞ்சதுங்க..
நான் சொன்னா நம்ப மாட்டிங்க… கம்பர் சொன்னா நம்பிடுவீங்க தானே..

கம்பர் வார்த்தைக்கு இந்த வம்பனின் உரை இதோ.. பேரன்பு கொண்ட ரசிகசிகாமணிகளை திசை திருப்புறது கஷ்டம். அவங்களை இங்கேயே விட்டுட்டு நானு ஜகா வாங்குறதும் அம்புட்டு நல்லா இல்லெ. நம்ம ஆளுங்க நல்லா தூங்கிட்டு இருக்கிறச்சே, காரை (அதாங்க தேரு) ரிவர்ஸ் எடுத்து, அயோத்தி பக்கம் போக்கு காட்டிட்டு வேற ரூட்லெ போயிடுவோம். காலங்காத்தாலே அதெப் பாத்து எல்லாரும் பெட் டீ சாப்பிட அயோத்தி ஓடியிருவாய்ங்க… (அப்புறம் அவங்க அவங்க பொண்ட்டாட்டிகளை புரிஞ்சிக்க இன்னொரு டீ சாப்பிட்டு நம்மளை மறந்திடுவாய்ங்க…) இட் ஈஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட் என்று டிரைவரிடம் சொன்னதாய் கம்பராமாயணத்தில் வருது.

பின்னாடி யாரோ நிக்கிறாகளேன்னு பாத்தா… என் பையன்… எல்லாம் வக்கனையா படிச்சிட்டு, “டாடி எனக்கு ஒரு டவுட்டு” என்றான். குத்து வாங்கும் தூரம் தள்ளி நின்று விபரம் கேட்டேன். “இந்த ராமன் பொய் செய்ர சீன்லெ இலக்குவன் உண்டா??” நான் பதிலாய், “தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்றேன்.

”அப்பொ அதே டெக்னிக்கை, அதாவது சீதையை இலக்குவன் தனியே விட்டுப் போகும் போது செஞ்சிருக்கலாமே? ராமரைத்தேடி போற மாதிரி போயி அப்புறம் மறைஞ்சி இருந்துட்டு (காடு தானே!!), கொஞ்ச நேரம் போனப்புறம், ராமன் கூட திரும்பி வந்து, ஜாலியா கர்சிப் வச்சி, மொகம் தொடெச்சிட்டு வர்ரா மாதிரி வந்திருக்கலாமே!!! சொல்லுங்க டாடி சொல்லுங்க..” குத்த வருவதற்குள், ”கொஞ்சம் டயம் கொடு… இப்பத்தான் சிங்கப்பூர் பொறியாளர் எழுதிய இலக்குவன் பற்றிய புக் ”அண்ணையின் ஆணை” கையிலெ இருக்கு படிச்சிச் சொல்றேன்…” (அப்பா…பசங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி தாவு தீந்து போகுது…)

சரி அப்படியே கம்பனின் அசல் பாட்ட்டைப் போட்டு இன்னெக்கி வணக்கம் வச்சிறலாம்.. இதோ பாடல்..:

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனல் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்.

நீதி: ராமன் என்ன??? நீங்களே கூட பொய் சொல்ல்லாம்..செய்யலாம். ஆனா அதுலெ ஒரு நீதி, நியாயம் தர்மம் இருக்கணும். சுருக்கமா..ஒன்ஸ் எகெய்ன்… நாலு பேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லெ.. பொய்யும் கூட.

தூது செல்ல ஒரு தோழி…


மொபைல், இன்டர்நெட், இமெயில் எல்லாம் வராத காலத்தில் நம்மை ஒன்று சேர்த்த பெருமை தபால் துறைக்குத் தான் சேரும். கோவையில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது மதியம் சாப்பாடு மெஸ்ஸில் கட்டு கட்டு என்று செமையாய் கட்டி விட்டு, எல்லாரும் மறுபடியும் வகுப்புக்கே போக, நான் மட்டும் ஹாஸ்டல் ரூமுக்கு போவேன். கதவைத் திறந்து பார்த்தால் கீழே விழுந்து கிடக்கும் கடிதங்களைப் பார்த்தாலே பரவசமாய் இருக்கும். (உள்ளே Draft இருக்கும் கடிதங்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும்)

கடிதங்கள் இப்போது அப்போதைய மவுசை இழந்து இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அந்தமானுக்கு வந்த புதிதில் கிரேட் நிகோபார் தீவில் தான் பணி. அது கன்னியாகுமரியை விட தெற்கே உள்ள இந்தியப் பகுதி.. (சந்தேகமிருந்தா மேப் பாருங்க.. பெண்கள் மேப் பார்க்க விரும்புவதில்லை என்று சொன்ன ஒரு மேல் நாட்டு புத்தகம் சக்கை போடு போட்டு விற்கிறது – இது கொசுறுத் தகவல்) அப்போதெல்லாம் போட்டி போட்டு (இப்போது பிளாக்கில் எழுதுவது மாதிரி) எழுதுவோம். 64 பக்கங்களுக்கு எல்லாம் கடிதம் வந்துள்ளது.

பாலகுமாரன் நாவல் மூலம் அறிமுகமான ஒரு நண்பிக்கு அதிகம் கடிதம் எழுதி இருக்கிறேன். பெண்கள் புத்திசாலிகள் என்பதை பாலசந்தர் படமும் பாலகுமாரன் நாவல்களும் தான் காட்டும் என்பதில்லை. பாலகுமாரன் ரசிகைகளும் அதில் அடக்கம். கலயாணத்திற்கு பெண் பார்த்து வந்த பிறகு வழிந்து வழிந்து காதல்(????) கடிதம் எழுதியதை இப்பொ நெனைச்சா சிரிப்பா இருக்கு. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் என்று பாலகுமாரன் மாதிரியே கேட்டு சமாளிக்க வேண்டியது தான்.

அந்தக் காலத்தில் கடிதம் என்பது ரொம்ப காஸ்ட்லியான சமாச்சாரமா இருந்திருக்கும். சாதாரண மக்களுக்கு எட்டாத ஒரு சாதனமாய் இருந்திருக்கும். அதனாலெ தான் தூது சொல்லும் வழக்கம் தோதாக வைத்திருப்பார்கள் என்பது என் ஊகம். அதுக்கு வண்டைக்கூட நம்ம ஆட்கள் விட்டு வைக்கலையே..!!! வண்டா?? என்ன இது வம்பா இருக்கே என்கிறீர்களா?? திருவிளையாடல் படத்தில் தருமி (நாகேஷ்) பாடி, நக்கீரரிடம் உதை வாங்காமல் வரும் பாட்டு தான் அது. தும்பி விடும் தூது அது.

திருவாசகத்தில் நம்ம மானிக்கவாசகர் என்ன செய்றார் தெரியுமா? இந்த மாதிரி சாதாரண தும்பி எல்லாம் கதை ஆவாது என்கிறார். ஆமா மத்த ஆளுங்க காதலிக்கு தூது விடுவாங்க.. இந்த மா வாசகரோ இந்த காதலிகளைப் படைத்த ஆண்டனுக்கே தூது போகச் சொல்றார். (அவங்க ஆத்தாளுக்கு தாவனி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும் என்ற டயலாக் அநியாயத்துக்கு ஞாபகம் வந்து தொலைக்குது). துளியீண்டு தேன் இருக்கிற பூவை எல்லாம் ஏம்ப்பா கொஞ்சுறீங்க… நினைக்கும் போதும், பாக்கும் போதும் பேசும் போதும் ஆனந்த தேன் தரும் சிவபெருமானின் பாதமலரைப் போய் கொஞ்ச்சுங்கப்பா..கோதும்பிகளா என்கிறார். (கோ – அரசன் என்று பொருள் கொள்க. ஓஹோ கோ பட்த்தோட அரத்தம் இதானா??)

கம்பர் இங்கே உதயமாகிறார்.

“என்ன கிருஷ்… இப்பொ என்னையெ கலட்டி விட்டு மாணிக்க வாசகரை வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கே??”. அதெல்லாம் இல்லை ஐயனே… நீங்க இந்த கால டைரக்டர் ரவிகுமார் மாதிரி..கடைசிலெ தான் வருவீங்க.. கொஞ்சம் பொறுங்க… உங்களை அப்புறமா கவனிக்கிறேன். கம்பர் மறைந்து விட்டார்.

இந்த தூது விடும் நம்ம பழைய ஆட்கள் எல்லாம், ஏன் மரம், மட்டை, குளம், குட்டை, நிலா, தென்றல், அலை, மேகம் என்று தூது விட்டார்கள்?. ஆட்களை நம்ப முடியுமா என்ன? அர்விந்தசாமி மாதிரியான Handsom ஆட்கள் தாடி வைத்த பிரபுதேவா மாதிரி ஆட்களை தூது போகச் சொன்னார்கள். கடைசியில் என்ன ஆச்சி? தூது போறேன் தூது போறேன் என்று சொல்லி தோது பன்ன கதை எல்லாம் இப்பவே இருக்கே?? அப்பொ நம்ம ஆட்கள் நல்லா யோசிச்சு தான் செஞ்ச்சிருப்பாங்களோ.. இருக்கும்..

தூது போகும் ஆளை “ஒழுங்கு மரியாதையா சேதி சேக்கலே..தெரியும் சேதி” என்று மிரட்டலாம். ஆனா ஆறு மேல் கோபமாய் மிரட்டிய சேதி தெரியுமா?? Mr கம்பரே… இப்பொ உங்களை வரவழைச்சிட்டேன். சந்தோஷம் தானே..??

அனுமன் சீதையிடம் விலாவாரியாக (அப்படி என்றால் என்ன அரத்தம் என்று தெரியலை) சொல்லும் இடம். இராமன் சீதையின்றி சோகத்தில் தவிப்பதை ஆதாரத்தோடு சொல்லும் சிரமமான வேலை அனுமனுக்கு. சொல்கிறார். “ கோதாவரி ஆறைப் பாத்து, தினமும் சூரியன் உதயமாகும் போது இங்கே குளித்த்து உண்மையென்றால் நீயே அவளைத் தேடிக் கண்டுபிடித்து விடு. இல்லையென்றால் அம்பு விட்டு ஆறை அனலாக மாற்றி விடுவேன்” என்றெல்லாம் வருந்தினார் என்கிறார் அனுமன்.

போது ஆயினபோது உன தண் புனல் ஆடல் பொய்யோ?
சீதா பவளக்கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி! என்னா
கோதாவரியைச் சினம் கொண்டவன் கொண்டல் ஒப்பான்.

உங்களுக்கு இப்படி யார் மேலாவது கோபம் வந்திருக்கா?

முகத்தில் முகம் பார்க்கலாம்…


இப்படி சொன்னவுடன் காதலியின் பளிங்கு மாதிரியோ, கண்ணாடி மாதிரியோ இருக்கிற கண்ணத்தில் போய் மெய்யாலுமே முகம் பாக்க போயிடாதீங்க.. இந்த காலத்து பொண்ணுங்க அவ்வளவு மேக்கப் போட்டிருப்பாளுக…. நாம எங்கிட்டு போயி முகம் பாக்க??

முகத்தில் முகம் பாக்க இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். பேசாமெ உங்க வெப் கேமிராவை கொஞ்சம் உத்துப் பாத்தாலே போதுமே!! சரி அதுவும் இல்லையா?? இருக்கவே இருக்கு, மொபைல் கேமிரா. Self Shot அடிக்கிற வித்தை தான் இப்பொ எல்லா டப்பா ஃபோனும் தான் செய்யுதே?? உங்க மொகத்தெ நீங்களே பாத்துகிடுங்க..

25000 போட்டு வாங்கின Samsang Galaxy Tab என்னென்ன வித்தைகள் செய்யும் என்ற கேள்விக்கு என் பையன் சொன்ன பதில்: இதெ வச்சி மொகம் பாத்து ஷேவிங் செஞ்சிக்கலாம் என்கிறான். 5 ரூபா கண்ணாடியோட technically advanced costly replacement (சார்ஜ் செய்ய மறந்தால் அதுவும் அம்பேல் தான்!!)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய் என்கிறது ஒரு தத்துவம். அப்படிப் பாத்தா, சூர்யா கல்யாணத்துக்கு முன்னாடி அம்புட்டு ஆம்பிளைப் பசங்களும் ஜோதிகா ஆயிருக்கனுமே!!! அல்லது இப்பொ பசங்க எல்லாம் தமண்ணாவாவா மாறிட்டாக?? ஆக… ஆகி விடுவது என்றால்… உணர்வில் அப்படி..

பாரதியும் அப்படித்தான். கண்ணனின் காதலியாய் மாறி கண்ணம்மாவாய் அவதாரம் எடுத்தார். ஆண்டாளும் இதே வகை தான். மதுரையில் கிருஷ்ண பகவானின் நாயகியாய் தன்னை பாவித்தபடி வாழ்ந்து நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று பெயரே பெற்றார். இப்போதைய சாமியார்கள் பார்வைமட்டும் (கதா) நாயகிகளின் முகம் நோக்கி ஓடுதே? இதுவும் நாயகி பாவமாக்கும் முயற்சியோ?? யாருக்குத் தெரியும்? (மதுரைக்கு சோதனை வருவது புதுசா என்ன??)

ஒருவரின் முகத்தைப் பாத்து ஆளு எப்படி என்று எடை போடும் கலை, வர்த்தக நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு அத்துப்படியாய் இருக்கும். ஆனால் பெரும் ஜமீன் பரம்பரையாய் இருந்தாலும் ரொம்பவும் சிம்பிளான உடை உடுத்தும் மக்கள் கோவை பகுதியில் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று படுகிறது. அவர்கள் முகம் பார்த்து ஆள் எப்படி என்று எல்லாம் எடை போட்டுவிட முடியாது.

ஒரு சின்ன கார் வைத்திருப்பவன் செய்யும் பந்தாவே எக்குதப்பா இருக்கும் இந்தக் காலத்தில், பத்து பதினைந்து லாரி, ஓரிரு கல்வி நிறுவனங்கள் நடத்தும் அதிபரின் எளிமை பாத்து அரண்டு போய்விட்டேன். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

லைலா மஜ்னு காதல் பற்றி பேசாத ஆட்களே இருக்க மாட்டார்கள். காதலில் இதயத்தை இடம்பெயர்த்த மூத்த முதல் காதலர்கள் அவர்கள். ஒரு விசாரனை வருகிறது. கேள்வி லைலாவை நோக்கி, “உன் பெயர்?”
லைலாவின் பதில்: மஜ்னு.
மஜ்னுவிடம் மறுபடியும் அதே கேள்வி.
பதில்: லைலா.
ஒருவருக்குள் ஒருவர் மாறி மாறி வாழும் காதல் சரித்திரம் அது.

முகத்தில் மலர்ச்சி காதலில் தான் வருமா? கடவுளிடம் அப்படி இருக்காதா? கடவுள் சன்னதியில் சமீபத்தில் நடந்த நிகழ்வு. திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாய் அரச்சனை யார் பேருக்கு என்ற கேள்விக்கு நாம பெரிய்ய லிஸ்ட் தருவோம் (நட்சத்திரம் ராசி சகிதமாய்… உங்களுக்கு கண்டது எல்லாம் ஞாபகத்துலெ இருக்கு.. இந்த நட்சத்திரம் மட்டும் ஏன் மனசிலெ நிக்க மாட்டேங்குது என்ற என் மனையாளின் திட்டும் மறுபக்கம்)

ஒரு பக்தர் சொன்னது மட்டும் என்னை உற்றுப் பார்க்க வைத்தது. ஓர் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக அர்ச்சனை செய்யுங்கள் என்றார். (ஊரில் நல்லவர்கள் அங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்… நம்ம கண்ணுக்கு அப்பப்பொ தான் தென்படுகிறார்கள்). ஊர் மக்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் நானும் மகிழ்வாய் இருக்க முடியும் என்ற உயரிய எண்ணம்.

நாமளும் தான் தினமும் எத்தனையோ முகத்தெப் பாக்கிறோம். நமக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியாது. ஆனா கம்பர் பார்வை மட்டும் வித்தியாசமா இருக்கும். எந்த எடம் தெரியுமா? ராவணனின் அரண்மனை. இழுத்து வரப்பட்ட நிலையில் அனுமன். பத்து தலையையும் பதறாமல் பார்க்கிறான் அனுமான். ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் தெரிகிறதாம்.
ஒரு முகம் தன்னோடு வேலை செய்யும் தேவர்களுடன் அரசியல் பேசியதாம். சில முகங்கள் மந்திராலோசனை நடத்தியதாம். ஒரு முகம் தீய சிந்தனையில் இருந்ததாம். அட… ஒரு முகம் சீதை முகம் மாதிரி இல்லெ இருக்கு!!!.. இது எப்படி இருக்கு??

இராவணன் நினைப்பில் சதா சர்வகாலமும் சீதை இருப்பதால் அவனின் ஒரு முகம் சீதை முகம் போல் ஆகிவிட்டது என்கிறார் கம்பன். ஒரு வேளை அனுமன் கூட, எப்பவுமே சீதையை மீட்பதில் குறியாய் இருந்ததால் அனுமன் கண்ணுக்கு இப்படி படுகிறதோ.. இருக்கலாம்.

நம் மனசிலும் இப்படியான பத்து முக சிந்தனைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முறையாவது நல் சிந்தனைகளை ஒருமுகப் படுத்த முயற்சிக்கலாமே!!!

இதோ கம்பன் பாடல் வரிகள்:

தேவரொடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒருமுகம் முயல
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில
பூவை சானகி உரவொளி ஒரு முகம் பொருந்த

என்ன… ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி பாட்டு ஞாபகம் வருதா?

காதலில் ஜெயிப்பது எப்படி?


காதலில் சொதப்புவது எப்படி? என்று அருமையான படம் வந்தது. இன்றைய காதலின் உண்மை நிலவரத்தை தோலிருச்சி (எதை எதையோ உரிச்சியும்) காட்டியது. காதலில் சொதப்புகிறார்களோ இல்லையொ, காதலிப்பவர்களின் சொதப்பல் தான் மிகப் பெரிய சொதப்பல்.

காதல் எவ்வளவு சிரமமோ, அதை விட அதனைச் சொல்வது அல்லது வெளிப்படுத்துவது. ஏன் இப்படி இவ்வளவு சிக்கல்கள்? காதல் மலர்வதற்கு எந்தவித காரண காரியங்களும் தேவை இல்லை. இப்படி ஏதும் காரண காரியங்களுக்காய் காதலித்தால் அதனை புராஜக்ட் என்று அழைக்கலாம் என்று ஓகே ஓகே (ஒரு காதல் ஒரு கண்ணாடி) படம் சொல்லித் தருகிறது. கவுக்கிறது என்ற கொச்சையான சமாச்சாரத்தை மங்களகரமாய் மொழி பெயர்த்து Project என்கிறார்கள்.

காதலை காதலியிடம் தெரிவிப்பது எவ்வளவு சிரமமோ, அதே சிரமம் பெற்றோர்களிடம் அவர்கள் தம் காதலையும் தெரிவிப்பது. எனக்கு அந்த மீடியேட்டர் வேலை வந்து சேர்ந்தது. (புரோக்கர் என்பதை எப்படியெல்லாம் மாத்திச் சொன்னாலும்… அதை சொல்லாமல் இருக்க முடிவதில்லை). பையனின் அப்பாவிடம் நைஸாக ஆரம்பித்தேன்.

உங்க பையனுக்கு ஏதோ லவ் மேட்டர் இருக்கிறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்ககளே??
கிடைத்த பதில்: “ஆமா…. அவர்களை நம்பி நாம் இருக்கும் போது அவர்கள் நம் அனுமதி கேப்பாங்க என்று எதிர் பாப்பதே தப்பு”. என்ன நிதர்ஷனமான யதார்த்தமான அப்பா…!!!.
சில ஆண்டுகள் கழிந்தன. அதே அப்பாவிடம் கேட்டேன்: மருமகள் எப்படி?

“இந்த மாதிரி மக கெடைக்க ஆண்டவன் அருள் இருந்திருக்கனும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஊரிலிருந்து ஒரே ஜாதி ஒரே மதம் பாத்து பெண் எடுத்திருந்தாலும் கூட இப்படி அமைந்திருக்குமா தெரியவில்லை..” இப்படிப் போனது அவர் பதில். இது ஜெயித்த காதல் கதை.

இன்னொரு வீட்டில் நடந்த கதை. தங்கையின் கல்யாணத்திற்கு, அண்ணன் தன் கல்லூரித் தோழர் தோழிபடை பட்டாளத்துடன் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தோழி மட்டும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்த்து வருகிறாள். கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதை கவனிக்கத் தவறவே இல்லை. விடைபெறும் நேரம் வந்தது. தோழி சாதாரனமாய் ஆசி வாங்க அம்மா காலில் விழுந்தாள். நம்மாளு சொன்ன கடைசி வார்த்தை, “அம்மா இது தாம்மா நம்ம மாட்டுப் பொண்ணு..”. ஏதாவது மறுப்பு சொல்ல முடியுமா? அம்மாவாலும்… யாராலுமே!!!

அதற்கு நேர் மாறாக நாள் நட்சத்திரம் பற்பல பொருத்தம் என்று தடபுடலாக நடந்த ஒரு கல்யாணம். இரண்டு வருடத்திற்குள், தன் IT துறை கணவன் அடிப்பதாய் மனைவி புகார் சொன்ன போது நொந்து போனார்கள் பெற்றோர். “பேசாமல் நீயும் யாரையாவது லவ் பண்ணித் தொலெச்சிருக்கலாமே” என்ற அளவுக்கு வந்து விட்டது நெலமை.

ஜெயித்த காதல் ஒரு பக்கம். தோற்ற காதல் பல. தன் காதலி ஒரு கிளியோபாட்ரா என்று சொக்கி விழுந்தவன் அவன். ஓரிரு வருடங்களில் அந்த காதலி 90 கிலோவை நெருங்க, காதலன் முகம் தொங்கிப் போனது.

ஆட்டத்தோடு பாட்டுப் பாடும் ஜாலியான ஆசாமி இன்னொருவன். காதல் அதில் தான் தொடக்கம். கல்யாணத்தின் பின் ஆட்டமும் இல்லை. பாட்டும் காணோம். மனுஷன் நொந்து போய் குடியில் திளைக்க, வருடங்கள் உருண்டன. தன் கணவர் உயிரோடு இருந்து தொல்லை தருவதை விட இறப்பதே மேல் என்றது அந்தக் காதலி. விதவை ஆவதை விரும்பி ஏற்ற அந்த மாஜி காதலி..ஆமா.. காதல் ஏன் இப்படி ஆச்சி??

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நண்பர்கள் பெரும்பாலும் தங்களுக்குள் மச்சி (மச்சான்) என்றோ, மாப்பிள்ளை என்றோ அழைத்துக் கொள்வர். உண்மையில், நண்பர்களுக்குள் அப்படி உறவு அமைவதும் உண்டு. என் கல்யாணத்திற்கு வந்த ரெண்டு நண்பர்கள் ஒன்றாய் பஸ்ஸில் போகும் போதே இப்படி தங்கை பற்றிச் சொல்ல விரைவில் எனக்கு கல்யாணப் பத்திரிக்கை வந்தது.

சரீ..இதெல்லாம் சரி… தலைப்பு என்ன? காதலில் ஜெயிப்பது எப்படி? சொல்லிட்டு காதல் கத்தரிக்காய் மட்டும் சொல்லிட்டு வந்தா எப்படி? அது ஒண்ணுமில்லை சார். கிரேஸி மோகனின் ஒரு நாடகம் DVD ல் பாத்தேன். “கிரேஸி கிஷ்கிந்தா” அதிலும் ராமாயணம் வந்தது.. கிரேஸியின் டிராமாவில் மட்டும் தான் இராமாயணம் வருமா? நம்ம போஸ்டிங்லெயும் வருமே!!!

காதலித்துப் பார் வருஷங்கள் நிமிஷமாகும். நிமிடங்கள் வருஷங்களாகும். இது வைரமுத்துவின் பார்முலா. காதலில் ஜெயிக்க கம்பர் ஒரு பார்முலா சொல்கிறார். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க..

காதலில் விழுந்தவர்களின் கண்களுக்கு காதலி மட்டும் தான் காதலியாய்த் தெரிவாராம். மற்றவரெல்லாம் ஆண்கள் மாதிரி தெரிய வேண்டுமாம். என்ன நம்ப மாட்டீங்களா..?? இதோ சற்றே விரிவாய்..

இராவணனுக்கு சீதை மேல் காதல். (அடுத்தவன் பொண்டாட்டி மேலே வருவது மோகம் தானே?? காதலா என்ற கேள்விக்கு பதிலை வேறு என்றைக்காவது வைத்துக் கொள்வோம்.) நாகர்கள் வழும் பாதாள லோகம் தொடங்கி பிரம்மன் வாழும் சத்தியலோகம் வரைக்கும் அதன் இடைப்பட்ட எந்த இடத்திலும் மயில் மாதிரி பிகருங்க இருந்தாலும் அவர்கள் எல்லாம் காதல் கொண்டவர்களின் கண்களுக்கு ஆடவராகத் தெரிந்தார்களாம்.

சரி இப்பொ Test வைக்கலாமா?? உங்க காதலியை மனசுலெ நெனைச்சுக்குங்க.. தமண்ணா முதல் திவ்யாபாலன் ஹன்சிகா அமலாபால் இப்படி யாரைப் பாத்தாலும் ஆண்களாக காட்சி தர வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் காதலில் ஜெயிக்கிறீங்க…

அப்படியே அந்த குஷி மூடில் பாட்டையும் படிச்சிருங்க…:

ஏகநாயகம் தேவியை எதிர்த்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.

அப்புறம் வரட்டா..???

[இந்தப் பதிவிற்கு புதிய நடிகைகளின் பெயர் தேவை என்று சொன்னவுடன், இது போதுமா? என்று பெயர் தந்து உதவிய மதுரை மைந்தன் ருப்பா கேசவ ராஜாவுக்கு என் சிறப்பு நன்றிகள்].

எங்கே தொட்டா எங்கே வலிக்கும்??


 தொட்டுக் கொள்ளவா?? என்று செல்லமாய் கேட்கும் பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீங்க… கேக்கும் போதே தொடத் தோன்றும்… அவ்வளவு பாவனையுடன் அமைந்த பாடல் அது.

அதுக்கப்புறம் தொட்டால் பூ மலரும்…என்று சொல்லி, பதிலுக்கு தொடாமல் நான் மலர்ந்தேன் என்று போட்டு வாங்கியது.. அதுக்காக காதலன் தொடவே கூடாது என்ற அர்த்தத்தில் காதலி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை தான்.  தொடாமலேயே என் மலர் போன்ற முகம் இவ்வளவு மலர்கிறதே… நீ தொட்டால்..இன்னும் மலரும் என்று யோசிக்க வைக்குது.. (நான் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறேன்..உங்களுக்கு அப்படி ஏதும் படுதா???)

 காலங்கள் மாறின… அட சன்டாளா..உன் கண் பட்டாலே கர்ப்பம் ஆயிடுவாளே!!! என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்… இது என்ன கண்கட்டு வித்தை என்று யோசிக்க வேண்டாம்.. கர்ண பரம்பரையாக கர்ணன் பிறந்த கதையும் இந்த கர்ப்ப வகை தானே..

சரி அப்படியே… எங்கே தொட்டா எங்கே  வலிக்கும் எரியாவுக்கு வந்து ரவுண்ட் கட்டுவோம்.

கதாநாயகனை வழிக்குக் கொண்டு வர இந்த வலியினை கையில் எடுக்கும் யுத்தி. இதில் நாயகனுக்கு வேண்டிய நபர்கள் அம்மா, அப்பா, தாத்தா, தங்கை, சகோதரன் குழந்தைகள் என்று எது எதுவோ மாறி மாறி வரும்.. ஆனா மாறாத ஒரு விஷயம்… அந்த ஒரு டயலாக்.. அங்கே தொட்டா இங்கே வலிக்கும் என்பது தான்.

மேடைப் பேச்சுகளிலும் எதைத் தொட்டா ஆடியன்ஸ் காதில் சங்கதி ஏறும்? என்பதை தெரிந்து கொள்ளல் அவசியம்.. (இந்த மாதிரி போஸ்டிங்க் போடும் போது உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை நான் போடுகிறேனா?? – என்ன நான் சரியா….எழுதுறேனா???)

இன்று (17-11-2011) லிட்டில் அந்தமான் தீவுகளின் அனைத்து பள்ளிகளும் ஒன்று சேர்ந்து அறிவியல் கண்காட்சி நடத்தினர். நான் தான் சிறப்பு விருந்தினர் இங்கு அதனைத் திறந்து வைக்க…பேச.. (புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பதில் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கிறது). மாணவர்கள் கூட்டம் எக்குத் தப்பாய். கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு அதை பார்க்கவும் பொது ஜனங்கள் வேறு.. இவர்கள் மத்தியில் அறிவியல் பற்றியும் பேச வேன்டும்.

“நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது எங்க அப்பா தண்ணி குடிக்கக் கேட்டா, உடனே கொண்டு வந்து குடுப்பேன்.. இப்பொ நீங்க குடுப்பீங்களா??” இது என் முதல் கேள்வி…

நஹி… என்று உண்மையான பதில் வந்தது. குழந்தைகள் எந்த ஊரிலும் எந்தத் தீவிலும் பொய் சொல்வதில்லை.

“இதெ..இதெ தான் எதிர் பாத்தேன்.. ஏன் இப்படி?? Generation Gap என்று நான் சொல்ல மாட்டேன். This generation needs everything into scientific approach… ஏன் நான் தண்ணீர் தரனும்? நீங்களே ஏன் போய் தண்ணி புடிச்சி தரக்கூடாது?? அக்காவை அல்லது தம்பியை ஏன் கூப்பிடலை?? இவ்வளவு ஏன் எதற்கு எப்படி இப்போதைய பசங்க கேக்கிறாய்ங்க… கேளுங்க… கேளுங்க.. நல்லா கேளுங்க.. இந்த மாதிரியான கேள்விகள் தான் அறிவியலின் ஆதாரம்..” கூட்டம் ஆர்வத்துடன் கேக்க ஆரம்பித்தது.

கண்டுபிடிப்பாளர்கள் எல்லாம் பெரிய படிப்பு படித்தவர்கள் அல்ல. என்னையும் உங்களையும் மாதிரி சாமானியர்கள் தான். சொல்லப் போனால்,  காதுலெ என்ன பஞ்சா வச்சிருக்கே என்று திட்டு வாங்கின பையன் தான் Ear Muff கண்டுபிடித்த சேதியும், வீட்டு வேலை செய்த பெண்மனி மேடம் கியூரி ஆகி இரண்டு நோபல் பரிசு பெற்ற சேதியும் சொல்ல… பசங்க மாத்திரமில்லெ மற்றவர்களும் நல்லா கேட்டார்கள்..

சம்பந்தம் இல்லாததை இழுத்துக் கொண்டு வந்து சம்பந்தப் படுத்தி எழுதுவது எதில் சேத்தி… நான் மட்டும் வம்படியா கம்பரை இழுக்கலையா என்ன???

இப்பொ கம்பர் வந்துட்டாரா… இவர் பாருங்க… சம்பந்தம் இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்வார்.. பாக்கலாமா???

அனுமனைப் பாக்கிறார்.. பாத்தா ஒரு பாய்மரம் மாதிரி தெரியுதாம்.. (எனக்கு என்னமோ Life Boat மாதிரி தெரியுது). ஓகெ Fine.. எப்பொ தெரியுமா?? ஒரு மலைமேலே அனுமன் கால் வைக்கிறார். அப்பொ அந்த மலை அப்படியே பூமிக்கும் கீழே போகுதாம்.. அதெப் பாத்தா ஒரு படகு மூழ்கும் போது பாய்மரம் வெளியே தெரியுதே…அது மாதிரி இருக்காம். இது வரை எல்லாம் சரி தான்.

நடுவில் கம்பர் ஒரு பிட்டு போட்றார் பாருங்க..

அந்த மலையில் அனுமன் கால் அழுத்தத்தால் வானத்திலெ கீற நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மேகம் இவை எல்லாம் கொஞ்சம் மெரண்டு போய் மேலே போயிட்டதாம்.. இங்கே கால வச்சா அங்கே என்ன நடக்குது பாத்தீகளா??

தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிரத் தாழ்ந்து
பாரிடை அழுத்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு எனக் குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே!

இன்னும் வரும்.