சிலிம் ஜாக்பாட் சிம்ரன்


பழைய கமல் படத்தில் வந்த ஒரு அழகான SPB பாட்டு தான் கம்பன் ஏமாந்தான்.. இந்த கன்னியரை ஒரு மலர் என்றானே, கற்பனை செய்தானே என்று வரும். ஆனா என்னோட கிட்ட்த்தட்ட எல்லா போஸ்ட்களிகளில் எங்கெங்கோ சுத்தி கடைசிலெ கம்பர் வந்து விடும் விபத்து நிகழ்கிறது. இது ஏதும் திட்டமிட்டு செய்த சதி அல்ல. தற்செயலாக வந்தது. அப்படியே தொடர்கிறது. ஏன் இப்படி என்பதற்கான தன்னிலை விளக்கம் தான் இந்த போஸ்ட்.

தினமணி பேப்பரில் முதலும் கடைசி வரை மேய்ந்து முடிக்கும் படிப்பாளி என் மாமா. அவர் எல்லா வார மாத சங்கதிகளையும் படிப்பார். அதிகம் பயணம் செய்வதால் பலபல புத்தகங்கள் அவரிடம் வந்து சேரும். அப்படி அவரிடம் எப்படியோ வந்து சேர்ந்தது தான் அந்த ஒன்பது தொகுதிகள் அடங்கிய வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்ட கம்பராமாயணம் மூலமும் தெளிவும்.

ராமேஸ்வரத்தில் பல வருடங்கள் மீன் பிடி தொழில் சார்ந்து இருந்த போதும் என் மாமா கோவிலுக்கு போய் நான் பாத்த்து இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்ற ரகமும் இல்லை. 2000 ஆண்டில் அவர் கையில் வந்த்தாய் கையெழுத்து சொல்கிறது. படித்திருக்கலாம். 2005 வாக்கில் என் கைக்கு வந்தது. அந்தமான் வரை சுமந்து வந்த நல்ல காரியம் மட்டும் தான் நான் செய்தது. ஓர் ஆன்டு வரை அலமாரிச் சிறையில் தனிமைத் தண்டனை அனுபவித்த்து அந்தக் கம்பக் காவியம்.

வருடத்துக்கு ஒரு முறையாவது வீட்டைச் புரட்டிப் போட்டுச் சுத்தம் செய்வது என்பது என் மனையாளிடம் இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. அப்படி ஒழுங்கு படுத்தும் போது தேவையற்ற பொருட்கள் பயன்படுத்தாத பொருள்கள் வெளியேறிவிடும். அப்படி வீட்டை விட்டு வெளியேற்றத்துக்கு ஆன முதல் ஐட்டம் அந்த ஒன்பது தொகுதி கம்பராமாயணம். இதெப் படிச்ச மாதிரியே காணோம்…(படிச்சாலும் இது என்ன ராமாயணம் படிக்கிற வயசா என்ற எதிர் பேச்சும் வரும் என்பது வேறு விஷயம்). தூக்கிப் போட்றலாம் என்பதை நாசுக்காய் எங்காவது படிக்கிற ஆட்கள் அல்லது லைப்ரரிக்கு தரலாமே என்று என் திருமதியின் திருவாய் மொழிந்தது.

நானும் பொறுப்பாய் அதனை எடுத்துக் ஒரே கட்டாக கட்டி அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் நூலகத்தில் கொடுத்து விட்டேன். அங்கு மாதம் ஒரு முறை கம்பன் கழகமாய் கூட்டம் நடந்து வந்தது. வாராவாரம் இலக்கிய மன்றக் கூட்டமும் நடைபெறும். கம்பனின் கற்பூர வாசனை அறியா கழுதையான நான் அதென்ன கம்பனுக்கு மரியாதை (ரிசர்வேஷன் தேவையா?) என்று சொல்லி வைக்க, நான் சொன்ன இந்த நல்வாக்கு பலித்தெ விட்டது. கம்பன் கழக மூடுவிழா கம்பன் பற்றி தெரியாமலேயே நடந்தது. (இந்து மதம் பற்றி தெரிஞ்சிக்காமலேயே மதம் மாறுவதில்லையா? அப்படித்தான்..)

கொஞ்ச நாள் போனது. இலக்கிய மன்ற வாராந்திரக் கூட்டத்தில் ஒரு தலைப்பு சொன்னார்கள். கம்பனின் பாத்திரங்கள் பற்றி அனைவரும் பேச முடிவானது. ரெண்டு வருஷமா அலமாரிச் சிறையில் இருந்த கம்பனின் காவியத்திற்கு ஒரு வழியா பெயில் கிடைத்தது. கம்பனை அன்று கையில் எடுத்தவன் தான்.. இன்னும் திருப்பி வைத்த பாடில்லை. பாட்டு எழுதி விளக்கம் தான் தருவர் எல்லாரும். விலாவாரியாக எழுதி அப்புறம் நச்சுன்னு ஒரு பாட்டு போடலாமே என்று எனக்கு தோணிச்சி. (ஏன் அப்படி தோன்றியதுது? அது அந்த கம்பனுக்கே வெளிச்சம்).

அதுவரை மனதுக்குள் பட்டதை எனது கல்லூரித் தோழர்களொடு (நோ தோழிகள் ப்ளீஸ்) யாஹு குரூப்பில் எழுதி வந்தேன். அங்கு தான் அந்த கம்பனை வம்புக்கு இழுத்து எழுத ஆரம்பித்தேன். நல்ல ஆதரவு கிடைக்கவே பின்னர் வலைப்பூ துவங்கி ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி நண்பர்கள் ஏதாவது எழுதப் போய், இதுக்கு கம்பர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ற கேள்வியும் அப்பப்பொ வரும்.

சமீபத்தில் இப்படித்தான் கல்லூரித் தோழர் லிவிங்க்ஸ்டன் (மக்கா என்று செல்லமாய் அழைப்போம்) குவைத்தில் கலந்து கொண்ட ஜாக்பாட் நிகழ்ச்சி ஜெயா டிவி யில் சிம்ரனின் ஜிலுஜுலுப்போடு நடந்தது. கல்லூரிக் காலத்தில் தமிழ் மன்றத்தை கலக்கிய அனுபவம், சிம்ரனைப் பற்றி செமெ கவிதை பாட வைத்தது. (கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா பொன்டாட்டியை பாத்து கவிதை எழுதி இருப்பாங்களா? சிம்ரன் என்றால் ஏன் தான் இப்படி வழியலோ என்று என் பொண்டாட்டி கமெண்ட் அடித்தது ஒரு தனிக் கதை)
ஹைதராபாத் நண்பரிடமிருந்து அந்த ஜாக்பாட் புரோகிராம் நடக்கும் போதெ போன் வந்தது. சிம்ரனையும் கம்பனையும் வச்சி ஏதாவது எழுதலையா என்று. அந்த குறையை ஏன் வைக்கணும். சிம்ரன் கூந்தல் செம்பட்டை கலரில் இருந்ததா என்று கேட்டேன். பதில் ஆமாம் என்று வந்தது.

ராமாயண காலத்துக்கு போவோம். அனுமான் முதல் இன்னிங்க்ஸ் இலங்கையோடு ஆடிய ஆட்டம். ஆட்டம் சூடு பிடித்ததால் வாலில் சூடு வைக்க அதை ஊருக்கே வைத்த இடம் அது. Fire Service இல்லாத அந்தக் காலத்தில் ஊர் மக்களே ஒன்று சேர்ந்து அந்த அனுமன் வைத்த சூட்டை அணைத்து வந்தனர். பாத்தாலே கட்டி அணைக்கத் தோன்றும் வகையில் உள்ள மகளிர் மேலும் ஹோலிக்கு தண்ணி ஊத்துவது போல் ஊத்திக் கொண்டிருந்தனர். பதிலுக்கு ஆடவர் மேல் மகளிரும் வேகமாய் தண்ணி ஊத்தினர். ஏன் இப்படி நடக்கிறது?.

கம்பன் பதில் சொல்கிறார். கொழுந்துவிட்டு எரியும் தீ. மகளிர், ஆடவர் தலையில் இருக்கும் (சிம்ரன் போல்) செம்பட்டை முடி. ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாததால் வந்த வினை. இதில் “சிம்ரன் போல்” என்பது கம்பன் சொல்லாமல் விட்டு இந்த வம்பன் சேர்த்தது.

கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர் வீரரும் மாதரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுந்தினவும் தெரிகின்றலார்.

வேறு ஏதாவது அல்லது யாரையாவது வம்புக்கு இழுக்கலாம் கம்பரோடு சேர்த்து.

தொட்டுக்கொள்ளவா?? தொட்டுக்கொள்ள வா!!!


நான்கு குடித்தனங்கள் சேர்ந்த வீட்டில் தான் என்னோட சின்ன வயது ஆரம்பித்தது. பெரிசுகள் எல்லாம் கதர் கட்டும் காங்கிரசுக்கு ஆதரவாய் இருக்கு இளசுகள் எல்லாம் சிவாஜி ரசிகர்கள் ஆக்கப் பட்டோம். (திராவிட கட்சி ஆதரவாளர்களின் பசங்க எல்லாம் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆனார்கள்)

இந்த சூழ்லில் வளர்ந்த நான், உலகமே பாத்து வியந்த உலகம் சுற்றும் வாலிபனைக் கூட பாக்க முடியாம போச்சி. சிறந்த நடிகர் விருது எம் ஜி ஆருக்கு வந்த போது கூட… அட… போங்கப்பா… பாபு படத்தில் சிவாஜிக்கு ஈடு வருமா என்று பேச வைத்தது விடலைப் பருவம்.

கல்லூரியில் காலடி வைத்த பிறகு தான் எம் ஜி ஆர் என்ற சக்தி பற்றிய தெளிவு பிறந்தது. அதை செய்தவர் கல்லூரி தோழர் பழனிச்சாமி. (அவரை நாம் எல்லோரும் எம் ஜி ஆர் பழனிச்சாமி என்று தான் அழைப்போம்). அவர் பிறந்த ஊர் விருது நகருக்கு அருகே உள்ள விளாம்பட்டி. எம் ஜி ஆர் உடல் நலம் இல்லாத போது அந்த ஊர்க்காரர் ஒருவர் தன்னோட கையை வெட்டி ஆண்டவனுக்கு காணிக்கை செய்தாராம். (சிவனுக்கு கண்கொடுத்த பரம்பரையாக இருக்குமோ??)

எம் ஜி ஆர் மேல் ஈடுபாடு வந்ததோ இல்லையோ, அருமையான பாடல்கள் மீது காதல் பிறந்தது. குமரிக்கோட்டத்தில் எங்கே அவள்; நான் ஏன் பிறந்தேனில் நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்; இப்படித் தொடரும் லிஸ்டில் வரும் இன்னொரு பாடல் தான் “தொடுக் கொள்ளவா??..” மட்டுக்கார வேலன் என்று நினைக்கிறேன். TMS சொல்லும் பாவனையுடன் இன்றும் இனிக்கும் பாடல் அது. தொட்டுக் கொள்ளவா?? என்று இந்த பாவத்துடன் கேட்டால் யாருக்குமே மறுக்கும் தைரியம் வராது.

இந்த வித்தையினை இவ்வளவு வருஷம் கழித்து ஒரு ஊறுகாய்க்கென பயன்படுத்திக் கொண்ட விளம்பரம் பாத்தேன்.. அசந்து போயிட்டேன். அதில் வரும் வரிகள் தொட்டுக்கொள்ளவா?? தொட்டுக்கொள்ளவா??
தொட்டுக்கொள்ளவா?? மட்டும் தான். இறுதியில் ஊறுகாய்… வாய்… தொட்டுக் கொள்ளத்தன் தோணும்.

அதே மாதிரி தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் என்றும் ஒரு தூள் கிளப்பும் விளம்பரம் பாத்திருப்பீங்க… தொடரும் பாரம்பரியம் என்று சொல்ல் இருந்தா மட்டும் போதாதா??? அது எதுக்கு “தொட்டு” என்ற செட்டப்பு?? சாதாரண சந்திப்புக்கும், கைகுலுக்களில் தொடங்கி அதே மாதிரி கை குலுக்கி முடியும் சந்திப்புக்கும் இருக்கும் வித்தியாசம் தான் அது.

இதே மாதிரி தொடர்ந்து வேறு என்ன வெல்லாம் இருக்கு??- இப்படி யோசிக்கலாமே?? ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரம் என்ன ஆகுமோ என்று ஏங்க வைத்த அந்தக் காலத்து சரித்திரத் தொடரின் “தொடரும்” மிகப் பிரபலம். சிறுகதை கூட ஹைக்கூ வடிவில் இருந்தால் தான் படிப்பார்கள் என்ற நிலை இன்று…(ஆமா..எந்த நம்பிக்கையில் நான் நீட்டி முழக்கி எழுதுகிறேன்??).

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இன்னும் சிந்துபாத் லைலா என்ன ஆனாள் என்பதை அறியத் தூண்டும் கன்னித்தீவு தொடரும்… தொடர்ந்து போவதில் சிக்கலும் உண்டு.. கழுதைக்குப் பின்னாலும் ஆபீசருக்கு முன்னாலும் அதிகம் போகக்கூடாது என்பார்கள்… எப்பொ உதைக்குமோ..?? கடிக்குமோ என்ற கவலை தான் காரணம்..

யாரோ பின்னாடி தொடர்ந்து வர்ரது மாதிரி இருக்கே…!!! திருப்பிப் பாத்தா…அட…நம்ம கம்பர்.. Happy Deepawali Mr Kambar அவர்களே… Thanks & Same to U… ஆமா இன்னெக்கி என்ன டாபிக் அலசல்?? ஒண்ணுமில்லை… ஆபீசர் எப்படி இருக்கனும்கிற டாபிக்… ம்…உங்க காலத்திலெ அதுக்கு அவசியம் இருந்திருக்காது..நீங்க போங்க..

அப்படி சொல்லிட முடியாது கிமூ… நீ எப்படி சுத்தி வளைச்சி என்னோட ரமாயணம் கொன்டு வர்ரயோ..அதே பாணியில் நானும் அதெப் பத்தி எழுதி வச்சிருக்கேன்.. போய் நல்லா தேடிப் பாரு கிடைக்கும்…

தொடர்ந்து தேட …அடெ… கெடெச்சது… ஒரு ராஜா எப்படி இருக்கனும்னு கம்பர் ராமர் வாயிலா சொல்றார். யார் கேக்கிறா?? சுக்ரீவன் தான்.. நாம கேட்டாலும் அது நமக்கு suit ஆகுற மாதிரி இருக்கு.. அப்பொ இன்னும் நல்லா பாக்கலாமா??

அறிவுள்ள அமைச்சனை பக்கத்திலெ வச்சிக்க
ஒழுக்கம் உள்ளவனை படைத் தலைவனா ஆக்கு
குற்றமில்லாத வேலையை மட்டும் செய்யி
தப்பான காரியம் பன்னாதே..
அமைச்சர்களை ரொம்ப தூரமும் வச்சிக்காதெ..ரொம்ப கொஞ்ச்சிக் குலாவவும் வேணாம்.
நீ எல்லார்க்கும் சாமீ மாதிரி இருக்கனும் கன்னு…
என்று செமெ அட்வைஸ் செய்றார்…

இப்பொ இருக்கும் ஆட்சியாளர்க்கும் ஆபீசர்களுக்கும் கூட இந்த அட்வைஸ் பொருந்தும் தானே..???

வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரொடும்
தூய்மை சால்புணர்ச்சி பேணித் துகளறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றித் தேவரின் தெரிய நிற்றி.

நீதி: ஃபிரியா கெடைக்கும் எல்லாமே தரம் இல்லாதது என்று விலக்கி விட முடியாது.. இந்த ஃபிரியா கெடைச்ச அட்வைஸ் கொஞ்சம் யோசிச்சி பாருங்க.

தேடல் தொடரும்…