கையும் ஓடலை, காலும் ஓடலை = பசலை


[கார் நாற்பதில் கம்பராமாயணம் -16]

சமீபத்தில் ஒரு காதல்ஜோடியோடு பேசினேன். கரொணா காலத்திலும் சந்திப்பு எல்லாம் நிகழ்கிறதா? ‘அவரால் எனக்குக் கொரோணா வந்தாலும் அதை மகிழ்வோடு ஏற்பேன்’. (அட்றா… அட்றா… இதே உரையாடல் திருமணத்துக்குப் பின்பும் நீடிக்குமா என யோசித்தேன். – எல்லாருமே நம்ம மாதிரியே இருப்பாகளா என்ன? – ரொட்டிக் கட்டையுடன், பதில் சமையல் அறையிலிருந்து வந்தது) ஆனா வள்ளுவரும் இதே மாதிரியான பதில் சொல்லி இருக்கார். என்ன கரோணாவுக்குப் பதிலாக, பசலை. அவ்வளவு தான்.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

‘அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது ‘.வள்ளுவர் காலத்துக் காதலியின் முனகல் இது. நோய் வந்தாலுமே கூட அதனை மகிழ்வோடு ஆதரிக்கும் காதலித்தனம் இந்தக் கொரோணா காலத்திலும் நீடிக்க வேண்டும்.

பசலை நோய் என்பது தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமே காப்புரிமை பெற்றது அல்ல. உலகில் உள்ள காதல் கொண்ட எல்லாப் பெண்களுக்குமே பொருந்தும் (லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், மும்தாஜ் ஷாஜகான் இப்படி எல்லா காதலிகளுக்கும். அம்பிகாபதி, அமராவதியையும் சேத்துக்கலாம். உங்களுக்கு வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு கண்கவர் காதலிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்).

இந்தப் பசலைப் புராணத்தை அதிகமா தமிழ் இலக்கியங்கள் மட்டுமே பாடியதால், இது ஏதோ நம்ம சேலை கட்டிய தமிழ் பெண்களுக்கான நோய் என நினைக்கிறாய்ங்க. (எப்படி ஹிந்தியை என்னமோ தமிழ் மக்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் போன்றது தான் – சும்மா ஒரு உதாரணம் தான்)

இந்தக் காதல் நோய் , தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு விதமான சோகை நோயாம். (Hypochromic Anemia or Chlorosis or Green Sickness என்று விளங்காத மொழியிலும் சொல்வர்). இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். (கல்யாணம் ஆன பிறகு எல்லா கணவன்மாரின் முகமும் இப்படி ஆவதை சங்ககால இலக்கியமும், பாகுபலி இலக்கியமும் கூடச் சொல்லலை)

சங்க காலப்பாடல்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு எல்லாத்திலும் பசலையை பசப்பு என்றும் சொல்றாய்ங்க. சங்ககாலம் மட்டுமில்லாது, சங்கமருவிய காலப்பாடல்களிலும் பசப்பு பகரப்படுதாம்.

அது எல்லாம் சரி.. அதுக்கு மருந்து தான் என்ன? கலித்தொகை தான் அதுக்குக் களிம்பு தருது.

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே

‘படை செல்லச் செல்ல எதிராளிகள் போவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்குமாம்’. யாரால் வியாதி வருதோ, அவரால் தான் அது தீருமாம். நல்லா இருக்கில்லெ?

சரி… இப்படியே நம்ம கார்நாற்பதுக்காரர் என்ன சொல்றார் எனவும் பாத்துடலாமே…

குளிர்ச்சி மிக்கக் காடு. அங்கே கருப்பா (பயங்கரமா மட்டும் இல்லை) இருக்கும் வரகுப் பொரி மாதிரி (நல்ல மூடு இருக்கும் போது இந்தச் சிறு தானியப் பொரி செஞ்சி தரச் சொல்லணும் என் இல்லத்தரசியிடம். நீங்களும் உங்க மனைவிகளிடம் கேட்டுப் பாருங்க கரண்டி கையிலில்லாத நேரமாப் பாத்து கேளுங்க தயவு செய்து) இருந்த தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தனவாம். தலைவன் செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்குப் பசலை அதிகரித்ததாம். இதோ பாட்டு…

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

கார்நாற்பது முடிந்ததும் கம்பன் வந்து உதித்தார். ”என்ன இது? காலையில் தலைக் கவசம் போடாமல் இரு சக்கர ஊர்தியில் போன மாதிரி தெரிந்ததே?”

”ஆமாம் ஐயா… தப்பு செய்தாலும் கூட, என் பார்வையில் எத்தனை பேர் அப்படியே வாராங்க என்று தான் நான் பாத்துட்டே வந்தேன். பல பேர் வந்தாங்களே அப்படி…”

இப்படித்தான் நானும் பசலை மேட்டர் பத்திச் சொல்லி இருக்கேன். போய்ப்பாரு கிட்டு… அன்பாய் விரட்டினார் கம்பர்.

இராமன் காட்டுக்குப் போகும் இடம் அது. பலரது பார்வை இராமன் மேல்படுது. (அதில் மங்கையரது, அதுவும் இளமங்கையரது பார்வையும் அடங்கும். கிட்டத்தட்ட எம் ஜி ஆர் மாதிரி – இப்பொ புரிஞ்சிருக்குமே?)

வெற்றியைத் தரும் கொல்லும் செயலுடைய (கூர்) வேல்போலவும். எமன் போலவும் கொடுமை செய்யும் கண்களையுடைய மயில் போன்றவளாம் ஒரு மங்கை; வளைவதனால் வில்லின் தன்மை பொருந்திய புருவங்களிலும், நெற்றியிலும் வேர்வை ஒழுகவும் (பிரிந்தார்க்குத் தோன்றும்)பசலை நிறம் தன் உடல் முழுதும் பரவி விளங்கவும், தன்மனம் தளரவும் நின்றவளாய், தன் மனம் இராமனுடன் சென்று சேர்ந்ததனால், அவனுடன் செல்லும் பரிவாரங்களையும் காணாதவளாய் வள்ளலாகிய இராமபிரான் தனியாகவா செல்லுகின்றான்? என்று கூறி. (அவனது தனிமைக்கு) வருந்தினாளாம், கம்பர் சொல்கிறார்.

வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப. உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள். –
கொற்றம்செய்கொலை வேல் என்னக் கூற்று எனக் கொடிய கண்ணாள்-
மற்று ஒன்றும் காண்கிலாதாள் ‘தமியவனோ வள்ளல்?’ என்றாள்.

படையே தெரியாமெப் போச்சாம் அந்தப் பசலை படர்ந்த மங்கைக்கு. அழகா இருக்கில்லே…

ஆமா ஆண்களுக்கு அந்தப் பசலை இல்லையா? மைக் மோகன் படத்தின் பல பாத்திரங்களில் வந்திருக்கே… பசலன்னு வச்சிக்கலாமோ?

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (09-10-2020)

சின்ன வீடா வரட்டுமா?


chinna veedaa

ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்வது என்பது இப்போதெல்லாம் ரொம்பவும் சகஜமாகி விட்டது. மதம் விட்டு, ஜாதி தாண்டி, வெளிநாடு வாழ்பவரிடம் உள்ளம் பறொகொடுத்து.. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இந்த “ஓடிப் போய்” என்பது மட்டும் ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. உண்மையில் அவர்கள் “ஓடித்தான்” செல்கிறார்களா? யோசித்தால் சிரிப்பு தான் வரும். ”ஓடல்” என்பது இங்கே, வேகமான, ரகசியமான நடவடிக்கை அல்லது யாருக்கு தெரியனுமோ அவர்களுக்கு மட்டும் தெரியாமல் நடக்கும் சேதி. யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் செய்தி, பலருக்கும் தெரிந்திருக்கும் என்பது அவர்களுக்கு மட்டும் தெரியாது.

“கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா;
ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?” என்று பாட ஆரம்பிக்கும் பாடல் செம ஹிட்டு. எல்லா பட்டி தொட்டிகளிலும் (ஆமா அப்படிப்பட்ட தொட்டி எங்கே தான் இருக்கு?) பட்டிமன்றங்களிலும் அந்தப் பாடல் அடி வாங்கினாலும் கூட, மக்கள் மனதில் அந்த இசை நன்கு பதிந்து விட்டது. தமிழ் இலக்கியங்களிலும் இப்படிப் பட்ட திருமண முறை இருந்தது என்று சொல்லப் போய், இந்தப் பாட்டுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தும் கிடைத்து விட்டது.

அவனவன் ஒரு கல்யாணம் செஞ்சிக்கிறியா? என்று கேட்டாலே, ஐயோ கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தக் காலத்திலும் கூட அரசு உத்தியோகத்தில் சேரும் போது ஒரு மனைவி தான் இருப்பதாய் உத்திரவாதம் தர வேண்டும் என்பது விதி. (திருமணம் ஆகாதவற்க்கு இந்தச் சட்டம் செல்லாது.. என்பதை சொல்லவும் வேண்டுமோ??) ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் அரசு ரொம்பவும் கவனமாய் இருக்கு.. (ஆமா குடுக்கிற சம்பளம் ஒரு பொண்டாட்டி வச்சி வாழவே பத்தாது. இதிலெ சின்ன வீடு வேறெயா? என்ற கவலையும் அரசுக்கு இருக்குமோ?)

இஸ்லாமியர்களுக்கு ஜாலிதான். தலாக் என்று மூன்று முறை சொல்லிவிட்டால் செமெ ஜாலி என்று யாரவது நினைத்தால், அது தான் இல்லை. அது கணவன்மார்களுக்குத் தரப்பட்ட சுதந்திரம் என்பதாய் இல்லை. பெண்களுக்குத் தரப்பட்டிருக்கும் பாதுகாப்பு என்பது சமீபத்தில் தெரிய வந்தது. ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி ஒரு பிரச்சினை வந்தது. மூன்றாம் முறையாய் சொல்லும் அந்த வார்த்தையினைப் பிரயோகம் செய்யும் போது, காதால் கேட்ட இருவர் சாட்சியாக வேண்டுமாம். அப்படி சாட்சியாய் சொன்னவரை விசாரித்த போது அப்படி கேட்கவில்லை என்று சொல்ல, தலாக் தலாக் ஆகிப் போனது என்பது தனிக் கதை.

முன்பெல்லாம் கல்யாணம் ஆனவர்கள்; கல்யாணம் ஆகாதவர்கள் இப்படி இரண்டு பிரிவுகள் தான் இருந்தன. பின்னர் ஒரு பிரிவும் சேர்ந்து கொண்ட்து. அதாவது சேர்ந்தே இருப்பர் கல்யாணமா?? மூச்… பேச்சே கிடையாது. இப்பொ சமீபகாலமா மீடியாக்களில் கலக்கும் சமீபத்திய ப்து வரவு. கல்யாணம் ஆகி இருக்கும். ஆனால் சேர்ந்து வாழாமல் இருப்பர்… ம்… அப்பா… இப்பொவே கண்ணெக் கட்டுதே…!!!

அரசுத் துறைகளில் இரண்டு விதமான ஆட்கள் இருப்பார்கள். வேலையினைச் சரியாய் செய்பவர்கள். அதே வேலையினைத் தப்பாய் செய்பவர்கள் இப்படி இரண்டு குரூப். சரிய்யாச் செய்யிரேன் பேர்வழின்னு ரூல்ஸ் தெரியாமெ, அல்லது தப்பு தப்பா ரூல்ஸ் பேசி, தானும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பும், மெதாவிகள் இருப்பார்கள். அதே போல், தப்பான காரியத்தை தப்பே தெரியாதமாதிரி செய்யும் எம காதகர்களும் இருப்பார்கள். தப்பெத் தப்பா செய்யாட்டி, தப்பு தப்பே இல்லெ என்பது எழுதப்படாத விதி. அரசு ஊழியர்கள் பலரின் சின்ன வீட்டு சமாசாரங்கள் இந்த தப்பை, சரியாக செய்யும் லாஜிக்கை நம்பித்தான் ஓடுது.

தில்லியில் ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. கேஸ் ஸ்டடி என்று சொல்லி ஒரு வில்லங்கத்தை அரங்கேற்றி உங்களின் கருத்து என்ன? என்று அலசுவது தான் பயிற்சியின் அன்றைய வகுப்பின் நோக்கம். ஓர் அரசு ஊழியரை ஒரு தண்ணியில்லாக் காட்டு ஏரியாவில் போஸ்டிங் போட்டாகளாம். கண்ணு கலங்கிப் போனாராம். (நம்ம ராம்நாட் ஆட்களுக்கு எங்கெ போனாலும் சொர்க்கம் தான்.) கதறியபடி போனவருக்கு ஒரு இளம்பெண் ஆதரவாய் பேச, மனைவி என்று சொல்லிக் கொள்ளாமல் மனைவிக்கான எல்லாம் பெற்றாராம். தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதையும் சொல்லி விட்டாராம். (என்ன ஒரு நாணயத்தனம்… வில்லத்தனத்திலும் கூட??) போஸ்டிங் டென்யூர் முடிந்து இதோ வந்திடுவேன் என்று கம்பி நீட்டி விட்டாராம்…

போன மச்சான் திரும்பலையே என்று அவர்கள் ஊர் பாஷையில் புலம்பிக் கொண்டிருந்த அந்த அபலைக்கு ஆதரவு தர கூகுலாண்டவரை உதவிக்கு தேடினாராம் ஓர் இளைஞன். அரசுத்துறையின் தலைமை அதிகாரியின் முகவரி கிடைத்ததாம்.. காதலை உருக்கி எல்லாம் எழுதாமெ, ”ஐயா, இந்த அபலைப் பெண்ணுக்கு ஒரு கடுதாசி எழுதச் சொல்லுங்க” என்று கெஞ்சி (கவனிக்க கொஞ்சம் கூட கொஞ்சாமல்), கடைசியில் மனைவி (தாலி கட்டாத என்று எழுதாத) என்று முடித்திருந்தாராம். இந்தச் சூழலில் என்ன செய்வது என்பது தான் பயிற்சி வகுப்பின் கேள்வி.

இரண்டாம் கல்யாணம் என்று தெரிந்த காரணத்தால், உடனே அவர் மீது துறை சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏகமனதாய் அனைவரும் சொல்லி முடித்தனர். என் வாதம் சற்று வித்தியாசமாய் வைத்தேன். (நமக்கு மட்டும் ஏன் இப்படி ரோசனெ போவுது?). வந்த கடிதம் ஒரு வேண்டுதல். எந்த விதமான புகாரும் அதில் இருப்பதாய் எனக்குப் படவில்லை.. (ஐயா..நான் சின்ன வீட்டுக்கு சப்போர்ட் செய்கிறேன் என்று மட்டும் தப்பா நெனைச்சிடாதீங்க ப்ளீஸ்). நடவடிக்கை என்று வந்தால், அது பெரிய வீட்டிற்கும், சின்ன வீட்டிற்கும் சிரமமாய் முடியும். ஆக ஒரு நடவடிக்கை, யாருக்குமே பயனில்லாத போது அது தேவையா? என்று கேள்வியினை வைத்தேன். அந்தமான் சொல், தில்லியின் அரியனை அம்பலத்தில் ஏறவில்லை..

எல்லாம் விடுங்க…********** இந்த நம்பருக்கு மிஸ்ட் கால் குடுங்க… அங்கே திருவாளர் கம்பர் இருப்பார். அவர் நம்ம ராமனுக்கே ரெண்டாம் கல்யாணம் செய்ய ப்ளான் செய்கின்றார்… அடப்பாவிகளா… ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்ல வந்த கம்பரை இப்படியா வம்புக்கு இழுப்பது என்று கேட்பது தெரியுது. சின்ன வீடா வரட்டுமா என்று யாராவது கனவிலெ கேட்டாக்கூட லேது லேது என்று சொல்லுவேன் என்று ராமனே வாக்குக் கொடுத்திருக்கார். அவருக்குப் போய் ரெண்டாம் கல்யாணமா என்று கேட்பது என் காதுக்கும் கேக்குது..

ஆனா யோசிக்கிறது யாருன்னு கேட்டா பேஜாராயிடும்… அட நம்ம தசரதன் அன்னாச்சி… இப்பொ சொல்லுங்க எப்படீன்னு? ஜோரா.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க.. கைப்பிடித்த கணவர்க்கு எப்படி அனுசரனையா இருக்கிறது கற்புன்னு பெண்டிருக்கு சொல்லப்பட்டதோ, அப்படி இந்த நிலகமளை ராமனுக்கு கட்டி குடுத்திடனும் என்று தயரதன் நெனெச்சாராம்… ஐய… அம்புட்டுத்தானா…. நீங்க நானு… அப்புறம் இந்த உலகமே வில்லங்கமா இருக்கலாம்.. அதுக்காக நம்ம கம்பனை அந்த லிஸ்ட்லெ சேக்க முடியுமா என்ன? வாங்க நைஸா அந்த பாட்ட்டையும் பாத்திடலாம்..

கன்னியர் அமைவரும் கற்பின், மா நிலம்
தன்னை இத் தகைதரத் தரும்ம் கைதர
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்;
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்

வேறு ஏதாவது வில்லங்கம் மாட்டாமலா போகுது?? யோசிப்போம்..

பொய் சொல்லக் கூடாது காதலி…


காதலில் பொய் சொல்லக் கூடாதா? அல்லது காதலியிடம் பொய் சொல்லக் கூடாதா? என்று ஒரு கேள்வி வந்தால், எல்லாரும் சொல்லும் ஒரே பதில் “இரண்டிலும் பொய் சொல்லலாம்”. ஏனென்றால் காதல், கத்தரிக்காய், கவிதை இதெல்லாம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளரும் புலவர் பெருமகனார்களின் வளர்ப்புப் புத்திரிகள். கவிதைக்குப் பொய் அழகு. கவிதையில்லையேல் காதல் இல்லை. காதல் சொல்லுமிடம் (அல்லது செல்லுமிடம்) காதலி. அப்பொ பொய் செல்லுபடியாகுமிடம் காதல்… (அப்பொ, கல்யாணம்?? ’பொய் சொல்லி செமெயாய் மாட்டிக் கொள்ளுமிடம்’ என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்)

காதல் கசக்குதய்யா… என்று வர வர பாடினாலும், அதென்ன பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்குவது போல் காதலியை இறக்க முடியுமா என்ன? அப்பொ சுகமான காதல் என்பது சொல்லாமலே வரணும். (பொய் சொல்லாமலும், என்று நான் சொல்கிறேன்).

காதலன் காதலியிடம் சொல்லும் பாட்டு, இப்படி வருது:

பொய் சொல்லக் கூடாது காதலீலீலீலீ……
(அப்படியே பொய் சொல்லிவிட்டாலும்..)
பொய் சொன்னாலும் மெய் தான் அது காதலி..

ஆக பொய்க்கும் காதலுக்கும் தொடர்பு இருக்கு என்பதை மட்டும் சொல்லிபுட்டு முன்னே போவோம்.

ஆனால் அந்த காதல் வயப்படும் போது சொல்லிய பொய்கள், கல்யாணம் என்ற ஒரு பந்தம் வந்த பிறகு காத்து இறங்கிய பலூன் ஆக புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. இங்கெ தான் காதல், கல்யாணத்தில் வந்து தடம் புரளும் இடம். சரி அவர்கள் சண்டை போடட்டும், நாம கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு, அப்படியே வெளியே மேய்வோம்…

வாழ்க்கைக்கும் பொய்க்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு? உண்மை விளம்பிகள் கோஷ்டி (ரொம்பக் குறைவு என்றாலும் கூட) சிரமத்துக்கு ஆளாகி இருக்கு. பொய்யும் புரட்டும் சொல்லி புரள்பவர்களிடம் செல்வலெட்சுமியும் பெட்டி(யி)ல் கூட இருக்கிறாள். காந்தீஜி பாத்த ஹரிச்சந்திரா படமோ நாடகமோ, நமக்கு சொல்லும் பாடமே, உண்மையா இருக்க நெனைச்சா… தனக்கு மட்டுமில்லெ, பொண்டாட்டி புள்ளெகளுக்கும் கஷ்டம் தானுன்னு இப்பொவும் புரியுது. ஆனா, அந்த ஆளுக்கு மட்டும் ஏன் புரியலெ? ஆனா அப்படி மாத்தி யோசிச்சதாலெ தான் மோஹன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லலாம்.

உண்மைக்குக் காலம் இருக்கு என்று திரி இடியட் (தமிழில் நண்பன்) படத்தில் வரும் இண்டர்வியூ காட்சிகளில், கைதட்டலுக்கு வேண்டுமானாலும் கை கொடுக்கலாம். உண்மையில் உண்மை, வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும்? இது உண்மையிலேயே கஷ்டமான கேள்வி தான். ஒரு கேஸ் (எந்த கேஸு என்று வில்லங்கமா கேள்வி வேண்டாம்) பாக்கலாம்.

ஓர் அழகான பருவப் பெண்ணை சில ரவுடிகள் துரத்துகிறார்கள். (என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எத்தனை படம் பாத்திருப்பீங்க??). அந்த வாலிப மங்கை உங்க வீட்டிலெ வந்து ஒளிஞ்சிக்கிறா… (நீங்களும் ஹீரோ ஆக இதோ ஒரு சான்ஸ்..) ரவுடிகள் உங்க வீடு தேடி வர்ராய்ங்க… கேக்கிறாய்ங்க.. நீங்க அப்பொ என்ன சொல்லுவீங்க??

உண்மை விளம்பியாய் இருப்பீர்களா? அல்லது ”பொண்ணா? இங்கேயா? நானே பொண்டாட்டி ஊருக்க் போயிட்டான்னு கவலையோட இருக்கேன்.. வாங்க.. வாங்க..நானும் உங்க கூட வந்து தேடறேன்..” என்று சொல்வீர்களா?? இப்படிச் சொன்னா நீங்க நல்ல புள்ளெ… நம்மன் ஐயன் வள்ளுவரும் நம்ம கட்சிங்க…
உண்மைக்கு 2000 வருஷத்துக்கு முன்னாலேயே டெபனிஷன் குடுத்துட்டாரு அய்யன். யார் ஒருவருக்கும் தீமை நடக்காதவாறு சொல்லப்படும் எந்த ஒரு சொல்லும், (அதில் பொய்யும் அடக்கம் தான்) உண்மை என்றே கருதப்படும்.

கம்பரிடமிருந்து பேஸ்புக்கில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. “நாங்களும் சொல்லி இருக்கோம்லெ…” என்று. அட நம்ம கம்பர்கிட்டேயும் போய் கேப்போமே என்று பதிலுக்கு ”சொல்லுங்கண்ணே..சொல்லுங்க..” என்றேன்.

ராமன் பொய் செய்த காட்சி தெரியுமா? – இது கம்பன்.

கம்பன் பாட்டே, படித்தவுடன் புரியாது. (யாராவது கோணார் நோட்ஸ் மாதிரி எழுதி வச்சாத்தான் புரியும்). இவரது பேஸ்புக் எழுத்துக்கும் இவர்கிட்டேயே கேப்போமே??)

”பொய் செய்த….??? புரியலையே ஸ்வாமி!!!”

கம்பர் பதில் உடனே வந்தது. (இந்தப் பாமரன் மேல் கம்பருக்கு கொள்ளெப் பிரியம்)
”எல்லோரும் பொய் சொல்லுவார்கள். இராமன் பொய் சொல்லி அதைச் செய்தும் காட்டி இருக்கிறார்.”

என் கேள்வி தொடர்ந்தது. “அப்பொ அது தப்பில்லையா?”

”நாலு பேத்துக்கு நல்லது செஞ்சா…எதுவுமே தப்பில்லை…(தென் பாண்டி சீமையிலே… தேரோடும் வீதியிலே)” சொல்லி விட்டு கம்பர் ஆப்லைனுக்கு போய் விட்டார்.

நான் தேட ஆரம்பித்தேன். சாதாரணமா எவனாவது தப்பு செஞ்சாலே, அதெ நோண்டி நோண்டிப் பாப்போம். அப்பொ ராமனே செஞ்சா..??? உடுவோமா?? கெடெச்சது கைக்கு.

ராமன் காட்டுக்குப் போகும் இடம். ராமன் இருக்கும் இடம் சீதைக்கு மட்டுமா அயோத்தி? [மாமனார் வீட்டில் டேரா அடிக்கும் போது நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம், ம்ம்ம்ம்ம் சீதை இருக்குமிடம் தான் ராமனுக்கும் மிதிலை]. எல்லா மக்களுக்கும் அதே நிலை தான். மக்கள் நினைத்தார்களாம். நாமும் ராமர் கூடவே போயிட்டா… போற இடமே அயோத்தியா அல்லது மிதிலையா ஆயிடுமே?? அவங்க சந்தோஷமா இருப்பாகளே… என்று நினைத்ததாம் அக்கூட்டம். (அந்தக் கூட்டம் தானே வந்த கூட்டம், கட்டிங், பிரியாணி பொட்டலம், செலவுக்கு மேல் காசு இதெல்லாம் வாங்கி வந்த கூட்டமில்லை)..

எல்லாம் தெரிஞ்ச நம்ம ராமனுக்கு, மாஸ் சைக்காலஜியும் தெரிந்திருக்கு. ஒரு சின்ன ஐடியா (ராமர் மக்களை ஏமாத்தினா, அதுக்குப் பேரு ஐடியா… நாம செஞ்சா ஐ பி கோ செக்சன்… ஜாக்கிரதை). காலங்காத்தாலெ ரதத்தை அயோத்தி போற மாதிரி போக்கு காட்டி (நல்லா தடம் தெரியும் படி பொய்யா செஞ்சி, அப்படியே காட்டுக்கு ஓடிப் போயிடலாம்). அது சாட்சாத் அந்த ராமனே சொல்லி செஞ்சதுங்க..
நான் சொன்னா நம்ப மாட்டிங்க… கம்பர் சொன்னா நம்பிடுவீங்க தானே..

கம்பர் வார்த்தைக்கு இந்த வம்பனின் உரை இதோ.. பேரன்பு கொண்ட ரசிகசிகாமணிகளை திசை திருப்புறது கஷ்டம். அவங்களை இங்கேயே விட்டுட்டு நானு ஜகா வாங்குறதும் அம்புட்டு நல்லா இல்லெ. நம்ம ஆளுங்க நல்லா தூங்கிட்டு இருக்கிறச்சே, காரை (அதாங்க தேரு) ரிவர்ஸ் எடுத்து, அயோத்தி பக்கம் போக்கு காட்டிட்டு வேற ரூட்லெ போயிடுவோம். காலங்காத்தாலே அதெப் பாத்து எல்லாரும் பெட் டீ சாப்பிட அயோத்தி ஓடியிருவாய்ங்க… (அப்புறம் அவங்க அவங்க பொண்ட்டாட்டிகளை புரிஞ்சிக்க இன்னொரு டீ சாப்பிட்டு நம்மளை மறந்திடுவாய்ங்க…) இட் ஈஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட் என்று டிரைவரிடம் சொன்னதாய் கம்பராமாயணத்தில் வருது.

பின்னாடி யாரோ நிக்கிறாகளேன்னு பாத்தா… என் பையன்… எல்லாம் வக்கனையா படிச்சிட்டு, “டாடி எனக்கு ஒரு டவுட்டு” என்றான். குத்து வாங்கும் தூரம் தள்ளி நின்று விபரம் கேட்டேன். “இந்த ராமன் பொய் செய்ர சீன்லெ இலக்குவன் உண்டா??” நான் பதிலாய், “தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்றேன்.

”அப்பொ அதே டெக்னிக்கை, அதாவது சீதையை இலக்குவன் தனியே விட்டுப் போகும் போது செஞ்சிருக்கலாமே? ராமரைத்தேடி போற மாதிரி போயி அப்புறம் மறைஞ்சி இருந்துட்டு (காடு தானே!!), கொஞ்ச நேரம் போனப்புறம், ராமன் கூட திரும்பி வந்து, ஜாலியா கர்சிப் வச்சி, மொகம் தொடெச்சிட்டு வர்ரா மாதிரி வந்திருக்கலாமே!!! சொல்லுங்க டாடி சொல்லுங்க..” குத்த வருவதற்குள், ”கொஞ்சம் டயம் கொடு… இப்பத்தான் சிங்கப்பூர் பொறியாளர் எழுதிய இலக்குவன் பற்றிய புக் ”அண்ணையின் ஆணை” கையிலெ இருக்கு படிச்சிச் சொல்றேன்…” (அப்பா…பசங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி தாவு தீந்து போகுது…)

சரி அப்படியே கம்பனின் அசல் பாட்ட்டைப் போட்டு இன்னெக்கி வணக்கம் வச்சிறலாம்.. இதோ பாடல்..:

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனல் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்.

நீதி: ராமன் என்ன??? நீங்களே கூட பொய் சொல்ல்லாம்..செய்யலாம். ஆனா அதுலெ ஒரு நீதி, நியாயம் தர்மம் இருக்கணும். சுருக்கமா..ஒன்ஸ் எகெய்ன்… நாலு பேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லெ.. பொய்யும் கூட.

குடுத்து வைக்காத ஆளு


நெகிழ்வான தருணங்கள் என்று சில, வாழ்க்கையில் வந்து போகும். சிலருக்கு சலிப்பான தருணங்கள் என சில, வாய்ப்பதும் உண்டு. ஒரு பையன் அப்பா கிட்டெ கேட்டானாம். “பெத்த கூலிக்கு வளத்துட்டெ. வளத்த கூலிக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டே. கல்யாணம் செஞ்ச கூலிக்கு இந்தா, புள்ளைகளையும் வளத்து ஆளாக்கு”. எப்படி இருக்கு கதை? அப்பன் நொந்து நூலாயிருக்க மாட்டாரு???

படங்களில் அதிகம் நெகிழ்ச்சியைத் தருபவர், சமீப காலமாக திரு சேரன் அவர்கள். அவர் அந்தமான் வந்திருந்த போதும் கூட சில நெகிழ்வான சம்பங்கள் நடந்தன.. ரங்கத் என்ற தீவிற்கு அவரை அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில், அவர் இறங்கி நடக்க, சிலர் அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோகிராஃப் (சேரன் கிட்டேயேவா??) கேட்டனர். திடுதிப்பென வந்ததால் சிலர் ரூபா நோட்டில் கையெழுத்து கேட்டனர். “என் தகுதியோ, பதவியோ, இந்த ரூபா நோட்ட்டில் கையெழுத்து போடும் அளவு வளர்ந்து விடவில்லை” என்று மறுத்தார்.

பின்னர் விழா மேடையில் சேரன் அவர்களுக்கு ராஜாவின் சிம்மாசனம் மாதிரி சேரும், மற்றவர்களுக்கு சாதாரண சேரும் போட்டு வைத்திருந்தனர். அதைப் பாத்தவுடன் தனக்கும் மற்றவர்கள் மாதிரி சாதரண சேர் மட்டும் இருந்தாலே போதும் என்று பவ்யமாக மறுத்தார். கடைசியில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சேர் தூக்கி வந்து போட்டு சமாளித்தார்கள். (சேர் என்றால் சேரனுக்கு ஆகாதோ??) அவனவன் அந்த மாதிரி நாற்காலி கிடைக்க தவம் கிடக்கிறாய்ங்க.. தவமாய் தவமிருந்த சேரன் அதை ஒதுக்கியது நெகிழ்வாய் இருந்தது.

பாடல்கள் சில அதே மாதிரி நம்மை கிறக்கத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். சமீபத்தில் நான் ரசித்த நல்ல வரிகள்..“…. உன் அலாதி அன்பினில்நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்…”. மழையில் நனையலாம். அன்பு மழையில் நனைய ஆசைப்படலாம். ஆனா… அதே மழையாவே ஆகிவிடுதல்… பே..பே..பேராசை இல்லையா அது??

ஒவ்வொரு பாஷைக்கும் சில வார்த்தைகள் அழகு. இப்படித்தான் தில்லிக்கு 1989 களில் போய் “மயூர் விகார்” எங்கே இருக்கு என்று ஒரு வட நாட்டவரைக் கேட்டேன். “தில்லியில் அப்படி ஏதும் “விகார”மான இடங்கள் இல்லை” என்று கோபமாய் ஹிந்தியில் சொல்லி விலகினார். மயூர் விஹார் என்று சொல்லி இருக்கணுமாம். ம்..ம்.. இந்த ஹிந்தி ஒரே கொழப்பம் தான். “பல்லு கூசுது”, “ஆவி பிடிக்க மருந்து” இதெல்லாம் ஹிந்தியில் எப்படி சொல்வது என்று இன்னும் விளங்கவே இல்லை.. என்ன..??… “அப்படியே கிருகிருங்குது”, “நண்டு ஊர்ர மாதிரி இருக்கு”… இதுக்கும் ஹிந்தியில் வேணுமா?? அய்யா சாமி… ஆளை விடுங்க… தமிழ் வாழ்க.

தமிழில் சூப்பரா ஒரு வழக்கு இருக்கு.. அவனுக்கு என்னப்பா?? “கொடுத்து வச்ச ஆளு”. இதை வேறு மொழியில், மொழி பெயர்ப்பது ரொம்ப கஷ்டம். இப்பேர்ப் பட்ட மகனை அடைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்பார்கள். தவம் செஞ்சி பெத்த புள்ளை என்பதும் ஓரளவு ஒத்துக்க வேண்டிய பொருள். எப்படியோ, தவம் செய்வது என்பது ஒரு பொருளை வேண்டி, இறைவன் முன் விடாப்பிடியா (தன்னை வருத்தி) இருந்து, இறைவன் வரும் வரை பொறுமையா இருப்பது. (நாம ஒரு மெயில் அல்லது போஸ்டிங்க் போட்டு கடவுள் Like or Comment கொடுத்திருக்கிறாரா என்று ஏங்கும் காலம் இப்பொ..)

மனுஷங்க ஏதாவது வேணும்னா கடவுளை வேண்டி தவம் செய்வாய்ங்க… (சில சமயம் அசுரர்கள் கூட செய்வாங்களாம்.. நமக்கு எதுக்கு அந்த வம்பு?). “கடவுளே சரியா தவம் செய்யலையோ!!” என்ற சந்தேகம், யாருக்காவது வருமா? வந்திருக்கே… அட அப்படி ஒரு சந்தேகம், நம்ம தமிழனுக்கு வந்திருக்கு, என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கடவுளையே சந்தேகப்படும் அந்தத் தைரியசாலி வேறு யாரும் இல்லெ. திருவாளர் கம்பர் தான் அவர்.

எங்கெங்கெயோ சுத்தி கடைசியில் கம்பரை இந்த மனுஷன் புடிச்சிட்ராருய்யா.. என்று புலம்புபவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் கடையில். பின்புறம் ஒரு சின்ன குறிப்பு இருந்தது இப்படி: “இப் புத்தகத்தின் நோக்கம், சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும், பெருமையையும் உணர வேண்டும் என்பது மட்டுமே”. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தகத்தின் பெயர். ஆசிரியர்: திவாகர். (அட!!! ஒரே நோக்கில் எழுதும் இவரும் நம்ம ஜாதியா?? அல்லது நானு அவர் ஜாதியா தெரியலை). அவரும் தமிழகத்தில் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து எழுதுகிறார். வித்தியாசமான் இன்னொரு ஒற்றுமை அவருக்கும் துறைமுகத்தில் தான் வேலை.

சரி நம்ம கம்பர் மேட்டருக்கு வருவோம். தவம் செய்வதின் நோக்கமே, தன் நிலையை உயர்த்துதல். அப்புறம் தன்னை பிறரும் நேசிக்கிற மாதிரி செய்தல். சீதை பிறந்து விட்ட காரணத்தினாலேயே, குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்பதும் தவம் செய்து(?) உயர்ந்தன. அதே மாதிரி நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து(?) உயர்ந்தன. ஆனா அசோக வனத்தில் சீதை தவம் செய்யும் முறைகளை பாக்க, ராமன் மட்டும் சரிய்யா தவம் செய்யலையோ?? இது கம்பர் கேள்வி. ராமர் கொடுத்து வைக்கலியோ? – இது இந்த வம்பன் கேட்கும் கேள்வி.

பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்காண நோற்றில் அவன் கமலக் கண்களே.

அவன் பெயிலாமாமே?? அட… இவனும் பெயிலாயிட்டானாமே… அட.. ராமா நீயுமா பெயில்??? இப்படி கேக்கிற மாதிரி இருக்கு இல்லெ?? இருக்கா? இல்லையா??