நாங்களும் கவிதையும் எழுதுவோம்லெ…


Image

சில தினங்களுக்கு முன்னர் அந்தமானில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியின் ஹிந்தி துறைத் தலைவரும், அதன் பேராசிரியரும் என் (அரசு) அலுவலகம் வந்தனர். தமிழ் கவிதை பாடும் வல்லமை பெற்ற இருவரின் முகவரி தேடி வந்தவர்கள் அவர்கள். ”நாங்களும் கவிதை எழுதுவோம்லெ” என்று சொல்ல, ”யாரோ வந்து கவிதை பாடுவதற்க்கு, நீங்களே வந்து கவிதை பாடுங்கள்” என்று நினைத்தோ என்னவோ, ”அதனாலென்ன பேஷா கவிதை பாடுங்க” என்பதாய் வந்தது கவியரங்க அழைப்பு.

அந்தமான் தீவின் தேசீய ஹிந்தி அகடமி தான் நிகழ்வினை நடத்தினாலும், பல மொழி  பேசும் மக்களை, கவிஞர்களை ஒன்றினைக்கும் பணி சத்தமின்றி (கைதட்டல் சத்த்த்துடன்) அரங்கேறியது. அழைப்பு வந்த பிறகு தான் தெரிந்தது, என்னை முன்னிலை வகிக்கவும் அழைத்திருப்பது. [நிகழ்சிக்குத் தலைமை வகிப்பவர், ஒரு அரை மணி நேரத்தில் போய் விடுவார். முழு நிகழ்ச்சியையும் நடத்த ஒரு பொறுமைசாலி தேவை என்ற கட்டாயத்தில் அவர்கள் என்னை ஏற்பாடு செய்திருந்தது பின்னர் தான் புரிந்தது].

ஹிந்தி, தமிழ், மலையளம், பஞ்சாபி, போஜ்பூரி, ராஜஸ்தானி, சோட்டா நாக்பூரி, பெங்காளி கவிதையில் பின்னிப் பெடலெடுத்தனர். ஏனோ தெரியவில்லை மராட்டியமும் ஆந்தரமும் கைவிரித்து விட்டிருந்தது.

காலை 10.30க்கு தொடங்கிய விழா என் கைக்கு முடித்து வைக்க வரும் போது 2.15. செவிக்கு உணவில்லாத போது தான் சிறிது வயிற்றுக்கு யோசிக்கப்படும் என்பது போல் எல்லோரும் (மாணவர்கள் உட்பட) இருந்தனர். (வாத்தியார் யாரும் வெளியே ஓடிவிடாதபடி கதவு பக்கத்திலேயே இருந்ததுதான் நிகழ்வின் வெற்றிக்கு காரணம் என்று ஒருவர் பின்னர் மேடையிலேயே போட்டு உடைத்தார்).

லேட்டா வந்தா சோறு கிடையாது என்று திருமதியிடமிருந்து எஸ் எம் எஸ் வர, நான் மைக் பிடித்தேன். இரண்டு நிமிடம் பேசி முடிக்க அறிவிப்பு வந்தது. ”அதெப்படி எல்லாரோட கவிதையையும் நான் கேட்டேன். என்னோட கவிதை கேட்க ஒரு அஞ்சு நிமிஷம் இருக்க மாட்டீகளா என்ன?” இப்படி நான் கேட்க, சரி என்பது கைதட்டல் வாக்கு மூலம் கிடைத்தது. [தலைக்கு மேலே போயிடுச்சி. ஜான் போனா என்ன? முளம் போனா என்ன? என்று எல்லாரும் நினைத்திருப்பார்களோ!!]

அப்படி பீடிகை போட்டு, ஹிந்தி மொழி பெயர்ப்பும் அப்பப்பொ செய்து வாசித்த கவிதை இதோ உங்கள் பார்வைக்கும்….

என் பார்வையில் கம்பர்

கவியால் உலகை வென்றவன் கம்பன்
கனவாய் இங்கே வந்தவன் இவ்வம்பன்
கம்பன் கவியால் அனைவருமே தஞ்சம்
வம்பன் பெயரோ இங்குதமிழ் நெஞ்சன்

வால்மீகி படைத்திட்ட இராமகாதையை
டப் செய்தவனல்ல கம்பன்
இராமரை அனுமனை வேட்டிகட்டி
ரீமேக் செய்தவன் கம்பன்

என்ன இல்லை இந்தக் கம்பனிடம்?

கம்பன் சொல்ல வந்தது ராமகதை
கனிவாய் சொன்னது தனிக்கதை
கண்டெடுத்துத் தந்தது இனியபாதை
கட்டுத்தறிக் காரனின் புதியகீதை

காரியம் ஆகணுமா? பிடியுங்க காக்கா..
காக்கா பிடிக்கத் தெரியலையா?
படியுங்க நம்ம கம்பரை.

முனுக்கென்றால் கோபம் வரும் முனி
அவர்  பேசிய வார்த்தைகள் விட
விட்ட சாபங்கள் தான் அதிகம்.
சாமானியர்கள் அவர் இருக்கும் திசையே
சாதாரணமாய் பாரார்.
இப்படி வந்தவர் விசுவாமித்ர முனி
சொன்னவர் வான்புகழ் கவி.

மனதினிலே பட்டதை பட்டென்று சொல்லாமல்
சற்றே அரசனை ஏற்றிச் சொல்லி
தனக்கென உதவிட சொன்னான் மெல்ல.
வரம் கெட வந்திடும் அரக்கியின்
சாவுமணி அடித்திட அங்கே- இங்கு
வாசல் மணி அடித்தவன் அம்முனி.

உன்னை விட்டா யாரிருக்கா
எங்களை இப்படிப் பாதுகாக்க?
கேட்டதெல்லாம் குடுப்பியாமே!
எங்கே ராமனை குடு பாக்கலாம்!

காக்கா பிடித்துக் கேட்ட முனி
பாலகனை கவர்ந்து சென்றது இனி
சீதைவசம் சேர்த்த கதை தனி
சேர்ந்து சொன்ன கவியெலாம் கனி.

                                                      *********

சாபம் வரமான கதையும் இனி சற்றே பார்க்கலாம்.
சங்கடங்கள் வரும்போது எதிர்கொள்வதெப்படி?

சாபமான சங்கடங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை
கோபமான தருணங்கள் தள்ளிடவும் முடிவதில்லை
இனமான உணர்வுகள் கேட்டு வாங்கிக் கொண்டதில்லை
உதயமான எல்லாமும் விரட்டிடவும் வழியில்லை.

வந்த பின்னர் என் செயலாம்?
இதுவன்றோ இன்னலான கேள்வி!
சாபம்தனை வரமாக்கிடு
விடையாய் தந்திட்டார் எம் கவி
வரமாய் தந்திட்ட வார்த்தை அது.

சாபம் சாபம் என்றே கலங்கிட்டால்
விலகிடுமோ அச்சாபம்?
வரமாய் அச்சாபம் நினைந்திட்டால்
அகன்றிடுமே துயர் அச்சமயம்.
வாழும் கலை தனையே
கம்பன் கதை வழியே
தந்தவன் அக்கவி.

தசரதன் அம்பு சிரவணன் மேல்படவே
புத்திரன் பிறந்து சிரமம் மிஞ்சிட
சிரவணன் தோப்பனார் சொல்லிய சாபம்
மைந்தன் இன்றியே மயங்கிய மன்னனுக்கு
வரமாய் பெற்றதாய் மகிழ்ந்தான் அரசன்.
ராமன் பெறா தாயிடம் சொன்ன சேதி அது.

*************

அரசின் உள்ளறைக்குள் நடப்பதை அறிந்திடவே
வந்த திட்டம்; அரசின் ஒரு சட்டம்; அதுவே
தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

பாமரன் கேட்ட தகவலதனை
பாங்குடனே பார்த்திட்டு,
வேண்டுவன எல்லாமே
முயன்றே முடிச்சிடனும்
முப்பது நாட்களில்.

தன்கைக்கு வந்திடவே ஒரு மாதாம் ஆகிடுமே
எப்படித்தான் தருவதிது?
யோசிக்கவே நேரமின்றி பலர்
யோசிக்காமல் கேட்ட கேள்வி இது.

அந்தமானில் அடியேன் தான்
அச்சட்டம் பயிற்றுவிக்கும் வளநபர் நான்.
கம்பன் கவிதனையே அங்கும் எடுத்தேன் யான்
முப்பது நாட்களில் முடிந்திட்ட கதை தனையே
முன்னுதாரணம் காட்டி சொல்லிட்டேன்.

ராமன் கூட்டிய பொதுக் குழுவில்
அனைவரும் கூடிச்செய்த முடிவு அது.
முழுதும் படித்தால் முடிவாய் தெரியும்
நிர்வாக ஆசான் கம்பன் என்று.

நாட்டை ஆளணுமா? பிரித்து ஆளு
நாம் கண்ட காட்சி.
நிர்வாகம் சீராக்க
பகிர்ந்தளி ஆளுக்கொரு பணி
கம்பன் கவியில் சொன்னதிப்படி.

அலக்கேஷன் கொடுத்திட்டா போதுமா?
செய்துமுடிக்க ஆள்படை வேண்டாமா?
தந்திட்டார் கேட்டதெல்லாம்.
தென்திசை போகச் சொல்லியே
தன்மனையாளைத் தேடிடவே
அனுமனை அனுப்பி வைத்தார்.

முப்பது நாள் கெடு வைத்தார்
தகவல்தனைத் தந்திடவே..
சேட்டலைட் மொபைல் கூகிள்
டைரக்‌ஷன் இத்யாதி இல்லாத காலமது
முயன்று முப்பது நாளில்
முடிந்திட்ட கதைதான்
கம்பன் சொல்லிய கதை.

தத்தம் அறையிலே உறங்கிடும் தகவலை
உறங்காது தந்திடவே நாம் உழைத்தால்
பாமரனும் ஆகிடலாம் அரசின் அங்கமாய்
உரக்கச் சொன்னவன் கம்பன்.

**************

அரசின் முடிவில் சங்கடம் எப்பொ வரும்?
மக்கள் மனம் கோணும் சமயம் அப்பொ வரும்.
முடியாட்சியில் தேவையில்லை அது
கம்பன் கவி கண்டால்
அங்கும் காணலாம் அதனை
முடியாட்சியில் குடியாட்சி தத்துவம்
முன்னரே தந்த மூத்தவர் கம்பன்.

மாற்றான் படை தாண்டி
வந்தவீரன் வீடணன்;
சேத்துக்கலாமா வேண்டாமா?
சிக்கலான கேள்வி அது.
மன்னருக்கு முடிவெடுக்க
முழுதுமாய் அதிகாரம்.
சொன்ன சொல்லுக்கெதிராய்
சொல்லாத அவர் கூட்டம்.

என்ன முடிவு செய்தார் ராமர்?
பாதிப்புக்கு உள்ளாகும் பொடியனை விளித்தார்.
நன்மை தீமை பாத்துரைக்கப் பனிந்தார்.

தெரியலையே என்றுரைத்தான்
காலாட்படை மயிந்தன் – அவன்
குரங்குப் படையின் முதல் வரிசை அங்கம்.

வீடணன் துரோகம் நமக்கெல்லாம் பாடம்
ஒருபோதும் வேண்டாம்
நமக்கும் வரலாம் அச்சோகம்.
சொன்னவன் வானர அரசன்.
ராமன் துணையுடனே
கெட்ட பெயரும் இலவச இணைப்பாய்
வாங்கி மரத்தின் பின் மறைந்து நின்று
வாலியை வென்ற சுக்ரீவன்.

அனுமன் தான் உன்மையினை
உரக்கச் சொன்னான்.
வானிலிருந்து கண்ட நல்சாட்சி.
ஆதாரமதனை அடுக்கடுக்காய் அடுக்கி
சொல்லால் வரவேற்பு வளையம்
அமைத்தவன் வால் வைத்த வானரம்
அகிலமே வணங்கும் அனுமன் கடவுள்.

கலந்து பேசி ஒரு முடிவு
கடைசியில் எடுத்தவன் ராமன்.
அரசு யந்திரம் எப்படி இருந்திட
அரசு யந்திரம் இப்படி இருந்திட
அன்றே சொன்னவன் எம்கவி கம்பன்.

கம்பரைப் போற்றுவோம்
வந்தனம் சொல்வோம்
இன்றைய நிகழ்வுக்கும்
ஏற்போம் அவரை.

மாடி மேலே மாடி…


“மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேத்து வைக்கும் சீமானே…” இந்தப்பாட்டு எந்தப் படம் என்று தெரியுமா?? தெரியாதவர்களுக்கான அடுத்த கேள்வி… ஒஹோ ப்ரடெக்ஷன் தெரியுமா?? அதுவும் தெரியவில்லையா?? காதலிக்க நேரமில்லை என்ற பாட்டு எந்தப் படத்தில் வரும்?? இதுவும் தெரியவில்லையென்றால் நீங்கள் சினிமா அறிவு கொஞ்சமும் இல்லாதவர் என்று தான் அர்த்தம்.

மாடி வீடு என்பது, பணக்காரத் தனத்தின் ஓர் அளவுகோளாக இருந்தது.. ஒண்டிக் குடித்தனத்தில் இருந்தவரை, என் தந்தையாரின் ஆசையே, மாடி வீடு கட்ட வேண்டும் என்பது தான். அது அவர் இருந்த வரை நிறைவேறவில்லை. நான் சின்னதாய் சொந்த ஊரில், பரமக்குடியில் மாடி வீடாய் கட்டிய போது அவர் இல்லை அதை பார்த்து ரசிக்க.

அடுத்த தலைமுறை பார்வையில் இது எப்படி இருக்கிறது?? அதையும் தான் கேட்டுப் பாக்கலாமே என்று, என் பையனிடம் கேட்டேன். பொடிப்பயலே.. மாடி வீடு, கார் இதெல்லாம் இருக்கு. நாம் ஏழையா? பணக்காரர்களா??

பையன் பதில்: இரண்டும் இல்லை. நடுத்தரம். மாடி வீடு, கார் இருந்தாலும் நடுத்தர வர்க்கம் என்ற நிலை தான் இன்றைக்கு. அல்லது நடுத்தர வர்க்கத்தினர், வீடு கார் வைத்திருக்கும் நிலைக்கு வந்து விட்டனர் என்பதுவும் தெரிகிறது.

ஏழாவது மாடியில் இருந்தாலும் FLAT ல் இருப்பவர் மாடிகளின் சொந்தக்காரர் ஆகிவிட முடியாது.. இவைகள் எல்லாம் இந்த நவீன காலக் கட்டாயங்கள்..

மாடிகளை ஆங்கிலத்தில் ஏன் தான் STORY என்கிறார்களோ… இன்னும் காரணம் விளங்கவில்லை.. அதிகமா கதை விடுகிறவர்களுக்கு தோதா கதைக்கும் மாடிக்கும் ஒரே பேரா வைத்து விட்டார்களோ…

ஏழை, மாடி வீட்டில் வாழ்ந்து விடலாம்.. ஆனால் மாடி வீட்டில் இருந்தவர்கள் திடீரென்று ஏழைகளாய் மாறும் விதி வித்தியாசமானது. அந்த ஏழைகளின் நிலை பரிதாபமானது. அரசுக் குடி இருப்பு மாடிகளில் வாழும் ஏழைகளும்(??) இருக்கத்தான் செய்கிறார்கள்..எல்லாம் இருக்கும்… ஆனால் எதுவும் சொந்தம் இல்லை..

நீ எதை நினைக்கிறாயோ… அதாகவே ஆகி விடுகின்றாய் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். நெனைப்பு தான் பொழைப்பெக் கெடுக்குது என்றும் கேட்டுருப்பீங்க.. Positive Thinking and Negative Impact பற்றி கூறும் செயல்கள் இவை.

பணக்காரர் ஒருத்தருக்கு ஏழை நினைப்பு பத்தி சுகி சிவத்திடம் சுட்ட கதை ஒன்று. (அவரும் இந்தக் கதையை வேறு எங்காவது சுட்டது தானே??)

ஒரு ஊரிலெ ஒரு பணக்காரர் இருந்தாராம். வெத்திலெ போடுவது இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். கொத்து கொத்தா வெத்திலை எப்பொழுதுமே தட்டுலெ வச்சிருப்பார். ஆனா உள்ளதில் அழுகினதை பொறுக்கி எடுத்து வாயில் போடுவார்…நல்லதை நாளைக்கு சாப்பிடுவோமே என்று வைப்பார்.. நாளையும் அதே மாதிரி அழுகினதை அழிப்பார் முதலில்.. நல்லது, நாளை சாப்பிடலாம்.. என்று சொல்லியே, நாட்களை கடத்துவார்.. ஆனால் அந்த “நாளை” என்பது வரவே வராது.. அப்படியே இறந்தும் போனார்.

இறுதிக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தது.. இறுதியாய் ஒரு தடவை அவருக்கு விருப்பமானதை வைத்து, காரியம் செய்ய நினைத்தார்கள். அவர்களுக்கு அந்த வெற்றிலை ஞாபகம் வந்தது. நல்ல கும்பகோணம் கொழுந்து வெத்திலையினை கொண்டு வந்தனர்.. நடுவில் ஓடி வந்த அவர் மகன், “அப்பாவுக்கு அழுகிய வெத்திலை தான் பிடிக்கும்.. அதை மட்டுமே வையுங்கள்” என்றாராம்..

இது தான் ஏழையாய் வாழ்ந்த மாடி வீட்டு பணக்காரனின் நிலையினைச் சொன்ன கதை.

மாடிகள் கட்டிடமான வீடுகள் தாண்டி இன்னும் சிலவாகவும் இருக்குதே..!!!

அடுக்கு மாடி மாதிரி… அடுக்கு மல்லி… மாடி பஸ்..(இன்னும் ஏறாத காரணத்தால் அதீத ஆசை ஏற இருக்கு)

ஆமா.. ஏதோ பொகையும் வாசனை வருதே… ரொம்ப சரி… கம்பப் புகை தான் அது.. இவ்வளவு இழுத்து, கம்பரை மட்டும் இழுக்காமல் விடுவோமா என்ன??

கம்பர் பார்வையில் இந்த மாதிரி ஒரு அடுக்கு தெரியுது.. யார் மூலமா?? அனுமன் மூலாமா பாத்ததை, 3ஜி கேமிராவில் பாத்தது மாதிரி பாக்காமலேயே எழுதுறார் கம்பர்.

அடுக்கு மல்லி மாதிரி, அடுக்கு தாமரை அவர் கண்ணில் தெரியுது. அது என்ன ரெண்டு தாமரைகள்? ஒன்று முகம். இன்னொன்று, அதை தாங்கி நிற்கும் கை (அதான் இது என்று சொன்ன கவுண்டமனி செந்தில் கதையா தெரியலை!!!).. எங்கே இந்த காட்சி??

சீதையை தேடப் போன போது கண்ணில் பட்ட சங்கதி தான் அது. அழகான மனைவி.. குற்றம் செய்த கணவர்.. அதனால் பிரிந்த அவளின் சோகம்.. மோகமும் கூட… காமத்தீயால் மார்பில் சாத்திய சந்தனமே தீய்ந்து போக.. முள்ளே இல்லாத அந்த தாமரை முகத்தைத் தாங்கி தாமரைக் கைகளே இருந்ததாய் சொல்கிறார் கம்பர்..

நலனுறு கணவர் தம்மை நவைஉறப் பிரிந்து விம்மும்
முலைஉறு கலவை தீய முள் இலா முளரிச் செங்க்கேழ்
மலர்லிசை மலர் பூத்தென்ன மலர்க்கையால் வதனம் தாங்கி
அலமரும் உயிரினரோடும் நெடிதுயிர்த்து அயிர்கின்றாரை.

ஹலோ..உங்க கண்ணுக்கும் இப்படி ஏதாவது மாடி வீட்டு சங்கதி தெரியுதா?? மாடி வீட்டு பிகர் தெரிஞ்சாலும்

பரவாயில்லெ..தைரியமாச் சொல்லுங்க..

எல்லாம்…ம்..எல்லாம்….


சமீப காலமாக பிரகாஷ்ராஜ் கலக்கும் ஒரு ஃபோன் விளம்பரம் டிவியில் பிரசித்தம்..அதிலும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு பின்னர் லேசா கண் சிமிட்டி விட்டு லேசாக சிரித்தபடி ம்…எல்லாம் என்று சொல்வதும், அழகோ அழகு தான்.

இவ்வளவு வரிஞ்சி கட்டி எழுதும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது ஏதோ பலான மெட்டர் என்று… இருக்கட்டுமே..அதுவும் வாழ்க்கையோடு சேர்ந்த பகுதி தானே.. எவ்வளவு என்பதில் தான் மனிதனின் தரம் நிர்ணயம் ஆகிறது.

அந்தக் காலத்தில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று படங்கள் சில வந்தன.. குழந்தைகளோடு அந்தப் படங்கள் போகாது இருந்தோம்.. இப்பொ சின்ன வீடா வரட்டுமா? என்ற பாடல் நமது வீட்டின் முன் அறையில் எல்லார் முன்பும் கேட்கிறது.

சமீபத்திய Science Exhibhition ல் கருத்தடை சாதனங்கள் வைத்து ஒரு எட்டாம் வகுப்பு மாணவி விளக்கிய போது.., கேட்கும் நமக்குத்தான் சங்கடமாய் இருந்தது.

என் பையனிடம், பொடிப்பயலே, Facebook ல் அம்மனமா படம் வருதாம் பாத்து பாரு என்றேன்.. அவன் கூலா சொல்றான், அந்த Close button எதுக்கு இருக்கு?. Internet ல் எல்லாம் தான் இருக்கும். நாம நல்லதை எடுத்துக்க வேணும் என்று லெக்சர் தருகிறான். ம்… என்னத்தெச் சொல்ல???

இந்த பலான சமாச்சாரங்கள் காலம் காலமாய் இருந்து தான் வருகின்றன. அறத்தின் வழியாக பொருள் ஈட்டி அதன் மூலம் இன்பம் துய்க்க வேண்டும் என்கிறார் நமது ஐயன் வள்ளுவர்.

அந்த காலத்து A சர்டிஃபிகேட் வாங்கிய பாடல்களின் தொகுப்புகள் அகப் பாடல்கள் என்று அடக்கி விட்டனர்.

இப்பொ யார் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் படிக்கலாம் என்று வந்ததில் தான் சிக்கலே உருவாகிறது. ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சாமான்யன் ஒருவன் படித்து.., அதை எப்படி பொருள் கொள்வான் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

உணர்சிகளை கட்டுக்கும் வைத்திருக்கும் கலை மனிதனுக்கு வேன்டும் என்பதால் தான், சில சேதிகளை அரசல் புரசலாக வைத்திருந்தார்கள். கம்பராமாயணத்தில் அப்படி ஏகப்பட்ட இடங்களில் அரசல் புரசல்களாக வந்ததை கம்பரஸம் என்று தொகுத்து விட்டார்கள்.

நம்ம கண்ணுக்கும் அப்பப்பொ சில சங்கதிகள் மாட்டுது. அதில் அந்த மாதிரி ஒரு மேட்டரைத் தாண்டி கம்பர் சொல்லும் சேதியும் தெரியுது. ஒரு காட்சி பாக்கலாமா??

அனுமன், ஜாலியா இலங்கைக்கு என்ட்ரி செய்கிறார். அனுமனின் பார்வையில் என்ன என்ன படுகிறது என்பதை கண்ணில் பார்த்த கம்பன் அப்படியே எழுதுகிறார்… வாங்க… நாமளும் கூடவே ஒட்டுப் பாப்போம்.

மனைவிமார்கள் தங்கள் கணவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்… அவர்கள் எப்பேர்பட்டவர்கள் தெரியுமா?? வீராதி வீரர்கள்..சூராதி சூரர்கள்.

அவர்களுக்குத் துணை யார் தெரியுமா? காதல் மயக்கம் தான். உயிரை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும் உடலாய் படுக்கையில் கிடந்தார்களாம் காதல் மயக்கத்தில்..

அந்த மயக்கத்திலும் வாசல் மேல், விழி மேல் விழியே வைத்து பாத்துக் கிடந்தார்களாம். அப்போது தூது சென்ற மகளிர் வந்தார்களாம். அவர்களைப் பாத்ததும்..அவர்களின் முகத்தில் புன்னகையைப் பாத்ததும் போன உயிர் திரும்பி வந்ததாம்… ஆனந்தத்தில் அப்படியே பூரித்தார்களா??…அதுதான் இல்லை…துடித்துப் போய் விட்டார்களாம்..கம்பன் சொன்னது இது.

கம்பன் சொல்லாத கதை இப்பொ பாக்கலாமா… இது கம்பன் எழுதியது என்றாலும் கூட, பார்த்தது யார்? அனுமன். ஒரு வகையில் அனுமனும் தூதர் தானே… சீதா தேவியைப் பாத்துவிட்டு தகவல் சொன்னால் ராமரும் இப்படித்தான் சந்தோஷத்திலும் துடித்துப் போவார் போலும்..என்று அனுமன் நினைப்பதாய் கம்பர் நினைத்து எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.. ஆமா..நீங்க என்ன நெனைக்கிறீங்க???

அதுக்கு முன்னாடி பாட்டையும் போட்றேன் (சன் ம்யூசிக் பாக்கிற பின் விளைவு தான்)

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய சலத்தர் வைகும்
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலின் சாய்வர்
மாதுயர்க் காதல் தூண்ட வழியின் மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை  .

 மீண்டும் அனுமனோடு பாத்து வருகிறேன்.

எங்கே தொட்டா எங்கே வலிக்கும்??


 தொட்டுக் கொள்ளவா?? என்று செல்லமாய் கேட்கும் பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீங்க… கேக்கும் போதே தொடத் தோன்றும்… அவ்வளவு பாவனையுடன் அமைந்த பாடல் அது.

அதுக்கப்புறம் தொட்டால் பூ மலரும்…என்று சொல்லி, பதிலுக்கு தொடாமல் நான் மலர்ந்தேன் என்று போட்டு வாங்கியது.. அதுக்காக காதலன் தொடவே கூடாது என்ற அர்த்தத்தில் காதலி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை தான்.  தொடாமலேயே என் மலர் போன்ற முகம் இவ்வளவு மலர்கிறதே… நீ தொட்டால்..இன்னும் மலரும் என்று யோசிக்க வைக்குது.. (நான் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறேன்..உங்களுக்கு அப்படி ஏதும் படுதா???)

 காலங்கள் மாறின… அட சன்டாளா..உன் கண் பட்டாலே கர்ப்பம் ஆயிடுவாளே!!! என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்… இது என்ன கண்கட்டு வித்தை என்று யோசிக்க வேண்டாம்.. கர்ண பரம்பரையாக கர்ணன் பிறந்த கதையும் இந்த கர்ப்ப வகை தானே..

சரி அப்படியே… எங்கே தொட்டா எங்கே  வலிக்கும் எரியாவுக்கு வந்து ரவுண்ட் கட்டுவோம்.

கதாநாயகனை வழிக்குக் கொண்டு வர இந்த வலியினை கையில் எடுக்கும் யுத்தி. இதில் நாயகனுக்கு வேண்டிய நபர்கள் அம்மா, அப்பா, தாத்தா, தங்கை, சகோதரன் குழந்தைகள் என்று எது எதுவோ மாறி மாறி வரும்.. ஆனா மாறாத ஒரு விஷயம்… அந்த ஒரு டயலாக்.. அங்கே தொட்டா இங்கே வலிக்கும் என்பது தான்.

மேடைப் பேச்சுகளிலும் எதைத் தொட்டா ஆடியன்ஸ் காதில் சங்கதி ஏறும்? என்பதை தெரிந்து கொள்ளல் அவசியம்.. (இந்த மாதிரி போஸ்டிங்க் போடும் போது உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை நான் போடுகிறேனா?? – என்ன நான் சரியா….எழுதுறேனா???)

இன்று (17-11-2011) லிட்டில் அந்தமான் தீவுகளின் அனைத்து பள்ளிகளும் ஒன்று சேர்ந்து அறிவியல் கண்காட்சி நடத்தினர். நான் தான் சிறப்பு விருந்தினர் இங்கு அதனைத் திறந்து வைக்க…பேச.. (புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பதில் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கிறது). மாணவர்கள் கூட்டம் எக்குத் தப்பாய். கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு அதை பார்க்கவும் பொது ஜனங்கள் வேறு.. இவர்கள் மத்தியில் அறிவியல் பற்றியும் பேச வேன்டும்.

“நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது எங்க அப்பா தண்ணி குடிக்கக் கேட்டா, உடனே கொண்டு வந்து குடுப்பேன்.. இப்பொ நீங்க குடுப்பீங்களா??” இது என் முதல் கேள்வி…

நஹி… என்று உண்மையான பதில் வந்தது. குழந்தைகள் எந்த ஊரிலும் எந்தத் தீவிலும் பொய் சொல்வதில்லை.

“இதெ..இதெ தான் எதிர் பாத்தேன்.. ஏன் இப்படி?? Generation Gap என்று நான் சொல்ல மாட்டேன். This generation needs everything into scientific approach… ஏன் நான் தண்ணீர் தரனும்? நீங்களே ஏன் போய் தண்ணி புடிச்சி தரக்கூடாது?? அக்காவை அல்லது தம்பியை ஏன் கூப்பிடலை?? இவ்வளவு ஏன் எதற்கு எப்படி இப்போதைய பசங்க கேக்கிறாய்ங்க… கேளுங்க… கேளுங்க.. நல்லா கேளுங்க.. இந்த மாதிரியான கேள்விகள் தான் அறிவியலின் ஆதாரம்..” கூட்டம் ஆர்வத்துடன் கேக்க ஆரம்பித்தது.

கண்டுபிடிப்பாளர்கள் எல்லாம் பெரிய படிப்பு படித்தவர்கள் அல்ல. என்னையும் உங்களையும் மாதிரி சாமானியர்கள் தான். சொல்லப் போனால்,  காதுலெ என்ன பஞ்சா வச்சிருக்கே என்று திட்டு வாங்கின பையன் தான் Ear Muff கண்டுபிடித்த சேதியும், வீட்டு வேலை செய்த பெண்மனி மேடம் கியூரி ஆகி இரண்டு நோபல் பரிசு பெற்ற சேதியும் சொல்ல… பசங்க மாத்திரமில்லெ மற்றவர்களும் நல்லா கேட்டார்கள்..

சம்பந்தம் இல்லாததை இழுத்துக் கொண்டு வந்து சம்பந்தப் படுத்தி எழுதுவது எதில் சேத்தி… நான் மட்டும் வம்படியா கம்பரை இழுக்கலையா என்ன???

இப்பொ கம்பர் வந்துட்டாரா… இவர் பாருங்க… சம்பந்தம் இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்வார்.. பாக்கலாமா???

அனுமனைப் பாக்கிறார்.. பாத்தா ஒரு பாய்மரம் மாதிரி தெரியுதாம்.. (எனக்கு என்னமோ Life Boat மாதிரி தெரியுது). ஓகெ Fine.. எப்பொ தெரியுமா?? ஒரு மலைமேலே அனுமன் கால் வைக்கிறார். அப்பொ அந்த மலை அப்படியே பூமிக்கும் கீழே போகுதாம்.. அதெப் பாத்தா ஒரு படகு மூழ்கும் போது பாய்மரம் வெளியே தெரியுதே…அது மாதிரி இருக்காம். இது வரை எல்லாம் சரி தான்.

நடுவில் கம்பர் ஒரு பிட்டு போட்றார் பாருங்க..

அந்த மலையில் அனுமன் கால் அழுத்தத்தால் வானத்திலெ கீற நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மேகம் இவை எல்லாம் கொஞ்சம் மெரண்டு போய் மேலே போயிட்டதாம்.. இங்கே கால வச்சா அங்கே என்ன நடக்குது பாத்தீகளா??

தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிரத் தாழ்ந்து
பாரிடை அழுத்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு எனக் குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே!

இன்னும் வரும்.

அரண்டவன் கண்ணுக்கு…


வெளிப்பார்வைக்கு சாதுவாய் இருப்பவர்கள் வீட்டிலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் என்று சில லீலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அலுவலகத்தில் சாந்த சொரூபியாய் இருந்து கொண்டு, வீட்டிற்கு வந்தால் மூக்குக்கு மேலும், தொட்டதுக்கெல்லாம் அடி என்று விளாசுபவர்களும் இருக்காக..

பிறர் முன்னர் தான் இன்னார் என்று நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு இமேஜ் உருவாக்க வேண்டியது.. பின்னர் அதைக் காப்பாற்ற சிரமப் பட வேண்டியது..இதுவே பலரின் வாழ்க்கை தத்துவம்.

என் நண்பர் ஒரு பார்ட்டிக்கு போனார்… நல்ல வெளிநாட்டு சரக்கை ஒரு பிடி பிடிக்கலாம் என்று இருந்தாராம். ஆனா..நீங்க எல்லாம் எங்கே தண்ணி அடிக்கப் போறீங்க??.. இந்தாங்க..என்று ஒரு ஜுஸ் கிளாஸ் கையில் கிடைத்ததாம்… அட..உலகம் இன்னுமா என்னையெ நல்லவன்னு நெனைச்சிட்டு இருக்கு?? என்று அவரும் நல்ல புள்ளையா ஜூஸ் குடிச்சிட்டு வந்திட்டாராம்.. இது எப்படி இருக்கு??

மாமியார் ஒடைச்சா மண்குடம்…அதே மருமகள் ஒடைச்சா.. பொன்குடம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க…. அந்தமானில் ஒரு மாமியார் ஊரிலிருந்து வந்தால் போதும்… அந்த மருமகளின் நண்பிகள் அனைவரும் அந்த மாமியாரை அம்மா என்று அழைத்து விடுவார்கள்… எனக்கு அது விளங்கலை ஆரம்பத்தில்.. நண்பியின் அண்ணாவை அண்ணா என்றும், தங்கையை தங்கை என்றும் அழைப்பவர்கள்… அத்தையை மட்டும் அம்மா என்கிறார்களே..ஏன்??

அத்தை உறவு கொஞ்சம் சிக்கலானது..அம்மா..அன்பு மயமானது.. இதை விட்டால் வேறு என்ன காரணம் பெரிசா இருக்கப் போவுது.

மரத்துக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா யாரோ நல்லா கதை கட்டி விட்டாங்க… புளிய மரம்… மரத்து உச்சி…என்ன சம்பந்தமோ… பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரத்தில் தொங்கித்தானே ஆகனும்…இப்படி வேறு…

டி என் கே, அந்த பேயும் புருஷன் கூட சன்டை போடும் தெரியுமா??

யாரது?? திரும்பினா… அட..நம்ம கம்பர்.. வாலை சுருட்டி ஐயா என்ன சொல்றாருன்னு கேப்போமே…

இலங்கைக்கு அனுமன் போகும் மெய்டன் விசிட். பாக்குறது எல்லாம் வித்தியாசமா தெரியுது.

அங்கே அரக்க மகளிர் சரக்கு அடிச்சி கெடக்கிராய்ங்க… இடை எக்கச்சக்கமா இருக்காம்…ஆகாயம் மாதிரி.. ஒரு ஷேப்பில் இல்லாமெ..

தண்ணி அடிக்கிற அடியில் கண்ணே சிவந்து போச்சாம்… ஓரம் வேறு கருப்பா அந்த மை வேறு… வாய் வெளிறிப் போச்சாம்… புருவம் வளைஞ்சே போச்சாம்… துடித்தன வாயும் கண்ணும்..

மதிமுகம்…புதுமுகமா ஆச்சாம்… எங்கே பாத்தாக அதை?? அதே கள்ளில் முகம் பாத்தாக..

அட..யாரு இந்த சக்களத்தி…?? அப்படியே புருஷன் கூட போய் சன்டை போட்டாகளாம்…

அனுமன் அமைதியா ஜாலியா அதை ரசித்தபடி நடக்கிறார்.

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப வேர் பொடிப்ப தூய
வெள்ளிடை மருங்குலார் தம் மதி முகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கிக் கணவரைல் கனல்கின்றாரை.

நாம ஏதோ சீரியல் பாக்கிற மாதிரி இல்லை??

அழகிய தமிழ் மகள்


சினிமாவில் கமல், மனிரத்னம், ரஹ்மான் இப்படி சிலர் வந்ததால் தமிழர்களின் கொடி பறக்கிறது. என்ன தான்  சிலர் தமிழர்களின் பெயரை எவ்வளவோ மேலே கொண்டு வந்தாலும் இந்த வட நாட்டவர்களுக்கு தமிழர்கள் என்றால் கொஞ்சம் இளக்காரம் தான்.

அதுவும் ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் தமிழன் எப்போதும் காமெடியன் தான். ஐயோ, ஐயோடா, ஐயய்யோ இவைகள் தான் தமிழன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று வடிவேல் ஸ்டைலில் கேக்க மட்டும் தான்முடியும்!!!

அந்தமானில் 15 – 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்கள் ஐயாலோக் என்று கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் பெரும்பாலும் கூலித் தொழிளார்களாக மட்டுமே இருந்தனர். இப்போது இந்த அய்யாலோக் என்பது மாறிவிட்டது. ஏனென்றால் பல துறைகளில் தமிழர்கள் மேலே வந்துவிட்டனர். அரசியல், வியாபாரம், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இப்படி எல்லா துறைகளிலும் தமிழர்கள் டாப்பில் வரத்துவங்க… அந்த ஐயா லோக் மறைந்து விட்டது.

ரொம்ப சுகமா கம்யூட்டரில் தமிழ் எழுதுகிறேன். அப்படியே இலக்கிய காலத்தை கொஞ்சம் புரட்டிப் பாத்தா??? அவங்க என்ன கம்ப்யூட்டர் வச்சிட்டா எழுதுனாங்க..அந்தக் காலத்தில் ஏது அழகி??… இப்பவே நம்ம ஆட்களுக்கு தமிழ் மெயில் எழுதுறது ரொம்ப சிரமமா இருக்கு. ஏடு எழுத்தாணி வைச்சி எப்பிடி அந்தக் காலத்திலெ எழுதி இருப்பாங்க? என் கவலை என்னென்னா?? Ctr Z, Ctr C, Ctr V போன்ற வசதி இல்லாம எப்படி எழுதி இருப்பாங்க…??

இந்தக் கவலை ஒருபக்கம் இருக்கட்டும். கவியரசர் கம்பன் கனவு கண்ட பத்தி நான் கண்ட கனவு கேளுங்க…

ராமாயணம் எழுதுறப்பொ கொஞ்சம் அசதியா படுக்கிறார் நம்ம கம்பர். பத்தாயிரம் பாட்டு எழுதுறது என்ன சும்மாவா?? கனவு வருகிறது. அழகிய பெண் ஒருத்தி கெஞ்சியபடி : “காப்பியம் எழுதுறீங்களாம்லெ.. என்னையும் சேத்துக்கோங்களேன்.. ப்ளீஸ்”.

கம்பன் : யார் நீ?
அழகி: தெரியவில்லையா? நானும் தமிழின் மகள் தான்.

கம்பன்: அழகிய தமிழ் மகளே!!! உன் பெயர்?
அழகி: “ஐயோ”

கம்பன்: ஏன் இந்த பயம்? பயப்படாமல் சொல். உன் பெயர்??

அழகி: கவியரசரே… என் பெயர் தான் “ஐயோ”.. தமிழின் புதல்வி நான். என்னை யாரும் எந்தப் புலவரும் பாடுவதில்லை. உங்கள் இதிகாசத்திலாவது என் பெயர் வரட்டும்…ப்ளீஸ்..

 தூக்கம் கலைந்து உடனே எழுத்தாணி பிடிக்க… கவிதை கனவில் வந்த அழகிய தமிழ் மகளையும் சேர்த்து வருகிறது. ஐயோ என்ற அமங்கலச் சொல் கம்பன் கைபட்டு மங்கலமாய் இராமனை வர்ணிக்கும் விதமாய் மிளிர்கிறது.

பாடல் இதோ…
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ
இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்.

இனி மேல் வட நாட்டவர் யாராவது ஐயோன்னு தமிழனை அவமரியாதை செய்தால் உங்களுக்கு இராமனை நினைக்கும் வாய்ப்பு அளித்ததாய் சந்தோஷப்படுங்கள்.

இல்லாவிட்டால் ஐயோ ஐயோ என்று வடிவேலு ஸ்டைலில் ஜாலியா இருங்க..

வயிற்றுப் பார்வை


ரொம்பவும் நெருங்கிய நட்பு வட்டாரம் வீட்டில் வந்தாலோ அல்லது தெருவில் சந்தித்தாலோ..வாங்க அப்படியே இட்லி கிட்லி சாப்பிட்டே பேசுவோம்..என்று அழைப்போம்..

ஆமா..இந்த இட்லி ஓகே…அந்த கிட்லி என்றால் எனன்?? (மதுரெ இட்லிக்குத்தானேடா பேமஸு…கிட்லிக்குமா..? என்று வடிவேலு ஸ்டைலில் புலம்பலாம் போல இருக்கா??)

உபசரிப்புகள் பலவிதம்… காப்பி சாப்பிடலாமா?? என்னத்துக்கு வீட்டிலேயே சாப்பிட்டு வந்திருப்பீங்களே.. என்று கேட்பது கல்யாணப் பரிசு தங்கவேலு ரகம்.

காப்பித் தண்ணி சாப்பிடலாமா என்ற கேள்வியும் சில இடங்களில் வரும். காபி தண்ணியாத்தான் இருக்கும் என்பதின் முன் ஜாக்கிரதை முத்தண்ணா ரகம் அது.

ஒரு வேலையா ஒருத்தரைப் பாக்க அந்தமான் அரசு அலுவலகம் போனேன். டீ சாப்பிடலாமா என்று கேட்பதற்குள் இன்னொரு வேண்டாத விருந்தாளி உள்ளே வந்தார். (நீ உள்ளே போனா விருந்தாளி..அடுத்தவன் உள்ளே வந்தா, வேண்டாத விருந்தளியா??…ம்…மௌனம் சம்மதம் தானே). சக ஊழியரை அழைத்து, சாப் லோகோங்கோ.. ஜரா சாய் பிலானா என்றார்…

பேச்சு தொடர்ந்தது.. ஆனால் சாயா வந்த பாடில்லை.. வெறுத்துப் போன அந்த வேண்டாத விருந்தாளி எழுந்தார்..அந்த அதிகாரியோ… இந்த ஊழியர் அப்படித்தான்… பத்து பேருக்கு ஒரே ஆள் தான்..அதனால் உங்களுக்கு டீ தர முடியவில்லை என்பதை வழிந்தார்.

மறுபடியும் ஊழியரை அழைத்தார்..நல்லா செமையா திட்டப் போகிறார் என்று தான் நினைத்தேன்.. ரொம்ப கூலா…சாப்கோ சாய் பிலானா என்றார். இரண்டே நிமிடத்தின் திடம் மணம் எல்லாம் சேந்து (ஜோதிகா இல்லாமல்) வந்தது.

என்ன நடக்குது இங்கே?? யோசித்த போது தான் “ஜரா” என்ற ஹிந்தி வார்த்தைக்கு பின்னால் இப்படி ஒரு போட்டுக் கொடுக்கும் குணம் இருப்பது தெரிந்தது.

தரகர்கள் சொல்லும் பொதுவான வார்த்தைகள் – கை நிறைய சம்பளம். பொண்ணு ரதி மாதிரி இருப்பா…என்பார்கள். (இந்தப் இழவுப் பொய்யைத்தான் எல்லார்ட்டேயும் சொல்றேமே – என்று விவேக் தரகராக ஒரு படத்தில் அப்ரூவர் ஆகி இருப்பார்).

ரதி மாதிரி என்று சொன்னாலே, ரதி தான் உள்ளதில் அழகு..இந்தொ பொண்ணு அது மாதிரி இப்படித்தானே அர்த்தம். கொரங்கு மூஞ்சி என்றால் அப்பொ என்ன அர்த்தம்?? குரங்கே பெட்டர் என்று அர்த்தம்.

இப்பொ அப்படியே கம்ப ராமாயணத்துகு வருவோம். நம்மாளுக ஹீரோயின் வயிற்றைக் காட்டாமெ… தொப்புளை ஃபோகஸ் செய்து அதில், பம்பரம் உட்டாங்க.. ஆம்லெட் போட்டாங்க… அத்தோட உட்டாங்க… அதில் ரசனை போய் விரசம் மிஞ்ச்சினது.

நம்ம கம்பர் தான் ரசிப்பதில் ஆஸ்கார் தரம். அவர் ஒரு ஹீரோயினோட வயிறு பத்தி எழுதனும். ஆலம இலை, சித்திரப் பலகை, வெள்ளித்தட்டு, கண்ணாடி இதுமாதிரி இருக்கும் என்று சொல்ல வந்தவர் அப்புறம் அந்த லாஜிக் யோசிச்சி….. No…No…. இவை எல்லாம் ஹீரோயின் வயிறு மாதிரி இருக்கு என்று சொல்லலாம் என்று சீதையின் வயிறை வர்ணிக்கிறார் கம்பர்.

ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண்பலகை நொய்ய
பால் நிறத் தட்டம்  வட்டக் கண்ணாடி பலவும் இன்ன
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின்
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை என்னும்.

இனி ஆல் இலை, கண்ணாடி பாத்தா உங்ககுக்கு என்ன ஞாபகம் வரணும்???

இடைத்தரகர்கள்


அன்பு நெஞ்சங்களே…

இடை என்பதில் ஒரு கவர்ச்ச்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இடை பத்தி
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் இடைத்தரகர்கள் பத்தி எழுத வந்திருக்கேன்.

இடைத்தர்கர் என்றதுமே, என்னடா இது… இவனும் 3ஜி சமாச்சாரம் ஏதோ எழுத வந்துட்டானேன்னு நெனைச்சிப் பயந்துராதீங்க… நானு அந்த டாபிக்குக்கு
கொஞ்சம் indirect ஆ வர்றேன்.

தரகர்களின் தேவை எதுக்கு?

ஒரு சேவை தேவைப்படும் நபருக்கும் அது வழங்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்பவர்கள் தான் தரகர்கள். அவர்கள் இடையில்
இருப்பதால் இடைத்தரகர்கள். அம்புட்டுத்தான்.

விளைவிக்கும் விவசாயிக்கு 50 ரூபாய் கிடைக்கும். ஆனால் மார்க்கெட்டில் ரூ 300க்கு அந்த பொருள் விற்கும். அப்பொ 250 ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் அந்த
இடைத்தரகர்கள்.

புரோக்கர் மாமா பூஜாரி Lobbiest Facilitator Contractor இப்படி செய்யும் தொழில்
வைத்து பெயர்களும் மாறுபடும்.

(இந்தப் பில்டப்புக்கு அப்புறம் கண்டிப்பா ஒன்னோட… இலக்கிய அறிவை எடுத்து
உடுவியே…சொல்லு..சொல்லு.. அப்பத்தானே இந்தப் போஸ்ட் சீக்கிரம் முடியும்!!)

இந்த நீனா ராடியா போன்ற இடைதரகர்கள் அந்தக் காலத்திலும் இருந்திருப்பாங்களா?…
யோசிச்சிகிட்டே கொஞ்சம் கப்பல் ஏறுவோம்.

போர்ட்பிளையர் முதல் லிட்டில் அந்தமான் வரை கப்பல் பயணம். சுமார் 9 மணி நேர பயணம். ஜாலியா படிக்க ரெண்டு பெரிய்ய புக் எடுத்துட்டு கிட்டுக் கிளம்பினேன். ரெண்டு பெட் இருக்கும் கேபினில் இன்னொருவர் வந்து சேர்ந்தார்.
இங்கிருக்கும் ஒரு மிருக வைத்தியர் (கன்சூமர் கோர்ட், கம்ப்ளைண்ட் என்று ஏதும்
செய்யாத மிருகங்களுக்கு வைத்தியம் செய்வதில் சுகம் என்றார்)..

ரொம்ப போரில்லை.. 9 மணி நேரம் …

அப்படி ஒன்னுமில்லை… நான் புக் வச்சிருக்கேன். – இது நான்.

என்ன புக்கு அது..இவ்வளவு பெரிஸ்ஸ்சா? (கேட்டவர் மலையாளி மிருக வைத்தியர்)

கம்ப ராமாயணம். பாடல்கள் மட்டும் ஒரு புக்.. அர்த்தம் தெரிய இன்னொரு புக் என்றேன்.

டாக்டர் ஒரு மாதிரி பாத்தார்… இதெல்லாம் சுத்தமா ஒரு எடத்திலெ இருந்து தானே
படிப்பாங்க. இப்படி ஜாலியா படிக்கிற புக்கா இந்த ராமயணம்??

அவருக்கு நான் சொல்லிய பதில் தான் உங்கள் முன் சொல்ல வருகிறேன்..

ஜாலியான சமாச்சாரங்கள் நிறைய இருக்கு இந்த கம்ப ராமாயணத்தில். இடைத்தரகர்கள் இல்லை என்றால் ராமன் இல்லை. ராமன் இல்லையெனில் ராமாயணம் ஏது??

தசரதனுக்கு குழந்தயே இல்லை. என்ன செய்றதுன்னு கைனக்காலஜிஸ்ட்களிடம்
பேசினார். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இந்த டெஸ்ட் செய்யின்னு சொல்ற மாதிரி ஒரு யாகம் செய்யனும்னு ஒரு சின்னதா பிரஸ்கிரிப்ஷன்.

நம்ம டாக்டர்கள் தெரிஞ்ச லேபில் ரெக்கமண்ட் பண்ற மாதிரி ஒரு வில்லங்கமான
முனிவரை வச்சி யாகம் செய்யனும்னு வம்பில் மாட்டி விட்டார்.

அந்த முனியோ சொஞ்சம் அப்படி இப்படி ஆளு.. ஆனா அவரோட அப்பாவோ,
மக்களை விலங்கு மாதிரி நெனைக்கிற ஆசாமி..பயங்கர முனி.. இந்த நேரத்லெ தான் நம்ம ராஜாவுக்கு (தசரதனுக்கு) ஓர் இடைத்தரகர் தேவைப்பட்டார்.
அது ஸ்பெட்ரம் மேட்டரை விட  கொஞ்சம் பெரிய்ய மேட்டர் என்கிறதினாலெ கொஞ்ச பேரை பிடிச்சாரு நம்ம தசரதன். யாரு அந்த இடைத்தரகர் தெரியுமா…
ஸ்…ஸ்.. யார்கிட்டேயும் சொல்லாதீங்க.. கொஞ்ச்சும் பெண்கள் சிலர்.

அவங்க எப்படி இருந்தாங்க தெரியுமா??

பிரைட்டான நெத்தி… கருப்பா நீளமா கண்ணுங்க… ரத்தச் சிவப்பா லிப்ஸ்
இருக்கும் வாய்.. முத்துப் பல்லுக்காரிகள்.. மென்மையான இரு மார்புகள்..
இப்படியெல்லாம் இருக்கும் விலைமகளிர்…

இவங்களை அனுப்பி கலைக்கோட்டு முனிவனை கலக்கி கூட்டிவந்து யாகம் நடத்தி … ராமன் பிறந்து… இப்படி வந்தது ராமாயணம்…

டாக்டர் தூங்க ஆரம்பிச்சிட்டார்… நீங்க இன்னும் தூங்கலையா?? பாட்டு கேட்டு தூங்குங்க…

“சோதி நுதல் கரு நெடுங் கண் துவர்
இதழ் வாய் தரள நகை துணை மென்
கொங்கை மாதர் எழுந்து யாம் ஏகி
அருந்தவனைக் கொணர்ந்தும் என வணக்கம் செய்தார்.”

என்ன மக்களே… இது தப்பு இல்லையா??

இல்லவே இல்லை… நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே
தப்பில்லை.

நீங்க என்ன சொல்றீங்க???

ஆணியே புடுங்க வேணாம்


சில வார்த்தைகளும் வாக்கியங்களும் சர்வ சாதாரணமா நாம யூஸ் பன்றோம். ஆனா அதோட மீனிங்கே வேறெ ஏதாவது இருக்கும்.

கிளாஸ்லே அந்த வாத்தி அறுத்துத் தள்ளுதுன்னு எத்தனை பேரை நாம சொல்லி இருக்கோம்?.

அறுத்தலுக்கும் வகுப்பு எடுக்கிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்ன ??

மதுரையில் சமீப காலமாய் புழங்கும் வாசகம் “சான்ஸ்ஸே இல்லை” என்பது. ரொம்பவும் சூப்பரா இருந்தா இப்படி சொல்கிறார்களாம். என் நண்பர் நாலு வருஷமா அமெரிக்காவில் இருந்தும் இந்த தொடர் அவரை விடவில்லை.. (கல்யாணம் ஆகியும் திருந்தாத சிலர்/ மண் மணம் கெடாத மதுரை நண்பர் அவர்)

ஒரு காலத்தில் தினத்தந்தியில் “சம்பவ” இடத்திற்கு போலீஸ் வந்தது என்று போடுவர். சம்பவம் என்றால் கொலை கொள்ளை கற்பழிப்பு துர்மரணம் விபத்து இப்படி எல்லாம் சேர்ந்தது. “அபூர்வ சகோதர்கள்” படத்திற்குப் பிறகு சம்பவம் என்றால் “கொலை” என்றாகி விட்டது.

சுவாமி வடிவேலானந்தா வின் சமீபத்திய அருள் வாக்கு என்ன தெரியுமா??

அதுக்கு முன்னாடியே ஒரு இன்விட்டேசன்… அப்புறம் தொடர்வோம்.

நண்பர் ஒருவர் நாம எல்லாரையும் ஒரு நல்ல பங்க்சனுக்கு இன்வைட் பன்னிட்டாரு. குடும்பத்தோட வரனும்னு ஏகமாய் தொந்திரவு வேறெ…

என் வீட்டுக்காரி நாலு புடவை எடுத்து வச்சி..என்னங்க.. இதிலெ நல்ல புடவையா சொல்லுங்க.. நீங்க சொல்ற சாய்ஸ் தான் என்னோடது – ன்னு கொஞ்சலாய்.

ஆஹா .. மனைவியிடம் நல்ல பேரு வாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம்… ரொம்ப சிரமப்பட்டு மூளையை கசக்கி.. முதல் சேலையை செலெக்ட் செய்தேன்..

மனைவியோ.. என்னங்க இது, இதே கலர் மாதிரி பொடவை தான் முன்னாடி ஒரு நாள் அவங்க வீட்டுக்கு கட்டிகிட்டு போய் இருக்கேன்.. வேறெ ஏதவது சாய்ஸ் ப்ளீஸ்..

சரி.. ரொம்ப யோசிக்காம, இரண்டாவது புடவை கை காட்டினேன். என்னங்க மறுபடியும்…. இதை கட்டிகிட்டா இன்னும் கொஞ்ச குண்டா தெரிவேன்.. இது வேண்டாமே..

அடுத்த தெரிவு.. மூனாவது புடவை… மறுபடியும் தப்பு பன்னிட்டீங்களே… இதிலெ கொஞ்ச கருப்பு கலர் மிக்ஸ் ஆயிருக்கு பாத்தீகளா??? (எனக்கு சுத்தமா அப்படி ஒன்னும் தெரியலை..) அவா ஆத்துக்கு அதை கட்டிண்டு போனா நன்னாவா இருக்கும்?

அடுத்து மிச்சம் இருக்கும் நான்காவது புடவை எடுத்து கையில் கொடுத்தேன்.

திருமதி ரொம்ப சந்தோஷம்.. இந்த தடவை உங்க சாய்ஸ் (அப்படியா???) தான் பொடவை கட்டறேன்..

 நான் மனசுக்குள் வடிவேலை வேண்டினேன்…. “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்ற அருள் வார்த்தை கிடைத்தது.

ஒரு வேலையையும் செய்யாமெ சும்மா இருக்கச் சொல்லனுமா “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்பதை இனி பயன் படுத்தலாம் என்று வல்காப்பியன் சொல்லிவிட்டார்.

இதே போல் கொன்னுட்டான்யா என்பதும் சரளமாய் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்…

 கம்பனுக்கும் இந்த சிச்சுவேஷன் கிடைக்குது…

சீதையை பாத்து ராமன் காதலில் புலம்பும் காட்சி.. நீ எமனா வந்து என்னை கொண்ணுட்டே… மறுபடியும் அல்குல், கண்கள், மார்புகள், புன்னகை இதெல்லாம் வச்சி மறுபடியும் கொல்லனுமா என்ன???

வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ.

உண்மையில் கம்பன் கொண்ணுட்டான்… சான்ஸ்ஸே இல்லை. இந்த ஒரு சம்பவம் ஒன்னு போதும்.. இனி எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்.

இலக்கியத் தேடல் வளரும்…

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…


கிட்டத்தட்ட எல்லா இந்துக் கடவுள்களும் ஏதோ ஒர் ஆயுதத்தினை கையில் வைத்துத்தான் இருக்கிறது. பக்தி என்பது பயந்து கொண்டாவது வரட்டும் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கலாம்.

ஏதாவது தப்பான காரியம் செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும், நாக்கை அறுதிடும் என்ற பயத்தில் கொழந்தையா இருக்கறச்செ ரொம்ப சமர்த்தா.. நல்ல புள்ளையா இருக்கோம்..

விவரம் புரிஞ்ச்சி சாமி ஒண்ணும் செய்யாது என்று தெரிஞ்ச்ச பிறகு உண்டியல் திருட்டு, சிலை கடத்தல் எல்லாமே தொடருது.

ஆனா இந்த திருப்பதி சாமி பத்தி பயமுறுத்தும் பல கடிதங்கள் அந்தக் காலத்தில் வரும். இதை 20 காப்பி எடுத்து அனுப்பலை…நீ ரத்தம் கக்கி சாவே என்று மோடி மஸ்தான் ரேஞ்சுக்கு மிரட்டும் அவை.

இன்றும் சில ஈ மெயில்களில் அதே மிரட்டல் தொடர்கிறது என்பது தான் வேதனை. திருப்பதி சாமி என்ன Multi Level Marketting ல் இறங்கச் சொல்லி விட்டாரா என்ன??

கல்கத்தா காளி கதையே தனி தான்.. அந்தமானில் மிக விமரிசையாக (தமிழர்கள்… முஸ்லீம்கள் கூட சேர்ந்து) கொண்டாடும் விழாவாய் துர்க்கா பூஜை இருக்கும். துர்க்கை கையில் ஏகே 47 துப்பாக்கி இல்லாத குறைதான்..

காளீயை நேரில் தரிசித்த இராமகிருஷ்ணரை பாத்தா எவ்வளவு சாந்தமா இருக்காரு??? என்ன ஒரு Contrast?? நம்ம முகத்திலும் அந்த சாந்தம் வரவழைக்கும் முயற்சி தான் இந்த மிரட்டலோ… இருக்கலாம் அந்த காலத்தில் எது செஞ்ச்சிருந்தாலும் ஏதாவது அர்த்தம் இருக்கும்.

திருப்பதியை வச்சி செய்யும் காமெடிகள் செம ஹிட் ஆகும். திருப்பதி லட்டுக்கு பதிலா ஜிலேபி கையில் கிடைப்பதும், சொப்னாவுக்காய் அதை விவேக் சாப்பிடுவதும், சந்திரபாபு நாயுடுவே சொல்லிட்டாரா…அப்பொ சரியாத்தான் இருக்கும் என்பதும் செம காமெடிகள்.

No Entry Take Diverson என்று சொல்லி சொல்லி சென்னை தொடங்கி திருப்பதி வரும் விஜய் & விவேக் ஜோடி கலாட்டா எப்பவுமே பாக்கலாம்.. என்னடா இது கையிலெ லட்டு கொடுத்துட்டு ஜிலேபியை பிச்சி போட்டிருக்காங்க என்று விவேக் சொல்வது சலிக்காத காமெடிகள்.

திருப்பதி சென்று திரும்பி வந்தால் என்று ஒரு பழைய பாட்டு வரும். திருப்பம் வரும்… விருப்பம் நிறைவேறும்.. இதெல்லாம் சரி தான். ஆனா திரும்பி வந்தால்… என்றது எதுக்கு?? (சும்மா எதுகை மோனை சமாச்சாரத்துக்காய் எழுதி இருப்பாகளோ)

வருஷக்கணக்கா போகணும்னு சொல்லி திருப்பதி போக முடியாத ஆட்களும் இருக்காக. வருஷாவருஷம் திருப்பதி போகும் ஆட்களும் உண்டு. 24 மணி நேரமா லயன்லெ தர்ம தரிசனம் பாக்க நின்னுட்டு ஓரிரு செகண்ட்களில் ஜருகண்டி ஜருகண்டி என்று தள்ளு முள்ளுவில் சிக்கி வெளியே வருவதோடு திருப்பதி தரிசனம் முடியுது. கண்ணை மூடி சாமி கும்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு திருப்பதி தரிசனம் கோவிந்தா கோவிந்தா தான்..

ஆமா இந்த கோவிந்தா என்பதை இறுதி யாத்திரைக்கும் பயன் படுத்துறோம். முடிஞ்ச்சு போகும் விஸ்ஜயத்தை கோவிந்தா என்கிறோமா?? அல்லது இறைவன் அடி சேர்வதைத்தான் அப்படி சொல்றோமா??? தெரியலையே கோவிந்தா..

திருப்பதியின் அருமை பெருமைகளைப் பத்தி யார் கிட்டெயாவது கேக்கலாமா?? பெரியார் கிட்டெ கேக்க முடியாது. யாராவது பெரியவா கிட்டெ கேக்கலாம். எனக்குத் தெரிஞ்ச்ச பெரியவர் கம்பர் தான்.

ஹலோ மிஸ்டர் கம்பர் திருப்பதி பத்தி ஏதாவது எடுத்து விடுங்களேன்… (நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க.. நானும் கம்பரும் ரொம்ப டிக்கிரி தோஸ்துங்க..ஆமா..சொன்னா நம்புங்க)

கம்பர் பாத்த திருப்பதி மலை எப்படி இருக்கு தெரியுமா??

ஆறுகள் இருக்குமாம்.. அதிலெ குளிச்சா வஞ்சனையெல்லாம் போகுமாம்..

அந்தணர்கள் எல்லாம் குளிக்கிறாகளாம்.

தவம் செஞ்ச முனிவர்கள் எல்லாம் இருக்காங்களாம்

இசை எப்போதும் கேக்குமாம்..

என்ன வாத்தியம் தெரியுமா?? கின்னரம்.. (பேரைக் கேட்டாலே கிக்கா இருக்கா???)

இதிலெ என்ன பியூட்டி தெரியுமா?? வாசிக்கவே வேண்டாம்..சும்மா அதை தடவினாலே போதும்.. சிம்பொனி மாதிரி இசை களை கட்டுமாம்..

கிளைமாக்ஸ் என்ன தெரியுமா?? யானைகுட்டியும் புலிக்குட்டியும் ஒண்ணு சேந்து தூங்குதாம்…

அன்பும்மா..அன்பு..எங்கே பாத்தாலும் அன்பு.

சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும்

நீறை ஆறும் சுருதித் தொல் நூல்

… அம்மா…

(பெரிய்ய பாட்டு அதனாலெ சாம்பிள் போட்டேன்)

இது சரிதானான்னு அடுத்த லீவில் திருப்பதி போய் பாக்கனும்.. ஆமா நீங்களும் வர்ரீங்களா??

நீதி: வாழ்க்கை ஒரு சுயிங்கம் மாதிரி… பாக்க அழகா இருக்கும்..கொஞ்ச நேரம் இனிக்கும்..மத்தபடி ரொம்ப சவ..சவ தான்… ஆக இனிப்பான வாழ்வு நீடிக்க, திருப்பதி போய் வாங்க.