மன்மதலீலையை வென்றார் உண்டோ….


manmadaleelai

சாதனை படைத்த இந்த பாடல் வரிகளின் பேக்கிரவுண்ட் தெரியுமா உங்களுக்கு? வீட்டில் யாரும் பெருசுகள் (தப்பி பிழைத்து) இருந்தால் கேட்டுப் பாக்கவும். அது காஃபி ஷாப் எல்லாம் இல்லாத ஒரு கற்காலம். தெருவில் நின்னு டீ சாப்பிடும் போது, இந்தப் பாட்டு போட்டால் அந்தத் தெருவே அந்தக் கடைக்கு வந்து டீ குடிச்சிட்டு போகுமாம். எலெந்தெப்பழம், ஓரம் பொ தொடங்கி தற்கால கொலவெறி பாடலுக்கெல்லாம் இல்லாத ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் அந்தப் பாட்டுக்கு இருந்திருக்கிறது. எளிய வார்த்தைகள், இனிய ராகம், எல்லாத்தையும் தாண்டி, தியாகராஜ பாகவதர் குரலும் ஓர் இனிய காரணம். அக்காலத்திலேயே பலரும் அந்தப் பாகவதரின் கிராப்பை வைத்துக் கொண்டனர். இன்றளவும் ”பாகவதர் கிராப்” என்று அந்த பாகவதருக்கு மரியாதை தந்தபடி உள்ளது.

manmadaleelai old

அதே பாடலை சில வருஷம் கழித்து ரீமிக்ஸ் (அப்போதே) செய்து பரமக்குடிக்காரனை குதிரை மீது ஏற வைத்து பின்னோக்கிப் பயணம் செய்ய வைத்தார் பாலசந்தர். இதைப் பத்திப் பேசும் முன்னர் சினிமாவும் சினிமா சேர்ந்த நிலமுமான பரமக்குடிக்கும் அதன் சினிமா தொடர்பும் ஒரு டச் செய்திட்டுப் போகலாம். கமலஹாசன் மூலம் சினிமாவுக்கும் பரமக்குடிக்கும் தொடர்பு வந்ததா? அல்லது சினிமாவில் ஊறிப்போன பரமக்குடியால் கமல் புகழ் பரவினதா? என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

பரமக்குடியின் கிழக்குப் பகுதி முழுக்க நெசவாளர்கள் வசிக்கும் பகுதி. செவிக்குணவில்லாத பொது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. வயித்துக்கு உணவே இல்லாத போதும், சினிமா பார்க்கும் உழைப்பாளர் உலகம் அது. அம்மாவின் மடியில் சவாரி செய்தும், முந்தானையைப் பிடித்து சண்டை போட்டு அரை டிக்கெட் எல்லாம் வாங்கி (நல்ல வேளை அந்த Date of Birth Proof எல்லாம் கேட்டு நச்சரிக்கவில்லை அப்போது) அப்புறம் மீசை முளைத்ததும் தனியே பார்க்கவும் வந்தது தான் எனது சினிமா பார்க்கும் வளர்ச்சிப் படிகள்.

வீட்டில் சினிமா பற்றிய விவாதங்கள் சொந்தக்காரர்கள் பற்றிப் பேசுவது மாதிரி எல்லாம் நடக்கும். (இப்பொல்லாம் குடும்பத்தோடு படத்தையே சேந்து பாக்க முடியறதில்லெ…அப்புறம் எங்கிட்டு அதெப் பத்திப் பேச….? ). பேச்சு வாக்கில், மன்மதலீலை படம் வந்திருக்காமே? என்று கேள்வி வர, நானும் வெளையாட்டாக, அதே பாகவதர் படம் தான்… புத்தம் புதிய காப்பியாக புதுப் பெயரில் ரிலீஸ் செஞ்சிருக்காக என்று சொல்லி வைத்தேன். வீட்டில் இருந்த அத்தனை டிக்கெட்டுகளும் அன்று சினிமா டிக்கெட் எடுத்தன.

பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வில்லங்கமான மன்மதலீலை படம் பத்தித்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? கமலின் கேரக்டர் ஒரு ஸ்திரிலோலர் (நம்மூர்காரருக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன?), சின்ன சபலபுத்தி அல்லது லேடீஸ் வீக்னஸ் என்பது போன்ற சாயலில் வெளுத்து வாங்கிய படம். அழகான மூஞ்சியெ அலங்கோலமாக்கியே பின்னிப் பெடலெடுக்கும் நபர்… இந்தக் கேரக்டரை சும்மா விடுவாரா என்ன?

படம் பார்த்து திரும்பி வந்த, வீட்டில் உள்ள மகளிர் படை எல்லோருமா சேந்து என்னையெ உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க… இனிமே நீ சொல்ற படமே நாங்க போகமாட்டோம் என்று சத்தியப்பிரமானம் வேறு நடந்தது தான் டாப். சின்னப் பையன் நீ எல்லாம் போயிடாதே, என்று அட்வைஸ் அம்புஜமாய் மாறினர் சிலர். எதையுமே செய்ய வேணாம்னு சொல்றச்சே, அதெச் செஞ்சே பாக்கும் குணம் தான் நம்ம ஜீன்லெயெ இருக்கே?? குருப் ஸ்ட்டி என்று (வழக்கமா எல்லோரும் சொல்ற பொய் தான்) சொல்லிட்டு மன்மதலீலைக்குள் நுழைந்தேன்.

ஓரளவு புரிந்த மாதிரி இருந்த்து. அதிகமாய் புரியாத மாதிரியும் இருந்தது. அந்தக் கேரக்டெரின் நீள அகல ஆழ உயரம் புரியாத வயதில் இன்னும் குழப்பங்கள் அதிகரித்தன. காமம் பற்றி புரிஞ்சும் புரியாமலும் இருந்த அந்த நேரத்தில் (இன்னும் அதன் நெளிவு சுழிவுகள் முழுசாய் தெரியும் என்று தைரியமாய் வெளியில் சொல்ல முடியவில்லை) மேலும் குழப்பங்கள் அதிகரித்தன படம் பார்த்த பின்னர். அதில் உச்சகட்ட குழப்பத்தில் ஆழ்த்திய காட்சி ஒன்று. கமல், தன் மனைவி உடை மாற்றுவதையும் கூட சாவி துவாரம் வழியாக எட்டிப் பார்ப்பது போன்ற காட்சி தான் அது. வீக்னஸின் உச்சகட்டமாய் சொன்னது, அந்த வயதில் புரியவில்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள்?

kamal eddipaar

தண்ணி அடித்தவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டுவதும், போதையில் கூட்டு பலாத்காரம் செய்வதும் ஏன் நடக்கிறது? அது தான் அவர்களின் இயல்பு நிலை என்று படுகிறது. சமூக நிர்பந்தங்கள், தானே தனக்குள் செய்து கொண்ட வேலிகள், சரி தவறு என்பதை நிர்ணயம் செய்யும் எல்லைக் கோடுகள், இமேஜ் இப்படி எல்லாமும் சேர்ந்து நல்லவனாக்கும் முயல்வில் வாழ்கிறான் ஒவ்வொரு மனிதனும். குடி, உள்ளே போன போது அதெல்லாம் மறந்து அப்படியே, இயல்பான சமூக விலங்காய் வாழ்பவன், சமூகம் மறந்த விலங்காய் மாறிவிடுகிறான்.

சுருக்கமாய், சுகி சிவம் ஐயா சொன்னது ஞாபகத்துக்கு வருது. மனுஷன் எப்பவுமே அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கிற சண்டையில் தான் வாழ்றான். பெரும்பாலும் அறிவு தோத்துப் போயிடும். நீங்களும் உங்களையே சின்னதா ஒரு டெஸ்ட் செஞ்சி பாத்துகிடுங்க. அதுக்குள்ளெ கம்பர் கிட்டே இருந்த்து ஓர் எஸ் எம் எஸ் வந்திருக்கு. பாத்திட்டு வந்திட்றென்.

தற்சமயம் கவரத்தி தீவில் (இலட்சத்தீவுகளின் தலைநகரே தான்) இருப்பதால் நெட் எல்லாம் சொதப்பி விட்ட்து. அப்படி இருந்தும் கம்பர் SMS மூலம் தொடர்பில் வந்துவிட்டார்.

”என்னப்பூ….இப்படி கதவு இடுக்கிலெ பாக்குறது நாமலும் எழுதி இருக்கோன்லெ….”

”ஐயோ…ஐயனே…. நானு ஏதோ சின்னப்புள்ளெத் தனமா கிறுக்குறேன்…நீங்க ஏதோ சீரியஸா சொல்ல வாரீக…”

கம்பர்: இப்பத்தானே… சுகி சிவம் மெஸேஜ் சொன்னே… அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டம்னு… நீ உணர்ச்சியில் மயங்கி ரசிச்ச ஸீன் அது… நான் அறிவு பூர்வமா எழுதின, எட்டிப் பாக்குற ஸீன் இருக்கு படிச்சிப் பாரு…

எங்கே டூர் போனாலும் கூடவே கொண்டு செல்லும் (மனைவி திட்டுவதையும் பொருட்படுத்தாமல்) கம்பராமாயணத்தை தேடினேன். அடெ..அடடெ.. அதே எட்டிப் பாக்கும் ஸீன். எங்கே? யாரு? எப்பொ?

ஊர் தேடு படலத்தில், கம்பர் படைப்பில் எட்டிப் பார்க்கும் ஹீரோ அனுமன். கமல் கேரக்டர் தான் (மன்மதலீலை படத்தில் தான்) எல்லாருக்கும் தெரியுமே? கம்பரின் அனுமனோ, பொருள்களை விரும்பும் ஆசை என்னும் கொடிய வினையையே வேரோடு பொசுக்கியவனாம் (எவ்வளவு வித்தியாசம் பாத்தீயளா?)

கமல் அப்படியே எட்டிப்பாத்தா, நம்ம அனுமனோ, நூல் மாதிரி… அடெ..அதுக்கும் மெல்லிஸா காத்தெவிட கம்மியா உரு மாறி சாவி துவாரத்திலெ பூந்து பாத்தாராம்.

இன்னிசை மழை மாதிரி, ரொம்ப ஒளி மழை பெய்யும் மாணிக்கத்தில் செஞ்ச சாவித் துவாரமாம் அது…. ம்… இலங்கை எப்படி எல்லாம் இருந்திருக்கு?

தேடியது சீதா தேவியாரை.. என்று சொல்லவும் வேண்டுமோ…
எஸ் எம் எஸ் குடுத்த்துக்கு தேங்க்ஸ் கம்பரே… இதோ உங்க பாட்டு உங்களுக்கே…

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூழினும் இன் இளங்காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ்வினை வேர் அற வீசினான்

இன்னும் வேறு எங்காவது எட்டிப் பாத்துட்டு வாரேன்…

உலக நாயகனே…


அந்தமானில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்ட தமிழக மண்ணிலிருந்து வந்தவர்கள் தான். மேலூர் தொடங்கி மானாமதுரை வரையிலும் பிறந்த ஊர்க்காரர்கள் தங்களது சொந்த ஊராக மதுரை என்று சொல்லி விடுவர். இதேபோல் மனாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ளவர்கள் ஜாலியாய் பரமக்குடி என்று சொந்த ஊராய் உறவு கொன்டாடுவர். இராமநாதபுரம் என்பதை மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். (ஏன் என்பது தான் விளங்கவில்லை).

எனக்கும் சொந்த ஊர் பரமக்குடி தான். (பரமக்குடியே தாங்க..அக்கம் பக்கம் எல்லாம் இல்லாமல பக்காவா அந்த ஊரே தாங்க). குசலம் விசாரிப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி “உங்க சொந்த ஊரு?”. ஊரை வைத்து இன்னார் இப்படி என்று ஊகம் செய்ய முடியுமோ!!! இருக்கலாம் போல் தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் வளைத்து வளைத்து ஆங்கிலத்தில் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர். அவர்களுக்குள் தமிழில் பேசிக் கொண்ட போது நானும் புகுந்து தமிழில் பதில் சொல்ல, அட நீங்க தமிழா? என்ற ஆச்சரியமான கேள்வி எழுந்தது. [அந்தமான் என்றால் தமிழர்கள் அல்லாதவர்கள் இருக்கும் பகுதி என்ற அவரின் அடிமனதின் உறுதி கேள்வியாய் வந்தது] அடுத்த கேள்வி.. ஆமா தமிழ்நாட்டில் எந்த ஊர்?

நான் பதில் சொன்னேன்: பரமக்குடி.

ம்..ம்… கமலஹாசன் பொறந்த ஊரா?
அப்படி சொல்ல முடியாது. ஆனா.. நானும் கமலஹாசனும் பிறந்தது ஒரே ஊரில். அதாவது பரமக்குடியில் என்றேன். (ஒரு மாதிரியாய் பார்த்தார்கள்). அப்புறம் என்ன!! போர்பந்தருக்கு காந்தியால் வந்த மரியாதை மாதிரியும், எட்டயபுரம் பாரதியால் எட்டிய இடத்தையும் கமலஹாசன் மூலம் பரமக்குடியும் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மையாய் தெரிகிறது.
சொல்லப் போனால் ஒருகாலத்தில் கமலஹாசக்குடி அல்லது கமலனூர் என்று பெயர் மாற்றம் பெற்றாலும் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். பரமக்குடிக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? இது நான் 7 வது படிக்கும் போது ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் அன்று மாலை வாரியாரின் சொற்பொழிவுக்கு வந்து இதையே கேள் என்றார். (அந்த வாத்தியாருக்கு பதில் தெரிந்திருந்தும், நாம் வாரியார் ஸ்வாமிகளின் கூட்டங்களுக்கு போவதை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்ல ஆசையால் பதில் தராது விட்டிருந்தார்). வாரியார் சொன்ன பதில். பரமன் அதாவது பெருமாள் குடி கொண்டுள்ள ஊர்தான் பரமன்குடி… பின்னர் பாமரர்களால் பரமக்குடி ஆனது என்றார்.

கமலஹாசன் படித்த பள்ளி பாரதியார் நடுந்லைப் பள்ளி பரமக்குடியில் இருக்கு. அரசுப் பள்ளிக்கே உரித்தான் அத்தனை அமசங்களும் நிறைந்த பல பள்ளிகளில் இதுவும் ஒன்று. எவ்வளவோ நபர்கள் நல்லா படித்து எங்கெங்கோ இருந்தாலும், தான் படித்த பள்ளிக்கு (அவ்வளவு நல்லா படிக்காட்டியும் கூட..) சில வகுப்பறைகள் கட்டிக் கொடுத்து மரியாதை செய்திருக்கிறார் கமல். நல்ல மனிதர். சிந்தனையாளர் என்பதோடு சமூகத்தில் தனக்கென ஒரு கடமை இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல் பட்டது தான் இந்த காரியம் மூலம் தெரிகிறது.

கமல் படங்களில் ரவிகுமார் இயக்கங்கள் எல்லாம் பளிச் தான். (எல்லா பளிச்சும் சேர்த்துத் தான்). எல்லா படங்களிலும் கடைசிக் காட்சியில் தோன்றி தன் முகம் காட்டும் யுக்தி அவரது. சென்னை ஏர்போர்ட்டில் விமானம் ஏற வரிசையில் நின்றார். அப்போதும் கடைசியில் தான் இருந்தார். ஒரு படம் எடுக்க முயற்சிக்கும் போது நான் தான் விடுபட்ட கடைசி ஆள் என்ற அழைப்பு வர, அந்தமான் விமானத்தில் தாவி ஏறப் பொய் விட்டேன்.

கமலுக்கு எவ்வளவோ பட்டங்கள் இருந்தாலும் இந்த “உலக நாயகன்” என்பது தான் அனைவராலும் சொல்லப் படுகிறது. பத்து வேடங்களில் கலக்கிய கமலின் தசாவதாரம் படத்தில் உலகநாயகனே என்ற பாட்டும் தூள் கிளப்பும். பத்து விதமான அவதாரங்களை எடுத்தவர்க்குத்தான் இது மிகவும் பொருந்தும் என்று யார் தான் யோசித்து சொன்னார்களோ?? அல்லது அப்படி ஒன்று இருப்பதை தெரியாமலெயே சொல்லிட்டாங்களொ.. (சரி இருந்துட்டுப் போகட்டுமெ. அதுக்கு என்ன இப்பொ?)

அது ஒண்ணுமில்லை. இந்த மாதிரி உலகநாயகனே என்று யாராவது யாரையாவது சொல்லி இருக்காங்களா? என்று தேடினேன். கம்பராமாயணத்தில் வந்து தேடல் நின்றது. ராமன் தேடிய சீதை மாதிரி நான் தேடிய சேதி கிடைத்தது.

அனுமன் சீதை இருக்கும் இடத்திற்கு சென்று வந்த பிறகு நடக்கின்ற காட்சியை கொஞ்சமா எட்டிப் பாக்கலாம். அனுமன் முதல்லெ தன் ராஜாவான அங்கதனை வணங்க்கினான். அப்புறம் சாம்பவானை நமஸ்கரித்தான் காலில் விழுந்து. பொறவு எல்லார்க்கும் வணக்கம் வைத்தான். பேச ஆரம்பித்தான். “இங்கிருக்கும் எல்லாருக்கும் உலகநாயகனான இராமனின் தேவி சீதை நன்மை தரும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்”. இப்பொ சொல்லுங்க. உலக நாயகன் என்று முதலில் சொல்லியது யாரு?

வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து பின்னை கடன்முறைக் கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்த இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞாலநாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான்.

அதுசரி உலகநாயகன் கமல் படிச்ச பள்ளிக்கு ஏதோ செய்தார். நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மார்க் எடுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த பரிசு தந்து வருகிறேன்.

கேக்கிரான் மேக்கிரான் கம்பெனி


நகைச்சுவை உலகில் வெற்றிக் கொடி கட்டிய காமெடி, அந்த வடிவேலு துபாய் போய்
வந்து அலம்பல் செய்வது தான். எக்கு தப்பா “நீயெல்லாம் என்ன கேக்கிரான்
மேக்கிரான் கம்பெனியிலெ என்ன செஞ்சிருக்கப் போறெ? அங்கே டாய்லெட் கிளீன்
செய்யற வேலையில் தானே இருந்தே”…. என்று குத்து மதிப்பா பார்த்திபன்
கேக்க (பார்த்திபன் குறி என்னெக்காவது தப்புமா?) “அடெ.. நான் இங்கே ஒரு
மாதிரி பில்டிங்ங்க்ங்க் கான்ட்ராக்டர்ன்னு சொல்லி வச்சிருக்கேன்”…
என்று வடிவேல் கெஞ்சுவதும் எல்லாருக்கும் நல்லா ஞாபகம் இருக்குமே!!!

செய்யும் தொழிலே தெய்வம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தான் செய்யும்
தொழிலை சொல்லாமல் மறைப்பதும் சிலருக்குக் கை வந்த கலையாய் இருந்திருக்கு.
அந்தமானிலும் அந்த விபரீதம் அடிக்கடி நிகழும். ஒரு நாள் ஃபோன் வந்தது.
அழுகுரலில் ஒரு பெண்மணியின் குரல். தன் கணவர் அந்தமானில் தன்னை விட்டு
வந்து வாழ்வதாய் தகவல். போய் பாருங்க என்ற வேண்டுகோளொடு முடிந்தது.

நானும் போய் விசரித்தேன். ஊரில் ஐடிஐ மட்டுமே படித்த அவர் அந்தமானில்
இஞ்சினியர் ஆகி (பீலா தான்) இருந்தார். அம்புட்டு பொறுப்பா கம்பெனியில்
வேலை பாத்திருக்கார்.. அவர், வீட்டோட மாப்பிள்ளை ஆகும் ஏற்பாடு வேறு
நடந்திட்டு இருந்திருக்கு. நான் போனதும், வில்லன் வந்த கதையில் வரும்
திருப்பம் போல், ஊருக்கே திரும்ப வேண்டிய நிலை வந்து விட்டது. (ஏதோ
என்னால் ஆன நல்ல காரியம்).

ஒரு காலத்தில் அந்தமானில் இருப்பவர்களுக்கு பொண்ணே குடுக்க மாட்டார்கள்.
அதுக்காகவே இன்னெக்கி அந்தமான், நாளைக்கே மதுரைக்கு மாற்றல் ஆகி வந்து
விடுவேன் என்றெல்லாம் சொல்லி (பொய் தான்) கல்யாணம் செய்து கொண்டு வருவர்.
துறைமுகம் எங்கே மதுரைக்கு வரும் என்ற யோசனை கூட செய்யாமல் பெண் கொடுத்த
புன்னியவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என் மாமனார் ரொம்ப விவரமானவர். 90 களில் மதுரைக்குப் போய் பெண் பார்த்து
விட்டு தீவு திரும்பினேன். நான் இருக்கும் தீவு நன்கவுரி. என்னைப்
பற்றியும் நான் செய்யும் வேலை பற்றியும் விலாவாரியா சிபிஐ ரேஞ்ஜில்
விசாரனை நடத்தி இருப்பது பின்னர் தான் தெரிந்தது. எல்லாம் ஒரு Safety
க்குத்தான் என்றாலும், இப்படி சிபிஐ ரேஞ்சுக்கு தேவையா?? இப்பொ எல்லாம்
அந்தச் சிக்கல் இல்லை. மொபைல் வந்த பிறகு, ஆளைப் புடிச்சிடலாம் என்ற
நம்பிக்கை வந்து விட்டது எல்லாருக்கும்.

சமீபத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானப் பயணம் (மாமனார் செலவு
இல்லிங்க…) மூன்று சீட்டில் நான் நடுவில். இடது பக்கத்தில் இருந்தவர்
என்னைப் பாத்ததும் தமிழா? என்று கேட்டார். (ஏன் அப்படி கேட்டிருப்பார்?).
அவர் துபாயிலிருந்து வருகிறார். வலது பக்கம் இன்னொருவர் வந்து
உக்காந்தார். வந்தவுடன் iPod எடுத்தார் கையில். துபாய்க்காரரோ அப்பா..
பெரிய்ய ஆளுப்பா..என்றார். நானும் என் பங்குக்கு, சலங்கை ஒலி படத்தின்
“கமல் கேமிரா” மாதிரி குட்டியான Galaxy Tab கையில் எடுத்தேன். நீங்களும்
கம்மியில்லையே என்றார் அந்த துபாய்க்காரர்.

நான் பார்த்திபன் ரேஞ்சில் அவரிடம் கேட்டேன் “என்ன செய்யறீங்க துபாய்லெ?”
அவரும் சும்மா வாட்ட சாட்டமா தான் இருந்தார். ஆனா கொஞ்சம் சன்னமான
குரலில், “Labour வேலை தான்” என்றார். “அட நீங்களும் பெரிய்ய ஆள் தான்
என்றேன்” நான். “உலகமே துபாயெப் பாத்து வாயெப் பொளக்கிறதுக்கு நீங்களும்
தான் ஒரு காரணம்” என்றேன். செம ஜாலியாய் ஆகிவிட்டார் மனுஷன். ஊருக்கும்
போனா Building Contractor என்று சொல்வதாய்த் தான் இருந்தாராம். மனதை
மாற்றிக் கொண்டார்.

ஒரே வகுப்பில் படித்து பலமாதிரி பதவிகளில் வேலைக்கு சேர்ந்திருப்பார்கள்.
சில சமயம் சிலர் சிலரின் கீழ் வேலை பார்க்கும் நிலை கூட வரலாம். நான்
ஒருவரின் கீழ் வேலை பார்த்து, பின்னர் அவர், என் கீழ் வேலை பார்க்கும்
அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றது. அதுக்காக செய்யும் தொழிலை
மாத்திக்கிறதோ மறைக்கிறதோ நல்லாவா இருக்கு?

எதற்கும் தயாராய் இருப்பது தான் நல்ல குணாதியம். எதற்கும் என்பதில்,
எல்லா விதமான மோசமான சந்தர்ப்பங்களும் சேர்த்தி தான். பழைய படத்து டயலாக்
இப்படி வரும். “தூங்குபவனைத் தட்டி எழுப்பி, அவன் கையில் வாளையும்
கொடுத்து, தலையையும் நீட்டச் சொல்கிறான்”. இதுக்கு மேலெ ஒரு மோசமான
சிச்சுவேஷன் வருமா என்ன?

சரீ..எல்லாம் சரி.. இந்த மாதிரி சிச்சுவேசனை எப்படி சமாளிக்கிறது? ஒரு
சின்ன டெக்னிக் இருக்கு. பக்கத்திலெ இருக்கும் ஆளை ஒரு தூக்கு
தூக்கிடுங்க போடும். (இப்போல்லாம் தூக்கிடவா என்றால் வேறு மீனிங்க்…
நான் மெய்யாலும் உசத்தி பேசுங்க என்கிறேன்)

அதெப்படி எதிரியை ஒசத்திப் பேச முடியும்?? இப்படியெல்லாம் எக்குதப்பா
கேள்வி கேட்டீங்கன்னா, அப்புறம் நானு உங்களை ராமாயண காலத்துக்கு
கூட்டிட்டு போயிடுவேன். செய்யும் தொழிலை மறைப்பது மாதிரியே, பெரிய்ய
ஆளையும் சும்மா ஜுஜுபி என்று மறைத்துவிட முடியுமா? ரெண்டுக்கும் ஒரே
பதில் தான்.. கூடாது.

அந்தக் காலத்து விசாரணைக் கமிஷன் இலங்கையில் நடக்கிறது. சத்தியத்துக்கோ
அது ஏதோ ஒரு கயித்துக்கோ கட்டுப்பட்டு அனுமன் நிக்கிறான் கை கட்டி
அமைதியாய். (எவ்வளவு சரக்கு இருந்தாலும் அடக்கி வாசிக்கனும்டா மாமு
என்பது ஓரத்தில் கிடைக்கும் இலவச இணைப்பு உபதேசம்). அனுமன் பத்தி கசமுசா
என்று எல்லாரும் வத்தி வச்சிருக்க… ஒரு மனுஷன் மட்டும் அனுமனுக்கு
சப்போர்ட்டாக வருகிறார். யார் தெரியுமா அது? விபீஷணன் என்கிறீர்களா?
அதான் இல்லை.

இராவணன் சபையில், அனுமன் வல்லவரு நல்லவரு என்று சொல்லி சிச்சுவேஷனை
balance செய்வது இந்திரசித்தன். உருவம் தான் குரங்கு. இவன் பலே
கில்லாடிப்பா.. ஆண்மையில் சிங்கம் மாதிரி… சிவன் & திருமால் மாதிரியே
வீரம் மிக்கவன் என்று சொல்வதொடு ஒரு சலாமும் வச்சாராம் அனுமானுக்கு.

புவனம் எத்தனை அவை அனைத்தும் போர்கடந்
தவனை உற்று அரி உருவான ஆண்தகை
சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்
இவன் எனக் கூறி நின்று இரு கை கூப்பினான்.

என்ன நிறைய நாம கத்துக்கணுமோ??

பறக்கும்… பட்டம் பறக்கும்…


ராசாத்தி ஒன்னெக் கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே…

இந்தப் பாடல் இன்று கேட்டாலும் தேனாய் இனிக்கும்.. மனதை நெருடும் ஒரு சோகம் இளையோடும் பாடல் அது.. ஜெயசந்திரன் குரல், விஜய்காந்துக்கு பொருந்தாவிட்டாலும் கூட, அந்த அசாத்திய நடிப்பில் அந்தக் குறையே தெரியாமலே போனதுதான் இதில் ஒரு சிறப்பான அம்சம்.

அதில் காத்தாடியை மட்டும் நாம வச்சிட்டு வெளியெ வந்து விடுவோம். ஏனென்றால் விஜயகாந்த இப்போது பரபரப்பாய் அரசியலில் பேசப் பட்டு வருகிறார். நமக்கெதுக்கு அந்த மதுரையோட பொல்லாப்பு??

சிறு வயதில் காத்தாடி விட்டு மகிழாத ஆட்களே மிகக் குறைவு என்றே சொல்லலாம். K for Kite என்று படிக்கும் எல்லா இளைய தலைமுறையும் கூட அதை ஒரு முறையாவது விடாமலா போய் விடுவார்கள். மொட்டை மாடியிலும், கடற்கரைகளிலும், கிரவுண்ட்களிலும் பார்க்கலாம்.

அந்தமானில் இல்லாத சிலவைகள் என்று பட்டியல் போட்டால் கமுதை குதிரை எல்லாம் இருக்கும். (அதாவது இங்கு இல்லை). பட்டம் விட்டு விளையாடும் பழக்கும் கூட இங்கு இல்லை. ஒரு வேளை 8 மாதம் மழை பெய்வதால் இது எடுபடாமல் போயிருக்குமோ?? (ஆனா கருவாடு மட்டும் செமயா தயாராவதாய் தகவல். அது எப்படி மழையிலும்.. மலைப்பாத்தான் இருக்கு)

காத்தாடி விடும் நிகழ்வை இன்றும் ஒரு திருவிழாவாக ஆக்கி மகிழ்கிறது மோடியின் குஜராத் அரசு. இதற்கு பக்க பலமாய் வண்ண வண்ண காத்தாடிகளோடு அமிதாப் கூட விளம்பரத்திலேயே அசத்து அசத்து என்று அசத்துகிறார்.

காத்தாடி ராமமூர்த்திக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் அதனை இங்கே சொல்லாமல் விடுகிறேன். (அப்பொ இங்கே சொல்லப்பட்ட மத்த சேதி எல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன?? என்று நீங்கள் கோபப் பட வேண்டாம்..ப்ளீஸ்).. அப்பொ சொல்லிட்டா பிரச்சினை இல்லை தானே?

மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி இந்தப் பேர் எல்லாம் எப்படி வந்தது? அவர்கள் நாடகத்தில் நடித்த பாத்திரத்தின் பெயர் தான் பின்னர் நிலைத்துவிட்டது. காத்தாடி என்ற பாத்திரத்தில் நடித்து கலக்கிய ராமமூர்த்திக்கு காத்தாடி பறக்காமல் ஒட்டிக் கொண்டது தான் ஆச்சரியம்.
எனக்கு அந்த கவலை இல்லை.. கல்லூரி நாடகத்தில் பெண் வேடம் போட்டு தான் நடித்திருந்தேன்.. கலக்கினேன் என்று நானே எப்படி சொல்ல முடியும்? நண்பர்கள் கிரங்கித்தான் போனார்கள் (என் மேக்கப் பார்த்து..)

காத்தாடியின் இன்னொரு பெயர் தான் பட்டம். ரொம்பவும் மண்டையை ஒடெச்சி படிச்சி வாங்குறதுக்கும் பட்டம் என்கிறார்கள்.. ஆனா ஜாலியா செஞ்சி விளையாடற பொருளுக்கும் பட்டம் என்கிறார்கள். என்ன இது பெரிய்ய வெளெயாட்டா இருக்கே… விருதுக்கும் கூட பட்டம் தருகிறார்கள் என்றும் சொல்வதுண்டு..

இந்த பட்டம் என்றவுடன் ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வரும்.

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல் போலே..

பட்டம் போல் அவர் பள்பளப்பார்…
நூல் போலே இவர் இளைத்திருப்பார்..

இரு வேறு உலகம் இது என்றால்..
இறைவன் என்பவன் எதற்காக??

இறைவன் உலகத்தைப் படைத்தானா?
ஏழ்மையை அவன் தான் படைத்தானா?

இந்தப் பாடல் தரும் சேதியினைத்தான் நம்மூர் உலக நாயகன் கமல் சொல்றார் இப்படி: “அனாதை என்பவர்கள் கடவுளின் குழந்தை என்பது உண்மையாக இருக்குமானால், அந்த கடவுளுக்கே குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்”

முரட்டுத்தனமான நாத்திக வாதமாய் இருப்பினும் கூட, உண்மை அதில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

என்னாலெ காத்தாடி பத்தி, இப்படி நடிகர் திலகம் வரை தான் யோசனை செய்ய முடியுது. ஆனா… இதே மேட்டரை Mr கம்பர் யோசிச்சா…? அவர் எப்படி யோசிப்பார்? அங்கும் ஒரு திலகம் வருகிறது. கொஞ்சம் ஒரு எட்டு எட்டிப் பாத்துட்டு தான் வருவோமே!!

அனுமனின் வீரதீரச் செயல் பார்வையில் படுது நம்ப கம்பருக்கு. உத்துப் பாத்தார்.. சாவே வராத வரம் வாங்கிய தலைவருக்கெல்லாம் திலகம் மாதிரி இருந்தாராம் நம்ம அனுமன். (இப்பொ தெரியுதா..?? நம்மாளுங்க ஏன் நடிகர் திலகம், நடிகையர் திலகம், மக்கள் திலகம் என்றெல்லாம் பெயர் வைச்சாங்க என்று!!)

அந்த வீரன், அரக்கியின் வாயில் புகுந்து குடல்களைச் சுற்றிக் கொண்டு வானத்தே உயர எழுந்தானாம். அதைப் பாத்த கம்பனுக்கு கயிறு நிலத்திலிருந்து புறப்பட்டு உயரப் பறக்கும் காத்தாடி மாதிரி இருந்ததாம்..

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி சுடர்கொண்டு உடன் எழுந்தான்
மாகால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்.

அது சரி…. உங்களுக்கும் எதைப் பாத்தாவது
இப்படி காத்தாடி ஞாபகம் வருதா?? வந்தா சொல்லுங்க…

நாக்கு மூக்கா.. நாக்கு மூக்கா


இந்த கொலெவெறி பாட்டு வரும் வரைக்கும் இந்த நாக்கு மூக்கா தான் தமிழர்களின் நாவில் வலம் வந்த மந்திர வார்த்தைகளாய் இருந்தன.

என்ன இது? எப்புடி எல்லாம் பாட்டு எழுதுறாய்ங்க என்று திட்டிக் கொண்டும் கூட அந்தப் பாட்டைக் கேட்டனர். “அப்புடிப் போடு போடு” பாட்டுக்கு அடுத்த படியாய், அதிகமாய் தமிழ் அல்லாத சேனல்களில் வந்த பாடல் இந்த “நாக்கு மூக்கு” தான். (கொலெ வெறி எல்லா ரெக்கார்டையும் முறியடித்து விட்டது என்பது சமீபத்திய கதை)

ஆமா.. தெரியாமத்தான் கேக்கிறேன்.. இந்த நாக்குக்கும் மூக்குக்கும் என்ன சம்பந்தம்??

அடக்க வேண்டிய உன்னதமான விஷயங்களில் நாக்கு தான் முக்கியம் என்று அய்யன் வள்ளுவர் சொன்னது யாருக்கும் ஞாபகம் இல்லெ. ஆனா இந்த மேட்டரை விவேக் சொன்னதும் நிறைய மண்டை உள் வாங்கிக் கொண்டது (என் மண்டையும் இதில் அடக்கம்)

நாவை ஒழுங்கு மரியாதையா வச்சிருந்தா மூக்கும் நல்ல படியா இருக்கும் என்கிறார்களோ??

எங்க விஷயத்திலெ அனாவசியமா மூக்கை நுழைக்காதே என்கிறார்களே… பாவம்.. மூக்கு என்ன பாவம் செய்தது? அனாவசியமா திட்டு வாங்குதே..

கமல் படங்களை கவனித்துப் பார்த்து வந்தால் ஓர் உண்மை புலப்படும். சண்டைக் காட்சிகள் அல்லது கதவில் முட்டிக் கொள்வதும், பிறர் தள்ளி விடுவதும் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் மூக்கில் அடி வங்கும் காட்சியும், மூக்கில் ரத்தம் வரும் காட்சியும் இடம் பெறும்.. ஏன் இப்படி??

இன்றைய இளைய தலைமுறை…. “பிகர் சூப்பரா இருக்கு” என்று ஜொள்ளுவிடும். ஆனா அதே பிகரை, வீட்டுலெ போய் பாத்து பெருசுகள் “மூக்கும் முழியுமா லட்சனமா இருக்கா..” என்பார்கள். அங்கும் அந்த மூக்கே மூலதனம்.

மூக்குகள் பலரகம்.. பல விதம். நாசர் மூக்கு அதில் தனி ரகம். நாக்கு மேலே பல்லுப் போட்டு எப்படி பேசப்போச்சி என்று மூக்குக்கு மேல் கோபமாப் பேசுவார்கள்.. அப்பொ இந்த மூக்கு என்ன கோபமூர்த்தியின் வாகனமா என்ன??

பரமக்குடியில் ஒரு காலத்தில் முத்தாளம்மன் கோவில் திருவிழா காலங்களில் மிகப் பெரிய அளவில் விளம்பரப் பலகை வைத்து இருப்பார்கள். கரகரப்பான குரலில் “TAS ரத்தினம் பட்டனம் பொடி” விளம்பரம் தான் அது.

மூக்குப் பொடி விளம்பரம் அது. அதைப் பாத்து அந்தக் பள்ளிக் காலத்தில் திருக்குறள் சொல்வார்கள்.. இன்னும் மன்சிலெ நிக்குது.

பொடிபோட்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
சளிபிடித்துச் சாவாரே சாவர்.

இந்தப் பொடிப் பழக்கம் இப்போது குறைந்து விட்டது (இது மாதிரி ஒரு நாள் குடிப் பழக்கமும் போயிடுமா??) அந்தமானுக்கு தாயகத்திலிருந்து பொடி போடும் பழக்கம் உடையவர் வந்து சேர்ந்தார்.. அப்போது தேடிய போது தான் ஒரே ஒரு கடையில் பொடி கிடைக்கும் அரிய தகவல் கிடைத்தது. (மனுஷன் என்ன என்னவெல்லாம் தெரிஞ்சி வச்சிக்க வேண்டி இருக்கு??)

“எனக்கு மூக்கில் வேர்க்கிறது? என்ன செய்யலாம்” என்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது கல்கண்டு தமிழ்வாணனுக்கு கேள்வி கேட்டு எழுதினேன்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா??

கழுகுக்கு மூக்கிலெ வேர்க்கிற மாதிரி என்பார்கள். நிங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம்.. அந்த வேலைக்கு போகலை என்றாலும் அவர்களுக்கு … (வேண்டாமே… ஏற்கனவே கபில்சிபில் கோபமா இருக்கார்….)

“எட்டுக்கல்லு பேஸிரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு” என்று ஒரு பழைய ஹிட் பாடலில் வரும். ஏற்கனவே எடுப்பான மூக்கு அந்த நாயகிக்கு… இன்னும் எடுப்பாக்க போடும் திட்டம் அந்தப் பாட்டில் வரும்.

படத்தில் மட்டுமல்ல… எடுப்பாய் எங்கும் இருப்பது இந்த மூக்கு தான். மூக்கறுபட்ட சேதிகள் ஆயிரம் தான் இருந்தாலும் எல்லார் மனதிலும் உடனே வருவது சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட விஷயம் தான்.

எப்படியோ சூர்ப்பனகை வரைக்கும் வந்தாச்சி.. லேசா.. ஒரு எட்டு கம்பராமாயணம் பாத்துட்டும் போயிடலாமே..!! ஆனா.. நாம போற நேரத்துக்கு சூர்பனகை மூக்கு மேலே கையை வைக்க முடியாது.. அப்போ யாரோட மூக்கு பத்தி ??? வாங்க இன்னும் உள்ளே போவோம்..

அது அசோகவனம். கண்டேன் சீதையை என்றும் கண்டு கொண்டேன்…  கண்டு கொண்டேன் என்றும் அனுமன் இருந்த நேரம். ஆனால் சீதையிடம், தான் ராமனின் தூதன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

ராமன் படம் வரைந்து பாகங்களை குறி ரேஞ்சில் ராமனைப் பற்றி அக்கு வேறாய் ஆணி வேராயும் அலசும் இடம்.. அண்ணன் அனுமன் அவர்கள், ராமனின் மூக்கு மேட்டர் பத்தி சொன்ன விஷயத்தை மட்டும் சின்னதா ஒரு ஜூம் போட்டு படிக்கலாமே..

கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்திலையும் கேட்டிருப்பீங்க… ஆனா கொழுந்து ஒளி பாத்திருக்கீங்களா?? பிரகாசமாவும் இருக்கனும்… ஆனா சுட்டுவிடக் கூடாது.. அப்பொ, அது தான் ஒளிக் கொழுந்து. எங்கிருந்து வருதாம்?? இந்திர நீலக் கல்லில் இருந்து. (இது say X ) மரகதமணியிலிருந்து வரும் ஒளியின் ஒட்டு மொத்தம் (இது say Y).

இந்த X & Y ரெண்டும், என்னை ராமர் மூக்கு மாதிரி இருக்கு என்று சொல்லப்படாதான்னு கெஞ்சுதாம்.. அது மாதிரியா இருக்கு மூக்கு??

இன்னும் யோசிக்கிறார் அனுமன்.. சுந்தரி என்பவள் அழகி. இந்திர லோகத்து சுந்தரியோ அழகோ அழகு. கோபம் சாதாரணமானது. இந்திர கோபம் எப்படி இருக்கும்?? அந்தமாதிரி இருக்கிற பூச்சியைப் புடிக்கிற பச்சோந்தி மாதிரி இருக்குன்னு சொல்லாமா ராமர் மூக்கை??

பச்சோந்தி கலர் மாறும்.. ஐயா மூக்கு அப்படி இல்லையே… அப்பா… முடியலை என்று சொல்ல முடியாமலேயே முடிக்கிறார். அப்படி உவமையே சொல்ல முடியாத மூக்காம் அந்த மூக்கு.

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்
விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ
தள்ளா ஒதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு
ஆமோ

ஆமா… மூக்கு மேலெ விரல் வைக்கிற மாதிரி உங்க லைப்லெயும் ஏதும் நடந்திருக்கா??

இரண்டாம் கொலெவெறி…


அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை… இந்த கொலெவெறி பாட்டு ஒரு தடவை கேட்டாலே போதும்.. அப்படியே முனுமுனுக்க வைக்குது.. பாக்கப்போனா… இல்லை.. இல்லை.. கேக்கப்போனா.. ஏதோ சிம்பிளான பாட்டு தானே என்று Y dis kolaveri kolaveri kolaveri kolaveri di என்று முனுமுனுத்தேன்..

என் பையன் நக்கீரன் ஆகி விட்டான். மூனு தடவெ தான் கொலெவெறி வரும். நீங்க என்ன நாலாவதா சேத்துப் பாட்றீங்க… அட.. ஆமா.. அந்த ரெண்டாம் கொலை வெறியெ தூக்கிப்….. படிச்சா தான் மூனு வெறியில் அந்தப் பாட்டு அடங்கும்.

இந்தப் பாட்டில் எத்தனை தடவை கொலைவெறி வருது என்பதை யாராவது எண்ணிப் பாத்தாங்களா?? அல்லது இப்படி யாராவது என்னியாவது பாத்தாங்களா?? பாத்து வைங்க யார் கண்டா?? கோன் பனேகா குரோர்பதி கேள்வியாகவும் வரலாம்..

கொலை பற்றிய ஆய்வு செய்யும் ஒருவர் என்னிடம் வந்தார். (ஏன் இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் என்னையெ பாக்க வரனும்??) இந்த கொலெவெறி பாட்டுக்குப் பிறகு கொலைகள் அதிகமாகும் என்றார்.. நான் நடுவில் புகுந்து..அட இது வடிவேல் டயலாக்.. டம்மி பீஸ், அவனா நீ, பன்னாடை, கொலெவெறி, வடை பொச்சே, மறுபடியுமா??, ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க…இப்படி தத்துவங்களை சொல்லி சமாளிச்சேன்.. என்ன செய்ய தமிழன் மானம் கப்பல் ஏறி போயிடக்கூடாதுன்னு தான்.

ஆமா சமீபத்திய இண்டியா டுடே ஹிந்தி பதிப்பில், ஒரு பக்கத்துக்கு கொலெவறிப் புராணம் பாடி வைத்திருக்கிறது.. சரி அது மீடியாக்கள் பாடும் பாடு. படுத்தும் பாட்டு. நாம நம்ம பாட்டுக்கு பாட்டுகள் பாப்போமே!!

பாட்டுக்கள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. இது பலருக்குத் தெரியும். கொஞ்சம் உள்ளே போய்ப் பாக்கலாமே???
கேள்வி கேட்டு பதில் வாங்கும் பாட்டுக்கள், அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். வின்னுக்கு மேலாடை எது? என்று கேட்கும் சுரதா பாடல் செமெ ஹிட். ஆண்களில்லாத உலகத்திலெ பெண்களினாலே என்ன பயன்? இப்படியும் கேள்வி கேட்டு பாட்டில் பதில் தேடுவது பழைய கலை.

ஒரு பொண்ணைப் பத்தி பையன் பாடுவதும், ஒரு பையனைப் பத்தி பொண்ணு பாடுவதுமாய் பாட்டு வரும். அப்புறம் கிளைமாக்ஸில் அது நீதான் என்று முடியும் வகையான பாடல்கள் கடுப்பேற்றும் பாடல்கள்.. ஆனா கடைசியில் சுபம் கியாரெண்டி.

மெட்டு பாடினால் பாடல் பாடும் வகையும், போட்டி பாடலின் அடுத்த வகை.. கமல் ஸ்ரீதேவி பாடும், சிப்பி இருக்குது முத்துமிருக்குது என்பது அந்த வகை.

புதுக் கவிதையை போட்டு வாங்குவதாய் பாட்டும் வந்தது.
சமீபத்தில் விதண்டாவாத வகையாய், எது சொன்னாலும், என்ன சொன்னியா என்பது போல்… ஆனா கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமெ பாடும் பாட்டு, ஒரு புது ரகம்.. இதெய் இப்பொ செத்தெ விரிவா பாக்கலாமே…

காதலனுக்கு, காதலி தலை முடியைப் பாத்தா.. கரிகாலன் கருகிய கால் ஞாபகம் வருதாம்; சொன்னா நாம ஒத்துக்குவோமா?? இல்லெ..இல்லை.. அது தாஜ் மஹால் நிழல் இது காதலியின் பதில்.

சரி இப்படியே காதலன் சொன்னதுக்கு கொஞ்சமும் சளைக்காமெ சொன்ன அடுத்தடுத்த வீம்பான, ஆனா ஆனந்தமான கற்பனை வர்ணனை வரிகள்.

காதலன்: சேவலேட செவப்புக் கொண்டெ தான் உன் உதடு.
காதலி: No…No… அது மந்திரிச்ச தகடு.

கழுத்து வலம்புரி சங்கு மாதிரி ஹீரோவுக்கு தெரிஞ்சா.. ஹீரோயினுக்கு அது கண்ணதாசன் எழுத்து மாதிரி இருக்காம்… ஜாலியா இருக்கு இல்லை.. இல்லையா?? டன்டன டக்கன டன்டன டக்கன பாட்டை உத்து கேட்டல் உங்களுக்கே அந்த திரில் புரியும்.
இன்னும் ஒரு வித்தியாசமான ரகம்.. கடைசியில் எதையாவது சொல்லி முடிப்பது. உதாரணமா.. எவ அவ?? என்னைக் கணக்கு பன்னேன்டா???.. இப்படி

கணக்கு என்பது பிரச்சினை.. தீர்ப்பது என்பது விடை வெளியே கொண்டு வருவது. கணக்கு பண்றது என்றால்… முட்டி மோதி தலைய ஒடைச்சிக்கிறதா… அல்லது கணக்கோட மூழ்கி இருப்பதா??
இதை அப்படியே ஓரம் கட்டி வைத்து இதே மாதிரி ஒரு சிச்சுவேஷனுக்கு கம்பர் என்ன சொல்றார் என்று பாத்துட்டு வரலாமே..

அரக்கர் Vs அரக்கியர் – உயிருக்குயிராய் இருப்பவர்கள்; அரக்கர்கள் கள் சாப்பிடுகிறார்கள் (கவனிக்கவும்… அரக்கர் தான் சரக்கடிப்பாய்ங்க… நான் சொல்லலை… கம்பர்; நமக்கு எதுக்கு அந்த வம்பு?)அனா யார் கலக்கிக் கொடுத்தா தெரியுமா?? (இப்பொ எல்லா படத்திலும் சந்தானம் தான்.. அப்பொ கம்ப காலத்தில்??) அரக்கியர்.. அட.. பெண்களுக்கு எல்லா உரிமைகளும் அப்பொவே குடுத்திருக்காங்களோ??

வேறு என்ன சாப்பிட்டாய்ங்க?? இசைத் தேனையும் சேர்த்து.. அடடே அப்புறம்??

லிப் டு லிப் கிஸ் (நாகரீகமா சொன்னா செவ்வாயின் அமுதம் பருகினர்).

சொன்ன பேச்செல்லாம் கேட்டனர். காலில் விழுந்து வணங்கினர்.. திட்டினாலும் கேட்டு சும்மா இருந்தாகலாம்.

ஒரு வேளை… என்னைக் கணக்குப் பன்னேன்டாடாடாடா என்று சொல்லி இருப்பாங்களோ?? யார் கண்டா?? பாத்த அனுமனுக்குத் தான் வெளிச்சம்.

தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செவ்வாய்
ஊறல் மாந்தினர் இன் உரை மாந்தினர் ஊடல்
கூறல் மாந்தினர் அனையவர்த் தொழுது அவர் கோபத்து
ஆறல் மாந்தினர் அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கியர்.

அது சரி.. நீங்க யார் கிட்டேயாவது நல்லா வாங்கிக் கட்டிகிட்டது உண்டா??

மொபைல் மொபைலா முந்திரிக்கா…


மொபைல் போன் வந்த காலத்தில் அது, நாம் போன் பேசவும், நமக்கு போன் வந்தால் பதில் சொல்லவும் மட்டும் தான் இருந்தது.. ஆனால் காலப்போக்கில் அதில் கேமெரா, மெமியோரி கார்ட். பாட்டு இன்டர்நெட் என்று சேத்துக் கொண்டே போக..அதன் பரினாமமும் மாறிட்டே வர ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஆறு வருஷமாய் ஒரே Basic Model போன் வைத்திருந்தேன்..ஏதாவது சிரமங்கள் வரும் போது மட்டும் (கமல் சலங்கை ஒலியில் ஒரு டப்பா கேமிராவைக் காட்டி வழிந்து சொல்வது போல்) இதுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லி வந்தேன்.

ஒருநாள் கூட்டமாய் இருக்கும் போது ஒரு பொம்பளை அதிகாரி, என்ன இன்னுமா இந்த போனை விடாம வச்சிருக்கீங்க என்று சொன்ன போது தான், நான் சமூகத்தில் அப்டேட் ஆகாமல் இருக்கும் விஷயம் தெரிந்தது. அத்துடன் மொபைல் போன் தான் ஒரு தற்போதைய ஸ்டேட்டஸ் சிம்பள் என்பதும் தெரிந்தது.

உடனே வீட்டுக்காரியிடம் கெஞ்சிக்கூத்தாடி நோக்கியா N95 வாங்கி வைத்தேன். என் கையில் அதைப் பாத்து அசந்து போன, என் கீழ் வேலை பார்க்கும் Executive Engineer ம் அதே வாங்க, நான் மனசு நொந்து போனேன்.. விரைவில் அந்த N95 அதீத சிக்கல் தர.. நான் Samsung Carby Pro க்கு மாறினேன். அதற்கு சில வாரங்களில் புது பொறியாளர் என் கீழ் வந்தார். போனை உற்றுப்பாத்தா..ஆகாயம் பாருங்க…நட்சத்திரம் பாருங்க என்று கையில் Samsung Galaxy.

எனக்கும் போன் மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்க, என் போன் கடலில் விழ. அடுத்த தேர்வு Galaxy Tab.. இதில் போன் மட்டும் பேசுவது கஷ்டம். மத்த எல்லாம் செய்யலாம்.. (இது தேவையா..என்று என் மனைவி பாடாய் படுத்துகிறாள்).. ஆனா அடுத்தவர்களுக்கு படம் காட்ட இர்து தான் நல்ல ஐடியா..

சமீபத்தில் மதுரையில் மனைவி பக்க விசேசத்துக்கு அந்தமானிலிருந்து போனோம்.. அது கிரஹப்பிரவேஷம்.. கீழே பார்க்கிங்க்..வீடெல்லாம் மேலே.. வயதான விருந்தாளிக்கு மாடி ஏற முடியாத நிலை.. எனக்கு அழைப்பு வந்தது. (உத்தரவு வந்தது என்பதின் நாகரீக வடிவம்) சும்மா படம் காட்றீங்களே..வீட்டை வீடியோ எடுத்து காமிங்க..என்று… படியில் ஏடுவது தொடங்கி, டாய்லட் வரை ஒன்று விடாமல் நேர்முக வரணனையோடு (கம்பராமாயண கலாட்டா இல்லாமல்) செய்து முடித்து அனைவரிடமும் சபாஷ் வாங்கி (அந்த Tab வாங்கும் போது வாங்கிய திட்டுக்கு ஒரு வழியாய்) சரி ஆனது.

மொபைல் மாத்துவது பெரிய்ய காரியமில்லை..அதை எடுத்துப் போவது தான் சிரமம். பேண்ட் பாக்கெட்டில் போட்டா ஆண்மைக்குறைவு வரும்கிறாங்க.. பாக்கெட்ல வச்சா இதயக் கோளாறுக்கு நாள் குறின்னாங்க..கையில வச்சா பக்காவா வாதம் வருமாம். காதுலெ வச்சா ரேடியேஷன்.. முட்டையை நடுவுலெ வச்சா குஞ்சு  பொரிக்கலாமாம்.. நல்ல வேளை ஆம்லெட் போட மட்டும் ஐடியா தரலை..அட.. அதுக்குத்தான் தொப்புள் தயாரா இருக்கே..இது எதுக்கு??

சரி இடுப்புலெ மாட்ட உறை வாங்கிட்டா..அப்புறம் பெல்ட் மாத்த முடியாது.. மொபைலோ, பெல்ட்டோ எது இல்லாமலும் உயிர் வாழ்வது கஷ்டம்..

பெரிய Tab ஐ சுருட்டி வைக்க பெரும்பாடு பட வேண்டி இருக்கு.. சரியான உறை தேடும் வாய்ப்பு கிடைத்தது… ஒரு நாள் தெரியாத்தனமா Lacal flight ஐ International airport வழியா உட்டாங்க.. நானும் பந்தாவா டாலர் விலைகளை மேஞ்ச்சிட்டே வந்தேனா… Tab க்கு உறை கிடைத்தது. அருமையான பேக்கிங்க்.. நல்ல கம்பெனி…  நல்லா தெறந்து பாத்தா அந்தக் கால பாட்டிமார்கள் வைத்திருக்கும் சுருக்குப் பை.. (விலை மட்டும் பல நூறு டாலர்கள்..விடு ஜுட்…ஒரே ஓட்டம் விமானத்தில் போய் உக்காந்துட்டேன்)

உறைன்னு சொன்ன உடனே விவேக் சொன்ன விவேகமான ஜோக் தான் நெனைவுக்கு வருது… கட்டில் மெத்தெக்கு உறை போட்றோம், தலையணைக்கு உறை, பாட்டிலுக்கு உறை..இப்படி எல்லா உறையும் போட்ட நீ போட வேண்டிய ஒரு உறையைப் போடலியே என்று கு க வுக்கு ஆதரவா பேசுவார்.. (இப்பவெல்லாம் அதைப் பத்தின பிரச்சாரம் தேவையே இல்லை.. விக்கிற விலைவாசியில் நாமே குழந்தை நமக்கதுக்கு குழந்தை தான் சரி)

அது சரி..உறையைப் பத்தி இவ்வளவு உரை எழுதிட்டு கம்பரை இழுக்காமெ உட்டா எப்படி?? அதானெ.. நாம அப்படியே உடுவோமா என்ன?? கம்பரையும் தான் வம்புக்கு இழுப்போமே…

நாம மொபைலுக்கு உறை போட்டா, அவரு இந்த உலகத்துக்கே உறை போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கிறார்.. அப்படியே ரிவர்ஸ் கியரு… (கொலைவெறி டியூன்லெ சொன்னா தான் பின்னாடியே போகும் போலெ…) போனோன்னா..அங்கே அனுமன் இலங்கை போய்க் கொண்டிருக்கிறார்.. பறந்தபடி. டிராபிக்கே இருக்காதுன்னு நெனைச்சா.. அங்கேயும் பெண் டிராபிக் போலீஸ் மாதிரி வழி மறிக்கும் அங்காரதாரை.. அவள் எப்படி இருக்கா என்பதை சொல்லியாகனும். ஆமா.. பெண்களை வர்ணிக்கனும்னா கம்பருக்கு ஏக குஷி..அது ஹீரோயின், வில்லி யாராகவும் இருக்கலாம்.

பல்லு இருக்கே பல்லு அது பிறை சந்திரன் மாதிரி.. இடுப்பிலெ கருப்பா பெர்முடாஸ் போல யானைத்தோல் டிரஸ் போட்டிருந்தா.. அந்தக் கலரு பாத்தா சிவன் கழுத்து மாதிரி (விஷம் சாப்ட மாதிரி) இருக்காம்.. வாயைப் பாத்தா… பிரம்மன் படைத்த உலகுக்கு ஓர் உறை மாதிரி இருக்காம்…இது எப்படி இருக்கு??

துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள்
கண்டத் திடைக் கரையுடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்.

உறை பற்றிய இந்த உரை இத்துடன் முடிகிறது..

வேறு சேதி ஏதும் மாட்டாமலா போகும்??

அழகிய தமிழ் மகள்


சினிமாவில் கமல், மனிரத்னம், ரஹ்மான் இப்படி சிலர் வந்ததால் தமிழர்களின் கொடி பறக்கிறது. என்ன தான்  சிலர் தமிழர்களின் பெயரை எவ்வளவோ மேலே கொண்டு வந்தாலும் இந்த வட நாட்டவர்களுக்கு தமிழர்கள் என்றால் கொஞ்சம் இளக்காரம் தான்.

அதுவும் ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் தமிழன் எப்போதும் காமெடியன் தான். ஐயோ, ஐயோடா, ஐயய்யோ இவைகள் தான் தமிழன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று வடிவேல் ஸ்டைலில் கேக்க மட்டும் தான்முடியும்!!!

அந்தமானில் 15 – 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்கள் ஐயாலோக் என்று கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் பெரும்பாலும் கூலித் தொழிளார்களாக மட்டுமே இருந்தனர். இப்போது இந்த அய்யாலோக் என்பது மாறிவிட்டது. ஏனென்றால் பல துறைகளில் தமிழர்கள் மேலே வந்துவிட்டனர். அரசியல், வியாபாரம், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இப்படி எல்லா துறைகளிலும் தமிழர்கள் டாப்பில் வரத்துவங்க… அந்த ஐயா லோக் மறைந்து விட்டது.

ரொம்ப சுகமா கம்யூட்டரில் தமிழ் எழுதுகிறேன். அப்படியே இலக்கிய காலத்தை கொஞ்சம் புரட்டிப் பாத்தா??? அவங்க என்ன கம்ப்யூட்டர் வச்சிட்டா எழுதுனாங்க..அந்தக் காலத்தில் ஏது அழகி??… இப்பவே நம்ம ஆட்களுக்கு தமிழ் மெயில் எழுதுறது ரொம்ப சிரமமா இருக்கு. ஏடு எழுத்தாணி வைச்சி எப்பிடி அந்தக் காலத்திலெ எழுதி இருப்பாங்க? என் கவலை என்னென்னா?? Ctr Z, Ctr C, Ctr V போன்ற வசதி இல்லாம எப்படி எழுதி இருப்பாங்க…??

இந்தக் கவலை ஒருபக்கம் இருக்கட்டும். கவியரசர் கம்பன் கனவு கண்ட பத்தி நான் கண்ட கனவு கேளுங்க…

ராமாயணம் எழுதுறப்பொ கொஞ்சம் அசதியா படுக்கிறார் நம்ம கம்பர். பத்தாயிரம் பாட்டு எழுதுறது என்ன சும்மாவா?? கனவு வருகிறது. அழகிய பெண் ஒருத்தி கெஞ்சியபடி : “காப்பியம் எழுதுறீங்களாம்லெ.. என்னையும் சேத்துக்கோங்களேன்.. ப்ளீஸ்”.

கம்பன் : யார் நீ?
அழகி: தெரியவில்லையா? நானும் தமிழின் மகள் தான்.

கம்பன்: அழகிய தமிழ் மகளே!!! உன் பெயர்?
அழகி: “ஐயோ”

கம்பன்: ஏன் இந்த பயம்? பயப்படாமல் சொல். உன் பெயர்??

அழகி: கவியரசரே… என் பெயர் தான் “ஐயோ”.. தமிழின் புதல்வி நான். என்னை யாரும் எந்தப் புலவரும் பாடுவதில்லை. உங்கள் இதிகாசத்திலாவது என் பெயர் வரட்டும்…ப்ளீஸ்..

 தூக்கம் கலைந்து உடனே எழுத்தாணி பிடிக்க… கவிதை கனவில் வந்த அழகிய தமிழ் மகளையும் சேர்த்து வருகிறது. ஐயோ என்ற அமங்கலச் சொல் கம்பன் கைபட்டு மங்கலமாய் இராமனை வர்ணிக்கும் விதமாய் மிளிர்கிறது.

பாடல் இதோ…
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ
இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்.

இனி மேல் வட நாட்டவர் யாராவது ஐயோன்னு தமிழனை அவமரியாதை செய்தால் உங்களுக்கு இராமனை நினைக்கும் வாய்ப்பு அளித்ததாய் சந்தோஷப்படுங்கள்.

இல்லாவிட்டால் ஐயோ ஐயோ என்று வடிவேலு ஸ்டைலில் ஜாலியா இருங்க..

யானை வரும் பின்னே


நண்பர்களே…

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே இது பழமொழி.

சுனாமி வரும் பின்னே பூகம்பம் வரும்முன்னே. இது புது மொழி.

பொங்கலுக்கு முன்பே வரும் போகியை வைத்து விவேக் ஒரு படத்தில் கலக்கு கலக்கென்று கலக்கி இருப்பார். நல்ல சேதி சொன்ன காமெடி அது.

அரசு ஊழியர்களுக்கு போகி எப்பொ தெரியுமா?? ஏதாவது என்கொயரி ஆரம்பிக்கும் போது. அல்லது டிரன்ஸ்பர் ஆர்டர் வருவதாய் தகவல் வரும் போது. எல்லாம் கொளுத்தி துடைத்து விடுவார்கள்.. (ஒவ்வொரு வருஷமும் கிளீன் செய்யும் ஆட்களை பாத்திருக்கேன்- டிரன்ஸ்பர் தான் வந்த பாடில்லை)

அந்தமானில் 2004ல் சுனாமி வந்தது. அது இங்கிருந்து 1200 கிமீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்து சென்னை சேர்ந்த்து. தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டு ஒரு நபர்  இங்கே வந்து கட்டி ஏறினார் எல்லாரையும். பொறுப்பில்லாத ஆட்கள்… நீங்கள் ஒரு ஆள் கூட சென்னைக்கு தகவல் தரலையேன்னு.. அந்தமான் & சென்னை சுனாமி நேர வித்தியாசம் 20 நிமிஷம் இருந்திருக்கேன்னு…

2004 ல் வந்திருப்பது சுனாமி என்று நமக்கு தெரியவே ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது. (கமல் ரசிகர்கள் – அன்பே சிவம் படம் பாத்தவர்களுக்கு சுனாமி தெரிந்திருந்தது)

இப்பொ சுனமி வரும் முன்பே தமிழகத்தை காக்க ஏற்பாடுகள் ஆகி விட்டது. அந்தமானில் கடல் மட்டம் எதிர்பாராத வகையில் உயர்ந்தால் சென்னைக்கு தானாக
தகவல் தந்து விடும்.

அது சரி… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை வரும். அந்தமானுக்கு யார் தகவல் தருவார்?? என்று அப்பாவியா கேட்டேன். பதில் இல்லை..

சரி… நமக்கெதுக்கு வம்பு?? நம்ம பாட்டுக்கு கம்பரை பிடிச்சி கலாச்சிக்கிட்டு இருக்கலாம் சுனாமி வரும் வரை.

சுனாமி வந்தால் தானே ஆபத்து.. அது வரும் முன்னேயே அப்படி ஆபத்து ஏதும் வருமா??

டிஎன்கே : சுனாமி விடுங்க. ஒரு சேதி …அது காதில் விழுமுன் வருத்தம் தருமா?

கம்பர்: தந்ததே.

டிஎன்கே: வேறெ என்ன செய்தது?

கம்பர்: வருத்தம் தந்தது; வாட வைத்தது; திகைக்க வைத்தது; மன துயரம் பெருக வைத்தது; அழ வைத்தது; நிலத்தில் விழ வைத்தது.

டி என்கே: அது எப்படிப்பட்ட சேதி?

கம்பர்: அது சொல் இல்லை… சுடுநெருப்பு.

ராமன் காட்டுக்கு போவனும்கிற சேதியான் நெருப்பு கோசலையின் காதுக்கு சேறும் முன்பே இப்படி எல்லாம் செய்ததாம்..

ஆங்கு அவ் வாசகம் என்னும் அனல்குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ.

கம்பனோடு உரையாடல் மீண்டும் வரும்…

ஹீரோ, ஹீரோ தான்


வில்லன்கள் ஹீரோ ஆகலாம். ஆனா ஹீரோ வில்லன் ஆக முடியாது. அப்படியே ஆனாலும் அது ஆன்டிஹீரோ என்று தான் சொல்ல முடியும்.

ஆனா கமல் மாதிரி சில புண்ணியவான்கள் முயற்சியால்,காமெடி நடிகை, ஹீரோயின் ஆன சந்தர்ப்பங்களும் உண்டு.

வடிவேல் புலிகேசியாய் வலம்வந்தது … ஹீரோவா காமெடியா?? கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.

இதை அப்படியே விட்டுட்டு ரெண்டு கண்கள் பத்தி கொஞ்சம் பாப்போம். கண்கள் இரண்டும் என்றதுமே.. மனசுக்குள்ளாற ஒரு பழைய பாட்டு கண்டிப்பா ஓடியிருக்கனுமே…?

அது காதல் கண் பற்றிய பாடல். 

நான் இப்பொ சொல்ல வரும் கண் கடமைக்கண்.. (காதலோ கடமையோ.. எல்லாம் ஒன்னு தானே..சாரி ரெண்டு கண்ணு தானே?? ).  இதுலெ என்ன பெரிசா வித்தியாசம் வந்திரப் போகுது??)

It varies when you compare with others..

சரி எப்படி கம்பேர் பன்னலாம்.

உங்க மனைவி அல்லது காதலி அல்லது Girl Friend கிட்டே போய் “நீ சிரிச்சா தமன்னா மாதிரி இருக்கே…சிரிக்காட்டியும் கூட ஐஸ்வர்யா மாதிரி தான்” என்று ஐஸ் வைக்கலாம். அதெ விட்டுப்போட்டு எக்கு தப்பா ஒரு வில்லி கூட கம்பேர் பன்னி பேசினா, உங்க கதி அதோ கதி தான்.

அன்னா ஹஜாரே காந்தி மாதிரி உண்ணாவிரதம் இருந்து சாதிச்சார். இப்படிச் சொன்னா ஹஜாரேக்கும் பெருமை. காந்திக்கும் பெருமை.

ராமாயணத்தில் ஒரு சோகமான் இடம்.

இராமன், மனைவி பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலை. ராமனை ஏமாத்தி அப்படி செய்ததால் கூடுதல் கடுப்பு வேறெ. அவங்க அப்பாவோட தோழர் ஜடாயுவின் மரணம். இந்த மூணும் சேந்து ராமனை ராத்திரி முழுக்க தூங்கவே விடலையாம். அந்த கண் எப்படி இருந்ததாம்??

நம்மளை கேட்டா Weekend கொண்டாட்டம் கழிச்சி வந்த மாதிரின்னு தான் சொல்ல முடியும். இல்லையா?? ராத்திரி கண்முழிச்சி மிட்நைட் மசலா பாத்த மாதிரி…(இதை தாண்டி நம்மாள யோசிக்க முடியாது..)

கம்பர் உணர்ச்சி வசப்பட்டு அந்த சோகமான ராமனோட கண், லட்சுமணன் கண்ணு மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாரு..  அப்புறம் அவருக்கு ஞாபகம் வருது..அட்டா… ராமன் ஹீரோவாச்சே… எப்படி லக்குவன் கூட கம்பேர் பன்னிட்டு வம்பிலெ மாட்ட முடியும்??

ஒரு பிட்டு நடுவுலெ சொருகுறார்..

இராமன் ஒரு நாள் முழிச்ச கண்..இலக்குவன் வனவாசம் வந்த நாள் ஆரம்பிச்சி இன்னெக்கி வரைக்கும் தூங்காத கண்ணு.

ரெண்டும் ஒரே மாதிரி இருக்காம்…

சுகமோ, துக்கமோ ஹீரோவுக்கு தனி மரியாதை தான்.

பாக்கியராஜ் ஒரு படத்தின் கிளைமாக்ஸில் சொல்ற மாதிரி… ஹீரோ ஹீரோ தான்..

பாவம் லட்சுமணன் நாள் கணக்கா கண்விழிச்சி, கடைசியில் ஒரு நாளில் ஹீரோ ராமன் பேர் தட்டி விட்டார்..

ம்…ஹீரோ ஹீரோ தான்.

இதோ கம்பரின் வரிகள்:

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் அவர்கள் சிந்தை
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே.

ஆதாரம்: அடப்பாவிகளா… தூங்காமெ கண் விழிச்சி யோசிச்சி எழுதுறேன்..ஏதோ சுட்ட பழம்ன்னு நெனைச்சீங்களே… ராமன் மேலே சத்தியம்.. சொந்தச் சரக்கு தான் (எந்தச் சரக்கு???).

அந்தமான் அதிகாலை 4 மணிக்கு எழுதியது