பாமரன் பார்வையில் ஃபாரின் – 82


ஜப்பானில் கல்யாணராமன் படம் ஜாலியா பாத்திருப்பீங்க…

பொதுவாவே ஜப்பானியர்கள் மேல் எல்லாருக்கும் ரொம்பவே நல்லெண்ணம் இருக்கும். பாவம்…ஹிரோசிமா, நாகசாகி என இன்றும் உச் கொட்டுவர் பலர்.

எப்படி நிமிர்ந்து வாழ வேண்டும்? என்பதை ஜப்பானியர்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ளவேண்டும் என்பர் பலர்.

எவனும் செய்யலை… நான் எதுக்குச் செய்யணும்? – இது இந்திய மனப்பான்மை.
எனவும் செய்யலையா? நான் ஏன் செய்யக் கூடாது? ஜப்பானிய மன ஓட்டம் என்பர்.

உலகமே ஒப்புக் கொண்டாலும், ஜப்பானியகளை மன்னிக்காத இரு பகுதி மக்கள் உள்ளனர்.

அந்தமான் வாழ் மக்கள் & மலேசிய வாழ் மக்கள்.

நாசிச, பாசிச, கெச்டாபோ முறை அடக்குமுறைகள் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டவர்கள் பலர். அதனை ஜப்பானியர் ஆட்சியில் அனுபவித்தவர்கள் அந்தமானிலும், மலேசியாவிலும்.

700 பேரை கப்பல் ஏற்றி நடுக்கடலில் தள்ளிக் கொன்ற கொடூரம். தன் சவக்குழியினை தானே வெட்டி ஜப்பானியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு அந்தமானில்.

ஜப்பானிய லாக்கப்பில் ஏழு தினங்கள் என மலேசியாயில் தன் அனுபவங்களை புத்தகமாக்கியுள்ளார் சீ வி குப்புசாமி அவர்கள். ஒரே மூச்சில் படித்து வைக்கும் படியான கொடுமையின் எழுத்து வடிவம் அது.

ஒரு படம் வரலாற்றை கற்க எப்படி எடுத்துச் செல்கிறது பாத்தீயளா?

வரலாறு முக்கியம் அமைச்சரே!!!

மைனஸ் X ப்ளஸ் = ப்ளஸ்


மணியடிச்சாச் சோறு அது மாமனாரு வீடு என்பார்கள். அப்படீன்னா.. அந்தக் காலத்து கடிகாரங்களில் அரை மணிக்கு ஒரு தரம் மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும். அப்போ மாமனார் வீட்டுக்குப் போன மாப்பிள்ளைக்கு, அரை மணிக்கு ஒரு தரம் ஏதாவது திங்கத் தீனி வரும் என்று அர்த்தமா? ஒரு வேளை மணியடிச்சாச் சோறு அது மாமியாரு வீடா இருக்குமோ!! அங்கே வேணும்னா மணி அடிச்சா சோறு தருகிறார்களோ என்னவோ. அந்தமானில் கைதிகளை ஏற்றி வந்த கப்பலில் இதே வழக்கம் இருந்திருக்குமோ.? இன்றும் கூட பயணிகள் கப்பலில் மணி அடித்துச் சோறு போடும் வழக்கம் மாறாது இருக்கிறது. மற்ற பயணிகள் கப்பலில் எப்படி என்பதை வேறு யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாய் இருக்கும்.

என்னோட மாமனார் வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் சொல்றேனே.. அந்தமானை இன்னும் பலர் வெளிநாடு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். (ஒரு வேளை எனக்கும் இதே தப்பான அபிப்பிராயத்தில் தான் பொண்ணு குடுத்திருப்பாரோ?). அந்தமானை பல நேரங்களில் இந்திய வரைபடத்தில் காட்டாதது ஒரு காரணமாய் இருக்கலாம். (ஆமா டீவி அளவுக்கு இந்தியா மேப்பைச் சுறுக்கினாலே, அதில் அந்தமான் மங்கலாத் தெரியும். அதில் டீவி விளம்பரத்துக்கு இடம் விட்டு காட்டும், இந்தியா மேப்பில் அந்தமான் கானாமலே போயிடும்). பாஸ்போர்ட் வாங்கிட்டுதான் அந்தமான் வரணுமா? ரூபா அங்கே செல்லுபடியாகுமா? அங்கும் இங்கும் எவ்வளவு டயம் வித்தியாசம்? என்று பாமரத்தனமாய் கேள்விகள் கேட்கும் எத்தனையோ விவரமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேவா இருக்க முடியும்? அவனவன் எடுக்கிற முடிவு, நமக்கு சாதகமா இருக்கு என்று விட வேண்டியது தான்.

அந்தமானில் அதிகாலை காலை 4.30 க்கே நல்லா விடிய ஆரம்பித்து விடும். அதே மாதிரி மாலை 4.35 வாக்கில் இருட்டத் தொடங்கிவிடும். இங்கே தொழிலளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வருவர். (டியூசன் கலாச்சாரம் 4.30க்கே ஆரம்பித்து விட்டது) இந்த மாதிரியான நேரங்களில் சாப்பிட்டு தூங்கிப் பழகிய (25 வருடங்களுக்கும் மேலாய்) எனக்கு மாமனார் வீட்டுக்கு போனால் சிரமம் தான். காலை 5 மணிக்கே நான் மட்டும் முழித்து.. திரு திரு முழித்துக் கொண்டு கிடப்பேன். இரவு 10.30 க்கு படுக்க தலையணை தேடுவேன். எல்லா சீரியலும் முடிந்தால் தான் சமயல் அது தமிழக கலாச்சாரம். பத்தாக் குறைக்கு, மதுரையில் தண்ணீ வருவது நள்ளிரவு 12 மணிக்கு. மணியடிச்சா சோறு எனக்கு சரிப்படலை.

வடிவேல் ஒரு படத்தில் மணியடிப்பவராக வருவார். இந்திக் காரர்களிடம் ஏதோ எக்கு தப்பாகச் சொல்ல அந்த ”பெல்பாய்”, என இருந்தவர் உடனே “Bad Boy” ஆக பெயர் பெறுவார். அந்த மாதிரி Bell Boy பற்றிய ஒரு கதை அனேகமா எல்லாரும் கேட்டிருப்பீங்க. அதாங்க், படிக்கலைன்னு அவரை சர்ச் விட்டு விரட்டப் போக, அவர் சூப்பரா, சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சி கோடீஸ்வரன் ஆயிட்டார். படிக்காமெயே இப்பிடி ஆயிட்டீகளே, நீங்க மட்டும் படிச்சிருந்தா?…. அவர் சொன்ன பதில் “நான் பெல்பாயா இருந்திருப்பேன்.

அந்த பெல்பாய் வேலையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது ஒரு மைனஸ். வியாபாரத்தில் ஈடுபடுதல் ஒரு ப்ளஸ். இப்போது பழைய நிலமையை விட முன்னேறி இருப்பது ப்ளஸ். [ஆகக்கூடி, மைனஸ் ப்ளஸ் ப்ளஸ் = ப்ளஸ் என்று தானே ஆகிறது என்று கணக்குப் புலிகள் சண்டைக்கு வர வேண்டாம்.]

இந்த டிசம்பர் வந்து விட்டாலே அந்த சுனாமி வந்து சென்ற அந்தக் கருப்பு ஞாயிறு ஞாபகம் வந்து விடும். 2004 டிசம்பரில் வானம் பார்த்து நடுத்தெருவில் படுத்தது இன்னும் நினைவில் இருக்கு. உயிர் பொருள் இழப்புகள் அத்தனையும் அந்தச் சுனாமி தந்து விட்டுச் சென்றது. இப்போது அனைவருக்கும் வீடு என்ற அளவில் அரசின் சலுகையினை அந்தத் துயரில் கலக்கம் அடைந்தோர்க்கு கிடைத்துள்ளது. இருக்க இடமின்றி இருந்த, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுக்குக் கூட இப்போது வீடு சொந்தமாய் விட்டது. இங்கும் அதே கணக்குப் பார்முலா தான். [ Minus X Plus = Plus].

ஒட்டு மொத்தமாய் சொல்வதென்றால், வீழ்வது தவறே இல்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. அந்த துயரிலிருது வெளியே வர நாம் எடுக்கும் முயற்ச்சிகள் .. அதுவும் பாசிட்டிவான முயற்சிகள், நம்மை நிச்சயம் மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும் என்பது தான் இங்கே சொல்ல வரும் சேதி. தவறி விழுந்து நடை பயிலாத குழந்தை உண்டா என்ன? ஆனால் நம்மில் பலர் ஏதாவது சோதனை வந்தால் உயிரே போன மாதிரி ஆகின்றனரே! சமீபத்தில் காதல் தோல்வியில் இருவரும் தற்கொலச் செய்தி வந்தது. இந்த மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமே அந்த காதல் கத்தரிக்காய் திருமணம் தானா?? (நான் காதலுக்கு எதிரி இல்லை. காதல் தற்கொலையால், காதலை கொலை செய்பவர்களுக்கு எதிரி).

இந்த மேட்டரை இந்த வெத்து வேட்டே இப்படி நீட்டி முழக்கி எழுதினா, கம்பர் அதனை கம்பராமாயணத்தில் டச் செஞ்சிருக்க மாட்டாரா என்ன?? இருக்கே… அனுமன் இலங்கையில் முதல் சுற்றில் துவம்சம் செய்து திரும்பிய நேரம். பார்க்கிறார் இராவணன். (நம்ம சுனாமி துவம்சம் செய்ததை சரி செய்ய TRP – Tsunami Rehabilitation Programe ஆரம்பித்த மாதிரி இராவணன் ARP – Anuman Rehabilitation Programe ஆரம்பித்திருப்பாரோ). தெய்வத் தச்சன் மயனோட மேற்பார்வையில், பிரம்மனே களத்தில் இறங்கி, இராவணன் சொன்ன படி, சொன்ன Target Date ல் செய்து முடித்தாராம். எல்லா வேலையும் முடிச்சிட்டு, இலங்கேஸ்வரன் அப்படியே அன்னாந்து பாத்தார். அந்த வானலோகத்தில் இருக்கும் அமராவதியை விட இலங்காபுரி சூப்பரா இருக்காம். கடைசியா ஒரு பன்ச் டயலாக் வேற… அட.. ஏற்கனவே இருந்த இலங்கையை விடவும் நல்லா இருக்கே!!!!. இப்பொ நீங்களே சொல்லுங்க… Minus X Plus =????

பொன்னினும் மணியுனும் அமைந்த பொற்புடைநன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான்முன்னையின் அழகு உடைத்து என்று மெய் கழல்மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.

மிஸ்டர் கம்பர் அவர்களே, அந்த மயன் அவர்களோட மெயில் ஐடி எப்படியாவது வாங்கிக் கொடுங்க.. இன்னும் சில TRP வேலைகள் அந்தமானில் முடிக்கனும்.

கொட்டெப்பாக்கும் கொழுந்து வெத்திலையும்


இந்தப் பாட்டை இப்பொக் கேட்டாலும் கொட்டைப் பாக்கும் வெத்திலையும் ஞாபகம் வருதோ இல்லையோ, குஷ்பு கண்டிப்பா ஞாபகத்துக்கு வரும். அந்த இடுப்பு அசைவும், வெத்திலை போடாமலேயெ சிவந்திருக்கும் மேனியும் அது எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடும் அந்த உதட்டுச் சாயமும்… அப்பப்பா.. (போதும் குஷ்பு புராணம் .. அதான் கோவிலே கட்டிட்டாங்களே!!! கொஞ்சம் விட்டு விட்டு நாமும் நகர்வோம்.. அந்த வெற்றிலையை மட்டும் பிடிச்சிட்டு.)

வெத்திலை சாப்பிட்டா, நல்லா ஹெவியா சாப்பிட்றப்பொ, சாப்பிட்ட சாப்பாடு நல்லா ஜீரணம் ஆகும் என்பார்கள். தாம்பூலம் தரித்தல் என்று அழகாய் அதற்குப் பெயரே இருக்கிறது. தாம்பூலம் தரித்தல் என்று அழகாய் அதற்குப் பெயரே இருக்கிறது. அந்த சுன்னாம்பும் பாக்கும் வெற்றிலையோடு சேரும் போது நடக்கும் வேதியியல் மாற்றத்தில் நாற வாய் செவ்வாயாக மாறுவது தான் இதன் ஒட்டுமொத்த வெற்றியின் காரணம். அந்தக்காலத்து மக்கள் நாக்குக்கு லிப்ஸ்டிக் அடிக்கச் செய்த விஷமத்தனமான கண்டுபிடிப்பாக இருக்கும் என்று என் ஆய்வு சொல்கிறது.

வெத்திலை வத்திலை வெத்திலையோ கொழுந்து வெத்திலையோ.. என்ற செமையான ஒரு பாடல் வரும். ஊரில் உள்ள ஆட்களுக்கு எல்லாம் வெத்திலை வாங்கி வருவது தான் மிகப் பெரிய்ய வேலையாச் செய்யும் சூப்பர் ரோல் அந்த ரோசாப்பூ ரவிக்கைக் காரியில் வரும். நடிப்புக்கு சொல்லவா வேணும். சூரியாவே இப்படி என்றால்..அவங்க அப்பா எப்படி சொல்லவா வேண்டும்? வெத்திலை போடும் அழகே அழகு. துப்புவதும் தான்.

இன்னும் ஒரு பழைய படத்தில் தங்கவேலுவுக்கு ஜோடியாய் நடிக்கும் ஹாஸ்யநாயகிக்கு இந்த வெத்திலை போடும் பழக்கம் இருக்கும். “என்ன துப்பனுமா.. அய்யய்யொ.. போற போக்கெப் பாத்தா, ஒரு பயலை வேலைக்குச் சேத்து அவன் கழுத்திலெ ஒரு செம்பை மாட்டி இங்கே துப்பவும் என்று ஒரு போர்டும் அவன் கழுத்திலெ மாட்டி விடனும் போலிருக்கே.. நீ அந்தச் செம்புலெ துப்பினாலும் சரி அவன் பூஞ்ச்சியிலே துப்பினாலும் சரி..” இப்படி ஒரு காமெடி வரும்.

வெற்றிலை போடும் ஆட்களை திருப்தி செய்வது மிகக் கடினம். ஏகப்பட்ட Option இருக்கும். கொழுந்து வெத்திலை, கருப்பு வெத்திலை சிலர் விருப்பமாய் இருக்கும். பாக்குகளும் பல விதம். கொட்டைப் பாக்கு, சுருள் பாக்கு இப்படி. கும்பகோணம் பகுதியில் சீவல் செம பாப்புலர். புகையிலை – அது ஒரு தனி இலவச இணைப்பு. சுண்ணாம்பும் கலர் கலராயும் தனியே இருப்பது தனிக்கதை.

அந்தமானில் காகஜ் பான் என்பது செம பாப்புலர். வெத்திலை இல்லாத வெத்திலை அது. ஒரு காகிதத்தில் சுன்னாம்பு பாக்கு ஜரிதா சேத்து தருகிறார்கள்.. (என்னென்னவோ நம்பர் சொல்கிறார்கள்..எது ஒசத்தி என்று ஒன்றும் புரியலை..)

என்னோட அப்பாவுக்கும் இந்த வெத்திலை போடும் பழக்கம் உண்டு (வியாதி என்றும் சொல்லலாம்). 1990 களில் ஒரு முறை கப்பலில் அந்தமான் வந்தார் அவர். (கேப்டன் கோபிநாத் என்ற புன்னியவான் ஒரு ரூபாய் விமானம் அறிமுகம் செய்த பிறகு தான் விமானப் பயணமே கதி என்றாகி விட்டது. அதற்கு முன்பான காலம் வரை கப்பல் தான் கதி). வாயில் பல் எல்லாம் விழுந்து விட்ட போதும் வெத்திலை போடும் ஆசை விட்ட பாடில்லை. வெத்திலை இடிக்கும் இயந்திரம் சகிதம் கிளம்பி வந்து விட்டார்.

கப்பலில் எட்டு மணிக்கே மணி அடிச்சி சோறு போட்டு தூங்கச் சொல்லி விட்டார்கள். என் அப்பாவும் வழக்கம் போல் வெத்திலை பாக்கு என்று போட்டு டிங்க் டிங்க் என்று இடிக்க ஆரம்பித்து விட்டார். வித்தியாசமான சத்தம் கப்பல் கேபினில் அதுவும் முதல் வகுப்பு கேபினில் இருந்து வந்ததால் கப்பல் அதிகாரிகள் எல்லாம் ஓடி வந்து விட்டார்கள்.. வந்ததில் தமிழ் தெரிந்த அதிகாரியாக இருந்தார்.

என்ன சார்… இதெத்தானே இளையராஜா “சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம்” என்ற பாட்டிலெ நடுவிலெ ஒரு பிட்டா போட்டாரு என்றேன். சிரித்தபடி போய் விட்டார்.

இருந்தாலும் மோசமான கெட்ட பழக்கங்களில் ஒன்று, இந்த வெத்திலை போட்டு துப்புவதைத்தான் சொல்ல முடியும். தெருவெல்லாம் துப்பி.. (சமீப காலமா தணுசை வைத்து கலக்குகிறது ஒரு விளம்பரம்..வெத்திலை போட்டு துப்புறதை கூலா ஹேண்டில் செய்வதை). எல்லாராலும் அந்த மாதிரி கூலாவா ஹேன்டில் செய்ய முடியும். பார்க்கும் இடமெல்லாம் புளிச் புளிச் என்று துப்பி கலரே மாத்தி விடுவார்கள்.

வேண்டாம் என்று துப்பும் சமாச்சாரமான இந்த அவஸ்தையினை அந்தமானில் பாத்து பாத்து பழக்கமாய் போய் விட்டது நமக்கு. வேண்டாம் என்று துப்புவது மாதிரி தூக்கிப் போடுவதிலும் சிக்கல்கள் வரத்தானே செய்யும். இப்படி இரு சிக்கல் ராமாயணத்தில் வருவதாய் கம்பர் சொல்கிறார்.

இடம்: முதலாம் ரவுண்டில் அனுமன் இலங்கை வரும் சமயம். சீதையை எல்லாம் பாக்கிறதுக்கு முன்னாலேயே.. இந்த ஊரை எப்படி அழிப்பது என்று யோசிக்கும் இடம்.

பொருள்: அனுமன் யோசிக்கிறான் இப்படி. “நம்ம வாலுங்க எல்லாம் இங்கே வந்தா எல்லாரையும் ஒட்டுக்கா போட்டுத் தள்ளியிரலாம். ஆனா நம்மாள நடக்க முடியாது போலிருக்கே.. இந்த அரக்கி பய புள்ளெக வேணாம்னு தூக்கிப் போட்டதே ரோடு முழுக்க நெறைஞ்ச்சி கெடக்கே?? எப்படி போக…” இப்படி போகுதாம் ரோசனை..

விளக்கம்: இதுக்கும் மேலெயா வேணும் வெளக்கம்???

இதோ பாடல்:

ஒறுத்தலோ நீற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இவ்வூர் வந்து
இறுத்தலும் எளிதா? மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டா?
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும் இவ் வீதி எல்லாம்.

மீண்டும் சந்திப்போம்.

What is Inland Letter?


இது என் பையன் கேட்ட கேள்வி.

கல்லூரியில் படிக்கும் போது, ஹாஸ்டலுக்கு வந்ததும் கதவை திறந்தால் கீழே சிதறிக் கிடக்கும் கடிதங்கள் பாத்து எவ்வளவு சந்தோஷப் பட்டிருக்கேன்??? விதம் விதமான கோணங்களில் எழுதி வரும் இன்லேண்ட் லெட்டர்கள் அவை.

1986 களில் அந்தமானின் இறுதிக் கோடியான கிரேட் நிகோபார் தீவுகளில் கடிதங்கள் ஒன்று மட்டும் தான் தகவல் பரிமாற்று சாதனம். வாரம் ஒரு முறைதான் கப்பல் வரும். அதில் வரும் கடிதங்களுக்குத் தான் எத்தனை எதிர்பார்ப்பு..

அன்றே பதில் போட ஏதுவாய், நண்பர்களில் நமக்கு நாமே தபால் ஊழியர் ஆகி, தபால் பையினை இறக்கி, வண்டி பிடித்து, தபால் ஆஃபீஸ் சேர்த்து, பிரித்து, அவரவர் அலுவலகம் சேத்து… எல்லாமே..சந்தோஷமாய்… சந்தோஷமாய்… நமக்கு வந்த கடிதம் படிக்கும் சந்தோஷம் இருக்கே…..

மொபைல், இன்டர்னெட் என்று பழகி விட்ட என் பையனுக்கு எப்படி இதை புரிய வைப்பேன்??

சிட்டி ஆயி ஹை என்ற பங்கஜ் உதாஸின் பாடல் அர்த்தம் புரிஞ்சி கேட்டா…ஆளை அப்படியே உருக்கிடும்…

காதல் கடிதம் எழுத கைகுட்டை கூட உதவுமாம் நம்ம கவிஞர்களுக்கு…

கல்யாணத்துக்கு முன்னாடி காதல் கடிதம் எழுதியவர்கள் கொஞ்சம் அசை போடவும்.

வாலியின் அன்றைய வரிகள்:

படித் தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்

பேப்பர் அரங்கம் முழுதும்
உந்தன் பேனா முனையின் நடனம்…

என்றும் நினைவில் நிற்கும் “அன்புள்ள மான் விழியே”

ஆக மொத்தம் ஒன்னு நிச்சயம் நமக்கு வயசாயிடுச்சி….

இதை எல்லாம் என் பையனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது??

நல்ல வேளையாக, ஸ்டேட் வங்கி முகவரியை உறுதி செய்ய ஒரு இன்லேண்ட் அனுப்பியது…

பையனிடம் இதுதான் இன்லேன்ட் என்று சொல்லி வைத்தேன். சொல்லும் போதே ஏனோ நெஞ்சு கனத்தது.

கடிதங்கள் பத்தி இந்த தலை முறைக்கு தெரியாது போய்விட்டதே என்று….

ஹிந்தியில் பான்ச் பான்ச்


அன்பு நெஞ்சங்களே…

ஒரு விஷயம் பத்தி ரெண்டு பேர் ரெண்டு விதமா புரிஞ்சிகிறதை பலதடவை கேட்டிருப்பீங்க…

வடிவேல் காமெடி ஒன்றில் வரும் காட்சி:

ஒருவர்: என்ன எப்படி இருக்கீங்க?
வடிவேல்: ஏதோ வண்டி ஓடுது.
ஒருவர்: வண்டி ஓடுதா???…அப்பொ வாங்கின கடனைக் கொடு
வடிவேல்: வாழ்க்கையைச் சொன்னேனப்பா..

1987 களில் அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போயிடுவேன் என்பேன். கேப்பவர்கள்.. மூ…ன்று நாளான்னு … பெரு மூச்சு விடுவார்கள்..

அதே போல் இங்கு பேசும் ஹிந்தியினை பூனேயில் பேசிவிட்டேன். அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

ஹிந்தியில் இருக்கும் இலக்கன விதிகளான…

மை வந்தால் ஹு வரவேண்டும்
தும் க்கு ஹோவும்
ஹம் என்று ஆரம்பித்தால் ஹைன் என்று முடிப்பது
இவைகள் எல்லாம் இங்கிருக்கும் உத்திர பிரதேச மக்கள் கூட இங்கே மறந்து விட்டார்கள்.

எனக்கோ பூனேயில் பெருத்த அவமானமாய் பட்டது.

இதை விட நம்பர்களை ஹிந்தியில் சொல்லுவதைப் போன்ற கொடுமையான விஷயம் ஒண்ணு கிடையவே கிடையாது. தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும்.

ஆனால் ஹிந்தியில் ஏக் சே லேகர் சௌ தக் மனப்பாடம் செய்தாக வேண்டும்.. மார்க் வாங்க அதை படிக்கலாம். மார்க்கெட்டில் இருக்கும் தமிழ் மக்கள் என்ன செய்வார்கள்… பாவம்!!

அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்…

15  சொல்ல பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்
47  சொல்லனுமா?  சவுந்தாலீஸ் (சரி தானா??) சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.

மெயில் டைட்டில் வந்தாச்சி..முடிச்சிரலாமா..?? அப்படி முடிச்சா கம்பர் ஏமாந்து விடுவாரே..  அவரையும் வம்புக்கு இழுக்கலாம்.

இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு.

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பத்தி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்கிறார்.

பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.

பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது நல்லதாய் தான் படுது.

இனிமே பச்பன் கபி நஹி… பான்ச் பான்ச் தான்..

( T-3 ல் 36வது கேட்டுக் போனால் பிரீபெய்ட் டாக்சி வரும் பலர் சொன்னதை என்னால் விளங்கி கொள்ள முடியலை… அங்கே தீன் சே என்று யாரும் சொல்லலை)

இருந்தாலும் கம்பன் சொல் விளையாட்டுகள் தொடரும்.

T N Krishnamoorthi