சந்தேகம் என்னும் ஒரு சரக்கு


இப்படி ஒரு காலத்தில் பழைய பாட்டு வரும். அரதப் பழசு தான்… (ஆமா..அந்த ”அரத”ங்கிறதுக்கு என்ன மீனிங்கு?-ன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்). அது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த சந்தகத்தையும் சரக்கோட ஏன் கோர்த்துச் சொல்றாய்ங்க என்கிறதும் மண்டையெக் கொடெயுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றது? என்று மனதுக்குள் நினைக்கிறேன். “உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” வீட்டுக்காரியும் வினா எழுப்புகிறாள்… ரெண்டுக்கும் பதில் இல்லை…

தண்ணி…. சாப்பிடலாம், குடிக்கலாம், அருந்தலாம், பருகலாம், தாகம் தீர்த்துக் கொள்ளலாம்… எல்லாம் சரி தான். அடிக்கலாம் என்றால் மட்டும் பலர் அடிக்க வருவார்கள், அந்தக்காலத்தில் கம்பு வைத்து. ஆனால் பலர் இக்காலத்தில் ஜாலியாக ஓடி வந்துடுவாங்க கம்பெனி குடுக்க. சந்தேகமும் அப்படி தண்ணி அடிப்பது போன்ற போதை தரும் சமாச்சாரமா? தண்ணியை நாம் அடிக்கலாம். (மெஜாரிட்டி ஆட்களைச் சொல்கிறேன்…மது விரோதிகள் மன்னிக்கவும்) ஆனா… சந்தேகம் நம்மை அடிக்கும்.

சின்ன வயசில் சிறு சிறு திருட்டுகள் செய்வது எல்லாருக்கும் வழக்கம் தானே? மஹாத்மா காந்தியே செய்திருக்கிறார். சரி காந்தி கதை ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம சொந்தக் கதைக்கு வருவோம். ஸ்கூல் படிக்கிறச்செ… குரூப் ஸ்ட்டி படிக்கப் போறோம்னு சொல்லிட்டு நம்ம அப்படியே சினிமாவுக்குப் போயிடுவோம். (தப்பை தடயமில்லாமெ செய்ய சினிமா டிக்கெட் எல்லாம் பொறுப்பா கிழிச்சிப் போட்றுவோம்.. அதெல்லெம்..கரெக்டா செய்வோம்லெ..) கொஞ்ச நாள் கழிச்சி அம்மா கிட்டெ அதெ உளறி விடுவேன்… (இப்பொவும் அதே வியாதி தான்… உளறும் இடம் மட்டும் மனைவியா மாறிப் போச்சி.. அம்புட்டு தான்).

நல்லது செய்யும் போது நம்மை அறியாமலேயே சில வில்லங்கங்களும் வந்து சேரும். அப்படித்தான் உண்மை விளம்பியாய் இருப்பதால் சில சந்தேகங்களும் வந்து சேரும். உண்மையாகவே குரூப் ஸ்டடி போட்டு மண்டையைக் கசக்கி படிச்சிட்டு டயர்டா வீட்டுக்குப் போவேன். அம்மாவிடமிருந்து, என்ன படம் எப்படி இருந்தது? என்ற கேள்வி வரும். கோபம் என்றால் கோபம் அவ்வளவு கோபம் கோபமாய் வரும். உலகத்தில் யார் தான் ”அம்மா”விடம் கோபத்தைக் காட்ட முடியும்? விதி வலியது என்று விட வேண்டியது தான். இப்பொவும் அப்படித்தான். மாங்கு மாங்கு என்று (வீட்டில் ஃபோன் கூட செய்யாமல்) பார்லியமெண்ட் கேள்விக்குப் பதிலோ, ஆக்ஷன் பிளான் டாக்குமெண்டோ, விஜிலென்ஸ் கேள்விக்கு பதிலோ தயார் செய்து விட்டு, வீட்டுக்கு வந்தால், பார்ட்டி எப்படி இருந்தது? என்று மனைவியிடமிருந்து சந்தேகக் கேள்வி வரும்… (அப்பவும் நாம கோபப்படாமல் இருப்போம்லெ…)

நிலைமையினச் சமாளிக்க நண்பர் ஒருவர் நல்ல ஐடியா தந்தார்… தினமும் 5 மணிவரை வேலை என்றால், எப்போதும் ஊர் சுத்திட்டு 7 மணிக்குத்தான் கெளம்பனும் வூட்டுக்கு. ஒரு வேளை 5 மணிக்கே கடெயெ மூடிட்டு வீட்டுக்குப் போனாலும் கூட, அம்மணி அமிர்தாஞ்சன் கையோடு கொண்டு வந்து ”என்னங்க…ஒடம்பு சரியில்லெயா…நேரத்தோட ஊட்டுக்க வந்துட்டீக.” என்று நிப்பாகளாம்… இது எப்படி இருக்கு? யாராவது செஞ்சிட்டு அப்புறம் சொல்லுங்க… நானும் முயற்சி செய்றேன்…

ஆஃபீசில் சிலர் வந்து விட்டுப்போன பின்னரும் கூட, சில வாசனை அங்கேயே நிற்கும். ஒரு முறை குறிப்பிட்ட சில மகளிர் வந்து போன பின்னர் மூக்குப் பொடி [ டி வி எஸ் ரத்தினம் பட்டணம் பொடியே தான்] வாசம் குமட்டிக் கொண்டு வந்தது. உதவியாளரிடம் என்ன வாசம்? என்று கேட்டேன். அவர் ஏதோ ஒரு நல்ல(?) பிரண்ட் பெர்ஃப்யூம் என்றார். அடுத்த நாள் பாத்தா… அந்த பெர்ஃப்யூம் என் மேஜை மேல்… எனக்கு ஏதோ ரொம்பவும் பிடிக்கும் என்று வாங்கியே வந்து விட்டார் போலும்…. ஆமா… அவர் ஏன் அதை எனக்கு வாங்கித் தர வேண்டும்? …சந்தேகப் புத்தி ஆரம்பித்தது…

சந்தேகத்தில் மனுஷன் சாவுறது ஒரு பக்கம் இருக்கட்டும். சமீபத்திலெ… அதே சந்தேகம் காரணமா ஒரு யானை உயிர் விட்ட சோகம் அந்தமான்லெ நடந்தது. ஒரு வன அதிகாரியை மதம்பிடித்த யானை கொன்று விட்டது. அது மற்றவர்களையும் கொன்று விடுமோ என்ற சந்தேகம் தான் அந்த உயிர் பிரியக் காரணம். ஆனா ஆய்வு என்ன சொல்லுதாம், 59 சதவீதம் திருட்டு வேட்டைக்காரர்களாலும், 15% ரயிலில் அடிபடுவது (இது அந்தமானில் இல்லை), 13% விஷ உணவு, 8% மின்சாரம் தாக்கி மரணமுமாய் நிகழ்கிறதாம். இனி ஆய்வாளர்கள் சந்தேகத்துக்கும் கொஞ்சம் % ஒதுக்கி வைக்கலாம்.

rouge

மதம் பிடிக்க ”காமம்” தான் காரணம் என்பதை நம்மில் பலர் ஒப்புக் கொள்ளத் தயாராய் இல்லை. அது யானையாய் இருந்தாலும் நாமாய் இருந்தாலும் சரி. யானைக்கு சரியான ஜோடி கிடைக்காத போது தான் மதமே பிடிக்குமாம். அதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமாம். ஆனால் மனுஷனுக்கு மதம் பிடிக்க அப்படி எந்த காரணமும் வேண்டியதில்லை. தமிழைக் காதலிப்பவ்ர்களுக்கு காமத்தை விடவும், காமத்துப் பால் அதிக சுவை என்று சொல்லக் கேள்வி.

வாட்ஸப்பில் நோட்டம் இடச் சொல்லி சத்தம் வந்தது. எட்டிப்பாத்தா, கம்பர்…

ஹை…கிச்சா…

ஹை கம்பரே – இது என் பதில்.

கம்பர்: சந்தேகத்திலெ யானை செத்த கதை சொன்ன மாதிரி தெரியுது..ஆனா, யானைக்கே சந்தேகம் வந்த கதை தெரியுமா??

நான்: சொல்லுங்க ஐயனே தெரிஞ்சிகிடறேன்…

கம்பர்:- சுந்தரகாண்டம்…ஊர் தேடு படலத்தில் அநுமன் கண்ணுக்கே தெரிஞ்சது…ஒனக்குத் தெரியலையா…போய்த் தேடிப்படி..

கம்பர் ஆஃப் லைன் ஆகிவிட்டார்..நான் கம்பரில் ஆழ்ந்துவிட்டேன்..

அந்தக் காலத்து மகளிர் உடலிலிருந்து வீசும் (இயற்கையான) புகை மணமும், மற்ற பிற செண்ட் போன்ற ஐட்டங்களும் குளிக்கிறச்சே அந்த அகழித் தண்ணியிலெ கலந்திடுச்சாம். அப்பொ, அங்கெ குளிக்க வந்த யானைகளின் உடம்பிலும் அந்த வாசனையும் கலரும் ஏறிடிச்சாம். அதெப் பாத்து பெண் யானைகள் எல்லாம் சந்தேகத்தோட, எப்படி மற்ற பெண்யானைகளோடு சேரலாம் என்று காச் மூச் என்று கத்தினவாம்…

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை யானைக்கும் கூட சொல்ல வந்த கவிச்சக்ரவர்த்தியின் பாடல் வரிகள் இதோ…

நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலப் பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால்

பொல்லாத சந்தேகம் யானையையும் பாடாப் படுத்தியிருக்கே..

இப்பொ சொல்லுங்க…உங்க சந்தேகம் எதெப்பத்தி?????

நடக்காதென்றால் நடக்காது


நெஞ்சைக் கிழிக்கும் சோக கீதங்களில் இந்த “நடக்கும் என்பார் நடக்காது… நடக்காதென்பார் நடந்துவிடும்” பாடலும் ஒன்று. ’நிலையற்ற தன்மைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும்’ என்று சொல்லாமல் சொல்லும் பாடல் அது. ’நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று ஒத்திப் போடும் ஒவ்வொரு நேரமும், நாம் கவனமாக அந்த நிச்சயமற்ற தன்மையினை மறக்கிறோம், என்பது மட்டும் சர்வ நிச்சயம். ’இன்னெக்கி செத்தா நாளைக்குப் பால்’ என்று சொல்லும் போதும் கூட அந்த “நாளை” இருப்போம் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகின்றது.

பரமக்குடியின் மயாணத்தில் ஒரு அருமையான போர்ட் வைத்திருக்கிறார்கள். ”இன்று நான்; நாளை நீ” என்று. ’வாழ்க்கை இவ்வளவு தான்’ என்பதை சட்டுன்னு புரியும்படி எழுதி வைத்திருக்கும் ’வைரம் வத்தல் வடாம் கடை’க்கு நன்றி சொல்ல வேண்டும். (இதிலும் கூட விளம்பரமா? என்ற சந்தேகம் வேண்டாம். நமக்கு சரக்கு தான் முக்கியம்)

சமீபத்தில் ஒரு பள்ளியில் நடக்கும் பரீட்சைக்கு அதிரடி அதிகாரியாய் போய் நின்றேன். அவ்வப்போது சந்தடிசாக்கில் அங்கு வகுப்பில் நடப்பவைகளையும் உன்னிப்பாய் கவனித்துப் பார்த்தேன். (அங்கு இருப்பவர்களுக்கு நான் இப்படி எல்லாம் எழுதுபவன் என்பது தெரியாது). ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவனை, ஆசிரியர் செமெயாக அடிக்கிறார். அவனது கையில்,அவரது கையால் ஒரு அந்நியனான என் எதிரில். என்ன பாவம் செய்தான் அந்தப் பையன்? லேசாக விசாரித்தேன். ஐ லவ் யூ என்று ஒரு பெண்ணின் பெயரை கையில் எழுதி இருப்பதாய் தகவல் வந்தது. அதுவும் பாடம் நடக்கும் வகுப்பில் நடந்ததாம்.

அடிப்பது என்பது என் மனதிற்கு ஒவ்வாத செயல். அடித்து என்ன சாதிக்க நினைக்கிறார் அந்த ஆசிரியர்? கேட்டேன். “அவனுக்கு அவமானம் வர வேண்டும். அதன் மூலம் திருந்த வேண்டும்” பதில் வந்த்து. நல்ல நோக்கம் தான். ஆனால் என்ன நடக்கிறது? அந்த மாணவன் அதே ஆசிரியரை எதிரியாய் பார்க்கிறான். பழிதீர்க்க நினைக்கிறான். ஆசிரியரின் கார் கண்ணாடி அடிக்கடி உடைகிறது. இருசக்கர வாகனத்தின் சீட் கவர்கள் அடிக்கடி கிழிகின்றன. ஆசிரியர் முழிக்கிறார். மாணவன் மனதிற்குள் சிரித்து மகிழ்கிறான். ஆசிரியர் எது நடக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அதுவா நடக்கிறது?

”தகவல் பெறும் உரிமை (ஆர் டி ஐ) சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள் வருவது பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள்?” இது தான் சமீப காலமாய் அதிகமாய் என்னிடம் கேட்கப்படும் கேள்வி. அந்தமானில் இச்சட்டம் பற்றிய பயிலரங்கங்கள் பல தீவுகளில் நடத்திய காரணத்தால் இந்த கேள்வி தவிர்க்க இயலாது போகின்றது. அரசு ஊழியரின் கருத்தாக இல்லாமல், எனது மனதிற்குப் படும் சொந்தக் கருத்தினை உங்களுக்கும் சொல்கிறேன்.
அதற்குமுன் சின்ன குட்டிக் கதை.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் தன் குழந்தையினை அழைத்து வந்தார். “சுவாமிஜீ.. இந்தக் குழந்தை அடிக்கடி வெல்லம் சாப்பிடுகிறாள். அதை நிறுத்த நீங்கதான், ஏதாவது வழி சொல்ல வேண்டும்”. சுவாமிஜீ சிரித்தபடி, ஒரு பத்துநாள் கழித்து வரும்படி கூறினார். தாயாரும் ஏதோ தாயத்து மாதிரி கிடைக்கவிருக்கும் சந்தோஷத்தில் நகர்ந்தார். பத்து நாள் பறந்தோடியது. மறுபடியும் தாயும் மகளும் ஆஜர். சுவாமிஜீ குழந்தையை அன்போடு அழைத்து, “இனி மேல் அடிக்கடி வெல்லம் சாப்பிடாதே” என்று கூறினார். அவ்வளவு தான். தாயார் நினைத்தது ஒன்று. ஆனால் நடப்பதோ வேறு. “என்ன சாமி… தாயத்து கீயத்து அல்லது மந்திரம் ஏதும் இல்லையா?”, ஆதங்கத்துடன் அந்தத் தாய். சுவாமிஜீ, ”இல்லை” என்று தலையசைக்க, அப்பொ இதெச் சொல்லவா பத்து நாளு என்று அந்த அம்மணி நினைப்பதை சுவாமிஜீ உணர்ந்தார். “தாயே…எனக்கும் அடிக்கடி வெல்லம் சாப்பிடும் பழக்கம் இருந்தது. இந்த பத்து நாளில் நான் அதனை மாற்றிக் கொண்டு, குழந்தைக்கு அறிவுரை சொன்னேன். அவ்வளவு தான்” பெரியவரின் அருள் வாக்கு இது. எவ்வளவு உயரத்தில் இருக்கும் மகான்கள் அவர்கள்!!

கதையினை விட்டு இப்பொ நடக்கும் சூழலுக்கு வருவோம்.

வெளிப்படையான நிர்வாகம் அமைந்திட நினைத்து தான் இந்த ஆர்டிஐ சட்டம் 2005 ல் கொண்டு வந்தனர். அரசு எந்த அளவிற்கு வெளிப்படையாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அதே அளவு அரசினையே அமைக்கும் அரசியல் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று சொல்வதில் தவறு இருப்பதாய் தெரியவில்லை. (அரசியல் கட்சிகள், கதையில் வந்த சுவாமிஜீ போல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது ரொம்பத்தான் ஓவரோ). இன்னொரு பக்கமாயும் யோசிக்கலாம். அரசியல் கட்சிகளை இதில் இழுக்கும் தகவல் ஆணையத்தின் தீர்ப்பின் 50 க்கும் மேலான பக்கங்களைப் புரட்டினால் அதில் முக்கியமாய், ’கனிசமான அரசின் உதவி பெறும்’ காரணம் தான் தெரிகிறது. கோடிக்கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், ’தங்களுக்கு அரசின் உதவி தேவையில்லை’ என்று தாராளமனதோடு விட்டுக் கொடுத்தால், தானாகவே ஆர்டிஐ பிடியிலிருந்து விலகிவிடலாம். இது இந்தப் பாமரனின் சொந்தக் கருத்து தான். எது நடக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது சரி… நடக்கும் என்பார் நடக்காது என்பது நிலையாமை பற்றியது. அது என்ன நடக்காதென்றால் நடக்காது. இது அவரவர்களின் மனதின் உண்மை நிலை. அப்படியே லேசா பர்வால் இராமாயணம் பக்கம் போகலாம். (அதென்னெ புது பர்வால் இராமாயணம் என்று கேட்கிறீர்களா? ’கம்பர்’ சொல்லின் கடைசி இரண்டு எழுத்தும், வால்மீகியின் முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தது தான் பர்வால் என்கிறேன் நான்). ஆதி ராமாயணமான வால்மீகி ராமகாதையினை விட கம்பர் சிறப்பாய் சொல்லி இருப்பதாய் பலர் எழுதி உள்ளனர். சொல்வேந்தர் சுகிசிவம்தான், அதன் காரணத்தைச் சொல்கிறார். கம்பர் ராமகாதையினை கையில் எடுத்த்து வால்மீகியின் பல ஆண்டுகளுக்குப் பிறகு. காலம் காலமாய் விமர்சனம் செய்யும் இடங்களை மாற்றும் வாய்ப்பு கம்பருக்கு வாய்த்திருக்கிறது. அதை நன்கு பயன்படுத்தியுள்ளார் என்கிறார். கம்பரின் ஏடு என் கையில் வரவே எத்தனை நூற்றாண்டு தேவைப்படுது? ஒரே பிரச்சினையை கம்பரும் வாலிமீகியும் எவ்வாறு அலசினர் என்பதை நாமும் கொஞ்சம் அலசுவோம்.

கோபக்காரமுனி விசுவாமித்திரர் அயோத்திக்கு வருகிறார். வால்மீகி பார்வையில் முனியை, தசரதர் சகட்டுமேனிக்கு புகழ்கிறார். முனியை சந்தோஷப்படுத்தினார் வார்த்தையில். (ஒரு வேளை எழுதியதே ஒரு முனி என்ற காரணமாய் இருக்குமோ?). கம்பரில் அது அப்படியே உல்டா. முனி தசரதரை ஐஸ் வைக்கிறார். அரசனிடமே சரணடைந்ததாய் சொல்கிறார்.
இராமனை தன் யாகம் காக்கக் கேட்கிறார் விமு முனி. பாலகனை அனுப்புவதற்குப் பதிலாக, தானே வருவதாய் தசரதன் சொல்கிறார். இதிலும் வால்மீகி, கம்பரின் அப்ரோச் வித்தியாசமாய் தெரிகிறது. இதைக் கேட்டதும் தசரதன் துடித்த துடிப்பை கம்பர் சொல்கிறார்… பிறவிக் குருடன் ஒருவன் விழியில் ஒளி பெற்று மீண்டும் இழந்தவன் போல் துடித்தானாம். [கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்] ராமனுக்குப் பதிலா நானே வருகிறேன். வாங்க கிளம்பலாம் என்கிறார் அந்த அதிரடி அப்பா.

வால்மீகி காதையில் தசரதன் சொல்வதே வேறு… நீங்க சொல்லும் அரக்கர்களிடம் சண்டை போட்டு என்னாலேயே ஜெயிக்க முடியாது. மாரீசன் மாதிரி ஆட்களை யாராலும் ஜெயிக்க முடியாது…. என் மகனால் என்ன செய்ய முடியும்?… எமனை வேண்டுமென்றாலும் வெல்ல முடியும். அந்த அரக்கர்களை வெல்ல முடியாது… இப்படி நடக்காதென்று செல்லிக்கொண்டே இருந்தால், ஏதாவது நடக்குமா? அப்பொ… கடுப்பாக மாட்டாரா விசுவமித்திரர்? போங்கப்பா நீங்களும் உங்க பேச்சும் என்று வெளிநடப்பு செய்ய எத்தனிக்க… அப்புறம் தான் இராமலட்சுமணர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.

கம்பன் கதைப்படி இராமன், பெருமாளின் அவதாரம் என்பது தசரதனுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே தான் ‘இலக்குமியின் கணவனான இராமனை இங்கு அழைத்து வாருங்கள்’ என்று தசரதன் ஆணையிடுகிறார். இராமனை மட்டும் அழைக்க, உடன்பிறப்பு சேர்ந்தே வருவது இக்காலத்திய இலவச இணைப்பு மாதிரிதான்.

பர்வால் பார்வைகள் தொடரும்.

எதிராளியை நண்பனாக்கு..


ரொம்பவும் தெரிஞ்ச (ஆனாலும் தெரியாத) நாலு விஷயங்கள் என்ன தெரியுமா? 1. நண்பரை நண்பராகவே தொடர்ந்து வைத்துக் கொள்வது.2. நண்பரே சில சமயங்களில் எதிரியாய் ஆவது. 3. எதிரி எதிரியாகவே தொடர்வது. 4. எதிரியாய் இருந்தவர் நண்பராய் மாறுவது

நண்பர்களா இருக்கிறதுக்கு என்ன தேவை… என்ன தேவை என்று கேட்பதற்கு முன்னரே இந்தா வச்சிக்க என்று தருபவன் தான் நண்பன். எதையும் எதிர்பார்க்காமல் வருவது. காதலுக்கும் இந்த definition ஐ கடல் ஓரமாய் கடலை போடும் போது கொடுத்துவிட்டு, பின்னடி அல்லாடும் கில்லாடிகள் பலர். ஒருவர் பொறுத்துப் போக வேண்டும் இருவரின் மத்தியில் நட்பு தொடர. யார் விட்டுக் கொடுப்பது என்பது கேட்காமலேயே நிகழ வேண்டும். அந்த நிகழ்வின் அச்சானியே இருவருக்கும் இடையே இருக்கும் பர்ஸ்பர நம்பிக்கை தான். நான் மட்டும் தானா எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேள்வி வந்தாலே நட்பு வட்டத்தில் லேசாய் விரிசல் வந்ததாய் வைத்துக் கொள்ளலாம். (ஏதோ தனிக் கட்சி ஆரம்பிக்கவோ அல்லது வேறு எங்கோ கூட்டனி வைக்கவோ கூட பிளான் இருக்கலாம் என்பதும் ஒரு வகையில் பொருள் கொள்ளலாம்)

நல்ல நண்பர்களை அடியாளம் கண்டு கொள்ள ஒரு பழைய கதை சொல்வார்கள். ”எடுக்கவா? கோர்க்கவா?” என்று கர்ணபரம்பரைக் கதை என்றால் ரொம்ப அரதப் பழசாயிடும். கொஞ்சம் புதுக்கதை (நண்பண்டா… என்ற ஸ்டைலில் சொல்லியும் படிக்கலாம்). ரெண்டு நண்பர்கள் ஜாலியா பீச்லெ வாக் போயிட்டு இருந்தாங்க. ஏதோ பிரச்சினை. ஒரு ஆளு டப்புன்னு அடிச்சிட்டார். அடி வாங்கின ஆளு அழுகாமெ மணல்லெ ”நண்பன் அடித்து விட்டான்” என்று எழுதி சமாதானம் ஆய்ட்டு இருந்தாராம். அப்பொ திடீர்னு ஒரு மாடு வேகமா முட்ட வந்திருக்கு. அடிச்ச அதே நண்பன் ஓடிப்போய் காப்பத்தி இருக்கார். குஷியா நண்பன் மறுபடியும் பக்கத்திலெ இருக்கிற பாறையில ”நண்பன் காப்பாற்றி விட்டான்” என்று எழுத ஆரம்பித்து விட்டாராம். (நம்மள மாதிரி எதையவது அப்பப்பொ எழுதுற பார்ட்டியா இருக்குமோ??)

முதலில் அடிச்சி அப்புறம் காப்பாத்தின ஆசாமிக்கு ”டாடீ..எனக்கு ஒரு டவுட்டு” மாதிரி டவுட்டு வந்திடுச்சாம். ”ஏம்பா அடி வாங்கின சமாச்சாரத்தை மணல்லெயும், காப்பாத்தின சங்கதியெ பாறையிலேயும் எழுதினே?” என்று. பதில் சிம்பிள் தான். நட்பு காப்பாற்றப் பட இது தான் ஒரே வழி. பிறர் தனக்கு செய்த தீமைகளை மணல் மேல் எழுதியது போல் வைத்து மறந்து விடுங்கள். நல்லவற்றை மனதில் திடமாய் சேமித்து வையுங்கள், பாறை மேல் எழுத்தாய். நட்பும் மலரும். மனநிலையும் நல்லாவே இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் என்ன செய்றாய்ங்க… சிரமம் கொடுத்ததை ரொம்ப சிரமப்பட்டு ரீவைண்ட் செய்து செய்து மனதிற்குள் பாத்து பொசிங்கிப் போவாய்ங்க… ஆமா நீங்க எப்படி?? என்ற சுய ஆலோசனை செய்ங்க… (அதுக்குள்ளெ நானு அடுத்த கட்டத்துக்கு நொண்டி ஆடப் போறேன்).

நண்பன் விரோதி ஆகும் இடம் எப்படி?? ரொம்பவே சிம்பிள். மேலே சொன்ன விஷயங்களில் பிக்கல் பிடுங்கல் இருந்தால், நட்பு என்பது புட்டுக்கும். தோள் மேலே கை போட்டு போன காலமெல்லாம் போய், கோர்ட் வாசப்படி மிதிக்க வைக்கும் நட்பிரோதமான கதை எல்லாம் இருக்கு. நடு நிலை என்று சொல்லி ஒரு சார்பு இருக்கும் ஆட்களால் சிக்கல் அதிகம் வரும். அதுக்கு மொதல்லெயே சொல்லித் தொலைக்கலாமே? சுப வீரபாண்டியன் அந்தமானுக்கு வந்த்ப்பொ சூப்பரா, நான் ஒரு சார்பில் தான் இருப்பேன் என்று சொல்லியே தனது பத்திரிக்கையை படியுங்கள் என்று சொன்னார். அது நண்பர்களை ஏமாற்றாது இருக்கும் பாருங்க.

அப்படியே, விரோதியினை விரோதியாவே வச்சிருக்கும் வித்தையை லேசா டச் செய்து பாக்கலாமே… நம்ம முன்னோர்கள் எல்லாத்துக்கும் பழமொழி வச்சிருப்பாங்களே… இதுக்குச் சொல்லாமலா இருப்பாய்ங்க. துஷ்டனைக் கண்டால் தூர விலகு. (ஆனா சில சமயம் துஷ்டர்களே மேலதிகாரிகளாகவோ, மனைவி அல்லது கணவனாகவோ வந்து வாய்த்து விடுவதும் உண்டு.) என்ன செய்ய, மழை பெய்யும் போது, அதெ நிப்பாட்டவா முடியுது? ஏதோ நம்மாலெ முடிஞ்ச, ரெயின்கோட் போட்டு மறைச்சிட்டு போற மதிரியே ஒரு செட்டப்பா, கெட்டப்பா, வாழ்க்கையெ ஓட்ட வேண்டியது தான்.

எதிரியை நண்பரா மாற்றும் பகுதிக்கு வதுட்டோம். முடியப் போகுது. அதனாலெ இதிலெ கண்டிப்பா கம்பர் வந்தே ஆகனுமே??..ம்…எந்த சீனுக்கு கூட்டிட்டு போலாம் உங்களை… யாராவது சண்டெ போட்டா, நாம ஓடிப் போயி எட்டித்தான் பாப்போம்? அப்பொ இந்த ராமாயணப் போர் நடக்கிற எடத்துக்கே போகலாம். ராவணன் ஒரு அம்பு உட்றாரு நம்ம லெட்சுமணன் நெஞ்செப் பாத்து. விபீஷணன் பாய்ந்து முன்னாடி வருகிறார். அதெப்பாத்து அங்கதன் முன்னடி வந்து நிக்கிறார். சுக்ரீவன் பாத்துட்டு சும்மா இருப்பாரா என்ன? அவரும் முன்னடி வந்து நிக்க, ஹனுமன் போங்கய்யா எல்லாரும் அந்தாண்டெ என்று நெஞ்சை காட்டுகிறார். புரோட்டாக் கடையில் 50 புரோட்டா சாப்பிடும் ஸ்டைலில் இலக்குவன், எல்லாம் அழிங்கப்பா நான் மொதெல்லேர்ந்து வர்ரேன் என்று சொல்லி, மீண்டும் இலகுவன் நிக்க, அம்பு தைக்குது மயங்குவது எல்லாம் வேறு வேறு கதை.

நம்ம பிடிக்கிற எடம் சுக்ரீவன் தன் உயிரைக்கூட பணயமாய் வைக்கும் இடம் தான். (ஒரு வேளை அங்கதனுக்காக வந்திருப்பாரோ??). ஆரம்பத்தில் வீடணன், ராம் கோஷ்டியில் சேத்துக்க Object செய்த முதல் பார்ட்டியே சுக்ரீவன் தான். பிரச்சினையான நேரத்துலெ உட்டுட்டு வர்ர ஆளை எப்படி நண்பரா நெனைக்கிறது?? விரோதி தானே என்கிறார் சுக்ரீவன். அப்புறம் பொதுக்குழு கூடி முடிவு எடுக்குது வீடணனை கூட்டனியில் சேத்துக்கலாம் என்று. அந்த நேரத்தில் வீடணனை எதிரியாய் பாக்கிறார் சுக்ரீவன். இந்த இருவரையும் நண்பராக்க ராமர் சூப்பரான ஐடியா வச்சிருக்கார். சுக்ரீவனையே பாத்து, போப்பா, அந்த ஆளை கூட்டியா என்கிறார்.

”ஒரு ஆளு அடைக்கலம்னு வந்துட்டா அதை அப்புறம் நோண்டி நொங்கெடுக்கக் கூடாது. ஏதோ என் மேலெ இருக்கிற பிரியத்திலெ வீடணனை வேண்டான்னு சொல்றீங்க. சூரியணின் மகனான சுக்ரீவனே (லேசா ஐஸ் கூட தேவைப்படுது ராமருக்கே). ஒரு குத்தமும் செய்யாத அந்த வீடணனை நீயே அழைத்து வருக” என்று ராமர் சொல்வதாக கம்பர் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லும் பாடல் இதோ:

ஆதலால் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம்ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்தகாதலான் இனிவேறு எண்ணக் கடவது எனகதிரோன் மைந்தகோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி என்றான்.

என்னங்க… நீங்களும் இந்த கம்பர் டெக்னிக்கை யூஸ் செஞ்சி பாருங்க… சந்தோஷமா இருங்க…

குடுத்து வைக்காத ஆளு


நெகிழ்வான தருணங்கள் என்று சில, வாழ்க்கையில் வந்து போகும். சிலருக்கு சலிப்பான தருணங்கள் என சில, வாய்ப்பதும் உண்டு. ஒரு பையன் அப்பா கிட்டெ கேட்டானாம். “பெத்த கூலிக்கு வளத்துட்டெ. வளத்த கூலிக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட்டே. கல்யாணம் செஞ்ச கூலிக்கு இந்தா, புள்ளைகளையும் வளத்து ஆளாக்கு”. எப்படி இருக்கு கதை? அப்பன் நொந்து நூலாயிருக்க மாட்டாரு???

படங்களில் அதிகம் நெகிழ்ச்சியைத் தருபவர், சமீப காலமாக திரு சேரன் அவர்கள். அவர் அந்தமான் வந்திருந்த போதும் கூட சில நெகிழ்வான சம்பங்கள் நடந்தன.. ரங்கத் என்ற தீவிற்கு அவரை அழைத்துச் சென்றோம். செல்லும் வழியில், அவர் இறங்கி நடக்க, சிலர் அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோகிராஃப் (சேரன் கிட்டேயேவா??) கேட்டனர். திடுதிப்பென வந்ததால் சிலர் ரூபா நோட்டில் கையெழுத்து கேட்டனர். “என் தகுதியோ, பதவியோ, இந்த ரூபா நோட்ட்டில் கையெழுத்து போடும் அளவு வளர்ந்து விடவில்லை” என்று மறுத்தார்.

பின்னர் விழா மேடையில் சேரன் அவர்களுக்கு ராஜாவின் சிம்மாசனம் மாதிரி சேரும், மற்றவர்களுக்கு சாதாரண சேரும் போட்டு வைத்திருந்தனர். அதைப் பாத்தவுடன் தனக்கும் மற்றவர்கள் மாதிரி சாதரண சேர் மட்டும் இருந்தாலே போதும் என்று பவ்யமாக மறுத்தார். கடைசியில் பார்வையாளர்கள் வரிசையிலிருந்து சேர் தூக்கி வந்து போட்டு சமாளித்தார்கள். (சேர் என்றால் சேரனுக்கு ஆகாதோ??) அவனவன் அந்த மாதிரி நாற்காலி கிடைக்க தவம் கிடக்கிறாய்ங்க.. தவமாய் தவமிருந்த சேரன் அதை ஒதுக்கியது நெகிழ்வாய் இருந்தது.

பாடல்கள் சில அதே மாதிரி நம்மை கிறக்கத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். சமீபத்தில் நான் ரசித்த நல்ல வரிகள்..“…. உன் அலாதி அன்பினில்நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்…”. மழையில் நனையலாம். அன்பு மழையில் நனைய ஆசைப்படலாம். ஆனா… அதே மழையாவே ஆகிவிடுதல்… பே..பே..பேராசை இல்லையா அது??

ஒவ்வொரு பாஷைக்கும் சில வார்த்தைகள் அழகு. இப்படித்தான் தில்லிக்கு 1989 களில் போய் “மயூர் விகார்” எங்கே இருக்கு என்று ஒரு வட நாட்டவரைக் கேட்டேன். “தில்லியில் அப்படி ஏதும் “விகார”மான இடங்கள் இல்லை” என்று கோபமாய் ஹிந்தியில் சொல்லி விலகினார். மயூர் விஹார் என்று சொல்லி இருக்கணுமாம். ம்..ம்.. இந்த ஹிந்தி ஒரே கொழப்பம் தான். “பல்லு கூசுது”, “ஆவி பிடிக்க மருந்து” இதெல்லாம் ஹிந்தியில் எப்படி சொல்வது என்று இன்னும் விளங்கவே இல்லை.. என்ன..??… “அப்படியே கிருகிருங்குது”, “நண்டு ஊர்ர மாதிரி இருக்கு”… இதுக்கும் ஹிந்தியில் வேணுமா?? அய்யா சாமி… ஆளை விடுங்க… தமிழ் வாழ்க.

தமிழில் சூப்பரா ஒரு வழக்கு இருக்கு.. அவனுக்கு என்னப்பா?? “கொடுத்து வச்ச ஆளு”. இதை வேறு மொழியில், மொழி பெயர்ப்பது ரொம்ப கஷ்டம். இப்பேர்ப் பட்ட மகனை அடைய நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்பார்கள். தவம் செஞ்சி பெத்த புள்ளை என்பதும் ஓரளவு ஒத்துக்க வேண்டிய பொருள். எப்படியோ, தவம் செய்வது என்பது ஒரு பொருளை வேண்டி, இறைவன் முன் விடாப்பிடியா (தன்னை வருத்தி) இருந்து, இறைவன் வரும் வரை பொறுமையா இருப்பது. (நாம ஒரு மெயில் அல்லது போஸ்டிங்க் போட்டு கடவுள் Like or Comment கொடுத்திருக்கிறாரா என்று ஏங்கும் காலம் இப்பொ..)

மனுஷங்க ஏதாவது வேணும்னா கடவுளை வேண்டி தவம் செய்வாய்ங்க… (சில சமயம் அசுரர்கள் கூட செய்வாங்களாம்.. நமக்கு எதுக்கு அந்த வம்பு?). “கடவுளே சரியா தவம் செய்யலையோ!!” என்ற சந்தேகம், யாருக்காவது வருமா? வந்திருக்கே… அட அப்படி ஒரு சந்தேகம், நம்ம தமிழனுக்கு வந்திருக்கு, என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கடவுளையே சந்தேகப்படும் அந்தத் தைரியசாலி வேறு யாரும் இல்லெ. திருவாளர் கம்பர் தான் அவர்.

எங்கெங்கெயோ சுத்தி கடைசியில் கம்பரை இந்த மனுஷன் புடிச்சிட்ராருய்யா.. என்று புலம்புபவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் கடையில். பின்புறம் ஒரு சின்ன குறிப்பு இருந்தது இப்படி: “இப் புத்தகத்தின் நோக்கம், சாதாரண மனிதரும், எம்மைப் போன்ற பாமரரும் நம்மாழ்வாரின் பாடலில் உள்ள இனிமையையும், பெருமையையும் உணர வேண்டும் என்பது மட்டுமே”. நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் புத்தகத்தின் பெயர். ஆசிரியர்: திவாகர். (அட!!! ஒரே நோக்கில் எழுதும் இவரும் நம்ம ஜாதியா?? அல்லது நானு அவர் ஜாதியா தெரியலை). அவரும் தமிழகத்தில் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து எழுதுகிறார். வித்தியாசமான் இன்னொரு ஒற்றுமை அவருக்கும் துறைமுகத்தில் தான் வேலை.

சரி நம்ம கம்பர் மேட்டருக்கு வருவோம். தவம் செய்வதின் நோக்கமே, தன் நிலையை உயர்த்துதல். அப்புறம் தன்னை பிறரும் நேசிக்கிற மாதிரி செய்தல். சீதை பிறந்து விட்ட காரணத்தினாலேயே, குடிப்பிறப்பு என்பதும், நாணம் என்பதும் தவம் செய்து(?) உயர்ந்தன. அதே மாதிரி நாணம் என்னும் நற்குணமும் தவம் செய்து(?) உயர்ந்தன. ஆனா அசோக வனத்தில் சீதை தவம் செய்யும் முறைகளை பாக்க, ராமன் மட்டும் சரிய்யா தவம் செய்யலையோ?? இது கம்பர் கேள்வி. ராமர் கொடுத்து வைக்கலியோ? – இது இந்த வம்பன் கேட்கும் கேள்வி.

பேண நோற்றது மனைப் பிறவி பெண்மைபோல்நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்காண நோற்றில் அவன் கமலக் கண்களே.

அவன் பெயிலாமாமே?? அட… இவனும் பெயிலாயிட்டானாமே… அட.. ராமா நீயுமா பெயில்??? இப்படி கேக்கிற மாதிரி இருக்கு இல்லெ?? இருக்கா? இல்லையா??

பாவேந்தே… பாவேந்தே…


பாவேந்தே… பாவேந்தே

அந்தமான் தமிழர் சங்கத்தின் சார்பில் தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய பாரதிதாசன் விழாவில் படைத்த்து

மங்காத தமிழென்றுமுழங்க்கிட்டார்பாவேந்தர் சங்கு கொண்டு
தீவுதனில்நெறியாளர் சேர்ந்திங்க்குவளர்த்திட்டார்சங்கம் வைத்துதமிழர் சங்கம் வைத்து.

கவியாளர்கலந்துள்ள இச்சபையில்கவிபாட வந்திருக்கும்பொறியாளன் நான். அனைவருக்கும் வணக்கம்.

எழுக புலவன் என்றதுபாரதியின் சொல் வாக்குபார்முழுதும் விரிந்ததுபாவேந்தர் செல்வாக்கு.

சிறு கதையினையும்கவியாய்க் கதைத்திட்டமுதல் கவிஇந்தப்புதுக்கவி..புதுமை தந்த கவி…புதுவை தந்த கவி…

கதைகளின் முடிவில்தான் வரும் முற்றும்.இக் கவி தந்த தாக்கம் தொடரும்.

பெண்ணடிமைக்கு மூத்த தாரம்விதவைக்கோலம்…விரட்டிவிட முதல்மணியடித்தவன்இந்தப் பாவலன்.

வேதனை துடைக்ககவி கட்டியதும்,மாங்கல்யம்,மாவிலைத் தோரணம்கட்ட வழி காட்டியதும்இந்தக் கவிதான்.

நாற்பதுகளில் (1940களில்)இன்னா நாற்பதுஇனியவை நாற்பதென நூல்பதம் கொண்டுவழி தேடியதோ சொர்க்கவாசல்..
இக்கவியின் கால்நின்றதோகர்ப்ப வாசலில்…ஆம்… அப்போதும்கர்ப்ப வாசலைப்பூட்டிக் கொண்டிருந்தான்இப்புலவன்.

காதலைத் தொடாதகவிஞருண்டா?காதலில் கலந்தவர்காணல் நினைத்தல் மறப்பர்…

பாவேந்தர் பாட்டிலோகாதலின் உச்சத்தில் கூடகாமம் தெரிவதில்லை…சமூகம் தெரிகின்றது…

அனைவர்க்கும் அமுதுஅமைகின்ற வரைகாதலையே துறக்கும்கணல் தெறிக்கிறது.

காதலித்துப் பார்த்தால்தன்னையே அறியலாம்….பாவேந்தர் காதல்கவிபடித்துப் பார்த்தால்உலகையே அறியலாம்.

கூடாய் இருந்திட்டமூட முட்டைகளைஉடைத்திட்டுவா..வா.. எனக்காத்திருந்தான்இக் கவிஞன்.

அறிவுக் குஞ்சாய்அரங்கில் வந்தன…அவை…???வேறு யாரும் அல்லர் அவனியில் பெண்டிர்.

தூங்கும் பெண்ணிவள் கூடதூண்டா விளக்கு..எதற்கு?வேண்டாத சாதி இருட்டு வெளுக்க…

பாவேந்தே… பாவேந்தே..எனக்கொரு சந்தேகம்பாவேந்தே…

கருவினில் மிதந்தபடிகதை கேட்டகதை தனையேநம்ப மறுத்தாய் (அபிமன்யூ கதை)

தொட்டிலில் மிதந்தபடிபடுதுறங்கும் பைங்கிளிக்குகொள்கை விளக்கப்பாடல் தனையேதாலாட்டாய்த்தந்திட்டாய்அதெப்படி???

மங்கையரே… மங்கையரே…பாவேந்தர் வரிகளைவாசியுங்கள்..சற்றேசுவாசியுங்கள்.இல்லையேல்வழக்கம் போல்- ஒருபார்வை பாருங்கள்அது போதும்…பெண்ணடிமைதூரப்போகும்.

ஆணடிமை தீருமட்டும்தலைப்பு தந்துகவியரங்கம் அடுத்தாண்டுநீங்கள்… இங்கேநாங்கள்.. அங்கே..அதுவரை…

கூண்டினுள் தங்ககிளி வளர்ப்போம்,தங்கக்கிளி வளர்ப்போம்.கதவினையும்திறந்து வைப்போம்.பூட்டினாலும்சாவிதனைக்கிளிவசம் தருவோம்.

நிறைவாக…நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…

வீழ்ந்த பின் தான்மொய்க்குமாமேஈக்கள் கூடஅதிகமாக…
தமிழும் தமிழனும்வீழ்ந்து விட வில்லை.வாழ்ந்து கொண்டிருப்பதால்..

நிரம்பிய அரங்கம்பார்த்து நிம்மதிதான் எனக்கு…

நன்றி வணக்கம்

மாற்றான் தோட்டத்து மல்லிகை


இந்த மந்திரத்தை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்தவர் அறிஞர் அண்ணா. அவரது கருத்துக்களை திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே முழுதாய் கேட்பவர்களாய் இருபந்தாலும் கூட, இந்த “மாற்றான் மல்லி” டயலாக்கை எல்லாரும் கண்டிப்பா யூஸ் செஞ்சிருப்பாய்ங்க.

ஆனா இதை பேரறிஞர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ அதை மட்டும் சரிய்யா, எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாய்ங்க. பக்கத்து வீட்டு பொண்ணை ஒரு வாலிபன் சைட் அடிக்கனுமா?, அடுத்த வீட்டு அக்கா பாக்க நல்ல பளிச்சுன்னு இருக்காகளா? கீழ் போர்ஷன்லே செவத்த குட்டியை டாவடிக்கனுமா?, சில ஆண்டிகளை பலருக்குத் தெரியாமல் சில நேரங்களில் ரசிக்கனுமா? – இது எல்லாத்துக்கும் ஒரே பதில் இது தான்:- அண்ணா சொன்ன மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம். இதை அவுத்து விட்டு விட்டு நிம்மதியா கடலை போட ஆரம்பிச்சிருவாங்க.. (நான் அப்படி எல்லாம் கிடையாதுங்க.. எந்த வீட்டிலும் குழந்தைகள் தான் எனது நண்பர்கள்)

அண்ணா சொன்னதின் அத்தம் என்ன? எதிர் கட்சியினர் என்பவர் எதிரிக் கட்சியினர் இல்லை. நமக்கு எதிர் அணியில் இருப்பவர். அவர்களில் நல்லவர்கள் வல்லவர்கள் இருப்பார்கள். அப்படி எதிராய் இருப்பதாலேயே அந்தத் திறமைகளை குறைத்துச் சொல்லிவிட முடியுமா என்ன? அவர்களின் திறமைக்கு மரியாதை தரும் கண்ணியமான வாசக வசனம் அது.

ஆனா என்ன நடக்கிறது. எதிரணியினரை விரோதிகளாய் பாக்கும் வழக்கம் வந்து விட்டதே.. ஆய் ஊய் என்றால் வீச்சறுவா தூக்கும் வித்தையை சினிமாக்களும் தொடர்ந்து காட்டி வந்து கெடுக்கின்றன். கேட்டா காதலும் வீரமும் நமக்கு இரு கண்கள் என்று டயலாக் வேறு.. ஆமா எங்கே போய்க்கொண்டிருக்கோம் நாம்?

பக்கத்து வீட்டு வடநாட்டவர் ஒரு கேள்வி கேட்டார். தில்லியில் ஆளும் கட்சி தலைவரும் எதிர் கட்சி தலைவரும் பொது நிகழ்சிகளில் ஒன்றாய் தோன்றுவது போல் தமிழகத்தில் நடக்காதா? என்றார். ரொம்ப விவகாரமான கேள்வி அது. இதுக்கு நான் ஏதாவது சொன்னால் அது அரசியல் ஆகிவிடும். நானும் மழுப்பலாக அப்படி எல்லாம் இல்லையே ராஜாஜி பெரியார், கமல் ரஜனி, எம்ஜிஆர் சிவாஜி இப்படி எல்லாரும் ஒன்றாய் காட்சி தந்திருக்கிறார்களே என்று சொல்ல, கேட்டவர் அடங்கி விட்டார்.

ராஜாஜி, சக்கரவர்த்தி திருமகன் பெயரில் ராம காவியத்தை படைத்தவர். பெரியாரோ, அதே ராமருக்கு செருப்பு மாலை போட்டவர். பாம்பையும் பார்ப்பனரையும் ஒன்றாய் பார்த்தால் பார்ப்பனரை முதலில் விரட்டு என்று சொன்னவர்களின் தலைவரின் நண்பர் தான் ராஜாஜி என்ற பார்ப்பனர். ஆன்மீகவாதி ஒருவர் பெரியாரின் வீட்டில் தங்குவாராம். குளித்தவுடன் அவருக்கு திருநீரை ஏற்பாடு செய்து தந்தாராம் பெரியார். எவ்வளவு பெரிய மனிதர்கள்!!!

காமராஜர் கக்கன் போல் எளிமையின் மறு உருவமாய் வாழ்ந்தவர் தோழர் ஜீவா அவர்கள். அவரின் பெயரில் பரமக்குடியில் ஜீவா படிப்பகம் என்று உள்ளது. அங்கு ஆண் பெண் பலருக்கும் ஜீவா என்று பெயரும் வைப்பர். அவரைப் பற்றி வேறு ஒன்றும் அவ்வளவாய் வெளி உலகிற்குத் தெரியாது. ஆனால் வந்தார் ஒரு கதர் சட்டைத் தமிழர். பட்டி தொட்டி எங்கும், உலகெங்கும் உள்ள மேடைகளில் எல்லாம் ஜீவா பற்றி பேசினார். அந்தமானிலும் கூடப் பேசினார். ஆன்மீகச் சொற்பொழிவில் கூட ஜீவா இடம் பெறத் தவறவில்லை. அந்தப் பேச்சாளர் ஒன்றும் கம்யூனிச கட்சி ஆதரவாளர் அல்ல. மாற்றான் தோட்டத்து மல்லியின் மணத்தை மறுபடி மறுபடி மலரச் செய்த அந்த அபூர்வ மனிதர் தமிழருவி மணியன் அவர்கள்.
எதிரில் இருந்தாலும் எதிரணியில் இருந்தாலும் அவரும் மனிதர் தானே! எதிரியை அழிக்க வேண்டுமா? சுலம்பான வழி ஒன்று உள்ளது. அவரை நண்பனாக்கிக் கொள். இது ஒரு அறிஞர் சொன்னது.

அரசு வேலைக்கு ஆள் எடுத்தோம். எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதாய் அரசல் புரசலாய் சேதி காதில் விழுந்தது. போட்டோவுடன் வந்து தேர்வு எழுத அழைத்தோம். 10% மக்கள் போட்டோ இல்லாமல் வந்தனர். இதை முன்பே எதிர்பார்த்து கேமிராவும் கையுமாய் ஒரு அரசு ஊழியரை அமர்த்தி, சுடச்சுட போட்டோ எடுத்து (இலவசமாய்) பிரிண்ட் போட்டு கையிலெ குடுத்து, போ பரீட்சை எழுதுப்பா என்றோம். அரசின் கரிசனம் பாத்து மிரண்டே போனார்கள்.

முதியவர் ஒருவர் வந்தார். தன் மகளுக்கு காலையில் வேறு பரீட்சை இருக்கிறது. என்ன செய்ய? என்று. மாலையில் வந்து எழுதலாமே. இதோ பிடிங்க புது ஹால் டிக்கட். நேரம் மாத்தி தர்ரேன் என்று தந்தேன். காலை பரீட்சை இருக்கு என்று சொன்னதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? என்று கூட அரசு கேட்காதா? என்றார் ஆச்சரியத்துடன். வயதில் பெரியவர். மகளை அழைத்து வராத போதே தெரிகிறது. மகள் அங்கே பரீட்சை எழுதுவது. அவங்க கையில் தான் அந்த ஹால் டிக்கட் இருக்கும். எதுக்கு இதெல்லாம் என்றேன் நான். இஸ்லாமிய பெரியவர் மனம் இளகி முதுகில் தட்டி “அல்லா உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்” என்றார். அவர் சண்டை போட தயாராய் வந்தவர் என்பது இங்கே நான் சொல்லாமல் விட்ட உண்மை.
இப்படித்தான் இராமயணத்திலெ…. அதான் தெரியுமெ.. சீதையை ராவணன் தூக்கினது மாற்றன் தோட்டத்து கதை தானே… ஹலோ.. ஹலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க… இந்த மாற்றான் கருத்தையும் கொஞ்சம் கேளுங்க…

நான் சொல்ல வந்தது, இந்திரசித்தன் கதை. அனுமன் களேபரம் செய்து விளம்பர இடைவேளையில் இருக்கும் போது, இந்திரசித்தன் கிளம்புகிறார். எல்லா திசைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவன். ஆனா செத்த நேரம் அங்கே இங்கே என்று கிடக்கும் செத்த உடல்களைப் பார்க்கிறார். அட.. அனுமனது பேராற்றல் மிகவும் சிறந்தது என்கிறாராம். கேட்ட பார்ட்டிங்க எல்லாம் ஆடியே போயிட்டாங்களாம். கம்பர் எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிக்கு பாட்டு எழுதி இருக்கார் பாத்தீகளா??

சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன்
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார்.

மீண்டும் தேடி வருவேன்.

திரையிசையில் இலக்கியம் (??)


சின்னக் குழந்தைகள் முன்பு, புத்தகத்தை மூடி வைத்து, சட்டென்று ஒரு பக்கத்தை திறந்து படம் இருக்கா? இல்லையா? என்று கேப்போம்.. அந்தக் காலத்தில். அந்த ரேஞ்ச்சில் ஒரு நாள் திரைப்பாடல்களில் இலக்கியத் தரம் இருக்கா இல்லையா என்று விவாதம் வந்தது. அன்றைய விவாதம் செமெ களை கட்டியது என்பதை சொல்லாமல் விட முடியாது. வீட்டுக்கு லேட்டாப் போயி வீட்டுக்காரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை மட்டும் நான் சொல்லவெ மாட்டேன்.

நம்மாளுகளுக்கு ஃபாரின் சரக்குன்னா ஒரே கிக்கு தான். அது பட்டை யாய் இருந்தாலும் சரி.. பாட்டாவே இருந்தாலும் சரி. யோகம் தியானம் என்பது கூட இங்கிருந்து வெளிநாட்டுக்குப் போய் வந்து ஆங்கிலத்தில் சொல்லிக் குடுத்தா தான் மண்டையிலெ ஏறுதே… என்ன செய்ய??

அபிராமி அந்தாதி மாதிரி பல அந்தாதி பாட்டுகள் இங்கே எப்பொ இருந்தோ பிரபலம். ஆனா ஹிந்தியிலிருந்து வந்த அந்தாக்சிரியைத் தான் நம் மக்கள் கொண்டாடி குதூகலிப்பர். சினிமாப்பாட்டில் கூட அந்தாதி பாட்டு இருப்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். இதோ சில சாம்பிள்கள்:

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்

பாட்டுப் பாடி மரத்தை சுத்தும் அந்தக் காலத்து சினிமாவும் சரி, முனுக்கென்று கண் சிமிட்டும் நேரத்தில் கனவு வந்து ஆஸ்திரேலியாவோ அல்லது தாய்லாந்து கடற்கரைக்கோ தயாரிப்பாளர் செல்வில் போய்வரும் இந்தக் காலச் சினிமாவிலும் சரி.. பாடல் என்பது முழுக்க நடைமுறையில் இல்லாத ஒன்று.

தாலாட்டு முதல் ஒப்பாரி வரை பாட்டால் வளர்ந்த சமூகம் என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப் படுத்தினால் தான் உண்டு. என்ன செய்ய நம்ம மறதி அப்படி. இப்பொவும் ஏதோ சடங்காய்த் தானெ, சடங்கு நேரத்தில் கூட பாட்டு சத்தம் கேக்குது. போகிற போக்கில் நீராடும் கடலொடுத்த பாட்டுக்கெ ரிஹெர்ஷல் தேவைப்படும் போல் இருக்கிறது.

ஆக.. சினிமா என்பதே கற்பனை என்றால், அதில் வரும் பாடல் கற்பனையோ கற்பனை. அதில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தலைப்பாக்கட்டு அல்லது மதுரை முனியாண்டி விலாசில் போய் தயிர் சாதம் தேடுவது மாதிரி தான் இதுவும்.

ஆனால் என்றோ எப்போதோ கேட்ட பாடல்கள் இன்னும் இனிமையாக காதுகளில் ஒலிக்கும் போது அவை அமரத்துவம் பெற்ற லிஸ்டில் அடைத்திடலாம். அதாவது கிட்டத்தட்ட இலக்கியத்தரம் என்று. ஆமா இலக்கியத்துக்கு என்ன தரம் என்று கேக்கிறீங்களா?? (பாமரனுக்கு புரியக்கூடாது. நீண்ட ஆயுசு. எப்பவும் இனிக்கனும் – அது தான் இலக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து. எல்லாருக்கும் ஈசியா புரிஞ்ச்சிட்டா அப்புறம் கோனார் நோட்ஸுக்கு ஏது வேலை?).

நம்ம கம்பர் பத்தி கொஞ்ச நாளா யோசிக்கிறதாலெ, சினிமாப் பாட்டுக்கும் கம்பருக்கும் இருக்கும் தொடர்பையும் லைட்டா டச் செய்து பாத்தேன்.

கற்பாம் மாணமாம், கண்ணகியாம் சீதையாம் என்று TMS கணீர் குரலில் பாடுகிறார். கம்பனைக் கூப்பிடுங்கள் கவிதை எழுதுவார் என்கிறார். இன்னொரு கருப்பு வெள்ளை படம் கம்பன் ஏமாந்தான் என்று பாடுகிறது. (பெண்கள் மலர் போல் இல்லை என்கிறார் அவர்)

அன்றைய இலக்கியம் படித்த உயர்தர மக்களுக்காய். (ஒரு வேளை அந்த இலக்கியத்தமிழ் அன்று எல்லாருக்குமே புரிந்திருக்குமோ? பெண்புலவர்கள் கூட இருந்திருக்காங்களே!! குடும்பத்தோடு இலக்கியம் பேசி மகிழ்ந்திருக்கலாம்).

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் அங்கு
மலைத்தேன் என நான் மலைத்தேன்.

இப்படி ஒரு பாட்டு சினிமாவில் வந்தது இன்றும் இனிக்கிறது. எல்லார்க்கும் புரியுதே.. அப்பொ அங்கங்கே இலக்கியம் இருக்கத்தானே செய்யுது.

கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் கம்பரின் எண்ணங்களை நவீன சினிமா பாடல்களில் (தெரிந்தோ தெரியாமலோ) புகுத்திய செய்திகள் அங்காங்கே கிடைக்கிறது.

கடலுக்குக் கூட ஈரமில்லையோ? – என்று நவீன கவிஞர்கள் யோசித்து எழுதியது. ஆனால் கம்பரின் கற்பனையோ “மேகத்திற்கே வேர்க்கிறதே” என்று ஆச்சரியப்பட வைக்கிறது. [கார்க்கருள் தடங் கடல்களும் மழைமுகிழ் காணும் வேர்க்க – பார்த்ததுமே மேகமும் கடலும் வேத்து விறுவிறுத்துப் போச்சாம். இது கம்பன் ஸ்டைலில் சொன்னது].

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை.
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை.

இது இன்றைய கவிஞர் காதலன் காதலி பேசுவதாய்… இல்லை இல்லை பாடுவதாய் அமைத்தது. “துயில் இலை ஆதலின் கனவு தோன்றல” – திரிசடை சீதையிடம் சொன்ன ஒரிஜினல் அக்மார்க் சங்கதி.

இந்த நிலவை எதுக்கெல்லாம் தான் கம்பேர் செய்வாங்களொ?? நகம் பாத்தா நிலவு மாதிரி என்னெக்காவது உங்களுக்கு தெரிஞ்சிருக்கா?? ஆனா கம்பர் அப்படிப் பாத்திருக்கார். “சிறியவும் பெரியவும் ஆகித் திங்களோ” என்று அச்சரியப்பட்டு அங்கலாய்க்கிறார். ராமரின் நகங்கள் இப்படி இருந்தன என்று சீதையிடம் சொல்கிறார் அனுமன். ஏற்கனவே நொந்து பொயிருக்காக… அந்த நேரத்தில் இப்படி ஒரு பில்டப்பு..??? ஆனா இப்பொதைய சினிமாப் பாடல் வரிகளில் இருப்பது “இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்”. என்ன சுட்ட சரக்கு மாதிரி தெரியுதா?? கம்பர் என்ன காப்பி ரைட்டா வச்சிருந்தார்??

“பார்வையாலெ நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சை ஆச்சு” என்று ஒரு ஃப்ளோவிலெ இப்போதைய பாடலாசிரியர் எழுதி இருக்கலாம். ஆனா கம்பருக்கு மட்டும் அப்படி ஃப்ளோ வந்திருக்காதா என்ன? “பார்க்கப்பட்டனர் சிலர்” என்று பார்வையாலே பலர் செத்த கதை சொல்கிறார் கம்பர்.

இப்படியாக திரைப்பாடல்கள் அங்காங்கே இலக்கியம், அதுவும் கம்பரிடம் சுட்ட இலக்கிய சங்கதிகள் இருக்கு என்று நிறைவு செய்கிறேன்.

மீண்டும் வருவேன்.