நம்பிக்கை… ரொம்ப முக்கியம்…


கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அதான் ஒவ்வொரு வருஷமும் தான் வருதே!! அதுலெ என்ன புதுசா இருக்கு? -ன்னு பாக்கிறீங்களா? அது சரி தான். ஒவ்வொரு வருஷமும் சொல்லி வச்ச மாதிரி பசங்களெ விட பொண்ணுங்க அதிகம் மார்கஸ் வாங்குறாங்களே? ஒரு வேளை மதிப்’பெண்’ என்று இருப்பதால் இப்படி இருக்குமோ! அப்பொ பசங்க அதிகம் மார்க் வாங்க வேறெ வழியே இல்லெ? மார்க்கை இனி ’மதிப்பாண்’ என்று சொல்லி வேண்ணா ட்ரை செய்யலாம்.

இது போக, எங்க ஸ்கூலில் 100க்கு 100 சதவீத தேர்வு என்று முரசு கொட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் நம்ம கண்ணை சுண்டி இழுக்கும். அடுத்த நாளே நம்மை சோகத்தில் ஆழ்த்தும் ‘பரீட்சை தோல்வி.. மணவன்/மாணவி தற்கொலை’ என்பதும் கண்டிப்பாய் வரும். இந்த வருஷம் என்னவோ அது கொஞ்சம் அதிகமானது தான் மன்சுக்குக் கஷ்டமா இருக்குங்க. என்னமோ பிரம்மன் படெச்சதே இந்த பரீட்சை பாஸ் செய்யத்தான் என்ற மாதிர்ல்லெ படுது. ஒரு வேளை ஃபெயில் ஆவதற்க்காகவுமே படைத்திருக்கலாமே.. என்ன நான் சொல்றது?. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கலாமே…

Exam suicide

வாழ்வில் நம்பிக்கை தர அந்தக் காலத்தில் உதயமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. அதற்கும் முன்பு துணிவே துணை என்றும் சொல்லி வார இதழ்கள் வந்தன. [ஆனால் நடிகைகள் துணியே தொல்லை என்று இருப்பது தனிக் கதைங்க]. ”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை வாழ்விலே..” என்று தற்கொலைக்கு முயல்பவரை காப்பாத்தி கரை சேத்த கதை எல்லாம் வந்திருக்கு. இப்பொ அந்த மாதிரியான டோஸ் கெறைஞ்சதினாலே இப்படி இருக்கலாமோ?

vaaz winaiththaal vaazalaam

தற்சமயம் நம்பிக்கையினை யார் சொல்கிறார்களோ இல்லையோ, நகை விளம்பரங்கள் போட்டி போட்டு சொல்லித் தருகின்றன. நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வே காலி என்று பல மனோ தத்துவ நிபுனர்கள் நிருபீத்துள்ளனர். மூன்று நண்பர்கள் சேந்து நம்பிக்கையோட உங்களை ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பிடலாம்..[அது சரி தெரியாமத்தான் கேக்குறேன்..அப்படி செய்றவன் நண்பனா என்ன?]

நீங்கள் தெருவில் வருகிறீர்கள். முதல் நன்பன் (?) சோகமாய், ‘என்னடா மச்சி? ஒடம்பு சரியில்லையா?’ உங்களை கவுக்கும் சதியை ஆரம்பிக்கிறான். இல்லையே என்று சொல்லி அடுத்து பயணம் செய்கிறீகள். ரெண்டாவது ஃப்ரண்ட் வந்து கலாய்க்கிறான். ‘என்ன மாமு, ஆஸ்பத்திரியிலிருந்து வர்ர மாதிரி இருக்கே? என்ன ஆச்சி?’ அப்பவே லேசா ஜுரம் வர ஆரம்பித்திருக்கும். சொல்லாமலேயே கடைசி தோஸ்த் வருவான். உங்கள் வாய், அவனின் கேள்விக்கு முன்பே வரும். ‘காலையிலிருந்தே ஒரு மாதிரியா இருக்கு. ஆஸ்பிடலுக்கு போகணும் வர்ரியாடா?’ இது தான் நம்பிக்கையின் தத்துவம். உங்களை கவுக்க குவாட்டர் கூட வேணாம். இந்த மாதிரி பசங்க ரெண்டு பேரு போதும்.

ஒவ்வொரு பூக்களிலும் என்று ஒரு பாட்டு பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன அந்தக் காலக் கட்டத்தில். இப்படி நம்பிக்கைகளை அள்ளி அள்ளித்தரும் படங்கள் இமேஜ்களாக வாட்ஸ் அப்பில் குவிகின்றன. பாக்கும் பலர், இது ஏதோ அடுத்தவைங்க படிக்கத்தான் இலாயக்கு என்று  பொறுப்பா அடுத்த குரூப்புக்கு பகிர்ந்திட்டு டெலீட் செய்துடுவாங்களோ? [நான் அப்படித்தான் செய்றேன்)

சின்னப் புள்ளையா இருக்கும் போது கடவுள் மறுப்பு கோஷங்கள் பல சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். சரி.. கடவுளை எப்புடி நம்புறது? – இப்படி கேளவி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ”இவங்க தான் உன்னோட அப்பா அம்மா. நம்புறியா?” ”ஆமா..” என் பதில் அது. ”இதெ நம்புறியே, கடவுள் இருக்குன்னா நம்ப மாட்டேங்கிறியே.. நம்புப்பா.. நம்பிக்கை தான் வாழ்க்கை…” அப்பொ எல்லாம் ஒத்துக்க முடியலை. ஆனால் இப்பொ அதை காலம் தான் நம்ப வைத்தது.

Suki sivam
சுகி சிவம் பேச்சில் ஒரு முறை கேட்டது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு சின்னதா வித்தியாசம் இருக்காம். அம்மாவால் தான் நீ பிறந்தாய் என்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அப்பாவால் தான் பிறந்தாய் என்பது அந்த அம்மா ஒருத்திக்குத் தான் தெரியும். [ரொம்ப யோசிக்காதீங்க… எவ்வளவு மோசமான உதாரணம்.. இப்புட்டு லைட்டா சொல்லிட்டாரு நம்ம எழுத்துச் சித்தர்.] எல்லாம் தன் எழுத்து & பேச்சின் மீது இருக்கும் நம்பிக்கைங்க..

இப்படித் தானுங்க, ராமாயணம் இந்த மாதிரியான பல நம்பிக்கையினை வளர்க்க நமக்குச் சொல்லிக் குடுக்குதுங்க. தோல்விகள் பல கடவுளின் அவதாரத்துக்கே வருது. அப்பவும் கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் பாணியில் கடவுளே கூட இருப்பது தான் நம்பிக்கையின் உச்சம். நடப்பதை அப்படியே வாங்கிக் கொள்வது என்பது தான் வாழ்வின் அர்த்தமே. ஆமா… மேலதிகாரி திட்டுவதை மட்டும் எப்படித் தான் ஜாலியா அனுபவிச்சு, அதெ மிமிக்ரி மாதிரி செய்து காட்றீங்க? இப்படியே, நம்ம எல்லா தோல்விகளையும் ஜாலியா எடுத்துகிட்டா, நம்பிக்கை தானா வருமே..

கலங்கி நிக்கும் ஒரு மனிஷனுக்கு ஆறுதல் சொல்றது தான் ரொம்ப முக்கியம். அப்படியே லைட்டா ஃப்ளைட் எல்லாம் ஏறாமெ கிஷ்கிந்தா போலாம் அங்கே கம்பர் நம்பிக்கையூட்டும் படலம் பாக்கலாம். (அப்படி எந்தப் படலமும் கெடையாதுங்க)

வாலி இறந்த பின்னர் நடக்கும் காட்சி. அங்கதனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். சொல்வது யார் தெரியுமா? மறைந்து நின்று தாக்கிய இராமன் தான். (ரொம்பத்தான் லொல்லுன்னு சொல்லத் தோணுதா?) அதெவிட சூப்பர் நம்பிக்கை வருது. இராமனின் தாமரை போன்ற அடிகளை வணங்கினான் அங்கதன். (இது.. இது தான் நம்பிக்கை) நீல நிறத்து இராமன் அருளோடு பாத்தாராம்.(ம்..அட்ரா..அட்ரா சக்கை) ”நீ நல்ல புள்ளையா இருக்க ஒரு டிப்ஸ் தர்ரேன். இந்த சுக்ரீவனை சிறிய தந்தை என்று நெனைக்காதே. உன் அப்பாவாவே நெனைச்சிக்க”. இத்தோடு விட்டாரா கம்பர்? இது மட்டும் சொல்லி இருந்தா கம்பர் எப்புடி கவிச்சக்ரவர்த்தி ஆவுறது? அவர் ஒரு பிட்டு சேக்குறார். ”உன் பிறப்புக்கு காரணமான…” பாத்தீகளா… சுகி சிவம் ஐயா ஸ்டைல் தானே இது… சாரி..சாரி.. கம்பர் ஸ்டைல் தான் சுகி சிவமும் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ, நமக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதே நம்பிக்கையில், என் கண்ணு இல்லெ.. என் செல்லம் இல்லெ.. இந்தக் கம்பர் பாட்டும் படிச்சுடு கண்ணு…

வாலி காதலனும் ஆண்டு மலரடி வணங்கினானை
நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல்ல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தையாம் என முறையின் நிற்றி

மீண்டும் வருவேன்..நம்பிக்கையோடு…

கொடுக்கிற தெய்வம்.,


சமீபத்தில் ஒருவர் ஆபீசுக்கு வந்திருந்தார். வந்த வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஊர் உலகம் எல்லாம் சுத்தி வந்து பேச்சை எடுத்து வந்து பின்னர் வந்த வேலை பத்தி ஆரம்பிப்பது தான் நம்ம ஆளுங்களுக்கு கை வந்த கலையாச்சே.. (சில சம்பயங்களில் அவர்கள் வந்திருக்கும் வேலையை விட, இந்த மாதிரி இடைச் சொருகலாக வரும் இலவச இணைப்புகள் ரொம்பவுமே சுவாரஸ்யமாக இருக்கும்) சரி..சரி.. மேட்டரைச் சொல்லுப்பா..அது சுவாரஸ்யமா இல்லையா என்பதை நாங்க சொல்றோம் என்கிறீர்களா?? அதுவும் சரி தான்.

பேசிக்கொண்டு வந்தவர், தமிழில் உங்களுக்கு ஆர்வம் இருக்கா? என்று கேட்டார். ஏதோ கொஞ்சமா இருக்கு..என்றேன். (அடிக்கடி மனைவியிடம் நல்லா வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவுக்கு இருக்கு என்ற விபரம் அவரிடம் சொல்ல முடியுமா என்ன?? ஏதோ உங்களிடம் அதனைக் கொட்டி ஆறுதல் அடையலாம்.) உங்கள் புளுடூத்தின் கதவைத் திறந்து வைங்களேன் என்றார். நானும் சரி என்று செய்தேன் கேட்டபடி. அவர் ஒரு ஆடியோ சொற்பொழிவினை அமைதியாய் என் மொபைலுக்குக் கடத்தினார்.

ஒரு மணி நேரமாய் ஓடும் உணர்ச்சி பூரவமான சீமான் அவர்களின் பேச்சு அது. தொடக்கத்தில் தமிழருவி மணியனின் நடையில் காமராஜைச் சுற்றி வந்தாலும் பின்னர் அப்படியே பெரியார், ஈழம், தலித், பகுத்தறிவு என்று அழகாய் காட்சி மாறி வருகிறது. கேட்பவர்களை அப்படியே கட்டிப் போடவைக்கும் பேச்சு அது. நடு நடுவே கெட்ட வார்த்தைகள் போல் வந்தாலும், அந்தக் கோபாவேசமான பேச்சுச் சூழலுக்கு அது தவறாகப் படவில்லை. பேச்சுக் கலை என்பது எப்படி சீமானுக்கு இவ்வளவு கைவந்த கலையாய் ஆயிற்று?? கடவுள் கொடுத்த வரமா இருக்குமோ!! அவர் தான் கடவுளே இல்லை என்கிறாரே!!! அவருக்கு ஏன் இந்த பேச்சுக் கலையை கூரையைப் பிய்த்துக் தருவது போல் தந்தார் அந்த (இல்லாத) கடவுள் அவருக்கு??

கோவில்களில் இருவகை. செல்வம் கொட்டும் கோவில்கள் ஒருவகை. மரத்தடி பிள்ளையார் மறுவகை. இது தேவாலயங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நான் இருக்கும் சிறிய அந்தமானிலும் 20க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இருக்கின்றன. பார்த்தாலே பிரமாண்டம் என்று தோற்றமளிக்கும் வகையில் ஒரு பக்கம். பழைய சினிமா டெண்ட் கொட்டகையை நினைவு படுத்தும் தேவாலயங்கள் மறு பக்கம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தரும் என்பது எல்லா கடவுள்களுக்கும் பொதுவோ என்னவோ யாருக்குத் தெரியும்?

சப்பர் பா2ட்3கே தேத்தா என்று கூரையை பிய்த்துக் கொண்டு தரும் கலையை ஹிந்தியிலும் சொல்வர். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்து அப்படியே உள்ளே போனா எப்படி இருக்கும்? – என்ற கற்பனை ஒரு பழைய படத்தின் காமெடி காட்சி. வாழைப் பழத்தை தரலாம். அதையும் உரிச்சியும் தரலாம். அப்படியே வாயில் தினித்து குச்சி வைத்து தினிக்கவா முடியும் என்றும் சொல்லக் கேள்வி. முயற்சி செய்யாத ஆட்களுக்கு சொல்லும் வார்த்தைகள் இது..

சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதற்கு நேர் மாறாக ஒரு சொல்லாக்கமும் இருக்கத்தான் செய்கிறது. பட்ட இடத்திலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பது தான் அது. அது எப்படி சாத்தியமாகும்? அடி பட்ட இடத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். இருந்த போதிலும் அதில், சிறு வேதனை வந்தாலும் அதுவே பிரமாண்டமாய் இருக்கும். உலகையே தூக்கிக் கொண்டிருக்கும் ஹெர்குலிஸுக்கு மேலும் ஒரு வெட்டுக்கிளி கூட தூக்க முடியாதாம். (9ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் படித்தது)

இதையே அதே 9ம் வகுப்பில் தமிழாசிரியர் வள்ளுவர் சொன்னதையும் காட்டினார். மயிலிறகு அளவு அதிகம் சுமந்தாலும் வண்டி குடை சாய்ந்து விடுமாம்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

இதனை அந்தக் காலத்தில் தமிழக அரசு சூப்பரா குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. மூட்டை முடிச்சை குறையுங்கள். வண்டிப் பயணம் சுகமாகும். குடும்ப பாரம் குறையுங்கள். வாழ்க்கைப் பயணம் சுகமாகும் என்று சொல்லி இந்த குறளையும் நல்ல குறலில் பாட்டாக பயன்படுத்தியது.

ஒரு நிமிஷம்… கம்பர்கிட்டெ இருந்து ஒரு Message வந்திருப்பதாய் டொய்ங்க் என்ற சத்தம் சொல்கிறது… பாத்தா… “என்ன இன்னெக்கி ஐயன் வள்ளுவன் தான் Climax ஆ??”..

இல்லை கம்பரே… உங்களை விட்டா எனக்கு வேறு வழி இல்லை முடிக்க.. இதோ வந்திட்டேன்..

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்று தான் எல்லாரும் சொல்வார்கள். கம்பர் அப்படிச் சொல்லிட்டா.. அப்புறம் கம்பருக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீதை சிறையில் (சகல வசதிகளும் இருக்கும் நல்ல உயர்தர Open Jail தான்) இருந்தாலும் சோகம் உருக்குகிறதாம். எப்படி? புண்ணைப் பிளந்து அதில் நெருப்பை நுழைத்தது போல் என்கிறார் கம்பர். புண் சிரமம். நெருப்பு.. கேக்கவே வேணாம். ரெண்டும் சேந்தா??

ஒரு Flow Char போடும் அளவுக்கு கேள்விகள். மாயமானைத் தேடிப் போன இராமன் இலக்குவனை காணலையோ? If Yes இராவணன் தான் கடத்திச் சென்றார் என்பதை அறியவில்லையோ?? If Yes இலங்கை இருக்குமிடம் தெரியாது இருப்பர் போலும்… இப்படி எல்லாம் கவலைப் பட்ட சீதையின் வேதனை இப்படி இருந்ததாம்.
கண்டிலங்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான்கொண்டு இறந்தமை அறிந்திலராம் எனக் குழையாபுண் திறந்ததில் எரி நுழைந்தாலெனப் புகைவாள்

கம்பன் கலாட்டாக்கள் தொடரும்.

சிலிம் ஜாக்பாட் சிம்ரன்


பழைய கமல் படத்தில் வந்த ஒரு அழகான SPB பாட்டு தான் கம்பன் ஏமாந்தான்.. இந்த கன்னியரை ஒரு மலர் என்றானே, கற்பனை செய்தானே என்று வரும். ஆனா என்னோட கிட்ட்த்தட்ட எல்லா போஸ்ட்களிகளில் எங்கெங்கோ சுத்தி கடைசிலெ கம்பர் வந்து விடும் விபத்து நிகழ்கிறது. இது ஏதும் திட்டமிட்டு செய்த சதி அல்ல. தற்செயலாக வந்தது. அப்படியே தொடர்கிறது. ஏன் இப்படி என்பதற்கான தன்னிலை விளக்கம் தான் இந்த போஸ்ட்.

தினமணி பேப்பரில் முதலும் கடைசி வரை மேய்ந்து முடிக்கும் படிப்பாளி என் மாமா. அவர் எல்லா வார மாத சங்கதிகளையும் படிப்பார். அதிகம் பயணம் செய்வதால் பலபல புத்தகங்கள் அவரிடம் வந்து சேரும். அப்படி அவரிடம் எப்படியோ வந்து சேர்ந்தது தான் அந்த ஒன்பது தொகுதிகள் அடங்கிய வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்ட கம்பராமாயணம் மூலமும் தெளிவும்.

ராமேஸ்வரத்தில் பல வருடங்கள் மீன் பிடி தொழில் சார்ந்து இருந்த போதும் என் மாமா கோவிலுக்கு போய் நான் பாத்த்து இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்ற ரகமும் இல்லை. 2000 ஆண்டில் அவர் கையில் வந்த்தாய் கையெழுத்து சொல்கிறது. படித்திருக்கலாம். 2005 வாக்கில் என் கைக்கு வந்தது. அந்தமான் வரை சுமந்து வந்த நல்ல காரியம் மட்டும் தான் நான் செய்தது. ஓர் ஆன்டு வரை அலமாரிச் சிறையில் தனிமைத் தண்டனை அனுபவித்த்து அந்தக் கம்பக் காவியம்.

வருடத்துக்கு ஒரு முறையாவது வீட்டைச் புரட்டிப் போட்டுச் சுத்தம் செய்வது என்பது என் மனையாளிடம் இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. அப்படி ஒழுங்கு படுத்தும் போது தேவையற்ற பொருட்கள் பயன்படுத்தாத பொருள்கள் வெளியேறிவிடும். அப்படி வீட்டை விட்டு வெளியேற்றத்துக்கு ஆன முதல் ஐட்டம் அந்த ஒன்பது தொகுதி கம்பராமாயணம். இதெப் படிச்ச மாதிரியே காணோம்…(படிச்சாலும் இது என்ன ராமாயணம் படிக்கிற வயசா என்ற எதிர் பேச்சும் வரும் என்பது வேறு விஷயம்). தூக்கிப் போட்றலாம் என்பதை நாசுக்காய் எங்காவது படிக்கிற ஆட்கள் அல்லது லைப்ரரிக்கு தரலாமே என்று என் திருமதியின் திருவாய் மொழிந்தது.

நானும் பொறுப்பாய் அதனை எடுத்துக் ஒரே கட்டாக கட்டி அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் நூலகத்தில் கொடுத்து விட்டேன். அங்கு மாதம் ஒரு முறை கம்பன் கழகமாய் கூட்டம் நடந்து வந்தது. வாராவாரம் இலக்கிய மன்றக் கூட்டமும் நடைபெறும். கம்பனின் கற்பூர வாசனை அறியா கழுதையான நான் அதென்ன கம்பனுக்கு மரியாதை (ரிசர்வேஷன் தேவையா?) என்று சொல்லி வைக்க, நான் சொன்ன இந்த நல்வாக்கு பலித்தெ விட்டது. கம்பன் கழக மூடுவிழா கம்பன் பற்றி தெரியாமலேயே நடந்தது. (இந்து மதம் பற்றி தெரிஞ்சிக்காமலேயே மதம் மாறுவதில்லையா? அப்படித்தான்..)

கொஞ்ச நாள் போனது. இலக்கிய மன்ற வாராந்திரக் கூட்டத்தில் ஒரு தலைப்பு சொன்னார்கள். கம்பனின் பாத்திரங்கள் பற்றி அனைவரும் பேச முடிவானது. ரெண்டு வருஷமா அலமாரிச் சிறையில் இருந்த கம்பனின் காவியத்திற்கு ஒரு வழியா பெயில் கிடைத்தது. கம்பனை அன்று கையில் எடுத்தவன் தான்.. இன்னும் திருப்பி வைத்த பாடில்லை. பாட்டு எழுதி விளக்கம் தான் தருவர் எல்லாரும். விலாவாரியாக எழுதி அப்புறம் நச்சுன்னு ஒரு பாட்டு போடலாமே என்று எனக்கு தோணிச்சி. (ஏன் அப்படி தோன்றியதுது? அது அந்த கம்பனுக்கே வெளிச்சம்).

அதுவரை மனதுக்குள் பட்டதை எனது கல்லூரித் தோழர்களொடு (நோ தோழிகள் ப்ளீஸ்) யாஹு குரூப்பில் எழுதி வந்தேன். அங்கு தான் அந்த கம்பனை வம்புக்கு இழுத்து எழுத ஆரம்பித்தேன். நல்ல ஆதரவு கிடைக்கவே பின்னர் வலைப்பூ துவங்கி ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி நண்பர்கள் ஏதாவது எழுதப் போய், இதுக்கு கம்பர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ற கேள்வியும் அப்பப்பொ வரும்.

சமீபத்தில் இப்படித்தான் கல்லூரித் தோழர் லிவிங்க்ஸ்டன் (மக்கா என்று செல்லமாய் அழைப்போம்) குவைத்தில் கலந்து கொண்ட ஜாக்பாட் நிகழ்ச்சி ஜெயா டிவி யில் சிம்ரனின் ஜிலுஜுலுப்போடு நடந்தது. கல்லூரிக் காலத்தில் தமிழ் மன்றத்தை கலக்கிய அனுபவம், சிம்ரனைப் பற்றி செமெ கவிதை பாட வைத்தது. (கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா பொன்டாட்டியை பாத்து கவிதை எழுதி இருப்பாங்களா? சிம்ரன் என்றால் ஏன் தான் இப்படி வழியலோ என்று என் பொண்டாட்டி கமெண்ட் அடித்தது ஒரு தனிக் கதை)
ஹைதராபாத் நண்பரிடமிருந்து அந்த ஜாக்பாட் புரோகிராம் நடக்கும் போதெ போன் வந்தது. சிம்ரனையும் கம்பனையும் வச்சி ஏதாவது எழுதலையா என்று. அந்த குறையை ஏன் வைக்கணும். சிம்ரன் கூந்தல் செம்பட்டை கலரில் இருந்ததா என்று கேட்டேன். பதில் ஆமாம் என்று வந்தது.

ராமாயண காலத்துக்கு போவோம். அனுமான் முதல் இன்னிங்க்ஸ் இலங்கையோடு ஆடிய ஆட்டம். ஆட்டம் சூடு பிடித்ததால் வாலில் சூடு வைக்க அதை ஊருக்கே வைத்த இடம் அது. Fire Service இல்லாத அந்தக் காலத்தில் ஊர் மக்களே ஒன்று சேர்ந்து அந்த அனுமன் வைத்த சூட்டை அணைத்து வந்தனர். பாத்தாலே கட்டி அணைக்கத் தோன்றும் வகையில் உள்ள மகளிர் மேலும் ஹோலிக்கு தண்ணி ஊத்துவது போல் ஊத்திக் கொண்டிருந்தனர். பதிலுக்கு ஆடவர் மேல் மகளிரும் வேகமாய் தண்ணி ஊத்தினர். ஏன் இப்படி நடக்கிறது?.

கம்பன் பதில் சொல்கிறார். கொழுந்துவிட்டு எரியும் தீ. மகளிர், ஆடவர் தலையில் இருக்கும் (சிம்ரன் போல்) செம்பட்டை முடி. ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாததால் வந்த வினை. இதில் “சிம்ரன் போல்” என்பது கம்பன் சொல்லாமல் விட்டு இந்த வம்பன் சேர்த்தது.

கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர் வீரரும் மாதரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுந்தினவும் தெரிகின்றலார்.

வேறு ஏதாவது அல்லது யாரையாவது வம்புக்கு இழுக்கலாம் கம்பரோடு சேர்த்து.

Multiple Mail ID’s


கடவுளை நம்பாத ஒருசிலர். சில கடவுள்களை வணங்குவர் சிலர். பல கடவுள்களை வணங்குபவர் பலர்.

இதில் ஒருசிலர், சிலர், பலர் என்பதை அங்கங்கே மாத்திப் போட்டு Permutation & Combination செய்தும்
பாக்கலாம்.

பையனுக்கு ஒடம்பு சரியில்லை. சரி ஆனா, திருப்பதிக்கு போய் மொட்டை போட்றேன்னு வேண்டிட்டார் அப்பா. அடுத்த நாள் யாரோ சொல்ல, மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கவும் வேண்டிக் கொண்டார்.

அப்பொ திருப்பதி மேல் நம்பிக்கை இல்லை என்று எடுத்துக்க முடியுமா? அதான் கிடையாது. திருமலைப் பெருமாள் டாக்டரா வந்தா, நம்ம மாரியாத்தா நர்ஸா, கூட வரட்டுமே என்ற நம்பிக்கை தான் காரணம் (சுகி சிவத்திடம் சுட்டது).

சுனாமியின் போது எல்லாரும் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்க.. ஒரு தீவிர பக்தர்.. சாமி என்னெயெ காப்பாத்தும் என்ற நம்பிக்கையோடு, ஒரு மரத்தின் மேல் இருந்தாராம். வழியில் வந்த Rescue Boat “வாப்பா இதிலெ ஏறு கொஞ்சம் பாதுகாப்பான பகுதிக்கு போயிடலாம்”- னு மக்கள் சொன்னாங்க..

நம்மாளு கேக்கலை.. “என்னைக் கடவுள் காப்பாத்துவாறு.. நீங்க போங்க”- என்றார்.

அடுத்து ஒருவர் பெரிய கட்டையில் மிதந்து வந்தார்..அட வாப்பா.. நாம் ரெண்டு பேரும் இந்த கட்டையில் ஏறி உயிர் தப்பலாம் என்றார். நம்ம, கட்டையில போறவன் கேக்கலை.

அடுத்து ஒரு Air Force Helicopter வந்து அழைப்பு தந்தது.. கேப்பாரா நம்மாளு.. கேக்கலையே… கொஞ்ச நேரத்தில் அந்த மரம் சாய்ந்து அவரும் பரமபதம் போய்விட்டார்.

அங்கே நேரா கடவுள் கிட்டெ போய்… “என்னா கடவுளே.. உன்னையெ
நானு எம்புட்டு நம்புனேன்.. இப்படி கவுத்திட்டியே!!..” மல்லுக்கு நின்றார்.

கடவுள் படத்தில் சிரிக்கிற மாதிரியே சிரித்து, “அப்பனே அந்த Rescue Boat, மரக்கட்டை, ஹெலிகாப்டர் இதை எல்லாம் நான் தான் அனுப்பினேன்.. நீ தான்
மறுத்துவிட்டாய். அப்பனே.. நீங்க மட்டும் information age க்கு போய்
விடுவீங்க.. கடவுள் மட்டும் துண்டு போட்டு சங்கு சக்கரம் பாம்பு புலி சகிதம் வரணும்னா ..இன்னா வெளாட்டா” – சொல்லி மறைந்தார்.

இதே மாதிரி ஒரு சாமியார் சிஷ்யன் கிட்டெ.. எல்லாரும் கடவுள் தான்.. எனவே எல்லாரையும் வணங்கனும் என்றாராம். பொறுப்பாய் சரி என்றான் சிஷ்யன்.

அடுத்த நாளே வந்தது சோதனை. ஒரு மதம் பிடித்த யானை ஓடி வந்து கொண்டிருந்தது. எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தனர். நம்மாளு அட…
கடவுள் வருது.. என்று கும்பிட்டாராம். கூட இருக்கிற மக்கள் அப்பனே..ஓடு..ஓடு ஆபத்து என்றனர்.

இப்பவும் நம்மாளு கேக்கலை. கொஞ்ச நேரத்தில் யானை லாரன்ஸை தூக்கி எறிஞ்ச மாதிரி தூக்கி எறிந்து விட்டது.

நலம் விசாரிக்க வந்தார் குரு. “என்ன சாமி இப்படி மாட்டி விட்டீகளே..? நீங்க தானே சொன்னீங்க.. எல்லாரும் கடவுள்-ன்னு”

குரு இங்கேயும் சிரிச்சிட்டே சொன்னார். “சிஷ்யா.. யானை ஒரு கடவுள். ஆனா உன் பக்கத்திலே எத்தனை கடவுள்கள் (மக்கள்) ஓடு….ஓடு சொன்னாங்களே.. நீ
கேக்கலையே… கடவுள் பேச்சு கேக்காத காரணம் இந்த தண்டனை”

கடவுளை விடுவோம் அது ரொம்ப துரம்… பக்கத்திலெ இருக்கிற
காதலிக்கு சேதி சொல்லவே எத்தனை பேரைப் புடிக்கிறாங்க..

கடலில் மீன் பிடிக்கச் சென்ற காதலன். காதலி “பாட்டுக்கு பாட்டெடுத்து…” என்று அலையெத் தூது விட்றா. அதுக்கு வாத்தியாரு, பூங்காற்றை பதிலா தூது விட்ரார்.. (கூரியர் செலவு ஒரு மண்ணும் கிடையாது).

மேகத்தையும், நிலாவையும் கூட பயன் படுத்தியிருக்காங்க.. எந்தப் பதிலும் வராது என்று தெரிந்தே அனுப்புவது. நம்ம குரூப்ல கூட அப்படித்தானே
அனுப்புறோம்.. ஏதோ ஒண்ணு ரெண்டு பதில் வரும்.

தூதாக வந்த புறாவை சாப்பிட்டு “ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போறா?” என்று புலம்பும் புலிகேசி வடிவேலையும் பாத்திருப்பீங்க..

ஒரு கடவுள்… ஒரு தூது… எல்லாம் மாறி எல்லாரும் இப்பொ, “உங்க இ
மெயில் ஐடி என்ன?” -ன்னு கேட்டா, நாகைந்து அள்ளிக் கொடுக்கிறாங்க.
போதாக்குறைக்கு வில்லங்கமான வேலைகளுக்கு தனி மெயில் வேற
இருக்கு என்பார்கள்..

அப்படியே கொஞ்சம் கம்பர் காலத்துக்கு போனா.. இதே மாதிரி ஒரு சீன் வருது. இராவணன் சீதையை கடத்திட்டு போகும் சமயம்.

யாராவது ராமன் இருக்கிற எடத்தை சொல்ல மாட்டாங்களான்னு கதறனும் சீதை.

சீதை ஹீரோயின் இல்லையா.. இப்படி பொட்டையா கதற முடியுமா என்ன?

அப்புடி இருந்தாலும் கம்பர் உட்ருவாரா அதுக்கு!! மேகம், சோலை, தேவதைகள் மூனு பேரைக் கூப்பிட்டு..ராமன் இருக்கிற எடம் உங்களுக்குத்தான் தெரியுமே.. கொஞ்சம் சொல்லப்படாதா… சொன்னா கொறைஞ்சா போயிடுவீங்க..
கம்பனின் வித்தியாசமான தூதுப் பாடல் இது.

செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வன தேவதைகாள்
அஞ்சேல் என நலகுதிரேல் அடியேன்
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர்

[மேகங்களே! சோலைகளே! காட்டில் வாழும் தேவதைகளே! சிறந்த வீரம்
உள்ளவரான என் கணவன் இருக்கும் இடத்தை நீங்கள் அறிவீர்கள். “நீ பயப்படாதே! உன் நிலையை உன் கணவரிடம் சொல்கிறோம்!” என்று
ஆறுதல் கூறினீர்கள் என்றால், நான் உயிர் பிழைப்பேன். அவ்வாறு நான் பிழைப்பதால் உங்களுக்கு நஷ்டம் உண்டாகுமா? உண்டாகாது]

ஒண்ணே ஒண்ணுன்னு ஒரு இமெயில் ஐடி மட்டும் வைத்திருப்பவர்கள் இனி மூணு வச்சிக்கிட்டு சுத்தலாம் (Applicable only for mails).

யாராவது கேட்டா.. கம்பரே சொல்லிட்டாருன்னு சொல்லுங்க.. எந்த கொம்பன் கேப்பான் அப்புறம்.

மீண்டும் அலசுவோம்.